Friday, April 24, 2015

சிங்கப்பூர்: பால்கனியில் சிக்கிய குழந்தையை துணிச்சலுடன் மீட்ட தமிழ்த் தொழிலாளர்

குழந்தையைக் காப்பாற்றும் சண்முகநாதன் : படம் வீடியோ பதிவிலிருந்து

சிங்கப்பூரில் பச்சிளங்குழந்தையின் உயிரைக் காப்பாற்றி நாயகர்களாக மாறியுள்ளனர் தமிழர்கள் இருவர். இந்த சம்பவத்தை படம்பிடித்து யூடியூபில் பதிவேற்றி உள்ளார் சிங்கப்பூர்வாசி ஒருவர்.

சிங்கப்பூரில் ஒரு வீட்டின் இரண்டாவது மாடியில், கம்பித் தடுப்பைத் தாண்டி வந்த பச்சிளங்குழந்தையின் கழுத்து, கம்பியில் மாட்டியது. மேலே எழ முடியாமல், கம்பியிலிருந்து விடுபடவும் முடியாமல் அந்தரத்தில் தவித்த அந்தக் குழந்தை கதறி அழுதது. குழந்தையின் அலறலைக் கேட்ட அக்கம்பக்கத்தினர் குழந்தையைக் காப்பாற்ற முயற்சி செய்துள்ளனர்.

இருவர், இரண்டாம் மாடிக்கு ஏற முயற்சித்தும் முடியாமல் போனது. இதனால் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்போது அந்த பகுதியில் வேலை செய்து கொண்டிருந்த கட்டுமான தொழிலாளர்கள் இருவர் குழந்தையின் அலறலைக் கேட்டு அங்கு வந்தனர். உடனடியாக இருவரும் இரண்டாவது மாடிக்கு ஏறி, அந்தக் குழந்தையை கம்பியின் பிடியிலிருந்து விடுவித்தனர்.

தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள்ளாகவே குழந்தை காப்பாற்றப்பட்டது. ஏணியின் உதவியுடன் குழந்தை கீழே அழைத்து வரப்பட்டது. குழந்தை எப்படி அங்கு சென்று சிக்கிக் கொண்டது என்பது இன்னும் தெளிவாகவில்லை.

காப்பாற்றியவர்களில் ஒருவர் சென்னையிலிருந்து சிங்கப்பூருக்குச் சென்று வேலை செய்து வரும் சண்முகநாதன் என்று தெரியவந்துள்ளது. குழந்தையைக் காப்பாற்றிய இருவரையும் சிங்கப்பூர் அரசின் உள்நாட்டுப் பாதுகாப்புப் படை, 'உத்வேக மக்கள் விருது' வழங்கி கவுரவிக்கும் என்று தெரிகிறது.

லிட்டில் இந்தியா பகுதி கலவரத்தைத் தொடர்ந்து, சிங்கப்பூர் உள்ளூர் வாசிகளுக்கும், தமிழர்களுக்கும் இடையே பதற்றமான சூழ்நிலை நிலவி வந்தது. தற்போது இந்த சம்பவத்தால் பதற்றம் தணிந்து மீண்டும் சுமுகம் நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...