Saturday, May 21, 2016

எம்ஜிஆர் 100 | 69: அரசியல் வேறு, நிர்வாகம் வேறு


எம்.ஜி.ஆருக்கு பொன்னாடை போர்த்தி மகிழ்கிறார் கருணாநிதி.

தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்

M.G.R. யாரிடமும் தனிப்பட்ட விரோதம் பாராட்டியதில்லை. எதிர்க்கட்சியினரையும் அரவணைத்தே சென்றவர். எதிர்க் கட்சித் தலைவரோடு நட்போடு இருந்ததற்காக அரசு அதிகாரி களை அவர் புறக்கணித்ததோ, பழிவாங்கியதோ இல்லை. தனக்கு கீழ் பணியாற்றும் அதிகாரிகளாக இருந்தாலும் அவர்கள் கூறும் நியாயமான கருத்துக்களை ஏற்றுக் கொள்வார்.
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத் தின் துணை வேந்தராக இருந் தவர் வேங்கட சுப்பிரமணியம். தமிழக அரசின் கல்வித்துறையிலும் பணியாற்றியவர். சிறந்த கல்விமான். ஆங்கிலத்திலும் தமிழிலும் பெரும் புலமை மிக்கவர். எம்.ஜி.ஆர். முதல்வர் ஆவதற்கு முன்பே அவரோடு அறிமுகம் உண்டு. எம்.ஜி.ஆர். மீது மிகுந்த அன்பு கொண்டவர். அதேநேரம், திமுக தலை வர் கருணாநிதியின் தமிழுக்கும் ரசிகர்.
எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த போது, தமிழக அரசின் கல்வித்துறையில் இணை இயக்குநராக வேங்கட சுப்பிர மணியம் பணியாற்றி வந்தார். அந்த சம யத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த நாள் வந்தது. பிறந்த நாள் விழா வில் வேங்கட சுப்பிரமணியம் கலந்து கொண்டதோடு, கருணாநிதியின் வீட்டுக் கும் சென்று வாழ்த்து தெரிவித்தார். இதுபற்றி கண், காது, மூக்கு வைத்து எம்.ஜி.ஆரிடம் சிலர் கூறினர்.
அப்போது கல்வி அமைச்சராக இருந்த அரங்கநாயகத்திடம் இதுபற்றி தெரிவித்து, வேங்கட சுப்பிரமணியத்தை தன்னை வந்து சந்திக்கச் சொல்லுமாறு எம்.ஜி.ஆர். கூறினார்.
முதல்வர் எம்.ஜி.ஆரை அவரது அலுவலகத்தில் வேங்கட சுப்பிரமணியம் சந்தித்தார். தான் கேள்விப்பட்ட விவரங் களை அவரிடம் எம்.ஜி.ஆர். கூறினார். அதற்கு பதிலளித்த வேங்கட சுப்பிர மணியம், ‘‘திமுக தலைவரை அரசியல் வாதி என்ற பார்வையில் நான் சந்திக்க வில்லை. அவரது இலக்கிய நயம் மிக்க தமிழுக்கு நான் ரசிகன். அந்த வகையில் அவரை சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தேன். அப்போதும், எனது அரசுப் பணிகள் பாதிக்காத வகையில் நேரம் ஒதுக்கியே அவரை சந்தித்தேன். இது தவறு என்று நீங்கள் கருதினால், தாங்கள் என் மீது என்ன நடவடிக்கை எடுத்தாலும் ஏற்றுக் கொள்கிறேன்’’ என்று கூறினார்.
விஷயத்தை மூடிமறைக்காமல், மழுப்பாமல், தனது மனசாட்சிப்படி வேங்கட சுப்பிரமணியம் பேசியது எம்.ஜி.ஆருக்கு பிடித்துப் போனது. என்றாலும் முகத்தில் எந்தவித உணர்ச்சியையும் காட்டாமல், ‘‘விளக்கத் துக்கு நன்றி. நீங்கள் போகலாம்’’ என்றார். வேங்கட சுப்பிரமணியமும் தனது மனதில் இருந்ததை சொல்லிவிட்ட திருப்தியுடன் வெளியே வந்தார். இருந்தாலும் அவரது மனதில் ஒரு நெருடல்.
அதற்கு காரணம் இருந்தது. அந்த சமயத்தில் அவரது பதவி உயர்வு தொடர்பான கோப்பு முதல்வர் எம்.ஜி.ஆரின் பரிசீலனையில் இருந்தது. அந்தக் கோப்பின் போக்கு இனிமேல் எப்படி இருக்குமோ என்று அவருக்கு சந்தேகம். ஆனால், சில நாட்களிலேயே பள்ளிக் கல்வித்துறை இயக்குநராக வேங்கட சுப்பிரமணியத்தை எம்.ஜி.ஆர். நியமித்தார். புதிய பொறுப்பேற்றதும் முதல்வரை சந்தித்து நன்றி சொன்னார் வேங்கட சுப்பிரமணியம்!
அரசியல் காரணங்களுக்காக அதிகாரிகளை எம்.ஜி.ஆர். பழிவாங்கியதில்லை என்பதோடு, அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான பதவி உயர்வுகளையும் தடுத்தது இல்லை. அரசியல் வேறு, நிர்வாகம் வேறு என்பதை உணர்ந்து எல்லா தரப்பினரையும் அரவணைத்துச் சென்றவர் எம்.ஜி.ஆர்.!
தமிழக சட்டப்பேரவைக்கு நடந்த தேர்தலுக்கான முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாயின. அதிமுக அமோக வெற்றி பெற்று தமிழகத்தின் முதல்வராக ஜெயலலிதா மீண்டும் பதவியேற்க உள்ளார். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடப் படும் நேரத்தில், அவர் தொடங்கிய கட்சி வெற்றி பெற்று ஆட்சியில் இருப்பதும் எம்.ஜி.ஆருக்கு ஒரு சிறப்புதான்.
பதவிக்கு வருபவர்கள், எல்லோரை யும் அரவணைத்துச் சென்று அவர்களது ஒத்துழைப்பையும் பெற வேண்டும் என்பதை விளக்குவது போல எம்.ஜி.ஆர். நடித்த ‘நம்நாடு’ திரைப்படத்தில் ஒரு காட்சி.
படத்தில் தனது அண்ணன் டி.கே.பகவதியின் முதலாளியான எஸ்.வி. ரங்காராவின் தவறுகளை தட்டிக் கேட்டதால் அண்ணனின் கோபத்துக்கு ஆளாகி, வீட்டை விட்டு வெளியேறி சேரிப் பகுதியில் எம்.ஜி.ஆர். தங்கியிருப் பார். அங்குள்ள மக்களின் விருப்பத்துக் கேற்ப, பஞ்சாயத்து தேர்தலில் நின்று கவுன்சிலராக வெற்றி பெறுவார். சேர் மன் பதவிக்கு எம்.ஜி.ஆருக்கும் எஸ்.வி. ரங்காராவுக்கும் போட்டி நடக்கும்.
பெரும்பாலான கவுன்சிலர்களின் ஆதரவோடு சேர்ம னாக எம்.ஜி.ஆர். தேர்வு செய்யப்படு வார். தான் தேர்ந்தெடுக் கப்பட்டதற்காக எம்.ஜி.ஆர். நன்றி தெரிவித்து பேசும்போது, தேர்தலில் தனக்கு எதிராக இருந்தவர்கள் உட்பட எல் லோரது ஆதரவையும் ஒத்துழைப்பை யும் கோருவார். எம்.ஜி.ஆரின் செழுமை யான ஜனநாயகப் பண்பை வெளிப்படுத் தும் அருமையான காட்சி அது.
தேர்தல் நேரத்தில் உணர்ச்சிகரமான பேச்சுக்களும் பரஸ்பர குற்றச் சாட்டுக்களும் எழுவது சகஜம்தான். அவையெல்லாம் தேர்தல் முடியும் வரைதான். ஜனநாயகத்தில் ஒவ் வொருவரும் வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம். ஆனால், எல்லோருமே நம் நாட்டைச் சேர்ந்தவர்கள். அந்த உணர்வை வெளிப்படுத்தும் வகையில் தனது படத்துக்கு எம்.ஜி.ஆர். தேர்வு செய்த தலைப்புதான்… ‘நம்நாடு'.
ராமாவரம் தோட்டத்து வீட்டில் எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மையாரை, தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது மனைவி பிரேமலதாவுடன் சந்தித்தபோது எடுக்கப்பட்ட படம்.
தேர்தலில் அதிமுக வெற்றியை கொண்டாடும் வகையில் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் எம்.ஜி.ஆர். சிலைக்கு தொண்டர்கள் மகுடம் சூட்டியுள்ளனர். | படம்: ம.பிரபு
முதல்வராக இருந்தபோதும் அரசு காரை எம்.ஜி.ஆர். பயன்படுத்தியது இல்லை. தனக்கு சொந்தமான TMX 4777 என்ற எண் கொண்ட அம்பாசிடர் காரையே பயன்படுத்தி வந்தார். காருக்கு எரிபொருள் செலவையும் அரசிடம் அவர் கோரியது இல்லை. அந்த கார்தான் நினைவு இல்லத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...