Tuesday, September 12, 2017

சேலம் - சென்னை விமானம் சேவை துவங்குவதில் தாமதம்

பதிவு செய்த நாள்11செப்
2017
21:58

சேலம்: சேலத்தில் இருந்து, சென்னைக்கு விமான சேவையை துவங்குவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. இதற்கு, தமிழக அரசியல் சூழலே காரணம் என, கூறப்படுகிறது.

சேலம், கமலாபுரத்தில், 1993ல், விமான நிலையம் அமைக்கப்பட்டது. இங்கு, 6,000 அடி மட்டுமே ரன்வே உள்ளதால், சிறிய ரக விமானங்கள் மட்டுமே இயக்கக்கூடிய சூழல் உள்ளது. இரு முறை தனியார் நிறுவனங்கள் மூலம், சேலத்தில் இருந்து சென்னைக்கு விமான சேவை துவங்கப்பட்டும், வரவேற்பு இல்லாததால், ஒருசில மாதங்களில் நிறுத்தப்பட்டது.சிறு விமான நிலையங்களுக்கு உயிரூட்டும் வகையில், 'உதான்' திட்டம் கொண்டு வரப்பட்டது. சிறு நகரங்களுக்கு இடையே, விமான போக்குவரத்து சேவைகளில் ஏற்படும் நஷ்டத்தை, மத்திய அரசு, 80 சதவீதம், மாநில அரசு, 20 சதவீதம் ஏற்க வழி செய்யப்பட்டது.இதன்படி, ஏர் ஒடிசா நிறுவனத்துக்கு, சென்னையில் இருந்து நெய்வேலிக்கும், சேலத்தில் இருந்து புதுச்சேரி வழியாக, சென்னைக்கும் விமானம் இயக்க, அனுமதி அளிக்கப்பட்டது. 

மாநில அரசுகளுடன், புரிந்துணர்வு ஒப்பந்தம் உள்ளிட்ட பணிகள் முடிந்த பின், செப்., முதல் விமான சேவை துவங்கும் என, அறிவிக்கப்பட்டிருந்தது.செப்., துவங்கி, இரு வாரங்களான நிலையில், விமான சேவை குறித்து, எவ்வித அறிவிப்பும் வெளிவரவில்லை. அதே சமயம், 'உதான்' திட்டத்தில் அனுமதி பெறப்பட்ட சேவைகள், வேறு மாநிலங்களில், செப்., 15 முதல் துவங்குகின்றன.ஏர் ஒடிசா நிறுவன அலுவலர் ஒருவர் கூறியதாவது:'உதான்' திட்டத்தில், அனுமதி பெறப்பட்ட ஏர் ஒடிசா நிறுவனம், தமிழகத்தில் விமான சேவை துவக்க தயாராகவே உள்ளது. ஆயினும், மாநில அரசின் அனுமதி உள்ளிட்ட, ஒருசில காரணங்களால் தாமதம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள, அரசியல் சூழலும் இதற்கு காரணமாக இருக்கலாம். அக்., மாதத்தில், விமான சேவை துவங்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 15.07.2026