Wednesday, September 13, 2017




COURTNEWS

போக்குவரத்து துறை உத்தரவுக்கு ஐகோர்ட் தடை : 'லைசென்ஸ்' இல்லாமலும் வாகனம் வாங்கலாம்

பதிவு செய்த நாள்13செப்
2017
03:17




சென்னை: 'ஓட்டுனர் உரிமம் இல்லாதவர்களின் வாகனங்களை, பதிவு செய்யக் கூடாது' என, போக்குவரத்து துறை ஆணையர் பிறப்பித்த சுற்றறிக்கைக்கு, சென்னை உயர் நீதிமன்றம், தடை விதித்துள்ளது.

'ஆட்டோமொபைல் டீலர்' சங்கங்களின் சம்மேளனம் சார்பில், தாக்கல் செய்யப்பட்ட மனு:விற்பனையாளரிடம் இருந்து வாகனங்கள் வாங்கிய பின், அதை பதிவு செய்ய வேண்டும்; அவ்வாறு பதிவு செய்யும்போது, வாகனம் வாங்கியவருக்கு, அதை ஓட்ட தெரிந்திருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. அதனால், வாகனத்தை வாங்கியவர், ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்ற, அவசியம் இல்லை.

உடலில் குறைபாடு உடையவர்கள், ஓட்டுனர் உரிமம் பெற இயலாத நிலை ஏற்படும்; 18 வயதுக்கு குறைவானவர் பெயரில், வாகனங்களை, அவரது, 'கார்டியன்' வாங்க முடியும். இவர்கள், ஓட்டுனர்களை நியமித்து, வாகனங்களை இயக்கிக் கொள்ள முடியும். இந்நிலையில், போக்குவரத்து ஆணையர், ஆக., 21ல் பிறப்பித்த சுற்றறிக்கையில், 'ஓட்டுனர் உரிமம் வைத்திருக்கவில்லை என்றால், அந்த வாகனத்தை பதிவு செய்யக் கூடாது' என, கூறப்பட்டுள்ளது.

வாகனங்களை பதிவு செய்யும் அதிகாரிகளுக்கு, இந்த சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது.வாகன உரிமையாளரிடம் உரிமம் இருந்தால், அவர் வாகனத்தை ஓட்டலாம்; இல்லையென்றால், உரிமம் வைத்திருப்பவரை வாகனம் ஓட்டுவதற்கு, உரிமையாளர் அனுமதிக்கலாம்.

ஓட்டுனர் உரிமம் இல்லாத யாரும், மோட்டார் வாகனங்களை வாங்க முடியும்; அதே போல், சொந்த வாகனம் இல்லாத ஒருவர், ஓட்டுனர் உரிமம் பெற முடியும். எனவே, ஓட்டுனர் உரிமம் வேண்டும் என்பதை வலியுறுத்தாமல், வாகனங்களை பதிவு செய்யும்படி, போக்குவரத்து துறைக்கு உத்தரவிட வேண்டும். போக்குவரத்து ஆணையர் பிறப்பித்த சுற்றறிக்கையை, ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மனு, நீதிபதி, எம்.துரைசாமி முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் கோவிந்தராமன் ஆஜரானார்.மனுவுக்கு, நான்கு வாரங்களில் பதில் அளிக்கும்படி, போக்குவரத்து ஆணையருக்கு உத்தரவிட்டு, சுற்றறிக்கைக்கு இடைக்கால தடை விதித்து, நீதிபதி உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

NEWS TO DAY 16.07.2026