Sunday, April 15, 2018

எதிர்கால மருத்துவரா? பிடி 300% கட்டண உயர்வு!

Published : 13 Apr 2018 09:14 IST


எந்த ஒரு துறையிலும் தனியார்மயத்தை அனுமதிப்பதும் அதிகாரமளித்தால் முதலாளிகளின் லாப வேட்கை எங்கு இட்டுச்செல்லும் என்பதற்கு இன்னுமொரு உதாரணம் உத்தராகண்ட் மாநிலத்தில் மருத்துவக் கல்வி விவகாரத்தின் மூலம் வெளிப்பட்டிருக்கிறது.

தனியார் மருத்துவக் கல்லூரிகள் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்புக்கான கட்டணங்களை தாங்களே நிர்ணயித்துக்கொள்ள வழிவகுக்கும் சட்டத்தை சமீபத்தில் நிறைவேற்றியது உத்தராகண்ட் பாஜக அரசு. விளைவு உடனேயே தெரிய ஆரம்பித்துவிட்டது. ஸ்ரீ குரு ராம் ராய் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மெடிக்கல் & ஹெல்ட் சயின்ஸஸ் எனும் தனியார் கல்லூரியும் எம்.டி படிப்புக்கான கட்டணத்தை 300% வரை அதிகரித்தது. கொந்தளித்துப்போனார்கள் மாணவர்கள். விளைவாக அரசு தலையிட்டு முட்டுக்கட்டை போட்டது. ஆனால், சட்டம் ஒன்றை இயற்றிவிட்டு எப்படி எல்லாவற்றையும் தடுக்க முடியும்? அடுத்து, ஹிமாலயன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸஸ் என்ற கல்லூரி, மருத்துவப் பட்ட மேற்படிப்புக்கான கட்டணத்தை 300%-க்கு மேல் உயர்த்தியுள்ளது. மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியிருக்கின்றனர். ஏற்கெனவே அரசு நிர்ணயித்திருந்த கட்டணமான ரூ.7,38,835-ஐக் காட்டிலும் அதிகமான கட்டணத்தைக் கல்லூரி நிர்வாகம் பெற்றுவந்ததாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர். இப்போது மேலும் அது அதிகரித்து ரூ.30 லட்சம் ஆகியிருக்கிறது என்கின்றனர். இதேபோல, குரு ராம் ராய் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படிப்பின் முதலாமாண்டுக் கட்டணம் கடந்த ஆண்டு ரூ.19.76 லட்சமாக இருந்ததாகவும் இப்போது அது ரூ. 26.6 லட்சமாக உயர்த்தப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

அரசு தங்களுக்கு எந்த நிதி உதவியும் செய்வதில்லை என்றும், தாங்கள் நிகர்நிலைப் பலகலைக்கழகங்களுக்கு தங்கள் கட்டணத்தை நிர்ணயித்துக்கொள்ளும் உரிமை உண்டு என்றும் இந்தக் கல்லூரி நிர்வாகங்கள் அலட்சியமாகப் பதில் சொல்கின்றன. அரசோ வேடிக்கை பார்த்து நிற்கிறது!

No comments:

Post a Comment

Nursing, paramedical college affiliation goes online from Sept 1 to ensure transparency

Nursing, paramedical college affiliation goes online from Sept 1 to ensure transparency TIMES NEWS NETWORK 16.04.2025 Indore : To steer clea...