Sunday, April 8, 2018

`மம்மி’ படத்தைப்போல் தாயின் உடலைப் பதப்படுத்திய மகன்! - பென்சனுக்காக நடந்த கொடூரம்

அஷ்வினி சிவலிங்கம்



ஓய்வூதியம் பெறுவதற்காக இறந்த தாயின் உடலை சுமார் இரண்டு ஆண்டுகளாகப் பதப்படுத்தி கைரேகை எடுத்து வந்தவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கொல்கத்தாவில் வசித்து வந்தவர் சுபாபிரதா மஜூந்தர். இவருக்கு வயது 46. லெதர் டெக்னாலஜியில் மெரிட்டில் தேர்ச்சி பெற்ற இவர் தன் படிப்பைத் தாயின் உடலைப் பதப்படுத்துவதற்காகப் பயன்படுத்தியிருக்கிறார். இந்தச் சம்பவம் கொல்கத்தாவையே அதிரவைத்துள்ளது. இது குறித்து கொல்கத்தா போலீஸ் தரப்பில் கூறப்பட்ட விவரங்கள் பின்வருமாறு...

சுபாபிரதாவின் தாயார் பினா ஓய்வுபெற்ற அரசு அதிகாரி. அவர் கடந்த 2015-ம் ஆண்டு உடல்நலக் குறைவால் உயிரிழந்துள்ளார். அவருக்கு வந்துகொண்டிருந்த ஓய்வூதியத்தை விட சுபாபிரதாவுக்கு மனதில்லை. எனவே, தன் தாயின் உடலைப் பதப்படுத்த குளிர்சாதனப்பெட்டி வாங்கியுள்ளார். அதில் பல்வேறு ரசாயனக் கலவையை ஊற்றி துர்நாற்றம் வீசாதவாறு ஏற்பாடு செய்து, தாயின் உடலைப் பதப்படுத்தியுள்ளார்.



தாயின் இறந்த உடலிலிருந்து சில பாகங்களை அகற்றி மம்மிபோல் பதப்படுத்தி வந்திருக்கிறார். ஒவ்வொரு மாதமும் இறந்த உடலிலிருந்து கைரேகை எடுத்து ஓய்வூதியப் பணத்தைப் பெற்று வந்துள்ளார். தன் தாய் உயிரோடு இருக்கிறார் என்னும் சான்றிதழ் ஒன்றையும் பெற்று வைத்திருந்ததால் வங்கி அதிகாரிகளுக்குச் சந்தேகம் வரவில்லை. உறவினர்கள் அவரிடம் தாயின் உடலை எங்கே அடக்கம் செய்தீர்கள் என்று கேட்டதற்கு, `என் தாய் உடல்தானம் செய்திருப்பதால் அவரின் உடல் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது’ என்று சமாளித்துள்ளார். இதே போன்று சுமார் இரண்டு ஆண்டுகள் ஓய்வூதியத்தைப் பெற்று வந்துள்ளார். வீடு முழுவதும் ரசாயனங்களாக இருந்ததால், உறவினர்களுக்கு சுபாபிரதா நடவடிக்கைகள்மீது சந்தேகம் வந்து போலீஸில் தெரிவித்துள்ளனர். கொல்கத்தா போலீஸார் அவரின் வீட்டுக்குச் சென்று சோதனையிட்டபோது வசமாகச் சிக்கிவிட்டார்.




வீட்டுக்குள் பெரிய குளிர்சாதனப் பெட்டி வைக்கப்பட்டிருந்தது. அதில் இறந்தபோன பினாவின் உடல் கிடந்தது. `எதற்காக இறந்தவரின் உடலை வைத்திருக்கிறீர்கள்’ என்று போலீஸ் கேட்டதற்கு, ‘என் தந்தைதான் அப்படிச் செய்தால் தாய் மீண்டும் உயிருடன் வருவார் என்றார்’ என்று தந்தைமீது சுபாபிரதா பழி சுமத்தியுள்ளார். சுபாபிரதாவின் தந்தையும் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி. இந்தச் சம்பவத்தில் அவருக்கும் தொடர்பு இருப்பதாகப் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. எனவே, இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் மற்றொரு அதிர்ச்சி என்னவென்றால் சுபாபிரதா தன் தாயைப் பதப்படுத்த பயன்படுத்தப்பட்ட குளிர்சாதனப்பெட்டிக்கு அருகில் மற்றொரு குளிர்சாதனப் பெட்டியும் இருந்துள்ளது. அவரின் தந்தையும் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி என்பதால் அவருக்காக முன்னெச்சரிக்கையாக அந்தக் குளிர்சாதனப்பெட்டி வைக்கப்பட்டிருக்கலாம் என்கிறது போலீஸ்.

No comments:

Post a Comment

Diabetes: Doctor says you can manage it, just stop falling for these traps

Diabetes: Doctor says you can manage it, just stop falling for these traps  Diabetes management often feels like a battle due to common life...