Tuesday, October 30, 2018

பெருந்துறை ஐ.ஆர்.டி., கல்லூரி அரசு மருத்துவ கல்லூரியானது

Added : அக் 30, 2018 05:53

ஈரோடு: பெருந்துறை ஐ.ஆர்.டி., மருத்துவ கல்லுாரி, அரசு மருத்துவ கல்லுாரியாக அறிவிக்கப்பட்டுள்ளது.போக்குவரத்து ஊழியர்களின் குழந்தைகள் நலன் கருதி, ஈரோடு மாவட்டம், பெருந்துறையில், 1986ல், போக்குவரத்து துறை மூலம், மருத்துவ கல்லுாரி அமைக்கப்பட்டது. தேசிய அளவில், போக்குவரத்து ஊழியர்களால் நடத்தப்படும், முதல் மருத்துவ கல்லுாரியாக திகழ்ந்தது.போக்குவரத்து ஊழியர்கள் பெயரில், அறக்கட்டளை துவங்கி, ஊழியர்களிடம் தலா, 5,000 ரூபாய் வைப்புத்தொகை செலுத்தப்பட்டது. இதில் கிடைக்கும் வட்டியால், கல்லுாரி நிர்வகிக்கப்பட்டது. வைப்புத்தொகை, ௧௦ ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டு, 'சாலை போக்குவரத்து நிறுவன பெருந்துறை மருத்துவ கல்லுாரி' என்ற பெயரில், 100 மாணவர் சேர்க்கையுடன் செயல்பட்டது.

இதில், 55 மாணவர்கள், தமிழக அரசின் ஒதுக்கீட்டிலும், 15 பேர் தேசிய ஒதுக்கீட்டிலும், 30 பேர் அரசு போக்குவரத்து மற்றும் சார்பு நிறுவன ஊழியர்களின் வாரிசுகள், தகுதி அடிப்படையிலும் சேர்க்கப்பட்டனர்.இந்நிலையில், கல்லுாரியை நிர்வகிக்க முடியாமல், நிர்வாகம் திணறியது. அரசு ஏற்க, பல்வேறு தரப்பில் கோரிக்கை எழுந்தது.கடந்த, 2017 செப்., 6ல், ஈரோட்டில், எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழா நடந்தது. இதில் பேசிய முதல்வர் பழனிசாமி, 'தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் கீழ், கல்லுாரியை கொண்டு வந்து, மருத்துவ கல்வி இயக்குனரக கட்டுப்பாட்டில் அரசு கல்லுாரியாக மாற்றப்படும்' என, அறிவித்தார்.இதன்படி, கடந்த, 24ம் தேதி முதல், அரசு மருத்துவ கல்லுாரியாக செயல்படும் என்ற அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 2019 - 20 கல்வியாண்டு முதல், அரசு மருத்துவ கல்லுாரி அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடக்கும் எனவும், அரசாணையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...