Thursday, April 2, 2015

'தாலி அகற்றுவதற்கும், மாட்டிறைச்சி உண்பதற்கும் சட்டம் இயற்றக் கூடாது!'

cinema.vikatan.com

மகாராஷ்டிராவில் மாட்டு இறைச்சி விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் தமிழகத்தில் அண்மையில் தாலி வேண்டுமா? வேண்டாமா? என்ற விவாதம் நடத்திய தொலைக்காட்சி மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த நிலையில் திராவிடர் கழகம் சார்பில் கடந்த வாரம் இயற்றப்பட்ட தீர்மானங்களுள் ஒன்றாக, வரும் ஏப்ரல் 14-ம் தேதியன்று தாலி அகற்றும் நிகழ்ச்சியையும், மாட்டுக்கறி விருந்தையும் நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்கள். தமிழகத்தில் இந்த விவாதங்கள் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இந்த நிலையில் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன் ஆகியோர் திராவிடர் கழகம் நிறைவேற்றி இருக்கும் தீர்மானத்துக்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஒருசிலரிடம் நாம் கருத்து கேட்டோம்.


தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், ''நாடு எவ்வளவோ முன்னேறிக் கொண்டிருக்கிறது. பெண்களும் பலவழிகளில் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். வறுமை, வேலை வாய்ப்பு என நாட்டில் எத்தனையோ பிரச்னைகள் உள்ளன. தாலியை அகற்றுபவர்களைப் பிற்போக்குவாதிகள் என்றே சொல்வேன். பொதுவாக இந்து மதத்தில், தாலி உணர்வோடும், உயிரோடும் மதிக்கப்படுகிறது என்பது ஒரு மருத்துவராக எனக்கு நன்றாகத் தெரியும். தஞ்சை மருத்துவக் கல்லூரியில் படித்தது முதல் இன்று ஹைடெக் மருத்துவம் வரை என் அனுபவத்தில் பலரையும் பார்த்திருக்கிறேன்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் பெண்களைத் தாலியை கழட்டச் சொன்னால்கூட அவர்கள், ஒரு மஞ்சள் கயிற்றை எடுத்துக் கழுத்தில் கட்டிக்கொண்டே பின்புதான், தாலியைக் கழட்டித் தருகிறார்கள். மதத்தைச் சேர்ந்தவர்களோ அல்லது யாரும் சொல்லிக்கொடுத்தோ இத்தகைய செயலை எவரும் செய்யமாட்டார்கள். பெண்களுக்கு தாலியின் நம்பிக்கை அவர்களுடைய உயிரோடு, உணர்வோடு கலந்திருக்கிறது. பெண்கள் இனத்தை, உணர்வை யாரும் இழிவுபடுத்த முடியாது. இத்தகைய செயல் தமிழ்ப் பெண்களுக்கு அவசியமில்லாத ஒன்று. இயற்கையைப் புறந்தள்ளுவதோடு, இதற்காக தமிழ் மக்கள் ஒன்றாக குரல் கொடுக்க வேண்டும்'' என்றார்.



கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ராஜ்யசபா எம்.பி. டி.ராஜா,''என்னைப் பொறுத்தவரை தாலி அகற்றுவது என்பது வேறு அர்த்தத்தைக் கொண்டது. உணவு முறை, பழக்கவழக்கம், சீதோஷ்ண நிலை போன்றவற்றால் ஒவ்வொரு நாட்டிலும் உணவு வகைகள் வேறுபடுகின்றன. எந்த ஒரு மனிதனும் ஒரு குறிப்பிட்ட உணவைத்தான் உண்ணவேண்டும் என்று திட்டமிட்டுச் செயல்படுவது கிடையாது. ராஜஸ்தானில் ஒட்டகப்பால் குடிக்கிறான். தமிழகத்தில் பசு, எருமை போன்றவற்றின் பால் சாப்பிடுகிறான்.

நில அமைப்பு, தட்பவெப்பம், இயற்கைச் சூழ்நிலை ஆகியவற்றின் அடிப்படையில் நாட்டுக்கு இது எல்லாம் பொருந்தாது. மாட்டு இறைச்சியை சிலர், தாழ்வாகவும் இழிவாகவும் நினைக்கிறார்கள். ஆனால் லண்டன், ஐரோப்பா போன்ற நாடுகளில் மாட்டு இறைச்சி அதிக விலைக்கு விற்கப்படுகிறது. இந்தியாவிலேயே சிலர், ஆட்டிறைச்சி, மாட்டு இறைச்சியை ஒதுக்கிவிட்டு கோழிக்கறியைச் சாப்பிடுகின்றனர். சமூக உணர்வுகள் மாறி வருகிறபோதிலும் மத நம்பிக்கைகளை வைத்து கட்டாயப்படுத்தக் கூடாது. சட்டம் போட்டு இயற்றக் கூடாது'' என்றார்.

என்னதான் நாடுதான் முன்னேறினாலும், பெண்கள் புதுமையை விரும்பினாலும் இதுபோன்ற தீர்மானங்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியவை அல்ல என்பதே பொதுவான கருத்தாகும்.

- ஜெ.பிரகாஷ்

No comments:

Post a Comment

Peon, an MA in Eng, checks Hindi answer sheets at college in MP

Peon, an MA in Eng, checks Hindi answer sheets at college in MP Amarjeet.Singh@timesofindia.com 10.04.2025 Bhopal : Twice ‘outsourced’, the ...