Monday, March 27, 2017

கோயில் திருவிழாவில் பலியாகும் பக்தர்கள்: கர்நாடகாவில் தொடரும் மூடப்பழக்க வழக்கம்

இரா. வினோத் 

கர்நாடகாவில் உள்ள இந்து கோயில் திருவிழாக்களில் நடைபெறும் சடங்கின்போது மரக்கம்பத்தில் சுழற்றப்படும் ஆண்.

கர்நாடக மாநிலம் மண்டியா, ஹாசன், கார்வார், தாவணகெரே, பீதர் உள்ளிட்ட பல மாவட்டங்கள் சமூக, பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கியுள்ளன. இங்குள்ள இந்து கோயில்களில் தேர்த் திருவிழாவின்போது ‘சிதி' என்ற சடங்கு நடத்தப்படுகிறது. ஆண்டுக்கொரு முறை நடத்தப்படும் இந்த சடங்கில் தலித் மக்கள் மட்டுமே ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

இந்த சடங்கின்போது காலை 4 மணிக்கு ஆண்கள், பெண்களின் வாயில் இரும்பு கொக்கி (அலகு குத்துவது போல) குத்தப்படும். ஆண்டுக்கு 10 முதல் 20 ஆண்களின் முதுகில் 4 இரும்பு கொக்கிகளால் குத்தி (வான் அலகு அல்லது கருட வாகன அலகு போல) 20 முதல் 30 அடி உயரத்தில் தொங்கும் மரக் கம்பத்தில் மாட்டுவார்கள். பிறகு மரத்தின் இன்னொரு பாகத்தை ராட்டினம் போல சுழ‌ற்றுவார்கள். ஆண்களும் பெண்களும் ரத்தம் வடியும் நிலையில் 30 முறை கோயிலை சுற்றி வர வேண்டும்.

மிகவும் ஆபத்தான இந்த சடங்கின்போது பல ஆண்கள் கீழே விழுந்து உயிர் பலியாகி உள்ளனர். பலர் கை, கால் முறிந்து அவதிப்பட்டு வருகிறார்கள்.

ஹாசன் மாவட்டம் ஹொளெநர் சிப்பூர் அருகேயுள்ள ஹரிஹரபூரில் உடுசலம்மா (துர்கா பரமேஷ்வரி) கோயில் உள்ளது. இங்கு கடந்த வெள்ளி, சனிக்கிழமைகளில் கோயில் தேர் திருவிழா நடைபெற்றது.

வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு திருவிழா தொடங்கியபோது கோயில் பூசாரி 70-க்கும் மேற்பட்ட மக்களுக்கு அலகு குத்திவிட்டார். இதையடுத்து ஆண்களும், பெண்களும் உடுசலம்மா கோயிலையும் ஊரையும் சுற்றி வலம் வந்தனர்.

பிற்பகல் 2 மணியளவில் இந்த சடங்கு தொடங்கியது. இரு நாட்களும் தலா 12 ஆண்கள் வீதம் முதுகில் இரும்பு கொக்கிகள் மாட்டப்பட்டு மரக்கம்பத்தில் தொங்கவிடப்பட்டார்கள். அந்த கம்பத்தை ராட்டினம் போல‌ சுழற் றியபோது, கீழே இருந்த பெண்கள் குலவையிட்டனர். தலா 5 முதல் 10 நிமிடங்கள் சுழற்றிய பிறகு, அவர்கள் கீழே இறக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்து செல்லப் பட்டனர். இந்த ஆண்டு பாதுகாப் புக்காக இந்த சடங்கில் ஈடுபடுத் தப்பட்ட ஆண்களின் கால்கள் மர கம்பத்தோடு இணைத்து கட்டப்பட்டது.

தலித் அமைப்பினர் போராட்டம்

இந்நிலையில் தலித் விடுதலை அமைப்பினர் இந்த சடங்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரிஹரபூரில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட குடும்பத்தினரும் பங்கேற்றனர். அப்போது இந்த சடங்கிற்கு தடை விதிக்கக் கோரி முழக்கங்களை எழுப்பினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, ்அந்த அமைப்பினரை போலீஸார் கைது செய்தனர்.

No comments:

Post a Comment

Section of Anna University PhD scholars excluded from convocation

Section of Anna University PhD scholars excluded from convocation Scholars who completed their viva after this date will be awarded degrees ...