Wednesday, September 27, 2017

பூ மலர்ந்திட நடமிட்ட பொன்மயிலே... மாதவி ஃபேனா நீங்க?
By சரோஜினி | Published on : 26th September 2017 06:04 PM |




'பூ மலர்ந்திட நடமிடும் பொன்மயிலே...
நின்றாடும் உன் பாதம் பொன்பாதம்
விழிகளால் இரவினை விடியவிடு

நான் நடமிட உருகிய திருமகனே
ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ '

'டிக் டிக் டிக்' படத்தில் வரும் இந்தப் பாடலையும் மறக்க முடியாது... பாடலின் பாவங்களில் ரசம் குறையாது அழகிய நடமிடும் மாதவிப் பொன் மயிலாளையும் யாரும் அத்தனை சீக்கிரம் மறந்து விட முடியாது. 'மாதவிப் பொன்மயிலாள்' என்பது என்னுடைய வார்த்தைப் பிரயோகம் அல்ல, அது 1967 ஆம் ஆண்டில் வெளிவந்த ‘இருமலர்கள்’ திரைப்படத்தில் நாட்டியப் பேரொளி பத்மினியின்’ அடவுகளுக்காக கவிஞர் வாலி பிரயோகித்த சொற்கள். காவிய மாதவியைப் போலவே நடிகை மாதவியும் கூட பரதத்தில் சிறந்த ஆளுமை கொண்டவர் என்பதோடு பெயரும் பொருத்தமாக இருப்பதால் இவரையும் அப்படிக் குறிப்பிடுவதில் குற்றமெதுவும் இருக்க வாய்ப்பில்லை.

80 களில் ஸ்ரீதேவி, ஜெயப்ரதா, எல்லாம் பாலிவுட்டுக்குச் சென்றதும் கோலிவுட், டோலிவுட், மல்லுவுட், சாண்டல்வுட்டில் அம்பிகா, ராதா, ராதிகா, பானுப்ரியா கோலோச்சிக் கொண்டிருந்தார்கள். அம்பிகா, ராதாவுக்கும், பானுப்ரியாவுக்கும் முன்பு சில காலம் தென்னிந்தியத் திரைப்படங்களில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய நடிகைகளில் மாதவியும் ஒருவர். முதன்முதலில் தமிழில் அவர் அறிமுகமான திரைப்படம் கமலின் சொந்தத் தயாரிப்பான ராஜபார்வை. அதில் கமலும், மாதவியும் இடம்பெற்ற;

‘அந்திமழை பொழிகிறது ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறதே’

-பாடல் இப்போதும் பலரது ஹிட்லிஸ்டில் டாப் டென் பாடல்களில் ஒன்றாக இருந்து வருகிறது.

சூப்பர் ஸ்டார்களோடு மாதவி நடித்த திரைப்படங்கள்...

தமிழில் ரஜினியோடு விடுதலை, உன் கண்ணில் நீர் வழிந்தால், தம்பிக்கு எந்த ஊரு, கர்ஜனை, தில்லு முல்லு உள்ளிட்ட வெற்றிப்படங்களில் மாதவி இணைந்து நடித்திருக்கிறார். தமிழில் மட்டுமல்ல ‘இன்சாப் கெளன் கரேங்கா’ உட்பட இந்தியிலும் ரஜினியுடன் பல படங்களில் மாதவி இணைந்து நடித்திருக்கிறார். கமலுடனும் காக்கிச்சட்டை, மங்கம்மா சபதம், சட்டம், ஏக் துஜே கேலியே, எல்லாம் இன்ப மயம், ராஜ பார்வை, டிக் டிக் டிக் உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்திருக்கிறார். திரையுலகில் மாதவி அறிமுகமானது முதல் அவர் தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்த அந்த 17 வருடங்களில் கிட்டத்தட்ட 300 க்கும் மேலான திரைப்படங்களில் நடித்து முடித்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி தவிர ஒரிய மொழிப்படங்களிலும் மாதவி நடித்திருக்கிறார். 80 முதல் 90 வரையிலான காலகட்டங்களில் இத்தனை மொழிகளிலும் நடித்ததோடு மட்டுமல்லாமல் சுமார் 1000 க்கும் மேற்பட்ட பாரம்பரிய பரதநாட்டிய நிகழ்ச்சிகளையும் மாதவி உலகம் முழுக்கச் சென்று வழங்கிக் கொண்டு வெகு பிஸியான கலைஞராக இருந்தார்.

பிறந்தது ஆந்திராவில்...

பழைய ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் பிறந்த மாதவியின் அப்பா பெயர் கோவிந்த ஸ்வாமி, அம்மா பெயர் சசிரேகா. இவருக்கு கீர்த்தி குமாரி என்றொரு சகோதரியும், தனஞ்செயன் என்றொரு சகோதரரும் உண்டு. மிகச் சிறு வயதிலேயே உமா மகேஸ்வரியிடம் பரதம் கற்றுக் கொண்ட மாதவி, நாட்டுப்புற நடனத்தை மிஸ்டர் பட் என்பவரிடம் கற்றுக் கொண்டார்.

மாதவி, ஹைதராபத்திலுள்ள ஸ்டான்லி பெண்கள் உயர்நிலைப் பள்ளியின் பழைய மாணவிகளில் ஒருவர்.

திரையுலகப் பிரவேஷம்...

ஒரு நடன நிகழ்ச்சியின் போது தெலுங்குத் திரையுலக பிரம்மாக்களில் ஒருவரான இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் தாசரி நாராயணராவின் கண்களில் மாதவி படவே, அவரது அருமையான பாவங்களால் ஈர்க்கப்பட்ட தாசரி தனது தயாரிப்பில் நரசிம்ம ராஜூ(விட்டலாச்சார்யா படங்களின் ஏகதேச நாயகன்), மோகன்பாபு நடிப்பில் தயாராகிக் கொண்டிருந்த தூர்பு படமாரா (கிழக்கு, மேற்கு) எனும் படத்தில் மாதவியை நாயகியாக்கினார். இப்படித்தான் தொடங்கியது மாதவியின் திரையுலகப் பயணம். அதன் பிறகு அவரால் தன் வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கக் கூட நேரமின்றி தொடர்ந்து 17 வருடங்களுக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, ஒரியா எனப் பன்மொழிகளில் பிஸியான நடிகையாகத் திகழ்ந்தார்.

மாதவியின் கணவர் ரால்ப் ஜெய்தீப் ஷர்மா (கணவரின் அம்மா ஜெர்மனி, அப்பா பஞ்சாபி)



தனது திருமணம் குறித்து மாதவி பேசியதிலிருந்து...

‘என்னுடையது வீட்டினர் பார்த்து செய்து வைத்த அரேஞ்டு மேரேஜ். எங்களுடைய ஸ்வாமிஜி ராமா மற்றும் எனது பெற்றோர்கள் தேடிக் கண்டடைந்த வரன் தான் என் கணவர். திருமணத்திற்கு முன்பு நாங்கள் ஒருமுறை மட்டுமே தொலைபேசி வாயிலாகப் பேசியிருந்தோம். பிறகு ஏர்போர்ட்டில் வைத்து அவரை ஒருமுறை சந்தித்த போது அவர் எனக்கு நிச்சயதார்த்த மோதிரத்தைப் பரிசளித்தார். சந்தித்த ஒரே வாரத்தில் 1996 ஆம் ஆண்டு ஃபிப்ரவரி 14 ஆம் நாள் காதலர் தினத்தன்று எங்களுக்குத் திருமணமானது.

ஆயிற்று 17 வருடங்கள்... என் ஸ்வாமிஜியும், பெற்றோரும் எனக்காக மிகச்சிறந்த கணவரைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்று இப்போது உணர்கிறேன். என் கணவர் என்னைப் பூப்போல பார்த்துக் கொள்கிறார். சிறு வயதிலிருந்தே நான் என் பெற்றோர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தது ஒரே ஒரு விஷயத்தைத் தான், அது என் திருமணம் பெற்றோர்கள் பார்த்து செய்து வைக்கும் திருமணமாக இருக்க வேண்டுமென்பது மட்டுமே! அதுவே என் வாழ்க்கையில் நடந்தது.

No comments:

Post a Comment

Annamalai University staff begin indefinite sit-in over pending dues

Annamalai University staff begin indefinite sit-in over pending dues The members also sought settlement of retirement benefits, including co...