Tuesday, September 12, 2017

தொழிலதிபர்கள், வி.ஐ.பி.களுக்காக துணை நடிகைகளை பணியில் அமர்த்திய சூதாட்ட கிளப் உரிமையாளர் உள்பட 2 பேர் கைது: 2 லட்சம் போதை பொருள் பறிமுதல்

2017-09-11@ 00:33:45




கீழ்ப்பாக்கம்: தொழிலதிபர்கள் மற்றும் வி.ஐ.பி.களுக்காக துணை நடிகைளை பணியில் அமர்த்தி சூதாட்ட கிளப் நடத்திய இரண்டு பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து போதை பொருட்களையும் பறிமுதல் செய்தனர். சென்னை கீழ்ப்பாக்கம் ராஜரத்தினம் தெருவில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்குள்ள ஒரு வீட்டில் வார விடுமுறை நாட்களில் இரவு நேரங்களில் மது போதை, விருந்துடன் கேளிக்கை நிகழ்ச்சிகளும் சூதாட்டமும் நடைபெற்றது. இதனால் குடியிருப்புக்கு ஏராளமான விஐபிக்கள் சொகுசு கார்களில் வந்து சென்றனர். இதுபற்றி கீழ்ப்பாக்கம் போலீஸ் உதவி கமிஷனர் ஹரிகுமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அடுக்குமாடி குடியிருப்பில் சோதனை நடத்தும்படி சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். அவரது உத்தரவின்பேரில் கிழக்கு மண்டல இணை கமிஷனர் மனோகரன், துணை கமிஷனர் ராஜேந்திரன் ஆகியோர் மேற்பார்வையில் நேற்று முன் தினம் இரவு அக்குடியிருப்பில் உதவி கமிஷனர் ஹரிகுமார் அதிரடி சோதனைகளை மேற்கொண்டார்.

அப்போது அக்குடியிருப்பில் வெளிப்பக்கம் பூட்டியிருந்த ஒரு வீட்டின் மீது உதவி கமிஷனருக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அவ்வீட்டின் கதவை அவர் தொடர்ந்து தட்டியதும் அங்கிருந்த அறையில் இருந்து வாலிபர் ஒருவர் வெளியே வந்தார். பிறகு பூட்டை திறந்த போலீசார் வீட்டிற்குள் சென்று ஆய்வு செய்தனர். அப்போது அங்கே ரூ. 5 லட்சம் மதிப்புள்ள கஞ்சா, ஹான்ஸ், பான்பராக், உயர் ரக மதுபானங்கள் உள்ளிட்ட பல்வேறு போதைப் பொருட்கள் இருந்தன. மேலும் அங்கே சூதாட்டம் நடந்ததற்கு அடையாளமாக சீட்டுக் கட்டுகளும் இருந்தன. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்து கீழ்ப்பாக்கம் காவல் நிலைய போலீசார் பிடிபட்ட யோகேஷ் ஜோஷி (22) என்ற வாலிபர் கொடுத்த தகவலின்படி சூதாட்ட கிளப் நடத்திய தண்டையார்பேட்டையை சேர்ந்த விக்ரமன் (38) என்பவரை கைது செய்தனர். அவர் போலீஸ் விசாரணையில், ‘‘நான் கடந்த இரண்டு மூன்று வருடங்களாக இந்த சூதாட்ட கிளப்பை நடத்துகிறேன்.

ஒவ்வொரு சனி, ஞாயிறு மற்றும் முக்கிய பண்டிகை நாட்களில் இந்த கிளப் நடைபெறும். ஏராளமான தொழிலதிபர்கள் மற்றும் விஐபிகள் இங்குவந்து சீட்டு விளையாடுவார்கள். அவர்களுக்கு தேவையான மது, குட்கா உள்ளிட்ட அனைத்து போதைப் பொருட்களும் இங்கு ஏற்பாடு செய்யப்படும். சில சமயங்களில் இளம்பெண்களை வரவைத்து நடனம் ஆடி ரசிப்போம். சினிமா துணை நடிகைகள் வந்து ஆடியிருக்கிறார்கள். யோகேஷ் ஜோஷி என்னிடம் பல வருடங்களாக ஊழியராக வேலை பார்க்கிறான். நீங்கள் ரெய்டு நடத்திய தினத்தில் நான் வேறு வேலையாக வெளியே சென்றுவிட்டதால் அன்றைய தினம் கிளப் நடக்கவில்லை’’ என்று கூறியுள்ளார். இதையடுத்து இரண்டு பேரையும் கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 15.07.2026