Thursday, September 21, 2017

ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி மீது சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்கு பதிவு

பதிவு செய்த நாள்20செப்
2017
22:45

புதுடில்லி: ஊழல் வழக்கில், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக, சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று வழக்குப் பதிவு செய்தனர்.

ஒடிசாவில், பிஜு ஜனதா தளத்தை சேர்ந்த, நவீன் பட்நாயக் முதல்வராக உள்ளார். இந்த மாநிலத்தின் பல பகுதிகளில் செயல்பட்டு வரும், பிரபல தனியார் மருத்துவ கல்லுாரியில், போதிய வசதிகள் இல்லாததால், அந்த கல்லுாரியில் மாணவர் சேர்க்கை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை உத்தரவை எதிர்த்து, கல்லுாரி நிர்வாகத்தின் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில், வழக்கில், கல்லுாரி நிர்வாகத்துக்கு சாதகமாக தீர்ப்பு வர உதவி செய்வதாகக் கூறி, அம்மாநில உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி, இஸ்ரத் மஸ்ரூர், ஒரு கோடி ரூபாய் பணம் பெற்றதாக புகார் எழுந்தது.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த, சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று, இஸ்ரத் மஸ்ரூர் மற்றும் கல்லுாரி நிர்வாகிகள் உள்ளிட்ட பலரின் வீடுகளில் சோதனை நடத்தினர். 

இந்த சோனையின் போது, ஏராளமான பணம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதையடுத்து, இஸ்ரத் மஸ்ரூர் உட்பட, ஐந்து பேர் மீது, சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்தனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2025