Friday, September 21, 2018

சிவகங்கையில் மர்ம காய்ச்சல் பூச்சியியல் வல்லுனர்கள் ஆய்வு

Added : செப் 20, 2018 22:30

சிவகங்கை, சிவகங்கை மாவட்டத்தில், பல கிராமங்களில் மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. எந்த வகை காய்ச்சல் என்பதை அறிய, நான்கு மண்டல பூச்சியியல் வல்லுனர்கள் ஆய்வு செய்கின்றனர்.சிவகங்கை, சாக்கோட்டை, தேவகோட்டை, கல்லல் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில், 10க்கும் மேற்பட்ட கிராமங்களில், ஆயிரக்கணக்கானோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தொடர் காய்ச்சலும், கை, கால் மூட்டுகளில் வலியும் ஏற்பட்டன.சிக்குன்குனியா, டைபாய்டாக இருக்கலாம் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.சுகாதாரத் துறையினர் முகாமிட்டு, சிகிச்சை அளித்து வருகின்றனர். இருந்தபோதிலும் காய்ச்சலை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. பக்கத்து கிராமங்களுக்கும் காய்ச்சல் பரவியது.எந்த வகை காய்ச்சல் என்பதை அறிய திருச்சி, புதுக்கோட்டை, திண்டுக்கல், விருதுநகர் மண்டல பூச்சியியல் வல்லுனர்கள் ஆய்வு செய்கின்றனர். அவர்கள் கொசு, வைரஸ் வகைகளை கண்டறிதல், காய்ச்சல் பரவும் விதம் ஆகியவற்றை வைத்து, ஆய்வு செய்கின்றனர்.சுகாதாரத் துறையினர் கூறியதாவது:குடிநீரை குளோரினேட் செய்யாதது, கழிவு கலந்தது, தண்ணீரை தேக்கி வைத்தது, குளத்து நீரை அருந்தியது போன்ற காரணங்களால், காய்ச்சல் பரவியுள்ளது.ஒரே வகையான காய்ச்சலாக இருந்தால் எளிதில் கட்டுப்படுத்தலாம். ஆனால், ஒரே கிராமத்தில் பலவகை காய்ச்சல் பாதிப்பு இருப்பது போல் தெரிகிறது. அதனால், பூச்சியியல் வல்லுனர்கள் ஆய்வு செய்கின்றனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

TAPS takes effect from Jan 1, 2026

TAPS takes effect from Jan 1, 2026  As per the G.O., TAPS will become operational after the notification of rules and completion of statutor...