Tuesday, September 25, 2018

பெரும்பாக்கம் கு.மா.வா., வீடுகளில் பரவுது மர்ம காய்ச்சல்!'சுகாதாரம்னா என்ன'ன்னு கேட்கும் மக்கள்

Updated : செப் 24, 2018 22:29 | Added : செப் 24, 2018 22:27





பெரும்பாக்கம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில், துப்புரவு, சுகாதார பணிகள் சரியாக இல்லாததால், மக்கள் மர்ம காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். இப்பகுதி மக்கள், ஊராட்சிக்கு வரி செலுத்தி வரும் நிலையில், மாநகராட்சி துப்புரவு பணி செய்வதால், பணி சரியாக நடக்காமல் இருப்பதாக தெரியவந்துள்ளது.

குடிசை மாற்று வாரிய குடியிருப்புக்களை, மாநகராட்சியுடன் இணைத்தால் தான் பிரச்னை தீரும் என, கோரிக்கை எழுந்துள்ளது.பொருளாதாரத்தில் நலிவடைந்து, வீடுகளின்றி, அரசு புறம்போக்கு நிலங்கள், ஏரி, கால்வாய், ஆற்றங்கரை பகுதிகளை ஆக்கிரமித்து, குடிசை அமைத்தவர்களுக்கு, மாற்று இடம் வழங்க, தமிழக அரசு முடிவு செய்தது.

இதன்படி, குடிசை மாற்று வாரியம் மூலம், பெரும்பாக்கத்தில், 200 ஏக்கர் பரப்பளவில், 1,200 கோடி ரூபாயில், 20 ஆயிரத்து, 376 வீடுகளுடன் கூடிய, மெகா மறுகுடியமர்வு திட்டம், 2009ல் துவங்கப்பட்டது.இதன்படி, 2015- - 16ல், தெற்கு பகுதியில் உள்ள, 6,000 வீடுகளில், பயோமெட்ரிக் முறையில் கணக்கெடுத்த பயனாளிகள், மறுகுடியமர்வு செய்யப்பட்டுள்ளனர்.

வடக்கு பகுதியில், 2017- - 18ல், 3,000 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு, பள்ளி, கல்லுாரி, மருத்துவமனை, சமுதாயக்கூடம், பேருந்து நிலையம், வணிக வளாகம், ரேஷன் கடை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.பள்ளி, வணிக வளாகம் கட்டும் பணி, நிலுவையில் உள்ளது. அனைத்து வசதிகள் இருந்தும், துப்புரவு, சுகாதார பணியில், போதிய கவனம் செலுத்தாததால், நோய் பாதிப்பு அதிகரித்துள்ளது.
பிரச்னைகள்

 இங்குள்ள அனைத்து வீடுகளிலும், மறுகுடியமர்வு வரும்போது, குடிசை மாற்று வாரிய பகுதியில் மட்டும், மக்கள் தொகை ஒரு லட்சத்தை தாண்டும். இது, ஒரு நகராட்சியின் மக்கள் தொகை. இந்த குடியிருப்புகள், காஞ்சிபுரம் மாவட்டம், பெரும்பாக்கம் ஊராட்சி எல்லையில் உள்ளது. அங்குள்ள, 23 ஊழியர்களை கொண்டு, ஒரு லட்சம் மக்கள் தொகை கொண்ட, குடிசை மாற்று வாரிய மக்களுக்காக சேவை வழங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மறுகுடியமர்வு செய்ய துவங்கியபோது, துப்புரவு மற்றும் சுகாதார பணியை, மாநகராட்சி செய்ய முடிவு செய்யப்பட்டது. அதுவும், 2015ல், குடிசை மாற்று வாரிய உயர் அதிகாரிகளின், வாய்மொழி உத்தரவில், மாநகராட்சி இந்த பணியை செய்ய துவங்கியது. சோழிங்கநல்லுார் மண்டலத்தில் உள்ள, 200வது வார்டில் உள்ள, துப்புரவு ஊழியர்கள் மூலம், இந்த பணி நடக்கிறது. நாள் ஒன்றுக்கு, 6 டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. ஆனால், முழுமையான துப்புரவுபணி நடைபெற வில்லை. மலேரியா ஊழியர்கள் குறைவாக உள்ளதால், குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளுக்கு, சுகாதார பணி மேற்கொள்ள முடியவில்லை. இதனால், கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. சுற்றி உள்ள, வடிகால், கால்வாயில் கழிவுநீர் அதிகமாக தேங்கி உள்ளதால், தொற்று நோய் பரவி வருகிறது. கடந்த இரண்டு மாதமாக, 25க்கும் மேற்பட்டோர், மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.இணைப்பு என்னாச்சு? முழுமையான சேவை வழங்க, பெரும்பாக்கம் ஊராட்சி எல்லையில் உள்ள, 200 ஏக்கர் பரப்பளவில் கட்டிய குடியிருப்புகள் மற்றும் அதை சார்ந்த சேவை துறைகளை, சென்னை மாநகராட்சியுடன் இணைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான கோப்புகள், தலைமை செயலகத்தில் துாங்கிக் கொண்டிருக்கின்றன. வீடு, பள்ளி, கல்லுாரி என, அனைத்து வசதிகளையும் செய்து, சுகாதாரத்தில் கவனம் செலுத்தாமல் நோய் பாதிப்பு அதிகரித்தால், மொத்த திட்டமும் கேள்விக்குறியாகி விடும். நிலைமையை உணர்ந்து, சென்னை மாநகராட்சியுடன் இணைத்து, முழு சேவை வழங்க வேண்டும் என, அங்கு வசிப்பவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

போதுமான வசதிகள் இருந்தும், கொசு தொல்லை தாங்க முடியவில்லை. திறந்தவெளியில் கிடக்கும் பொருட்களில், தண்ணீர் தேங்கி கொசு அதிகரித்துள்ளது. ஊராட்சியில் வரி கட்டுகிறோம்; சேவை தருவதில்லை. குடிசை மாற்று வாரிய அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை. துப்புரவு பணியும், மேலோட்டமாக தான் நடக்கிறது.மறுகுடியமர்வு செய்யப்பட்ட மக்கள்ஒரு கோடி ரூபாய்குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள், மாநகராட்சியுடன் இணைந்தால், சோழிங்கநல்லுார் மண்டலத்திற்கு, 1 கோடி ரூபாய்க்கு மேல், கூடுதல் வரி வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது.

ஆட்சியாளர்களுக்கு பயந்து, வாய்மொழி உத்தரவில் குப்பை அள்ளி வருகிறோம். இதனால், 200வது வார்டு பணிகள் பாதிக்கப்படுகின்றன. ஆட்கள் அதிகரிக்கும் போது, பிரச்னை அதிகரிக்கும். உரிய உத்தரவு பிறப்பித்து, கூடுதல் ஊழியர்களை நியமித்தால் தான் நிலைமை சீராகும்.மாநகராட்சி அதிகாரிகள்

கட்டமைப்புகள் செய்து கொடுக்கத் தான் எங்களுக்கு உத்தரவு. இதர சேவைகளை, உள்ளாட்சி அமைப்பு தான் செய்ய வேண்டும். மாநகராட்சியுடன் இணைந்தால் தான், துப்புரவு, சுகாதார பிரச்னைக்கு விடிவு கிடைக்கும்.குடிசை மாற்று வாரிய அதிகாரிகள்

வரி ஊராட்சிக்குமறுகுடியமர்வு செய்யப்பட்ட, ஒவ்வொரு வீட்டு உரிமையாளரும், பெரும்பாக்கம் ஊராட்சியில், 330 ரூபாய் வீட்டு வரி கட்டி வருகின்றனர். ஊராட்சியில் இருந்து, எந்த அடிப்படை சேவையும் கிடைக்காமல், வரி மட்டும் கட்டுவதால், மக்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.-- நமது நிருபர்- -

No comments:

Post a Comment

Section of Anna University PhD scholars excluded from convocation

Section of Anna University PhD scholars excluded from convocation Scholars who completed their viva after this date will be awarded degrees ...