Sunday, September 10, 2017

25 வருடங்களாகப் பணியாற்றிய தலைமைசிரியர், ஆசிரியைகள் திடீர் இடைநீக்கம்!


விருதுநகர் அல்லம்பட்டியில் தேவாங்கர் சமூகத்துக்குப் பாத்தியப்பட்ட அரசு உதவிபெறும் சௌடாம்பிகா ஆரம்பப் பள்ளியில் 25 வருடங்களாகப் பணியாற்றியத் தலைமையாசியர் தங்கமணியையும், உதவி ஆசிரியர்கள் ராஜேஸ்வரி, நாகஜோதி  ஆகியோரையும் பள்ளி நிர்வாகம் இடை நீக்கம் செய்துள்ள சம்பவம், விருதுநகர் கல்வித்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுபற்றி தலைமைஆசிரியை தங்கமணி சார்பாகப் பேசியவர்கள், ''25 வருஷங்களாக இப்பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து, தற்போது தலைமையாசிரியராகப் பணியாற்றி வருகிறார் தங்கமணி. இதுவரை இப்பள்ளியை நிர்வாகம் செய்தவர்கள் இவர்மீது எந்தப் புகாரும் தெரிவித்ததில்லை, அந்தளவுக்கு இப்பள்ளியைச் சிறப்பாக நடத்திவந்தார்.

தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் பள்ளியில் தலைமையாசிரியராக இருப்பது பள்ளி நிர்வாகத்துக்குப் பிடிக்கவில்லை. அதுமட்டுமல்லாமல், பணம் வாங்கிக்கொண்டு வேறு ஒருவரை நியமிக்கத் திட்டமிடுகிறார்கள். அதனால், அவர்மீது தேவையற்ற புகார்களைக் கூறுகிறார்கள். சாதிரீதியாகவும் இழிவுபடுத்தி பேசியிருக்கிறார்கள்.

இதுபற்றி அதிகாரிகளுக்கு தங்கமணி அனுப்பிய புகாருக்கு, அங்கு பணிபுரியும் இரண்டு ஆசிரியைகள் சாட்சி கூறியதால், அவர்களையும் இப்போது இடைநீக்கம் செய்துள்ளனர். இதற்கு கல்வித்துறை அதிகாரிகளும் ஒத்துழைக்கிறார்கள். மாவட்ட ஆட்சியர்தான் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்கின்றனர்.

பள்ளிக்குள் செல்ல முடியாமல் தலைமையாசிரியருடன்  மற்ற இரண்டு ஆசிரியர்களும் வெளியில் நின்றது பார்ப்போரைக் கலங்க வைத்தது.

No comments:

Post a Comment

NEWS TODAY 15.07.2026