Thursday, October 26, 2017

மானாமதுரை, திருப்பாச்சேத்தியில் போலி டாக்டர்கள் 4 பேர் கைது

சிவகங்கை: மானாமதுரை, திருப்பாச்சேத்தியில் போலி டாக்டர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
'டெங்கு' காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆங்காங்கே சில போலி டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருவதாக தகவல் கிடைத்தது. போலி டாக்டர்களை கண்டுபிடித்து கைது செய்ய நடவடிக்கை எடுக்கும்படி சிவகங்கைக்கு வந்திருந்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து, மாவட்ட மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் விஜயன் மதமடக்கி தலைமையில் பூவந்தி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் சேதுராமு, மருந்து கட்டுப்பாட்டு அலுவலர் பிரபு, இணை இயக்குனர் அலுவலக கண்காணிப்பாளர் கோவிந்தசாமி பல்வேறு குழுக்களாக பிரிந்து போலி மருத்துவர்களை
கண்டறியும் பணியில் இறங்கினர்.
இவர்கள் நடத்திய சோதனையில் மானாமதுரை அருகே உள்ள இடைக்காட்டூரில் பி.யூ.சி., படித்துவிட்டு கிளினிக் மற்றும் மருந்துக்கடை நடத்தி வந்த நாகராஜன்,51, அதே ஊரில் ஓமியோபதி படித்துவிட்டு நோயாளிகளுக்கு அலோபதி மருத்துவ சிகிச்சை அளித்து வந்த பாண்டீஸ்வரி, 32, ஆகியோரை கைது செய்தனர்.
இதேபோல் திருப்பாச்சேத்தியில் பிளஸ் 2 படித்து விட்டு காய்ச்சலுக்கு ஊசி போட 80 ரூபாய் என அறிவிப்பு பலகை வைத்தும், காய்ச்சல் நோயாளிகளுக்கு பயன்படுத்தக்கூடாது என தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஊசி மருந்தை பயன்படுத்தியும் வந்த முகம்மது பாரூக்,40, கீழடியில் தனியார் மருத்துவமனையில் பணி செய்து ஓய்வு பெற்ற டேவிட் செல்லப்பா கைது செய்யப்பட்டனர்.
மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் விஜயன் மதமடக்கி கூறுகையில், '' டெங்கு காய்ச்சல் அறிகுறியை கண்டறியும் 'செல் கவுன்ட்டர்' இயந்திரங்கள் அரசு மருத்துவமனைகளுக்கு 18 ம், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு 10 ம் வழங்கப்பட்டுள்ளது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவர்களிடம் சென்று முறையான சிகிச்சை பெற வேண்டும். டெங்கு காய்ச்சலுக்கு ஊசி மருந்து அவசியமற்றது. நோயாளிகள் தாங்களாகவே மருந்துக்கடைகளில் ஊசி, மாத்திரைகளை வாங்கி பயன்படுத்தக்கூடாது. போலி மருத்துவர்களை கைது செய்யும் நடவடிக்கை தொடரும்,'' என்றார்.

No comments:

Post a Comment

TAPS takes effect from Jan 1, 2026

TAPS takes effect from Jan 1, 2026  As per the G.O., TAPS will become operational after the notification of rules and completion of statutor...