Tuesday, July 31, 2018

அரசு பஸ்கள் உடைப்பு; தி.மு.க.,வினர் கைது : கருணாநிதி உடல்நிலை குறித்த தகவலால் ஆவேசம்

Added : ஜூலை 31, 2018 01:12



சேலம்: சேலத்தில், மூன்று அரசு பஸ்களின் கண்ணாடியை உடைத்த, தி.மு.க.,வினர், நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை, காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், தி.மு.க., தலைவர் கருணாநிதியின் உடல் நிலையில், பின்னடைவு ஏற்பட்டதாக, நேற்று முன்தினம் இரவு தகவல்கள் வெளியாகின.

தமிழகம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவியது.நேற்று முன்தினம் நள்ளிரவு, சேலத்தில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்ட, அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின், புதிய குளிர்சாதன பஸ்சின் கண்ணாடியை, உடையாப்பட்டி பை - பாசில், சிலர் கல் வீசி உடைத்தனர்.

கல் வீச்சு : தொடர்ந்து, கோவையில் இருந்து சேலம் வந்த, விரைவு பஸ் கண்ணாடியை, அதே கும்பல் கல் வீசி தாக்கியது.மேலும், சேலம் பழைய பஸ் ஸ்டாண்ட் நோக்கி வந்த, அரசு டவுன் பஸ்சின் முன்பக்க கண்ணாடியை, மர்ம கும்பல் கல்வீசி உடைத்தது. பஸ் டிரைவர், போலீசில் புகார் அளித்தார். அம்மா பேட்டை போலீசார் விசாரணை நடத்தி, 22 - 26 வயதுடைய, நால்வரை கைது செய்தனர். இவர்கள் அனைவரும், தி.மு.க.,உறுப்பினர்கள். இவர்களுக்கு தலைமையேற்று, பஸ்கள் மீது கல் வீச உத்தரவிட்ட, தி.மு.க., பிரமுகர் பிரகாஷ், 30, என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். அதேபோல, தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே, நேற்று முன்தினம் இரவு, இரு இடங்களில், அரசு பஸ்கள் மீது கல் வீச்சு நடந்ததில், கண்ணாடிகள் உடைந்தன.

தஞ்சாவூர் கொடிமரத்து மூலை பகுதியில், மயிலாடு துறை சென்று கொண்டிருந்த அரசு பஸ் மீது, சிலர் கல் வீசியதில், முன்பக்க கண்ணாடி உடைந்தது. கும்பகோணத்தில் இருந்து தஞ்சாவூர் வந்த அரசு பஸ், கீழவாசல் அருகே உடைக்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் ஐந்து பஸ்கள் சேதப்படுத்தப்பட்டன.

சாலை மறியல் : பெரம்பலுார் மாவட்டம், சிறுவாச்சூர் கிராமத்தைச் சேர்ந்த, தி.மு.க., தொண்டர்கள், 50க்கும் மேற்பட்டோர், நேற்று முன்தினம் இரவு, திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பெரம்பலுார் போலீசார் பேச்சு நடத்தி, 'கருணாநிதி நலமாக உள்ளார்' என தெரிவித்ததை அடுத்து, மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.கருணாநிதி உடல் நிலை குறித்து, நேற்று முன்தினம் இரவு பரவிய வதந்தியை தொடர்ந்து, அரசு பஸ்கள் படிப்படியாக டிப்போக்களுக்கு எடுத்து செல்லப்பட்டன.அப்போது, பெரம்பலுாரில் இருந்து திருச்சி சென்ற ஒரு அரசு பஸ், டிப்போவுக்கு எடுத்துச் செல்லப்பட்ட ஒரு பஸ் மீது, தி.மு.க.,வினர் கல்வீசி தாக்கினர். இதில், இரண்டு பஸ்களின் கண்ணாடி உடைந்தது.
சுங்கச்சாவடியில் இலவசம் : கருணாநிதி உடல்நிலையில் பின்னடைவு என்ற தகவலை அடுத்து, நேற்று முன்தினம் இரவு, தமிழகம் முழுவதும் இருந்து, தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சென்னைக்கு கிளம்பினர்.

இவர்கள், கார் மற்றும் வேன்களில், விழுப்புரம் மாவட்டம், உளுந்துார்பேட்டை டோல்கேட் வழியாக, சென்னைக்கு சென்றனர். இவ்வாறு செல்லும் கட்சியினரை நிறுத்தி, கட்டணம் வசூலித்தால், பிரச்னை ஏற்படும் என்பதால், உளுந்துார்பேட்டை டோல்கேட் நிர்வாகம், நேற்று முன்தினம் இரவு, 10:30 மணிக்கு, டோல்கேட்டில் உள்ள, 12 கட்டண வசூல் மையங்களிலும் கட்டணம் வசூலிப்பதை நிறுத்தியது. இதனால், கட்டணமின்றி வாகனங்கள் இலவசமாக செல்ல அனுமதிக்கப்பட்டன.நேற்று காலை, 6:45 மணி முதல், மீண்டும் டோல்கேட்டில் கட்டணம் வசூலிக்க துவங்கினர். உளுந்துார்பேட்டை டோல்கேட் பகுதியில், 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...