Thursday, November 5, 2015

அரசு அதிகாரிகள் ஒரு மாதத்துக்கு மேல் வெளிநாட்டில் தங்கினால் பதவி பறிபோகும்: மத்திய அரசு புதிய விதிமுறை

அரசு அதிகாரிகள் ஒரு மாதத்துக்கு மேல் வெளிநாட்டில் தங்கினால் பதவி பறிபோகும்: மத்திய அரசு புதிய விதிமுறை

First Published : 04 November 2015 01:03 AM IST
ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட உயர் பதவி வகிக்கும் அரசு அதிகாரிகள் பணி நிமித்தமாக வெளிநாடுகளுக்கு சென்று ஒரு மாதத்துக்கு மேல் அங்கு தங்கியிருந்தால் அவர்களைப் பதவி நீக்கம் செய்வதற்கான விதிமுறையை மத்திய அரசு வகுத்துள்ளது.
 அதேபோல உரிய முன் அனுமதியின்றி அதிக நாட்கள் விடுப்பில் இருந்தாலும் இந்திய ஆட்சிப் பணிகளில் உள்ள அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள்.
 இது தொடர்பாக மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறை, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச தலைமை செயலாளர்களுக்கு செவ்வாய்க்கிழமை ஓர் அறிவிக்கையை அனுப்பியுள்ளது. மத்திய உள்துறை, சுற்றுச்சூழல், வனத்துறை அமைச்சகங்களுக்கு இந்த அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
 அதில் கூறப்பட்டுள்ளதாவது: பணி நிமித்தமாக வெளிநாடுகளுக்குச் செல்லும் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்ஒஎஸ் அரசு அதிகாரிகள் ஒரு மாதத்துக்கு மேல் அங்கு தங்கியிருந்தால் அவர்களாகவே பதவியில் இருந்து நீங்கிவிட்டதாக கருதி பணிநீக்கம் செய்யப்பட வேண்டும். இது தவிர உரிய அனுமதியின்றி நீண்ட நாள்கள் விடுப்பில் இருக்கும் அதிகாரிகள் மீதும், விடுமுறைக் காலம் முடிந்த பிறகும் பணிக்குத் திரும்பாமல் இருக்கும் அதிகாரிகள் மீதும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் இந்த நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால், மத்திய அரசு தலையிட்டு உரிய நடவடிக்கையை எடுக்கும்.
 அதே நேரத்தில் பணி நீக்க நடவடிக்கைக்கு முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தங்கள் தரப்பு வாதத்தை தெரிவிக்க வாய்ப்பு அளிக்கப்படும். அதற்காக அவர்களுக்கு காரண விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும். எனினும் உரிய அனுமதியின்றி ஓராண்டுக்கு மேல் விடுப்பில் இருந்தால் அவர்கள் தாங்களாகவே பணியில் இருந்து விலகியதாக எடுத்துக் கொள்ளப்படுவார்கள்.
 இப்போதுள்ள விதிப்படி அரசு அனுமதித்த நாள்களை காட்டிலும் கூடுதலாக ஓராண்டு வெளிநாட்டில் ஓர் அதிகாரி தங்கியிருந்தால் அவர் தானாகவே பதவி விலகியதாக கருதப்படுவார். அதேபோல அனுமதிக்கப்பட்ட விடுமுறைக்காலம் முடிந்த பிறகு ஓராண்டு பணியில் இருந்து விலகியிருந்தால் அவர் பதவி விலகிவிட்டதாக கருதப்படுவார்.
 இப்போதைய நிலையில் 10 ஐஏஎஸ் அதிகாரிகள், உரிய அனுமதியின்றி விடுப்பில் உள்ளார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...