Saturday, July 7, 2018


எம்.பி.பி.எஸ்.: 62% இடங்களை பெற்ற மாநிலப் பாடத் திட்ட மாணவர்கள்

By சென்னை, | Published on : 05th July 2018 01:03 AM |



எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் கலந்தாய்வில் இதுவரை நிரம்பியுள்ள இடங்களில் 62 சதவீத இடங்களை மாநிலப் பாடத்திட்ட மாணவர்கள் பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் கலந்தாய்வு ஜூலை 1-ஆம் தேதி தொடங்கியது. பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 2-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. செவ்வாய்க்கிழமை (ஜூலை 3) வரை நடைபெற்ற கலந்தாய்வின் முடிவில் மொத்தம் அரசு கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ், தனியார் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் என மொத்தம் 1,421 இடங்கள் நிரம்பின.

62 சதவீத இடங்கள்: இவற்றில் 892 இடங்களை மாநிலப் பாடத் திட்ட மாணவர்களும், 460 இடங்களை சிபிஎஸ்இ மாணவர்களும், பிற பாடத்திட்ட மாணவர்கள் 69 இடங்களையும் பெற்றுள்ளனர். அந்த அடிப்படையில் பூர்த்தி செய்யப்பட்ட இடங்களில் 62.77 சதவீத இடங்களை மாநிலப் பாடத்திட்ட மாணவர்களும், 32.37 சதவீத இடங்களை சிபிஎஸ்இ மாணவர்களும், 4.9 சதவீத இடங்களைப் பிற பாடத்திட்ட மாணவர்களும் பெற்றுள்ளனர். தரவரிசைப் பட்டியலை வெளியிடுகையில் பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், கலந்தாய்வில் 70 சதவீத இடங்கள் மாநிலப் பாடத்திட்ட மாணவர்களுக்கும், 30 சதவீத இடங்கள் சிபிஎஸ்இ உள்ளிட்ட பிற மாநிலப் பாடத்திட்ட மாணவர்களுக்கும் கிடைக்க வாய்ப்புள்ளது என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நிரம்பிய இடங்கள்: புதன்கிழமை நடைபெற்ற கலந்தாய்வின் முடிவில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 490 எம்.பி.பி.எஸ். இடங்கள், தனியார் கல்லூரிகளில் 265 அரசு ஒதுக்கீட்டு இடங்கள், அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 28 இடங்கள், தனியார் கல்லூரிகளில் 2 அரசு ஒதுக்கீட்டு பிடிஎஸ் இடங்கள் என மொத்தம் 869 இடங்கள் நிரம்பின.

காலியிடங்கள் எத்தனை?: கலந்தாய்வின் முடிவில் அரசு மருத்துவக் கல்லூரியில் 628, தனியார் கல்லூரிகளில் 537 அரசு ஒதுக்கீட்டு இடங்கள், ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் 55, சென்னை கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் 24 இடங்கள் என மொத்தம் 1,244 எம்.பி.பி.எஸ். காலியிடங்கள் உள்ளன. அதே போன்று அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 54, தனியார் கல்லூரிகளில் 963 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் என மொத்தம் 1,017 பிடிஎஸ் காலியிடங்கள் உள்ளன.

இன்றைய கலந்தாய்வு: பொதுப்பிரிவினருக்கு தொடர்ந்து வியாழக்கிழமையும் கலந்தாய்வு நடைபெற உள்ளது. தரவரிசை எண் 2381-இலிருந்து 4312 வரை பெற்ற மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெற உள்ளது. சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் காலை 9 மணிக்கு கலந்தாய்வு தொடங்கும்.

தர வரிசைப் பட்டியலில் 8 மாணவர்கள்: தமிழகத்தைச் சேர்ந்த, ஆனால் வெளிமாநிலத்தில் பிளஸ் 2 வரை படித்து, நீட் தேர்விலும் வெளிமாநிலத்தவர் என்று குறிப்பிட்டு தேர்வெழுதிய மாணவரில் ஒருவர், தனக்கு தமிழக மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்க இடமளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

வழக்கின் முடிவில் குறிப்பிட்ட மாணவரைக் கலந்தாய்வில் சேர்த்துக் கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டது. எனவே, அந்த மாணவரின் பெயர் தமிழக இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இணைக்கப்பட்டது. அதன் காரணமாக அதே நிலையில் உள்ள பிற மாநிலத்திலிருந்து விண்ணப்பித்த தமிழகத்தை சொந்த மாநிலமாகக் கொண்ட 90 மாணவர்களின் பெயர்களை மருத்துவக் கல்வி இயக்ககமே புதிதாக தரவரிசைப் பட்டியலில் இணைத்தது. இதனைத் தொடர்ந்து அரசு இடங்களுக்கு விண்ணப்பித்த 8 மாணவர்களின் பெயரும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்பித்த ஒரு மாணவரின் பெயரும் மீண்டும் தரவரிசைப் பட்டியலில் புதன்கிழமை புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Married Persons Cannot Enter Into Live-In Relationship Without Obtaining Divorce: Allahabad HC Refuses Protection

Married Persons Cannot Enter Into Live-In Relationship Without Obtaining Divorce: Allahabad HC Refuses Protection  Sparsh Upadhyay 28 Mar 20...