Tuesday, May 9, 2017

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி 24–ந்தேதி காஞ்சீபுரம் வருகிறார்

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி 24–ந்தேதி காஞ்சீபுரம் வருகிறார்
 
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வருகிற 24–ந்தேதி காஞ்சீபுரம் வருகிறார். அவர், காஞ்சீபுரத்தில் உள்ள முக்கிய கோவில்கள் மற்றும் சங்கரமடத்துக்கு செல்கிறார். 
 
காஞ்சீபுரம்,
இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, வருகிற 24–ந்தேதி ஒரு நாள் சுற்றுப்பயணமாக காஞ்சீபுரம் வருகிறார். இதற்காக அன்று காலை டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் காஞ்சீபுரம் ஏனாத்தூரில் உள்ள சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள ஹெலிபேடில் வந்து இறங்குகிறார்.

பின்னர் குண்டு துளைக்காத காரில் உலக பிரசித்தி பெற்ற காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள், காமாட்சி அம்மன் கோவில் மற்றும் ஏகாம்பரநாதர் ஆகிய கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார்.
சங்கர மடம் செல்கிறார் 
 பின்னர் காஞ்சீ சங்கரமடம் சென்று காஞ்சீ சங்கராச்சாரியார்கள் ஜெயேந்திர சரஸ்வதி சாமிகள், விஜயேந்திர சரஸ்வதி சாமிகள் ஆகியோரை சந்தித்து ஆசி பெறுகிறார். பிறகு மடத்தில் முக்தி அடைந்த காஞ்சீ மகா பெரியவர் சங்கர சேகரேந்திர சரஸ்வதி சாமிகள் பிருந்தாவனத்துக்கு சென்று அங்கு மகா பெரியவரை தரிசனம் செய்கிறார்.

அதன்பிறகு பிற்பகலில் ஏனாத்தூரில் சங்கரா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் விழாக்களில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கலந்து கொள்கிறார். அன்று மாலை ஹெலிகாப்டர் மூலம் மீண்டும் சென்னை விமான நிலையம் சென்று, அங்கிருந்து தனி விமானத்தில் டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார்.
மாவட்ட கலெக்டர் ஆய்வு 
 ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி காஞ்சீபுரம் வருகையையொட்டி மாவட்ட கலெக்டர் பொன்னையா, மாவட்ட வருவாய் அதிகாரி சவுரிராஜன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி, காஞ்சீபுரம் சப்–கலெக்டர் அருண் தம்புராஜ், அறநிலையத்துறை உதவி ஆணையரும், கோவில் நிர்வாக அதிகாரியுமான விஜயன் ஆகியோர் ஜனாதிபதி வந்து செல்லும் பாதைகள், கோவில்களில் நேரில் ஆய்வு செய்தனர்.

மேலும் ஜனாபதிபதி வருகையையொட்டி செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் மாவட்ட கலெக்டர் ஆலோசனை நடத்தினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 28.01.2026