Monday, March 26, 2018

அடிப்படை வசதிக்கு ஏங்கும் சிக்கல் ஆரம்ப சுகாதார நிலையம்: அவசர சிகிச்சைக்கு வழியில்லை

Added : மார் 26, 2018 00:17


சிக்கல் : கடலாடி ஒன்றியத்திற்குட்பட்ட சிக்கல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அடிப்படைவசதிகள் குறைவாகவும், தரம் உயர்த்தப்படாமல் இருப்பதால், 64 கிராம மக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

சாயல்குடி செல்லும் இ.சி.ஆர்.,ரோடு, அருகில் சிக்கல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், 1990ல் கட்டப்பட்டுள்ளது. 6 படுக்கை வசதிகள் கொண்டுள்ளது. தினமும் 500 பேர் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்றும், பரிசோதனை செய்தும் வருகின்றனர். 1 டாக்டரும், நர்சுகள் 6 பேரும் பணியில் உள்ளனர். வாலிநோக்கம், இதம்பாடல், மேலக்கிடாரம், கீழச்செல்வனுர், கீழச்சிறுபோது, மேலச்சிறுபோது, ஆண்டிச்சிக்குளம், சிறைக்குளம், காவாகுளம், தனிச்சயம், கொத்தங்குளம் உள்ளிட்ட 64 கிராம மக்களின் அன்றாட, அத்தியாவசிய சிகிச்சைக்காக ஆரம்ப சுகாதார நிலையம் வந்து செல்கின்றனர். அதிகளவு நோயாளிகள் வந்தால், சிகிச்சையளிக்க போதிய இடவசதியில்லாமல் சிரமத்திற்குள்ளாகின்றனர்.

சிக்கலை சேர்ந்த எம்.எஸ்.கே.பாக்கியநாதன் கூறியதாவது; அதிகளவு விவசாயிகளும், உப்பளத்தொழிலாளர்களும், கூலியாட்களும் உள்ளனர். பாம்பு, தேள், நாய் உள்ளிட்டவைகளின் விஷக்கடிக்கு போதிய மருந்துகள் இருப்பதில்லை. சாயல்குடி இ.சி.ஆர்., ரோட்டில் நடக்கும் விபத்துகளில், உரிய முதலுதவி வசதிகள் கூட இல்லை. மாலை 3:00 மணிக்கு மேல் டாக்டர்கள் இல்லாத நிலை உள்ளது. இரவு நேரங்களில் அவசர சிகிச்சை பெறமுடியாமல், சிக்கலில் இருந்து 25 கி.மீ., சாயல்குடிக்கும், கீழக்கரை, ராமநாதபுரத்திற்கும் கொண்டு செல்லவேண்டிய நிலை உள்ளது. எனவே மருத்துவப்பணிகள் துறை அதிகாரிகள், ஆரம்பசுகாதர நிலையத்தை ஆய்வு செய்து, கூடுதல் டாக்டர்களை நியமித்தும், இரவுநேரங்களில் இயங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


No comments:

Post a Comment

NEWS TODAY 15.12.2025