Friday, April 28, 2017

அண்ணாமலை பல்கலையிலிருந்து 2,000 பேர் கூண்டோடு மாற்றம்

பதிவு செய்த நாள் 27 ஏப்
2017

23:39 பல கோடி ரூபாய் நஷ்டத்தில் செயல்படும், அண்ணாமலை பல்கலையில் இருந்து, பேராசிரியர்கள், ஊழியர்கள் உட்பட, 2,000 பேர், இடமாற்றம் செய்யப்பட உள்ளனர்.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில், நிர்வாக பிரச்னை ஏற்பட்டு, ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், 2003ல், தனியார் நிர்வாகத்திலிருந்து, தமிழக அரசின் நேரடி கட்டுப்பாட்டில், பல்கலை கொண்டு வரப்பட்டது. தற்போதைய நிலையில், பல்கலையின் பேராசிரியர்கள், ஊழியர்களின் சம்பளம் மற்றும் இதர செலவுகளுக்காக மாதம், 50 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. ஆனாலும், அனுமதிக்கப்பட்ட அளவை விட, பேராசிரியர்கள், ஊழியர்கள் என, 5,000 பேர், கூடுதலாக இருப்பதை, உயர் கல்வித்துறை கண்டறிந்தது. நிலைமையை சமாளிக்க, 2016ல், முதற்கட்டமாக, 367 பேராசிரியர்கள், வேறு அரசு கல்லுாரிகளுக்கு மாற்றப்பட்டனர். அதன்பின், பல்கலையில், 1,080 பேராசிரியர்களும், 4,722 ஊழியர்களும், பணியின்றி கூடுதலாக உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்களுக்காக, மாதம் தோறும், சம்பளம் உட்பட பல்வேறு செலவுகளுக்காக, 19 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. எனவே, இவர்களில், 547 பேராசிரியர்கள், 1,500 ஊழியர்கள் என, 2,047 பேர், அரசு கலை, அறிவியல் கல்லுாரிகள், பாலிடெக்னிக்குகள் மற்றும் பல்கலைகளுக்கு மாற்றப்பட உள்ளனர். ஓரிரு நாளில், இவர்களுக்கு பணியிட மாற்றம் வழங்கப்பட உள்ளது.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 15.12.2025