Thursday, April 27, 2017

சென்னையில் பல இடங்களில் இரவில் திடீர் மின் தடை



சென்னையில் பல இடங்களில் திடீரென்று மின் தடை ஏற்பட்டது.
ஏப்ரல் 27, 05:15 AM
சென்னை,

சென்னையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. சாலைகளில் அனல் காற்று வீசுவதால் பகலில் மக்கள் நடமாட்டம் குறைவாகவே இருந்து வருகிறது. வெயில் தாக்கம் காரணமாக இரவிலும் அனல் காற்றே வீசி வருகிறது. இதனால் இரவு நேரத்தில் மக்கள் தூங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.


இந்த நிலையில் நேற்று இரவு 8 மணி அளவில் இருந்து சென்னையில் பல இடங்களில் திடீரென்று மின் தடை ஏற்பட்டது. வேப்பேரி, அண்ணாசாலை, புதுப்பேட்டை, அண்ணாநகர், புளியந்தோப்பு, தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை, ராயபுரம் உள்பட பல இடங்களில் மின் வினியோகம் தடைப்பட்டதால், இருளில் மூழ்கியது. தெரு விளக்குகளும் எரியாததால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார்கள்.

இரவு 10 மணியாகியும் பல இடங்களில் மின் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் பொது மக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளார்கள். மின்சாரம் எப்போது வரும் என்று மின்சாரவாரியத்திற்கு அவர்கள் தொலைபேசி வாயிலாக கேட்டுக்கொண்டே இருந்தனர்.

இது குறித்து மின்சாரத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘தண்டையார்பேட்டை துணை மின் நிலையத்தில் மின் பழுது ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பல இடங்களில் மின் தடை ஏற்பட்டு இருக்கிறது. பழுது பார்க்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணி முடிந்ததும் மின் வினியோகம் கொடுக்கப்படும்’ என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 27.01.2026