ஆதாருக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
பதிவு செய்த நாள்: மே 20,2017 19:06
புதுடில்லி, பல்வேறு திட்டங்களுக்கு, 'ஆதார்' எண்ணை குறிப்பிட வேண்டும் என்ற அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க, சுப்ரீம் கோர்ட் மறுத்துவிட்டது.
மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெறுவது உள்ளிட்ட, பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு, வரும், ஜூன், 30க்குள், ஆதார் எண்ணை குறிப்பிட வேண்டும் என, மத்திய அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை, நீதிபதிகள்,ஏ.எம்.கன்வில்கர், நவின் சின்ஹா அடங்கிய அமர்வு, நேற்று விசாரித்து. அரசாணைக்கு தடை விதிக்க மறுத்த அமர்வு, ஜூன், 27ல், வழக்கை விசாரிப்பதாக கூறியுள்ளது.
இதற்கிடையே, இது போன்ற மனுக்களுக்கு, மத்திய அரசின் சார்பில் ஆஜரான, அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி எதிர்ப்பு தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:மக்களுக்கு நலத்திட்டங்கள் போய் சேரக் கூடாது என்பதற்காக, ஆதாரை கட்டாயமாக்கவில்லை. போலிகளுக்கு செல்லக் கூடாது; நஷ்டம் ஏற்படக் கூடாது என்பதற்காகவே கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
அரசு நலத்திட்டங்கள் உண்மையில் யாருக்கு சேர வேண்டுமோ, அவர்கள் பாதிக்கப்பட்டதாக வழக்கு தொடர்வதில்லை. அதே நேரத்தில், யாருக்கு பாதிப்பு ஏற்படாதோ, அவர்கள் தான் வழக்கு தொடர்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment