Sunday, March 18, 2018

கூகுளில் கொட்டும் ஆதார் தகவல்கள்... இந்தமுறை என்ன சொல்கிறது ஆதார் ஆணையம்? #Aadhaar   18.03.2018

மு.ராஜேஷ்

மொபைல் எண், வங்கி என பல்வேறு சேவைகளைப் பெறுவதற்கு ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை தொடர்ச்சியாக நீட்டித்துக்கொண்டே வந்த மத்திய அரசு கடைசியாக நிர்ணயித்தது இந்த மாதம் 31-ம் தேதியைத்தான். ஆனால் ஆதார் தொடர்பான வழக்கு நடைபெற்றுக்கொண்டிருப்பதால் ஆதாரை இணைப்பதற்கான அவகாசத்தை காலவரையின்றி நீட்டித்து கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தது உச்சநீதிமன்றம். யார் என்ன சொன்னால் எங்களுக்கு என்ன என்பதைப் போல், தனியார் நிறுவனங்கள் தொடர்ந்து தங்கள் வாடிக்கையாளரின் ஆதார் எண்ணை நிர்பந்தம் செய்து வாங்கிக்கொண்டு இருக்கிறார்கள். ஆதார் தகவல்கள் பாதுகாப்பாகத்தான் இருக்கிறது என்று பலமுறை உச்ச நீதிமன்றத்திலேயே தெரிவித்திருக்கிறது தேசிய தனிநபர் அடையாள ஆணையம். ஆனால் அதன் உண்மைத்தன்மையை கேள்விக்குள்ளாக்கும் வகையில் தொடர்ச்சியாக சர்ச்சைகளில் சிக்கிக்கொண்டே இருக்கிறது ஆதார் என்ற விஷயம்.



கடந்த ஜனவரி மாதம்தான் 500 ரூபாய் செலவில் ஒரு பில்லியனுக்கும் மேற்பட்ட தகவல்களைப் பெற்றுவிட்டதாக தெரிவித்திருந்தது ஒரு நாளிதழ். அதை மறுத்த தேசிய தனிநபர் அடையாள ஆணையம் அந்த செய்தியை வெளிக்கொண்டு வந்த பத்திரிகையாளர் மீதும் நாளிதழ் மீதும் காவல்துறையில் புகார் அளித்தது. இதுபோல அவ்வப்போது தகவல்கள் கசிந்ததாக செய்திகள் வெளியாவதும், அதை ஆணையம் மறுப்பதும் தொடர்ச்சியாக நடந்துகொண்டேதான் இருக்கிறது.

கூகுளில் கொட்டிக்கிடந்த ஆதார்.



வழக்கத்திற்கு மாறாக இந்த முறை தகவல்கள் இணையத்தில் கசிந்திருப்பது சற்று வித்தியாசமான முறையில். பெரும்பாலோனோர் அன்றாடம் பயன்படுத்தும் தேடல் தளமான கூகுளில்தான் தனிநபர் தகவல்கள் கசிந்திருக்கின்றன. இதற்கு முன்பெல்லாம் ஆதார் தகவல் கசிந்திருப்பதை நிரூபிக்க முயற்சி செய்பவர்கள் அந்தத் தகவல்களை அடைவதற்கு மூளையை சற்று கசக்க வேண்டியிருந்தது. ஆனால் இந்த முறை அதிகமாக மெனக்கெடாமல் சும்மா ஒரு கீ வேர்டை தட்டினாலே தகவல்களை அள்ளிக்கொட்டியிருக்கிறது கூகுள். "Mera Aadhaar meri pehchan filetype:pdf " என்று கூகுளில் தேடினால் ஆதார் தகவல்கள் தென்படவே அதிர்ந்து போனார்கள் இணையவாசிகள். ஆதார் டேட்டாபேஸில் இருந்து நேரடியாக இல்லாமல் ஆதார் விவரங்களைப் பயன்படுத்தும் பிற நிறுவனங்கள் மூலமாக இந்தத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. pdf பார்மெட்டில் புகைப்படம், இருப்பிடத் தகவல், ஆதார் எண் என முழுமையான தகவல்கள் அதில் இருந்திருக்கிறது. குறிப்பிட்ட மூன்று இணையதளங்களில் இருந்துதான் அதிக அளவில் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.



தகவல்கள் பரவத்தொடங்கியவுடன் படிப்படியாக ஒவ்வொரு தகவல்களும் நீக்கப்பட்டிருக்கிறது, குறிப்பிட்ட அந்த இணையதளங்களை அணுகுவது தடுக்கப்பட்டிருக்கிறது. அப்படி இருந்தும் வேறு சில இணைய முகவரிகளில் பலரின் ஆதார் தகவல்களை பார்க்க முடிகிறது. இது தொடர்பாக விளக்கம் அளித்திருக்கும் தேசிய தனிநபர் அடையாள ஆணையம் சமூக வலைதளங்களில் வெளியாகும் செய்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றும் இந்த தகவல்கள் டேட்டாபேஸில் இருந்து வெளியாகவில்லை அதில் இருக்கும் தகவல்கள் பாதுகாப்பாகத்தான் இருக்கின்றன என்று தெரிவித்திருக்கிறது. ஒவ்வொரு முறையும் இது போல ஆதார் மீது குற்றச்சாட்டு எழும் போதெல்லாம் தேசிய தனிநபர் அடையாள ஆணையம் தெரிவிக்கும் பதில்கள் அனைத்துமே இதே ரீதியில்தான் இருக்கின்றது. தற்பொழுது வெளியாகியிருக்கும் தகவல்களைப் பொறுத்தவரையில் குறிப்பிட்ட ஒருவரின் தகவல்களை தேடித்பெற முடியாது என்றாலும், யாரோ சிலரின் தகவல்களை யார் வேண்டுமானாலும் பாரக்க முடியும் என்பதுதான் உண்மை.

இப்படி ஒவ்வொருமுறையும் ஆதார் தகவல்கள் வெளியாகும் போதெல்லாம், ஊடகங்களும் மக்களும் எழுப்பும் கேள்விகளுக்கு வெறும் விளக்கம் மட்டும்தான் அரசு அளிக்கும் என்றால், நாம் அவர்களிடம் நம்பிக்கொடுத்த பலகோடி தகவல்களுக்கு பிறகு என்னதான் மரியாதை?

No comments:

Post a Comment

Google launches Credit Card with Axis Bank —

Google launches Credit Card with Axis Bank —  Here's wh at you need to know about Pay Flex  Google Pay, in collaboration with Axis Bank,...