Saturday, April 15, 2017

பிறந்த நாள் சான்று வழங்கும்படி உத்தரவிட மாஜிஸ்திரேட்டுகளுக்கு அதிகாரமில்லை

பதிவு செய்த நாள் 14 ஏப்  2017  20:42



சென்னை,: 'பிறந்த நாள், இறந்த நாள் சான்றிதழ் வழங்கும்படி, மாஜிஸ்திரேட்டுகள் உத்தரவு பிறப்பிக்க முடியாது' என, சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளது.

திண்டிவனத்தில் நடந்த கொள்ளை சம்பவத்தில், ஒருவருக்கு, செஷன்ஸ் நீதிமன்றம் தண்டனை விதித்தது. இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், அவரது தந்தை மனு தாக்கல் செய்தார்.

'சம்பவம் நடந்த போது, சிறுவனாக இருந்தான்; சிறார் பாதுகாப்பு சட்டத்தின் கீழ், நிவாரணம் பெற உரிமை உள்ளது என்பதால், விடுதலை செய்ய வேண்டும்' என, மனுவில் கூறப்பட்டது. பிறந்த நாள் சான்றிதழும், ஆதாரமாக காட்டப்பட்டது.

இந்த வழக்கு, நீதிபதிகள் நாகமுத்து, பி.என்.பிரகாஷ் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. பிறந்த நாள் சான்றிதழை சரிபார்க்கும் போது, மாஜிஸ்திரேட் உத்தரவு அடிப்படையில், அந்த சான்றிதழ் பெறப்பட்டது தெரிய வந்தது.

இதையடுத்து, இதுபோன்று எத்தனை வழக்குகளில், மாஜிஸ்திரேட் நீதிமன்றங்கள் உத்தரவு பிறப்பித்துள்ளன என்ற, விபரங்களை தாக்கல் செய்யும்படி, பதிவுத்துறைக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மாநிலம் முழுவதும், 2014 ஏப்ரல் முதல், 2015 செப்டம்பர் வரை, 21 மாதங்களில், 4.13 லட்சம் எண்ணிக்கையில், பிறந்த நாள் மற்றும் இறந்த நாள் சான்றிதழ் வழங்க உத்தரவிடப்பட்டது தெரிய வந்தது.

நீதிமன்றங்களை தவறாக பயன்படுத்துவதற்கு, முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில், பிறந்த நாள் மற்றும் இறந்த நாள் பதிவு சட்டத்தின் கீழ், இத்தகைய சான்றிதழ்களை வழங்கும்படி, மாஜிஸ்திரேட் நீதிமன்றங்கள் உத்தரவிடக் கூடாது என, உயர் நீதிமன்றம் தெரிவித்தது.

அதை தொடர்ந்து, 2017 ஜன., 25ல், தமிழக அரசு வெளியிட்ட உத்தரவில், 'ஓராண்டுக்குள் பிறந்த நாள், இறந்த நாளை பதிவு செய்திருக்கவில்லை என்றால், வருவாய் கோட்ட அதிகாரியின் அந்தஸ்துக்கு குறையாத அதிகாரியின் உத்தரவுப்படி, பதிவு செய்து கொள்ளலாம்; மாஜிஸ்திரேட் உத்தரவுப்படி அல்ல' என, தெளிவுபடுத்தியது.இதையடுத்து, டிவிஷன் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு:

பிறந்த நாள், இறந்த நாள் பதிவு சட்டத்தின் கீழ், 2017 ஜன., 25க்கு பின், சான்றிதழ் வழங்கும்படி, மாஜிஸ்திரேட்டுகள் உத்தரவு பிறப்பிக்க முடியாது. வருவாய் கோட்ட அதிகாரி அந்தஸ்துக்கு குறையாத அதிகாரியின் உத்தரவுப்படி, பிறந்த நாள், இறந்த நாள் பதிவு செய்து கொள்ளலாம் என, 2017 ஜன., 25ல், தமிழக அரசு வெளியிட்ட அரசாணை செல்லும்.
எனவே, ஜனவரி, 25க்கு பின், மாஜிஸ்திரேட்டுகள் பிறப்பித்த உத்தரவு அடிப்படையில், பிறந்த நாள், இறந்த நாள் பதிவு நடந்திருந்தால், அவற்றை பதிவேட்டில் இருந்து நீக்க வேண்டும்.

சட்டப்படி, வருவாய் கோட்ட அதிகாரியின் அந்தஸ்துக்கு குறையாத அதிகாரிக்கு தான், உத்தரவு பிறப்பிக்க அதிகாரம் உள்ளது.இத்தகைய விண்ணப்பங்களை அணுகும் அதிகாரிகளுக்கு, தேவையான வழிமுறைகளை அரசு பிறப்பிக்க வேண்டும். அதுவரை, சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அதிகாரி அல்லது வருவாய் ஆய்வாளர்களிடம் அறிக்கை பெற்று, விசாரணை நடத்தி கொள்ளலாம்.

இந்த வழக்கில், அட்வகேட் கமிஷனராக நியமிக்கப்பட்ட, ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ஆர்.மோகன்தாசின் பணிகள் பாராட்டத்தக்கது.
இவ்வாறு டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

Google launches Credit Card with Axis Bank —

Google launches Credit Card with Axis Bank —  Here's wh at you need to know about Pay Flex  Google Pay, in collaboration with Axis Bank,...