Saturday, April 22, 2017

சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணி : சென்னை, காஞ்சி கலெக்டர்கள் தொய்வு

பதிவு செய்த நாள்21ஏப்
2017
23:50


மதுரை: 'சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் கலெக்டர்களின் பணி திருப்தி அளிக்கும் வகையில் இல்லை' என, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை
அதிருப்தி தெரிவித்துள்ளது.

'ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, 'சீமைக் கருவேல மரங்களை அகற்ற தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என உயர் நீதிமன்ற கிளையில் மனு செய்திருந்தார். அவரை போல் திருப்புவனம் கருப்புராஜா, மதுரை முன்னாள் மேயர் பட்டுராஜன் மனு செய்திருந்தனர்.

நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: தமிழகம் முழுவதும் சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டும்; சீமைக் கருவேல மரங்கள் வளர்க்க தடை மற்றும் தண்டனை விதிக்கும் சட்டத்தை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும்; இம்மரங்களை அகற்ற, அனைத்து மாவட்டங்களுக்கும் தேவையான நிதியை அரசு வழங்க வேண்டும். இம்மரங்களை அகற்றும் பணியை கலெக்டர், வருவாய்த் துறை அதிகாரி கள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்; மாவட்ட முதன்மை நீதி
பதிகள், முன்சீப்கள், வழக்கறிஞர் கமிஷனர்கள் ஆய்வு செய்து, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு உத்தரவிட்டனர்.இதன் பின், ஏற்பட்டுள்ள நிலை குறித்து, நீதிபதிகள் ஏ.செல்வம், பி.கலையரசன் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது.

அவர்கள் பிறப்பித்த உத்தரவு: தமிழகத்தில் இதுவரை, 40 சதவீத சீமைக் கருவேல மரங்கள்
அகற்றப்பட்டுள்ளன. விருதுநகர், புதுக்கோட்டை, பெரம்பலுார், திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் கலெக்டர்களின் பணி திருப்தி அளிக்கும் வகையில் இல்லை. சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதில் ரயில்வே துறை ஆர்வம் செலுத்தாதது, சிறப்பு ஆய்வில் தெரிய வந்தது. தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஜூன், 9ல் ஆஜராகி, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
சீமைக் கருவேல மரங்களை அகற்ற மறுக்கும் தனியார் நில உரிமையாளர்களை, இவ்வழக்கில் எதிர்மனுதாரர்களாக இணைக்க வருவாய் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திண்டுக்கல் மாவட்டம், சின்னையாபுரம் அதியனுாத்தில் மவுனகுருசாமி அறக்கட்டளைக்கு சொந்தமான, 500 ஏக்கரில் சீமைக் கருவேல மரங்களை அகற்றவில்லை. அந்த அறக்கட்டளையை இவ்வழக்கில் நீதிமன்றமே தானாக முன்வந்து எதிர்மனுதாரராக இணைத்து கொள்கிறது. சீமைக் கருவேல மரங்களை அகற்ற செலவிடுவதற்காக, இந்நீதிமன்ற வளாகத்திலுள்ள
வங்கியில் தனி கணக்கு துவக்கப்பட்டுள்ளது. இதில், ஏப்., 20 வரை, 24.29 லட்ச ரூபாயை பல்வேறு தரப்பினர், 'டிபாசிட்' செய்துள்ளனர். இதில் இருந்து பல்வேறு மாவட்டங்களில் சீமைக் கருவேல மரங்களை அகற்ற, 14.9 லட்ச ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.திருநெல்வேலி சிறையிலுள்ள ஆயுள்
தண்டனை கைதி செல்வராஜ், 1,000 ரூபாய் நன்கொடை அளித்துள்ளார். அவரையும், இதுவரை நன்கொடை அளித்தவர்களையும் இந்த நீதிமன்றம் பாராட்டுகிறது. மக்கள் நலன் கருதி, சீமைக் கருவேல மரங்களை வளர்க்க தடை மற்றும் தண்டனை விதிக்கும் சட்டத்தை தமிழக அரசு விரைவில் அமல்படுத்த வேண்டும் என, இந்நீதிமன்றம் நம்புகிறது. அனைத்து மாவட்டங்களிலும் சீமைக் கருவேல மரங்களை அகற்ற கலெக்டர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜூன் 9ல், அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

Karur stampede: Vijay in Delhi to appear before CBI; key points the agency will question

Karur stampede: Vijay in Delhi to appear before CBI; key points the agency will question CBI to question actor-TVK chief on crowd control la...