Thursday, May 25, 2017

ஸ்மார்ட்' ரேஷன் கார்டு: வீடுகளில் நேரில் ஆய்வு

பதிவு செய்த நாள்24மே2017 22:09

'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு வாங்கியவர்களின் வீடுகளில், உணவு துறை ஊழியர்கள், நேரில் ஆய்வு செய்ய உள்ளனர். தமிழகத்தில், 1.90 கோடி ரேஷன் கார்டுகள் உள்ளன. அதில், 83 லட்சம் பேருக்கு, ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. அவர்களின் வீடுகளில் ஆய்வு செய்ய, உணவு துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

இதுகுறித்து, உணவு மற்றும் கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழகத்தில் வசிக்கும் நபர்களுக்கு மட்டும், 'ஆதார்' விபர அடிப்படையில், ஸ்மார்ட் ரேஷன் வழங்கப்படுகிறது; வட மாநிலங்களைச் சேர்ந்த பலர், தமிழகத்தில் கட்டுமான பணி, ஓட்டல்களில் வேலை பார்க்கின்றனர். அவர்கள், உள்ளூர் மக்கள் உதவியுடன், ஸ்மார்ட் கார்டு பெற முயற்சிப்பதாக தகவல் கிடைத்துள்ளது; ஸ்மார்ட் கார்டு வாங்கியவர்கள், அந்த முகவரியில் தான் வசிக்கின்றனரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. எனவே, ஸ்மார்ட் கார்டு வாங்கியவர்களின் வீடுகளில், ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இதற்கு, உணவு துறை ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அவர்கள் கூறியதாவது: பலரின் ஆதார் விபரங்கள் சரியாக இல்லாததால், அனைவருக்கும், ஸ்மார்ட் ரேஷன் கார்டு தர, தாமதம் ஏற்படுகிறது. இதற்காக, அவர்களை தொடர்பு கொண்டு, பிழை திருத்தம் செய்யுமாறு வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த சூழலில், ஸ்மார்ட் கார்டு வாங்கியவர்களின் வீடுகளில் ஆய்வு செய்வது, கூடுதல் பணிச் சுமையை ஏற்படுத்தும். அனைத்து வீடுகளிலும் ஆய்வு செய்ய, ஊழியர்களும் இல்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 14.01.2026