Thursday, June 29, 2017

மருத்துவப் படிப்பில் மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு 85% ஒதுக்கீடு... சிபிஎஸ்இ மாணவர் வழக்கு!

இரா. குருபிரசாத்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் ஆகிய மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் கடந்த வாரம் வெளியானது. இதில், முதல் 25 இடங்களில் தமிழக மாணவர்கள் ஒருவர்கூட இடம்பெறவில்லை. இதனால், மாணவர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த அதிர்ச்சியைத் தணிக்கும் வகையில், மருத்துவப் படிப்பில் 85 சதவிகித இடங்கள் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு ஒதுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.



இதைத்தொடர்ந்து, மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கியது. இந்நிலையில், மருத்துவப் படிப்பில் மாநிலப் பாடத்திட்டத்தில் படிப்பவர்களுக்கு, 85 சதவிகித ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தஞ்சையைச் சேர்ந்த சிபிஎஸ்இ மாணவர் தாரணீஷ் குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

குறிப்பாக, 'சிபிஎஸ்இ மாணவர்களுக்கு 15 சதவிகித ஒதுக்கீடு என்பதை ஏற்க முடியாது. ஒவ்வோர் ஆண்டும், மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் குழப்பம் நடைபெறுகிறது' என்று தனது மனுவில் அவர் கூறியிருந்தார். இந்த மனு, இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இது தொடர்பாக தமிழக அரசு மற்றும் எம்சிஐ (இந்திய மருத்துவ கவுன்சில்) பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, ஜூலை 5-ம் தேதி பதிலளிப்பதாக, தமிழக அரசு கூறியுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 7.4.2025