Saturday, June 23, 2018

ரயில் பயணியரை காப்பாற்றிய தந்தை மற்றும் மகளுக்கு விருந்து

Updated : ஜூன் 23, 2018 00:05 | Added : ஜூன் 22, 2018 20:54 | 


புதுடில்லி, :திரிபுராவில், சரியான நேரத்தில் ரயிலை நிறுத்தி, ஆயிரக்கணக்கான பயணியரின் உயிரைக் காப்பாற்றிய தந்தை - மகளுக்கு, அம்மாநில அமைச்சர், தன் வீட்டில் விருந்தளித்து, நன்றி தெரிவித்தார்.திரிபுராவில், முதல்வர், பிப்லப் குமார் தேவ் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, தலாய் மாவட்டத்தில் உள்ள அம்பாசா என்ற இடத்தைச் சேர்ந்தவர், ஸ்வபன் தேவ் வர்மா, 45. இவர், தன் வீட்டு அருகே உள்ள ரயில் பாதை வழியே, தன் மகள் சோமதிஉடன் நடந்து சென்றார். அப்போது, பலத்த மழை பெய்தது.

தப்பினர்

இதனால், அந்த பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில், ரயில் தண்டவாளம் சேதம் அடைந்தது. அப்போது, அந்த வழித்தடத்தில் பயணியர் ரயில் வந்தது. இதைப் பார்த்த ஸ்வபன் தேவ் வர்மாவும், அவரது மகளும், உடனடியாக தங்கள் சட்டைகளை கழற்றி, ரயிலை நிறுத்தும்படி, தண்டவாளத்தில் நின்று, சைகை செய்தனர்.இதைப் பார்த்த ரயில் டிரைவர், உடனடியாக ரயிலை நிறுத்தினார். இதனால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ரயிலில் பயணம் செய்த, 2,000 பயணியர் உயிர் தப்பினர்.இதையடுத்து, ஸ்வபன் தேவ் வர்மா மற்றும் அவரது மகள் சோமதி ஆகியோர், திரிபுரா சட்டசபைக்கு சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டனர். சட்டசபையில், அவர்களது வீரச் செயலுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

பரிந்துரை

தந்தை - மகள் இருவரது தீரச் செயலை பாராட்டி, அவர்களுக்கு சன்மானம் வழங்கும்படி, முதல்வர் பிப்லப் குமார் தேவிடம் பரிந்துரை செய்யப்பட்டது. மேலும், அவருக்கு உதவியும், சன்மானமும் வழங்கும்படி, ரயில்வே அமைச்சகத்திடம் பரிந்துரை செய்யப்படும் என, சட்டசபையில் அறிவிக்கப் பட்டது.இந்நிலையில், திரிபுராவின் சுகாதாரத்துறை அமைச்சர், சுதீப் ராய் வர்மன், தந்தை - மகளின் வீரத்தை பாராட்டி, அவர்களை தன் வீட்டுக்கு அழைத்து, காலை சிற்றுண்டி அளித்து, நன்றி தெரிவித்தார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 24.01.2026