Sunday, June 4, 2017

டாக்டர்கள் இடமாறுதல் கவுன்சிலிங்: அரசு விதிமுறைப்படி நடத்த உத்தரவு
பதிவு செய்த நாள்03ஜூன்  2017 21:06

சென்னை, :'இடமாறுதல், பதவி உயர்வுக்கான கவுன்சிலிங்கில், கடைசி கட்டமாக, முதுகலை மருத்துவ மாணவர்களை அனுமதிக்க வேண்டும்' என, சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலஉத்தரவிட்டுள்ளது.

'சர்வீஸ்' டாக்டர்கள் நலச் சங்கத்தின் செயலர், ஜி.சுரேஷ் தாக்கல் செய்த மனு:அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் டாக்டர்களின் இடமாறுதலுக்கான கவுன்சிலிங் குறித்து, 2007ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணையில், சில வழிமுறைகள் கூறப்பட்டுள்ளன. பின், கவுன்சிலிங் வரிசையை, 2017 ஜனவரி யில், அரசு அறிவித்தது.

அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நியமிக்கப்பட்ட டாக்டர்கள், மருத்துவக் கல்வி இயக்குனரகத்தின் கீழ் பணியாற்றும் டாக்டர்களுக்கு, முதல் கட்டமாக, கவுன்சிலிங்கில் வாய்ப்பு அளிக்கப்படும். அதை தொடர்ந்து, முதுகலை மருத்துவப் படிப்பை முடிக்கும் நிலையில் உள்ள, அரசு டாக்டர்கள் பரிசீலிக்கப்படுவர்.

மருத்துவக் கல்வி இயக்குனர், 2017 மே, 24ல், ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டார். வரிசைப்படி கவுன்சிலிங் நடக்கும் தேதிகள், அதில் அறிவிக்கப்பட்டன. பணியில் இருக்கும் டாக்டர்களுக்கு முன்னதாக, முதுகலை மருத்துவப் படிப்பை முடிக்கும் தருவாயில் உள்ள மாணவர்கள், கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள, இந்த சுற்றறிக்கை வழி வகுக்கிறது.
இது, 2007 அரசாணை மற்றும், 2017 ஜனவரி உத்தரவை மீறுவதாக உள்ளது. எனவே, மருத்துவ கல்வி இயக்குனர் பிறப்பித்த சுற்றறிக்கையை, ரத்து செய்ய வேண்டும். 2007 மற்றும், 2017 ஜனவரி உத்தரவுகளின் அடிப்படையில், கவுன்சிலிங் நடத்த வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனுதாரர் சார்பில் ஆஜரான, வழக்கறிஞர் எஸ்.தங்கசிவன், ''முதுகலை மருத்துவ மாணவர்கள், தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றால், கவுன்சிலிங்கில் தேர்ந்தெடுக்கப்பட்ட இடம், ஓராண்டு வரை காலியாக இருக்கும். 2007 மற்றும், 2017 ஜனவரியில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி, முன்னுரிமை அடிப்படையில் கவுன்சிலிங் நடந்தால், யாருக்கும் பாதிப்பு ஏற்படாது,'' என்றார்.

மனுவை விசாரித்த, நீதிபதி டி.ராஜா பிறப்பித்த இடைக்கால உத்தரவு:
அரசு, 2007 நவம்பர் மற்றும், 2017 ஜனவரியில் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், இடமாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான வழிமுறைகள், கீழ்கண்ட முறையில் பின்பற்றப்பட வேண்டும்.

* அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., மூலம் நியமிக்கப்பட்ட மருத்துவ அதிகாரிகள்
* மருத்துவ அதிகாரிகளாக, தற்காலிகமாக நியமிக்கப்பட்டு, டி.என்.பி.எஸ்.சி., நடத்திய சிறப்பு தகுதி தேர்வில் வெற்றிபெற்றவர்கள்
* மருத்துவப் பணிகள் தேர்வு வாரியம் நடத்தும், போட்டி தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவ அதிகாரிகள்
* மருத்துவப் பணிகள் தேர்வு வாரியம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு, சிறப்பு தகுதித் தேர்வில் வெற்றிப் பெற்று, நியமிக்கப்பட்ட மருத்துவ அதிகாரிகள்
* மேற்கூறியவர்களுக்கு அடுத்த படியாக மட்டுமே, முதுகலை மருத்துவப் படிப்பை முடிக்கும் தருவாயில், தேர்வு முடிவுக்காக காத்திருக்கும் மாணவர்களை, கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதிஉத்தரவிட்டுள்ளார்.இந்த வழக்கு விசாரணையை, இரண்டு வாரங்களுக்கு, நீதிபதி ராஜா தள்ளிவைத்துள்ளார்.
கவுன்சிலிங் ரத்து

அரசு டாக்டர்களின் பணி இடமாறுதல் கவுன்சிலிங், மே, 29 முதல் நடந்து வருகிறது. இதில், பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக, குற்றச்சாட்டு எழுந்தது. 

இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், முறைகேடுகள் குறித்து வழக்கு தொடரப்பட்டது. அதனால், ஜூன், 2 முதல், 7ம் தேதி வரை, நடைபெற இருந்த இடமாறுதல் கவுன்சிலிங்கை, மருத்துவ கல்வி இயக்ககம் ரத்து செய்துள்ளது.

No comments:

Post a Comment

Medical PG student dies by suicide

Medical PG student dies by suicide  26.07.2026 Hyderabad: A 29-year-old postgraduate medical student died after allegedly jumping from the t...