Monday, June 5, 2017

வேட்டி அணிந்துவந்த மாணவர் தேர்வெழுத அனுமதி மறுப்பு! பதறிப்போன மதுரை கலெக்டர்
ஈ.ஜெ.நந்தகுமார் செ.சல்மான்

வேட்டி கட்டி வந்த மாணவரைத் தேர்வெழுத அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.



மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்விக்கான பருவத்தேர்வு இன்று பல மையங்களில் நடைபெற்றது. மதுரை அரசரடி இறையியில் கல்லூரி தேர்வு மையத்துக்குத் திருமங்கலம் அருகேயுள்ள கல்லனை கிராமத்தைச் சேர்ந்த மாணவர் கண்ணன் தேர்வெழுத காலையில் வந்தார். காலை பத்து மணிக்குத் தேர்வறையில் தயாராக அமர்ந்திருந்த கண்ணனை, அங்கு வந்த தேர்வு மைய கண்காணிப்பாளர்கள், வேட்டி கட்டிக்கொண்டு தேர்வு எழுத அனுமதியில்லை என்று கூறி கண்ணணை வெளியேற்றினார்கள்.

'வேட்டி கட்டுவது எப்படி ஒழுங்கீனமாகும், பல்கலைக்கழகத்தில் அப்படி விதி ஏதுமுள்ளதா' என்று கண்காணிப்பாளர்களிடம் வாக்குவாதம் செய்தார் கண்ணன். ஆனாலும் அவரைத் தேர்வு எழுத அனுமதிக்கவில்லை. உடனே கண்ணன் நண்பர்கள் மூலம் ஊடகங்களுக்குத் தகவல் சொன்னார். இதனால் ஊடகவியலாளர்கள் அங்கு குவிந்தனர்.

செய்தியாளர்களிடம் பேசிய கண்ணன், "நான், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தொலைநிலை கல்வி மூலம் இளங்கலை நூலகவியல் படித்து வருகிறேன். இந்த செமஸ்டரில் நான்கு தேர்வுகளை எழுதிவிட்டேன். இன்று நடை பெறும் இறுதித் தேர்வை எழுத வேட்டி கட்டிக்கொண்டு வந்தேன். அது தவறு என்று தேர்வெழுத அனுமதி மறுத்தனர். வேட்டி தமிழர்களின் ஆடை இல்லையா. அது குற்றமா. தமிழ் நாட்டிலேயே வேட்டியை அங்கீகரிக்கவில்லையென்றால் யார் நம்மை மதிப்பார்கள்" என்றார்.

கண்ணனுக்கு ஏற்பட்ட அவமானமும், அவர் செய்தியாளர்களிடம் பேசிய தகவலும் மாவட்ட ஆட்சியர் மற்றும் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கும் போய் சேர, அவர்கள் பதறிப்போனார்கள். பண்பாட்டு ரீதியான விஷயங்கள் தமிழக மக்களை உசுப்பிவிட்டுவிடும் என்று பயந்த பல்கலைக்கழக அதிகாரிகள், உடனே தேர்வு மைய கண்காணிப்பாளர்களுக்கு உத்தரவிடப்பட்டனர்.

வெளியில் காத்திருந்த கண்ணனைச் சமாதானப்படுத்தித் தேர்வெழுத வைத்தனர். அவருக்குத் தேர்வெழுத ஒரு மணிநேரம் கூடுதலாக வழங்கப்பட்டது. பல்கலைக்கழக மாணவரின் வேட்டி விவகாரம் பெரியளவில் செல்லாமல் ஆரம்பத்திலயே தடுக்கப்பட்டாலும், தமிழரின் பண்பாட்டு உடைக்கான இடம் எதுவென்பதைத் தமிழகத்திலுள்ள கல்லூரி, பல்கலைக்கழகங்கள், நட்சத்திர விடுதிகள், கிளப்புகள் ஒரு முடிவுக்கு வர வேண்டிய காலம் நெருங்கி கொண்டிருக்கிறது.

No comments:

Post a Comment

NEET PG 2026 tightens anti-leak measures

NEET PG 2026 tightens anti-leak measures  Candidates will undergo multistage authentication during registration  Divyansh.Kumar@timesofindia...