Monday, June 26, 2017

தொடர் விடுமுறையால் திருப்பதி கோயிலில் பக்தர்கள் அலைமோதல் 12 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
2017-06-26@ 05:16:14



திருமலை: மூன்று நாள் தொடர் விடுமுறையால் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் 12 மணி நேரம் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வார விடுமுறை நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதன்படி சனி, ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கட்கிழமை (இன்று) ரம்ஜான் என 3 நாட்கள் தொடர்விடுமுறை என்பதால், சுவாமி தரிசனம் செய்ய பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்துள்ளனர். இதனால் பக்தர்களால் திருமலை நிரம்பி வழிகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் 81 ஆயிரத்து 12 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று அதிகாலை முதல் இலவச தரிசனத்தில் சுவாமி தரிசனம் செய்ய வைகுண்டத்தில் உள்ள 31 அறைகளும் நிரம்பி பக்தர்கள் ஆழ்வார் ஏரியை சுற்றி நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இவர்கள் 12 மணிநேரத்திற்கு பின் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். தொடர்ந்து அலிபிரி மற்றும் ஸ்ரீவாரி மெட்டு மலைப்பாதையில் பாதயாத்திரையாக வந்து திவ்ய தரிசனம் டிக்கெட் பெற்ற பக்தர்கள், வைகுண்டத்தில் உள்ள 22 அறைகளும் நிரம்பி நாராயணகிரி தோட்டத்தில் காத்திருந்து 10 மணிநேரத்திற்கு பின் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

அதேபோல் ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 4 மணி நேரத்திற்கு பின் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்கள் வருகை அதிகரித்திருப்பதால் விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் உள்ள நிலையில் மத்திய, மாநில அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் என விஐபிக்களின் சிபாரிசு கடிதம் கொண்டு வந்த பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்தும் போதிய அறைகள் கிடைக்காமல் திருப்பதியில் உள்ள தனியார் விடுதிகளில் தங்கினர். நேற்று முன்தினம் கோயில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணப்பட்டது. இதில் ரூ.2.77 கோடியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.

No comments:

Post a Comment

Karur stampede: Vijay in Delhi to appear before CBI; key points the agency will question

Karur stampede: Vijay in Delhi to appear before CBI; key points the agency will question CBI to question actor-TVK chief on crowd control la...