Friday, March 13, 2015

கடவுச்சீட்டு பெற விரும்பும் மாணவர்கள் அசல் சான்றிதழ்களை அளிக்க வேண்டியதில்லை

கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) பெற விரும்பும் மாணவர்கள், தங்களது அசல் சான்றிதழ்களை அளிக்க வேண்டிய அவசியமில்லை என்று மண்டல கடவுச்சீட்டு அதிகாரி கே.பாலமுருகன் தெரிவித்தார். இதற்குப் பதிலாக மாற்று ஆவணங்களாகச் சமர்ப்பிக்க வேண்டிய சான்றுகள் எவை என்பது குறித்தும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக, கே.பாலமுருகன் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

பள்ளி-கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் கடவுச்சீட்டு பெற தங்களது பிறப்புச் சான்றிதழ், 10-ஆம் வகுப்புச் சான்று உள்பட இதர கல்வி தொடர்பான சான்றுகளை அளிக்க வேண்டும் என்பது கட்டாயமாக இருந்தது. ஆனால், இந்தச் சான்றிதழ்களை கல்வி நிறுவனங்களில் அளித்துள்ளதால் கடவுச்சீட்டுக்காக அவற்றை கட்டாயம் கொடுக்க வேண்டும் என்ற நடைமுறையில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

மாணவர்கள் தாங்கள் பயிலும் கல்வி நிறுவனத்தில் இருந்து, ஒரு சான்றிதழை அளிக்க வேண்டும். அதாவது, மாணவர்கள் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில்தான் பயில்கிறார்கள் எனவும், அவர்களது அசல் சான்றுகள் கல்வி நிறுவனத்தின் வசம் உள்ளது என்றும் குறிப்பிட்டு சான்று பெறப்பட வேண்டும். அசல் சான்றிதழ்களின் நகல்களை, தொடர்புடைய கல்வி நிறுவன அதிகாரியின் சான்றொப்பத்தைப் பெற்று அளிக்க வேண்டும். மாணவர்கள் பயிலும் கல்வி நிறுவனத்தின் சார்பில் வழங்கப்பட்ட உரிய அடையாள அட்டையின் நகலையும் கொடுக்க வேண்டும். இந்த மூன்று அம்சங்களையும் பூர்த்தி செய்தால், அசல் சான்றிதழ்களை மாணவர்கள் அளிக்க வேண்டிய அவசியமில்லை.

வங்கிக் கணக்குப் புத்தகம்: கடவுச்சீட்டுக்கான ஆவணங்களில் ஒன்றாக வங்கிக் கணக்குப் புத்தகமும் உள்ளது. அந்த வங்கிகளின் வரிசையில் இப்போது "ஷெட்யூல்' பொதுத் துறை வங்கிகள், ஷெட்யூல் தனியார் வங்கிகள், மண்டல கிராமப்புற வங்கிகள் ஆகியனவும் சேர்க்கப்பட்டுள்ளன.

கடவுச்சீட்டு சேவை தொடர்பாக ஏதேனும் விவரங்கள் பெற வேண்டுமெனில் 17 மொழிகளில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டணமில்லாத தொலைபேசி சேவையை (1800-258-1800) பயன்படுத்தலாம்.

மேலும், டுவிட்டர் (RpoChennai) கணக்கிலும், முகநூலிலும் (Regional Passport Office Chennai) தங்களது கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்றார் அவர்.

No comments:

Post a Comment

TAPS takes effect from Jan 1, 2026

TAPS takes effect from Jan 1, 2026  As per the G.O., TAPS will become operational after the notification of rules and completion of statutor...