Friday, November 28, 2014

நடுத்தர மக்களுக்கு இது நல்ல செய்தி


பொதுவாக எந்த அரசாங்கமும் இயங்க வேண்டுமென்றால், அதன் நிர்வாக செலவுக்கும், மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றுவதற்கும், மானியங்கள், உதவிகள் வழங்குவதற்கும் நிச்சயமாக நிதி தேவை. அந்த நிதியை வரி மூலம்தான் பெறமுடியும். அதைத்தான் உலகில் உள்ள அனைத்து நாடுகளும் செய்துகொண்டிருக்கிறது. அரசின் வருமானம் பலவழிகளில் வரியாக ஈட்டப்படுகிறது. அதில் ஒரு வரிதான் வருமான வரியாகும். 

இந்தியாவில் வருமானவரி 1860–ம் ஆண்டு சர் ஜேம்ஸ் வில்சனால் அறிமுகப்படுத்தப்பட்டது. 1857–ம் ஆண்டில் நடந்த சிப்பாய்கலகத்தையொட்டி ஆங்கிலேய அரசாங்கத்துக்கு ஏற்பட்ட இழப்பை சரிக்கட்ட இந்த வருமானவரி விதிக்கப்படுவதாக அப்போது அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு, 1886–ம் ஆண்டில் வருமானவரிக்கென தனிச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதன்பிறகு இந்த சட்டம் பல மாற்றங்களுடன் புதிய சட்டங்கள், திருத்தங்கள் கண்டது. தற்போது ஆண்கள், பெண்கள், மூத்த குடிமக்களுக்கு என பல விகிதாசாரங்களில் வருமான வரி விதிக்கப்படுகிறது. இந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டுக்குப்பிறகு 60 வயதுக்குட்பட்டவர்களுக்கு ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் வரை வரி இல்லை. அதில் இருந்து வரி தொடங்குகிறது. 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு ரூ.3 லட்சம் ஆண்டு வருமானம் வரை வரி இல்லை. அதுபோல, 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஆண்டு வருமானம் ரூ.5 லட்சம் வரை வரி கிடையாது.

இந்த நிலையில், பாராளுமன்ற தேர்தலின்போது, பா.ஜ.க.வின் தேர்தல் பிரசார பேச்சுகளில் வருமான வரியில் பெரும் மாற்றம் வரும் தொனி இருந்தது. கடந்த பட்ஜெட்டின்போது ஒருசில சலுகைகள் அறிவிக்கப்பட்டன. இந்த அறிவிப்புகள் நிறைய எதிர்பார்த்த வருமானவரி கட்டுவோருக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லையென்றாலும், ஓரளவுக்கு மனநிறைவை அளித்தது. சமீபத்தில் நிதி மந்திரி அருண் ஜெட்லி, அடுத்த ஆண்டு பட்ஜெட்டை தயாரித்துக் கொண்டு வரும் நேரத்தில், மாதசம்பளம் வாங்குவோர் மற்றும் நடுத்தர மக்களுக்கு அதிக வரி விதித்து அவர்களுக்கு மேலும் சுமையை ஏற்றுவதை தான் ஆதரிக்கவில்லை என்று அறிவித்து இருக்கிறார். ஏற்கனவே ஆண்டு வருமானம் ரூ.2 லட்சம் என்று இருந்த வருமான வரி வரம்பை, ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் என்று உயர்த்திய அருண் ஜெட்லி, மத்திய அரசாங்கத்தின் வருமானம் அதிகரித்தால் இதை இன்னும் உயர்த்துவதாக கூறியுள்ளார். நடுத்தர மக்களின் பைகளில் கூடுதலாக பணம் வைக்கும் நிலையை ஏற்படுத்தி, அவர்கள் செலவழிக்கும் நிலையில், அதன்மூலம் மறைமுக வரிகள் கிடைக்கும் என்று சொல்லியிருக்கிறார். அரசாங்கத்தின் வரியில் 50 சதவீதம், ஒவ்வொருவரும் செலுத்தும் கலால் வரி, சுங்க வரி, சேவை வரி போன்றவற்றால்தான் வருகிறது. எனவே, மக்களுக்கு செலவழிக்கும் வலிமையைக் கொடுத்தால், அதன்மூலம் இதுபோன்ற வரிகள் கிடைக்கும். எனவே அவர்களுக்கு சுமை ஏற்படுத்துவதற்கு பதிலாக, வரி ஏய்ப்பு செய்பவர்களை கண்டுபிடித்து வரி வசூலிக்கலாம் என்று அவர் சூசகமாக சொல்லியிருப்பது, மாதசம்பளம் வாங்கும், நடுத்தர மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நிச்சயமாக வரும் பட்ஜெட்டில் வருமானவரியில் மாதசம்பளம் வாங்கும், நடுத்தர மக்களுக்கு நல்ல பல சலுகைகளை அறிவிப்பார் என்பதுதான் அவர்களின் எதிர்பார்ப்பாகும். நடுத்தர மக்களைப் பொருத்தமட்டில், ஒவ்வொரு நிதிஆண்டின் இறுதியிலும் குறைந்தபட்சமாக அவர்களின் ஒரு மாதசம்பளத்துக்குமேல் வரியாக கட்டும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்களால் அத்தியாவசிய பொருட்களைத்தாண்டி, ஆடம்பர பொருட்களைப் பற்றி நினைத்துக்கூட பார்க்கமுடிவதில்லை. மேலும், கல்வி, மருத்துவம் போன்றவற்றுக்கான செலவு அதிகரித்துக்கொண்டிருக்கும் நிலையில், வருமானவரியும் அதிகமாக இருந்தால் வயதான காலத்துக்கான சேமிப்பு என்பது எட்டாக்கனியாக இருக்கிறது என்பது அவர்களது குறை. தேவையற்ற மானியங்களுக்கு, தேவையற்றவர்களுக்கு செல்வதைத்தடுப்பது, நேர்முக வரிகளை வசூலிக்கும் அதிகாரிகள் கறுப்பு பணத்தை கண்டுபிடிப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று தீவிரமாக இருப்பது போன்ற பல நடவடிக்கைகளால், அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரித்து காட்டுவார், வருமானவரியிலும் இன்னும் சலுகைகளை அறிவிப்பார் நிதி மந்திரி.

Thursday, November 27, 2014

உருவாக்கிக்கொள்பவைதான் வேலைகள்!



வாழ்க்கையில் உளச் சிக்கல் உள்ளவர்களுக்கும் அவர்களின் வேலைப் பளுவுக்கும் சம்பந்தம் உண்டா என்று கேட்டார் நண்பர் ஒருவர். வேலைப் பளு அதிகம் இருந்தால் உளச் சிக்கல் வருமோ இல்லையோ, மிகக் குறைவான வேலைப் பளு நிச்சயம் மன உளைச்சலைத் தரும் என்றேன். வேலை குறைவாக இருந்தால் முதலில் ஆறுதலாகத்தான் இருக்கும். நிறைய நேரம் இருப்பது நன்மையாகத் தோன்றும். பின்னர் அதுதான் ஆபத்தாக மாறும்.

குறைந்த சம்பளத்திலும் திருப்தி

“வேலைன்னு பெரிசா கிடையாது. ஆனால் கண்டிப்பா சீட்டில் இருக்கணும்!” என்று ஆரம்பத்தில் பெருமையாகப் பேசுபவர்கள் பின்னர் நேரத்தைக் கொல்வதைவிடத் தங்கள் அமைதியைக் கொல்வார்கள். வேலை இல்லாதவன் மனம் ஒரு பிசாசின் பட்டறை என்று தெரியாமலா சொன்னார்கள்?

நீங்களே யோசித்துப் பாருங்களேன். உற்பத்திக் கூடத்தில் அடிமட்டத் தொழிலாளியின் பணியிடம் அவரது ஒவ்வொரு நிமிட வேலையையும் நிர்ணயித்து விடுகிறது. ஒரு பாகத்தைப் பொருத்துவதற்குள் அடுத்த பாகம் தயாராக நிற்கிறது. அத்தனையையும் சரியாகவும் சரியான நேரத்திலும் செய்ய வேண்டும். தேநீர் இடைவெளியும் உணவு இடைவெளியும் போய் வரத்தான் நேரம் சரியாக இருக்கிறது. இதனால் மனதை வேறு எதிலும் செலுத்தாவண்ணம் பணிபுரிகிறார்கள். இதனால்தான் குறைந்த சம்பளத்திலும் பணித் திருப்தி இவர்களிடம் அதிகம் உள்ளது.

ஓய்வறியா சூரிய(ளே)னே!

என்ன வேலை , எவ்வளவு வேலை என்று அளவிட முடியாத வேலைகளில் யோசிப்பதற்கு நேரம் நிறைய கிடைக்கிறது. அது பெரும்பாலும் மன உளைச்சலில்தான் கொண்டு முடிகிறது.

வீட்டு வேலை செய்யும் பணிப்பெண்களை நான் எப்போதும் பெருமையுடன் பார்ப்பேன். என் வீட்டுப் பக்கத்தில் உள்ள ஒரு பெண்மணி காலை 5 முதல் இரவு 8 வரை பல வீடுகளில் வேலை பார்ப்பவர். ஒரு பக்கம் வீட்டு வேலை. இன்னொரு பக்கம் சமையல். இன்னொரு பக்கம் வண்டி துடைத்தல். இப்படிப் பல வேலைகள்.

காலை முதல் இரவுவரை அப்படி ஒரு துறுதுறுப்பு. தெரியாத வேலையே கிடையாதோ என்று சந்தேகிக்கும் அளவு எல்லா வேலைகளிலும் தன்னை ஈடுபடுத்திக்கொள்வார். யாருக்குப் பிரச்சினை என்றாலும் முதலில் நிற்பார். எங்க ஏரியாவில் எல்லாருக்கும் அந்தம்மா பரிச்சயம்.

“ஓய்வறியா சூரியனே” என்று இவருக்கு போஸ்டர் ஒட்ட ஆளில்லை. ஆனால் சொந்தச் சோகங்கள் எவ்வளவு இருந்தாலும் படுத்தால் நிம்மதியாக உறங்கும் வாழ்க்கையைப் பெற்றிருக்கிறார் என்று எனக்குத் தெரியும். உட்கார்ந்து யோசித்தால் பெரும் பட்டியல் போடும் அளவுக்குப் பிரச்சினைகளும் துயரங்களும் அவருக்கு நிச்சயம் உண்டு. ஆனால் நேரம் ஏது?

வேலையில் கரைதல்

யோசிக்க நேரமில்லை என்பது மறைமுக ஆசீர்வாதம். நம் வாழ்க்கையில் வருத்தப்படவும், கோபப்படவும் ஆட்களுக்கும் சம்பவங்களுக்குமா பஞ்சம்? உட்கார்ந்து யோசித்தால் கசப்புதான் மிஞ்சும். குறிப்பாகக் கடந்த காலத்தை இம்மி அளவும் மாற்ற நமக்குச் சக்தி கிடையாது. வருங்காலம் பற்றிய பயங்களும் பெரும்பாலும் வீண் என்று நமக்கே தெரியும். அதனால் நேற்றைய வாழ்க்கையையும் நாளைய வாழ்க்கையையும் நினைக்காமல் இருக்க, இன்றைய பொழுதில் நிலைக்க நமக்கு ஒரு வேலை தேவைப்படுகிறது. அது நம்மை முழுவதுமாக உள் வாங்கிக்கொள்ள அனுமதித்து அதில் கரைந்து போக முடிந்தால் நாம் பாக்கியசாலிகள்.

இதனால்தான் விழித்திருக்கும் நேரத்தில் அதிகம் வேலை இல்லாதவர்கள் நிம்மதியைத் தொலைத்துவிடுகிறார்கள்.வேலை என்பதை நாம் வாழ்க்கையை அர்த்தப்படுத்திக் கொள்ளும் முயற்சியாகப் பார்க்க வேண்டும்.

மன அழுத்தம்

ஆறு மாதமாகச் சம்பளம் தராத கம்பெனியில் மிகுந்த பொருளாதார நெருக்கடியிலும் மிகச் சிறப்பாகச் செயல்படும் நண்பரைச் சந்தித்தேன். சம்பளம் வராத பிரச்சினையைக் கூட நினைக்க நேரமில்லை என்று சிரித்தார். ஒரு புத்த பிக்குவைப் பார்த்தது போலிருந்ததது. “சம்பளம் வராம எங்கே போகும், அதுக்காக வேலையைக் கெடுக்க முடியுமா?”

மன அழுத்தம் மேல்த் தட்டு மக்களுக்கு அதிகமாக வரக் காரணம் அவர்களுக்கு அதிகமான நேரம் கிடைப்பதால்தான். பத்துப் பேருக்குச் சதா பொருள் எடுத்துத் தரும் பெட்டிக்கடைக்காரருக்கோ, சாலையில் மக்கள் நெரிசலில் வேலை செய்யும் துப்புரவுத் தொழிலாளிக்கோ வராத மன அழுத்தம், ஏசி அறையின் தனிமையில் அடுத்து என்ன செய்ய என்று தெரியாதவருக்கு வருகிறது.

வேலையின் முக்கியத்துவம்

அலுவலகத்திலும் அதிகம் வம்பு பேசும் மக்கள் வேலை குறைவான பிரிவுகளில்தான் இருப்பார்கள். ஆனால் வேலைப்பளு உள்ள துறைகளில் உடல் அசதி இருந்தாலும் மன வெறுமை இருக்காது. சீனா போன்ற தேசத்தில் மக்கள் மன நலத்துடன் இருக்கக் காரணம் எல்லாரும் ஏதாவது ஒரு வேலையில் ஈடுபடுகிறார்கள். முதியவர்கள்கூட வீட்டில் இருந்தே சின்னச் சின்ன வேலை செய்து வருமானம் ஈட்டுகிறார்கள்.

வேலை பார்ப்பது முக்கியம். அது நம் படிப்புக்கு, தகுதிக்கு, வசதிக்கு ஏற்றதாக இல்லாவிட்டாலும் வேலை முக்கியம். வருமானம் இல்லாவிட்டாலும் வேலை முக்கியம். குறிப்பாகக் குடும்பத்தை மட்டும் பராமரிக்கும் பெண்கள், ஓய்வுக்குப் பின் முதியோர்கள், படித்து வேலைக்குக் காத்திருக்கும் மாணவர்கள் இவர்கள் அனைவரும் அதிகம் தாமதிக்காமல் சில மணி நேரங்கள் செய்யும் பகுதி நேர வேலையையாவது மேற்கொள்ள வேண்டும்.

என்ன செய்யலாம்?

தொலைபேசி வழியே பொருட்கள் விற்கலாம். வலைத்தளத்தில் எழுதலாம். பார்வையற்றோர்க்குப் படித்துக் காட்டலாம். சின்ன முதலீட்டில் பலர் சேர்ந்து தொழில் செய்யலாம். டியூஷன் எடுக்கலாம். மொழிபெயர்ப்பு செய்யலாம். உங்கள் துறை சார்ந்து ‘குறைந்த கட்டண ஆலோசகர்’ ஆகலாம்.

கோயில்களில் சேவை செய்யலாம். உங்களுக்குத் தெரிந்தவர்கள் அலுவலகத்தில் உதவிகள் செய்யலாம். சிறியதாகத் தொடங்கும் பல வேலைகள் பின்னர் பெரும் வாழ்க்கை மாற்றங்களை ஏற்படுத்தலாம். எதையாவது செய்யலாம். ஆனால் கண்டிப்பாக எதையாவது செய்யணும். வேலைகள் தானாக வருவதில்லை. அவற்றை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
Source: The Hindu

தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com

எங்கே இருக்கிறான் அந்த எதிரி?



வெளியாவதற்கு முன் பெரிதும் பேசப்பட்ட தமிழ்ப் படங்களுள் ஒன்று 'ஆளவந்தான்'. இந்தப் படத்தில் கமல் மனச்சிதைவு நோயாளியாகக் காண்பிக்கப்பட்டிருப்பார். பொதுவாக மனச்சிதைவு நோயாளிகள், அந்த நோயுடன் தவறான நம்பிக்கைகளுடன் (Delusions) இருப்பார்கள். இந்தப் படத்தில் கமலும் அப்படிப்பட்ட நம்பிக்கைகளுடன் சித்திரிக்கப்பட்டிருப்பார்.

அவருடைய சித்தி கதாபாத்திரத்தின் நடத்தை அவருக்குப் பிடிக்காது. சித்தியை எதிரியாக நினைத்துக் கொன்று விடுவார். காணும் பெண்களெல்லாம் சித்தி உருவமாகத் தெரியும். அதனால், அவர்கள் எல்லோரையும் கொல்ல நினைப்பார். அதுபோல அசாதாரணக் காரியங்கள் செய்பவராகவும் இருப்பார்.

இன்னொரு கமலின் காதலியையும் (ரவீணா டான்டன்) தனக்கு எதிரான சித்தியாகவே நினைப்பார். இது சரியான சித்திரிப்பு. ஆனால் சிறையில், மனநலக் காப்பகத்திலிருந்து சிலருடன் கூட்டு சேர்ந்து அவர் தப்பித்து விடுவார். இது தவறான சித்திரிப்பு. ஏனென்றால், இம்மாதிரி தவறான நம்பிக்கை வைத்திருக்கும் மனச்சிதைவு நோயாளிகள் யாருடனும் கூட்டுச் சேரமாட்டார்கள்.

சென்னையில் இயங்கிவரும் அரசு மனநலக் காப்பகத்தில் மனச்சிதைவு நோயாளிகள் 1,500 பேர் இருப்பார்கள். அவர்களுக்கான பாதுகாவலர்கள் பத்து, பதினைந்து பேர்தான் இருப்பார்கள். கூட்டு சேரும் வாய்ப்பு இருந்தால், அங்குள்ள மன நோயாளிகள் எளிதாகத் தப்பிவிட முடியும்.

தவறான நம்பிக்கைகள் (Delusions)

உலகில் இரண்டு வகையான நம்பிக்கைகள் உண்டு. ஒன்று, மூடநம்பிக்கை. இது தனிநபர் நம்பிக்கை அல்ல. சமூகத்துக்கே இப்படிப்பட்ட நம்பிக்கை இருக்கும். பில்லி, சூனியம் போன்ற மூடநம்பிக்கைகளை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். இது ஆபத்தான ஒன்றுதான்.

மற்றொன்று, மேலே குறிப்பிட்டது போன்ற தவறான நம்பிக்கை. இந்தத் தவறான நம்பிக்கை என்பது ஒரு தனிநபருக்கு மட்டுமே உள்ள நம்பிக்கை. இம்மாதிரி தவறான நம்பிக்கை வைத்திருப்பவர்கள் குறிப்பிட்ட சிலரால் தனக்கு ஆபத்து ஏற்படும் என நம்புவார்கள். அவர்கள் தன்னைத் தாக்கும் முன், நாமே அவரைத் தாக்கிக் கொன்றுவிட வேண்டும் என நினைப்பார்கள். இந்த எண்ணம் மிக ஆழமாகப் பதிந்திருக்கும்.

சிலர் தெருவில் வசிக்கும் எல்லோரையும் தனக்கு எதிரியாகப் பார்ப்பார்கள். போலீஸ் தன்னை உடனே கைது செய்துவிடும் என்ற தவறான நம்பிக்கையுடன் வீட்டை வெளியே வராமல் சிலர் இருப்பார்கள். சாவித் துவாரம்கூட வெளியே தெரியாதபடி வீட்டைப் பூட்டிவிட்டு உள்ளேயே இருப்பார்கள். சைக்கோ கொலைகளுக்கு இந்தத் தவறான நம்பிக்கைகள்தான் முக்கியக் காரணம்.

இதில் மூன்று வகையான பாதிப்புகள் உள்ளன. பிறரால் தனக்கு ஆபத்து வருவதாக நினைப்பது (Delusional Persecution), தன்னைத் தானே உயர்வாக நம்பிக்கொள்வது (Grandiose delusions) - அதாவது தனக்கு அபரிமிதமான சக்தி இருப்பதாக நினைப்பது, ஒதெல்லோ சிண்ட்ரோம் (Othello syndrome). இந்த ஒதெல்லோ சிண்ட்ரோம்தான் கணவன் - மனைவி சந்தேகக் கொலைகளுக்கு முக்கியக் காரணம்.

ஜெயப்பிரகாஷ் கொலை வழக்கு

1984-ம் ஆண்டு ஜெயப்பிரகாஷ் என்பவர் தன் சகோதரி, சகோதரியின் கணவர், அவர்களுடைய குழந்தை, மேலும் ஆறு உறவினர்களை ஒரே நாளில் கொலை செய்துவிட்டார். இந்தக் கொலை வழக்கு மிகவும் பிரசித்தி பெற்றது. இந்தக் கொலைகளுக்குக் காரணம் அவருக்கு ஏற்பட்ட தவறான நம்பிக்கைகளே (Delusions).

இது நீதிமன்றத்திலும் நிரூபிக்கப்பட்டது. தன் எதிரிதான் உறவினர்களின் உருவத்தில் மாறுவேடத்தில் தன்னைக் கொல்ல வருகிறார் என்ற தவறான நம்பிக்கையை வலுவாக நம்பியதால் இம்மாதிரி கொலைகள் நிகழ்கின்றன.

தவறான நம்பிக்கைகளின் வகைகள்

இதிலே பல வகைகள் உண்டு. Delusional mood என ஆங்கிலத்தில் சொல்லப்படுகிறது. அதாவது, எதிரே இருப்பவர்களின் சிறுசிறு அசைவுகூடத் தனக்கு ஆபத்தை விளைவிக்கும் என, ஓர் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் நினைப்பது. உதாரணமாக, சட்டைப் பைக்குள் கையை விட்டால் தன்னைச் சுடுவதற்குத் துப்பாக்கியை எடுக்கிறார் என நினைத்து எதிரில் இருப்பவரைத் தாக்கிவிடுவார்கள்.

லேசாகத் திரும்பிப் பார்த்தால் தன்னைத் தாக்கத்தான் ஜாடை செய்கிறார் என நினைப்பார்கள். இன்னொன்று Delusional Community. அதாவது முதலில் ஒருவரைத் தனக்கு எதிரியாகப் பாவித்து, பிறகு பலரையும் அவருடைய கூட்டாளிகள் என நம்புவது.

நடைமுறை உதாரணம்

இப்போது என்னிடம் சிகிச்சை பெற்றுவரும் ஒரு நடுத்தர வயதுப் பெண்ணுக்கும் இது மாதிரித் தவறான நம்பிக்கைகள்தான் பிரச்சினை. கிட்டத்தட்ட ஆறு வருடங்களாக நான்கு இளைஞர்கள் தன்னைப் பின்தொடர்வதாக அவர் நம்புகிறார். பாலியல் தொந்தரவு கொடுக்கிறார்கள் என்றும் நம்புகிறார். தெருவுக்கு வந்தாலே பின்தொடர ஆரம்பித்து விடுகிறார்கள், நான் எங்குப் போகிறேன் எனத் தெரிந்துகொள்கிறார்கள் எனத் தன் தவறான நம்பிக்கைக்கு ஆதாரத்தையும் அடுக்கி, ஒருநாள் போலீஸ் ஸ்டேஷனில் புகாரும் அளித்துவிட்டார்.

ஆனால் விசாரித்துப் பார்த்தால், அந்த நான்கு இளைஞர்களும் குற்றமற்றவர்கள் எனத் தெரியவந்தது. மேலும், அந்தப் பெண்ணின் வீட்டைச் சேர்ந்தவர்களே அவருக்குத்தான் பிரச்சினை எனச் சொல்லியிருக்கிறார்கள்.

அவர் சொல்வது போல் யாரும் அவரைப் பின் தொடரவில்லை. அவருக்கு ஒரு தவறான நம்பிக்கை ஏற்பட்டு, அதை அவரே வலுவாக நம்பத் தொடங்கிவிடுகிறார்.

ஏன் ஏற்படுகிறது?

எதனால் இந்தப் பிரச்சினை வருகிறது எனச் சரியாகச் சொல்ல முடியாது. 'ஆளவந்தான்' படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளபடி சித்திக் கொடுமையைச் சிறிய வயதில் அனுபவித்திருந்தால் வரக்கூடும். ஆனால், சித்திக் கொடுமை அனுபவித்த எல்லோருக்கும் இப்படி ஏற்படும் எனச் சொல்ல முடியாது. மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றங்களால் தானாகவே வரலாம்.

குணப்படுத்துதல்

முதலில் டோபமைன் (Dopamine) என்ற நரம்பியல் அலைபரப்பியின் அளவு கூடுவதால் இந்தப் பாதிப்பு ஏற்படுவதாக நினைத்து, அதைச் சரிசெய்யும் மருந்துகள் இதற்கு அளிக்கப்பட்டன. இப்போது நரம்பியல் அலைபரப்பியில் ஏற்படும் ஸ்திரத்தன்மையற்ற நிலையாலும் இந்தப் பாதிப்பு ஏற்படலாம் என்பதால், அதற்கேற்பப் பல புதிய மருந்துகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. இந்தப் பாதிப்பை மருந்துகளால் முழுமையாகக் குணப்படுத்த முடியும்.

கட்டுரையாளர், கன்னியாகுமரி மாவட்ட மருத்துவக் கல்லூரி பேராசிரியர்,
மனநல மருத்துவர்
தொடர்புக்கு: arulmanas@gmail.com

இப்போது நான் எங்கே இருக்கிறேன்?



திரைப்படக் காட்சிகளில் அடிக்கடி இந்த வசனத்தைக் கேட்டிருக்கலாம்; ‘ஆமா, இப்ப நான் எங்கே இருக்கேன், என்ன நடந்துச்சு’.

குடிநோயாளிகளுக்கு இதெல்லாம் சகஜம். முந்தைய நாள் மிதமிஞ்சி மது அருந்தியபோது என்ன நடந்தது என்றே தெரியாமல் மறுநாள் விழிப்பார்கள். முந்தைய நாள் என்ன வேண்டுமென்றாலும் நடந்திருக்கலாம். மொத்தப் பணத்தையும் எடுத்து மதுக்கூடப் பணியாளருக்குத் தர்மம் செய்திருக்கலாம். உடன் இருந்தவருக்கு சொத்தையும் எழுதிக் கொடுத்திருக்கலாம். இல்லை, யாரையாவது கொலையே செய்திருக்கலாம். ஆனால், மூளையைத் துடைத்து விட்டதுபோல எதுவும் சுத்தமாக நினைவிருக்காது. மது மீட்பு மனநல மருத்துவம் இந்த நிலையை ‘பிளாக் அவுட்’ (Blackout) என்கிறது.

அடுத்தவரையும் அழிக்கும் ஆபத்து!

இதில் இரு வகை உண்டு. கம்ப்ளீட் பிளாக் அவுட் (Complete blackout). இது முழுமையாக நினைவுகள் அழிந்து போதல். இன்னொன்று ஃபிராக்மென்ட்டரி பிளாக் அவுட் (Fragmentary blackout). நேற்று இரவு நடந்தது கொஞ்சமாக நினைவில் ஒட்டிக்கொண்டிருக்கும். யோசித்தாலும் முழுக் காட்சிகளையும் நினைவுக்குக் கொண்டுவர முடியாது. உடன் இருந்தவர் எடுத்துச் சொன்னால், ஓரளவு நினைவுகளை மீட்க முடியும். ஆனால், முதல் வகையான ‘முழுமையாக நினைவுகள் அழிந்துபோதல்’என்பது அபாயகரமான நிலை. இதற்குக் காரணம், அதிக அளவு மது அருந்துவது மட்டுமல்ல, முறையற்று மது அருந்துவது.

அது என்ன முறையற்று மது அருந்தல்? சிலர் பந்தயம் வைத்து மது அருந்துவார்கள். பத்து நிமிடங்களில் நான்கு ‘பியர்’அருந்துவது. அரை மணி நேரத்தில் முழு பாட்டில் மதுவைக் காலி செய்வது. விதவிதமான போட்டிகள். சிலர் சீக்கிரம் போக வேண்டும் என்பதற்காக அவசரக் கோலத்தில் அதிக அளவு மது அருந்துவார்கள். மெதுவாக, ஆசுவாசமாக மது அருந்தும்போதுதான் அதன் போதை சீராக, படிப்படியாக ஏறும். முறையற்று, குறுகிய கால அவகாசத்தில் அதிக அளவு மது அருந்தும்போது அந்த போதையை உடனடியாக உள்வாங்க மூளை தடுமாறுகிறது. வழக்கமாகப் போதையில் ஆட்டம் போட்ட மூளை செல்கள் இப்போது மயக்கமாகிவிடுகின்றன. தற்காலிகமாக மூளையின் நினைவுகள் முழுமையாக அழிகின்றன. அந்த நிமிடத்திலிருந்து நடக்கும் எதுவுமே மூளையில் பதிவது இல்லை. மூளைக்குக் கட்டுப்படாத அந்த நபர் எதுவும் செய்வார். அவருக்கு எதுவுமே தெரியாது. இதனை ‘டிஃபெக்டிவ் கான்ஷியஸ்னெஸ்’ (Defective consciousness) என்போம். நேற்றைய தினம் படித்த, அதிக மது அருந்திவிட்டு ‘மயக்கம் அடைந்த நிலை’ என்பதைவிட இது அபாயம். ஏனெனில், அந்த நிலையில் மது அருந்தியவருக்கு மட்டுமே ஆபத்து. ஆனால், இது மற்றவர்களையும் பாதிக்கும். பெரும் பாலான வன்முறைகள், பாலியல் குற்றங்கள் இது போன்ற நேரத்தில் நடக்க அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.

உடல்ரீதியாக ஒரு விசித்திர குடிநோய் இருக் கிறது. சில குடிநோயாளிகள் எந்த நேரமும் தண்ணீர்த் தொட்டியிலோ அல்லது அண்டாவுக்குள் தண்ணீர் ஊற்றியோ உட்கார்ந்திருப்பார்கள். நாம் ஏற்கெனவே சில அத்தியாயங்களுக்கு முன்பு பார்த்த பாதங்களில் முள் போன்று குத்தும் ‘பின்ஸ் அண்ட் நீடில்ஸ்’ நோயின் முற்றிய நிலை இது. முழங்கால் முதல் பாதம் வரையும், விரல் நுனி தொடங்கி மணிக்கட்டு வரையும் உண்மையிலேயே நெருப்பைப் பற்ற வைத்ததுபோல எரியும். குளிர்ந்த நீரில் இருந்தால் மட்டுமே ஓரளவு எரிச்சல் தணியும். இதன் அடுத்த கட்டமாக இந்த நோய் தசைகளுக்கும் தாவுகிறது. தசையைக் கயிற்றால் கட்டி இழுத்ததுபோலத் தாங்க முடியாத வலி ஏற்படும். உடனடியாகச் சிசிக்சை எடுத்தால் குணப்படுத்திவிடலாம்.

‘ஹனிமூனர்ஸ் டே பால்ஸி!’

இது மட்டுமல்ல... உலகில் எத்தனையோ நோய்கள் இருக்கின்றன. ஆனால், மதுவினால் வரும் மன, உடல் நோய்கள் மட்டும் விசித்திரமானவை. துன்பமும் சுவாரஸ்யமும் கலந்தவை. மது மீட்பு மன நல மருத்துவத்தில் சில நோய்களுக்குச் செல்லமான பெயர்கள் நிலைபெற்றுவிட்டன. அவற்றில் குறிப்பிடத் தக்க ஒன்று, ‘சாட்டர்டே நைட் பால்ஸி’ (Saturday night palsy) அல்லது ‘ஹனிமூனர்ஸ் பால்ஸி’(Honeymooner’s palsy). அதிக அளவு மது அருந்திவிட்டுப் படுக்கைக்குச் செல்பவர்கள், ஆழ்ந்த மயக்கத்தில் பெரும்பாலும் வலதுபுறத் தோளில் தலை சாய்த்துப் படுப்பார்கள். ஏன் இடதுபுறத் தோளில் தலை சாய்த்துப் படுக்க மாட்டார்களா என்று கேள்வி எழலாம். நமக்கு வலது கை பழக்கம்தான் பெரும்பான்மைப் பழக்கம் - எழுதுவது உட்பட.

சுமார் 8 முதல் 10 மணி நேரம் வரை தினசரி அல்லது அடிக்கடி இப்படிப் படுக்கும்போது ஒரு கட்டத்தில் வலது கை திடீரென்று தனியாக உணர்ச்சியற்று தொங்கிவிடும். மரத்தில் பாதி வெட்டப்பட்ட கிளை தொங்குவதுபோல. இயக்க முடியாது. பிடிமானம் இல்லாமல் ஆடும். இதற்குக் காரணம், மணிக்கட்டை இயக்கும் ரேடியல் நரம்பு (Radial nerve) தோள்பட்டை வழியாகத்தான் செல்கிறது. அந்த நரம்பை அரை மணி நேரம் தொடர்ந்து அழுத்திப் பிடித்தாலே மணிக்கட்டில் சிறு மாற்றங்களை உணர முடியும். அப்படி இருக்கும்போது மதுவின் போதையில் பல மணி நேரங்கள், பல நாட்கள் தலையை அழுத்தித் தூங்கினால் ரேடியல் நரம்பு முற்றிலும் செயலிழந்துவிடும் என்கிறார்கள் டாக்டர்கள்.

அதெல்லாம் சரி, இதற்கு ஏன் விசித்திரமான பெயர்கள்? சனிக்கிழமை இரவுகளில் அதிக அளவு மது அருந்துவது ஒரு பெரும் கலாச்சாரமாக இருக்கிறது. அதனால் ‘சாட்டர்டே நைட் பால்ஸி’. பொதுவாக, புது மணத் தம்பதியைக் கவனித்துப் பார்த்திருக்கிறீர்களா? ரொம்பவே அன்புடன் ஒட்டி, உரசிக்கொண்டு இருப்பார்கள். பயணத்திலும் சரி, படுக்கையிலும் சரி, பெரும்பாலும் மனைவி கணவரின் தோள்பட்டையில் தலைசாய்த்திருப்பார். அதனால் வந்தது, ‘ஹனிமூனர்ஸ் பால்ஸி’ என்கிற பெயர்.

(தெளிவோம்)

- டி.எல். சஞ்சீவிகுமார்,

ரஜினி அரசியலுக்கு வருவாரா? என்ற கேள்வி மீண்டும் எழுந்துள்ளது.



ரஜினி அரசியலுக்கு வருவாரா? என்ற கேள்வி மீண்டும் எழுந்துள்ளது. ரஜினி பட ரிலீஸை ஒட்டிஇப்படியான கேள்விகள் எழுவது தமிழர்களுக்குப் புதிதல்ல. முன்பெல்லாம் ஆர்வத்துடன் இதை விவாதித்த தமிழர்கள், இப்போது அயர்ச்சியுடனும் அலுப்புடனும் இந்தக் கேள்வியைக் கடந்துபோகிறார்கள்.

‘ரஜினி அரசியலுக்கு வருவாரா?’ என்ற கேள்வியைக் கொஞ்சம் ஒத்திவைத்துவிட்டு, வேறு இரண்டு கேள்விகளை எழுப்பிப் பார்ப்போம்.

* ரஜினி 'அரசியல்’ செய்யவேயில்லையா?

* ரஜினி அரசியலுக்கு ஏன் வர வேண்டும்?

‘ரஜினி அரசியலுக்கு வருவாரா?’ என்ற கேள்விக்கு வயது கிட்டத்தட்ட 20 என்பதே, ரஜினி ‘அரசியல்’ செய்யவேயில்லையா என்ற கேள்விக்கான பதிலாக உள்ளது. 20 ஆண்டுகளாக, இந்தக் கேள்விக்குப் பதிலே சொல்லாமல், அல்லது குழப்பமான பதில்களைச் சொல்லியே, தக்கவைத்திருக்கிறார் ரஜினி. அதிலும் ரஜினியின் புதுப்பட ரிலீஸ்களை ஒட்டி இந்தக் கேள்வி எழுவது ரஜினி செய்யும் ‘அரசியல்’தான். மற்ற எந்த அரசியல்வாதிகளையும்விட இந்த விஷயத்தில் ரஜினி திறமையான அரசியல்வாதிதான்.

சரி... ரஜினி ஏன் அரசியலுக்கு வரவேண்டும்? ரஜினி அரசியலுக்கு வந்தே ஆக வேண்டிய அவசியம் என்ன? ரஜினி வந்துதான் தீர்க்க வேண்டிய பிரச்னைகள் என்னென்ன? இதற்கு இரண்டு பதில்கள் சொல்லப்படுகின்றன.

* எல்லாக் கட்சிகளுமே ஊழல் கட்சிகள்தான். கறைபடிந்துபோன அரசியல் சூழலில் ரஜினியால்தான் நல்லாட்சியைத் தரமுடியும்.

* இவ்வளவுநாள் ரஜினிக்காக உழைத்த ரசிகர்களுக்கு அவர் ‘ஏதாவது’ செய்தே ஆக வேண்டும்.

தமிழகத்தின் முக்கியமான பிரச்னைகள் சிலவற்றைப் பட்டியலிடுவோம். ஊழல்மயமாகிப் போன அரசியல், குடும்ப அரசியல், 'தீண்டாமை ஒரு பெருங்குற்றம்’ என்று அரசியல் சட்டம் சொன்னாலும் நூற்றுக்கணக்கான வடிவங்களில் இன்னமும் தீண்டாமை தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது. சாதிமறுப்புத் திருமணம் செய்பவர்கள் கௌரவக் கொலை செய்யப்படுகிறார்கள். பன்னாட்டு நிறுவனங்களின் வருகையால் சிறு வணிகங்கள் அழிகின்றன. இயற்கை வளங்கள் பெரும் பணக்காரர்களால், பெருமுதலாளிகளால், பெரு நிறுவனங்களால் சுரண்டப்படுகின்றன. மின்வெட்டு போன்ற பிரச்னைகளின் பின்னணியில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு வாரி வழங்கப்படும் சலுகைகள் இருக்கின்றன, அரசியல் ரவுடியியல் ஆகி இருக்கிறது.

எந்தப் பாகுபாடுமின்றி எல்லாக் கட்சிகளிலும் கிரிமினல்கள் நிரம்பி வழிகிறார்கள். பெண்கள் என்னதான் கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றில் முன்னேறியிருந்தாலும் சுயமாக முடிவெடுப்பதற்கான அதிகாரம் அவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. ஒருபுறம் பண்பாட்டுப் பெருமை பேசிக்கொண்டே சிறுமியிலிருந்து மூதாட்டி வரை பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள். சமூகநீதி பூமியான தமிழகத்தில் இன்னமும் இட ஒதுக்கீட்டுக்கான போராட்டம் முடியவில்லை. இன்னொருபுறம் இட ஒதுக்கீட்டுக்கே வாய்ப்பற்ற தனியார்மயம், தமிழகத்தின் தீர்க்கமுடியாத பிரச்னையான நதிநீர்ப் பிரச்னை, தமிழர்களின் ரத்தத்தில் ஊறிப்போன ஈழப் பிரச்னை, கல்வியும் மருத்துவமும் வியாபாரமாகிப் போன அவலம்... இப்படிப் பல பிரச்னைகளைப் பட்டியலிடலாம்.



இதில் எல்லாம் ரஜினிக்கு என்று ஏதாவது கருத்து இருக்கிறதா? இருந்தாலும் அவற்றை அவர் பொதுவெளியில் பதிவு செய்திருக்கிறாரா? எந்தப் பிரச்னையை ரஜினியால் தீர்க்கமுடியும்? அவரால்தான் இந்தப் பிரச்னைகளைத் தீர்க்கமுடியும் என்பதற்கான ஆதாரம் என்ன? மற்ற அரசியல் கட்சிகள், அரசியல் தலைவர்களைவிட தனித்துவமான செயல்திட்டம் எதுவும் அவரிடம் இருக்கிறதா? எல்லாவற்றுக்கும் ‘இல்லை’ என்பதுதான் பதில். ஒரு தனிமனிதனுக்கு சமூகத்தின் அத்தனை பிரச்னைகள் குறித்தும் கருத்து இருக்க வேண்டுமென்றோ அதைப் பொதுவெளியில் பதிவு செய்ய வேண்டும் என்றோ எந்த அவசியமும் இல்லை. ஆனால் ஒருவர் அரசியலுக்கு வருகிறார் என்றால், முதலில் அவருக்கு இங்கே இருக்கிற பிரச்னைகள் குறித்த புரிதலும் பார்வையும் அவசியம்.

அப்படியானால் ரஜினி பொதுப்பிரச்னைகள் பற்றிப் பேசியதே இல்லையா? உண்டு. மணிரத்னம் வீட்டில் குண்டு வீசப்பட்டபோது, ‘பாட்ஷா’ பட விழாவில் “தமிழகத்தில் வன்முறைக் கலாசாரம் அதிகரித்துவிட்டது” என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து அன்றைய ஜெயலலிதா அரசாங்கம் ரஜினிகாந்துக்குத் தொடர்ச்சியாக நெருக்கடிகள் கொடுத்தன. அதைத் தொடர்ந்துவந்த தேர்தலின்போது, தி.மு.க. - தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணியை ஆதரித்த ரஜினி, “இந்தத் தேர்தலில் அ.தி.மு.க. ஜெயித்தால் தமிழகத்தை ஆண்டவனால்கூட காப்பாற்ற முடியாது” என்றார். பிறகு அவரே ஒரு தேர்தலில் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியை ஆதரித்து ‘வாய்ஸ்’ கொடுத்தார். ஆனால் அந்தத் தேர்தலில் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி தோல்வியடைந்தது. 'கருணாநிதிக்காக நடத்தப்படும் பாராட்டு விழாவில் கலந்துகொள்ள சினிமாக்காரர்களை மிரட்டி அழைத்துவருகிறார்கள்' என்று அஜித் மேடையில் சொன்னார். கருணாநிதி அருகில் அமர்ந்திருந்த ரஜினி, எழுந்து நின்று கைதட்டி, அதை ஆமோதித்தார்.

காவிரிப் பிரச்னையை ஒட்டி நடந்த நடிகர்கள் உண்ணாவிரதத்தில் 'தண்ணி தராதவங்களை ஓட ஓட விரட்டணும்' என்று ஆவேசக்குரல் கொடுத்தார். கர்நாடகாவில் எதிர்ப்பு எழுந்தவுடன் மன்னிப்பு கேட்டார். ஆகமொத்தம், இருபதாண்டு காலத்தில் ரஜினியின் அதிகபட்ச அரசியல் செயல்பாடுகள் இவைதான். இந்தப் பிரச்னைகளையும் கவனித்துப் பார்த்தால், ஏதோ ஒருவகையில் அவை சினிமா தொடர்புடைய பிரச்னையாக இருக்கும். ஒரு துறை சார்ந்தவர், தன் துறை சார்ந்தவரின் பிரச்னைகளுக்காகக் குரல் கொடுப்பதில் தவறில்லை. ஆனால் நாளை ரஜினி அரசியலில் குதித்து, முதல்வராகவும் ஆனால் அவர் சினிமாக்காரர்களுக்கு மட்டும் முதல்வர் இல்லை. மக்களுக்கான முதல்வர். அப்படியானால் மக்களின் பிரச்னைகள் குறித்து அவர் பேசியாக வேண்டும். ஆனால் இதுவரை ரஜினி அப்படிப் பேசியதில்லை என்பதுதான் நிஜம்.

மேலும் ஒருவர் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்றால் அரசியலுக்கு வந்துதான் ஆக வேண்டும் என்று எந்த அவசியமுமில்லை. மக்களுக்காக உழைப்பவர்கள் எல்லாம் மக்களால் வெற்றிகரமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு கொண்டாடப்படுவதும் இல்லை. தமிழர்களுக்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணித்த தந்தை பெரியார், தேர்தல் அரசியலுக்கு வரவேயில்லை. தன்னைத் தேடி வந்த முதலமைச்சர் வாய்ப்புகளையும் புறக்கணித்தார். இயற்கை விவசாயம், சுற்றுச்சூழல் குறித்த பரப்புரைக்காகத் தன் வாழ்வை அர்ப்பணித்த நம்மாழ்வார் தேர்தல் அரசியலுக்கு வரவில்லை. ஆனால் இவர்களைப் போன்றவர்களின் பணிகள் நீண்டகால நோக்குடையவை.

சுதந்திரப் போராட்டம், சாதியப் பிரச்னைகள், தொழிற்சங்கப் போராட்டங்கள், தீண்டாமை எதிர்ப்புப் போராட்டங்கள் தொடங்கி சமகாலப் பிரச்னையான மணல் கொள்ளை எதிர்ப்பு வரை தொடர்ச்சியாகப் போராடிவருபவர் நல்லகண்ணு. தேர்தல் அரசியலில்தான் இருக்கிறார். ஆனால் எந்த மக்களுக்காகப் போராடுகிறாரோ அந்த மக்களாலேயே தொடர்ச்சியாகத் தோற்கடிக்கப்படுகிறார் நல்லகண்ணு இந்த மக்களுக்காகச் செய்யாத எந்த ஒன்றை, ரஜினி அரசியலுக்கு வந்து செய்யப்போகிறார்? ‘நல்லகண்ணு வெற்றிபெற வேண்டும்’ என்று குரல்கள் எழாதபோது, ‘ரஜினி முதல்வராக வேண்டும்’ என்று குரல்கள் எழுவதன் அவசியம் என்ன?

இரண்டாவதாக, 'இவ்வளவுநாள் ரஜினிக்காக உழைத்த ரசிகர்களுக்கு அவர் ‘ஏதாவது’ செய்தே ஆக வேண்டும்’ என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது, இந்த ‘ஏதாவது’ என்றால் என்ன? ரஜினி அரசியலுக்கு வர வேண்டும், அவர் ரசிகர்கள் கவுன்சிலர்கள் தொடங்கி அமைச்சர்கள் பதவிகள் வரை அமர வேண்டும், அதிகாரிகளின் மரியாதையுடன் பதவி சுகத்தை அனுபவிக்க வேண்டும், பணம் சம்பாதிக்க வேண்டும். இதுதானே அந்த ‘ஏதாவது’. யாராவது ‘மக்களுக்கு சேவை செய்யத்தான் அரசியலுக்கு வருவேன்’ என்று சொன்னால் அதை மக்களே நம்பமாட்டார்கள். ஆக ரசிகர்கள் பதவிகளில் அமரவும், பணம் சம்பாதிக்கவும்தான் ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்றால், அது ஓர் ஊழல்வாதம்தானே. ‘இவ்வளவுநாள் மற்றவர்கள் கொள்ளையடித்தார்கள். இனி எங்களுக்கும் ஒரு வாய்ப்பு கொடுங்கள்’ என்று கேட்பது நீதியானதுதானா?

சரி...இப்போது ரஜினி அரசியலுக்கு வருவாரா, வந்தாலும் அவரால் வெற்றிபெற முடியுமா என்று யோசித்துப் பார்ப்போம்.

ரஜினிக்கு எல்லா மட்டங்களிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றாலும் ரஜினியின் தீவிர ரசிகர்களில் பெரும்பாலோர் நாற்பதைக் கடந்தவர்கள்; ஐம்பதை நெருங்கிக்கொண்டிருப்பவர்கள். ரஜினிக்கு வயதாகிறது என்பது எந்த அளவுக்கு உண்மையோ அந்த அளவுக்கு ரஜினி ரசிகர்களுக்கும் வயதாகியிருக்கிறது என்பது உண்மை. இன்றைய அரசியல் சூழல், புதிய வாக்காளர்களாக உருவாகியிருக்கும் இளைய தலைமுறையின் எதிர்பார்ப்பு - இவற்றையெல்லாம் ரஜினியாலோ அவரது ரசிகர்களாலோ எதிர்கொள்ள முடியுமா என்பது கேள்விக்குறிதான்.

ரஜினியைப் போல பலகாலம் இழுத்தடிக்காமல் துணிச்சலாக அரசியலுக்கு வந்தவர் விஜயகாந்த். தொடக்க காலத்தில் மரியாதையுடனும் பிரமிப்புடனும் பார்க்கப்பட்ட விஜயகாந்த், இன்று கேலிக்குரியவராகப் பார்க்கப்படுகிறார். யூடியூபில் ‘விஜயகாந்த்’ என்று டைப் செய்தால், நூற்றுக்கணக்கான காமெடி வீடியோக்கள் கொட்டுகின்றன. விஜயகாந்த் அரசியலுக்கு வந்தாரே தவிர, மேலே சொன்ன தமிழகத்தின் முக்கியமான பிரச்னைகள் குறித்து அவருக்குக் கருத்தோ தீர்வோ எதுவும் கிடையாது. விஜயகாந்தைவிட இந்த விஷயத்தில் ரஜினி சிறந்தவர் என்று சொல்வதற்கும் எந்த அடிப்படையும் இல்லை. பக்கத்து மாநிலமான ஆந்திராவை எடுத்துக்கொள்வோம். இங்கே ரஜினி சூப்பர் ஸ்டார் என்றால், அங்கே சிரஞ்சீவி மெகா ஸ்டார். ஆனால் அவரால் அரசியலில் வெற்றிகளை ஈட்ட முடியவில்லை. இதெல்லாம் ரஜினிக்குத் தெரியாதா என்ன? விஜயகாந்தையும் சிரஞ்சீவியையும் பார்த்தபிறகும் ரஜினி அரசியலுக்கு வருவார் என்று இன்னமும் அவர் ரசிகர்கள் நம்பினால், மற்ற அரசியல்வாதிகள் மக்களை ஏமாற்றுகிறார்கள், ரஜினி தன் ரசிகர்களையே ஏமாற்றுகிறார் என்றுதான் அர்த்தம்.

மேலும் ‘முள்ளும் மலரும்’, ‘ஜானி’, ‘அவள் அப்படித்தான்’, ‘ஆறிலிருந்து அறுபது வரை’ போன்ற படங்களில் எல்லாம் மிகச்சிறந்த நடிகனாக ரஜினி தன்னை நிரூபித்திருந்தாலும் வெற்றிகரமான ரஜினி என்பது ‘பாட்ஷா’ ரஜினியும் ‘படையப்பா’ ரஜினியும்தான். வணிகச்சூழலுக்கு ஏற்றவாறு தன் பிம்பத்தை நிறுவிக்கொண்டவர் ரஜினி. அவ்வப்போது சில ரிஸ்க்குகளையும் அவர் எடுத்திருக்கிறார்தான். அவரின் நூறாவது படமான ‘ராகவேந்திரா’வில் வழக்கமான ஆக்‌ஷன் ரஜினிக்குப் பதிலாக அடக்கமான பக்தி ரஜினியை முன்னிறுத்தினார். குறை சொல்ல முடியாத நடிப்பு என்றாலும் படம் ஓடவில்லை. சரியாகவோ அசட்டுத்தனமாகவோ, தான் ஆன்மிகம் என்று நம்பும் ஒன்றை ‘பாபா’ படமாக எடுத்தார். அதுவும் தோல்வி. 'குசேலன்’ படத்தில் சுந்தர்ராஜனை வைத்து காரசாரமான கேள்விகளைக் கேட்கவைத்தார். அதற்குச் சொதப்பலான பதிலும் அளித்தார். ஆனால் மோசமான பட உருவாக்கத்தால் ‘குசேலன்’ படுதோல்வி. இப்படி சினிமாவில் ரஜினி எடுத்த ரிஸ்க்குகள் எல்லாமே தோல்விகளில்தான் முடிந்தன.

இதைத் தவிர எப்போதும் சினிமாவில் ரஜினி ரிஸ்க் எடுக்க விரும்பியதில்லை. சினிமாவிலேயே ரிஸ்க் எடுக்காத, எடுப்பதற்கான வாய்ப்புகள் இல்லாத ரஜினி, அரசியல் என்ற மாபெரும் ரிஸ்க்கை எப்படி எடுப்பார்?

தமிழர்கள் சார்பாக ரஜினியிடம் வைப்பதற்கு ஒரே ஒரு வேண்டுகோள்தான் இருக்கிறது. ‘ஒன்று அரசியலுக்குக் கண்டிப்பாக வருவேன் என்று அறிவியுங்கள் அல்லது அப்படியான எண்ணமே இல்லை என்று தெரிவியுங்கள். பன்ச் டயலாக்குகளைப் படத்துடன் நிறுத்திக்கொள்ளுங்கள்’. சுருக்கமாகச் சொன்னால் ரஜினி அரசியல் செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும்!’

- சுகுணா திவாகர்

மது இல்லாத தூக்கம் நம் கண்களைத் தழுவட்டுமே!



தூக்கம். பெரும் வரம். குடிநோயாளிகளுக்கோ இது பெரும் ஏக்கம். ஒருவர் தினசரி ஆறு முதல் எட்டு மணி நேரம் தூங்க வேண்டும். ஒருவர் நான்கு நாட்கள் தூங்கவில்லை என்றால் அவரது உயிரியல் கடிகாரம் உருக்குலைந்துவிடும். செரிமான உறுப்புகள் செயலிழந்துவிடும். மேலும் நான்கு நாட்கள் தூங்கவில்லை எனில் பாதி மனநோயாளியாகிவிடுவார். தூக்கமின்மை தொடர்ந்தால் நிச்சயம் அவர் ஒரு மனநோயாளிதான்.

குடிநோயாளிகள் பலரும், “தூக்கம் வரலைங்க, அதான், குடிக்கிறேன்” என்பார்கள். ஒருவர் ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து தினமும் மது அருந்துகிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர் தூங்கி ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டது என்று அர்த்தம். பத்து நாட்கள் தூக்க மின்மைக்கே ஒருவருக்குப் பைத்தியம் பிடிக்கும் என்றால் ஐந்து ஆண்டுகளாக ஒரு குடிநோயாளி தூங்கவில்லை என்றால் - நிச்சயமாக அவரும் ஒரு குடி மற்றும் மனநோயாளியே. என்ன, பலருக்கு வெளியே தெரிய வதில்லை.

உண்மையில், மது அருந்திவிட்டுப் படுக்கும்போது வருவது, தூக்கம் அல்ல; மயக்கம். மூளையைத் தவிர அவரது உடல் உறுப்புகள் அனைத்தும் மயங்கிக்கிடக்கும். உறக்கம் என்பது பூப்போல கண் இமைகள் அணைய வேண்டும், குழந்தையின் தூக்கத்தைப் போல. ஆனால், குடிநோயாளிகளின் மயக்கம் என்னும் தூக்கம் எருமை ஏறி மிதிப்பதற்கு ஒப்பானது. இந்த ஒப்பீட்டுக்குக் காரணம் இருக்கிறது. ஒருவர் மீது எருமை ஏறி மிதித்தால் உயிரிழக்கவும் வாய்ப்பிருக்கிறது இல்லையா? அப்படி மது அருந்திவிட்டு மயக்கத்தில் ஆழ்ந்திருக்கும்போது உயிர் பிரியும் அபாயங்கள் நிறையவே உண்டு. சரி, டாக்டர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

உறக்கத்தில் உயிர் பிரியும் அபாயம்!

“சுவாசத்தின் சூட்சுமம் பின்னந்தலையில் இருக்கிறது. அந்த நரம்பு மண்டலத்துக்குப் பெயர் ‘ரெஸ்பிரேட்டரி சென்டர்’ (Respiratory centre). நமது சுவாசத்தைக் கட்டுப் படுத்தும் உயிரியல் கருவி இது. பின்னந்தலையில் பலமாக அடித்தால் மயக்கம் அடைவார்களே, அதற்குக் காரணம் இந்த கருவி சேதம் அடைவதுதான். ஒருவர் தொடர்ந்து மது அருந்தும்போது இந்த உயிரியல் கருவி கடுமையாக பாதிக்கப்படும். ஒருவருக்கு ரத்தத்தில் ஆல்கஹாலின் அளவு 0.30 அளவுக்கு மேல் உயர்ந்துவிட்டாலே அவரது சுவாசம் சீராக இயங்காது. திடீரென்று உச்ச நிலைக்குச் செல்லும். திடீரென்று அபாயகரமான அளவுக்கு தாழும். மூச்சுத் திணறல் இது. ஒருகட்டத்தில் முச்சு விட முடியாமல் தன்னிச்சையாகத் தூக்கத்தில் வாயைத் திறந்து சுவாசத்துக்குத் துடியாய்த் துடித்து, அடங்கி, இறந்துபோவார். எனவே, ஒருவர் அதிக அளவு மது அருந்தி மயக்க நிலைக்குச் சென்று விட்டால் அவரை விட்டு விலகிச் சென்றுவிடக் கூடாது. அருகிலிருந்து கவனித்துக்கொள்ள வேண்டும். அவருக்கு எந்த நேரமும் மூச்சுத் திணறல் ஏற்படலாம்.

அடுத்து, ஒருவர் அதிக அளவு மது அருந்திவிட்டு எழுப்ப இயலாத அளவுக்கு மயக்கத்தில் ஆழ்ந் திருக்கும்போது பெரும்பாலும் மல்லாக்கப் படுத்திருப்பார். அதிகப்படியான மது, உணவு இரைப்பையை நிறைத்திருக்கும். அதிக அளவு மது அருந்திய நிலையில் உணவு செரிக்காது. மயக்க நிலையிலேயே வாந்தி எடுப்பார்கள். மதுக்கடை வாசலில் மயக்கிக்கிடக்கும் குடிநோயாளிகள் பலரும் மயக்கத்திலேயே வாந்தி எடுக்கும் காட்சிகளை நினைவுபடுத்திப் பாருங்கள். பக்கவாட்டில் சரிந்த நிலையில் அப்படி வாந்தி எடுத்தால் பெரியதாக அபாயம் இல்லை. மல்லாக்கப் படுத்த நிலையில் வேகமாக வாந்தி எடுக்கும்போது அது உணவுக் குழாய்க்கு மிக அருகில் இருக்கும் மூச்சுக் குழாய்க்குள் சென்றுவிட அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.

உதாரணத்துக்கு, புரையேறுவதை எடுத்துக்கொள்வோம். உண்ணும்போது லேசாக சிறு உணவுத் துகள் மூச்சுக் குழாய்க்குள் சென்றாலே தாங்க முடியாமல் இருமி, கண்ணில் நீர் வழியத் துடிக்கிறோம். தலையில் தட்டி, மெதுவாகத் தண்ணீர் குடித்த பின்பே ஆசுவாசம் அடைய முடிகிறது. அப்படி என்றால் ஏராளமான வாந்தி ஒருவரின் மூச்சுக்குழாய்க்குள் செல்லும்போது, அதுவும் அப்போது அவர் மயக்கம் நிலைக்கும்போது, என்ன நடக்கும்? மரணம் நிச்சயம்.

‘குடி’ நுரையீரலையும் கெடுக்கும்!

புகைபிடிப்பதால் நுரையீரல் கெடும் என்பது தெரியும். மதுவும் நுரையீரலை பாதிக்கும் என்பது தெரியுமா? பெரும்பாலான குடிநோயாளிகள் குறட்டை விடுவார்கள். குறட்டை என்பது ஒரு உடல் குறைபாடுதான். மது அருந்துவதால் குறட்டை நோய் அதிகரிக்கும். அதுவும் சில குடிநோயாளிகள் பயங்கரமாக வாயைத் திறந்து வைத்துக்கொண்டு சத்தமாகக் குறட்டை விடுவார்கள். குறட்டை சத்தம் உச்ச நிலையிலும் தாழ்ந்த நிலையிலும் ஏறி, இறங்கிப் பயணிக்கும். அப்போது அவர்களின் உடல் அதிர்ந்து அடங்கும். இது நகைப்புக்குரிய விஷயம் அல்ல. அபாயகரமானது. இதுபோன்ற குறட்டையின்போது புரை ஏறி உணவுத் துகள்கள் நுரையீரலுக்குள் சென்றுவிட வாய்ப்புகள் இருக்கின்றன. நுரையீரல் என்பது பாதுகாக்கப்பட்ட பகுதி. அங்கே காற்றைத் தவிர எதற்கும் அனுமதி இல்லை. அங்கே உணவுத் துகள் அல்லது சிறு இறைச்சி துகள் சென்றுவிட்டால் உடனே எதுவும் தெரியாது. ஒரு வாரத்துக்குள் அது அழுகி, நோய்க் கிருமிகள் பெருகி நுரையீரல் கடுமையாக பாதிக்கப்படும். மூச்சுத்திணறலுடன் கூடிய கடுமையான காய்ச்சல் ஏற்படும். இதன் பெயர் ‘ஆஸ்பிரேஷன் நிமோனியா’ (Aspiration pneumonia). உடனடியாகத் தகுந்த சிகிச்சை அளிக்கவில்லை என்றால் மரணமும் நேரலாம். எனவே, மதுவின் மயக்கம் என்பது மரணம் வரை அழைத்துச் செல்லும்.” என்றார்.

(தெளிவோம்)

- டி.எல். சஞ்சீவிகுமார்,

Craze for deemed varsity status declines

Chennai: With the HR development ministry (MHRD) and the University Grants Commission (UGC) bringing in tougher rules for an institution to become a deemed university, the number of applications for deemed university status has come down. Last year, the UGC received four applications across the country, including one from Tamil Nadu and this year two institutions have applied to get the status.

UGC vice-chairman Professor H. Devaraj said that last year the commission had received four applications and this year two have got added to the list. “We (MHRD and UGC) have tightened the selection process, making it clear that only good institutions will get deemed university status because of which the numbers have come down,” he said.

According to the UGC (Institutions deemed to be universities) regulations 2010, which the Commission follows currently for deemed universities, there are several stringent norms, including that the college should have been in existence for at least 15 years and they should have secured “A” grade in the assessment done by the National Assessment and Accreditation Council (NAAC) twice. 

Stringent clauses like these make it tough for existing institutions to get the status of deemed university. “It is a welcome sign that the number of deemed university proposals have come down because of the rigour involved. The charitable grant of deemed university status during 2004-09 including conditional grant for 3 or 5-year period has caused an avoidable mess in the system that is compounded further by the Prof Tandon committee,” dean (planning and development) at the Thanjavur-based Sastra University Professor S. Vaidyasubramaniam said.


Pointing out that it was akin to awarding a driving license and asking the driver to learn driving within six months, Prof Vaidyasubramaniam said that the present move to address this at the entry level was a welcome sign and there needs to be a 5-year review of all deemed universities. “There should be no conditional deemed university status as there is no such provision in the UGC Act,” he added.

NEWS TODAY 2.5.2024