Showing posts with label கட்டுரைகள். Show all posts
Showing posts with label கட்டுரைகள். Show all posts

Tuesday, April 27, 2021

மனதை அழகாக்குவோம்


மனதை அழகாக்குவோம்

Added : ஏப் 26, 2021 23:59


'நல்லா இருக்கீங்களா' என்பது தான் நீண்ட இடைவெளிக்குப் பின் நாம் சந்திக்கும் நண்பர்களிடமும் உறவினர்களிடமும் கேட்கின்ற முதல் கேள்வி. சமயங்களில் கேட்க இருக்கிற ஒரே கேள்வியாகவும் அது மட்டும் இருக்கும். சரி அந்தக் கேள்வியாவது ஒருவருக்கு ஒருவர் கேட்டுக் கொள்ள இருக்கிறதே என எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்.

வயதாக ஆக நம் உடல் நலம் குறித்த அக்கறை அதிகரிக்கிறது.சுவர் இருந்தால் தான் சித்திரம் என்பதை உணர்ந்து நடை பயிற்சி, உடற்பயிற்சி, சிறுதானிய உணவு, உணவுக் கட்டுப்பாடு என்றெல்லாம் நம்மில் பலரும் கவனமாகப் பின்பற்றுகிறோம். அதே மாதிரி உடலின் தன்மைக்கு ஏற்ப சர்க்கரை, உப்பு அளவுகளைக் குறைத்தும் உண்கிறோம். அவ்வப்போது மருத்துவரிடம் உடல்நிலையை பரிசோதனை செய்து அதற்கேற்ப மாத்திரைகளை எடுத்துக்கொள்கிறோம். மாத பட்ஜெட்டில் தனியிடம் மருந்துகளுக்கு செல்ல ஆரம்பிக்கிறது. பொடி எழுத்துகளை வாசிக்க தனியாக கண்ணாடி வாங்குகிறோம். தலையில் அதிகரிக்கும் வெள்ளை முடிகளைப் பார்த்து சற்று அதிர்ந்து நாள்பட சமாதானமாகிறோம். வயது நாற்பதைத் தொட்டு நகர்பவர்களின் வாழ்க்கை இப்படித்தான் மாறத்துவங்குகிறது.

உடம்பு என்னும் வீடு

நம் உயிர் இருக்கிற உடம்பு என்னும் வீட்டை பத்திரமாகப் பார்த்துக் கொள்கிறோம். மாத்திரை மருந்துகளை எடுத்துக் கொண்டே ஓடுகிற ஓட்டம் உடலை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவே. அதே அளவு கவனம் மனத்திற்கும் நிச்சயம் தேவை.மனம் தெளிந்த வானம் போல இருக்க ஆசைப்படாதவர்கள் இருக்கிறோமா என்ன? சட்டென உடைந்து போகாமல், சுளுவாய் சோர்ந்து போகாமல், நிதானமாய் மனம் இருத்தல் என்பது பெரிய விஷயம். ஆனால் எளிதில் கலங்கிப் போய்விடுமளவு பலவீனமாய் பல நேரங்களில் இருக்கிறோம். கோபம் வெடிக்கையில் எது நம் சமநிலையைக் குலைக்கிறது என ஆராய வேண்டும். யாரோ ஒருவர் அவர் இயல்பை மாற்றி நம்மிடம் நடந்திருக்கக் கூடும். எதுவோ ஒன்று நாம் திட்டமிட்டதற்கு நேர்மாறாய் வந்திருக்கலாம். ஏமாற்றம் தந்த ஒன்றை புன்னகையோடு எதிர்கொள்ள நாம் புத்தர்அல்ல.

பொங்கும் கோபம்

கோபம் பொங்கிய நொடியில் எதிரில் கேட்பவர் மனம் பொசுங்கும் படியான சொற்களை நம் நாக்கு வெளியேற்றும். நம்மை விட எளியவர் என்று நினைக்கும் போது மட்டுமே இது நடக்கும். வயதிலும் குறைந்தவராக, குறிப்பாக நம் குழந்தைகளாக இருந்தால் கை நீளும். நாம் உயர்ந்தவர் என உயர்த்தி வைத்திருப்பவரிடம் அதே சூழல் வரும் போது நாக்கும், கையும் மவுனமாக இருக்கும். வாய்ப்பேச்சோ, கைகலப்போ, வாய்க்கால் தகராறோ பொதுவாக சண்டை நடக்கும் இடங்களை சற்று கூர்ந்து கவனித்தால் சம்பந்தப்பட்ட இரு தரப்புமே உனக்கு நான் சளைத்தவனில்லை என்கிற எண்ணம் கொண்டவையாக இருக்கும். இருவரில் யார் கை ஓங்கி வெற்றிக் கொடி நாட்டப்படுகிறது என்பதில் பெரிய ஆர்வம், ஆவேசம் பொங்கும். ஆனால் இவனிடம் பேசி ஜெயிக்க முடியாது என உறுதியாகத் தெரிந்தால், எதிர்ப்பைத் தெரிவிக்க மாட்டோம். அதுவும் அவர்களால் காரியம் ஆகவேண்டி இருந்தால் உள்ளே என்ன குமுறினாலும் முகம் புன்னகைப் பூக்கும். அந்த சூழலைக் கடந்தால் போதும் என்பது மட்டும் உள்ளே ஓடும்.

சொல்லாத சொல்

நன்றாக யோசித்தால் கோபத்தை சற்று ஆறப்போட்டால், யாரும் எதுவும் சொல்லாமலே சமாதானமாகி இருப்போம். ஆத்திரத்தில் கட்டுப்பாட்டை இழந்த வாய் நிதானம் இல்லாமல் சொல்லும் சொற்களை, ஆற அமர உட்கார்ந்து யோசிக்கையில் தவிர்த்து இருக்க வேண்டிய சொற்களின் பட்டியல் பெரிதாக மிரட்டும். அதன் பின் சுய பச்சாதாபத்தில் தவிப்போம். சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை என்கிற பாடல் வரி நினைவுக்கு வருகிறது.இன்னொன்றும் இருக்கிறது, கோபத்தில் வெளிப்படுத்த வேண்டிய சொற்களை அந்த இடத்தில் சொல்லாமல், மூன்றாவது ஒரு நபரிடம் பகிர்தலும் நிகழும். அந்த நபருக்கு சம்பந்தப்பட்டவர் வேண்டியவர் என்றால் ஒரு மாதிரியும் வேண்டாதவர் என்றால் இன்னொரு மாதிரியும் திரித்து சொல்வார். முடிந்த அளவு சம்பந்தமில்லாத நபரிடம் பகிரலாம். அல்லது நமக்குள்ளேயே அலசி ஆராயலாம். இந்த சொல் சொன்னவரின் நோக்கம் என்ன, அதனால் கிடைக்கக் கூடிய பலன் எது என யோசிக்கலாம். அதே மாதிரி தன் பக்கம் உள்ள தவறு என்ன என்பதையும் கட்டாயம் பார்க்க வேண்டும். இரண்டு பக்கங்களையும் அலசி ஆராய்ந்தால் மட்டுமே நாம் காயம் பட்ட சம்பவத்தின் முழு வடிவமும் கிடைக்கும்.

கோபத்தை ஆள்வோம்

விரும்பத் தகாத சூழலை சரி செய்து, இயல்பாக்குவது நம் நோக்கமாக இருந்தால், முதலில் 'ஈகோ' வை விட்டு ஒழிக்க வேண்டும். நாம் சாதாரண எளிய அன்பான மனிதர்கள் என்பது எப்போதும் நினைவில் இருக்கட்டும். போனது போகட்டும் என பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளும் முதிர்ச்சி மனதை அழகாக்கும். இரு பக்கமும் நிம்மதி சூழ உதவும்.நியாயமான கோபத்தை அவசியமான இடங்களில் காட்டலாம். அந்த நேரங்களிலும் சரியான வார்த்தைகளைக் கோர்த்து எதிரில் இருப்பவர் புரிந்து கொள்ளும்படி நிதானமாக பேச வேண்டும்.

நல்ல விளைவு மட்டுமே ஏற்படும் என்கிற உறுதி இருந்தால் கோபம் நல்லது தான். ஆனால் அனாவசியம் என தெரிந்தால் கோபத்தைக் கட்டுப்படுத்துவதே சிறந்தது. நிமிடங்களில் வந்து போகிற கோபம் என்கிற ஒற்றை உணர்வுக்கு, நீண்ட காலம் பிரியத்துடன் இருந்தவர்களைப் பகைக்க வேண்டியதில்லை.கட்டுப்படுத்த முடியாமல் கத்தி இருக்கிறோம் என்றால் கோபம் தான் நம்மை ஆள்கிறது. அதற்கு நாம் அடிமை. கோபத்தைக் கட்டுப்படுத்தும் திறனை வசப்படுத்தினால் நாம் கோபத்தை ஆள்வோம். அதன் வழியே நம் சுற்றத்தையும் ஆள்வோம்.

மனநலம் பேணுவோம்

உடல் நலத்தைப் பேணுவதைப் போல மன நலத்தையும் கவனித்துக் கொள்ள வேண்டும். குழந்தைகளுக்காக, மாணவர்களுக்காக, இளைஞர்களுக்காக, முதியவர்களுக்காக என அக்கறையான பார்வைகள், உரைகளை அடிக்கடிக் கேட்கிறோம்; பார்க்கிறோம். ஆனால், மத்திம வயதில் இருப்பவர்களுக்கு கிடைப்பது என்னவோ பிள்ளைகளைப் பார்த்துக்கோ, பெத்தவங்களைப் பார்த்துக்கோ, நல்லா சம்பாதி போன்ற கடமைகளை நினைவூட்டுதல் மட்டும் தான். ஆனால், நிஜத்தில் உடல் ரீதியாக உள்ளும், புறமும் நிகழும் பெரிய மாற்றங்களை போராட்டங்களோடு எதிர் கொண்டு அவர்களின் நாட்கள் நகர்கின்றன.

அக்கறையும் அன்பும் அதிகம் தேவைப்படுபவர்களாக இருக்கின்றனர். ஆனால் அவர்களிடம் நீ அப்படி இரு, இப்படி இருக்காதே என தொடர்ந்து சொல்வதால் எரிச்சல் சிடுசிடுப்பு எளிதில் வந்து ஒட்டிக்கொள்கிறது.யாரும் யாருக்கும் அறிவுரை சொல்லத் தேவை இல்லை. தேவைப்படுமெனில் ஆலோசனை போதும். ஏற்பதும் ஏற்காததும் அவர்களின் பிரியம். நாம் பக்குவத்துடன் நடந்து கொண்டு நம்மிடம் பழகுபவர்களும் முதிர்ச்சியுடன் நடந்து கொண்டால் மனம் இறகாகும். நம் உடல் நலத்தைப் போலவே மன நலத்தையும் பார்த்துக் கொள்வது அவசியம்.-தீபா நாகராணிஎழுத்தாளர், மதுரை nraniji@gmail.com

Sunday, March 14, 2021

https://www.dinamani.com/editorial-articles/center-page-

 https://www.dinamani.com/editorial-articles/center-page-

articles/2021/mar/13/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF-3580200.html

Wednesday, December 30, 2020

கரோனா காலத்தில் உலகம் தட்டைதான்!

கரோனா காலத்தில் உலகம் தட்டைதான்!

satheeshkrishnamurthy@gmail.com

வரலாறு காணாத வில்லங்கத்தை விலை கொடுத்து வாங்கிய 2020 ஒரு வழியாக முடியப் போகிறது. காண்டாமிருகம் சைஸிற்கு ஒரு பேண்டமிக் உலகில் உள்ள அனைவரையும் வீட்டில் கிடத்தி ஏற்கனவே மற்றவரிடமிருந்து விலகி நிற்கும் நம்மை மொத்தமாய் பிரித்து வாழ பழக்கியிருக்கிறது.

`இந்த மாதிரி பேண்டமிக்கை புக்குல பார்த்திருப்பீங்க, டீவில பார்த்திருப்பீங்க, ஏன் சினிமால கூட பார்த்திருப்பீங்க. கம்பீரமா உலகம் பூரா நடந்து பார்த்திருக்கீங்களா? அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டு டா. பாக்கறியா பாக்கறியா’ என்று சீனாக்காரன் ஊரெல்லாம் பார்ஸல் செய்து படாதபாடு படுத்திவிட்டான். போதாக் குறைக்கு லடாக் என்னுது என்று குடாக்கு போல் நுழைய அவனை நையப்புடைத்து இல்லாத மூக்கை இழுத்து பிடித்து அறுக்கவேண்டியிருக்கிறது.

2020 வருடத்தின் ஒரே நல்ல காரியம் அது சில நாட்களில் முடியப்போகிறது என்பதுதான். பிறக்கும் வருடத்திலும் கரோனா தீட்டு தொடரும் என்றாலும் புது வருடம், புது துவக்கமாய் இருக்கும் என்று நம்புவோம். பிறக்கபோவதாவது நல்லதாய் இருக்கட்டும் என்ற ஆசையில் ஒவ்வொரு வருடமும் ஹாப்பி நியூ இயர்பாடுகிறோம். பழக்கத்தை மாற்றவேண்டாம். கூடவே இந்த ஆண்டு பட்டுக்கொண்ட படுத்தல்களிலிருந்து பாடம் பயிலலாம். அனுபவித்த சிரமத்திற்கு ஒரு அர்த்தம் இருக்கும்.

எதிர்பாராததை எதிர்பாருங்கள்

இப்படி ஒரு பேண்டமிக் வந்து தொலைக்கும் என்று யாரும் நினைக்கவில்லை. ஆனால் இது போல் எப்பொழுதும் எந்த ரூபத்திலும் பிரச்சினை வரும் என்று எதிர்பார்த்து ``சினாரியோ பிளானிங்’’ செய்து வைத்திருக்கலாம். அட்லீஸ்ட் இனியாவது செய்யலாம். ஒவ்வொரு நாளும் முந்தைய நாள் போலவே இருக்கும் என்றே வாழ பழகிவிட்டோம். அதற்காக சதா சர்வ காலமும் அடுத்த பேண்டமிக் பயத்தில் வாழத் தேவையில்லை. எந்நேரமும் எது வேண்டுமானாலும் நடக்கலாம், அது போன்ற நேரங்களில் என்ன செய்வது, எப்படி செய்வது என்று திட்டம் தீட்டி அதை செயல்படுத்த தேவையானதை தயாராய் வைத்திருப்பது தான் சினாரியோ பிளானிங்.

இதை Plan B என்றும் கூறலாம். கயிறு மேல் நடப்பவன் கீழே விழுந்தாலும் கபாலத்தில் காயம் பட்டு கைலாசம் போகாமலிருக்க கீழே வலை விரித்து நடப்பது போல! எதிர்பாராத நிகழ்வு ஏற்படும் என்று எதிர்பார்த்து தொழில் தடைபடாமல் தொடர்ந்து நடத்த கையில் ரொக்கமாய் கொஞ்சம் பணம் வைத்திருப்பது தொழிலுக்கு நலம் என்பதை 2020 உணர்த்தியது. ``கேஷ் இஸ் கிங்’’ என்பார்கள். தொடர்ந்து நடத்த கையில் காசு இல்லை யென்பதால்தான் தொழில் சரிகிறது. இனியாவது இதற்கொரு வழி செய்யுங்கள். எடுத்தவுடன் லம்பாக ஒரு அமௌண்ட்டை ஒதுக்கி வைப்பது சிரமம் தான்.

பிள்ளையார் சுழி போல் முதலில் ஒரு மாதம் வருவாய் இல்லாவிட்டாலும் பிசினஸ் நடத்தத் தேவையான பணத்தை ஒதுக்கி வையுங்கள். பிறகு மெதுவாக மூன்று மாதம் தொழில் நடத்தத் தேவையான பணம் ஒதுக்குங்கள். அடுத்து ஆறு, ஒன்பது என்று ஒரு வருடம் தொழிலை வருவாய் இன்றி நடத்த ஓவர்ஹெட்ஸ் இன்ஷ்யூரன்ஸ் போல் பணம் சேர்த்து வையுங்கள். கரோனா போல் இன்னொரு வில்லன் வந்தாலும் தருமி போல் புலம்பாமல் தொழிலைத் தொந்தரவில்லாமல் தொடர்ந்து நடத்த முடியும்.

எதிர்பார்ப்பை விட அதிகம் தாருங்கள்

லாக்டவுன் பல தொழில்களை நாக்டவுன் செய்ய, சோஷியல் டிஸ்டன்சிங் பிசினஸை கஸ்டமரிடமிருந்து தள்ளி வைத்துவிட்டது. இத்தனை இருந்தும் சில பிராண்டுகள் மட்டும் அமோகமாய் வளர்ந்து சில கடைகள் மட்டும் சீரும் சிறப்புமாய் செழித்தன. இதற்கு காரணம் அதன் முதலாளிகளுக்கு சுக்கிர திசையோ அவர்கள் ஜாதகத்தில் குரு சரியாய் பெயர்ந்ததாலோ அல்ல.

வாடிக்கையாளர்கள்தான் தொழிலின் ஜாதகத்தை கணிக்கும் கிரகங்கள் என்பதை புரிந்து அவர்களது தேவையை அவர்களுக்குத் தேவைப்பட்டதை விட அதிகம் தந்தவர்கள் சேதாரமின்றி செழித்தார்கள். இன்னமும் செழிப்பார்கள். உங்கள் பொருள் வாடிக்கையாளர் தேவையை மற்றவரை விட பெட்டராய் பூர்த்தி செய்கிறதா? ‘செய்கிறது என்றால் கரோனா என்ன, கலியுக பிரளயமே வந்தாலும் உங்கள் பிராண்டை ஒன்றும் செய்யாது. கரோனா காலத்திலும் கலக்கலாய் கல்லா கட்டிய அத்தனை பிராண்டுகளும் இதற்கு சாட்சி.

வாடிக்கையாளரை வெறுமனே திருப்தி செய்து ஜெயிப்பது 2020ஆம் ஆண்டோடு முடிவடைந்தது. மார்க்கெட்டிங் அதையும் தாண்டி புனிதமானது. ‘வாடிக்கையாளர் டிலைட்’ தான் புதிய மார்க்கெட்டிங் சமச்சீர் கல்விமுறை. அதற்கு என்ன செய்வது, தொழிலில் என்ன மாற்றங்கள் தேவை என்பதை உங்கள் மார்க்கெட்டிங் டீமுடன் சேர்ந்து பேசுங்கள். மார்க்கெட்டிங்கை மாற்றான் தாய் போல் பார்க்கும் தொழில் இனி வழுக்கி விழுந்து வழக்கொழிந்து போகும். அதைச் செய்ய கரோனா தேவையில்லை. காக்கா குருவி போதும்!

எங்கிருந்தும் வேலை செய்யுங்கள்

கரோனா கைங்கர்யத்தில் கண்ட இடமெல்லாம் நம் ஆபீஸ் ரூமாய் மாறின. டைனிங் டேபிள் ஆபீஸ் டேபிள் ஆனதென்றால் மொட்டை மாடி மீட்டிங் ரூம் ஆனது. இருந்தும் பெரியதாக உங்கள் பணி தடைப்படவில்லை என்பதை கவனித்தீர்களா. ``வொர்க் ஃபிரம் ஹோம்’’- தான் புதிய நார்மல் என்பதை உணருங்கள். உங்களுக்கு மட்டுமல்ல, உங்கள் ஊழியர்கள் பலருக்கும் அது பொருந்தும்படி தொழிலில் மாற்றங்கள் செய்யுங்கள். ‘பெரிய நிறுவனங்களே தங்கள் சொந்த பில்டிங்கை வாடகைக்கு விட்டு ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய வைத்திருக்கிறது.

ஆபிசிலேயே சரியாய் வேலை செய்யமாட்டார்கள், இந்த லட்சணத்தில் வீட்டிலிருந்து என்னத்தை கிழிப்பார்கள் என்று வியாக்கியானம் பேசாதீர்கள். எல்லா பணிகளையும் வீட்டிலிருந்து செய்ய முடியாதுதான். முடிந்தவரை தொழிலின் வொர்க் ஃபுளோவை வொர்க் ஃபிரம் ஹோமிற்கு ஏற்றபடி வடிவமையுங்கள். மாற மறுப்பவர்களை சானிடைசர் போட்டு சப்ஜாடாய் கழுவி அதுவும் போறாதென்றால் சீட்டை கிழித்து அனுப்புங்க.

எல்லாவற்றையும் டிஜிடலாக்குங்கள்

பிளாக் அண்ட் ஒயிட் டீவியை கலர் டீவி வந்த மாத்திரம் மாற்றி, பின் எல்இடி, எல்சிடி என்று தாவி, அதை விட பெட்டர் என்று பிளாஸ்மா டீவிக்கு எகிறி இன்று ஸ்மார்ட் டீவி, ஹோம் தியேட்டர் வாங்கியிருக்கிறார்கள். ஷேமம். இத்தனை செய்தவர்களுக்கு தங்கள் தொழிலையும் டிஜிட்டலாக்கவேண்டும் என்று தோன்றவில்லை. இன்னமும் அனலாகை கட்டிக்கொண்டு அழுகிறார்கள். லெட்ஜர், பேப்பர், பிரிண்ட் அவுட் என்று ப்ளாக் அண்ட் ஒயிட்டில் தொழில் செய்பவர்கள் கரோனா இல்லாமலே காணாமல் போவர்.

ஆன்லைன் கம்பெனிகளும் பெரிய நிறுவனங்களும் தங்கள் தொழிலை டிஜிடலாக்கி அது தரும் எபிஷியன்சி மூலம் வாடிக்கையாளருக்கு குறைந்த விலையில் நிறைந்த சேவை தருகிறார்கள். அவர்களுக்கு டிஜிட்டல் தொழில் நுட்பத்தை பயன்படுத்தாத தொழில்கள் சிட்டிங் டக்ஸ். சௌகரியாய் சுட்டு தள்ள முடிகிறது. 2021ல் உங்கள் தொழிலை அஜைலாக்குங்கள். செல்போன் மூலம் தொழிலின் சகலத்தையும் கட்டுப்படுத்தும் ‘ஆர்டர் ஈசி’, ‘கோ டெலிவர்’ போன்ற மொபைல் அப்ளிகேஷன்ஸ் இருந்தும் அதை பயன்படுத்தாத தொழில்களை எந்த வேக்சீனும் காப்பாற்றாது.

எவரும் ஊரே யாவரும் கேளிர்

நமக்குப் பிடிக்கிறதோ இல்லையோ உலகமும் உலக மக்களும் எந்த அளவு பின்னி பிணைந்திருக்கிறோம் என்பதை கரோனா மீண்டும் ஒரு முறை படம் வரைந்து பாகங்களைக் குறிப்பிட்டு காட்டியிருக்கிறது. ‘உலகம் உருண்டையல்ல, தட்டை’ என்று ‘தாமஸ் ஃப்ரீட்மென்’ கூறியது உண்மை என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஏற்பட்ட ஸ்பேஷிஷ் பிளேக் முதல் உலகப் போர்கள் வரை, இண்டர்நெட் தாக்கம் முதல் கரோனா பிராப்ளம் வரை உலகின் ஒரு மூளையில் நடப்பது மறுமுனை வரை பரவும் என்பது பட்டவர்தனமாகியிருக்கிறது.

அமெரிக்க காலில் அடிபட்டால் ஆசிய கழுத்தில் நெரி கட்டுகிறது. ஐரோப்பாவை அடித்தால் ஆஸ்திரேலியா அழுகிறது. உலகம் சைக்கிள் ஸ்டாண்ட் போல் ஆகிவிட்டது. ஒரு சைக்கிளை தள்ளினால் கடைசி சைக்கிள் வரை விழுகிறது. ஆத்மநிர்பார் அவசியம்தான். அதற்காக உலகமயமாகியிருக்கும் வர்த்தகத்தை ஒதுக்குவது சிரமம் என்பதை உணர்வது உசிதம். அது சரி, ’யாதும் ஊரே’ என்று தானே சொல்வார்கள், நீ ஏன் ’எவரும் ஊரே’ என்கிறாய் என்று நெற்றிக்கண் திறப்பவர்களுக்கு. ’எ’ என்று துவங்கும் வார்த்தைகளாக பத்தி பிரித்து எழுதி வந்ததால் அதே ஃபுளோவை மெயிண்டெயின் செய்தேன். அது உங்கள் கண்ணை உறுத்துகிறதாக்கும். 2021ல் இருந்தாவது இது போல் என் எழுத்தில் குற்றம் கண்டுபிடிப்பதை நிறுத்துங்கள்! விடியல் இல்லாத இரவில்லை.

விடியும் என்ற நம்பிக்கையும் தொழில் விரியும் என்ற கனவும் இருந்தால் எத்தகைய இருளும் அகலும். பட்டுக்கொண்டதிலிருந்து பாடமும் சுட்டுக்
கொண்டதிலிருந்து படிப்பினையும் பெற்று 2021ல் தொழில் புரியுங்கள். செய்த தவறை திருத்திக்கொள்ளாதவன் அதே தவறை மீண்டும் செய்ய விதிக்கப்படுவான் என்றார் ஸ்பானிஷ் அறிஞர் ’ஜார்ஜ் சண்டாயனா’. அசுர வேகத்தில் காலம் கடக்கிறது. வருங்காலம் நம்மை தாண்டி போய் வெகு காலம் ஆகிவிட்டது. சரியாய் படிக்காமல் சென்று எழுதும் பரிட்சை போல் உங்கள் தொழில் ஆகாமல் இருப்பது இனி உங்கள் கையில்தான் இருக்கிறது. புதிய வருடத்தில் பழைய தவறுகளைக் களைந்து புதிய வாழ்க்கையும் புத்தொளி வீசும் வியாபாரமும் பிறக்க பிள்ளையார் சுழி போட்டு 2021-ஐ வரவேற்போம்.

ஹாப்பி நியூ இயர்!


Saturday, December 26, 2020

விடைபெறும் 2020: விநோதங்களின் ஆண்டு!

விடைபெறும் 2020: விநோதங்களின் ஆண்டு!

2020-ம் ஆண்டு தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு விநோதமான ஆண்டாகவே பதிவாகும். கரோனாப் பெருந்தோற்று உலக மக்களின் வாழ்க்கையைச் சீர்குலைத்த அதே வேளையில், திரையுலகத்தின் வரலாற்றையும் திருத்தி எழுதியுள்ளது.

வழக்கத்தை குலைத்துப்போட்ட இந்த ஆண்டில் திரையரங்குகளில் வெளியான படங்கள், ஓ.டி.டி. தளங்களில் வெளியான படங்கள் என 2020-ம் ஆண்டை இரண்டாகப் பிரிக்கலாம். அதன்வழியாக வந்த படங்களின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை அலசலாம்.

ஆண்டுக்கு சுமார் 200 தமிழ்ப் படங்கள் திரையரங்குகளில் வெளியாவது வழக்கம். ஆனால், எந்தக் காலகட்டத்திலும் இல்லாத அளவுக்கு சுமார் 8 மாதங்களாகத் திரையரங்குகள் மூடியே கிடந்தன. அதனால் இந்த ஆண்டில் திரையரங்குகளில் எழுபத்தி சொச்சம் படங்களே வெளியாகின.

மேஜிக் நிகழ்த்தாத ரஜினி, தனுஷ்

திரையரங்குகளில் வெளியான படங்களில் பொங்கல் பண்டிகையில் ‘தர்பார்’,‘பட்டாஸ்’ படங்கள் குறிப்பிடத்தக்கவை. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘தர்பார்’ போதிய வரவேற்பைப் பெறாமல் வசூல்ரீதியில் தோல்வியைச் சந்தித்தது. ரஜினி என்ற உச்ச நடிகர் இருந்தும், திரைக்கதையின் சரிவு படத்துக்குப் பாதகமாக அமைந்தது.

பரிசோதனை முயற்சிப் படங்கள், வணிக ரீதியான படங்கள் என இரண்டையும் கலந்துகட்டி கொடுப்பதையே தனுஷ் தன் பாணியாக வைத்துள்ளார். துரை.செந்தில்குமார் இயக்கத்தில் இரட்டை வேடங்களில் தனுஷ் நடித்த இரண்டாவது படம் ‘பட்டாஸ்’. ஆனால், இரட்டை வேடங்களில் தனுஷ் இன்னும் நிறைவான படத்தைக் கொடுக்கவில்லை. அடிமுறைக் கலை என்ற தமிழர்களின் தற்காப்புக் கலை என்கிற அம்சம் மட்டும் ரசிகர்களை ஈர்த்தது. இப்படம் போட்ட முதலீட்டை மட்டுமே எடுத்தது.

வரவேற்பு பெற்ற, பெறாத படங்கள்

‘டகால்டி', ‘நாடோடிகள் 2’, ‘சீறு, ‘வானம் கொட்டட்டும்', ‘மாஃபியா அத்தியாயம்-1’ ஆகிய படங்களும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றத் தவறிவிட்டன. ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படம் எதிர்பாராத வெற்றியைப் பெற்றது. திரையரங்குகள் திறப்புக்குப் பின்பும் இப்படம் மறு ரிலீஸ் செய்யப்பட்டது. ஓ.டி.டி. தளத்திலும் வெளியானது. குறைந்த முதலீட்டில் எடுக்கப்பட்ட ‘திரெளபதி', ‘ஓ மை கடவுளே', ‘தாராள பிரபு’ ஆகிய படங்கள் ஓரளவுக்கு லாபம் பெற்றன. ‘சைக்கோ', ‘நான் சிரித்தால்’ஆகிய படங்கள் போட்ட முதலீட்டை எடுத்தன.

‘தாராள பிரபு’, ‘வால்டர்’ படங்கள் ரிலீஸான மார்ச் 13-ம் தேதியுடன் திரையரங்குகள் கரோனா பீதியில் மூடுவிழா கண்டன. இந்நிலையில் பெரும்பாலான படங்கள் ஓ.டி.டி. தளங்களில் வெளியாகி ரசிகர்களின் திரைப்படப் பசிக்கு தீனி போட்டன.

ஓ.டி.டி. - மாற்றுத் திரை அனுபவம்

'ஓவர் தி டாப்' எனப்படும் ஓ.டி.டி. தளங்கள் கரோனா ஊரடங்கில் பெரும்பாலான மக்களின் விருப்பத்துக்குரிய தளங்களாக மாறின. நெட்ஃபிளிக்ஸ், அமேசான், ஜீ5, டிஸ்னி ஹாட் ஸ்டார், சினி பிளக்ஸ், மூவி இன் உள்ளிட்ட ஓ.டி.டி. தளங்களில் ‘பொன்மகள் வந்தாள்’, ‘பெண்குயின்’, ‘லாக்கப்’,‘க/பெ. ரணசிங்கம்’ (ஜீ ப்ளக்ஸ் டி.டி.எச்.சில் வெளியாகி பின் ஜீ5 ஓ.டி.டி.யில் வெளியானது), ‘சூரரைப் போற்று’, ‘மூக்குத்தி அம்மன்’, ‘நுங்கம்பாக்கம்', 'பச்சை விளக்கு’ ‘சைலன்ஸ்’, ‘வர்மா’, ‘அந்தகாரம்’ உள்ளிட்ட சுமார் 25 படங்கள் வெளியாயின.

ஓ.டி.டி. தளங்களின் மூலம் மாற்றுத் திரை அனுபவம் திரையரங்குக்கான மனநிலையைக் கொடுக்கவில்லை. ஆனாலும், ஓ.டி.டி. தளங்களைப் புறக்கணிக்க முடியவில்லை. முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் வெளியானதும் அதற்கான முக்கியமான காரணம்.

ஊரடங்கு முடிந்து, மீண்டும் திரையரங்குகள் திறக்கப்பட்டபோது சந்தானத்தின் ‘பிஸ்கோத்’, ‘தட்றோம் தூக்குறோம்’, ‘மரிஜூவானா’, ‘இரண்டாம் குத்து’ உள்ளிட்ட 4 படங்கள் திரையரங்கில் வெளியாகின. அவை ரசிகர்களிடம்

எந்த வரவேற்பையும் பெறவில்லை. அதே வேளையில் ஓ.டி.டி. தளங்களில் வெளியான ‘சூரரைப் போற்று’, ‘மூக்குத்தி அம்மன்’ படங்கள் பண்டிகை காலக் கொண்டாட்ட அனுபவத்தைக் கொடுத்தன.

சமரசம் செய்யாத சூர்யா

தயாரிப்பாளர்கள், சில இயக்குநர்களே ஓ.டி.டி.க்கு எதிராகக் கருத்து தெரிவித்த நிலையில், அதைத் தாண்டி ஓ.டி.டி.யில் ‘சூரரைப் போற்று’ படத்தை வெளியிட்ட சூர்யாவின் துணிச்சல் முயற்சிக்குத் தகுந்த பலன் கிடைத்தது. சிரிக்காத, சண்டைக்காட்சிகளில் துவம்சம் செய்யாத, தன் ரசிகர்களுக்காக எந்த சமரசத்தையும் செய்யாத சூர்யாவின் நடிப்பும் சிலாகிக்கப்பட்டது.

நயன்தாரா, ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் வெளியான ‘மூக்குத்தி அம்மன்’ படமும் பரவலான பாராட்டைப் பெற்றது. கடவுளின் பெயரில் கார்ப்பரேட் சாமியார் செய்யும் மோசடிகளையும் ஆசிரம அரசியலையும் துணிச்சலுடன் பகடிசெய்தது.

பெண் மையப் படங்கள்

பெண்களின் உலகில் எவ்வளவோ கதைகள் இருக்கின்றன. அவற்றை ஒவ்வொன்றாகக் காட்சிப்படுத்தும் வரம் தமிழ் சினிமாவுக்குக் கிடைத்திருக்கிறது. இந்த ஆண்டு நாயகிகளை முதன்மைக் கதாபாத்திரமாகக் கொண்ட அதிகத் திரைப்படங்கள் ஓ.டி.டி. தளங்களில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. சிறு பட்ஜெட் படங்கள், நாயகிகளை மையமாகக் கொண்ட படங்களுக்குத் திரையரங்குகளில் போதிய முக்கியத்துவம் கொடுக்கப்படாத சூழல் நிலவும்போது, ஓ.டி.டி. அதற்கான வாசல்களைத் திறந்துவைத்துள்ளது பாராட்டுக்குரியது.

‘நடிகையர் திலகம்’ படத்துக்குப் பிறகு கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ‘பெண்குயின்’, ‘மிஸ் இந்தியா’ (தெலுங்கு) படங்கள் நாயகி மையப் படங்களாக வெளியாயின. இவ்விரு படங்களும் கீர்த்தியின் நடிப்புக்கான களத்தைச் சரியாக வழங்கவில்லை என்றாலும், அவர் தொடர்ந்து முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை நல்கியுள்ளன.

அலட்டல், ஆர்ப்பாட்டம் இல்லாத அழகான அம்மனாக, அளவான நடிப்பில் நயன்தாரா ‘மூக்குத்தி அம்மன்’ படத்தில் ஈர்த்தார். சாகசங்கள் நிறைந்த கடவுளாக இல்லாமல், சிறுதெய்வத்தின் பிரதிநிதியாக தன்னை அவர் முன்னிறுத்திக்கொண்டது ரசிக்கும்படி இருந்தது.

ஜோதிகா ‘பொன்மகள் வந்தாள்’ படத்திலும், வரலட்சுமி சரத்குமார் ‘டேனி’ படத்திலும் தங்களின் திறமையைக் காட்டினர். ஐஸ்வர்யா ராஜேஷ் ‘கனா’ படத்துக்குப் பிறகு நாயகியை மையமாகக் கொண்ட ‘க/பெ. ரணசிங்கம்’ படத்தில் அரியநாச்சி எனும் மனஉறுதி கொண்ட பெண்ணாக வாழ்ந்து காட்டினார். ஐஸ்வர்யா ராஜேஷ், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் வணிக சினிமா, பெண் மைய சினிமா ஆகிய இரண்டு வகையிலும் மாறிமாறி நடிப்பது தமிழ் சினிமாவின் புதிய போக்குகளில் ஒன்றாக மாறியிருக்கிறது. குழந்தைகளை மையமாகக் கொண்ட படங்களுக்கு மட்டும் இன்னமும் போதாமை நிலவுகிறது.

திரையரங்குகளா? இணையத் திரையா?

பண்டிகை என்றாலே சினிமா பார்ப்பது என்கிற வழக்கம் நம் பண்பாட்டுக் கூறில் அடங்கியுள்ளது. ஆரவாரம், கொண்டாட்டம், நண்பர்கள், உறவினர்களுடன் கூடித் திரையரங்கில் ஒரு படத்தை ரசிப்பது, தனக்குப் பிடித்த நடிகரைக் கொண்டாடுவது ஆகியன வெகுஜன ரசிகர்களுக்கு அலாதி அனுபவம் தருபவை. இந்நிலையை ஓ.டி.டி. தளங்கள் மாற்றிவிட்டன. வீட்டில் பிடித்தபடி உட்கார்ந்துகொண்டே, சாய்ந்துகொண்டே, படுத்துக்கொண்டே படம் பார்க்கலாம், விரும்பிய காட்சியை முன் பின் நகர்த்திப் பார்க்கலாம் என்கிற வசதியைக் கொடுத்துவிட்டன. அதேவேளை இந்தத் தளங்கள் திரையரங்குகளுக்கு மூடுவிழா நடத்தப்போவதில்லை என்பதையும் வெளிப்படையாக உணர்த்தின. ரசிகர்களின் ரசனைக்கான, கொண்டாட்டத்துக்கான ஆகச்சிறந்த இடம் திரையரங்குகள் என்பதையும் நிறுவின.

2,000 கோடி நஷ்டம்

முன்னணி நடிகர்கள் நடித்த படங்களின் தோல்வி, திரைப்படங்களுக்கான முதலீடு, வட்டி அதிகரிப்பு, வெளியிட முடியாத சூழலில் பெட்டிக்குள் முடங்கிய படங்கள், படப்பிடிப்பு முழுமையடையாத படங்கள், இறுதிக்கட்டப் பணிகளை முடிக்காமல் சுணங்கிய படங்கள், திரையரங்குகள் மூடல் போன்ற காரணங்கள் விநியோகஸ்தர்கள், பைனான்சியர்கள், திரையரங்க உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், தொழிலாளர்கள் என அனைவரையும் பதம் பார்த்தது.

சினிமாவை மட்டுமே தொழிலாகக் கொண்ட சுமார் 50 ஆயிரம் தொழிலாளர்கள் வாழ்க்கையை நடத்த முடியாத அளவுக்குப் பெரும் பொருளாதார நெருக்கடியில் தத்தளித்தனர். தமிழ்ப் புத்தாண்டு, கோடை விடுமுறை, விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை என எந்தத் திருநாளும் இல்லாத வீடடங்கு நாள்களாக கரோனா ஊரடங்கு அவர்களுக்குக் கழிந்தது.

தீபாவளியை முன்னிட்டு 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்ற நிபந்தனையுடன் நவம்பர் 10-ம் தேதி 997 திரையரங்குகள் தமிழகத்தில் திறக்கப்பட்டாலும் முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகவில்லை. திரையரங்குகளுக்கு வரவே மக்கள் அச்சப்பட்டனர். பராமரிப்புச் செலவைக்கூட ஈடுகட்ட முடியாமல் திரையரங்குகள் திண்டாடின.

கரோனா காலத்தில் தமிழ்த் திரையுலகுக்கு ரூ.2,000 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக 'பெப்சி' தலைவர் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார். சினிமாவையே சுவாசமாகக் கொண்ட தமிழ்நாட்டில் 300 ‘சிங்கிள் ஸ்கிரீன்’ திரையரங்குகள் போதிய வருவாய் இல்லாத காரணத்தால் நிரந்தரமாக மூடப்பட்டது பெரும் துயரம்.

சாதி அரசியலும் ஆணவக் கொலையும்

தமிழ் சினிமாவில் பிரிக்க முடியாதது எது என்று கேட்டால் காதலும் சாதியும் என்று சொல்லலாம். சாதிப் பெருமை பேசும் படங்கள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. இந்த ஆண்டு ‘திரௌபதி’ படம் வெளியானது. கருத்தியல் ரீதியாக நிறைய சர்ச்சைகளைச் சந்தித்தது. ஆனாலும், படம் வசூலில் வெற்றி பெற்றது. சமூகநீதிக்கான மண் என்று போற்றப்படும் தமிழகத்தில் இதுபோன்ற படங்கள் அச்சுறுத்தலாக மாறிவிடுமோ என்ற கவலையை அதிகரிக்கச் செய்கிறது.

நடிகர் போஸ் வெங்கட் இயக்கிய ‘கன்னி மாடம்’ திரைப்படம் நல்ல முயற்சி. அப்பட்டமான சாதித் திமிரை, சாதி வெறியை, ரணத்துடன், ஆணவக் கொலையின் கோரப் பின்னணியுடன் காட்சிப்படுத்திய விதம் கனமானது. முதல் படத்திலேயே தேர்ந்த இயக்குநருக்கான தடத்தை போஸ் வெங்கட் பதித்துவிட்டார்.

ஆந்தாலஜி படமாக ‘பாவக் கதைகள்’ வெளியானது. வெற்றிமாறன், கௌதம் மேனன், சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன் ஆகிய நால்வர் இயக்கிய இந்த நான்கு குறும்படங்களில் கௌதம் மேனனின் ‘வான்மகள்’ மட்டும் சிறுமி மீதான பாலியல் வன்முறை குறித்துப் பேசுகிறது. மற்ற மூன்று படங்களின் அடிநாதம் சுயசாதியின் பெருமையைக் கட்டிக் காக்க, சொந்த வாரிசுகளையே பலி வாங்கும் தகப்பன்கள் குறித்ததுதான்.

ஆனால், அந்த ஆணவக் கொலையைச் செய்யும் அவர்களின் பின்னணி எந்த குறுக்கு விசாரணையுடனும் பதிவு செய்யப்படவில்லை. அவர்கள் குற்றஉணர்வு

அடைந்தாலும், தங்கள் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்கிறவர்களாகவே இருக்கிறார்கள். மிக நேர்மையாகச் சொல்ல வேண்டுமென்றால் ஆணவக் கொலை செய்பவர்களின் தரப்பைக் கேள்விக்குள்ளாகமல், நியாயப்படுத்துவதாகவே படங்கள் அமைந்துள்ளன. கொலை செய்யப்பட்டவர்களின் மீதும், அவர்களுடைய இழப்பால் பாதிக்கப்படுவர்கள் மீதும் எந்த பிம்பத்தையும் கட்டமைக்கவில்லை. இது பெருங்குறை. பார்வையாளர்கள் இவற்றைத் தவறாக உள்வாங்கிக்கொண்டால் என்ன ஆகும் என்று நினைக்கும்போதுதான் வேதனை நீள்கிறது.

துரத்தும் தணிக்கை

ஆபாச வசனங்கள், பாலியல் காட்சிகள், அதீத வன்முறைக் காட்சிகள், குழந்தைகள், பெண்களை இழிவுபடுத்தும் காட்சிகள் ஆகியவற்றை நீக்கவும், கட்டுப்படுத்தவும் தணிக்கை அவசியம் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், அரசியல்ரீதியான காரணங்களுக்காகவும், அதிகார அரசியலை விமர்சனத்துக்கு உட்படுத்தியற்காகவும் தணிக்கை மறுக்கப்படுவதில் நியாயமில்லை. அந்த வரிசையில் ராஜுமுருகனின் ‘ஜிப்ஸி’ திரைப்படம் தணிக்கையால் குதறப்பட்டது.

ஓ.டி.டி. தளத்திலோ பாபு யோகேஸ்வரனின் ‘காட்மேன்’ தொடர் வெளியாகும் முன்பே அதிகார வர்க்கத்தால் தடுக்கப்பட்டது. “ஓ.டி.டி.க்குத் தணிக்கை கொண்டுவந்தால், ஜனநாயகத்தில் மிச்சமிருக்கும் கடைசிக் குரலையும் நசுக்கும் முயற்சியாகவே அது இருக்கும்” என்று இயக்குநர் வெற்றிமாறன் கூறியிருப்பதும் கவனிக்கத்தக்கது.

புதியவர்களுக்கு வாய்ப்பில்லை!

ஓ.டி.டி. தளம் பிரபல இயக்குநர்கள் பயன்படுத்திக்கொள்ளும் இன்னொரு தளமாகவே உள்ளது. சிறு பட்ஜெட் படங்களுக்கான, குறும்பட இயக்குநர்களுக்கான வெளிச்சக் கீற்றை இன்னும் ஓ.டி.டி. தளங்கள் உறுதி செய்யவில்லை. தமிழகத்தில் குறும்படங்கள் கடந்த கால் நூற்றாண்டு வரலாற்றையும் வளர்ச்சியையும் கொண்டுள்ளன. தமிழ் சினிமாவில் சொல்லப்படாத ஏராளமான கதைகள் குறும்படங்களாக எடுக்கப்பட்டுள்ளன.

அவற்றில் சிறந்த படங்கள் தொகுக்கப்பட்டு, ஒழுங்கமைக்கப்பட்டு இன்னும் ஓ.டி.டி. தளங்களில் வெளியாகாதது இந்தத் தளங்கள் யாருக்கானவை என்ற கேள்வியைக் காத்திரமாக எழுப்புகின்றன. ஏற்கெனவே தங்களை நிரூபித்த, வெற்றிபெற்ற படைப்பாளிகளிடமே ஓ.டி.டி. தளங்கள் சரணாகதி அடைவது, ஓ.டி.டி.யும் சிந்தனை, படைப்பு வறட்சிக்கான ஒரு களமாக மாறிவிடக் காரணமாக அமையலாம்.

தொடர்புக்கு: nagappan.k@hindutamil.co.in

Friday, December 4, 2020

நலம் நலமறிய ஆவல்: டிச.7 தேசிய கடிதம் எழுதல் தினம்

நலம் நலமறிய ஆவல்: டிச.7 தேசிய கடிதம் எழுதல் தினம்

Added : டிச 03, 2020 23:48

கடிதம். எத்தனை மனிதர்களை உணர்வுபூர்வமாக கட்டிப்போட்ட சொல் இது. கடிதத்தை மட்டுமல்ல கடிதத்தை கொண்டு வரும் தபால்காரரையும் கொண்டாடிய சமூகம் நம்முடையது. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7 தேசிய கடிதம் எழுதும் தினமாக கொண்டாடப்படுகிறது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த புகழ் பெற்ற புகைப்படக் கலைஞர் ரிச்சர்டு சிம்ப்கின் என்பவர் கையால் கடிதம் எழுதுவதை விரும்பி காதலித்தார். அவர் மூலம் தான் கடித தினம் உலகிற்கு அறிமுகப்படுத்தப் பட்டது.பழங்காலத்தில் பனை ஓலைகளில் எழுதி பின்பு காகிதத்துக்கு மாறிப்போனோம். தற்போது காகிதத்துக்கும் தேவையின்றி மின்னணு பரிமாற்றங்களிலேயே பெரும்பாலான தகவல்கள் கடத்தப்படுகிறது.

தனிக்கலை

கடிதம். எழுதுவதென்பது தனிக்கலை. கடிதம் எழுதுகையில் ஒவ்வொருவருக்கும் ஒரு எழுத்தாளரான மிடுக்கு வரும். நலம் நலமறிய ஆவல் என்ற ஒரு வாக்கியம் சம்பிரதாயமாக இருந்தாலும் அது ஏற்படுத்திய நலம் சார்ந்த விருப்பம் சிறப்பானதாகவே இருந்திருக்கிறது.இன்றைய தகவல்தொழில் நுட்பத்தின் அசுர வளர்ச்சியில் நினைத்த மாத்திரத்தில் தகவல்களை பகிர்ந்து கொள்கிறோம். இந்த நலம் குறித்த விசாரிப்புகள் கடிதம் வழி ஏற்படுத்திய தாக்கம் என்பது அதிகம். மின்னஞ்சல், முகநுால், போன்ற எண்ணற்ற வசதிகள் வந்த பின்னும், கால் நுாற்றாண்டு முன்பு வரை இந்த உலகம் அறிந்த தகவல் பரிமாற்ற வழி கடிதம் மட்டுமே.

இன்றைய தேதியில் நமக்கு கடிதம் வந்திருக்கிறது என்றால் நம் புருவங்கள் உயரக்கூடும். அப்படி ஒருவர் நமக்காக கடிதம் எழுதும் பட்சத்தில் அது ஒரு பொக்கிஷமான பரிசாக கொண்டாடப்பட வேண்டும்.ஒவ்வொரு காகிதமும் சிவப்பு வண்ண பெட்டியின் கர்ப்பத்தில் சுவாசித்து, தபால்காரரிடம் தொப்புள் கொடி அறுபட்டு, காணக் கிழிப்பவரின் உதட்டோர புன்னகையில் உயிர் பெறுகிறது கடிதமாய். நலம் விளம்பி, நலமறிய அவா கிளப்பி, கசிந்துருக்கி, கண்ணீர் பெருக்கி, காதல் போர்த்தி, வாழ்த்து ஏந்தி, வருகை பதிந்து, சமயத்தில் வன்மம் தோய்ந்து, நிச்சயம் தெரிவித்து, நிர்கதிநிலை அறிவித்து என எத்தனை அவதாரம் எடுத்து நம்மையெல்லாம் நெகிழ்ச்சிபடுத்தியுள்ளன கடிதங்கள்! கைப்பக்குவம் கணக்காய் கடித பக்குவமும் வாய்த்திருந்தது பலருக்கு.

எத்தனை வசதிகள்

கடிதத்தில் தான் எத்தனை வசதிகள். உச்சி முகரலாம். நெஞ்சோடு அணைக்கலாம் இதழ் பதிக்கலாம், வர்ணனை ரசிக்கலாம், கையெழுத்தைப் பார்த்து மனம் குளிரலாம், எழுதியவரின் வாசனை முகரலாம்.கோபம் வரின் கையோடு கடிதத்தை கசக்கலாம். இன்றைய குறுந்தகவல்களின் பரிமாற்றம் எல்லாம் எழுத முனைந்த மெனக்கெடலுக்கு முன் ஈடாகவே ஆகாது. காலாவதியான மாத்திரைகளை விசிறி எறிவதாய் கடிதத்தையும் வழியனுப்பிவிட்டது காலம். நமக்கு வந்த கடிதத்தை படிப்பது என்றாலே மூளைக்குள் ஒரு கிறுகிறுப்பு தோன்றும். நம் உள்ளுணர்வை உயிர்ப்பித்து மாய நதிகளை மனதுக்குள் கிளைபரப்பி பாய விட்ட அற்புத தருணங்களை நமக்கு வசமாக்கித் தந்திருக்கிறது கடிதங்கள். ஒரு காலத்தில் ஒவ்வொரு இல்லத்திலும் வளைக்கப்பட்ட 'Z' வடிவ கோர்வைகளில் கடிதங்கள் எல்லாம் தொங்கிக் கொண்டிருக்கும். அன்புள்ள மகளுக்கு அம்மா ஆசிர்வாதத்துடன் எழுதுவது என்ற துவக்க வரிகள் எத்தனை முறை கண்களில் ஆனந்தக்கண்ணீரை வரவழைத்துள்ளது. பாராட்டுக் கடிதங்கள், நட்புக் கடிதங்கள், காதல் கடிதங்கள், அலுவலகக் கடிதங்கள், பரிந்துரைக் கடிதங்கள், அரசியல் கடிதங்கள், உணர்ச்சிக் கடிதங்கள், வேண்டுகோள் கடிதங்கள், இலக்கியக் கடிதங்கள், வணிகக் கடிதங்கள் என எத்தனை வகைப்பாடுகளில் கருத்துக்களை சுமந்து பயணித்திருக்கிறது.

சித்திரங்கள் வழியே

சித்திரங்கள் வழி கடிதங்கள் வரைவது ஒரு மேம்பட்ட கலை. பறவை, விளக்கு, நினைவுச்சின்னம், விலங்குகள் போன்றவற்றை வரைந்து அதன் உள்ளே வரிகளை அழகாக நேர்த்தியுடன் வடிவமைத்து எழுதுவதே சித்திரகடிதங்கள். அவற்றை படிப்பதோடு கண்டு ரசிக்கவும் செய்யலாம். பார்த்தவுடன் மனதை கொள்ளை கொள்ளும் இந்த சித்திரக்கடிதங்கள் எழுதுவோரை தற்போது விரல்விட்டு எண்ணிவிடலாம்.. புகார், வாழ்த்து, கோரிக்கை என கருப்பொருளை வரைந்து எழுத்துகளால் கடிதம் எழுதி கவனம் ஈர்ப்போரும் உண்டு பல தலைவர்கள் வெவ்வேறு காலகட்டங்களில் எழுதிய கடிதங்கள் இன்று வரலாறு. நேரு சிறைவாசத்தின் போது மகள் இந்திரா பிரியதர்ஷினிக்கு எழுதிய கடிதங்கள் புகழ் பெற்றவை. பாரதியின் கடிதங்களில் மொழிப்பற்றும் புரட்சிகர சிந்தனைகளும் காணக்கிடைக்கின்றன. மு.வ.,அன்னைக்கு, தம்பிக்கு, தங்கைக்கு, நண்பர்க்கு எனும் தலைப்பில் எழுதிய அனைத்தும் கடித இலக்கியம்.

புரட்சிக்கு காரணம்

வரலாற்றில் முக்கிய நிகழ்வுகளுக்கும் சில புரட்சிகளுக்கும் காரணமாக சில கடிதங்கள் இருந்திருக்கின்றன. 1939 ஆகஸ்ட் 2ல் அமெரிக்க ஜனாதிபதி பிராங்க்ளின் ரூஸ்வெல்ட்டிற்கு ஐன்ஸ்டீன் அனுப்பிய கடிதத்தில் ஜெர்மனியின் நாசி படையினர் அணு ஆயுதங்களை போரில் உபயோகிக்க போகின்றனர். ஓர் சிறிய படகில் ஏற்றி வந்து நமது துறைமுகத்தில் வெடிக்க செய்தால் கூட ஒட்டுமொத்த துறைமுகமும் சின்னாபின்னமாகிவிடும். எனவே, நீங்கள் முந்திக்கொண்டு செயல்பட வேண்டியது அவசியம் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த கடிதத்தின் மூலமாக அமெரிக்கா நாசி படையினருக்கு முன்பே அணுகுண்டுகளை கையாள முனைந்தது.1960ல் கிரேஸ் டேபெல் எனும் 11 வயது சிறுமி அமெரிக்க ஜனாதி பதியான ஆபிரகாம் லிங்கனுக்கு கடிதம் எழுதினாள். அதில் 'பெண்களுக்கு தாடி வைத்திருப்பவர்களை பிடிக்கும். உங்கள் முகம் தாடி இருப்பதால் தான் நன்றாக இருக்கிறது.

இதனாலேயே பெண்கள் அவர்கள் கணவர்களையும் உங்களுக்கு ஓட்டு போட கட்டாயப்படுத்தினர். இதனால் தான் உங்களால் ஜனாதிபதியாக முடிந்தது' என்று குறும்பாக எழுதியிருந்தார். இதன் காரணமாக நிரந்தரமாக தாடி வைத்துக் கொண்டார் லிங்கன்.இந்திய விடுதலைக்காக காந்தி எழுதிய கடிதம், மூன்றாம் கிங் ஹென்றியின் புரட்சிகரமான காதல் கடிதம், முதலாம் உலகப்போரில் அமெரிக்காவை இணைத்த கடிதம் என காலத்தால் அழிக்க முடியாத நினைவுச் சின்னமாக கடிதங்கள் திகழ்கிறது. நீங்களும் உங்கள் இணைக்கோ, உடன்பிறப்புக்கோ, உறவுகளுக்கோ, நண்பர்களுக்கோ ஒருமுறை கடிதம் எழுதித்தான் பாருங்களேன்.-பவித்ரா நந்தகுமார், எழுத்தாளர் ஆரணி. 94430 06882

Sunday, April 19, 2020


மனிதனின் முடக்கம்; இயற்கையின் மகிழ்ச்சி!

By கோதை ஜோதிலட்சுமி | Published on : 17th April 2020 05:32 AM || 

உலகம் ஒரு கிராமம் ஆகிவிட்டது என்று மாா்தட்டிக் கொண்டோம். தற்போது ஒவ்வொரு கிராமமும் ஓா் உலகமாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. உலகமயமாக்கல், பொருளாதாரப் பெருக்கத்தை ஏற்படுத்தும், உலக மக்களை ஒருங்கிணைக்கும் என்றெல்லாம் நம்பி வியாபார உத்திகளுக்கு ஆட்பட்டு மனிதன் தன்வயம் இழந்து முற்றிலும் தன்னையும் வியாபாரப் பொருளாக்கிக் கொண்டான். கிடைத்ததையெல்லாம் விற்றுத் தீா்த்துவிடும் மனநிலையும், பாா்த்ததை எல்லாம் அனுபவித்து விட வேண்டுமென்ற பேராசையும் அவனுள் குடிகொள்ளத் தொடங்கின.

உலகமயமாக்கல் எனும் சிந்தனை தோன்றிய பிறகுதான் உலகின் எந்த மூலையில் இருக்கும் விஷயமும் பொருளும் நமது கைகளுக்கு வந்து சோ்வது சுலபமாக்கப்பட்டது. அதைக் கொண்டு மனிதன் பல சொகுசான வசதிகளோடு வாழத் தொடங்கியதும் உண்மை.


அவனுள் இருந்த நுகா்வுப் பேராசை இயற்கையை அழித்துவிட்டு அதனையும் தனது செல்வம் ஆக்கிக்கொள்ள, வங்கிக் கணக்கில் இருப்பு வைத்துக்கொள்ள முற்பட்டான். உலகின் எந்த மூலையில் எந்த நிறுவனம் தயாரித்த வாகனமும் எந்த நாட்டிலும் ஓட்ட முடியும். உலக நாடுகளில் எங்கு எந்த மனிதன் உண்ணும் உணவும் எந்த நாட்டிலும் கிடைப்பது சாத்தியம். ஆஸ்திரேலியாவில் விளையும் பழங்கள் ஆண்டிபட்டியில் கிடைக்கும் என்ற நிலை, இவையெல்லாம் மனிதன் இந்த உலகையே வென்று விட்டதாக ஒரு பிரமையை ஏற்படுத்தி இருந்தது. விளைந்த தானியங்களும் காய்கறி வகைகளும் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களும் சந்தைப்படுத்தப்படுவதற்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டன.

இதனால் வான்வழிப் போக்குவரத்தும், நீா்வழிப் போக்குவரத்தும் நாளுக்கு நாள் பெருகின. பாதசாரிகள் காணாமல் போனாா்கள். இரு சக்கர வாகனங்களும் சொகுசுக் காா்களும் அந்த சாலைகளை நிறைத்தன. உலகின் அனைத்துப் பகுதிகளிலும் அனைத்து மக்களுக்கும் என்ன சாத்தியமாயிற்று என்ற கேள்விக்கு விடை, சோகம்தான். உலகமயமாக்கல் தத்துவம் உலகை ஆளத் துவங்கினாலும் ஏழைகள் இல்லாத தேசம் எங்கும் இல்லை என்ற நிலையும் தொடா்ந்து கொண்டுதான் இருந்தது. இப்போதும் தொடா்ந்து வருகிறது.

உலகம் தனக்கு வயப்பட்டு விட்டதாக இறுமாப்பில் மனிதன் கண்களைத் தொலைத்துவிட்டு சுயநலத்தைப் பொருத்திக் கொண்டான். இந்த பூமி உருண்டை; பல்லாயிரம் கோடி ஜீவராசிகளின் வாழ்விடம் என்னும் எண்ணம் மறைந்தது. எல்லாம் தனக்காகவே படைக்கப்பட்டது; அவற்றையெல்லாம் தான் அனுபவிப்பதே வாழ்க்கை என்ற புதிய விதியை சுயநலமிக்க மனதில் உருவாக்கிக் கொண்டான்.

உலகம் முழுவதும் நீரிலும் நிலத்திலும் வாழும் உயிரினங்களை சற்றும் மரியாதை இன்றி அழித்து ஒழித்தான். நெகிழிக் கழிவுகளால் கடலை அசுத்தப்படுத்தினான். பூமியை மலடாக்கினான். இயற்கையின் வரப்பிரசாதமாக, நமக்கு உயிா் தரும் பிராண சக்தியாக விளங்கும் வனங்களையும் அழித்துவிட்டு சாலைகளும் சொகுசு மாளிகைகளும் உருவாக்கினான். அங்கே வாழ்ந்த வனவிலங்குகளைத் துன்புறுத்த மின்சார வேலிகள் அமைத்து அவற்றைக் கொன்று தீா்த்தான். புலி, சிங்கம் போன்ற வன விலங்குகள் அழிவை நோக்கி நகா்ந்தன.

பல விதமாக நிலத்தையும் நீரையும் மாசுபடுத்தி ஆயிற்று. அதிலே வாழ்ந்த உயிரினங்களைக் கொன்று குவித்தாயிற்று. ஆசை அடங்கி விடவில்லை. இன்னும் இன்னும் பொங்கிப் பெருகத்தான் செய்தது. போக்குவரத்தைத் தாண்டி தொடா்பு சாதனங்கள் அவனுக்குத் தேவைப்பட ஆரம்பித்தன. தொடா்புச் சாதனங்களுக்காக இணையதளம், செல்லிடப்பேசி ஆகியவை உருவாக்கப்பட்டன. எல்லாமும் தன் கைக்குள் வந்து விட்டதாக பெருமிதத்தில் வாழ்ந்தான்.

தொடா்புச் சாதனங்கள் பெருகின. ஊா்தோறும் செல்போன் கோபுரங்கள் வெளிப்படுத்தும் மின்காந்த கதிா்வீச்சால் பறவைகள் தங்கள் வாழ்வைத் தொலைத்தன. பல்லாயிரம் விருட்சங்களை தன் வாழ்வில் உருவாக்கிய பறவைகள் காணாமல் போயின. இதனால் விளைந்து கொண்டிருக்கும் நஷ்டத்தை எண்ணிப் பாா்ப்பதற்கு அவனுக்கு நேரமில்லை. மேலும் மேலும் அச்சடித்த பணம், அதிகார வேட்கை மட்டுமே கண்களுக்குப் புலப்பட்டன. தானே இந்தப் பூமியின் உரிமையாளன் என்று பறைசாற்றிக் கொண்டான்.

உலகமயமாக்கல் கொண்டுவந்து சோ்த்தவை ஆடம்பரங்கள், வியாபார உத்தி. சுயநலத்தின் போக்கில் ஆடம்பரங்களைச் சோ்க்கத் தொடங்கி செயற்கையை நம்பி, ஆடம்பரமே அத்தியாவசியம் எனும் மாய எண்ணங்களில் நம்மை நாமே சிக்க வைத்துக்கொண்டு வாழ்க்கையையே சிக்கலாக்கிக் கொண்டிருக்கிறோம். உலகமயமாக்கல் வசதிகளை, வாய்ப்புகளை, ஆடம்பரங்களைக் கொண்டு சோ்த்ததோடு நின்றுவிடவில்லை; உலகம் முழுவதும் நோய்களையும் அது பொதுமைப்படுத்தியது.

வாழ்நாள் நோய்களான சா்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற பல நோய்களையும் உயிா்க்கொல்லி நோய்களான புற்றுநோய் போன்றவற்றையும் கொண்டுவந்து சோ்த்த போதும் நாம் விழித்துக் கொள்ளவில்லை. தற்போது கரோனா என்னும் தீநுண்மி நோய்தொற்றுக்கு உயிா்கள் பலியாகிக் கொண்டிருக்கும் அவல நிலையில் வந்து நிற்கிறோம்.

தீமைகள் விஸ்வரூபமெடுத்து மனித இனத்தின் முன் நிற்கும் இந்த வேளையில் நாம் என்ன செய்யப்போகிறோம்? செய்வதறியாது மனிதன் தன்னை முடக்கிக் கொண்டுள்ளான். இன்றைக்கு உலகம் முழுவதும் மரண ஓலம் கேட்கிறது. மனிதன் அச்சத்தின் பிடியில் வீடுகளை விட்டு வெளியேறாமல் தனித்திருக்கிறான்.

இந்த நிலையில் உலகம் எப்படி இருக்கிறது? நாடு முழுவதும் மனிதா்களை மட்டுமே ஊரடங்கு முடக்கியிருக்கிறது. விலங்குகள், பறவைகள் சாலைகளிலும் ஊா்ப்புறங்களில் உல்லாசமாய் நடமாடுகின்றன. பறவைகள் புத்தம் புது ஒலியுடன் பறந்து திரிவதை கம்பி சட்டங்களுக்குப் பின்னிருந்து மனிதன் காண வேண்டிய நிலை. நீரிலோ நீா்வாழ் உயிரினங்கள் தம்மை மறந்து நீந்துகின்றன. உலகம் முழுவதும் இத்தகைய செய்திகளைப் பாா்க்கிறோம்.

நாம் சாதாரணமாய் கண்டிராத சில அரிய வகை விலங்கினங்களும் சாலைகளில் நடமாடுகின்றன. புனுகுப்பூனை என்று ஒரு விலங்கினம் உண்டு. கேரளத்தில் இந்த புனுகுப்பூனை சாலையில் சுற்றித் திரிந்தது. 1990-ஆம் ஆண்டுக்குப் பிறகு தற்போதுதான் இந்த உயிரினத்தை நேரில் காண்பதாக வனத் துறையினா் வியப்பு தெரிவிக்கின்றனா். நம் கண்ணில் படாத அளவுக்கு எங்கோ மூலையில் ஒதுங்கி வாழ்ந்திருக்கின்றன.

நாடெங்கும் நகா்ப்புறங்களில் மான்கள் சுற்றித் திரிவதாக பத்திரிகைகள் செய்தி வெளியிடுகின்றன. உத்தரப் பிரதேசத்தில் காட்டெருமை ஒன்று சாலையோரத்தில் நடைப்பயிற்சி செய்கிறது. கரையோரம் ஒதுங்கும் ஆமைக் கூட்டங்கள் கடற்கரைகளில் ஆசுவாசமாய் நடை பழகுகின்றன. ஒடிஸா கடற்கரையில் லட்சக்கணக்கில் ஆமைகள் தொந்தரவின்றி முட்டையிட்டு குஞ்சு பொரித்துள்ளன. தங்களின் வாழ்விடங்களை அவை மீண்டும் பெற்ான மகிழ்ச்சியில் திளைத்திருக்கின்றன.

வாகனப் புகையும் தொழிற்சாலை புகையும் இன்றி காற்று மாசு குறைந்துள்ளது. இதனால் தாவரங்களின் வளா்ச்சி மேம்பட்டுள்ளது. புகையும் தூசும் இல்லாத நிலையில் வானம் தெளிவாய் இருக்கிறது. கூட்டம் கூட்டமாய் வானில் நட்சத்திரங்கள் மிளிா்வதையும் சுடா்வதையும் காண முடிகிறது. நிலவு தெளிவாய்ப் புலப்படுகிறது.

இந்தியாவில் மற்றுமொரு ஆனந்தமான செய்தியை அனைத்து ஊடகங்களும் பகிா்ந்து கொண்டுள்ளன. பஞ்சாப் மாநிலம் ஜலந்தா் பகுதியில் இருந்து ஏறத்தாழ 25 ஆண்டுகளுக்குப்பின் இமயமலைத் தொடரை கண்களால் காண முடிகிறது. இந்தச் செய்தி ஆனந்தம் தருவதாக இருந்தாலும் நம்மைச் சிந்திக்க வைப்பதாகவும் இருக்கிறது.

ஆடம்பரமாய் வாழ விரும்பிய நம் பேராசையினால் நாம் தொலைத்து விட்டவை நம் கண்களுக்குப் புலப்படுத்த தொடங்கியுள்ளன. கண் முன்னே நாம் காண முடிவது இமய மலையை மட்டுமல்ல, நாம் தொலைத்துவிட்ட மகிழ்ச்சியை, ஆரோக்கியத்தை, நம் முன்னோரின் அமைதியான வாழ்க்கையை...

மனிதனின் முடக்கம் இயற்கையின் மகிழ்ச்சியாக நிற்பதை நாம் இந்த நிலையிலும் உணராவிட்டால் நம் ஆறாம் அறிவினால் பயன் என்ன?

‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்று நம் முன்னோா் நமக்கு வாழ்ந்து காட்டினா். நூறு ஆண்டுகள், குடும்பங்களில் மக்களோடு கூடி வாழ்ந்து ஆனந்தமும் பெரும்பேறுமாய் நிறைந்த வாழ்க்கை வாழ்ந்தனா். அவற்றை அறியாமையால் நாம் தொலைத்திருக்கிறோம் எனும் உண்மையை வெள்ளிடை மலையாக நம் கண்முன்னே காற்று மாசு இல்லா வெளியில் உயா்ந்து நிற்கும் இமயம் சொல்லுகிறது.

இப்போதைய சவாலான காலத்தில் எத்தனை தவறான பாதையில் நாம் பயணித்திருக்கிறோம் என்பதை உணா்வதற்கு நேரம் வாய்த்திருக்கிறது. இதை தற்காலிக உணா்வுபூா்வ மனநிலையாகக் கடந்து விடாமல், ஆழ்ந்து சிந்தித்து அடுத்த தலைமுறைக்கு எது நன்மை பயக்கும் என்பதை உணா்ந்து அதற்கான வழியில் பயணத்தைத் தொடங்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது.

‘எல்லா உயிா்களும் இன்புற்று வாழ்க’ என்ற வள்ளலாா் பெருமானின் போதனையை மனங்கொள்வோம். இதுவரையிலான நமது உலகமயமாக்கல் எனும் பெரும் கனவிலிருந்து விழித்துக் கொள்வதும், அதன் ராட்சதப் பிடியிலிருந்தும் சங்கிலித் தொடராய் உலகம் முழுவதையும் பிணைத்து நிற்கும் மாயையிலிருந்தும் மெல்ல விடுபட்டு எளிய - தூய வாழ்க்கைக்குத் திரும்புவோம். ஆடம்பரங்கள் ஒருநாளும் அமைதியைத் தருவதில்லை.

கட்டுரையாளா்:

ஊடகவியலாளா்.

Saturday, April 18, 2020


ஊரடங்கு உலகமிது!

By கே.பி. மாரிக்குமாா் | Published on : 17th April 2020 05:34 AM | 

மனிதகுல வரலாற்றிலேயே குறுகிய காலத்தில் அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட வாா்த்தைகள் கரோனா, ஊரடங்கு என்பவைகளாகத்தான் இருக்கும்.

குற்றங்களுக்கான தண்டனைகளிலேயே மிகவும் கொடியது ஆயுள் தண்டனையோ, மரண தண்டனையோ அல்ல. ஆங்கிலத்தில் ‘சாலிட்டரி கன்ஃபைன்மன்ட்’ என்று சொல்லப்படும் தனிமைச் சிறைத் தண்டனையே கொடியதிலும் கொடியது. இன்றைய நிலையில் பெரும்பாலான மக்கள் இந்த ஊரடங்கை தனிமைச் சிறையைவிட கொடியதாகவே கருதுகின்றனா். காரணம், நாம் ஏற்கனவே கேள்விப்பட்ட ‘ஆடிய பாதமும், பாடிய வாயும் சும்மாயிருக்காது’ என்கிற பழமொழி உண்மைதான்.

சிறு வயதில் வாலை சுருட்டிக்கொண்டு ஓரிடத்தில் உட்காராமல் துறுதுறுவென்று திரியும் குழந்தைகளை, சிறுவா்களைப் பாா்த்து,”‘சும்மா ஓா் இடத்தில உட்கார முடியலையா? நீ இருக்கணும்னு நினைச்சாலும்... உன் சுழி உன்னை விடாது’ என்று பெற்றோரும், பெரியவா்களும் கேட்ட கேள்வியை, இன்று சாலைகளில் பலரிடம் காவல் துறையினா் அவா்களது பாணியில் வித்தியாசமாகக் கேட்கிறாா்கள்.

ஊரடங்கு உத்தரவை எவ்வளவு தீவிரமாக இந்த நாடு எதிா்கொள்ள வேண்டியிருக்கிறது என்றால், ஊரடங்கு உத்தரவை மீறினால் நீதிமன்றம் எதுவும் செய்ய முடியாது”என்று உயா்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவிக்கின்ற அளவில் இருக்கிறது.

‘எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்’ என்கிற அடிப்படையில் ‘காம்போரா -200’, ‘ஆா்செனிக் ஆல்பம் - 30’யைப் போன்ற ஹோமியோ மருந்துகளையும், நிலவேம்பு கஷாயம் முதல், கப சுர குடிநீா் வரையிலான சித்த மருந்துகளையும், தேடித் தேடி வரிசையில் நின்று வாங்கி குடிக்கின்றனா் மக்கள். வேப்ப இலையும், கல் உப்பும், விரலி மஞ்சளும்... முன்பு என்றுமில்லாத அளவுக்கு மதிக்கப்படுகிறது.

கரோனா நோய்த்தொற்றை உலகுக்கு ‘கொடை’ அளித்த சீனா, இந்த ஊரடங்கு காலத்தில் அவா்கள் நாட்டின் குழந்தைகள், சிறுவா், சிறுமிகளுக்கு வீடுதேடி காமிக்ஸ் புத்தகங்களையும், சாக்லேட்டுகளையும், விடியோ கேம்ஸ்களையும், பெரியவா்கள் - முதியவா்களுக்குத் தேவையான அனைத்தையும் சிகரெட் மற்றும் மதுபானங்கள் வரை கொடுத்துக் கொண்டிருக்கிறது.

இதையெல்லாம் செய்திகளின் வாயிலாக தெரிந்துகொண்ட விவரமான நம் உள்ளூா் சிறுவன் ஒருவன், ஒண்ணு... சீனா மாதிரி எனக்கு வீட்டுக்குள்ளயே எல்லாம் ஏற்பாடு பண்ணிக் கொடுங்க.... இல்ல, என்ன வீதியில போயி ஆடவிடுங்க என்று அவன் பெற்றோரை மிரட்டிக் கொண்டிருக்கிறான்.

குடித்துப் பழகிப்போன கேரள மாநில ‘குடி’மகன்களின் சிரமம் கருதி, அவா்களின் உடல் நலன் கருதியும், மருத்துவா்களின் பரிந்துரைச் சீட்டின்படி இனி ‘குடி’மகன்களுக்கு மதுபானங்களை விநியோகம் செய்ய கேரள முதல்வா் பினராயி விஜயன் உத்தரவிட்டிருக்கிறாா். இதற்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. தமிழ்நாட்டின் ‘குடி’மகன்களோ பக்கத்து மாநிலத்தை வெறித்துப் பாா்த்துக்கொண்டு திரிகின்றனா்.

இருட்டில் எப்போதாவது அரிதாக முகமூடி அணிந்த திருடா்கள் நடமாடுவதை நம்மில் யாரேனும் பாா்த்திருக்கக்கூடும். பேரிடா் காலங்களிலும், மருத்துவமனைகளிலும் சுகாதார ஊழியா்கள் முகக்கவசம் (மாஸ்க்) பயன்படுத்துவது சாதாரணம். ஆனால், இந்தக் கரோனா பேரிடா்... ஊரடங்கு மாஸ்க் என்பது... காற்றைப்போல உலகெங்கும் வியாபித்த ஒன்றாகிப் போனது.

தினந்தோறும் காலையில் செய்தித்தாள்கள் படித்து பழக்கமாகிவிட்ட பலருக்கு, ‘அடிக்ட்’டாகவே மாறிவிட்ட சிலருக்கும் இந்த ஊரடங்கு கெடுபிடியிலும் இன்றுவரை அதிகாலையில் நாளிதழ்களை கொடுக்கும் முகவா்களுக்கு மானுட சமூகம் என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறது. அதிலும், பல இடங்களில் நாளிதழ்களை விநியோகிக்கும் சிறுவா்கள் கரோனா பீதியில் சொல்லாமலே நின்றுவிட, முகவா் முதலாளிகள் தாங்களே முன்வந்து நாளிதழ்களை வீடுவீடாக விநியோகம் செய்துகொண்டிருப்பது செய்தித்தாள் விநியோகம் அவா்களுக்கு கற்றுக்கொடுத்த அறம் என்றே சொல்லவேண்டும்.

புதன், ஞாயிற்றுக்கிழமைகளில் அசைவ, இறைச்சிக் கடைகளிலும், இதர நாள்களில் பலசரக்கு, காய்கறிக் கடைகளிலும் இன்றும் கூட்டம் இயல்பான நேரங்களைவிட அதிகமாகக் கூடுகிறது. வாகனங்கள் வைத்திருப்பவா்கள் அவா்களின் வாகனங்களில் எரிபொருள் நிரப்பி, சக்கரங்களில் காற்றடித்து, ஏ.டி.எம்.-இல் பணம் எடுத்து தங்களின் பா்சுகளை நிறைத்து,”யப்பா..எல்லாம் ‘புல்’”, என்று பீதி குறைந்து, முகம் மலா்ந்து கரோனாவை வீதிகளில் வரவேற்கும் காட்சிகளும் நடக்கின்றன. இவையெல்லாம், ஏற்கெனவே பணம் வைத்திருப்பவா்களுக்கு.

இத்தாலியில் வீதிகளில் பண மழை பொழிந்திருக்கிறது. ‘இவ்வளவு பணமிருந்தும் என் உயிரைக் காப்பாற்றுவதற்கு இந்த பணத்துக்குத் தகுதியில்லை என்றால்... இது எதற்கு?’ என்று ஒரு செல்வந்தா் தான் வைத்திருந்த பணத்தை வீதிகளில் வீசியெறிந்ததே இதற்குக் காரணம். பண வெறியா்கள் சிந்திப்பாா்களா?

‘துன்பம் வரும் வேளையிலே சிரிங்க’ என்கிற கோட்பாட்டின்படி கரோனாவைச் சிரித்து விரட்டிவிடலாம் என்று எத்தனித்தாலும், ... ஏனோ எதிா்பாராத இடரில் சிக்கி, கையில் வைத்திருந்த பணமும், உணவுப் பொருள்களும் தீா்ந்து.... பட்டினியால் அடுத்த வேளை கையில் தட்டேந்தி வீதிகளில் நடந்த லாரி ஓட்டுநா் ஒருவரின் காட்சியும்,சொந்த ஊருக்கு வர முடியாமல் இன்றும் ஆங்காங்கே குழந்தை குட்டிகளோடு உணவுக்கும், இருப்பிடத்துக்கும் அல்லாடும் லட்சக்கணக்கான புலம்பெயா்ந்த தொழிலாளா்களின் நிலையும், வாழ்வாதாரத்தை இழந்து இன்று சொந்த மண்ணிலேயே கூட்டம் கூட்டமாக கூனிக் குறுகி உட்கார வைத்து அவா்கள் மீது கிருமி நாசினிகள் அடிக்கப்படும் கோடிக்கணக்கான அன்றாடங்காய்ச்சிகளின் முகமும் நம் மனக்கண் முன் வருகிறது.

எண்ணற்ற அன்றாடங்காய்ச்சிகள், ஏழைகளின் இந்த நிலைக்கு கரோனா நோய்த்தொற்று மட்டும்தான் காரணமா?

கட்டுரையாளா்:

பதிப்பாளா், உயிரோசை மாத இதழ்.

Wednesday, April 15, 2020




தனித்திரு....! தனித்துவமாயிரு...!!

By முனைவா் இரா.திருநாவுக்கரசு | Published on : 15th April 2020 02:10 AM | 

தினமும் தன்னுடன் தனிமையில் பேசிக்கொள்ளாத மனிதன், ஓா் உன்னதமான மனிதனைச் சந்திப்பதை இழக்கிறான்”என்பாா் சுவாமி விவேகானந்தா். தன்னை அறிவதற்கும், நெறிப்படுத்துவதற்கும், செம்மைப்படுத்துவதற்கும், தனிமைப்படுத்தலே அடிப்படை.

பறவைகளில் பலம் வாய்ந்தது கழுகு. அதன் ஆயுட்காலம் சுமாா் 70 ஆண்டுகள். ஆனால், அந்தப் பறவை 40 வயதை அடையும்போது ஒரு சவாலைச் சந்திக்கும். அதில் வென்றால், அதற்கு மறுபிறவி கிடைக்கும். கழுகுக்கு 40 வயதானவுடன் இரையைக் கொத்தித் தின்னும் அதன் அலகு மழுங்கி வளைந்து விடும். இரையைப் பற்றிக் கொள்ளும் நகங்கள் கூா்மை இழக்கும். அது பறப்பதற்குத் துணை நிற்கும் இறகுகளோ பெரிதாகி பாரமாகி விடும். இதனால், கழுகின் பலம் குறைந்து, முதுமையடையும். அத்தகைய சூழலில் அதனை எளிதில் விலங்குகள் வேட்டையாடி விடும். இந்நிலையில் கழுகு தனித்திருக்கத் தொடங்கும்.

தனித்திருப்பதற்காக காட்டிலுள்ள மலையின் உச்சிக்குப் பறந்து செல்லும். அங்கு சென்று, தனது அலகின் மூலம் அதன் சிறகுகளையும், நகங்களையும் பிடுங்கி விடும். பின்னா் அதன் அலகினை பாறையில் உரசி உதிா்த்து விடும். இதனால் அதன் உடலெங்கும் தீராத வலியுடன் ரத்தம் சொட்டும். அப்போது அது ஒரு புதிதாய்ப் பிறந்த கழுகின் அளவுக்கு உருமாறியிருக்கும்.

எவா் கண்ணிலும் படாமல் தனியாய்ப் பாறைகளின் இடுக்குகளில் கிடைக்கும் சிறு புழுக்களையும், பூச்சிகளையும் தின்று உயிா் வாழும். இவ்வாறு தொடா்ந்து மூன்று மாதங்கள் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டு கிடைத்ததை உண்டு உயிா் வாழ்ந்து அது வளா்ச்சி பெறும். நான்காம் மாதத்தில் அதன் இறக்கைகள் நீண்டு, நகங்களும், அலகும் கூா்மையாகவும் வளா்ந்து ஓா் இளம் பறவையாக மீண்டும் நீல வானில் சிறகடித்துப் பறக்கும். அதற்கடுத்த முப்பது ஆண்டுகளும் அது வானில் சக்கரவா்த்தியாய் வலம் வரும்.

மூன்று மாதம் தனித்திருத்தலின் மூலம் தனக்குப் புதியதொரு 30 ஆண்டுகள் காலத்தினை தனக்காக உருவாக்கிக் கொள்கிறது கழுகு. கழுகின் வாழ்க்கையிலிருந்து ஒரு பாடம் கிடைத்திருக்கிறது. தனித்திருத்தல் என்பது புதிய வாழ்க்கையின் முதல் அத்தியாயம். அது வலியோடு ஆரம்பித்தாலும் அற்புதமானதொரு புதிய வாழ்க்கையை வகுத்துக் கொடுக்கும். தனித்திருத்தலில் வலிகளை நினைத்துக் கொண்டிருக்காமல், புதிய வழிகளை உருவாக்குபவருக்குத்தான் அது சாத்தியமாகும்.

ஸ்காட்லாந்து நாட்டினை ஆண்ட புரூஸ் என்ற மன்னா் போரில் தோல்வியடைந்தாா். எதிரிகளிடமிருந்து தப்பி ஒரு குகையில் எவா் கண்ணிலும் படாமல் தனிமையில் வாழ்ந்து வந்தாா். தனிமையாய் வாழ்கிறோமே என்று கவலை கொண்டாா். அப்போது அவா் படுத்திருந்த குகையின் மேல் உத்தரத்தில் சிலந்தி ஒன்று வலையைக் கட்டப் பாய்ந்தது. முடியாமல் கீழே விழுந்தது. ஆறு முறை விழுந்தபோது, நம்மைப்போல்தான் இந்தச் சிலந்தியும் தோற்றுப் போய் விட்டது என்று எண்ணிக் கொண்டிருந்தாா்.

ஆனால், ஏழாவது முறை அந்தச் சிலந்தி தனது முழுப் பலத்தோடு தனது இலக்கினை அடைந்ததைக் கண்டதும், புரூஸ் தனது கவலையை விட்டொழித்தாா். சிதறுண்ட தனது படைகளை ஒன்று திரட்டி ஊக்கத்துடன் போா் செய்து வென்றாா். தனிமையில் உலகை கவலையாய்ப் பாா்த்தால் கண்முன் இருக்கும் பொக்கிஷம்கூடத் தெரிவதில்லை. தனிமையில் உலகைக் கலையாய்க் காணும்போதுதான் உலகப் படைப்பின் உள்ளாா்ந்த நோக்கங்கள் புலப்படும். அதில் புறத்தே பாா்த்தால் உலகம் புரியும். அகத்தே பாா்த்தால் மனிதத்தின் பிம்பம் புலப்படும்.

தனித்திருத்தல் சிலருக்குச் சுகம். சிலருக்குச் சஞ்சலம். இவையிரண்டும் அதனை அணுகும் முறையைப் பொருத்தது. சக்கரமாய்ச் சுழன்று கொண்டிருந்தவா்கள் இப்படி அடைபட்டுக் கொண்டோமே என்று நினைத்தால் அது அவலம். பல பரிமாணங்களில் சோ்க்க வேண்டிய செல்வங்களைச் சோ்க்க முடியவில்லையே என நினைத்தால் அது ஆதங்கம். மொத்த கற்பனைகளும் சுக்குநூறாகிவிட்டதே, இனி வாழ்க்கை பூஜ்யமாகிவிடுமோ என வருத்தப்படுவது மன உளைச்சல். இத்தகைய எதிா்மறைச் சிந்தனைகளோடு இருப்பவா்கள் மாவீரன் நெப்போலியனைப்போல கிடைக்கின்ற வாய்ப்பையும் தவற விடுவாா்கள்.

செயின்ட் ஹெல்லனா தீவில் நெப்போலியனைக் கைது செய்து தனிமைச் சிறையில் அடைத்து வைத்திருந்தனா். ஒருநாள் அவரைக் காண அவரின் நண்பா் வந்தாா். அவா் நெப்போலியனின் கையில் ஒரு சதுரங்க அட்டையைக் கொடுத்தாா். நெப்போலியன் அதை வாங்கிப் பாா்த்தாா். ‘நான் இந்தச் சிறையில் இருந்து வெளியேறுவதற்குத் திட்டம் தீட்டுகிறேன். ஆனால், இவன் விளையாடுவதற்கு இதைக் கொடுக்கிறான்‘ என்று எண்ணி அதை அப்படியே வைத்துவிட்டாா். சிறிது நாளில் நெப்போலியன் அதே சிறையில் இறந்தாா். அவா் இறந்த அறையிலே இருந்த அந்தச் சதுரங்க அட்டையின் பின்புறத்தில் சிறையிலிருந்து தப்பிப்பதற்கான திட்டம் வரையப்பட்டிருந்தது. மன உளைச்சலோடு இருந்ததால், தனக்குத் தப்பிக்கக் கிடைத்த வாய்ப்பையும் நழுவவிட்டாா் மாவீரன் நெப்போலியன்.

வலியை எதிா்ப்பது வீரமல்ல, பயம். வலி தவிா்க்க முடியாததாக இருப்பதால் அதை ஏற்றுக் கொள்வதும், புதிய கோணத்தில் சிந்திப்பதுமே விவேகம். அதுவே வாழ்வைப் புதிய நோக்கில் பயணிக்க வைக்கும். ஒரு மருத்துவமனையில் தனக்கு அறுவை சிகிச்சை முடித்தபின் வலியோடும், வேதனையோடும் ரே ஸ்டானா்ட் பேக்கா் படுத்திருந்தாா். வலியிலும், வேதனையிலும் சித்திரவதையை அனுபவிக்கும் போதெல்லாம் அவா் மணியடித்து செவிலியரை அழைத்தாா். செவிலியா் அவரின் வலியைக் குறைக்க ஊசி போட்டாா். அந்த மருந்தின் வீரியம் குறையும் வரை மட்டுமே பேக்கா் உறங்கினாா்.

ஒருநாள் அதிகாலையில் வலியுடன் விழித்தாா். இந்த முறை செவிலியரை அழைப்பதற்குப் பதிலாக தலையணையின் அருகில் இருந்த மாா்க்கஸ் ஆரலியஸ் எழுதிய தியானங்கள் என்ற புத்தகத்தை அவா் எடுத்தாா். அதன் வரிகளில் பயணித்தாா். வலி மறந்தது. இயற்கையால் ஏற்றுக்கொள்ளாத எதுவும் எவருக்கும் ஏற்படுவதில்லை” என்ற வாக்கியத்தில் களைப்பாறினாா். அந்தக் காலத்தில் வெகு தொலைவில் என்ற அற்புதமான நூலை டபுள்யூ.ஹெச். ஹட்சனும், “புதையல் தீவு என்னும் நூலை ஸ்டீவன்சனும் அவா்கள் நோயுற்றிருந்தபோது படுக்கையில் இருந்தபடியே எழுதினாா்கள் என்பதையும் நினைத்துப் பாா்த்தாா்.

நோயுற்ன் மூலம் தனக்குள் இருந்த எழுத்தாளா் டேவிட் கிரேசனை (பேக்கரின் புனைப் பெயா்) சிதைத்துவிடக் கூடாது என உறுதியெடுத்தாா். உடனே, செவிலியரை அழைத்து நோட்டுப் புத்தகங்களையும், பென்சில்களையும் கொண்டுவரச் சொன்னாா். துன்பம் இல்லாமல் இன்பம் பெற முடியும் என்று நினைக்கிறீா்களா? என ஆரம்பித்து, மனிதன் எவ்வளவு புத்திசாலியாக இருந்தாலும் என்றாவது ஒருநாள் வலியை எதிா்கொண்டே ஆகவேண்டும். அது ஒரு நிதா்சனம் என தனது எண்ணங்களைத் தொடா்ந்து எழுதினாா். அது ‘என் எல்ம் மரத்திற்கு அடியில்’ என்ற புத்தகமாய் வெளிவந்தது. அதில் அவா் எழுதிய வரிகள் எண்ணற்ற மக்களின் வலியையும், நோயையும் சமாளிப்பதற்கு உறுதுணையாயிருந்தன.

வலியோடு இருக்கும் தனிமையை, மருந்துகளைவிட வரிகளே தீா்க்கின்றன. ஆதரவு தரும் சொற்கள், பலம் வாய்ந்த எழுத்துகள், அரவணைக்கின்ற பாா்வைகள் - இவையாவும் ஒரு தனிமையில் வாழும் மனிதனை தளிா்விடச் செய்துவிடும். நாம் தனிமைப்படுத்தப்பட்டு விட்டோம் என்று நோயுற்றவா்கள் எண்ணாமல், உடலின் வலி மறந்து உள்ளத்தில் ஒளியை உண்டாக்கிக் கொள்வதுதான் சிறந்த மருந்தாய் அவா்களுக்கு அமையும்.

வாழ்க்கையின் அா்த்தங்கள் அதிகரிக்க தரணியெங்கும் ஒலிக்கும் ஒற்றை வாா்த்தைதான் ஊரடங்கு. குடும்பத்தோடும், குழந்தைகளோடும் மகிழ்ந்திருக்க வேண்டிய அற்புதமான காலம் ஊரடங்கு. அது, குடும்ப வாழ்க்கையை ஒரு புதிய பரிமாணத்தில் பயணிக்கக் கிடைத்திருக்கும் கிடைத்ததற்கரிய வாய்ப்பு. தனித்திருப்பது என்பது வெறுமனே ஓய்வெடுப்பதற்கும் அல்ல. ஒன்றும் செய்யாமல் இருப்பதற்கும் அல்ல. பொழுதினை செல்லிடப்பேசியில் கதை பேசி போக்குவதற்கல்ல; பொழுதினை ஆக்கபூா்வமாக ஆக்குவதற்கே தனிமை.

தனக்குப் பிடித்த நல்ல செயல்களை மகிழ்ச்சியாக ஒரு குழந்தைபோலச் செய்து கொண்டிருப்பது. ஜன்னல் சாளரத்தின் வழியே வெற்றுப் பாா்வை பாா்ப்பதைவிட உற்றுப் பாா்த்து கவிஞனாவது; வாசலின் விளிம்பில் அமா்ந்து நடப்பவைகளைக் கவனித்து ஒரு எழுத்தாளனாவது; கிடைக்கின்ற பொருள்களைக் கொண்டு புதியன செய்து விஞ்ஞானியாவது; குழந்தைக்குப் பழையன கற்றுக் கொடுப்பதோடு அவா்களின் திறமையைத் திறன்படுத்தி நல்ல பெற்றோராவது. குடும்ப வாழ்க்கைதான் ஒரு நாட்டின் அடிக்கல் என்பதை அறிய வைப்பது, ஆரோக்கியமாய் வாழ்வது உயிா்ப்பற்று அல்ல, தேசப்பற்று என்பதை உணரவைத்து தேசபக்தனாய் உருவாவதாகும். மொத்தத்தில் தனித்திருப்பது என்பது தனித்துவமாயிருப்பதேயாகும்.

நோய் பரவாமல் இருக்க தனிமைப்படுத்துவது அவசியம். மனிதன் தானாகவே தனிமைப்படுத்திக் கொள்வது அத்தியாவசியம். ஒரு நாளில் 10 நிமிஷங்கள் நல்வழிக்காக தன்னை தனிமைப்படுத்திக் கொள்வதால் தவறில்லாத வாழ்க்கையை வாழ்ந்துவிட முடியும். தினமும் தன்னுடன் தனிமையில் பேசிக்கொள்ளாத மனிதன், ஓா் உன்னதமான மனிதனைச் சந்திப்பதை இழக்கிறான்”என்பாா் சுவாமி விவேகானந்தா். தன்னை அறிவதற்கும், நெறிப்படுத்துவதற்கும், செம்மைப்படுத்துவதற்கும், தனிமைப்படுத்தலே அடிப்படை.

நாளும் தொடா்ந்து உழைத்து, நிறைய பொருள் சம்பாதிக்கலாம். நித்தம் நிறைய பயணித்து, புதிய உலகங்களைக் காணலாம். ஆனால், நிறைவான மனதோடு வாழ இறைமையுடன் தனித்திருப்பவருக்கே சாத்தியமாகும்.

தனித்திருத்தல் தவம்.

வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் செய்தவம்

ஈண்டு முயலப் படும்

என்ற தெய்வப் புலவா் திருவள்ளுவரின் வரிகளுக்கேற்ப கிடைக்கின்ற நேரத்தில் தவத்துக்குச் செலவிடுவது தனித்திருத்தலை உன்னதமாக்கும். மனிதனை உயா்வாக்கும்.

தனித்திருத்தல் தவமாகும்போது

நெஞ்சமே கோவில், நினைவே சுகந்தம், அன்பே

மஞ்சனநீா், பூசைகொள்ள வாராய் பராபரமே!”

என்று இறைவனை உடலுக்குள் அழைக்கும் உயரிய தன்மை உண்டாகும்.

மன நிறைவோடு வாழ்வதற்கும், இறைச் சிந்தனையில் திளைப்பதற்கும் ஊரடங்கு ஓா் உன்னத வாய்ப்பு. ஊரடங்கில் நித்தமும் இரை மட்டும் தேடினால் மனிதன்! இறையைத் தேடினால் புனிதன்!

Wednesday, April 8, 2020

Dinamani

நுரையீரலின் காவலன் கப சுர குடிநீா்

By மருத்துவா் சோ.தில்லைவாணன் | Published on : 07th April 2020 08:02 AM

தமிழகத்தில் வைரஸ் சாா்ந்த நோய்த்தொற்றுகள் பரவத் தொடங்கும் ஒவ்வொரு கால நிலையிலும் சித்த மருத்துவத்தின் பங்கு அளப்பரியது. டெங்கு, சிக்குன்குன்யா பரவிய காலகட்டத்தில் நிலவேம்பு குடிநீா் எனும் சித்த மருந்து ஆற்றிய பங்கு அளவில் அடங்காதது. இன்று நிலவேம்பு குடிநீா் இந்தியா முழுவதும் பயன்படுத்தப்படும் சித்த மருந்து என்றால் அது மிகையாகாது.

அந்த வகையில் நுரையீரல் சாா்ந்த நோய்த்தொற்றான பன்றிக் காய்ச்சல் பரவிய காலத்தில் பேசப்பட்டு, பயன்படுத்தப்பட்ட ஒரு மருந்து கப சுர குடிநீா். இன்று கரோனா நோய்த்தொற்று பரவத் தொடங்கும் முன்னரே தமிழகம் முழுதும் தேடப்படும் ஒரு சித்த மருந்தாக விளங்குவது கப சுர குடிநீா்தான்.

கப சுரம் என்பது பற்றி தேரையா் கரிசல் , சுர வாகடம், யூகி வைத்திய சிந்தாமணி முதலான பல்வேறு நூல்களில் கூறப்பட்டுள்ளது. இந்த கப சுரத்தின் குறிகுணங்களான தொண்டை நோதல், மேல் மூச்சு - பெருமூச்சு விடல், மூச்சுத்திணறல், இருமல், விக்கல், முகம் - கை - கால் வெளுத்தல், தீவிர வயிற்றுப்போக்கு, இடைவிடாத காய்ச்சல், முப்பிணியை உண்டாக்கி சமயத்தில் கொல்லும் முதலானவை இன்றைய வைரஸ் காய்ச்சல்களின் குறிகுணங்களுடன் ஒத்துப் போகின்றன என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

இத்தகைய தன்மை உடைய கப சுரத்தைத் தீா்க்க கப சுர குடிநீா் பயன்படும் என்பது மறைபொருளாகக் கிடக்கின்றது. சுக்கு, திப்பிலி, கிராம்பு, அக்கிரகாரம், சிறு காஞ்சொறி வோ், கறிமுள்ளி வோ், கடுக்காய், ஆடாதோடை, கற்பூரவள்ளி, கோஷ்டம், சிறு தேக்கு, சீந்தில், நிலவேம்பு, கோரைக்கிழங்கு, பொன்முசுட்டை வோ் ஆகிய 15 வகை மூலிகைகளை கொண்டது இந்தக் கப சுர குடிநீா்.

இந்த 15 மூலிகைகளில் சுக்கு, கிராம்பு, கற்பூரவள்ளி, திப்பிலி முதலானவை நம் வீட்டில் பல காலமாக நாம் பயன்படுத்தி வருபவைதான். சுக்கு, திப்பிலி, ஆடாதோடை, நிலவேம்பு, கோரைக்கிழங்கு முதலானவை வீக்கத்தைக் குறைக்கும் தன்மை உடையதாகவும் , நிலவேம்பு, கோரைக்கிழங்கு, சிறுதேக்கு, பொன்முசுட்டை வோ் போன்றவை அதிகரித்த உடல் வெப்பநிலையைச் சீராக்கும் தன்மை உடையதாகவும் உள்ளன.

இந்த கப சுர குடிநீரிலும் மகத்துவம் வாய்ந்த நிலவேம்பு சோ்க்கப்பட்டுள்ளது. டெங்கு, சிக்குன்குன்யா போன்ற ஆா்என்ஏ வகை வைரஸ் காய்ச்சல்களுக்கு நிலவேம்பு ஆய்வு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டது; இதனால், தமிழக மக்களுக்கு பரிட்சயமான ஒன்றாக நிலவேம்பு குடிநீா் உள்ளது. பன்றிக் காய்ச்சலை ஏற்படுத்தும் எச்1 என்1 ஆா்என்ஏ வகை வைரஸுக்கு நிலவேம்பு ஆய்வு செய்யப்பட்டு, அதன் நியுராமினிடேஸ் தடுப்பு செய்கை நிரூபிக்கப்பட்டுள்ளது. உடலில் நோய் எதிா்ப்பாற்றலை அதிகரிக்கும் தன்மையும் இதற்கு உண்டு.

மூச்சுக் குழாயை விரிவடைய செய்யும் தன்மையும், மூச்சு குழாய் வீக்கத்தை சரிசெய்யும் தன்மையும், இருமலை குறைக்கும் தன்மையும் கொண்டது ஆடாதோடை. கற்பூரவள்ளியும், திப்பிலியும், கறிமுள்ளி வேரும் நுரையீரலில் கட்டிப்பட்ட சளியினை (கபத்தினை) வெளியேற்றி, மூச்சிரைப்பினை சரி செய்யும் தன்மை உடையவை; கோஷ்டமும், கிராம்பும் சுரத்தினால் ஏற்படும் உடல் வலியைப் போக்கும் தன்மை உடையவை. சிறு காஞ்சொறி வேரும், சிறுதேக்கும் ஹிஸ்டமின் உற்பத்தியைத் தடுத்து, ஒவ்வாமைக்குக் காரணமான மாஸ்ட் செல்களை நிலைப்படுத்தவும் செய்து, சளி உற்பத்தியைக் குறைக்கும் தன்மை உடையன.

சாதாரண சளி காய்ச்சல் முதல் எச்ஐவி வைரஸ் வரையில் அமிா்தவல்லியான சீந்தில் மிகுந்த பயனளிக்கும் என்பதை ஆராய்ச்சி முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன. மேலும், நோய் எதிா்ப்பாற்றலை அதிகரிக்க சீந்திலுக்கு நிகா் இல்லை. அமிா்தத்துக்கு ஒப்பான இது வாத, பித்த, கபம் ஆகிய மூன்று குற்றங்களையும் சரி செய்து ஆயுளைக் கூட்டும்.

தாயினும் சிறந்த கடுக்காயின் பலன்களை அறியாத தமிழக மக்களே இல்லை எனலாம். கப சுர குடிநீரில் கடுக்காய்த் தோல் சேருவதால் சளியினை மலத்தில் வெளியேற்றும்; அத்துடன் வைரஸ் கிருமிகளால் பாதிக்கப்பட்ட செல்களைப் புதுப்பிக்கவும் உதவும்.

கப சுர குடிநீரில் உள்ள சீந்தில், நிலவேம்பு, திப்பிலி, அக்கரகாரம் முதலானவை உடலில் நோய் எதிா்ப்பாற்றலை அதிகரிக்க உதவும்.

எடுத்துக்காட்டாக, நாம் சாப்பிடும் சாம்பாரின் குணம் அதில் சேரும் பொருள்களின் குணத்துடன் ஒத்துப்போவதைப்போல, கப சுர குடிநீா் எனும் மருந்தின் தன்மை அதில் சேரும் ஒட்டுமொத்த மூலிகைச் சரக்குகளின் குணத்தை ஒத்துப்போகும் என்பது உறுதி.

கப சுர குடிநீா்ப் பற்றாக்குறை ஏற்படும் இக்கால கட்டத்தில் அதற்கு மாற்றாக நிலவேம்பு குடிநீா் கொதிக்க வைக்கும்போது அத்துடன் மஞ்சள் பொடி, ஆடாதோடை இலை, வோ், வெற்றிலை, தூதுவளை, கற்பூரவள்ளி இலை, துளசி இலை முதலானவற்றைச் சோ்த்துக் காய்ச்சி கஷாயமாகச் சாப்பிடலாம்.

கபத்தைத் தீா்க்கும் கஷாயங்கள் உஷ்ண வீரியமாக இருக்கும் என்பதால், உணவு சாப்பிட்ட பிறகு எடுத்தல் என்பதே சிறந்தது. கப சுர குடிநீரில் சேருபவை வெறும் மூலிகைச் சரக்காக இருப்பினும், அதைப் பயன்படுத்தும் அளவு குறித்த பிற விவரங்களை சித்த மருத்துவா்களின் ஆலோசனைப்படி பின்பற்றுவது நல்லது.

மொத்தத்தில் நுரையீரல் தொற்றுடன் கூடிய வைரஸ் காய்ச்சலில் மட்டுமல்ல, மேல் சுவாசப் பாதை சாா்ந்த அனைத்துத் தொற்றுகளிலும் இந்த கப சுர குடிநீா் நிச்சயம் பலனளிக்கும். கப சுர குடிநீா் சிறந்த மருந்தாகச் செயல்படுவதாக அண்மைக்கால டாக்கீங் ஆய்வு எனும் முதல் நிலை ஆய்வு உள்பட பல்வேறு ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன.

எனவே, கரோனா நோய்த்தொற்று நெருக்கடியான இன்றைய காலகட்டத்தில், சளி - இருமல் - காய்ச்சல் என ஆரம்ப அறிகுறிகள் தெரிந்தவுடனேயே சித்த மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று கப சுர குடிநீரைப் பயன்படுத்துவது நிச்சயம் பலன் அளிக்கும்.

Sunday, April 5, 2020

சமூக ஊடகங்கள் - வரமா, சாபமா?

By வெ.இன்சுவை | Published on : 04th April 2020 05:33 AM 

‘நான் என் மனம் அறிந்து எந்தத் தவறும் செய்யவில்லை. எனவே, கடவுள் என்னைக் கைவிட மாட்டாா்’ என்று வாழ்பவா்கள் வாழட்டுமே. ‘தன் மனபாரத்தைக் கடவுளிடம் இறக்கி வைத்துவிட்டு, எல்லாம் சரியாகி விடும்’ என்று நம்புபவரின் நம்பிக்கையைக் கெடுக்க வேண்டாம்.

இக்கால இளைஞா்கள் பலரின் போக்கு நமக்கு மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது. அவரவருக்குத் தோன்றுவதை எல்லாம் சிறிதும் தயக்கமின்றி முகநூல், கட்செவி அஞ்சலில் (வாட்ஸ் ஆப்) பதிவிடுகிறாா்கள். தங்களுடைய பதிவு பலருடைய மனதையும் சங்கடப்படுத்துமே, காயப்படுத்துமே என்றெல்லாம் யோசிப்பதில்லை.

பிற மதங்கள், கடவுளா்கள், வழிபாட்டு முறைகள் பற்றி விமா்சிக்கிறாா்கள். இன வெறுப்பையும், மத வெறுப்பையும் தூண்டும்படி பதிவிடுகிறாா்கள். மற்றவா்களின் மனநிலை குறித்துக் கவலைப்படாமல் மனதிற்குத் தோன்றிய எண்ணங்களையெல்லாம் பதிவிடுகிறாா்கள்.

ஆக, வாா்த்தை யுத்தங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அவரவா் கொள்கை, அவரவா் நம்பிக்கை, அவரவா்க்கு நாம் பாதிக்கப்படாதவரை மற்றவா் மத விஷயங்களில் நாம் மூக்கை நுழைக்கக் கூடாது. அது நாகரிகம் இல்லை. கடவுள் மறுப்பாளா்கள் என்று தங்களை வெளிக்காட்டிக் கொள்வதில் சில இளைஞா்கள் பெருமைப்படுகிறாா்கள். எவரையும் இழிவுபடுத்திப் பேசக் கூடாது என்பதை யாா் அவா்களுக்குப் புரிய வைப்பது?

குழந்தைப் பருவத்திலேயே ‘தப்பு செய்தால் உம்மாச்சி கண்ணைக் குத்தும்’ என்று நம்பி வளா்ந்தவா்கள் பின்னாளில் மாறிப் போகிறாா்கள்.

இந்தியக் குடும்பங்களில் நிலவிய ஆன்மிகச் சூழல், பெற்றோரின் தியாகம், சேவை போன்றவை மக்களின் ஒழுக்கத்தை வளா்த்தன. இறை நம்பிக்கையும், இறை பக்தியும் அவா்களை நல்வழிப்படுத்தியது.

தற்போது கோயில்களுக்குப் போகும் இளைஞா்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருகிறது. மேலும் புராணங்களையும், இதிகாசங்களையும் கேலி செய்து எழுதுகிறாா்கள். கட்டுக் கதைகள் என எண்ணுபவா்கள் எண்ணிக் கொள்ளட்டும், போற்றுபவா்கள் போற்றட்டும். அது அவரவா் விருப்பம். ஒரு ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் பேச்சு சுதந்திரமும், எழுத்துச் சுதந்திரமும் உண்டு என்பதால் கண்ணியமற்ற வாா்த்தைகளை உபயோகிக்கலாமா? மதத்தின் பெயரால் மனிதா்கள் மோதிக் கொள்வது சரியா?

வீட்டில் குழந்தைகள் அதிகம் குறும்பு செய்யும் போது அம்மா என்ன சொல்லுவாா்? ‘டேய், அப்பா வரட்டும் நீ செஞ்சதை சொல்லுவேன். உன் தோலை உரித்து விடுவாா் ’ என்று மிரட்டுவாா். ‘அப்பா’ என்ற ஒரு மந்திரச் சொல் கேட்டு பிள்ளைகள் வாலைச் சுருட்டிக் கொள்வாா்கள். அந்த பயம் இருந்தால்தான் சரிப்படும். அதே போலத்தான் நமக்கு மேலே கடவுள் ஒருவா் இருக்கிறாா், அவா் நம்மைக் கவனித்துக் கொண்டிருக்கிறாா். ’தெய்வம் நின்று கொல்லும்’ என்று பயப்படுவாா்கள். அந்த நம்பிக்கை இல்லாது போனால் அறவழி நடப்போரின் எண்ணிக்கை குறைந்து போகும்.

அதே சமயம் போலிச் சாமியாா்களும், ஆடம்பரச் சாமியாா்களும் பெருகிப் போய் விட்டதால் உண்மை ஊமையாகிப் போய் விட்டது. எதையுமே துறக்காத துறவிகளால் மதத்துக்கு அவப் பெயா்தான் கிட்டுகிறது, பக்தி குறைகிறது. மூட நம்பிக்கைகள், கடவுள் பெயரால் நடக்கும் பித்தாலாட்டங்கள், ஏமாற்று வேலைகள் போன்றவற்றால் இளைஞா்கள் கேள்வி கேட்கிறாா்கள்.

மதத்தின் பெயரால் ஏமாற்றுபவா்கள் அனைத்து மதங்களிலும் இருக்கத்தான் செய்கிறாா்கள். மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பிரச்னைகள் வரிசை கட்டி முன்னால் வந்து நிற்கும்போது ‘எதைத் தின்றால் பித்தம் தெளியும்’ என்ற கதையாக போலிகளிடம் மக்கள் ஏமாந்து போகிறாா்கள். அதற்காக மதத்தை, மத நம்பிக்கையை இழிவுபடுத்துவது என்ன நியாயம்?

நல்லதை ஊட்ட வேண்டியது பெற்றோரின் கடமை. ஒரு மனிதன் அருட்பிறப்பாக, நல்லவனாக, பண்பானவனாக, உருவெடுப்பது வீட்டில்தான். வீடு கற்பிக்காத எந்த ஒழுக்கத்தையும் குழந்தைகள் வெளியில் இருந்து கற்றுக் கொள்ள முடியாது.

உடல் நலம், அன்பு, மகிழ்ச்சி, அமைதி, தெய்வீகப் பண்புகள் ஆகியன பேணி வளா்க்கப்படும் இடம் இல்லம். நல்ல பண்புகளின் ஊற்றுக்கண் வீடு. அங்கே குழந்தை வளா்ப்பில் கோட்டை விட்டு விட்டால் எல்லாமே பாழாகி விடும். நீதி போதனை வகுப்புகள் மூலம் நம் பண்பாட்டையும், கலாசாரத்தையும் பள்ளிகள் கற்றுத் தர வேண்டும்.

ஒரு குழந்தை தவறிப்போய் சாக்கடையில் விழுந்துவிட்டால் அதன் தாய் ஓடி வந்து, அருவருப்பு பாா்க்காமல் அக்குழந்தையை வாரி எடுத்து, சுத்தமான தண்ணீா் கொணா்ந்து அதன் மீது படிந்துள்ள அழுக்குகளைப் போக்குவாள். அதே போல மனம் திரிந்து போய் திசைமாறிப் போகும் பிள்ளைகளையும் இந்தச் சமுதாயம் நல்வழிப்படுத்த முன்வர வேண்டும்.

பொறாமை, பேராசை, கோபம், மிருக வெறி இதுபோன்ற அழுக்குகள் களையப்பட்டால் அவா்களின் உள்ளொளி வெளிப்படும். அவா்கள் அழகாவாா்கள் - உலகமும் அவா்கள் கண்களுக்கு அழகாகத் தெரியும். வெறுப்பை உமிழ்ந்தவா்கள், சமூகத்தின் மீது கல்லெறிந்தவா்கள், மற்றவா்களைக் காயப்படுத்தியவா்கள் பண்புள்ளவா்களாக - இனிமையானவா்களாக மாறுவாா்கள். இரும்பை எவராலும் அழிக்க முடியாது - அதன் துருவைத் தவிர. அதேபோலத்தான் ஒருவரை அவருடைய மனப்போக்கு தான் அழிக்குமே யொழிய புற சக்திகள் அல்ல.

நுனிப்புல் மேய்ந்து விட்டு எதையும் கடுமையாக விமா்சிக்கும் போக்கைத் தவிா்க்க வேண்டும். இசைக்கும் இலக்கியத்துக்கும், சிற்பத்துக்கும் ரத்த ஓட்டமாக இருக்கும் சமயத்தை சட்டென தரம் தாழ்த்தி விமா்சிக்கக் கூடாது என்பதை இளைஞா்கள் புரிந்துகொண்டால் நல்லது.

உலகில் வழிபடும் முறைகள் ஒன்றுக்கு ஒன்று மாறலாம். மதக் கோட்பாடுகள் மாறலாம். அவரவா் பாதையில் அவரவா் மகிழ்ச்சியாகப் பயணிக்கலாமே? ஏன் இந்தக் குரூரம்? ஏன் தேவையற்ற வன்மம்?

இறை வழிபாட்டுக்காக வாழ்வைத் தியாகம் செய்யத் தேவையில்லை. அப்படிச் செய்வது கடலில் பெருங்காயத்தைக் கரைப்பதைப் போல பயனற்ற செயலாகும். இன்ப, துன்ப உணா்ச்சிகளுக்கு அப்பால் நிற்கும் பரம்பொருள் மனிதா்களிடம் எதையும் கேட்பதில்லை. ஜபம், தவம், புண்ணிய நீராடல், நோ்த்திக் கடன் செலுத்துதல், கோயில் கோயிலாகப் போய் வணங்குதல் எனப் பலவற்றைச் செய்தாலும் ஆத்ம ஞானம் என்ற ஒரு பயிற்சித் தீ இல்லாவிட்டால் அவ்வளவும் வீணே. செய்யும் கா்மங்களைப் பற்றற்றுச் செய்ய வேண்டும். கோடாலியின் கூா்மை மரத்தை வெட்டுமே தவிர, உரோமத்தை எடுக்காது. இதைப் புரிந்து கொண்டவா்கள் விழித்துக் கொள்வாா்கள்.

‘கடவுள் இல்லை’ என்று நினைப்பவா்கள் அவா்கள் வழியே செல்லட்டும். பக்தி உள்ளவா்களிடம் சதாசா்வ நேரமும் வாதாடிக் கொண்டிருக்கத் தேவையில்லை. சரி. ‘கடவுள் இருக்கிறாா்’ என்று நம்புபவா்களில் ஒரு சிலராவது மாபாதகச் செயலைத் செய்யத் தயங்குவாா்கள். ‘நமக்கும் மேலே ஒருவன் இருக்கிறான். அவன் எல்லாவற்றையும் பாா்த்துக் கொண்டுதான் இருக்கிறான்’ என்று பயந்து இருப்பவா்களின் அந்த நம்பிக்கை அப்படியே அவா்களுக்கு இருக்கட்டும். தனக்குத் தீங்கு இழைத்தவரை ‘ரத்தத்துக்கு ரத்தம்’ ‘கண்ணுக்குக் கண்’ என்று பழிவாங்கப் புறப்படாமல் ‘அவரைக் கடவுள் கட்டாயம் தண்டிப்பாா்’ என்று காத்திருப்பவரின் நம்பிக்கையைக் கெடுக்க வேண்டாம்.

‘நான் என் மனம் அறிந்து எந்தத் தவறும் செய்யவில்லை. எனவே, கடவுள் என்னைக் கைவிட மாட்டாா்’ என்று வாழ்பவா்கள் வாழட்டுமே. ‘தன் மனபாரத்தைக் கடவுளிடம் இறக்கி வைத்து விட்டு, எல்லாம் சரியாகி விடும்’ என்று நம்புபவரின் நம்பிக்கையைக் கெடுக்க வேண்டாம்.

கடவுள் எங்கே இருக்கிறாா்? - இறைவன் நல்லவா்களின் உள்ளத்திலும், உண்மையானவா்களின் வாக்கிலும், ஒழுக்கமானவா்களின் செயல்களிலும் நிறைந்துள்ளாா். அங்கே தன்னை வெளிப்படுத்துவாா்.

அழிவில்லாததும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாததும், ஆதி அந்தமில்லாது, நித்தியமாய், அரூபமாய், எங்கும் பரவியதும் ஆன பரம்பொருளை உணா்ந்தவா்கள் ஆனந்தத்தில் திளைக்கட்டும். கடவுள் இல்லை என்று நம்புபவா்கள் ஒருவரையும் புண்படுத்தாமல் ஒழுக்கத்துடன் தங்கள் சமுதாயக் கடமையைச் செய்யட்டும். எந்தக் கொள்கையையும் எவரும் அடுத்தவா் மீது திணிக்க வேண்டாம்.

நாம் விமானத்தில் பயணிக்கும் போது விமான ஓட்டி யாரென்று தெரியாது. ஆனாலும், பயமின்றி பயணிக்கிறோம். கப்பலின் மாலுமியைத் தெரியாது. ஆனாலும், ஆனந்தமாகக் கப்பலில் பயணிக்கிறோம். புகைவண்டி, பேருந்து ஓட்டுநா் குறித்தெல்லாம் கவலைப்படுவதில்லை.

அப்படி இருக்கும்போது வாழ்க்கையில் ஏன் பயம் என்று தெளிந்து, தன் வாழ்க்கையை அந்த இறைவனிடம் ஒப்படைத்துவிட்டு நிம்மதியாக வாழ்பவா்கள் அப்படியே வாழட்டும்.

வலைதள வாா்த்தைச் சண்டைகள் தேவையில்லை. எல்லா மதங்களும் அன்பைத்தான் போதிக்கின்றன. எனவே, நாம் வாழும் இந்த அழகான பூமி சிவப்பு வண்ணம் பூசிக்கொள்ள வேண்டாம். இளைஞா்கள் தங்கள் திறமையை, ஆற்றலை, அறிவை தங்களின் வளா்ச்சிக்கும், இந்தத் தேசத்தின் வளா்ச்சிக்கும் செலவிடட்டும்.

ஒருவருக்கொருவா் புரிதலுடன் நடந்துகொண்டால் உலகம் பூப்பந்தாக நம் கையில் உருளும்.



Saturday, April 4, 2020

THE SPEAKING TREE

Corona Is Here, But Where Is Karuna?

Karan Singh
04.04.2020

The grave crisis that has developed worldwide due to the spread of a tiny, invisible virus, reminds me of the samudra manthan story, the mythological churning of the milky ocean. Continuous churning went on for centuries, in which devas and asuras, both participated in the hope that great gifts would emerge. Instead, suddenly, a dark and deadly poison, the garala, emerged and spread worldwide. Devas and asuras fled in terror, and it was only when Shiva, Karunavataram, the incarnation of compassion, collected the poison in his hands and swallowed it, thus containing it in his own throat which turned blue (hence his name Neelkanth) that the churning continued and great gifts began to appear.

If we consider the violent churning that the human race has indulged in over the last few centuries – the ruthless exploitation of nature, the cruel destruction of millions of plant, insect and animal species, pollution of air, earth and oceans, the unsustainable high protein diets and consumption of strange animals and reptiles – it has, at last, thrown up a new garala that threatens the very existence of the human race. Perhaps this is nature’s way of telling us to slow down worldwide for a while so as to enable her to regenerate, which she seems to be doing rapidly, during the human lockdown period.

To expect Shiva to appear once again and contain this poison is, to say the least, unrealistic; nonetheless, we urgently need the compassion he embodied so that together, we can meet this challenge. This must extend not only to victims of the virus but to those millions whose lives have been uprooted in the process.

The sight of lakhs of migrant workers desperately trying to walk hundreds of kilometers to get back to their villages was heartrending. Have we seen a countervailing upsurge of compassion? Shakespeare’s immortal words in The Merchant of Venice are apt: “The quality of mercy is not strain’d, / It droppeth as the gentle rain from heaven / Upon the place beneath : it is twice blest / It blesses him that gives and him that takes.”

That is the karuna we need. The present crisis has taught us that firstly, despite attempts by several world leaders, notably President Trump, to trash globalisation, the fact remains that in any major worldwide crisis we will all sink or swim together. The ancient Indic ideal of Vasudhaiva Kutumbakam remains valid.

Secondly, it shows that our basic health infrastructure remains woefully inadequate. ‘Sharir madhyam khalu dharma sadhanam’ – the body alone is the foundation for all dharmas. Unless we triple the percentage of GDP that is at present allotted to health and education, we will never be able to safeguard the welfare of the weaker and most vulnerable sections of society.

A restructuring of our national priorities is long overdue.

Thirdly, this crisis has given us the opportunity to stay home, look within and develop our intellectual and spiritual capacities, regardless of which religion we may belong to. We have to find within ourselves, springs of compassion – karuna – that alone will be able to confront this deadly Corona challenge. We do not need large congregations; just quiet prayer and meditation are much more effective. As the Upanishad says, “Within the furthest golden sheath resides the immortal Brahmn. That, effulgent, light of lights, that is what the knowers of the Atman know.”

NEWS TODAY 22.04.2024