Monday, November 30, 2015

தண்ணீரில் தத்தளிக்கும் தலைநகரம்..THE TAMIL HINDU

மனிதவளம், வேலைவாய்ப்பு, போக்குவரத்து வசதி, பெருகும் குடியிருப்புகள், விரியும் விஸ்தீரணம் என மாநிலத் தலைநகரத்துக்கான அத்தனை அம்சங்களும் நிறைந்தது நமது சென்னை மாநகரம். வெளியூர்கள், வெளிமாநிலங்கள் என எங்கிருந்து எத்தனை பேர் வந்தாலும் வந்தாரை வாழவைக்கும் தலைநகரமாக தனிச்சிறப்புடன், தனித்துவத்துடன் இன்றளவும் திகழ்கிறது சென்னை.
இவ்வளவு பெருமைகள் வாய்ந்த சென்னை மாநகரம் சமீபத்திய கன மழையைத் தாக்குப்பிடிக்க முடியா மல் மாநரகமாகிப்போனது. சாலை கள், சுரங்கப்பாதைகள், தெருக்கள் மட்டுமல்லாது வீடுகளிலும் புகுந்தது மழைநீர். திரும்பிய பக்கமெல்லாம் வெள்ளம். வாகனங்கள் சென்ற சாலைகளில் படகுகள் மிதந்த காட்சி. வெள்ளத்தின் நடுவே சிக்கிய மக்களை ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்கவேண்டிய சூழல்.
சமூகத்தின் கீழ்தட்டு மக்கள் மட்டு மின்றி, நடுத்தர மக்கள், பணக்கார வர்க்கம் என அனைத்து தரப்பினரை யும் தயவுதாட்சண்யமின்றி வெளியே துரத்தியது வீடுகளில் அடாவடியாகப் புகுந்த வெள்ளம். கட்டமைப்பு வசதி கள் மிகுந்த, மாநிலத் தலைநகரில் ஏன் இந்த நிலை? 375 ஆண்டுகள் பழமையான சென்னையின் இந்த நிலைக்கு காரணம் என்ன? இதை எப்படி மாற்றுவது?
பூகோள அமைப்பின்படி பார்த்தால், தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகள், கடல் மட்டத்தைவிட அதிக உயரத்தில் உள்ளன. கடலை ஒட்டிய சென்னை, நாகை, கடலூர் மாவட்டங்கள் கடல் மட்டத்தில் இருந்து குறைந்த உயரத்தில் உள்ளன. சென்னை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகள் சராசரியாக 2 முதல் 10 மீட்டர் உயரத்தில் உள்ளன. வெள்ளத்தால் அதிக பாதிப்பு ஏற்படுவதற்கு இதுவும் காரணம் என்று கூறப்படுகிறது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் 1,450 ஏரிகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு, சென்னையில் தி.நகர், வள்ளுவர் கோட்டம், நந்தனம் உள்ளிட்ட இடங்களில் 36 ஏரிகள் இருந்துள்ளன. நகரமயமாக்கல் அதிகரிப்பால், இவை அழிந்துவிட்டன. புறநகர் பகுதிகளில் உள்ள ஏரிகள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளன.
இதில் சோழவரம், செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஆகிய 4 ஏரிகள்தான் சென்னையின் குடிநீர் ஆதாரங்கள். இவை தவிர, கொரட்டூர், போரூர், வளசர வாக்கம், விருகம்பாக்கம், வேளச் சேரி, அயனம்பாக்கம், ஆதம்பாக்கம், பல்லாவரம், உள்ளகரம், கீழ் கட்டளை, ஜமீன் பல்லாவரம், செம் பாக்கம் ஏரிகள் அந்தந்த இடங் களின் நீர்ப்பிடிப்பு பகுதிகளாக உள்ளன. இவைதான் நீலத்தடி நீர் ஆதாரமாகவும் உள்ளன.
ஆனாலும், தொடர்ந்து நடக்கும் ஏரி ஆக்கிரமிப்புகளும், மழைநீர் வடிகால்கள் அழிக்கப்பட்டதும்தான் சென்னையின் வெள்ள பாதிப்புக்கு காரணம் என்கின்றனர் பொதுப்பணித் துறையினர்.
தாழ்வான பகுதிகளில் சேரும் மழைநீர், கால்வாய்கள் வழியாக குளத்தை அடையும். உபரிநீர் அங்கிருந்து கால்வாய் வழியாக கடலைச் சென்றடையும். பொது வாக நீர்நிலைகளில் பாசனத் துக்காக நீரை வெளியேற்றும் அமைப்புகளும், ஏரி நிரம்பினால் தானாக உபரிநீர் வெளியே றும் ‘கலங்கல்’ என்ற அமைப்பும் இருக்கும். தற்போது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட் டங்களில் பெரும்பாலான ஏரிகளில் இந்த கலங்கல் இல்லை. மேலும், மழைநீர் வெளியேறும் கால்வாய்கள், கடலுக் குள் செல்லும் முகத்துவாரங்கள் குறுகிவிட்டதாலும் வெள்ளநீர் வடிய தாமதமாகிறது என்கின்றனர் பொதுப்பணித் துறையினர்.
இதுகுறித்து பொதுப்பணித் துறை பாசனப்பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஏரிகளில் நீர் நிரம்பினால், அதன் அருகே உள்ள நஞ்சை, புஞ்சை நிலங்கள் வழியாக உபரிநீர் வெளியேறும். அந்த நிலங்கள் தற்போது குடியிருப்புகள் ஆகிவிட்டன. சென்னையில் சிஐடி நகர், அண்ணா நகர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், முகப்பேர் போன்ற பகுதிகளில் உள்ள நிலங்களின் மூல ஆவணங்களை ஆய்வு செய்தால் அந்த நிலம் எத்தகையது என்று தெரியவரும்.
விவசாய நிலங்கள் அனைத்தும் படிப்படியாக கான்கிரீட் கட்டிடங்களாகவும், சிமென்ட், தார்ச் சாலைகளாகவும் மாறிவிட்டன. தொடர்ந்து நீர்நிலைகளும் அழிக்கப்படுவதால், மழைநீர் வெளியேற வழியில்லை. இதனால்தான், மழை வந்தால் சென்னை தத்தளிக்கிறது.
இதற்கு முன்பு 1943, 1976, 2005-ம் ஆண்டுகளில் ஏற்பட்ட வெள்ளத்தை கணக்கிட்டு, பெருநகர முழுமைத் திட்டம் தயாரிக்கப்பட்டது. அந்த திட்டத்தில், மழைநீர் வடிகால் குறித்தும் திட்டமிடப்பட்டது. அதில், வட சென்னைக்கு அளிக்கப்பட்ட திட்டம் கிடப்பில் உள்ளது. அம் பத்தூர், கொரட்டூர், மாதவரம், செம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் கால்வாய்கள் அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணிகள், நீதிமன்ற வழக்குகளால் நிற்கின்றன.
தாம்பரம் உள்ளிட்ட பகுதிக ளில் மழைநீர் வடிகால்கள் ஆக்கிரமிக் கப்பட்டதால், சாலைகளில் மழைநீர் தேங்குகிறது. மேலும், சென்னையில் அமைக்கப்படும் பல்வேறு மழை நீர் கால்வாய்கள் முறையாக இணைக் கப்படாமல் உள்ளன.
இப்போதுள்ள ஏரி நீர்ப்பிடிப்பு பகுதிகள் அடிப்படையில், 11 டிஎம்சி நீரை மட்டுமே சேமிக்க முடியும். உபரிநீர்கூட கால்வாய்கள் மூலமாக மட்டுமே கடலில் கலக்க வேண்டும். தற்போது கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. கால்வாய்கள் மூலம் கடலுக்குள் தண்ணீரை கொண்டு செல்லும் அடையாறு, கூவம், கொசஸ்தலை போன்ற ஆறுகளும் சுருங்கிவிட்டன. இவற்றை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவர, அதிக அளவில் நிலம் கையகப்படுத்த வேண்டியிருக்கும். அப்படி செய்தால் மட்டுமே குடியிருப்புகளில் தண்ணீர் தேங்குவதை தடுக்க முடியும்!
கால்வாய்கள் பராமரிப்பு அவசியம்
- வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன்
செயற்கைக்கோள் தகவல்களைக் கொண்டு சென்னையில் பாதாள சாக்கடைகள், சாலைகள், கட்டிடங்கள், மழைநீர் தேங்கும் பகுதிகள் குறித்து எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் ஆய்வு செய்து விரிவான அறிக்கையை 4 ஆண்டுகளுக்கு முன்பு அரசிடம் அளித்தது. கோடையில் தண்ணீர் பற்றாக்குறையும், மழைக்காலத்தில் வெள்ளமும் சென்னையில் வழக்கமாகிவிட்டது.
இதை தவிர்க்க மழைநீர், கழிவுநீர் கால்வாய்களை ஆண்டுதோறும் தூர்வாரி பராமரிக்க வேண்டும். அரசின் மழைநீர் சேமிப்பு திட்டத்தை முறையாக செயல்படுத்த வேண்டும். மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து வரைபடம் தயாரிப்பது, எதிர்கால தடுப்பு நடவடிக்கைகளுக்கு உதவும்.
வேளச்சேரி பாதிக்கப்பட்டது ஏன்?
அண்ணா பல்கலைக்கழகத்தின் தொலை உணர்வு மைய இயக்குநர் பேராசிரியர் எஸ்.எஸ்.ராமகிருஷ்ணன்
சென்னை ஏற்றத்தாழ்வு இல்லாத சமதளப் பகுதி. எனவே, மழைநீர் மண்ணில் ஊறுவதற்கும், பூமிக்குள் இறங்கவும் போதிய நேரம் இருக்காது. மேலும், மழைநீர் சென்றடைய நகருக்குள் ஏரிகள் எதுவும் இல்லை. புறநகர் பகுதிகளிலும் நீர்நிலைப் பகுதிகள் அதிகம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
வேளச்சேரி, தரமணி பகுதியில் பாதாள மழைநீர் வடிகால் வசதி அமைக்கும் வகையில் விஜயநகர் தொடங்கி பக்கிங்ஹாம் கால்வாய் வரை மேற்கொள்ளப் பட்ட பணிகள் முடிக்கப்படவில்லை. அதனால்தான் வேளச்சேரி பகுதியில் இந்த அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மழைக்காலம் தொடங்கும் முன்பாகவே மழைநீர் வடிகால் வசதிகள் சிறப்பாக ஏற்படுத்தப்பட வேண்டும். மழைநீர் செல்லும் பகுதிகளை சுத்தப்படுத்தி, சரிசெய்ய வேண்டும். ஏரிகள், நீர்ப்பாதைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மும்பையில் இதுபோன்ற பணிகளை ஜூன் மாதமே தொடங்கிவிடுகின்றனர். மழைநீர் வடிகால்களை சரிசெய்தாலே சென்னையில் மழைவெள்ள பிரச்சினை சரியாகிவிடும்.
மக்கள் செய்யவேண்டியது என்ன?
- அண்ணா பல்கலைக்கழகத்தின் பேரிடர் தணிப்பு மற்றும் மேலாண்மை மைய இயக்குநர் பேராசிரியர் டி.திருமலைவாசன்
சென்னையில் 500 சதுர கி.மீ. சுற்றளவில் எந்தெந்த பகுதி எவ்வளவு உயரத்தில் இருக்கிறது என்று ஆகாய மார்க்கத்தில் லேசர் ஸ்கேனர் உதவியுடன் 2009-ல் தமிழக பொதுப்பணித் துறை, மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறைகளின் நிதி உதவியுடன் கணக்கு எடுத்தோம். மழைநீர் வடிகால் வசதி பணிக்காக அந்த கணக்கெடுப்பு தகவல் பொதுப்பணித் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. மழைநீர் வடிகால் வசதி திட்டத்துக்காக இந்த விவரங்களை மாநகராட்சியும் பயன்படுத்திக்கொண்டது.
சென்னையின் மழை வெள்ளப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் மக்களின் ஒத்துழைப்பு அவசியம். மழைநீர் வடிகால்களில் குப்பைகளை போடக்கூடாது. அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகளைச் சுற்றி சிறிதுகூட இடம் விடாமல் சிமென்ட் தளம் போடுவதை தவிர்க்க வேண்டும். பூமிக்குள் மழைநீர் இறங்க கொஞ்சமாவது மண் பரப்பை விட்டுவைக்க வேண்டும்.
காலி இடங்களில் நீர்த்தேக்கம்
- பொதுப்பணித் துறை முன்னாள் சிறப்பு தலைமை பொறியாளர் அ.வீரப்பன்
மழைநீர் தேங்காமல் ஓடும் வகையில் வாட்டத்துடன் வடிகால்கள் கட்டப்படாததும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்த 36 ஏரிகள், 100 குளங்களை ஆக்கிரமித்து தூர்த்ததும்தான் இப்போதைய பிரச்சினைக்கு முக்கிய காரணம்.
மழைநீர் வடிகால்களை குழாய்கள் மூலம் இணைத்து, அருகே உள்ள கால்வாய்கள் வழியாக கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாய், ஓட்டேரி நல்லா ஆகியவற்றில் இணைத்து முறையாக பராமரிக்கலாம். திருவொற்றியூர், வில்லிவாக்கம், கொளத்தூர், திருநின்றவூர், தாம்பரம், முடிச்சூர், மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, பெருங்குடி, வேளச்சேரி போன்ற பகுதிகளில் காலியாக உள்ள நிலங்களில் 100 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சுரங்க நீர்த்தேக்கம் அமைக்கலாம்.
இதற்கு செலவு அதிகம் ஆகும் என்றாலும்கூட, மழை வெள்ளம், தண்ணீர் தட்டுப்பாடு என்ற இரண்டு பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வு கிடைக்கும்.
தொற்றுநோய் பரவும் அபாயம்
சென்னையில் கழிவுநீர் வெளியேறும் பாதாள சாக்கடையும், மழைநீர் வெளியேறும் வடிகால்களும் தனித்தனியே அமைக்கப்படுகின்றன. ஆனால், பெரும்பாலான இடங்களில் பாதாள சாக்கடைகளே மழைநீர் வடிகாலாக உள்ளன. இதனால் மழைநீருடன் பிளாஸ்டிக் பை, குப்பைகள் போன்ற திடக்கழிவுகளும் பாதாளச் சாக்கடையில் அடைத்துக் கொள்கின்றன.
கழிவுநீர் வெளியேற வழியின்றி, பொங்கி வெளியே ஆறாக பெருக்கெடுத்து, மழைநீருடன் கலந்து ஓடுகிறது. பல இடங்களில் 2 வாரங்களாக கழிவுநீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது. தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
திட்டமிடல் இல்லாமல் உருவான புறநகர் பகுதிகள்
சென்னையின் புறநகர் பகுதிகளாக உருவெடுத்துள்ள பல பகுதிகள் நீர்நிலைகளாக இருந்தவை. அவற்றை அழித்தே பல நகர்கள் உரு வாக்கப்பட்டிருக்கின்றன. இதில் வெகுவாக விதிமுறைகள் மீறப் பட்டுள்ளன. 1,189 சதுர கி.மீ. பரப்புள்ள சென்னை பெருநகரில் புதிய குடியிருப்பு பகுதிகளை உருவாக்க சிஎம்டிஏ (சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம்) அங்கீகாரம் அவசியம்.
வீட்டுமனைகள் உரு வாக்கும்போதே விரிவாக ஆய்வு செய்து கழிவுநீர், மழைநீர் வெளியேறும் வசதி, குடிநீர், சாலைகள், இணைப்பு சாலைகளை ஏற்படுத்த வேண்டும். பூங்கா, விளை யாட்டு மைதானம், பள்ளி, பொது பயன்பாட்டுக்கான இடங்கள் ஒதுக் கப்பட வேண்டும். ஆனால், இவை எதையும் செய்யாமல் மனைகளை விற்கின்றனர். எப்படியாவது இடம் வாங்கினால் போதும் என்ற எண் ணத்தில், மக்களும் அங்கு இடம் வாங்கி வீடுகளை கட்டிக்கொள்கின்றனர்.
கட்டமைப்பு வசதிகள் இல்லாத இடத்தில் உருவாகும் குடி யிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்துவிடுகிறது என்கிறார் ஓய்வு பெற்ற சிஎம்டிஏ அதிகாரி ஒருவர்.
மிகவும் திட்டமிட்டு 40 ஆண்டு களுக்கு முன்பு உருவாக்கப்பட்ட சென்னை அண்ணா நகர், அகலமான சாலைகளுடன் அமைக்கப்பட்டுள் ளது. ஆனால், கடந்த 20 ஆண்டுக ளில் உருவாக்கப்பட்ட புறநகர் பகுதிக ளில் எந்த திட்டமிடலும் இல்லை. இதனால், பல தெருக்கள் முட்டு சந்தாக முடிகின்றன. இதனால் பாதாள சாக்கடை, குடிநீர் குழாய்கள் அமைப்பது மாநகராட்சிக்கு பெரும் சவாலாக உள்ளது.
வட சென்னையில் தற்போது வெள்ளத்தில் மிதக்கும் கொளத்தூர், விநாயகபுரம் போன்ற பகுதிகளில் எந்த திட்டமிடலும் இல்லாமல் குறுகிய சாலைகளுடன் பிரம்மாண்டமான புதிய குடியிருப்புகள் உருவாக்கப் பட்டுள்ளன. உள்ளகரம், புழுதிவாக் கம், மடிப்பாக்கம், வேளச்சேரி, தரமணி, மேற்கு தாம்பரம் என தற்போது வெள்ளநீர் சூழ்ந்துள்ள பல பகுதிகளிலும் இதே நிலைதான் உள்ளது.
சிஎம்டிஏ பரிந்துரை
சிஎம்டிஏ வெளியிட்ட சென்னை பெருநகர பகுதிக்கான 2-ம் முழுமைத் திட்டம் 2026-ல் வெள்ள அபாயத்தை தடுப்பதற்கான பல்வேறு பரிந்துரைகள் அளிக்கப்பட்டுள்ளன. அவற்றில் சில..
# நிவாரணப் பணிகளில் மட்டுமின்றி, பாதிப்புகளை தடுப்பது, குறைப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும்.
# பேரிடர் காலங்களில் அரசோடு மக்களும் இணைந்து செயல்படும் கலாச்சாரத்தை உருவாக்க விழிப்புணர்வு முகாம்கள் நடத்த வேண்டும்.
# ஊர்க்காவல் படை போல பேரிடர் மேலாண்மைக்காக பயிற்சி பெற்ற தன்னார்வ தொண்டர் படையை உருவாக்க வேண்டும்.
# உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்களுக்கு பேரிடர் குறித்து பயிற்சி அளிக்க வேண்டும்.
நிலத்தடி நீரை பாதுகாக்கும் முறைகள்
- சென்னையில் உள்ள மத்திய நிலத்தடி நீர் வாரியத் தலைவர் ஏ.சுப்புராஜ், விஞ்ஞானிகள் டாக்டர் பி.உமாபதி, கே.சிவசண்முகநாதன்
நகர்ப்புறங்களில் வீடு, அலுவலகம், சாலை ஓரம், பொது இடங்கள், மழைநீர் தேங்கும் இடங்களில் செறிவூட்டுக் குழி, செறிவூட்டும் வாய்க்கால், குழாய் கிணறுகள், நீரூட்டும் கிணறுகள் போன்றவற்றை அமைக்கலாம். இதன்மூலம், நிலத்தடி நீரை செயற்கை முறையில் செறிவூட்டலாம். கிராமப்புறங்களில் சிற்றோடை தடுப்பு, கரைகள் மற்றும் வரப்புகள், கூழாங்கற்கள் தடுப்பணை மற்றும் கல்லணைகள், கசிவுநீர் குட்டைகள், தடுப்பணைகள், நீரூட்டும் சுரங்கங்கள், நீரூட்டும் கிணறு, நிலத்தடி தடுப்புச் சுவர் ஆகியவை மூலம் மழைநீரை சேமிக்கலாம். ஆண்டுதோறும் இவற்றை முறையாக பராமரிப்பது மிகவும் முக்கியம்.

பெண் எனும் பகடைக்காய்: எத்தனை யுகங்களுக்குக் கண்காணிப்பீர்கள்? பா.ஜீவசுந்தரி

Return to frontpage

சிறு வயதில் என் பாட்டி வீட்டில் வாழ்ந்தபோது கிராமம் சார்ந்த வாழ்க்கையைக் கண்ணாரக் கண்டவள். மிகப் பெரிய கூட்டுக் குடும்பம். வீட்டுக்குப் பின் நல்ல அருமையான கட்டுமானத்துடன் கூடிய மாட்டுத் தொழுவம். அதன் ஒரு புறத்தில் சிமென்ட்டால் கட்டப்பட்ட, ஒரு ஆள் படுத்துறங்கும் அளவுக்கு ஒரு சிறு திண்ணை. அதில் தாயக்கட்டம் வரையப்பட்டிருக்கும். அதுவும் கட்டுமானத்திலேயே உண்டு.

நாங்கள் அந்தத் திண்ணையில் உட்கார்ந்து தாயக்கட்டையை உருட்டி விளையாடியிருக்கிறோம். அப்போது அத்தையோ சித்தியோ யாராவது ஒருவர் வந்து எங்களை விரட்டிவிட்டுத் திண்ணையை ஆக்கிரமித்துக்கொள்வார். அதன் பின், மூன்று நாட்களுக்கு எங்களுக்கு அந்த இடம் கிடைக்காது. போர்வை, சாப்பிடும் தட்டு, தம்ளர் போன்றவற்றை அதில் ஒரு பக்கம் வைத்திருப்பார்.

ஒரு சராசரி மனுஷியாகக்கூட நடத்தப்படாமல், மாடுகளோடு, மாட்டு மூத்திர, சாண நெடிக்கு மிக மிக அருகில் பகல் பொழுதைக் கழிக்க வேண்டுமென்பது பற்றி எப்போதாவது நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா? சாப்பாட்டு நேரம் வரும்போது தட்டு, டம்ளரை எடுத்துக்கொண்டு, தோட்டத்து வராந்தாவில் உட்கார வேண்டும். வீட்டின் உள்ளேயிருந்து யாராவது வந்து தட்டு, தம்ளரைத் தொட்டுவிடாமல் சாப்பாடு போட்டுவிட்டுப் போவார்கள். தவறி யாராவது அவர்களைத் தொட்டுவிட்டால், குளிக்காமல் வீட்டுக்குள் நுழைய அனுமதி கிடையாது.

இரவில் பின்கட்டுக் கதவுக்கு முன் உள்ள வராந்தாவிலோ அல்லது அங்குள்ள உள் திண்ணையிலோ தூங்க வேண்டும். அதாவது அப்போதும் வீட்டுக்குள் அனுமதியில்லை. அந்தத் திண்ணையில் வேண்டாத கோணிகள், தட்டுக் கூடைகள், மர உரல், கல் உரல், திரிகைகள் என்று பலவும் இருக்கும். அதையெல்லாம் ஒரு ஓரமாக ஒழுங்கு செய்துவிட்டு, ஒரு உலக்கையைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு அந்த ஜடப் பொருள்களோடு ஜடமாக, அங்கேதான் இரவைக் கழிக்க வேண்டும். காற்று, வெளிச்சம் எதுவும் இல்லாத அந்த இடத்தில் மூன்று நாட்களும் அனுபவிக்க வேண்டிய இந்த நரக வேதனையை நானே அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன். அப்போதெல்லாம் சொல்ல முடியாத ஒரு அவமான உணர்ச்சி வந்து ஆட்கொள்ளும்.

அய்யா, அய்யனாரே காப்பாற்றுங்கள்

இப்போதும் மதுரை மாவட்டத்தின் டி.கல்லுப்பட்டி அருகில் உள்ள கூவளப்பட்டியிலும் மற்றும் சில கிராமங்களிலும் இப்படிக் கேவலமாக ஒதுக்கி வைப்பதற்காக என்றே, ஊருக்கே வெளியில் உள்ள இடத்தில் ஒரு சிறிய கட்டிடத்தைக் கட்டி வைத்திருக்கிறார்கள். முன்பெல்லாம் ஓலைக் குடிசையாக இருந்ததாம். தேள், பூரான் போன்ற விஷப் பூச்சிகளின் பிடியிலிருந்தாவது காப்பாற்றுங்கள் என்ற பெண்களின் வேண்டுகோளுக்கிணங்கி இப்போதுதான் கல் கட்டிடமாக மாற்றியிருக்கிறார்கள். கைக்குழந்தை உள்ள பெண்கள் என்றால் கைக்குழந்தையோடு அங்கு போய்த் தங்கிக்கொள்ள வேண்டும். மின் வசதியற்ற அந்த இடத்தில் குழந்தையோடு தங்குவதும் மாணவிகள் இரவு நேரங்களில் படிக்க முடியாமல் அவதிப்படுவதும் இங்கு வாடிக்கை.

இந்தப் பெண்கள், பள்ளிக்கோ மருத்துவமனைக்கோ தெருக்களின் வழியாகச் செல்லவும் தடை. ஊரைச் சுற்றி வயல்களின் ஊடாக நீண்ட தொலைவு நடந்து செல்ல வேண்டும். இடைநிலைச் சாதியானாலும் ஒடுக்கப்பட்ட சாதியானா லும் இதில் மட்டும் எந்த வித்தியாசமும் இல்லை. அதிலும் பெரும் கொடுமை, இரண்டு பிரிவினருக்கும் தனித் தனிக் கொட்டடிகள். இந்த நவீன காலத்திலும் அய்யனார் என்ற எல்லைக் காவல் தெய்வத்தின் பெயரால் இந்தக் கொடுமைகள் இந்தக் கிராமங்களில் நிகழ்த்தப்படுகின்றன.

நகரங்களில் நவீன தீண்டாமை

பெண்ணின் வாழ்க்கை முறை சென்ற நூற்றாண்டிலிருந்து மாற்றம் கண்டிருப்பது உண்மை. முன்பு போல் பெண்கள் வீட்டுக் கோழிகளாக மட்டும் இப்போது இல்லை. கல்வி கற்கவும், வேலை வாய்ப்புகளுக்காகவும் வெளியுலகில் சஞ்சரித்துக்கொண்டிருக்கிறார்கள். பெண்கள் ராக்கெட்டில் விண்ணுலகுக்குப் பறக்கும் இக்காலத்திலும் பெண்ணின் மாதவிடாய் இழிவானதாகவே கொள்ளப்படுகிறது. வீட்டுக்கு உள்ளேயோ ஊருக்கு வெளியிலோ ஒதுக்கி உட்கார வைப்பதும், உலக்கை போட்டு அடையாளப்படுத்துவதும் நகரங்களில் வேண்டுமானால் இல்லாமல் இருக்கலாம்.

வீட்டில் பண்டிகைகள், திருமணங்கள், குடும்பத்துடன் கோயிலுக்குச் செல்ல நேரும் பொழுதுகள், பலர் சேர்ந்து செல்லும் சுற்றுலா இவை அனைத்துக்கும் இந்த பீரியட் என்பது மகா எதிரி. இதைக் காரணம் காட்டியே எல்லாவற்றிலும் ஒதுக்கி வைத்துவிடுவார்கள். இந்தத் தீண்டாமையைத் தவிர்ப்பதற்காகவே மாத்திரை போட்டு மாதவிடாய் சுழற்சியைத் தள்ளி வைக்கும் ஒரு விபரீதமான பழக்கத்தைப் பெண்கள் கைக்கொள்ள ஆரம்பித்தார்கள். விடாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். மருத்துவர்களின் எச்சரிக்கையையும் மீறித் தொடரும் இப்பழக்கம் மிக மிக ஆபத்தானது.

பத்தாண்டுகளுக்கு முன்பு பெண் படைப்பாளிகள் சந்தித்துக்கொண்டோம். அதன் பெயர் ‘பெண்கள் சந்திப்பு’. எழுத்தாளர் அம்பை உட்பட, பத்திரிகையாளர்கள், சமூகச் செயல்பாட்டாளர்கள், ஈழத்துப் பெண் கவிஞர்கள் சிலர் எனப் பலரும் அதில் கலந்துகொண்டோம். ஒரு பெண்ணாக, பெண் படைப்பாளியாக எங்கள் அனுபவங்களைப் பேசிக்கொள்வது என்பதுதான் அதன் நோக்கம். அதில் ஈழப் பெண் கவிஞர் ஒருவர் தனது அனுபவத்தைக் கூறினார். அவர்கள் ஊர் குடிநீர் குளத்தில் நீர் மொள்ளும் முன்பு காவல்காரர் மறித்து ‘நீ வீட்டுக்கு தூரமில்லியே’ என்று கேட்டு, இல்லை என்று சொன்ன பிறகுதான் அனுமதிப்பாராம். தொடர் கேள்விகளால் எரிச்சலைடைந்த இவர் மாதவிடாய் நேரமாக இருந்தாலும் ‘இவன் என்ன டெஸ்ட் பண்ணியா பாக்கப் போறான்’ என நினைத்து, இல்லை என்று பொய் சொல்லி விட்டு நீர் மொண்டு வந்ததாகச் சொன்னார். அதைக் கேட்டு எங்களுக்குள் வெடிச் சிரிப்பு எழுந்தது. ஆனால், இது சிரித்துவிட்டுப் போவதற்கான விஷயம் மட்டுமல்ல.

அறிவியல் முன்னேற்றமா?

பெண்களின் தூய்மையைக் கண்டறியும் இயந்திரங்கள் கோவில்களில் நிறுவப்பட்டு மாதவிடாய் உள்ள பெண்கள் கோயிலுக்குள் நுழையாமல் தடுத்து நிறுத்தும் காலம் வரும் என்று திருவாய் மலர்ந்தருளி இருக்கிறார் திருவாங்கூர் தேவஸ்தானத்தின் புதிய தலைவர் பரயாறு கோபாலகிருஷ்ணன். இந்தியா முழுமையும் பல்லாயிரக்கணக்கான பெண்களை இந்தச் செய்தி கொதிப்படைய வைத்திருக்கிறது.

இதைவிட மோசமாகப் பெண்களை எந்த விதத்திலும் இழிவுபடுத்திவிட முடியாது. அப்படியானால் ஆண்களின் தூய்மையைக் கண்டறியும் ஆராய்ச்சிகளையும் சேர்த்தே அவர் நிகழ்த்தினால் நன்றாயிருக்கும். இன்னும் எத்தனை யுகங்களுக்கு எங்களைக் கண்காணித்துக்கொண்டிருக்கப் போகிறீர்கள்?

கொசுறு

“ஒவ்வொரு மாதமும் எனக்கு ரத்தப் போக்கு ஏற்படுகிறது. அந்த நேரங்களிலும் நான் பிரார்த்தனை செய்வதைக் கடவுள் கோபப்படாமல் ஏற்றுக்கொள்கிறார். ஆனால், மாதவிடாய்க் காலங்களில் பெண்கள் தூய்மையற்றவர்கள் என்று மற்றவர்களும் சொல்லி வருகிறார்கள். ‘தூய்மையற்றதாக’ சொல்லப்படும் அந்தத் தாயின் கருவறைக்குள்தான் 9 மாதங்கள் நீங்கள் உயிர்த்திருந்தீர்கள் என்பதை யாரும் மறந்துவிட வேண்டாம்” என்று எதிர்க் குரல் எழுப்பியிருப்பவர் அதிதி குப்தா என்ற இளம்பெண்.

கட்டுரையாளர், எழுத்தாளர்.
தொடர்புக்கு: asixjeeko@gmail.com

அடுத்த ஆண்டு ஜனவரி 26–ந்தேதி முதல் கார், பஸ், மோட்டார் சைக்கிள்கள் எத்தனாலில் ஓடும் மத்திய மந்திரி நிதின் கட்காரி அறிவிப்பு

பதிவு செய்த நாள்:
திங்கள் , நவம்பர் 30,2015, 2:51 AM IST

முசாபர்நகர்,


அடுத்த ஆண்டு ஜனவரி 26–ந்தேதி முதல் கார், பஸ், மோட்டார் சைக்கிள்கள் மாற்று எரிபொருளான எத்தனாலில் ஓடும் என மத்திய போக்குவரத்துத்துறை மந்திரி நிதின் கட்காரி அறிவித்தார்.

எத்தனால்

உத்தரபிரதேச மாநிலம், முசாபர்நகரில், மத்திய போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

பிரேசில் நாட்டைப்போல கார்கள், பஸ்கள், மோட்டார் சைக்கிள்கள் என மோட்டார் வாகனங்கள் அனைத்தும், அடுத்த ஆண்டு ஜனவரி 26–ந்தேதி முதல் எத்தனாலில் ஓடும்.

ஹோண்டா, யமஹா மோட்டார் வாகன நிறுவனங்கள், இத்தகைய மோட்டார் சைக்கிள்களை தயாரித்து உள்ளன. எத்தனால் கொண்டு ஓடும் மோட்டார் சைக்கிள்கள் மூலம் வரும் லாபத்தினை கரும்பு விவசாயிகள் நேரடியாக அனுபவிப்பார்கள்.

எத்தனால் பம்புகள்

பெட்ரோல் பம்புகளைப் போன்று எத்தனால் பம்புகள் குடியரசு தினத்தன்று (ஜனவரி 26–ந்தேதி) செயல்பட தொடங்கும். இதற்கான உரிமங்கள் வழங்குவது தொடங்கி உள்ளது.

நாட்டில் உள்ள விவசாயிகளின் நிலையை மேம்படுத்துவதற்கு அரசு உறுதி கொண்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பிரேசில், அமெரிக்காவுடன் இந்தியா

தற்போது நமது நாட்டில் மோட்டார் வாகனங்கள் பெரும்பாலும் பெட்ரோல், டீசலில்தான் ஓடுகின்றன. இதனால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. இவற்றை இறக்குமதி செய்வதால் நாட்டுக்கும் பெருமளவு அன்னியச்செலாவணி இழப்பு ஏற்படுகிறது.

எத்தனால் கரும்புச்சாறைக் கொண்டு தயாரிக்கப்படுவதால், கரும்பு விவசாயிகளின் வாழ்வில் ஏற்றம் ஏற்படும். சுற்றுச்சூழல் மாசுபடுவதும் குறையும். அவ்வப்போது பெட்ரோல், டீசல் விலை உயர்வினால் வாகன ஓட்டிகள் அவதிப்படுவதும் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரேசில், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளில் மாற்று எரிபொருளாக எத்தனால் பயன்படுத்தப்படுகிறது. அந்த வரிசையில் நமது நாடும் சேரப்போகிறது.

வங்கக்கடல் பகுதியில் மேலும் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை வட மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்

பதிவு செய்த நாள்:
திங்கள் , நவம்பர் 30,2015, 4:07 AM IST

சென்னை

இலங்கை அருகே உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை அதே இடத்தில் நிலவுகிறது. புதிய காற்றழுத்த தாழ்வு நிலை அந்தமான் அருகே உருவாகி உள்ளது.

புதிய காற்றழுத்த தாழ்வு நிலை

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இன்றைய வானிலை குறித்து சென்னை வானிலை ஆராய்ச்சி மண்டல இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் கூறியதாவது:-

நேற்று முன்தினம் தென் மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, அதே இடத்தில் நீடிக்கிறது. இந்த நிலையில் தென் கிழக்கு வங்கக்கடலில் அந்தமான் கடல் பகுதியில், புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இது அடுத்த 24 மணிநேரத்தில் தாழ்வு பகுதியாக வலுவடைய வாய்ப்பு உள்ளது.

வட மாவட்டங்களில் கனமழை

இந்த இரு நிகழ்வு காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் மழை பெய்யும். குறிப்பாக வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். சென்னையில் வானம் மேக மூட்டமாக இருக்கும். நகரின் சில பகுதியில் கனமழை பெய்யும். அந்தமான் அருகே உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தமிழகம் அருகே வந்தால், தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு எஸ்.ஆர்.ரமணன் தெரிவித்தார்.

மழை அளவு

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் கன்னிமாரில் 14 செ.மீ. மழையும், பூதப்பாண்டியில் 4 செ.மீ. மழையும், பாபநாசமில் 3 செ.மீ. மழையும், காட்டுக்குப்பம், மகாபலிபுரம், செங்கோட்டை தலா 2 செ.மீ. மழையும், மயிலாடி, மயிலாடுதுறை, நாகர்கோவில், செங்கல்பட்டு, கேளம்பாக்கம், தாமரைப்பாக்கம் தலா 1 செ.மீ. மழையும் பெய்துள்ளது.

நொடிக்கு 224 GB வேகத்தில் இண்டர்நெட்; அமெரிக்காவில் விஞ்ஞானிகள் வெற்றிகர சோதனை

நியூயார்க்,

தற்போது நாம் பயன்படுத்தி வரும் வை-ஃபை இண்டர்நெட் வேகத்தைவிட 100 மடங்கு அதிக வேகம் கொண்ட 'லை-ஃபை' (லைட் பெடிலெட்டி) எனும் புதிய தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளனர் விஞ்ஞானிகள். அதிகபட்சமாக நொடிக்கு 224 GB வேகத்தில் சோதனை செய்து பார்த்துள்ளனர். இந்த அதிவேக இண்டர்நெட் வாயிலாக கண் இமைக்கும் நேரத்திற்குள் 18 திரைப்படங்களை டவுண்லோடு செய்துவிடலாம். பிளாஷ் எல்.இ.டி விளக்குகளின் வாயிலாக பைனரி கோடு தொழில்நுட்பத்தில் இந்த அளவிற்கு அதிவேக இண்டர்நெட்டை தர முடியும் என நிரூபித்துள்ளனர்.

Document source: daily thanthi

இயற்கையை நாம் அழித்தால்...

logo


தமிழ்நாட்டில் கடந்த பல நாட்களாகவே, வடகிழக்கு பருவமழை வானத்தில் இருந்து பெருக்கெடுத்தோடும் அருவிபோல பொழிந்து, மண்மகளை கடல் மகளாக்கி பல சேதத்தை ஏற்படுத்திவிட்டது. இந்த பேரழிவுக்கு என்ன காரணம் என்பதை சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் நெற்றி அடியாக ஒரேவாக்கியத்தில் சொல்லிவிட்டார். ‘இயற்கையை நாம் அழித்தால், இயற்கை நம்மை அழித்துவிடும்’ என்று இவ்வளவு மழை சேதத்துக்கான காரணத்தை மட்டுமல்லாமல், இனி செய்யவேண்டிய நடவடிக்கைக்கான பாடமாகவும் சொல்லிவிட்டார். கடந்த 23–ந் தேதி மாலையில் 4 மணி நேரம் பெய்த மழை சென்னையை வெள்ளத்தில் மூழ்கடித்துவிட்டது. மாலையில் சாலையில் நடந்தும் செல்ல முடியவில்லை. வாகனங்களும் ஊர்ந்துகூட போகமுடியாத அளவு சாலைகளில் எல்லாம் தண்ணீர் நிறைந்து இருந்தது. இந்த போக்குவரத்து நெரிசல் தொடர்பாக ஐகோர்ட்டில் ஒருவழக்கு தொடரப்பட்ட நேரத்தில், நானும் அன்று ஐகோர்ட்டில் இருந்து வீட்டுக்கு செல்ல 3 மணி நேரம் போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொண்டேன். இயற்கை சீற்றங்களால் ஏற்படும் பின்விளைவு இது. இயற்கையை நாம் அழிக்கிறோம், பதிலுக்கு இயற்கை நம்மை அழிக்கிறது என்று தலைமை நீதிபதி கூறியிருக்கிறார்.

நிச்சயமாக இந்த கருத்தை அரசு, உள்ளாட்சி அமைப்புகள், பொதுமக்கள் அனைவரும் சிந்தித்து, இனியும் இதுபோல ஒரு நிலைமை ஏற்படாதவகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். இந்த மழையிலும் சில ஏரிகள், குளங்களில் முழு கொள்ளளவை தேக்கி வைக்கமுடியவில்லை. காரணம் ஏரிகளின் கரைகள் பலப்படுத்தப்படவில்லை. தூர் வாரப்படாததால் முழுமையாக தண்ணீரை தேக்கி வைக்க முடியவில்லை. பல ஏரிகள், குளங்களில் ஆக்கிரமிப்புகள் அதிகமாகி பாதி நீர்நிலைகள் வீடுகளாகிவிட்டன. இதற்கு காரணம் ஆக்கிரமிப்பு தொடங்கியவுடனேயே நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள், அங்கு வீடுகள் கட்டப்பட்டவுடன் அரசு செலவில் சாலைகள் அமைத்துக்கொடுத்து, மின்சார சப்ளை, குடிநீர், கழிவுநீர் வசதி செய்துகொடுத்து, சட்டவிரோதமாக வசிப்பவர்களுக்கு ரேஷன் கார்டு கொடுத்து இலவசங்களையும் வாரி வாரி வழங்குவதுதான். மேலும் மன்னர்கள், ஆங்கிலேயர் ஆட்சிகாலங்களில் கட்டப்பட்ட ஏரி, குளங்களில் பெரும்பகுதியை மக்களாட்சியில் காணாமல் போகத்தான் செய்துவிட்டார்களே தவிர, பெருகிவரும் மக்கள் தொகைக்கேற்ப புதிய ஏரிகள், குளங்கள், வாய்க்கால்கள் தோண்டப்படவில்லை.

இந்த மழையிலும் பல கோவில்குளங்கள் வறண்ட நிலையில் அல்லது மழைதண்ணீரால் சற்று மட்டும் நிறைந்து இருக்கிறது. காரணம் அந்த குளங்களுக்கு மழைநீர் கொண்டுவரும் வரத்து கால்வாய்களில் ஆக்கிரமிப்புதான். மேலும் ஆறுகள், ஏரிகளில் பெருக்கெடுத்து ஓடி வீணாக கடலில் போய் கலக்கும் நீரை சேமிக்க புதிய கால்வாய்கள், ஏரிகள் தோண்டப்படவேண்டும். நகர்ப்புறங்களில் தண்ணீர் தேங்காதவாறு மழைநீர் வடிகால் கால்வாய்கள் சீரமைக்கப்பட்டு, அந்த தண்ணீரை சேமித்துவைக்க புதிய நீர்நிலைகள் உருவாக்கப்பட வேண்டும்.

மொத்தத்தில், அழிக்கப்பட்ட இயற்கைக்கு மீண்டும் உயிரூட்டவேண்டும். உடனடியாக நீர்நிலைகளின் ஆக்கிரமிப்புகளைக் கணக்கிட்டு, தயவு தாட்சணியம் இல்லாமல் அகற்றவேண்டும். நீர்நிலைகளில் தூர்வாருவதற்கான திட்டங்களைத்தீட்டி பட்ஜெட்டில் பணம் ஒதுக்கி, நீர் வற்றியவுடன், அல்லது நீர்மட்டம் குறைந்தவுடன் தூர்வாரவேண்டும். தேர்தல் வரப்போகிறது, அரசியல் கட்சிகள் அழிந்துபோன இயற்கையை, புதிய இயற்கை வசதிகளை உருவாக்கும் திட்டங்களை தேர்தல் வாக்குறுதிகளாக அறிவித்து, ஆட்சிக்கு வருபவர்கள் அதை உடனடியாக நிறைவேற்றவேண்டும்.

ஏனெனில் தேர்தல் அறிக்கைகளில் மக்கள் இப்போது அடைந்துவரும் இன்னல்களை தீர்க்க அரசியல் கட்சிகள் இப்போது இல்லாத என்னென்ன உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கப் போகிறோம் என்று சொல்கிறார்கள் என்பதை பார்க்க ஆவலோடு இருப்பார்கள்.

வகுப்பு அறையிலேயே மது குடித்த மாணவிகள்

logo

என்னதான் டாஸ்மாக் கடைகளில், ‘‘குடி குடியைக் கெடுக்கும், குடிப்பழக்கம் உடல் நலத்தைக் கெடுக்கும்’’ என்று கடையின் போர்டிலும் சரி, பாட்டில் களிலும் சரி எழுதப்பட்டிருந்தாலும், அதைப்பார்த்து யாரும் குடிக்காமல் இருப்பதுபோலத் தெரியவில்லை. ஆண்டுக்கு, ஆண்டு குடிப்பவர்கள் எண்ணிக்கையும், மதுபாட்டில்களின் விற்பனையும் உயர்ந்துகொண்டேப்போகிறது. அரசின் கஜானாவுக்கு மது விற்பனையின் மீது போடப்படும் வரியினால் மட்டுமே கடந்த ஆண்டு 24 ஆயிரத்து 164 கோடியே 95 லட்ச ரூபாய் வருமானம் கிடைத்து இருக்கும்.

ஆனால், சமுதாயத்தை அதிர்ச்சியின் உச்சத்துக்கே கொண்டுசெல்லும் வகையில் இப்போது, நாளைய ஒளிமிகுந்த தமிழ்நாட்டை உருவாக்கவேண்டிய இளைய சமுதாயமான மாணவர் சமுதாயத்தினர், அதுவும் பள்ளிக்கூட பருவத்தில் உள்ள பிஞ்சு உள்ளங்கள் குடிப்பழக்கத்துக்கு ஆளாகும் கொடுமையான செய்திகள் கேட்டு நெஞ்சமெல்லாம் பதறுகிறது. ஏற்கனவே பல பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் குடித்துவிட்டு ரகளை செய்த சம்பவங்களையெல்லாம் தாண்டி, சில மாதங்களுக்கு முன்பு முதலில் கல்லூரி மாணவிகள் என்று தொடங்கி, கோவையில் ஒரு பள்ளிக்கூட மாணவி சீருடையிலேயே போதையில் சாலையில் உருண்டு, புரண்ட சம்பவம் பார்க்க சகிக்கவில்லை. இப்போது சிலநாட்களுக்கு முன்பு நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கூடத்தில் 11–வது படிக்கும் 4 மாணவிகள் பள்ளிக்கூடத்திலேயே பாட்டிலைத்திறந்து குடித்த சம்பவம், தமிழ் நெஞ்சங்களை சுக்கு நூறாக நொறுக்கிவிட்டது. இடைநிலைத்தேர்வு நடக்கும் நேரம். ஒரு மாணவிக்கு பிறந்தநாளாம். அதைக்கொண்டாட இருமாணவிகள் மதுபாட்டிலை வாங்கிக்கொண்டுவந்து இருக்கிறார்கள். மிகவும் கைதேர்ந்த குடிகாரர்கள்போல, 4 பேர்களும் குளிர்பானத்தை கலந்து குடித்து இருக்கிறார்கள். அதில் சிலர் வாந்தி எடுத்து இருக்கிறார்கள். இந்த மாணவிகளை பள்ளிக்கூடத்தில் இருந்து வெளியே அனுப்பிவிட்டார்கள்.

இதனால் பிரச்சினை தீர்ந்துவிடாது. இவ்வளவுக்கும் இந்த மாணவிகள் பணக்கார குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் அல்ல. 21 வயதுக்கு குறைந்தவர்களுக்கு மது விற்கக்கூடாது என்று சட்டம் இருக்கும்போது, இவர்களுக்கு எப்படி தாராளமாக கிடைக்கிறது?. பணக்காரர்கள் செல்லும் பப்கள், நட்சத்திர ஓட்டல் பார்களில் பள்ளிக்கூட மாணவர்களுக்கு அனுமதி இல்லாத நிலையில், டாஸ்மாக் கடைகளில் மட்டும் இவ்வாறு விற்பனை செய்வதை உடனடியாக தடுக்கவேண்டும். எல்லோருக்கும் வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை என்று ஏதாவது அடையாள அட்டைகள் இருக்கும்போது, அடையாள அட்டை கட்டாயமாக்க பரிசீலிக்கலாம். 21 வயதுக்கு குறைந்தவர்களுக்கு மது விற்றது கண்டுபிடிக்கப்பட்டால், அதைவிற்ற ஊழியர்கள் மீதும் கடும் நடவடிக்கை பாயவேண்டும். மதுவை ஒரு எட்டாக்கனியாக்கும் வகையில் வரியைக் கூட்டினாலும் தவறில்லை.

அனைத்துக்கும் மேலாக மதுவின் கேடு குறித்து மாணவர்களுக்கு மனரீதியாக பாடங்களை பள்ளிக்கூடங்களிலேயே கற்றுக்கொடுக்க ஏற்பாடுகள் செய்யவேண்டும். பள்ளிக்கூடங்களில் மனநல ஆலோசகர்களின் பணியை இன்னும் தீவிரப்படுத்தவேண்டும். ஆசிரியர்களும் தங்கள் பணி பாடம் சொல்லிக்கொடுப்பது மட்டுமல்லாமல், ஒழுக்கமுள்ள மாணவர் சமுதாயத்தை படைக்கவேண்டும் என்பதே தலையானது என்பதை உள்ளத்தில் கொள்ளவேண்டும். இதில் பெற்றோருக்கும் முக்கிய கடமை இருக்கிறது. டீன் ஏஜ் பருவத்தில் பெற்றோருடைய அன்பு, அரவணைப்பு, நெருக்கம் இல்லாத சூழ்நிலையும் அவர்களை மதுபக்கம் பார்வையை செலுத்தக்கொண்டு போய்விடுகிறது. எனவே, இளைய தலைமுறையை மதுப்பக்கம் கொண்டுபோகாமல் இருக்க, பெற்றோர், ஆசிரியர்கள், அரசு என்று ஒட்டுமொத்த சமுதாயமே பொறுப்பேற்றுக்கொள்ளவேண்டும்.

Wednesday, November 25, 2015

திருமணங்களும், தனி மனித பொருளாதாரமும்!

Dinamani


By எஸ். ராமன்

First Published : 23 November 2015 12:56 AM IST


தனி மனித வாழ்க்கையில், திருமணம் என்பது ஒரு முக்கிய நிகழ்வாகும். அந்த நிகழ்வு, பலருடைய வாழ்வில் ஒரு திருப்பு முனையாகவும் அமைகிறது. சமூகத்தில் பல மட்டங்களில் உள்ளவர்கள், தங்கள் சமூக அந்தஸ்துக்கு ஏற்றபடி, திருமண நிகழ்ச்சியை நடத்துகின்றனர். அதற்குத் தகுந்தாற்போல், திருமண செலவினங்களிலும் பெருத்த வேறுபாடுகள் காணப்படுகின்றன. தங்கள் வருமானத்துக்கு மேல், திருமண செலவுகள் செய்வதற்கு, இந்திய நடுத்தர வர்க்கம் தயங்குவதில்லை. கல்வி செலவைவிட, திருமண செலவுகள் பல மடங்கு அதிகம் என்பதுதான் உண்மை.
நடுத்தர வர்க்கத்தினரைப் பொருத்தவரை குடும்ப திருமணங்கள், சந்தோஷ சுமைகளாக அமைகின்றன என்று சொன்னால் அது மிகையாகாது. பெண்ணைப் பெற்றவர்களுக்கு திருமண நிகழ்வுகள் சந்தோஷத்தை அளித்தாலும், அது பெரும் பொருளாதார சுமையாகவும் உருவெடுத்து, வாழ்க்கை முழுவதும் அந்த சுமை அவர்களை அழுத்துகிறது என்பதுதான் நடைமுறை நிகழ்வுகளாகும்.
நம் சமூக அமைப்பைப் பொருத்தவரை, பெண்ணின் பெற்றோர்கள்தான் பெரும்பாலும் அந்த பொருளாதாரச் சுமையைச் சுமக்கின்றனர். தங்கள் பெண்ணின் நிம்மதியான எதிர்கால வாழ்க்கைக்கு வழிவகுக்கும், அத்தியாவசிய முதலீடாகத்தான் பெற்றோர்கள் அந்தச் சுமையைக் கருதுகின்றனர். இது ஒரு சூதாட்டம் போல்தான். பெண்ணின் வாழ்க்கை, எதிர்பார்த்ததுபோல் சரியாக அமையவில்லை என்றால், பொருளாதாரச் சுமையோடு, மனக்கஷ்டத்தையும் சேர்த்து, அவர்கள் சுமக்க ஆரம்பிக்கின்றனர்.
வரதட்சணை பரிமாற்றம் சட்டத்தால் தடை செய்யப்பட்டது என்றாலும், அதை அனைத்து தரப்பினரும் மதித்து செயல்படுவதாகத் தெரியவில்லை. மணமகனின் படிப்பு, வேலை, சம்பளம், குடும்பச் சொத்து மற்றும் பிற வருமானங்களைச் சுற்றி வரதட்சணை தேவைகள் வட்டமிடுகின்றன.
மணமகளின் கல்வித் தகுதி, வேலை, மாத வருவாய் ஆகிய காரணிகள் வரதட்சணை அளவீட்டை ஓரளவு குறைக்கும் வல்லமை படைத்தவை. நாங்கள் ஒன்றும் கேட்கமாட்டோம். ஆனால், உங்கள் பெண்ணுக்கு செய்ய வேண்டியதை செய்யுங்கள் என்ற பிள்ளை வீட்டாரின் பொதுவான பேச்சு, அளவு எல்லையை நிர்ணயிக்காமல் அவர்கள் எதிர்பார்க்கின்றனர் என்பதற்கான அடையாளமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.
அவர்கள் வீட்டின் இன்னொரு ஆண் பிள்ளைக்கு ஏற்கெனவே திருமணம் முடிந்திருந்தால், குறைந்தபட்சம் அந்தப் பிள்ளைக்கு வழங்கப்பட்ட சீர் வரிசைக்கு இணையாக பொன்னையும், பொருளையும், தங்கள் பெண்ணுக்கு பெற்றோர் கொடுக்க வேண்டும். அவர்கள் வீட்டுப் பெண்ணின் திருமணத்துக்குக் கொடுக்கப்பட்ட சீர்வரிசையின் மதிப்பீடும் ஒரு முக்கிய அளவுகோலாக கருதப்படும் என்பது, பெண்ணை பெற்றவர்களுக்கிடையே எழுதப்படாத நியதியாக அமைந்துவிட்டது.
20 ஆண்டுகளுக்கு மேலான உழைப்பில், பெற்றோர் சிறு சிறு துளிகளாகச் சேர்த்த சேமிப்பு, இரண்டு நாள் திருமண செலவில் கரைந்து, அது பெரும்பாலும் வாழ்நாள் கடன் சுமையோடு முடிவடைகிறது. பெரும்பாலான நடுத்தர குடும்ப திருமண நிகழ்வுகளுக்கு வீடு, நிலம் மற்றும் பிற சொத்துகள் அடமானம் வைக்கப்படுகின்றன அல்லது விற்கப்படுகின்றன.
இம்மாதிரி செலவுகள், திருமண வைபவத்தோடு மற்றும் முடிவடைவதில்லை. திருமணத்திற்கு பின்பும் தீபாவளி, பொங்கல் உள்பட பல பண்டிகைகளில் ஆரம்பித்து, குழந்தை பிறப்பு வரையிலான நிகழ்வுகள் வரை செலவுகள் தொடர்கின்றன. இதனால், பெற்றோரின் கடன் சுமையும், அதற்கான வட்டி சுமையும் அதிகரிக்கின்றன.
திருமணத்துக்கான செலவுகளை, அவசியமானவை, அவசியமற்றவை என்று இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவசிய செலவுகளில் அழைப்பிதழ், திருமண சத்திரம் மற்றும் சாப்பாடு சார்ந்த செலவுகள் முங்கியப் பங்கு வகிக்கின்றன. அவசியம் அழைக்கப்பட வேண்டியவர்களின் பட்டியலை ஆழ்ந்த ஆலோசனைகளுக்கு பிறகு தயாரித்து, அந்த எண்ணிக்கையின் அடிப்படையில்தான் பத்திரிகைகள் அச்சடிக்கப்பட வேண்டும். தொலைபேசி மூலமும் அழைப்பு விடுக்கலாம். இதனால், போக்குவரத்து செலவும் குறைய வாய்ப்பிருக்கிறது.
சத்திரங்களைப் பொறுத்தவரை, அவைகளுக்கு செலுத்தப்பட வேண்டிய மொத்த கட்டணத் தொகையில், தவிர்க்கப்படக்கூடிய பல கட்டணங்கள் ஒளிந்திருக்கின்றன. ஆகையால், சத்திர பயன்பாட்டுக்கான பல்வேறு கட்டணங்களின் முழு விவரங்களை முன்கூட்டியே விசாரித்து அறிந்து, அவைகளில் அவசியமற்ற செலவுகளுக்கு சம்மதத்தை மறுப்பதால், கணிசமான தொகையை மிச்சப்படுத்த முடியும்.
உதாரணமாக, தார்ப் பாய், தலையணைகள், ஜமுக்காளம், மின்விசிறி, ஏ.சி, ஜெனரேட்டர், மின் கட்டணம், பாதுகாப்பு, துப்புரவாளர்கள் ஆகியவற்றுக்கான கட்டணங்கள், கடைசிக்கட்ட பில் தொகையில் வெகுவாக மிகைப்படுத்தப்பட்டிருக்கும். சத்திரத்தில் உள்ள பல்வேறு வசதிகளைப் பயன்படுத்தாவிட்டாலும், அவைகளுக்கான கட்டணங்கள், பில் தொகையில் பட்டியலிடப்பட்டிருக்கும்.
ஜெனரேட்டர் ஓடாவிட்டாலும், அதற்கான ஒரு நாள் வாடகையாக ரூ.5,000 முதல் ரூ.10,000 வரை வசூலிக்கப்பட்டுவிடும். இரண்டு துப்புரவுப் பணியாளர்கள் பணி செய்யும் சிறிய சத்திர பயன்பாட்டில், 20 துப்புரவாளர்களுக்கான கட்டணத் தொகை உள் அடங்கியிருக்கும். முன்கூட்டியே சத்திர நிர்வாகத்திடம் சுமுகமாகப் பேசி, கட்டணங்களைப் பற்றிய முழு விவரங்களைக் கேட்டறிந்து, செலவினங்களை குறைக்க முற்பட்டால், பொருள் செலவு ஓரளவு மிச்சமாகும்.
தற்காலத்தில், வசதி படைத்தவர்களின் வீட்டுத் திருமணங்களில்கூட, முகூர்த்தம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சிகளுக்கு தனித் தனி அழைப்பிதழ்கள் கொடுக்கப்படுகின்றன. நெருங்கிய சுற்றத்தினர் மட்டும் முகூர்த்த நிகழ்ச்சிக்கும், நண்பர்கள் வரவேற்புக்கும் அழைக்கப்படுகின்றனர். இந்த முறையில், பல்வேறு செலவினங்கள் குறைய வாய்ப்பிருப்பதால், இதையே மற்ற தரப்பினரும் பின்பற்றலாம்.
திருமண ஏற்பாடுகள் அனைத்தையும், ஒப்பந்தக்காரர்களிடம் விடும் முறை, இப்பொழுது வேரூன்றிவிட்டது எனலாம். ஒப்பந்தக் கட்டணங்களில் உள்ளடங்கிய விவரங்களைக் கேட்டு அறிந்து, தேவை இல்லாதவைகளை ஒப்பந்தப் பட்டியலிலிருந்து நீக்குவதன் மூலம் செலவை ஓரளவு குறைக்கலாம்.
உணவு பரிமாறப்படும் கூடத்தின் மேற்பார்வைக்கென நெருங்கிய உறவினர் அல்லது நண்பரை நியமிப்பதால், விருந்தோம்பலை பேணிக் காப்பதோடு மட்டுமல்லாமல், உணவு வீணாவதையும் தடுக்கலாம். தனியாக ஆள் இல்லாத இலைகளில்கூட சாப்பாடு பரிமாறி, அதற்கும் சேர்த்து கட்டணம் கணக்கிடுவதை மேற்பார்வையாளர் தடுக்கலாம். உணவு பந்திகள், அக்கறையுடன் மேற்பார்வையிடப்பட்டால், வீணாகும் செலவுகளைக் குறைக்க அது பெருமளவில் வழி வகுக்கும்.
கடன் வாங்கி கொண்டாடப்படும் திருமணங்களில், பிள்ளை வீட்டார், தங்களுக்குத் தெரிந்த எண்ணற்ற நபர்களுக்கு அழைப்பு விடுக்கும் பழக்கம் இன்றும் நிலவுகிறது. பெண்ணைப் பெற்றவர்கள் இந்த செலவுகளை முழுவதும் ஏற்பது நியாயமாகாது. இம்மாதிரி சூழ்நிலையில், பிள்ளை வீட்டினரும், விருந்து செலவின் ஒரு பகுதியை ஏற்றுக்கொள்வதுதான் சரியான முறையாகும்.
காதல் திருமணங்கள் சகஜமாகிவிட்ட இந்த காலக் கட்டத்தில், திருமண செலவுகளை பெருமளவு குறைப்பதோடு மட்டுமல்லாமல், அந்த செலவுகளை பெண்ணைப் பெற்றவர்கள் மீது மட்டும் பெருமளவில் சுமத்தாமல், இரு தரப்பினரும் சம பங்கில் ஏற்றுக்கொள்ளும் உடன்பாடுகளையும், மாப்பிள்ளையும், பெண்ணும் தங்கள் பெற்றோரிடம் விளக்கி சம்மதிக்க வைக்கவேண்டும். இக்கால இளம் பெண்கள், பெரும்பாலும் ஆடம்பர நகைகளை அணிவதில்லை.
ஆகையால், மாப்பிள்ளையின் பெற்றோர்கள், தங்க நகைகளுக்கான தேவையைக் குறைத்துக்கொள்ளும் வழக்கத்தை மேற்கொள்ள வேண்டும். தங்கள் பெண்களுக்கு தங்கம் வழங்க விரும்பும் பெற்றோர்கள், மத்திய அரசால் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட வட்டி ஈட்டக்கூடிய தங்கப் பத்திரங்களில் முதலீடு செய்து, அதை பரிசாக வழங்கலாம்.
பெண் குழந்தையின் எட்டு வயது முதல், அவளுடைய கல்வி, திருமணச் செலவுகளுக்கு பெற்றோர்கள் சேமிக்கத் துவங்க வேண்டும். வங்கி வைப்பு நிதிகளின் மீதான வட்டி விகிதம், பண வீக்கத்திலிருந்து முற்றிலும் பாதுகாப்பு அளிப்பதில்லை.
ஆகவே, சேமிப்பின் ஒரு பகுதியை, முறையான தொடர் முதலீட்டு முறையின் மூலம் பங்கு மூலதனம் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளிலும், மற்றொரு பகுதியை பங்கு மூலதனம் மற்றும் கடன்பத்திரங்களை உள் அடக்கிய மியூச்சுவல்
ஃபண்டு திட்டங்களிலும் முதலீடு செய்வதால், பண வீக்கத்தைத் தாண்டிய பொருளாதார பலனைப் பெறலாம்.
பொருளாதாரத் தகுதிக்கு அப்பாற்பட்ட, பிரமாண்ட திருமணங்களால், தங்கள் பெண்ணின் இல்லற வாழ்க்கையின் தரத்தை உயர்த்திவிடலாம் என்ற எண்ணங்கள் பெற்றோர்களால் களையப்பட வேண்டும். மணமகனுக்கும், மணப்பெண்ணுக்கும் இடையேயான மனப்பொருத்தம் மட்டும்தான் அதை சாதிக்க முடியும் என்பதை உணர வேண்டும்.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் உடல் வளர்ப்பு மட்டுமன்றி, தெளிவும், ஆரோக்கியமும் மிகுந்த மன வளர்ப்பிலும் கவனம் செலுத்தினால், வாழ்க்கையில் எத்தகைய சூழ்நிலைக்கும் அவர்கள் தங்களை தயார்ப்படுத்திக்கொள்ள அது உதவும்.
தங்கள் திருமணத்திற்குப் பிறகு, பெற்றோர்களை நிரந்தர கடனாளியாக்காத திருமணங்களை திட்டமிடுவதில், தற்கால இளைய சமுதாயத்திற்கு பெரும் பங்கும், பொறுப்பும் உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
20 ஆண்டுகளுக்கு மேலான உழைப்பில், பெற்றோர் சிறு சிறு துளிகளாகச் சேர்த்த சேமிப்பு, இரண்டு நாள் திருமண செலவில் கரைந்து, அது பெரும்பாலும் வாழ்நாள் கடன் சுமையோடு முடிவடைகிறது.

வரலாறு மிக முக்கியம்...

Dinamani

By என். செந்தில்குமார்

First Published : 23 November 2015 12:56 AM IST


வரலாறு என்றாலே கடந்த காலம் தானே? அதை எதற்காக நாம் அறிந்துகொள்ள வேண்டும்? என்ற கேள்வி பொதுவாகப் பலருக்கும் இருக்கிறது. வரலாறு என்பது கடந்த காலம் அல்ல. அது, நிகழ்காலத்தை நிர்ணயிக்கும் விசை. எதிர்காலத்தை தீர்மானிக்கப்போகின்ற மறைமுக சக்தி.
மன்னன் என்பவன் எப்படி இருக்க வேண்டும்? அவனது செயல்பாடுகள் மக்களுக்குப் பயனளிக்கும் வகையில் எவ்வாறு இருக்க வேண்டும் என்று கி.மு. 262-இல் நிறுவப்பட்ட அசோகரது கல்வெட்டுகளில் ஒன்றைப் பாருங்கள். அதன் முக்கியத்துவம் இன்றும்கூட எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது.
"மாமன்னராகிய நான் எந்த நேரத்திலும் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தாலும், தேரில் பயணம் செய்து கொண்டிருந்தாலும், வேறு எந்த இடத்தில் எப்படி இருந்தாலும், அரசு அலுவலர்கள் மூலம் மக்களின் பிரச்னைகள் தொடர்பான தகவல்கள் உடனுக்குடன் எனக்கு அனுப்பப்பட வேண்டும். அதன்மூலம் மட்டுமே மக்களின் பிரச்னைகளை உடனடியாக என்னால் கவனிக்க முடியும்.
கொடை மற்றும் நலத்திட்டப் பொது அறிவிப்புகள் தொடர்பாக நான் வாய் வார்த்தைகளாகப் பிறப்பித்திருக்கும் ஆணைகள் அல்லது அமைச்சர்களுக்கு வந்து சேரும் அவசர உத்தரவுகள் தொடர்பாக யாருக்காவது ஏதேனும் கருத்து வேறுபாடு ஏற்பட்டால், அது தொடர்பான தகவல்கள் உடனடியாக மன்னராகிய என்னிடம் வந்து சேர வேண்டும்.
இதை என்னுடைய கடமையாக நினைக்கிறேன். அதைச் சிறப்பாகச் செய்ய நான் கடும் முயற்சியை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.
ஆகவே, வேலைகளைத் தாமதமின்றி உடனே முடிக்க வேண்டும். மக்களின் நலத்தை முன்னெடுப்பதைவிட முக்கியமான வேலை ஏதும் இல்லை. இந்தத் தர்ம ஆணை வெகு காலத்துக்கு இருப்பதற்காகவும், வருங்கால சந்ததியினரும் இதன்படி நடந்து உலகின் நலத்தைப் பேணுவதற்காகவும் கல்வெட்டில் எழுதப்படுகிறது' - இவ்வாறு அந்தக் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் கல்வெட்டு உணர்த்தும் உண்மையை ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் எப்போதும் நினைவில் கொண்டிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு இல்லை என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு, இப்போது இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களின் மன ஆறுதலுக்குக்கூட மத்திய அரசு வாய்த் திறக்காமல் மெளனம் சாதிப்பது.
அண்மையில் பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக தமிழகத்தில், குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்களில் நேரிட்டுள்ள சேதங்களை முதல்வர் ஜெயலலிதா, மத்திய அரசிடம் விளக்கிக் கூறியுள்ளார்.
தமிழகம் முழுவதிலும் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேத விவரங்கள் இப்போது மதிப்பீடு செய்யப்பட்டு வருவதாகவும், 23-ஆம் தேதிக்குள் (திங்கள்கிழமை) தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்தும், மத்திய அரசின் பிற நிதியுதவிகளைக் கோரியும் விரிவான மனு, மத்திய அரசிடம் அளிக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அப்போது தெரிவித்தார்.
மேலும், இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு முதல்வர் பேசியபோது, மத்தியக் குழு தமிழகத்துக்கு அனுப்பி வைக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி அளித்தார் என்பது தமிழக அரசு சார்பில் வெளியாகியுள்ள செய்தி.
இதேபோல், அண்டை மாநிலமான ஆந்திர மாநிலத்தில் மழை நிவாரணப் பணிகளுக்காகவும், பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வுக்காகவும் மத்திய அரசு முதல்கட்டமாக ரூ.1,000 கோடி வழங்க வேண்டும் என்று அம் மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு வலியுறுத்தியுள்ளார்.
மேலும், மழை பாதித்துள்ள மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்புப் பணிகளுக்கு உதவ வேண்டுமென்று பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், விவசாயத் துறை அமைச்சர் ராதா மோகன் சிங் ஆகியோருக்கும் அவர் கடிதம் எழுதியுள்ளார்.
இந்த நடைமுறைகள் இந்தக் காலத்தில் தேவைதானா? அமெரிக்காவிலும், பிரான்ஸிலும் ஏதேனும் அசம்பாவிதங்கள் நேரிட்டால், ஏன் பாகிஸ்தானில் ஏற்பட்டால்கூட அடுத்த சில மணி நேரங்களுக்குள் வருத்தம் தெரிவிக்கும் இந்திய பிரதமருக்கு தமிழகத்திலும், ஆந்திரத்திலும் ஏற்பட்ட இயற்கைப் பேரிடர்களை அந்தந்த மாநில அரசுகள் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை.
நாட்டில் இயற்கைப் பேரிடர்கள், சீற்றங்கள் ஏற்படும்போது மத்தியில் ஆளும் அரசு தாமாகவே முன்வந்து பாதிப்புக்குள்ளான மாநிலங்களுக்குத் தேவையான நிதியை ஒதுக்கி நிவாரணப் பணிகளைத் தொடங்கியிருக்க வேண்டும்.
மாநிலத்திலிருந்து கிடைக்கும் உற்பத்தி வரி, விற்பனை வரி, வருமான வரி என அத்தனை வரிகளையும் உயரதிகாரத்துடன் பெற்றுக் கொள்வதை தார்மீகக் கடமையாகக் கொண்டுள்ள மத்திய அரசுக்கு, பாதிக்கப்படும் மாநில மக்களுக்குத் தானே முன்வந்து உதவ வேண்டியதும் தமது தார்மீகக் கடமை என்பது தெரியாதா?
பிரதமர் மோடி பொது நிகழ்ச்சிகளில் பேசும்போது, நாட்டுக்காக உழைத்தவர்களையும், அவர்களது தியாகங்களையும் நாம் நினைவுக்கூர வேண்டும். வரலாற்று நிகழ்வுகளை நாம் எப்போதும் திரும்பிப் பார்க்க வேண்டும் என்பார்.
அவர், தற்போது மாமன்னர் அசோக சக்ரவர்த்தியின் வரலாற்றைத் திரும்பிப் பார்த்திருப்பாராயின், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல்கூட சொல்லாத நிலையை அவர் கடைப்பிடித்திருக்கமாட்டார். நேரடியாக பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு வருகைத் தந்து நிவாரணப் பணிகளை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொண்டிருப்பார்.
அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என்கிறது சிலப்பதிகாரம்.

அரசியல் நடத்துவது அழகல்ல!


Dinamani


By ஆசிரியர்

First Published : 24 November 2015 01:17 AM IST


கடந்த இரு வாரங்களாக தமிழகத்தில், குறிப்பாக சென்னை, கடலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பெய்துவரும் பலத்த மழை காரணமாக மழைச் சேதங்களை ஈடுசெய்ய வெள்ள நிவாரண நிதியாக மொத்தம் ரூ.8,481 கோடி தேவை என்றும், உடனடியாக ரூ.2,000 கோடி வழங்க வேண்டும் என்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் அனுப்பிய அடுத்த சில மணி நேரங்களில், மத்திய அரசு 939.63 கோடியை உடனடியாக விடுவிக்க ஆணை பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மழைச் சேதம், உயிர்ச் சேதம் குறித்து பிரதமர் மோடி வருத்தம்கூட தெரிவிக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் குறை கூறிக் கொண்டிருக்கும் வேளையில் இத்தகைய உடனடி நடவடிக்கை, ஆறுதலாக அமைந்துள்ளது. இந்த நிவாரணம் முதல் கட்டம்தான். தமிழக முதல்வர் ஏற்கெனவே ரூ.500 கோடியை வெள்ள நிவாரணப் பணிகளுக்காக விடுவித்துள்ளார். தற்போது மத்திய அரசு வழங்கும் நிதியும் கிடைத்துள்ளதால் நிவாரணப் பணிகள் முடுக்கிவிடப்படும். தமிழக முதல்வர் கோரியுள்ள முழு அளவு வெள்ள நிவாரண நிதியை மத்திய அரசு கணிசமாக வழங்கும் என எதிர்பார்க்கலாம்.
நிவாரணப் பணிகள் சரிவர நடைபெறவில்லை என்று எல்லா எதிர்க்கட்சிகளும் அறிக்கை மற்றும் பேட்டிகள் அளித்து வருகின்றன. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் வசிப்போரை பாதுகாப்பான இடத்துக்கு அழைத்து வருவதும், வீடுகளை இழந்தவர்களுக்கு தாற்காலிக முகாம் அமைத்துத் தருவதும்தான் முதல் கட்டப் பணி. அதனை தமிழக அரசு செய்து வருகிறது. இன்னமும் மழை நீர் வடியவில்லை என்பதை அரசின் மீதும் குற்றச்சாட்டாகச் சொல்ல முடியாது.
சாதாரண சுரங்கப் பாதையில் தேங்கும் நீரைப் போன்று, ஒவ்வொரு புறநகர்ப் பகுதியிலும் தேங்கி நிற்கும் மழைநீரை உடனே வெளியேற்றுவது சாத்தியமல்ல. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, குடிநீர், உறைவிடம் ஆகியவற்றைத் தடையற வழங்குவதும், போக்குவரத்துக்கு வழி செய்வதும்தான் இப்போதைக்கு உடனடியாக இயலக்கூடியவை. மின் இணைப்புகளைச் சீர்செய்தல், பாதைகளைச் சரிசெய்தல் எல்லாமும் மழை நின்ற பிறகே மேற்கொள்ள வேண்டிய பணிகள். மழை வெள்ளச் சேதங்களை வைத்து அரசியல் நடத்துவது அழகல்ல.
எந்தவகையான இடர்பாடு என்றாலும் மாநகர் வாழ் மக்கள் முன்னுரிமை பெறுவதும், அதிகப் பயன்களை அள்ளிச் செல்வதும் வழக்கமான ஒன்று. தற்போது சென்னை மாநகரம் கடந்த 100 ஆண்டுகளில் காணாத மழையைக் கண்டுள்ள நிலையில், அதன் ஒவ்வொரு பகுதியினரும், மத்திய - மாநில அரசுகளின் வெள்ள நிவாரண நிதியைத் தங்களுக்கே திருப்பிவிட அழுத்தம் தருவர். பல கோரிக்கைகளை மனதாபிமான அடிப்படையிலும், அரசியல் நெருக்கடி மூலமும் சாதித்துக்கொள்ளவே முனைவர். இருப்பினும், சென்னைக்கு வெளியே ஏற்பட்டுள்ள மழைச் சேதங்களுக்கும் இணையான முன்னுரிமை தரப்பட வேண்டும். குறிப்பாக, கடலூர் மாவட்டத்துக்கு!
கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஏழைகளும், விவசாயிகளும் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவை சாலைகள் அல்ல, உடனடியாக வெள்ளம் வடிய வேண்டும் என்பதும் அல்ல. அவர்களது பயிர்களுக்கும், மீன்பிடி உள்ளிட்ட வாழ்வாதாரங்களுக்கும் ஏற்பட்டுள்ள இழப்பை ஈடுசெய்வதைத்தான் எதிர்பார்த்திருக்கிறார்கள்.
கடலூர் மாவட்டத்தில் 2011}ஆம் ஆண்டு, டிசம்பரில் ஏற்பட்ட தானே புயலின் போது 80,000 ஹெக்டேரில் பயிர்ச் சேதம் ஏற்பட்டது. 2.67 லட்சம் குடிசை வீடுகள் சேதமடைந்தன. ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மீன்பிடி வலைகளும், படகுகளும் சேதமடைந்ததும், 4,500 மின்மாற்றிகள் சாய்ந்ததும், 46 பேர் இறந்ததும் என அந்த மாவட்ட மக்கள் சந்தித்த இழப்புகள் சொல்லொணாதவை.
அதே மாவட்டத்தில், தற்போது மழை கொட்டித் தீர்த்துள்ளது. மீண்டும் ஏழைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இடம்பெயர்ந்த ஏழைகளுக்கு மீண்டும் வீடு கட்டவும், பயிர் இழப்பீட்டை தாமதமின்றி மதிப்பீடு செய்யவும் தொழில்கருவிகள் வழங்கவும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
மழைநீர் வடிகால்களையும், கழிவுநீர் வடிகால்களையும் அமைப்பதற்கும், பராமரிப்பதற்கும் அரசு போதிய நிதி ஒதுக்கீடு வழங்காமல் இல்லை. சென்னை மாநகராட்சியின் மழைநீர் வடிகால் துறை, 2012-13இல் ரூ.136.05 கோடி, 2013-14இல் ரூ.215 கோடி, 2014-15இல் ரூ.450 கோடி என்று ஒதுக்கீடு பெற்றிருக்கிறது. மழைநீர் வடிகால் குழாய்கள் வழியாக வடிந்ததெல்லாம் மக்களின் வரிப் பணம்தானே தவிர, தண்ணீர் அல்ல என்பதை வெள்ளம் தேங்கிக் கிடக்கும் சாலைகள் வெளிச்சம் போடுகின்றன.
சென்னை மாநகரைப் பொருத்தவரை, தற்போது மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளை செயற்கைக்கோள் உதவியுடன் படம் பிடித்து, இந்த நீர் வெளியேறும் பாதைகளை இன்றைய மாறுபட்ட புவிச்சூழலுக்கு ஏற்ப கணிக்கவும், மழைநீர் வடிகால் அமைக்கவும் வேண்டும். இதே அளவுக்கு மழை மீண்டும் பெய்தாலும், வெள்ளம் தேங்காத அளவுக்கு பெரிய வடிகால்கள் அமைப்பதுதான் நிரந்தரத் தீர்வாக இருக்கும்.
தமிழ்நாட்டில், பரவலாக மிகப் பலத்த மழை பெய்திருந்த போதிலும், இப்போதும்கூட நிரம்பாத ஏரிகள் குறித்த செய்திகள் நாளிதழ்களில் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. தமிழ்நாடு முழுவதும் இந்த இரு வார மழையில் நிரம்பாத ஏரிகள் எவை என பொதுப்பணித் துறை மூலம் கணக்கெடுத்து, அதற்கான காரணங்களைக் கண்டறிந்து, நீர்வரத்துப் பாதைகளைச் சீரமைப்பதற்கும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறுகளிலிருந்தாவது பாடம் படிக்க நமது அதிகாரிகள் கற்றுக் கொண்டால் அதுவே பெரிய உபகாரம்!

Saturday, November 21, 2015

கூகுளில் உங்கள் விவரங்கள் ..... சைபர் சிம்மன்

Return to frontpage




கூகுள், தனது பயனாளிகளுக்காகப் புதிய வசதியை அறிமுகம் செய்திருக்கிறது. இது பயன்பாட்டு நோக்கிலானது இல்லை என்றாலும் முக்கியமானது. பயனாளிகள் தங்களைப் பற்றிய விவரங்களைக் கட்டுப்படுத்தும் வசதியை கூகுள் அளிக்கிறது.

சமூக வலைதளங்களில் பதிவு செய்யும்போது நம்மைப் பற்றிய பல விஷயங்களைச் சமர்பிக்கிறோம். பெயர், இ-மெயில் முகவரி, இருப்பிடம், செல்போன் எண் உள்ளிட்ட பல தகவல்கள் நம்மிடம் இருந்து கோரப்படலாம். இந்த விவரங்கள் நம்முடைய சேவைப் பக்கத்தில் மட்டும் அல்லாது பொதுவிலும் இடம்பெற வாய்ப்பிருக்கிறது.

பொதுவில் என்றால், இணையத்தில் தேடப்படும்போது நம்முடைய பெயர் தொடர்பான விவரங்களில் இவையும் தோன்றுவதற்கான வாய்ப்பாகும்.

தனியுரிமை நோக்கில் இது அத்தனை பாதுகாப்பானது அல்ல. இந்நிலையில் கூகுள் அதன் பயனாளிகளுக்கு அவர்களைப் பற்றிய விவரங்களைக் கட்டுப்படுத்தும் வாய்ப்பை அளிக்கும் வகையில் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது.

கூகுள் 'அபவுட் மீ' (https://aboutme.google.com/) பக்கத்தில் நுழைந்து இதைப் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்தப் பக்கத்தில் நுழைந்தால் கூகுள் சேவை மூலம் தெரிவிக்கப்பட்ட உங்களைப் பற்றிய தகவல்களில் எவை எல்லாம் பொதுவில் இருக்கின்றன என காண்பிக்கப்படுகிறது. அவற்றை நீங்கள் எடிட் செய்யலாம் அல்லது நீக்கலாம்.

இவை கூகுள் பிளஸ் விவரங்கள் தொடர்பானது என்றாலும் தனியிரிமை விழிப்புணர்வில் முதல் படியாகக் கருதலாம்.

தாயை கவனிக்காத மகன்கள் மீது நடவடிக்கை: உயர் நீதிமன்றம் உத்தரவு

Return to frontpage

தாயை கவனிப்பது மகன்களின் தார்மீக கடமை. அந்த கடமையில் தவறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மதுரையைச் சேர்ந்தவர் பொன்தேவகி (70). இவரது மகன்கள் இளங்கோவன், ராஜ்குமார், ஒரு மகள் இளமதி. மகன்கள், மகளிடம் பராமரிப்பு செலவு கோரி பொன்தேவகி மதுரை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மகன்கள் இருவரும் தலா ரூ.3 ஆயிரம், மகள் ரூ.5 ஆயிரம் மாதம்தோறும் வழங்க வேண்டும் என 15.9.2014-ல் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி இளங்கோவன் உயர் நீதிமன்ற கிளையில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அதில், தன் தாயார் தனது கடமைகளை சரியாக நிறைவேற்றவில்லை. தந்தையின் சொத்தை அபகரிக்க முயன்றார். ஒரு தாயார் குழந்தையை பத்து மாதம் சுமந்து பெற்றால் மட்டும் போதாது. அந்த குழந்தையின் எதிர்கால வளர்ச்சிக்கும் உதவ வேண்டும். அதை தாயார் செய்யவில்லை. எனவே, அவருக்கு பரமரிப்பு செலவு வழங்க வேண்டியதில்லை எனக் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி எஸ்.விமலா முன் விசாரணைக்கு வந்தது. இளங்கோவனின் குற்றச்சாட்டுகளை பொன்தேவகி மறுத்தார். மகன்கள் இருவரையும் வளர்த்தேன். மகள் வீட்டில் வசித்து வருகிறேன். இதனால் எனது வீட்டை மகளுக்கு வழங்கினேன். மகன் சொல்வது உண்மையல்ல என அவர் கூறினார்.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு: பிள்ளைகளிடம் பராமரிப்பு செலவு கேட்டு தாய் ஒருவர் நீதிமன்றத்துக்கு வந்தது துரதிருஷ்டவசமானது. பெற்றோரை பிள்ளைகள் கவனிக்க வேண்டியது சட்டரீதியான, அடிப்படை உரிமையாகும். இயற்கை, தார்மீகம் மற்றும் மனித உரிமையும் ஆகும். இந்த உரிமைகளை பிள்ளைகள் வழங்க மறுக்க முடியாது. தர்மப்படி பெற்றோர்களைக் காப்பாற்ற வேண்டியது பிள்ளைகளின் கடமையாகும். அந்த கடமையில் தவறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். இந்த வழக்கில் தாயின் கடமைகளை கூறும் மனுதாரர் அவரது கடமையை நினைத்துப் பார்க்கவில்லை.

பிறக்கும்போது குழந்தை அழுவதைக் கேட்டு மட்டுமே தாய் சிரிப்பார். மற்ற நேரங்களில் குழந்தைகள் அழுவதைப் பார்த்து தாய் சிரிப்பதில்லை. மனுதாரர் தாயாருக்கு ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும். 2-வது மகன் வெளிநாட்டில் வசிக்கிறார். மாதம் ரூ.3 லட்சம் சம்பாதிக்கிறார். அவர் தாயாருக்கு மாதம் ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும். மகள் தனது தாயாருக்கு மாதம் ரூ.5 ஆயிரம் வழங்குவதாகக் கூறியுள்ளார். ஆனால் அவரது கணவர் இறந்துவிட்டார். இதனால் அவர் தாயாருக்கு மாதம் ரூ.3 ஆயிரம் வழங்கினால் போதும் என நீதிபதி உத்தரவிட்டார்.

Varsity Ignores SHRC Order on Malpractice

By Rashmi Belur

Published: 21st November 2015 06:36 AM
Last Updated: 21st November 2015 06:36 AM
BENGALURU: The state’s health university is yet to take action against a nursing college for locking up members of a flying squad in an elevator despite a suo motu case being registered by the State Human Rights Commission (SHRC) five months ago.



Express had reported the story on May 10 about the flying squad members getting stuck in an elevator of a nursing college where they had gone to check malpractice. The SHRC then registered a suo motu case against the college and issued a notice to the Rajiv Gandhi University of Health Sciences (RGUHS).

The SHRC order passed after a hearing on June 8, a copy of which is with Express, reads, “Perused the news item published in The New Indian Express dated 10-5-2015 under the caption ‘Flying Squad Kept in Lift at Nursing Exam Copying Centre’ is registered as a suo motu case by the commission. Send a copy of the paper clipping to the Vice-Chancellor of RGUHS, Bangalore, for a report in the matter within six weeks.”

RGUHS has not reposnded to the order so far. When contacted, Registrar (Evaluation) Dr Sachidanand told Express, “We have issued notices to the squad members and to the college. Once we receive explanations from them, we will submit a report to the commission.”

Several medical professionals and senior faculties in the flying squads had shared the difficulties they faced even to enter examination centres where malpractice was going on, after which Express published a detailed report.

UGC spoils govt bid to regulate pvt varsities


Prakash Kumar NEW DELHI, Nov 21, 2015, DHNS


The University Grants Commission (UGC) has spoilt the Centre’s efforts to bring in new regulations for private universities, provisions of which sought to effectively maintain their standards and check irregularities in their functioning.

After almost five years of consultation, the Human Resource Development (HRD) Ministry finalised the new regulations and sent it to the UGC for its drafting in a proper legal format earlier this year.

The higher education regulator, however, sent the ministry a “completely new” set of regulations for establishing standards and maintenance of private universities only after getting it approved at the full commission meeting in September, official sources told Deccan Herald.

For drafting the new regulations, the UGC had set up an expert committee, which not only amended certain provisions that were made in the original draft of the regulations but also “completely” changed language of other provisions made in the previous one.

Interestingly, the original regulations, finalised by the ministry, had proposed restricting private universities from opening their off campus beyond the territorial jurisdiction of their states. The ministry had brought in this provision in view of various complaints about some of the private universities opening their campuses abroad and duping students, sources said.

The UGC, however, dropped this provision in the new draft of the regulations to allow private universities open their off campuses even abroad, with the permission of the government. “The commission has used its power, vested into it through the UGC Act, to thrust the new regulations on the ministry at a time when all the provisions made in the previous one was vetted by the law ministry and its notification was only left to happen. The ministry can not formulate any regulations,” official sources said.

The original regulations, finalised by the ministry, were vetted by the law ministry thrice. “The ministry held several rounds of consultation, sent clarifications to the questions of the law ministry and gave a final shape to the original regulations, which was actually drafted by the UGC itself and sent to the ministry in 2010,” the sources said
Though the ministry would take up the matter with the UGC again for accepting its suggestions, the notification of the regulations for private universities would take more time, he added.

மனிதர்கள் உருவாக்கிய பேரழிவு


‘‘கடுமையான மழை பெய்யும்போது, பெரும் இழப்பு ஏற்படுவது தவிர்க்க முடியாத ஒன்று,’’ என்ற கூற்று சமீபத்திய சென்னை வெள்ளத்தைத் தொடர்ந்து மீண்டும் முன்வைக்கப் பட்டுள்ளது. இது எவ்வளவு தூரம் உண்மை? வரலாறு நமக்கு என்ன சொல்கிறது?
வரலாறு என்ன சொல்கிறது?
பருவமழையின் காரணமாக நகரமைப்பிலும் அடிப்படை மனிதநலனை பாதிக்கும் வகையிலும் நிகழ்ந்துள்ள இந்தப் பேரழிவுக்கு வளர்ச்சி நடவடிக்கைகள் காரணம் அல்ல என்றும், எதிர்பாராத பெருமழையே காரணம் என்றும் நிறுவுவதற்கு அரசியல்வாதிகளும் அரசு அதிகாரிகளும் முயற்சிப்பது வழக்கமான ஒன்றுதான். அதேநேரம் எதிர்பாராத மழை என்பது சென்னையைப் பொறுத்தவரை வழக்கமான ஒன்றுதான். வங்கக் கடலில் வலுவான அலைகளை எதிர்கொள்ளும் கடற்கரை நகரமான சென்னைக்குக் கனமழையோ, புயலோ புதிய விஷயம் அல்ல. வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால், கிட்டத்தட்ட ஒவ்வொரு 10 ஆண்டு இடைவெளியிலும் சென்னை கனமழையை எதிர்கொண்டு வந்திருக்கிறது: 1969, 1976, 1985, 1996, 1998, 2005, 2015.
கடந்த வார இறுதியில் பெய்த 235 மி.மீ. மழை என்பது பெருமழைகளிலேயே பெரியது என்றெல்லாம் சொல்ல முடியாது. இதே நுங்கம்பாக்கம் வானிலை ஆராய்ச்சி மையத்தில் உள்ள மழைமானியில் முன்னதாக 2005 அக்டோபர் 27-ம் தேதியில் 270 மி.மீ., 1969-ல் 280 மி.மீ., 1976 நவம்பரில் 450 மி.மீ. மழை பொழிந்துள்ளது பதிவாகியுள்ளது.
1976-ல் வெள்ளம் வந்தபோது அடையாறின் கரைகள் உடைந்து வீடுகளின் முதல் தளம்வரை வெள்ளம் சூழ்ந்தது. ஆனால், அந்த நாட்களில் சென்னை ‘ஒரு பெரிய கிராமம்' என்று கிண்டலடிக்கப்படும் அளவிலேயே இருந்தது. பெருநகர அந்தஸ்தைப் பெறும் ஆவல் கொண்ட வளர்ச்சி பெறாத ஒரு ஊராகவே இருந்தது.
'மேட் இன் சென்னை'
ஆனால் இன்றைக்கு, ‘மேட் இன் சென்னை' என்ற பெருமிதத்தை எட்டிப்பிடிக்கும் நோக்கத்துடன் சொகுசுக் கட்டிடங்களின் இருப்பிடமாக மாறுவதற்குச் சென்னை என்னவற்றை எல்லாம் செய்திருக்கிறது தெரியுமா? அடையாறின் வெள்ளநீர் வடிநிலத்தின் மீது புதிதாக எழுந்து நிற்கும் (அடிக்கடி இடிந்து விழுந்துகொண்டே இருக்கும்) விமான நிலையம், எளிதில் வெள்ளப் பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய கோயம்பேட்டில் பிரம்மாண்டப் பேருந்து நிலையம், பக்கிங்ஹாம் கால்வாய் மற்றும் பள்ளிக்கரணை சதுப்புநிலத்தைச் சமாதியாக்கி மூடிவிட்டு மேலே ஓடிக்கொண்டிருக்கும் எம்.ஆர்.டி.எஸ். ரயில், நீரோட்டத்தின் தன்மையைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் கட்டப்பட்ட அதிவிரைவு சாலைகள், புறவழிச் சாலைகள், நீர்நிலைகளை ஆழப் புதைத்து மேலெழுந்து நிற்கும் தகவல் தொழில்நுட்ப வழிப்பாதை, அறிவுசார் வழிப்பாதையின் பொறியியல் கல்லூரிகள், அது மட்டுமல்லாமல் முக்கிய மழைநீர் வடிகால்கள், நீர்ப்பிடிப்புப் பகுதிகளின் மீதும் வாகன, தொலைத்தொடர்பு நிறுவனங்களின் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், சொகுசு அடுக்குமாடிக் குடியிருப்புகள் போன்றவை கட்டப்பட்டுள்ளன.
‘மேட் இன் சென்னை' மோகத்தில் திளைத்துக்கொண்டிருக்கும் சென்னை நகரம், வழக்கமான பருவமழை மாற்றங்களிலிருந்து தன்னை மீட்டெடுத்துக்கொள்ளும் சக்தியை அதிவேகமாக இழந்து வருகிறது. இயற்கை அதிர்ச்சிகளைத் தாங்கிக்கொள்ளக்கூடிய கட்டமைப்பு வசதிகளுக்குப் பதிலாக, பெரும் வணிகக் கட்டமைப்பு சென்னை மீது ஆட்சி செலுத்த ஆரம்பித்துள்ளது.
தற்போது நடந்துள்ள பேரழிவு எளிதில் தவிர்த்திருக்கக்கூடியது என்பது மட்டுமல்ல, சுயநல அக்கறை கொண்டவர்களின் நெருக்கடிக்கு நகரத் திட்டப் பணியாளர்கள், அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் பணிந்துபோய் எடுத்த முடிவுகளின், நேரடிப் பின்விளைவுதான் இது.
பள்ளிக்கரணை பேரழிவு
சுமார் 250 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பில் சேகரமாகும் மழைநீருக்கான வடிகாலாக பள்ளிக்கரணை சதுப்புநிலம் ஒரு காலத்தில் இருந்தது, தற்போது கனவாகிவிட்டது. ஆனால், நமக்கு நினைவு தெரிந்த காலத்தில் சென்னையின் தெற்குப் பகுதியில் 50 சதுர கிலோமீட்டர் பரப்புக்குத் தண்ணீருடன் அது விரிந்திருந்தது. இன்றைக்கு அதில் எஞ்சியிருப்பது எவ்வளவு தெரியுமா? வெறும் 4.3 சதுர கி.மீ. மட்டுமே. அதன் நிஜப் பரப்பில் பத்தில் ஒரு பங்குகூட இல்லை. இந்தச் சதுப்புநிலப் பகுதியின் வடக்குப் பகுதியில் புற்றுக்கட்டிபோல, பெரும் மலையாகத் துருத்திக்கொண்டு வளர்ந்து நிற்கிறது குப்பைக்கூளம்.
இந்தச் சதுப்புநிலத்தை இரண்டு முக்கிய சாலைகள் பிளந்து செல்கின்றன. அவற்றுக்கு இடையில் இருக்கும் சின்னச் சின்ன மதகுகள் பெரும் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் சேரும் மழை நீரைச் சதுப்பு நிலத்தின் ஒரு பக்கத்திலிருந்து இன்னு ஒரு பக்கம் கொண்டுவந்து சேர்ப்பதற்கு நிச்சயம் போதுமானவை அல்ல. இந்தச் சதுப்பு நிலத்தின் விளிம்புகளைத் தேசியக் கடல் தொழில்நுட்ப நிறுவனம் (NIOT) போன்ற நிறுவனங்கள் கரைத்துவிட்டன. நீர்நிலைகளின் மீது கட்டுமானங்களை ஏற்படுத்துவதால் ஏற்படும் தாக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டைச் செய்வதற்கு அங்கீகரிக்கப்பட்ட ஒரு நிறுவனம் NIOT என்பதுதான் இதில் வேடிக்கை!
இந்தச் சதுப்புநிலத்தின் மற்றப் பகுதிகள் ஐ.டி. வழிப்பாதைக்காகப் பலி கொடுக்கப்பட்டுவிட்டன. அதேநேரம் மழைநீருக்கு சொகுசு நிறுவனம், குடிசை என்பது போன்ற பேதங்கள் எல்லாம் தெரியாதே. கண்ணாடியாலும் இரும்பாலும் கட்டப்பட்ட மென்பொருள் பூங்காக்களில் அறிவில் உயர்ந்தவர்கள் வேலை செய்வதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், தான் ஏற்கெனவே வசித்த பழைய இருப்பிடத்தைத் தேடி மழைநீர் வழக்கம்போல் பாய்ந்து செல்கிறது. அமெரிக்க நிறுவனங்களின் பின்னணி வேலைகளை முற்றிலும் தடை செய்தபடி.
திட்டமிட்ட அழிவு
சென்னையின் முதன்மை அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்ந்துவந்த நீர்நிலை சங்கிலிப் பிணைப்பை, இப்போது வருவாய் வரைபடங்களில் மட்டுமே பார்க்க முடிகிறது, நிஜத்தில் அவை தடமழிந்து போய்விட்டன. ரெட்டேரியின் வியாசர்பாடி நீரோட்டத் திசையில் இருந்த 16 குளங்களில், இன்றைக்கு ஒன்றுகூட இல்லை என்பதைச் சுட்டிக்காட்டுகிறார் அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர் எம். கார்மேகம்.
இன்றைக்கு வெள்ளத்தில் மிதக்கும் ஒவ்வொரு பகுதியையும் இணைக்கும் புள்ளிகளாக, தவறான கட்டுமானத் திட்டங்கள் அமைந்துள்ளன. என்.எச். 45 மற்றும் என்.எச். 4 ஆகிய இரண்டு நெடுஞ்சாலைகளையும் இணைக்கும் சாலை கிழக்கில் வடியும் மழைநீரைத் தடுத்து அண்ணா நகர், போரூர், வானகரம், மதுரவாயில், முகப்பேர், அம்பத்தூர் போன்ற பகுதிகளை வெள்ளக் காடாக்குகிறது. மதுரவாயில் ஏரி 120 ஏக்கரிலிருந்து 25 ஏக்கராகச் சுருங்கிவிட்டது. அம்பத்தூர், கொடுங்கையூர், ஆதம்பாக்கம் ஏரிகளும் இதே கதியை அடைந்துள்ளன.
கோயம்பேடு வடிநிலப் பகுதி, கொரட்டூர், அம்பத்தூர் ஏரிகள் நிரம்பிய பின் வெளியேறக்கூடிய உபரிநீர் கால்வாய்கள் மாயமாகிவிட்டன. ஆதம்பாக்கம் ஏரியையும் பள்ளிக்கரணை சதுப்புநிலத்தையும் இணைக்கும் வீராங்கல் ஓடையின் பல பகுதிகளைக் காணோம். அடையாறு முகத்துவாரத்திலிருந்து கோவளம் முகத்துவாரம் வரையிலான தெற்கு பக்கிங்ஹாம் கால்வாயின் அகலம் எம்.ஆர்.டி.எஸ். ரயில் நிலையங்களால் 25 மீட்டரிலிருந்து 10 மீட்டராகப் பல இடங்களில் சுருங்கிவிட்டது. விருகம்பாக்கம், பாடி, வில்லிவாக்கம் ஏரிகளுக்கான முக்கிய வெள்ளநீர் வடிநிலப் பகுதிகள் அரசால் அலட்சியப்படுத்தப்பட்டுள்ளன.
திராவிடக் கட்சிகளுக்கு இடையிலான அரசியல்ரீதியிலான மோதல்களால் இடையில் நிறுத்தப்பட்டுவிட்ட சென்னை துறைமுகம் - மதுரவாயல் இடையிலான பறக்கும் சாலைக்காக, கூவத்தின் கரைப் பகுதி பெருமளவு காவு கொடுக்கப்பட்டுவிட்டது. இதனால், கூவம் நதியின் வெள்ளநீர் தாங்கும் திறன் பெருமளவு குறைந்துவிட்டது.
விதிமீறல்கள்
இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், மேலே குறிப்பிட்ட வெள்ளத்துக்கான காரணங்கள் அனைத்தும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சி.எம்.டி.ஏ.) 2010-ம் ஆண்டில் ஏற்பாடு செய்த ‘நீர்வழிச் சாலைகள்' தொடர்பான கருத்தரங்கம் ஒன்றில் அரசு அதிகாரிகள் பட்டியலிட்டுக் காட்டியவைதான். அதேநேரம் அவர்களுடைய அறிவுத் தெளிவுக்கும், செயல்பாட்டு தெளிவுக்கும் இடையில் பல விஷயங்கள் சறுக்கிவிட்டது போலத் தெரிகிறது.
சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் உருவாக்கிய இரண்டாவது மாஸ்டர் பிளானில் நீரோட்டத்துக்கு எந்த முக்கியத்துவமும் அளிக்காத கட்டுமானங்களுக்கு அங்கீகார முத்திரை வழங்கப்பட்டுள்ளது. எண்ணூர் பகுதியில் உள்ள நீர்நிலைகள், கடல்அலை ஏற்றவற்ற இடைப்பகுதி, அலையாத்திக் காடுகள் போன்றவற்றை ‘சிறப்பு மற்றும் ஆபத்தான தொழிற்சாலைகளுக்கான பகுதி' என்று மறுவரையறை செய்து, காமராஜர் துறைமுகத்துக்கு அரசு வழங்கியுள்ளது.
இவர்களா ஸ்மார்ட் பொறியாளர்கள்?
இந்தப் பிரச்சினைகளுக்குப் பின்னால் ஒரு சின்ன ஒப்பீட்டைச் செய்து பார்த்தால், நம்முடைய பல கேள்விகளுக்கு விடை கிடைக்கும். சென்னை பெருநகரின் புறநகர் பகுதியில் உள்ளது பொன்னேரி. இங்குச் சி.எம்.டி.ஏ. அங்கீகாரத்துடன் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் தற்போது கட்டிடங்களைக் கட்டி வருகின்றன. ஆனால், சி.எம்.டி.ஏ. கொடுத்துள்ள அங்கீகாரத்தில் நீர் வெளியேற்றத்துக்கு எந்த வழியும் இல்லை.
பொன்னேரியில் கடந்த வார இறுதியில் சென்னையைவிடவும் அதிகமாக 370 மி.மீ. மழை பெய்தது. அதாவது சென்னையைவிட 135 மி.மீ. அதிகமாக. பொன்னேரியும் வெள்ளத்தில் மிதந்தது. அதேநேரம் உயிரிழப்போ, சொத்து இழப்போ அதிகமாக இல்லை. இதே பொன்னேரி நகரம்தான், ஸ்மார்ட் சிட்டியாக மாற்றப்படுவதற்கு அடையாளம் காணப்பட்டுள்ளது. ஆனால், சென்னை போன்ற பெருநகரையே சரியாக நிர்மாணிக்கத் தெரியாத நம்முடைய அரசுப் பொறியாளர்கள், பொன்னேரியை மட்டும் ஸ்மார்ட்டாக கட்டப் போகிறார்களா என்ன?
- கட்டுரையாளர், சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்
தொடர்புக்கு: nity682@gmail.com

வானிலை முன்னறிவிப்பு: புதிய காற்றழுத்த தாழ்வு நிலையால் மழை வாய்ப்பு

Return to frontpage


இன்று (21.11.2015) காலை 8.30 மணியளவில் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படம்| பட உதவி: ஐ.எம்.டி. இணையதளம்.
இன்று (21.11.2015) காலை 8.30 மணியளவில் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படம்| பட உதவி: ஐ.எம்.டி. இணையதளம்.
தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளதால் தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அண்மையில் அந்தமான் அருகே நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது கடலூர் அருகே கரையைக் கடந்தது. இதனால், தமிழகத்தில் பலத்த மழை கொட்டித் தீர்த்தது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதிலிருந்து இந்த மாவட்டங்கள் தற்போதுதான் மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றன.
இந்நிலையில், தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கைக்கு அருகே புதிய காற்றழுத்த தாழ்வுநிலை மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலோர மாவட்டங்களில் மிக கனமழை, கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நெல்லை மாவட்டம் மணிமுத்தாறில் 9 செ.மீ., மழையும்; நாங்குநேரியில் 7 செ.மீ. மழையும் பெய்துள்ளது.
சென்னையைப் பொருத்தவரை கேளம்பாக்கத்தில் அதிகபட்சமாக 6 செ.மீ. மழை பெய்துள்ளது.

NEWS TODAY 22.04.2024