Friday, November 6, 2015

அஜித்தின் 'வேதாளம்' - அதிரும் 20 தெறிப்புகள்! ......ஸ்கிரீனன்



இயக்குநர் சிவா இயக்கத்தில் அஜித், லட்சுமி மேனன், ஸ்ருதிஹாசன், கபீர்கான் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'வேதாளம்'. அனிருத் இசையமைப்பில் உருவாகி இருக்கும் படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரித்திருக்கிறார்.

தீபாவளி அன்று பிரம்மாண்டமாக வெளியாக இருக்கிறது 'வேதாளம்'. அப்படத்தைப் பற்றிய தகவல்கள்:

* இரண்டு கெட்டப்களில் நடித்திருக்கிறார் அஜித். படத்தின் தற்போதைய காலகட்டத்தில் 'விநாயகா' என்ற பாத்திரத்திலும், ஃப்ளாஷ்பேக் காட்சிகளில் 'வேதாளம்' என்ற பாத்திரத்திலும் நடித்திருக்கிறார். ஃப்ளாஷ்பேக் பாத்திரத்தின் பெயரைப் படத்தின் பெயராக வைக்கலாம் என்று சிவாவிடம் சிபாரிசு செய்திருக்கிறார் அஜித்.

* ஆக்‌ஷன் கதை என்றாலும் காமெடி அதகளம் அதிகமாக இருக்கும் என்கிறது படக்குழு. சூரி, மயில்சாமி, ‘லொள்ளு சபா’ சாமிநாதன், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், பால சரவணன், ‘ஆதித்யா டி.வி.’ தாப்பா, மகேந்திரன் என ஒரு பெரிய காமெடி பட்டாளமே இப்படத்தில் இருக்கிறது. அஜீத் - சூரி இருவர் மட்டுமே நடித்த மிகப்பெரிய காமெடி சீனை மட்டும் இரண்டு நாட்களுக்குப் படமாக்கியிருக்கிறார்கள்.

* 'வேதாளம்' படத்தின் டீஸரைப் பார்த்து, இது பேய் படம் என்று அனைவருமே நினைத்தார்கள். ஆனால், இது பேய் படமல்ல என்று மறுப்பு தெரிவித்திருக்கிறது படக்குழு.

* அஜித்தைப் போன்று நமக்கு ஒரு அண்ணன் இல்லையே என்று பெண்கள் ஏங்கும் வகையில் அஜித் - லட்சுமி மேனன் காட்சிகளை இப்படத்தில் வைத்திருக்கிறார் இயக்குநர் சிவா.

* 'வீர விநாயகா' பாடல் தான் படத்தின் முதல் பாடலாக அமையவிருக்கிறது. கொல்கத்தாவில் படுவிமர்சையாக கொண்டாப்படும் விநாயகர் சதுர்த்தியின் போது இப்பாடலை அஜித் பாடி ஆடுவது போல காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். ஷோபி மாஸ்டர் இப்பாடலுக்கு நடனம் அமைத்திருக்கிறார். லட்சுமி மேனன், சூரி இருவரும் அஜித்துடன் இப்பாடலில் ஆடியிருக்கிறார்கள்.

* மொத்தம் 100 நாட்களில் படப்பிடிப்பு முடிப்பது என்று திட்டமிட்டார்கள். இடையே ஒரு சில தடங்கல்கள் ஏற்பட, இறுதிகட்டத்தில் இரவு, பகலாக பணிபுரிந்து மொத்த படத்தையும் முடித்திருக்கிறார்கள். சென்சார் அதிகாரிகள் இப்படத்துக்கு 'யு' சான்றிதழ் அளித்திருக்கிறார்கள்.

* சென்னை, கொல்கத்தா, இத்தாலி ஆகிய மூன்று இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்று இருக்கிறது. சென்னையில், பெரம்பூர் பின்னி மில், மீனம்பாக்கம் பின்னி மில், மோகன் ஸ்டுடியோ, கிண்டி ரேஸ் கோர்ஸ், வடபழனி மலர் ஹாஸ்பிட்டல், ஃபிலிம் சிட்டி, மணி மஹால், தரமணியில் உள்ள ஐடி நிறுவனம் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்று இருக்கிறது.

* கொல்கத்தாவில் விக்டோரியா அரண்மனைக்கு அருகிலும், ஹவுரா பிரிட்ஜிலும் வெளிப்புறக் காட்சிகள் படமாக்கப்பட்டு இருக்கிறது. கொல்கத்தாவில் வீட்டிற்குள் நடக்கும் காட்சிகளை எல்லாம் சென்னையில் அரங்குகள் அமைத்து காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.

* 'ஆதவன்' படத்தில் வரும் கப்பல் காட்சி படமாக்கப்பட்ட இடத்திலேயே இப்படத்தில் வரும் ஒரு கப்பல் காட்சியும் படமாக்கப்பட்டு இருக்கிறது. இத்தாலியில் உள்ள மிலான் நகரத்தில் ஒரு பாடல் மற்றும் சண்டைக்காட்சியைப் படமாக்கியிருக்கிறார்கள்.

* அஜித்தின் தங்கையாக நடித்திருக்கும் லட்சுமி மேனனின் கதாபாத்திரப் பெயர் 'தமிழ'். ஓவியம் வரைவதில் ஆர்வம் உள்ள பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

* கால் டாக்ஸி நிறுவனம் நடத்தி வருவபவராக நடித்திருக்கிறார் சூரி. அவரிடம் டிரைவராக பணிபுரியும் பாத்திரத்தில் அஜித் நடித்திருக்கிறார்.

* 'வேதாளம்' பாத்திரக் காட்சிகளில் ஸ்ருதிஹாசன் மற்றும் சூரி இருவருமே கிடையாது. லட்சுமி மேனனும் ஒரு சில காட்சிகளில் தான் வருவார். 'வேதாளம்' பாத்திரத்தின் நண்பராக அப்புக்குட்டியும், தந்தையாக தம்பி ராமையாவும் நடித்திருக்கிறார்கள்.

* இப்படத்தில் ஏகப்பட்ட சண்டைக்காட்சிகள் இருக்கின்றன. கிண்டி ரேஸ் கோர்ஸில் ஒரு சண்டைக்காட்சி, பெரம்பூர் பின்னி மில்லில் இரண்டு சண்டைக்காட்சிகள், ஃபிலிம் சிட்டியில் ஒரு சண்டைக்காட்சி, மோகன் ஸ்டுடியோவில் இரண்டு சண்டைக்காட்சிகள், இத்தாலியில் ஒரு சண்டைக்காட்சி படமாக்கி இருக்கிறார்கள். அஜித்தின் நண்பரான சில்வா சண்டைக்காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்.

* அஜித்தும், லட்சுமி மேனனும் ஹவுரா ரயில் நிலையத்தில் வந்திறங்கும் காட்சி தான், அஜித்தின் முதல்காட்சியாக படத்தில் வரவிருக்கிறது.

* அஜித் - ஸ்ருதிஹாசன் இருவருக்கும் இடையே காதல் காட்சிகள் என்பதே கிடையாது. 'நீ நல்லவன், அதனால உன்னைப் பிடிச்சிருக்கு' என்ற வசனத்தை அடிக்கடி அஜித்தைப் பார்த்து கூறுவார் ஸ்ருதி ஹாசன். இப்படத்தில் வழக்கறிஞராக நடித்திருக்கிறார் ஸ்ருதிஹாசன். பால சரவணன், ‘லொள்ளு சபா’ சாமிநாதன் ஆகியோர் ஸ்ருதிஹாசனோடு வரும் நண்பர்களாக நடித்திருக்கிறார்கள்.

* கொல்கத்தா ரோட்டில் அஜித் - வில்லன்கள் துரத்தல் காட்சியிலும் மற்றும் இத்தாலி கப்பலில் எடுக்கப்பட்ட சண்டைக்காட்சியில் மிகவும் துணிச்சலுடன் ரிஸ்க் எடுத்து நடித்திருக்கிறார் அஜித்.

* உலகம் முழுவதும் இதுவரை 1000-க்கும் அதிகமான திரையரங்குகள் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறது. படம் வெளியாவதற்கு முந்தைய நாள் தான் எத்தனை திரையரங்குகள் என்பதன் சரியான கணக்கு தெரியும்.

* டப்பிங்கின் போது காட்சிகளை எல்லாம் பார்த்துவிட்டு, "மீண்டும் நாம ஒரு படம் பண்ணலாம் சிவா" என்று கேட்டிருக்கிறார் அஜித். எப்போது என்பது விரைவில் தெரியவரும்.

* நவம்பர் 10ம் தேதி தீபாவளி அன்று வெளியாக இருக்கும் இப்படத்துக்கு இப்போதே அஜித் ரசிகர்கள் கட்-அவுட் எல்லாம் வைக்க தயாராகி வருகிறார்கள்.

* இதுவரை எந்த ஒரு தமிழ் படமும் போலந்து நாட்டில் வெளியானதில்லை. 'வேதாளம்' தான் முதன் முதலில் போலந்து நாட்டில் வெளியாகிறது.

No comments:

Post a Comment

NEET PG 2024 Exam Pattern REVISED, NMC Issues Official Notice; Here’s All You Need To Know

NEET PG 2024 Exam Pattern REVISED, NMC Issues Official Notice; Here’s All You Need To Know The NEET PG 2024 is scheduled to take place on Ju...