Friday, November 6, 2015

காணாமல் போகும் குழந்தைப் பருவம்

Dinamani


By ரமாமணி சுந்தர்

First Published : 06 November 2015 01:29 AM IST


நமது நாட்டில், ஒரு காலத்தில் ஆண் பிள்ளைகளுக்கும் பெண் பிள்ளைகளுக்கும் குழந்தைப் பருவத்திலேயே திருமணம் செய்து வைப்பது மிகவும் சகஜம். திருமணம் ஆன ஒரு சில ஆண்டுகளிலேயே துரதிருஷ்டவசமாக கணவன் இறந்து விட்டால், அந்தப் பெண்ணின் தலை முடியை மழித்து, அவளை விதவைக் கோலம் பூண வைத்து, வாழ்நாள் முழுவதும் நான்கு சுவர்களுக்குள் பூட்டி வைத்து கொடுமைப் படுத்தியதைப் பற்றி நாம் எல்லோரும் கேள்விப்பட்டிருக்கிறோம்.
ஆண்களைப் பொருத்தவரையில், மனைவி இறந்து விட்டால் இருக்கவே இருக்கிறது மறு கல்யாணம். இப்படிப்பட்ட பொம்மைக் கல்யாணங்கள் நாட்டில் வெகுவாகக் குறைந்துவிட்டன. பெண் பிள்ளைகள் மற்றும் ஆண் பிள்ளைகளின் சராசரி திருமண வயது அதிகரித்துக் கொண்டு வருகின்றது என்றாலும், பதின் பருவ (டீன் ஏஜ்) திருமணங்கள் நாட்டில் இன்னமும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன என்பது பலருக்குத் தெரியாத ஓர் உண்மை.
உலகிலேயே குழந்தைப் பருவத் திருமணங்கள் அதிகமாக நடப்பது வங்க தேசம், நேபாளம், இந்தியா போன்ற நாடுகளைக் கொண்ட தெற்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா போன்ற பகுதிகளில் தான் என்று புள்ளிவிவரங்கள் சொல்கின்றன.
உலகளவில், 18 வயதிற்குள் உள்ள மணமகள்களில் மூன்றில் ஒருவர் இந்தியப் பெண் என்ற விவரத்தை வெளியிட்டுள்ளது ஐக்கிய நாட்டு அமைப்பு (UNICEF). நமது நாட்டில், 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, 15-18 வயது உள்ளவர்களில் சுமார் பத்து விழுக்காடு பெண்களும், 10-14 வயது உள்ளவர்களில் மூன்று விழுக்காடுப் பெண்களும் திருமணம் ஆனவர்கள். 10-19 வயது வரையுள்ள பெண்களில், 1.70 கோடி பெண்களுக்குத் திருமணம் ஆகிவிட்டது.
பிகார், ராஜஸ்தான், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், குஜராத், ஆந்திரம் - தெலங்கானா போன்ற மாநிலங்களில் பெரும்பான்மையான பெண்களுக்கு 18 வயதுக்குள் திருமணம் செய்து வைத்து விடுகிறார்கள். இதில் 15 வயது நிறைவடைவதற்குள்ளேயே திருமணம் செய்து கொள்ளும் பெண்களும் அடக்கம். நகரங்களைவிட கிராமப்புறங்களிலும், ஏழ்மை நிலையில் உள்ள குடும்பங்களிலும், அதிகம் கல்வி பெறாத பெண்களுக்கும், பதின் பருவத்தில் திருமணம் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
இளம் வயதுத் திருமணங்களால் ஆண்களைவிட அதிகம் பாதிக்கப்படுவது பெண்களே என்று ஆய்வுகள் கூறுகின்றன. இளம் வயதில் திருமணம் செய்து கொள்ளும் பெண்கள், உடலும், மனமும் பக்குவமடையாத பருவத்தில் கருவுற்று உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். தாங்களே குழந்தைப் பருவத்தைத் தாண்டாத நிலையில் கருவுற்று, ஒரு குழந்தைக்குத் தாயாகும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
பாதுகாப்பான உடலுறவு, குடும்பக் கட்டுப்பாடு போன்றவற்றைப் பற்றியெல்லாம் அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பதால், இவர்கள் திருமணமான உடனேயே தாய்மை அடைவதற்கான வாய்ப்புகளும், அதிக எண்ணிக்கை குழந்தைகளைப் பெற்றெடுப்பதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கின்றன. மிகவும் இளம் வயதில் ஏற்படும் மகப்பேறு, தாய் - சேய் நலனுக்கு ஆபத்து விளைவிக்கலாம்.
இளம் வயதில் திருமணம் செய்து கொள்ளும் பெண்கள் தங்கள் குழந்தைப் பருவத்தை இழக்க நேரிடுகிறது. இது அவர்களின் மனித உரிமைக்குப் புறம்பானது. இப்பெண்களால் முழுமையாகக் கல்வி கற்க முடிவதில்லை. அதனால், அவர்கள் வேலைவாய்ப்புகளை இழக்க நேரிடுகிறது. இளம் வயதில் திருமணம் செய்து கொள்ளும் பெண்கள் பெரும்பாலும் தங்களைவிட மிக அதிக வயதான ஆண்களையே மணக்க நேரிடுகிறது.
அதன் காரணமாக குடும்பத்திலும், வெளி உலகத்திலும் இப்பெண்கள் தங்கள் உரிமைகளை நிலைநாட்ட முடிவதில்லை. இவர்கள் குடும்ப வன்முறைக்கும் அதிகமாக ஆளாகுகிறார்கள் என்று சொல்லப்படுகிறது.
1929-ஆம் ஆண்டே, இப்படிப்பட்டத் திருமணங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் குழந்தைத் திருமணங்களைக் கட்டுப்பாடு செய்யும் சட்டம் (Child Marriage Restraint Act, 1929) ஒன்றை, ஆங்கிலேய அரசு நிறைவேற்றியது.
சாரதா சட்டம் என்று பரவலாக அறியப்பட்ட அந்தச் சட்டத்தில், பெண்களுக்குத் திருமண வயது 15 என்றும், ஆண்களுக்கு 18 என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால், இதற்கு இஸ்லாமியர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கவே, அவர்களுக்கென்று தனிப்பட்ட சட்டம் (Muslim Personal Law (Shariat) Application Act of 1937) ஒன்று, கொண்டுவரப்பட்டது.
இந்தச் சட்டத்தின்படி குறைந்தபட்ச திருமண வயது என்ற நிபந்தனையின்றி, பெற்றோர்களின் அனுமதியுடன் இஸ்லாமியர்கள் எந்த வயதிலும் திருமணம் செய்து கொள்ளலாம். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு 1929-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்டத்தில், (இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு) பல முறை மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக, 1978-ஆம் ஆண்டு, குறைந்தபட்ச திருமண வயது பெண்களுக்கு 18 என்றும், ஆண்களுக்கு 21 என்றும் உயர்த்தப்பட்டது.
1929-இல் அமலுக்கு வந்த குழந்தைத் திருமணங்களைக் கட்டுப்பாடு செய்யும் சட்டத்தில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில், குழந்தைத் திருமணங்களைத் தடை செய்யும் சட்டம், 2006 (Prohibition of Child Marriage Act, 2006 - PCMA) என்ற புதிய சட்டம் நவம்பர் 2007-லிருந்து அமலுக்கு வந்துள்ளது.
இந்தப் புதிய சட்டம், குழந்தைத் திருமணங்களை கட்டுப்படுத்துவதற்குப் பதில், தடுப்பதற்கான விதிமுறைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் புதிய சட்டத்தின் படி, 18 வயதிற்குள் பெண்ணிற்கோ, 21 வயதிற்குள் ஆண்பிள்ளைக்கோ திருமணம் செய்து வைத்தால், இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை அல்லது ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.
இந்தச் சட்டம் இந்து, சீக்கிய, கிறிஸ்துவ மற்றும் சமண மதங்களைச் சார்ந்தவர்களுக்கு மட்டுமே. இஸ்லாமியர்களின் திருமண வயது அவர்களுடைய ஷரியத் மற்றும் நிக்காஹ் சம்பந்தப்பட்ட தனிப்பட்ட விதிகளின் படி (personal law) தீர்மானிக்கப்படுகிறது.
தேசிய குற்றவியல் துறை வெளியிடும் புள்ளிவிவரங்களின்படி குழந்தைத் திருமணங்களைத் தடைச் செய்யும் சட்டம் 2006-இன் கீழ், 2014-ஆம் ஆண்டில் 280 குற்றங்களும், 2013-ஆம் ஆண்டில் 222 குற்றங்களும் மட்டுமே பதிவாகியுள்ளன. இத்தனை குறைவான எண்ணிக்கை குற்றங்களே பதிவாகியுள்ளன என்பது, இந்தச் சட்டத்தை அமல்படுத்துவதில் உள்ள நடைமுறைப் பிரச்னைகளையும், குழந்தைத் திருமணங்களை நடத்தி வைப்பவர்களைக் கைது செய்வதில் உள்ள கஷ்டங்களையும் எடுத்துக் காட்டுகின்றன.
பெண் குழந்தைகளுக்கு, பெற்றோர்கள் இளம் வயதிலேயே திருமணம் செய்து வைத்துவிட வேண்டும் என்று ஏன் அவசரப்படுகிறார்கள்? பெரும்பாலான பெற்றோர்கள் பெண் குழந்தைகளை சுமையாக நினைக்கிறார்கள். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரத்தில் பெண்ணை ஒருவர் கையில் பிடித்துக் கொடுத்துவிட வேண்டும் என்பதே இவர்கள் குறிக்கோள்.
திருமணமாகாத பெண்ணை வீட்டில் வைத்திருப்பது பாதுகாப்பின்மை என்று எண்ணும் பெற்றோர்களும் உள்ளனர். பல கிராமங்களில் உயர்நிலைப் பள்ளிகள் இல்லாததால், பெண் குழந்தைகள் கல்வியைத் தொடர முடிவதில்லை. பெற்றோர்கள் தன் பெண் பிள்ளைகளுக்குச் சிறு வயதிலேயே திருமணம் முடிப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.
சிறு பெண்ணாக இருக்கும் பொழுதே திருமணம் செய்து விட்டால், வரதட்சணை குறைவாகக் கொடுத்தால் போதும் என்று கணக்குப் போடுபவர்களும் உண்டு.
பெண் குழந்தைகளின் திருமண வயதை அதிகரிக்க வைக்க மத்திய, மாநில அரசுகள் பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. 1994-ஆம் ஆண்டில் ஹரியாணா அரசு, "அப்னி பேட்டி அப்னி தன்' (எனது பெண் எனது சொத்து) என்ற திட்டத்தை அறிவித்தது.
இத்திட்டத்தின் படி, 18 வயது வரையில் திருமணம் ஆகாமல், உயர் நிலைக் கல்வியை முடிக்கும் பெண் குழந்தைக்கு கணிசமான தொகை வழங்குவதாக பெற்றோர்களுக்கு அரசு ஆரம்பத்திலேயே உறுதியளித்து, நிதிப் பத்திரம் ஒன்றை வழங்குகிறது.
ஹரியாணாவின் இத் திட்டத்தைத் தொடர்ந்து, பிகார், ஜார்க்கண்ட், குஜராத், மத்தியப் பிரதேசம், ஆந்திரம், கர்நாடகம், இமாசலப் பிரதேசம் போன்ற பல மாநிலங்களும், மத்திய அரசும் (தனலக்ஷ்மி திட்டம்) நிபந்தனையுடன் ரொக்கப் பணம் வழங்கும் திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன.
உயர் நிலைப் பள்ளி இல்லாத கிராமங்களில் வாழும் பெண்களுக்காக, குறிப்பாக தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்காக பள்ளி விடுதிகள், பள்ளிக்குச் சென்று வர சைக்கிள், பள்ளிப் படிப்பை பாதியில் கைவிட்டப் பெண்களுக்காக வேலைவாய்ப்புடன் கூடிய தொழில்கல்வி என்று, பெண்களின் திருமணத்தை குறைந்தபட்சம் 18 வயது வரையில் தள்ளி வைக்க பல திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.
ஆயினும் சட்டங்களினாலும், அரசின் திட்டங்களினாலும் மட்டுமே குழந்தைத் திருமணங்களைத் தடுக்க முடியாது. பெண் குழந்தைகளைப் பற்றிய பெற்றோர்களின் மனோபாவம் மாற வேண்டும்.
பெண் குழந்தைகள் திருமணம் செய்து கொண்டு குழந்தைகளைப் பெற்றெடுக்க மட்டுமே பிறவி எடுக்கவில்லை. அவர்களாலும் குடும்பத்திற்காகவும், நாட்டிற்காகவும் சாதிக்க முடியும் என்பதைப் பெற்றோர்கள் உணர வேண்டும். பெண்களையும் சரிசமமாகப் படிக்க வைத்து அவர்களுக்கும் வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலமே இப்பிரச்னைக்குத் தீர்வு காண முடியும்.
இளம் வயதில் திருமணம் செய்து கொள்ளும் பெண்கள் தங்கள் குழந்தைப் பருவத்தை இழக்க நேரிடுகிறது. இது அவர்களின் மனித உரிமைக்குப் புறம்பானது. இப்பெண்களால் முழுமையாகக் கல்வி கற்க முடிவதில்லை.

No comments:

Post a Comment

NEET PG 2024 Exam Pattern REVISED, NMC Issues Official Notice; Here’s All You Need To Know

NEET PG 2024 Exam Pattern REVISED, NMC Issues Official Notice; Here’s All You Need To Know The NEET PG 2024 is scheduled to take place on Ju...