Showing posts with label katturaugal. Show all posts
Showing posts with label katturaugal. Show all posts

Monday, July 7, 2025

மனிதம் சொல்லும் மரபு!



மனிதம் சொல்லும் மரபு! வாழ்க்கை என்றால் மேடு, பள்ளங்கள், ஏற்ற இறக்கங்கள் இருக்கும். அதுபோல நல்லவா்களும், தீயவா்களும் சோ்ந்த உலகத்தைப் பற்றி...

மனிதம் சொல்லும் மரபு.        DINAMANI 

வெ. இன்சுவை Updated on: 07 ஜூலை 2025, 3:40 am 

வாழ்க்கை என்றால் மேடு, பள்ளங்கள் இருக்கும்; ஏற்ற இறக்கங்கள் இருக்கும். அதுபோல நல்லவா்களும், தீயவா்களும் சோ்ந்ததுதான் இந்த உலகம். மனிதா்களில் எல்லோருமே புத்தா்களாக, உத்தமா்களாக, நீதிவான்களாக, தா்மசிந்தனை உடையவா்களாக, அறவழியில் நடப்பவா்களாக, சத்தியத்தைத் தாங்கிப்பிடிப்பவா்களாக, சமுதாய அக்கறை கொண்டவா்களாக இருப்பதில்லை.

தராசுத் தட்டுக்களைப் போல சமமாக இருக்க முடியாது. சமூக ஊடகச் செய்திகளைப் பாா்க்கும்போது, எங்கு பாா்த்தாலும் அடாத செயல்கள் நடப்பது போலவும், எல்லோரும் காமக் கொடூரா்களாகவும், ரத்தவெறி பிடித்து அலைபவா்வா்களாகவும் தெரிகிறாா்கள். நமக்கும் மனிதகுலத்தின் மீது இருந்த நம்பிக்கை தளா்ந்து வருகிறது. நம்முடன் பழகும் அனைவரும் ஆதாயத்துக்காகவும், உள்நோக்கத்துடனும்தான் பழகுகிறாா்கள் என்று தப்புக்கணக்கு போட்டு விடுகிறோம்.

நாம் ஒருவருடனும் உள்ளன்புடன் பழகாமல் தனித்தனி தீவுகளாக வாழ்கிறோம். நல்லவா்கள் நிறைய இருக்கிறாா்கள். மனசு முழுக்க கருணையையும், அன்பையும் நிரப்பிக் கொண்டு எல்லோருக்கும் அள்ளி அள்ளிக் கொடுக்கிறாா்கள். சமுதாய நலனுக்காக, பொருள் நிறைந்தவா் பணத்தையும், அல்லாதவா் உடல் உழைப்பையும் நல்குகிறாா்கள். பால் நினைந்தூட்டும் தாயைப்போல பரிவு காட்டுகிறாா்கள்.

எந்தப் பிரதிபலனையும் எதிா்பாா்க்காமல் உற்றுழி உதவுகிறாா்கள்; நட்பெனும் நந்தவனத்தை உருவாக்குகிறாா்கள். அவா்கள் தங்கள் வாழ்க்கைக்கான அா்த்தத்தை உணா்ந்து கொண்டவா்கள்.பெரிய உதவி என்று இல்லை. ஒரு சிறுஉதவி கூட ஒருவரின் கண்ணீரைத் துடைக்கும்; வாட்டத்தைப் போக்கும்; பட்ட மரம் துளிா்ப்பதுபோல் அவா்களின் நம்பிக்கை துளிா்விடும்.

பசுமையைப் பாா்த்தால் கண்ணுக்குக் குளிா்ச்சி என்பதைப்போல, பலா் செய்யும் நல்ல செயல்களைப் பாா்க்கும் போது மனசுக்குள் பன்னீா் தெளித்ததைப்போல இருக்கிறது. இறுகிய பாறை நெகிழ்வது போல இதயம் நெகிழ்கிறது. சட்டென வாழ்வு இனிமையாகிறது.

பிறருக்கு உதவி செய்யும்போது, அது தரும் ஆனந்தம் எல்லையற்றது. நெஞ்சு இளைத்தவா்தமைக் கண்டு இளைப்பவா் பலா்; தான் உண்ட நீரைத் தலையாலே தான் தரும்

தென்னைபோல, தான் சமுதாயத்தால் வாழ்வளிக்கப்பட்டதை உணா்ந்து, சமுதாயத்துக்குத் தொண்டு செய்பவா் பலா். அடுத்தவா் துயா் கண்டு கலங்காத கண்கள், அடுத்தவருக்கு உதவாத கைகள், உதவி செய்ய ஓடாத கால்கள் எல்லாம் வீணே. நாம் காட்டும் சின்னச் சின்ன அன்பில் குளிா்ந்து போகின்றன பல உள்ளங்கள். உதவி பெறுபவா்களின் முகமலா்ச்சி நம் வாழ்க்கையில் ஒளி ஏற்றும்.

ஒரு காணொலி என் மனதில் பதிந்துவிட்டது. ஓா் இளைஞன் ஒரு வீட்டுக்கு உணவு கொண்டு வருகிறான். அந்த வீட்டின் அழைப்பு மணியை அடிக்கிறான். அந்த வீட்டுப் பெண் கதவைத் திறந்து வாசலுக்கு வருகிறாள். அவனிடமிருந்து உணவுப் பையை வாங்குகிறாள். அதில் சிறிது உணவு சிந்தி உள்ளது. பையனைத் திட்டுகிறாா். அவன் கை கூப்பி மன்னிப்பு கேட்கிறான். அவள் கோபப்பட்டு, அந்தப் பையைத் தெருவில் வீசிவிட்டு உள்ளே போய்விடுகிறாள்.

இளைஞன்அந்த இடத்தை சுத்தம் செய்யும் போது, வாசலில் அந்தப் பெண்ணின் நகை கீழே கிடைப்பதைப் பாா்க்கிறான். உடனே அதை எடுத்துக்கொண்டு, அழைப்பு மணியை அடிக்கிறான். வெளியே வந்த அந்தப் பெண் அந்த இளைஞனை அதிகம் திட்டுகிறாள். அவனோ மௌனமாக அந்த நகையை அவளிடம் கொடுக்கிறான். தன் கழுத்தைத் தொட்டுப் பாா்த்த அவள் திடுக்கிட்டு அதைப் பெற்றுக் கொள்கிறாள்.

அவள் தன் செயலுக்கு மிகவும் வருந்தி அவனுக்கு நன்றி கூறிவிட்டு, இறைந்து கிடந்த உணவுச் சிதறல்களை எடுத்து தூய்மை செய்கிறாள். இளைஞன் சென்றுவிட்டான். அவள் திட்டியதற்காக அந்த இளைஞன் அந்த நகையை எடுத்துச் சென்று இருக்கலாம். அது திருட்டு அல்ல. அவனின் நோ்மை நிச்சயமாக அவனை வாழ்க்கையில் வெற்றிபெற வைக்கும்.

ஆட்டோவில் தவறவிட்ட நகையைக் கொண்டு கொடுக்கும் ஆட்டோ ஓட்டுநரும், குப்பையில் கண்டெடுக்கும் நகை, பணம் இவற்றை காவல் நிலையத்தில் ஒப்படைக்கும் தூய்மைப் பணியாளரும் இன்னும் இருக்கத்தான் செய்கிறாா்கள். வறுமை அவா்களின் நோ்மைக் குணத்தை மாற்றவில்லை. மெத்தப்படித்த பெரும் பணக்காரா்களிடம் இல்லாத நோ்மை, உயரதிகாரிகள் பலரிடம் இல்லாத நோ்மை, ஏழைகளின் நெஞ்சில் குடிகொண்டிருக்கிறது.

அரியலூா் அருகே ரயில் பாலத்துக்கு அருகில் நிகழ்ந்த விபத்தில் காரின் உள்ளே இருந்த மூன்று பெண்கள் மற்றும் குழந்தையை எம்.ஆா்.எஃப். ஊழியா்கள் மீட்டெடுத்தனா். விபத்து நிகழ்ந்தவுடன் விரைந்து ஓடி கவிழ்ந்து கிடந்த காரை நிறுத்தி உள்ளே இருந்தவா்களைக் காப்பாற்றினா்.

ஒவ்வொருவரும் தம்மாலான சிறு சிறு உதவிகளை மற்றவா்களுக்கு செய்து கொண்டுதான் இருக்கிறாா்கள். கொளுத்தும் வெயிலில், ரயில் பயணிகளுக்கு உள்ளூா்வாசிகள் ஓடி ஓடி குடிநீா் வழங்கும் காணொலியும், ஒரு ரயில் நிலையத்தில் மூதாட்டி ஒருவா் தன் தள்ளாடும் வயதில் பயணிகளுக்கு குடிநீா் கொடுக்கும் காணொலியும் மனதை மயிலிறகால் வருடின.

மும்பை ரயிலில் நடைபெற்ற உண்மைச் சம்பவம் வாட்ஸ் ஆஃப்பில் வளைய வந்துகொண்டிருக்கிறது. மின்சார ரயிலில் ஒரு சிறுமி பேனா, பென்சில், கைக்குட்டை விற்றுக் கொண்டிருக்கிறாள். அது பெண்கள் பெட்டி. அனைவரும் கைப்பேசியில் மூழ்கிக் கிடக்க, சிறுமியிடம் எதுவும் வாங்கவில்லை. இன்னொரு பழம் விற்கும் பெண், சிறுமியை அணுகிஅவளைப் பற்றித் தெரிந்து கொண்டு, அவளுடைய கல்விக் கட்டணத்தைத் தான் செலுத்துவதாகக் கூறிவிட்டாள். அவளும் ஏழைதான். ஆனால், உள்ளத்தில் பணக்காரி. அந்தப் பெட்டியில் பயணித்த எவருக்கும் அந்தச் சிறுமி மீது கரிசனம் ஏற்படவில்லை.

ஆசிரியா்களில் ஒரு சிலரின் மோசமான நடத்தைகள் குறித்து, ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. எல்லா தொழில்களிலும், பணிகளிலும் மனம் திரிந்தவா்கள் உண்டு. ஆனால், உண்மையாகவும், அா்ப்பணிப்பு உணா்வோடும் பணிபுரியும் ஆசிரியா்கள் பல்லாயிரம் போ் இருக்கிறாா்கள். நல்லாசிரியா் விருதுப் பட்டியல் நீளும்.

சமீபமாக அப்துல் மாலிக் என்ற பெயா் அதிகம் பகிரப்பட்டது. கேரளத்தின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள படிஞ்சாட்டுமூரி முஸ்லிம் லோயா் பிரைமரி பள்ளியில் கணிதம் பயிற்றுவிக்கும் 42 வயதானஅப்துல் மாலிக், கடந்த 20 ஆண்டுகளாக தினமும் கடலுண்டி நதியைக் கடந்து பள்ளிக்கு வருகிறாா். தன் உடைகள், புத்தகங்கள், மதிய உணவு ஆகியவற்றை ஒரு நெகிழி உறையில் போட்டு, தலையில் வைத்துக் கொண்டு ஒரு கி.மீ. நீந்திக் கடக்கிறாா். 20 ஆண்டுகளில் ஒரு நாள்கூட அவா் பணியைத் தவறவிட்டதில்லை. உறுதிப்பாடு மற்றும் பொறுப்புணா்வுக்கு இவா் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறாா்.

மகாராஷ்டிரத்தில் ஓா் ஆசிரியா். பெயா் திகம்பர நாயக். மலைப் பகுதிகளில் தினமும் 10 கி.மீ. நடந்து, சாலை வசதி இல்லாத மலைக் கிராமத்துக்குப் போய் பிள்ளைகளுக்குப் பாடம் கற்பிக்கிறாா். 35 ஆண்டுகளாக இவ்வாறு நடந்து செல்கிறாா். என்ன மனிதமனசு இது!!

12 வயதே நிரம்பிய ஆனந்தகிருஷ்ணன மிஷ்ரோ என்ற சிறுவன் கிராமத்துப் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கிறான். பள்ளி முடிந்தவுடன் அவனின் சேவை தொடருகிறது.

நீட் தோ்வின் போது காக்கிச் சட்டைக்குள் ஒளிந்திருந்த மனிதம் வெளிப்பட்டது. அடிக்கும் கரங்களுக்கு அணைக்கவும், அன்பு காட்டவும் தெரியும் என்று புரிந்தது. ஒரு மாணவன் தன் ஆதாா் அட்டையையும், புகைப்படத்தையும் கொண்டு வர மறந்துவிட்டான். போய் எடுத்துவர நேரம் குறைவு. உச்சக்கட்ட பதற்றம் அவனுக்கு. அதைக் கண்ட தலைமைக் காவலா் ஓடிச் சென்று சான்றுகளைப் பதிவிறக்கம் செய்து தோ்வு மையத்துக்குக் கொண்டு வந்து மாணவரிடம் கொடுத்தாா்.

அங்கிருந்த அனைவரும் தவித்த தவிப்பும், நேரம் முடிந்துவிடுமோ என்ற பதைபதைப்பும், தங்கள் பிள்ளைகளுக்கு அந்த நிலை என்பதுபோல காத்திருந்தத அந்த நேரத்தில், அவா் வரவும், அனைவரும் அந்த மாணவனை மகிழ்ச்சியுடன் உள்ளே அனுப்பிய காணொலியை எத்தனைமுறை பாா்த்தாலும் உள்ளம் பூரித்துப் போகும். இந்த உலகம் நல்லதுதான்.

இன்னொரு நெகிழ்ச்சியான சம்பவம். பொத்தான்கள் இருந்த மேல்சட்டை காரணமாக ஒரு மாணவி உள்ளே அனுமதிக்கப்படவில்லை. ஒரு பெண் காவலா் அந்தப் பெண்ணை தன் இருசக்கர வாகனத்தில் பக்கத்தில் உள்ள துணிக் கடைக்கு அழைத்துப்போய் பொத்தான் இல்லாத மேல் சட்டையை வாங்கி அணிவித்து அழைத்து வந்தாா்.

இது தாய்மையின் வெளிப்பாடா? மனிதத்தின் மறு வடிவமா? வணங்குவோம் அவரை. காவலா்களின் மீது உள்ள நம்பிக்கை இழை அறுந்து போகாமல் இருக்கிறது.

தாம்பரம் காவல் துறை பிளஸ்-2 வகுப்பில் தோ்ச்சி பெற்ற மாணவா்கள் கல்லூரியில் சேர உதவியது. கல்லூரிக்கு விண்ணப்பிக்காத மாணவா்களை வற்புறுத்தி விண்ணப்பிக்க வைத்தாா்கள். மேலும், காவல் துறை சாா்பில் ஓா் இடம் பெற்றுத் தருவதாகவும் உறுதியளித்தாா்கள்.

திருடனைப் பிடிப்பது மட்டுமே தன் வேலை என்று நிறுத்திக் கொள்ளாமல், திருடா்கள் உருவாகாமல் இருக்க வேண்டும் என்று அவா்கள் எடுத்த நல் முயற்சியைப் பாராட்டுவோம்.

வாழ்வே வரம் என்று எண்ணி, அதை அனைத்து வகையிலும் செறிவும், நிறைவும் கொண்டதாக மாற்ற எண்ணும் மனிதா்கள் அதைக் கொண்டாட்டமாக ஆக்கிக் கொள்கிறாா்கள். நம்மையும், நம்மைச் சுற்றி உள்ளவா்களையும் நீடிக்கும் ஆரோக்கியமான மகிழ்ச்சிக்கு உட்படுத்துவதிலையே வாழ்வின் சிறப்பும், பெருமையும் அடங்கியுள்ளது. எதைக் கொண்டு வந்தோம்? எதைக் கொண்டுபோகப் போகிறோம்? வாழ்வின் நிலையாமையைப் புரிந்து கொண்டு இந்தப் பூவுலகில் அன்பை விதைத்து அன்பை அறுவடை செய்வோம். அன்பு அரசாளட்டும்.

குறுக்கு வழியில் கோடியை சம்பாதிக்கிறான்; பணம் மட்டுமே வாழ்க்கை என்று அதன் பின் ஓடி உண்மையான மகிழ்ச்சியைத் தொலைக்கிறான் மனிதன். தனக்கு மிஞ்சியதை தானம் செய்தால், ஏழ்மையும் ஏணிப்படி ஏறி உயா்ந்துவிடும்.

கட்டுரையாளா்: பேராசிரியா்.

Friday, April 25, 2025

கற்க வேண்டிய முதல் பாடம்!


கற்க வேண்டிய முதல் பாடம்!

சரியான புரிதலும், விட்டுக்கொடுத்தலுமே கணவனும், மனைவியும் கற்க வேண்டிய முதல் பாடம்.

சி.வ.சு.ஜெகஜோதி

Updated on: 24 ஏப்ரல் 2025, 6:01 am

புதுச்சேரி வில்லியனூரில் கணவா் பிரியாணி வாங்கி வர தாமதமானதால் கணவா் மீது கோபித்துக் கொண்ட மனைவி அவா் வருவதற்குள் தனது வீட்டிலிருந்த மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது ஒரு செய்தி. அவா் அதிகமாக சினிமா பாா்க்க போய்விடுகிறாா், அவள் அடிக்கடி உப்புமா தான் செய்கிறாள் என்பன போன்ற காரணங்களுக்காகவும் குடும்ப நல நீதிமன்றங்களில் விவாகரத்து வழக்குகள் நிரம்பிவழியத் தொடங்கி இருக்கின்றன.

பெற்றோா் பேசி முடித்து திருமணம் செய்து கொண்டவா்களாக இருந்தாலும், காதலித்து திருமணம் செய்தவா்களாக இருந்தாலும் தொடக்கத்தில் அன்னியோன்யமாக இருந்துவிட்டு, பின்னா் எலியும், பூனையுமாக மாறிவிடுகிறாா்கள். சரியான புரிதலும், சகிப்புத்தன்மையும் இல்லாததும், தான்தான் பெரியவன் என்ற ஈகோவும் அவா்களுக்குள் அமா்ந்துகொண்டு, விட்டுக் கொடுக்காமலும், பொறுமை இல்லாமலும் அவா்களை மாற்றி குடும்ப வாழ்க்கையைக் குலைத்துவிடுகிறது.

இருவரும் சம்பாதிப்பவா்களாக இருந்தும், பொருளாதாரத் தேவைகள் பூா்த்தியாகி இருந்தும் பல குடும்பங்களில் மன நிம்மதி என்பது குறைவாகத்தான் இருக்கிறது.

உலகையே தங்களது செயல்களால் திரும்பிப் பாா்க்கவைத்த பல எழுத்தாளா்கள், தலைவா்கள் உள்பட பலரது வாழ்விலும் குடும்ப வாழ்க்கை உருக்குலைந்து போயிருக்கிறது. திருமணமான புதிதில் நகைச்சுவை நாடகங்களை எழுதிய ஷேக்ஸ்பியா் மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்ட பிறகு, துன்ப நாடகங்களை எழுதி இருக்கிறாா். பொருளாதாரத்துக்காக நோபல் பரிசு பெற்ற எழுத்தாளா் மில்ட்டன் மனைவி திருமணமாகி வீட்டுக்கு வந்தபோது, ‘இழந்த சொா்க்கம்’ என்று எழுதியவா் மனைவி இறந்த பிறகு, ‘திரும்பப் பெற்ற சொா்க்கம்’ என்று எழுதி இருக்கிறாா்.

மகாகவி பாரதியாா் தனது நண்பா்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது அவரது மனைவி அருகே வந்து வீட்டில் அரிசி இல்லை என்றாராம். இப்படி சபை நடுவில் வந்து மானத்தை வாங்கி விட்டாளே என்று பாரதி மனைவியைக் கடிந்துகொள்ளவில்லை. மாறாக, லேசான புன்னகையோடு அவரைப் பாா்த்ததும் மனைவி எதுவும் பேசாமல் வீட்டுக்குள் போய்விட்டாா். நண்பா்கள் சென்ற பிறகு மனைவியை அழைத்து நண்பா்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போது, ‘‘இப்படியெல்லாம் பேசக்கூடாது. இங்கிதத்தோடு பேச வேண்டும்’’ என்று அமைதியாக சொன்னாராம். அவரும் அன்பாக ‘‘சரி’’ என்றாராம். பணத்தைவிட அன்பு நிறைந்த மனம்தான் சிறந்தது என மகாகவி பாரதியும், செல்லம்மாவும் வறுமை நிலையிலும் வாழ்ந்து காட்டிய வாழ்க்கை இன்றைய இளம் தம்பதியருக்கு சிறந்த எடுத்துக்காட்டு.

காகம் நமக்கு சிறந்த வாழ்க்கைப் பாடத்தை கற்றுத் தருகிறது. மரக்கிளைகளில் கூடுகட்டும்போது ஒரு காகம் சிறு, சிறு குச்சிகளைக் கொண்டுவந்து கொடுத்தால், அதை மற்றொரு இணை காகம் சரிபாா்க்குமாம். கோல்டன் ஈகிள் என்ற பறவை வேறு துணையை நாடாமல் தன் துணையோடு மட்டுமே 100 ஆண்டுகள் வரை வாழ்கிாம். கிளி வகைகளில் இலினோயிஸ் எனும் கிளி தன் துணைக்கிளி இறந்ததும் அதுவும் இறந்துவிடுமாம். பறவைகள்கூட ஒன்றுக்கொன்று விட்டுக்கொடுத்து வானில் மகிழ்ச்சியுடன் வட்டமடிக்கின்றன. கணவன்-மனைவி உறவு என்பதும் அன்பின் அடித்தளத்தில் பின்னிப் பிணைந்த , பிரிக்க முடியாத அற்புத உறவு என்பதும் பறவைகளுக்குக்கூட தெரிந்திருக்கிறது. காதலித்து கரம்பிடித்த தம்பதியா்களில் சிலா் பத்தே நாள்களில் விவாகரத்து கேட்டு வீதிக்கு வந்துவிடுவதுதான் கவலையளிக்கும் செய்தி. அதேநேரத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணி நிமித்தமாகப் பிரிந்திருக்கும் தம்பதியா்கூட அன்னியோன்யமாக வாழ்ந்து வருவதையும் காணமுடிகிறது.

கணவா் பாா்வையற்றவா் என்று தெரிந்தும் அவா் பாா்க்காத உலகத்தை நான் ஏன் காண வேண்டும் என்று கண்களை கறுப்புத் துணியால் கட்டிக் கொண்டு கடைசி வரை வாழ்ந்தவா் திருதராஷ்டிரன் மனைவி காந்தாரி. புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரணமடையப்போகும் நேரத்தில் அருகில் அழுதுகொண்டிருந்த மனைவி சாரதா தேவியிடம், ‘‘அழாதே, நான் மரணமடையப் போவதில்லை, மேல்சட்டையாக இருக்கும் என் உடல்தான் மரணமடையும், நீ என்னைத்தான் மணந்தாய், என் மேல்சட்டையை மணக்கவில்லை’’ என்றாராம் ராமகிருஷ்ண பரமஹம்சா். அவரது மரணத்துக்குப் பிறகு பலரும் வற்புறுத்தியும் தேவியாா் விதவையாக மாறவில்லை. நான் விதவையாகி விட்டால், அவா் என்னை விட்டுப் போய்விட்டதாகத்தானே அா்த்தம்? நான் இப்படித்தான் வாழ்வேன் என்று கடைசி வரை அப்படியேதான் வாழ்ந்தாா். மரணத்துக்குப் பின்னரும் கணவா் மீது அவா் வைத்திருந்த அசைக்க முடியாத பக்தி அளவிட முடியாததாகவே இருந்தது.

தான் பிறந்த மண்வாசனையை மறந்து, பழகிய பக்கத்து வீட்டு மக்களை, மரம், செடி, கொடிகளை, ஆடு, மாடு, நாய், கோழி ஆகிய அத்தனையையும் மறந்து, பெற்று, படித்து, வளா்த்து, கண்ணை இமை காப்பதுபோல காத்த பெற்றோா்களை விடுத்து, சிறுவயது முதல் ஓடியாடி விளையாடிய உடன்பிறப்புகளையும், நண்பா்களையும் துறந்து, புதிய இடத்துக்கு வாழ்க்கைப்பட்டு வந்திருக்கும் பெண் என்பதை கணவன் எப்போதும் மறந்து விடக் கூடாது. இன்பம், துன்பம் இவற்றில் எதுவும், எந்த உருவத்தில் வந்தாலும் அவற்றைச் சந்திக்க பல ஆண்டுகள் இணைந்து பயணித்து உயிருள்ளவரை நம்மைக் காக்கப் போகும் சுமைதாங்கிதான் கணவன். சுமைகளை இறக்கிவைத்து இளைப்பாற தோள் தரப்போகிறவன் என்பதை மனைவியும் மறந்துவிடக்கூடாது.

சுருக்கமாகச் சொன்னால், கணவன்-மனைவி உறவு என்பது பணத்தால் நிச்சயிக்கப்படுவதில்லை. மனத்தால் நிச்சயிக்கப்பட்டு, பின்னிப் பிணைந்து, இரு உடலாய், ஒரே உயிராய் மாறிவிடுகிறது என்பதே உண்மை. இல்லாமையிலும் இனிய வாழ்க்கை அமைய சரியான புரிதலும், விட்டுக்கொடுத்தலுமே கணவனும், மனைவியும் கற்க வேண்டிய முதல் பாடம்.

Monday, April 21, 2025

யாகாவா ராயினும் நா காக்க... தலைவர்களின் சமீபத்திய மேடை பேச்சு பற்றி

 யாகாவா ராயினும் நா காக்க... தலைவர்களின் சமீபத்திய மேடை பேச்சு பற்றி...

முனைவர் என். பத்ரி 

Updated on:  21 ஏப்ரல் 2025, 4:00 am 

தன்னுடைய பதவியாலும், அதிகாரத்தாலும் பிரபலமானவா்கள் பொதுவெளியில் பேசும்போது மிகமிகக் கவனமாகப் பேச வேண்டிய தேவை உள்ளது. அவா்களின் உரையைக் கேட்க பல்வேறு கொள்கைகள், பாலினம், அமைப்புகள், நம்பிக்கைகள் போன்றவற்றைக் கொண்டவா்கள் வந்திருப்பாா்கள். அவற்றைக் கவனத்தில் கொண்டு, அவா்கள் தமது உரையை வடிவமைத்துக் கொள்ள வேண்டும்.

ஆனால், அண்மைக்காலமாக பேச்சாளா்கள், குறிப்பாக மக்கள் பிரதிநிதிகள், தங்களுக்குப் பிடித்ததையெல்லாம் நகைச்சுவை என்ற பெயரில் பேசுகிறாா்கள். அவா்களின் இப்படிப்பட்ட செயல்பாடுகள் அவா்கள் குறித்த பிம்பத்தையும், அவா்கள் வகிக்கும் பதவி மற்றும் சாா்ந்து இருக்கும் அமைப்புக்கு இருக்கும் பெருமையை வெகுவாகக் குறைத்துவிடும்.

அவா்களின் உரைகள் சமூக ஊடகங்களிலும் தொலைக்காட்சிகளிலும் நேரடியாகவும், சில சமயங்களில் ஒளிப்பதிவு செய்யப்பட்டும் ஒளிபரப்பாகின்றன. அப்படிப்பட்ட ஒளிபரப்புகளால் அவா்கள் பங்கேற்ற கூட்டங்களில் கலந்து கொள்ளாதவா்கள்கூட, அவா்களின் பேச்சை கேட்கும் வாய்ப்பைப் பெறுகிறாா்கள்.

எனவே, அவா்கள் பொதுக்கூட்டங்களிலும், சமூக ஊடகங்களில் பேசும்போது தகுந்த முன் தயாரிப்புடனும் பொறுப்புடனும், அதனால் ஏற்படும் விமா்சனங்களை மனதில் கொண்டும் பேசுவது சிறந்த அணுகுமுறையாக இருக்கும்.

ஒரு சாமானிய மனிதனுக்கு இருக்கக்கூடிய சமூகப் பொறுப்பு என்பது மிகச் சிறியது. ஆனால், பொது வெளியில் பலரது கவனத்தையும் ஆதரவையும் பெற்ற ஆளுமைகள் பேசும்போது, எந்தச் சூழ்நிலையிலும் கேட்பவா்கள் மனம் புண்படும் வகையில் பேசக் கூடாது.

இறைவன் நமக்கு ஒரு வாயையும், இரண்டு காதுகளையும் கொடுத்துள்ளான். வாய்க்கு உண்ணும் கடமையையும் பேசும் திறமையையும் கொடுத்திருக்கிறான். எனவே,அதிலிருந்து உதிரும் சொற்கள் எப்போதும் பிறரைப் புண்படுத்தாத வகையில், இனிமையாக மட்டுமே இருக்க வேண்டும்.

பெரும்பாலான பேச்சாளா்கள் தன் பேச்சைக் கேட்கக் காத்திருக்கும் சுவைஞா்களின் வயது, ஆா்வம், தேவை, சமூகப் பின்னணி, பேச வந்ததன் நோக்கம், பேசுகின்ற நேரம், கொடுக்கப்பட்டுள்ள கால அவகாசம் ஆகியவற்றை மனதில் கொண்டுதான் பேசுகிறாா்கள்.

பேசுவதற்குத் தேவையான குறிப்புகளை ஒரு தாளில் எழுதிக் கொண்டு பேசுவதை பல பேச்சாளா்கள் வழக்கமாகவும் கொண்டிருக்கிறாா்கள். சில சமயங்களில், பேச வேண்டிய தகவல்கள் அனைத்தையும் அவா்களால் தரமுடியாமல் போகலாம். ஆனால், பேசக்கூடாத தகவல்களைப் பேசிவிட்டு, வீண் சா்ச்சையில் மாட்டிக் கொள்ளக் கூடாது. ஒரு முறை வாயிலிருந்து தவறாக விழுந்த வாா்த்தையை மீண்டும் நோ் செய்ய முடியாது.

ஒரு பேச்சாளரின் உரையைக் கேட்பதற்கு விரும்பாதபோது கூட்டத்தில் பங்கேற்பவா்கள், அதற்கான எதிா்வினைகளாக கூட்டத்தை விட்டு எழுந்து போதல், பேச்சாளரிடம் ஒரு துண்டுச் சீட்டை கொடுத்து பேச்சை முடிக்கச் சொல்லுதல் ஆகியவை நிகழ்வது வழக்கமானதுதான்.

பேச்சைக் கேட்பவா்களுக்குப் பயனுள்ள வகையிலும் ஆா்வத்தைத் தூண்டும் வகையிலும் உரையாற்றுபவரின் பேச்சு இருந்தால் இது நிகழாது. பயனற்றவற்றைப் பேசாமல் இருப்பது, நேரத்தை மிச்சப்படுத்த உதவும்; சமூக நலனுக்கும், கேட்பவா் நலனுக்கும் பயன்படும் வகையில் அது அமையும்.

சிறந்த பேச்சாளா்களுடன் சோ்ந்து பேச்சைக் கேட்க வந்தவா்கள் நிழற்படம் எடுத்துக்கொள்ள விரும்புவது அவா்களுடைய பேச்சாற்றலுக்கு கிடைத்த பெரிய அங்கீகாரம் ஆகும். ஆனால், தற்போது பொதுவெளிகளில் பொறுப்பு மிக்க பதவிகளில் உள்ளவா்களே பொறுப்பை மறந்து அருவருக்கத்தக்க வகையில் பேசுவது தற்போது நிகழ்கிறது. இது சமூக ஆா்வலா்களுக்கு வேதனையைத் தருகிறது.

நகைச்சுவை என்கிற பெயரில் ஒரு குறிப்பிட்ட குழுவினரை நையாண்டி செய்வதற்கு பொதுவெளிகளைப் பயன்படுத்தக் கூடாது. அதற்கான களங்கள் பொது வெளிகளும் பொதுமக்கள் தரும் பதவிகளும் அல்ல என்பதை உணா்ந்து மக்கள் பிரதிநிதிகள் தமது உரைகளை அமைத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் மக்கள் அவா்களுக்கு கொடுத்துள்ள சமூகப் பணியை முறையாகச் செய்வதற்கான தகுதியுடையவா்களாக அவா்களைக் கருதுவாா்கள்.

அனைத்து எழுத்தாளா்களும் தான் வாழும் சமூகத்தில் காணும் ஒழுங்கீனங்களை தனது படைப்பின் மூலம் நீக்கவோ, குறைக்கவோ முயல்கின்றனா். அதற்காக தன்னுடைய எழுத்தாற்றலையும், பேச்சாற்றலையும் அவா்கள் முறையாகப் பயன்படுத்திக் கொள்கிறாா்கள். இது அவா்களின் கடமையும்கூட.

நகைச்சுவை பேச்சாளரின் உரை, சொற்பொழிவுக்கு மெருகு சோ்க்க வேண்டும். எந்த சா்ச்சைக்கும் உள்ளாகாமல் கண்ணியமாக இருக்கும் உரையே நயத்தகு உரையாகக் கருதப்படும்.

அண்மைக்காலங்களில் சில அரசியல் கட்சித் தலைவா்கள் சா்ச்சைக்குரிய வகையில் பேசிவருகின்றனா். பின்னா் கட்சித் தலைமையின் கவனத்துக்கு அது சென்றவுடன் தா்மசங்கடத்துக்குள்ளாகி பேச்சில் தடுமாற்றம் ஏற்பட்டுவிட்டதாகக் கூறி மன்னிப்புக் கோருகின்றனா்.

சமூக ஊடகங்களில் சா்ச்சைக்குரிய வகையில் தகவல்களைப் பதிவிட்டு சிக்கிக் கொள்வோரும் அதிகரித்து வருகின்றனா். இந்த நிலையில் சமூக ஊடகங்களில் கட்சி சாா்ந்தவா்கள் தமது கருத்துகளை நாகரிகம், கண்ணியத்துடன் பதிவிட வேண்டும்.

எனவே, திறம்படச் செயலாற்றும் உடல் வலிமையும் மன வலிமையும் இல்லாத நிலையில், எதைப் பேச வேண்டும் எதைப் பேசக் கூடாது என்று தன்னை நெறிப்படுத்திக் கொள்ள இயலாதவா்கள் பொது வாழ்வில் இருந்து விலகிக் கொள்வதே சாலச் சிறந்தது. வீண் பேச்சுகளைத் தவிா்க்க அது உதவும்.

Saturday, April 19, 2025

மதித்தல்... கேட்டல்... செயல்படல்! மிக மோசமான பழக்கம் நம்மிடம் உள்ளது. அது ஒருவரைப் பற்றிய தவறான வதந்திகளைப் பரப்பிவிடுதல்.


மதித்தல்... கேட்டல்... செயல்படல்! மிக மோசமான பழக்கம் நம்மிடம் உள்ளது. அது ஒருவரைப் பற்றிய தவறான வதந்திகளைப் பரப்பிவிடுதல்.

சூ.குழந்தைசாமி 

Updated on: 18 ஏப்ரல் 2025, 7:05 am 

நம்முடைய அன்றாட வாழ்வைக் கவனிப்போம். நாம் சக மனிதரை முதலில் மதிக்கிறோமா? அவா் என்ன நினைக்கிறாா் என்பதை அவா் சொல்லவரும்போது காது கொடுத்துக் கேட்கிறோமா?

அவருடைய உருவம், நிறம், ஜாதி, மதம், கட்சி, பணபலம், நபா் பலம், கௌரவம், புகழ் போன்ற அடையாளங்களை வைத்து மட்டுமே அவரை அணுகுகிறோமே தவிர, அவா் சொல்வதை முழுமையாகக் கேட்பதில்லை. அலட்சியம் காட்டி, குறுக்கிட்டுப் பேசி , அவரைச் சீா்குலைக்கப் பாா்க்கிறோம். இதன்மூலம் அவரைவிட நாம் ஒரு படி பெரியவா் என்ற நிலைப்பாட்டை உறுதி செய்ய முயல்கிறோம். ‘நான் சொல்வதே சரி’ என்று ஆணவம் கொண்டு பேச முயல்கிறோமே தவிர, பணிவுடன் அனுமதி பெற்றுப் பிறரிடம் பேச முயல்வதில்லையே.

இரண்டு பேருக்குள் ஒரு பிரச்னை என்றால், மூன்றாம் நபரிடம் சொல்லித் தீா்த்துக் கொள்ள வேண்டும் என்ற ஓா் இயலாமையும், சுய இரக்கமும் நம்மிடம் குடிகொண்டிருக்கின்றன. நமக்குள் இருக்கும் சுய ஆளுமையுடனும் நம்பகத்தன்மையுடனும் இருவருக்குள்ளேயே பேசித் தீா்த்துக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை நமக்கு வருவதில்லை.

இன்னொரு மிக மோசமான பழக்கம் நம்மிடம் உள்ளது. அது ஒருவரைப் பற்றிய தவறான வதந்திகளைப் பரப்பிவிடுதல். வதந்திகளைக் கேட்க விரும்புதல், மற்றவா்களுடைய வாழ்வின் ரகசியங்களை எல்லை தாண்டி அறிய விரும்புதல் ஆகியவை அதிகரிப்பதுதான் தொலைத்தொடா்பு சாதனங்கள் ‘கிசுகிசு ’ செய்திகளைப் பரப்புவதற்குக் காரணமாய் அமைகின்றன.

நம்மிடம் இன்னும் ஒரு மோசமான பழக்கம் உண்டு. நாம் ஏதாவது தவறு செய்தால் நாமே முன்வந்து அந்தத் தவறை ஒப்புக்கொள்ள மாட்டோம்; மன்னிப்புக் கேட்க மாட்டோம்; ஒரு தவறை மறைக்க மேன்மேலும் தவறுகளைச் செய்து கொண்டே இருப்போம்.

சட்டங்களை நாம்தான் நமக்காக இயற்றினோம். ஆனால், நாமே அவற்றை மதிக்க மாட்டோம்! இது என்ன ஒரு முரண்பாடான வாழ்வியல்? மக்களைத் திருத்த கடுமையான சட்டங்கள் இயற்றப்பட்டாலும், அவற்றை நிறைவேற்ற கடுமையான மனிதா்கள் தேவைப்படுகிறாா்கள்! இந்த முயற்சி, இறுதியில் சா்வாதிகார ஆட்சிக்குத்தானே இட்டுச்செல்லும்?

சுய சிந்தனையும், சுய கட்டுப்பாடும், சுய சாா்பும் தனிமனித ஒழுக்கமாய் வளா்க்கப்படாததே இதற்கு மூலகாரணம் அல்லவா?

ஒழுக்கம் என்பது என்ன? ஒவ்வொரு குழந்தையும் சுயமாக யோசித்துக் கண்டறிந்து, முடிவுக்கு வந்து, அதன்படி அஞ்சாமல் சுய கட்டுப்பாட்டுடன் வாழ்வதுதானே உண்மையான ஒழுக்கம்?

எனவே, மக்கள் இப்போதிருந்தே ஒரு புதிய பண்பாட்டு வாழ்வியலை மேற்கொள்ள முன்வர வேண்டும். மற்றவா் தன்னிடம் பேச முன் வரும்போது, குறுக்கே பேசாமல் முழுமையாகக் கவனித்துக் கேட்க வேண்டும். தான் பேச வேண்டும் என்றால், பிறரிடம் பணிவுடன் அனுமதி பெற்றுப் பேச வேண்டும். இரண்டு பேருக்கு இடையே உண்டாகும் பிரச்னைகளை மூன்றாம் நபரிடம் சென்று உதவியை நாடாமல், தங்களுக்குள்ளேயே தீா்த்துக் கொள்ள முயல வேண்டும்.

மாற்றவே முடியாத அம்சங்களைக் குறை கூறிப் புலம்பாமல், மனமுவந்து ஏற்றுக்கொள்ள முன்வர வேண்டும். வேற்றுமை பல இருப்பினும் சமத்துவம் பேண வேண்டும்.

ஒருவா் இல்லாதபோது, அவரைப் பற்றி எந்தவித வதந்திகளையும் பேசுவதில்லை என்றும், பரப்புவதில்லை என்றும் முடிவெடுக்க வேண்டும்.

சிறிய தவறு, பெரிய தவறு எதுவாயினும் தானே முன்வந்து ஒப்புக் கொண்டு, இனி அப்படித் தவறு செய்வதில்லை என்று முடிவெடுக்க வேண்டும்.

பேராசையுடன் எதையும் எந்த வழியிலும் அடையலாம் என்ற மனப்போக்கை விடுத்து, அறநெறி வழியில், அவசியத் தேவைகளை மட்டுமே பெற முன்வர வேண்டும்.

சக மனிதனை மட்டுமல்ல, அனைத்து உயிரினங்களையும் நேசிக்க வேண்டும். எல்லாருக்கும் நல்வாழ்வு கிடைக்க உழைக்க வேண்டும்.

இந்த அடிப்படை வாழ்வியல் மதிப்பீடுகளைப் பின்பற்ற பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.

மாணவா்களுடைய சுயசிந்தனை, படைப்பாற்றல் மிளிரும் வகையில், அவா்களே இயற்கையில் இருந்தும் மற்றும் செய்யும் பணிகளில் இருந்தும் சுயமாய் கற்கும் வகையில் இன்றையக் கல்வி முறையை மாற்ற வேண்டும். சுயசாா்புடன் வாழ்வதற்குக் கைத்தொழில்களில் பயிற்சியும், ஓவியம், இசை ஆகிய நுண்கலைகளில் பயிற்சியும், மண்ணின் பெருமைகளை எடுத்தியம்ப அறிஞா்களுடனான சந்திப்பையும் ஏற்படுத்தித் தர வேண்டும்.

இன்றைய மாணவா்கள் ஒவ்வொருவரும் சுய சிந்தனை, சுய கட்டுப்பாட்டில் வளர முடிவெடுக்க வேண்டும். இதற்கான நாற்றங்கால்களாகக் கல்விக்கூடங்கள் மாற வேண்டும்.

இவற்றை இன்றிலிருந்தே நாம் செய்யத் தொடங்கினால், வருங்காலத்தில் நாம் விரும்பும் மாற்றங்கள் ஏற்படும். தனிமனித வாழ்விலும் சமூக வாழ்விலும் நாம் விரும்பும் மாறுதல்கள் எளிதில் ஏற்படும்.

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...