Showing posts with label KAVITHAIGAL. Show all posts
Showing posts with label KAVITHAIGAL. Show all posts

Saturday, April 11, 2015

நடிகர் திலகம் பற்றி கவியரசு வைரமுத்து

உங்கள் “பராசக்தி” வெளிவந்து ஓராண்டுக்குப் பிறகுதான் நான் பிறக்கிறேன். நீங்கள் விருட்சமாய் வளர வளர நான் விதையாய் முளைத்திருக்கிறேன். உங்கள் படங்களைப் பார்க்கப் போனபோது மட்டுந்தான் கால் சட்டைப் பைகளில் நிரப்பிக் கொண்டு போன கடலைகளைத் தின்னாமல் திருப்பிக் கொண்டு வந்திருக்கிறேன்.

‘மனோகரா’ பார்த்துவிட்டு அந்த உணர்ச்சியில் சிறிதும் சிந்தாமல் அப்படியே வீட்டுக்கு வந்து சங்கிலிக்குப் பதிலாக தாம்புக் கயிற்றால் என்னைப் பிணைத்து இருவரை இழுத்துப் பிடித்துக் கொள்ளச் செய்துவிட்டு புளிய மரத்தைப் புருஷோத்தமனாக்கி என்னை வசனம் பேச வைத்தவர் நீங்களல்லவா...?

‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ பார்த்துவிட்டு சோளத்தட்டையில் வாள் செய்து என்னைச் சுழற்ற வைத்தவர் நீங்களல்லவா?

உலக சினிமா வரலாற்றில் இந்திய சினிமாவிற்கு முக்கிய பங்கிருக்கிறது.
இந்திய சினிமா வரலாற்றில் தமிழ் சினிமாவிற்கு முக்கிய பங்கிருக்கிறது.
தமிழ் சினிமாவில் நடிகர் திலகத்திற்கு அதி முக்கிய பங்கிருக்கிறது.
நீங்கள் நடித்ததால் பல தமிழ்ப் படங்கள் உலகத் தரம்பெற்றன!

Friday, February 27, 2015

குளக்கரை

வைரமுத்து (Vairamuthu)

முப்பத்தேழாண்டுகள் முடிந்தோடின
இந்தக் குளக்கரையில் நான் நடந்து

இன்றுதான் மீண்டும்
நடைபயில்கிறேன்

காலில் பரவசம்
நெஞ்சில் வலி

அன்று கூவிய பறவைகளில்
ஒன்றையும் காணோம்!

எந்த மழையில்
எந்தக் கோடையில்
மாண்டிருக்குமோ?

அன்று குடைபிடித்த மரங்களில்
ஏதுமில்லை இப்போது
கதவாய் - சாம்பலாய்
எவ்வடிவம் பூண்டனவோ?

உள்ளிருந்த அல்லிகள்
பூண்டற்று அழிந்தன

அன்று
சேலையைக் கல்லிலும்
மார்பால் மனசையும்
துவைத்துப் பிழிந்த பெண்கள்
மூத்து முதிர்ந்தாரோ
செத்தழிந்து போனாரோ?

அன்று
தத்தியெறிந்த தவளைக்கல்
தூர்வாரக் குளத்தாழத்தில்
கிடக்குமோ? கிடக்காதோ?

இப்போதென் நுரையீரல் நிறைப்பது
சேற்றுமணம் சுமந்த பழைய காற்றோ?
புழுதிசுமந்த புதிய காற்றோ?

அதோ
ஆங்கிலத்தின் கடைசி எழுத்தைப்போல்
வளைந்து நாற்றுநடும் மூதாட்டிகள்
நான் அன்றுகண்ட மங்கையரோ
இல்லை
முப்பது வயதில் முதுமைக்கு வந்தவரோ?

அன்று
குளத்தில் தொலைந்த மஞ்சள் ஓரணா
இன்று முக்குளித்தால்
கிட்டுமோ? கிட்டாதோ?

பூமியின் முகத்தில்
காலத்தின் கீறல்கள்
எல்லாம் எல்லாம்
மாறித் தேய்ந்தன

ஆனாலும்
நம்பிக்கையோடு தேடுகிறேன்
குளக்கரையில் பதிந்த என்
பிஞ்சுக்கால் தடங்களை

Friday, December 26, 2014

சுனா‌மி

சுனா‌மி

ஏ கடலே
உன் கரையில் இதுவரையில்
கிளிஞ்சல்கள்தானே சேகரித்தோம்
முதன் முதலாய்ப் பிணங்கள் பொறுக்குகிறோம்

ஏ கடலே
நீ முத்துக்களின் பள்ளத்தாக்கா
முதுமக்கள் தாழியா

உன் அலை எத்தனை விதவைகளின் வெள்ளைச் சேலை?

உன் மீன்களை நங்கள் கூறுகட்டியதற்காக
எங்கள் பிணங்களை நீ கூறுகட்டுகிறாய்?

அடக்கம் செய்ய ஆளிராதென்றா
புதை மணலுக்குள்
புதைத்துவிட்டே போய்விட்டாய்?

பிணங்களை அடையாளம் காட்டப்
பெற்றவளைத் தேடினோம்
அவள் பிணத்தையே காணோம்

மரணத்தின் மீதே மரியாதை போய்விட்டது
பறவைகள் மொத்தமாய் வந்தால் அழகு
மரணம்
தனியே வந்தால் அழகு
மொத்தமாய் வரும் மரணத்தின் மீது
சுத்தமாய் மரியாதையில்லை

இயற்கையின் சவாலில்
அழிவுண்டால் விலங்கு

இயற்கையின் சவாலை
எதிர்கொண்டால் மனிதன்.


  • கவிஞர் : வைரமுத்து

Sunday, December 21, 2014

மழைப் பிரசங்கம்

யாரங்கே?
வாருங்கள்...

விண்ணுக்கும் மண்ணுக்கும்
தண்ணீர்ப்பாலம் பாருங்கள்

திரவ முத்துக்கள்
தெறிப்பது பாருங்கள்

யாசித்த பூமிக்கு
அந்த வானம்
வைரக் காசுகள்
வீசுவது பாருங்கள்

மழை மழை மழை
மழை மழை மழை

மண்ணின் அதிசயம் மழை

பூமியை வானம்
புணரும் கலை மழை

சமுத்திரம் எழுதும்
சமத்துவம் மழை

மழைபாடும்
பள்ளியெழுச்சியில்
ஒவ்வொர் இலையிலும்
உயிர் சோம்பல்முறிக்கிறது

இது என்ன...?

மழையை இந்த மண்
வாசனையை அனுப்பி
வரவேற்கிறதா?

என்ன...?
என்ன சத்தம்...?
சாத்தாதீர் ஜன்னல்களை
அது மழைக்கெதிரான
கதவடைப்பு

குடையா?
குடை எதற்கு?
அது
மழைக்கெதிராய்
மனிதன் பிடிக்கும்
கறுப்புக் கொடி

ஏன்...?
ஏனந்த ஓட்டம்?
வரம் வரும் நேரம்
தபசி ஓடுவதா?

இதுவரை நீங்கள்
மழையைப் பார்த்தது
பாதிக் கண்ணால்

ஒலி கேட்டது
ஒரு காதால்

போதும் மனிதர்களே

பூட்டுப் போட்டுப்
பூட்டுப்போட்டுப்
புலன்களே பூட்டாயின

திறந்து விடுங்கள்

வாழப்படாத வாழ்க்கை
பாக்கி உள்ளது

உங்கள் வீட்டுக்கு
விண்ணிலிருந்து வரும்
விருந்தாளியல்லவா மழை

வாருங்கள்

மழையை
நம் வீட்டுத்
தேநீருக்கழைப்போம்


  • கவிஞர் : வைரமுத்து

Saturday, December 6, 2014

சொல்லதிகாரம்



'கொல்' 'கொள்ளையடி'
சரித்திரம் அதிகம் கேட்ட வார்த்தைகள்

'''ஆராரோ'' ''சனியனே''
தொட்டில்கள் அதிகம் கேட்ட வார்த்தைகள்

''உனக்கெப்போது கல்யாணம்?''
விலைமகள் அதிகம் கேட்ட வார்த்தைகள்

''உருப்போடு'' - உருப்படமாட்டாய்''
வகுப்பறைகள் அதிகம் கேட்ட வார்த்தைகள்

''இன்னொரு ஜென்மம்
என்றொன்றிருந்தால்''
பூங்காக்கள் அதிகம் கேட்ட வார்த்தைகள்

''கடைசியாய் எல்லாரும்
முகம்பார்த்துக் கொள்ளுங்கள்''
மயானங்கள் அதிகம் கேட்ட வார்த்தைகள்

''சவால் விடுகிறேன் - சபதம் செய்கிறேன்'
மேடைகள் அதிகம் கேட்ட வார்த்தைகள்

'பாலாறு - தேனாறு'
பொதுஜனம் அதிகம் கேட்ட வார்த்தைகள்

''மறக்காமல் கடிதம் போடு''
ரயிலடிகள் அதிகம் கேட்ட வார்த்தைகள்

''அய்யா குளிக்கிறார்''
தொலைபேசி அதிகம் கேட்ட வார்த்தைகள்

'அப்பா கோபமாயிருக்கிறார்'
குழந்தைகள் அதிகம் கேட்ட வார்த்தைகள்

'தயவுசெய்து' - 'மன்னியுங்கள்'
ஐரோப்பா அதிகம் கேட்ட வார்த்தைகள்

''நேற்றே வந்திருக்கக் கூடாதா''
கடன் கேட்போன் அதிகம் கேட்ட வார்த்தைகள்

'இனிமேல் ஆண்டவன் விட்ட வழி'
மருத்துவமனைகள் அதிகம் கேட்ட வார்த்தைகள்

* * * * *
போதுமடா சாமி!
போதும்! போதும்!

ஒரே கல்லில் துவைத்துத் துவைத்துச்
சாயம் போயின வார்த்தையின் நிறங்கள்

இனி ஒவ்வொரு சொல்லையும்
ஒட்டடை தட்டுவோம்


இனிமேல் வார்த்தைகளை
இடம் மாற்றிப் போடுவோம்

அத்தனை சொல்லிலும்
ஆக்சிஜன் ஏற்றுவோம்

வார்த்தை மாறினால்
வாழ்க்கை மாறும்

* * * * *
முதலில்
வாழ்க்கையிலிருந்து
வார்த்தையை மீட்போம்
பின்னர்
அர்த்தத்திலிருந்து
வார்த்தையை மீட்போம்

வாழ்வின் நீள அகலம் கருதி
வார்த்தைகளிலும் நாம்
மழித்தல் நீட்டல் செய்வோம்

மரித்தான் என்ற சொல்லை யெறிந்து
வாழ்வை வென்றான் என்று புகல்வோம்

தோல்வி என்னும் சொல்லைத் தொலைத்து
விலகி நிற்கும் வெற்றியென்றுரைப்போம்

எதிரி என்ற வார்த்தை எதற்கு?
தூரத்து நண்பன் சொல்லித் திளைப்போம்

சதிபதி இருவர் சண்டைகள் இட்டால்
முரட்டு அன்பென்று மொழிந்து பார்ப்போம்

இலைகள் கழிந்த கிளைகள் கண்டால்
அடுத்த வசந்த ஆரம்பம் என்போம்

நொந்த தேகம் நோயில் விழுந்தால்
உடம்பே கொள்ளும் ஓய்வென்றுரைப்போம்

வெள்ளைச் சட்டையில் மைத்துளிபட்டால்
மையைச் சுற்றிலும் வெண்மையென்போம்

நிலவைத் தொலைத்த வானம் என்பதை
விண்மீன் முளைத்த விண்வெளி என்போம்

எதிர்மறை வார்த்தைகள்
உதிர்ந்து போகட்டும்

உடன்பாட்டு மொழிகள்
உயிர் கொண்டெழட்டும்

பழைய வார்த்தைகள் பறித்துப் பறித்துப்
புதிய நிலத்தில் பதியன்போடுவோம்

புளித்த வார்த்தைகள் மாறும்போது
சலித்த வாழ்க்கையும்
சட்டென்று மாறும்

Sunday, November 30, 2014

அடை மழையே! அடை மழையே! உன் மடையை உடனே அடை மழையே!

மாண்புமிகு மழையே

மாண்புமிகு மழையே! உனக்கொரு 
மடல்! நீ 
எவ்வளவு பெய்தாலும் 
ஏற்க வல்லது 
கடல்கொண்ட 
குடல்; 
ஏற்க 
ஏலாதது 
குடல் கொண்ட 
உடல்! 

நீ பெய்யலாம் 
நூறு அங்குலம்; அன்னணம் 
பெய்தால் என்னணம் 
பிழைக்கும் எங்குலம்? 

அடை மழையே! 
அடை மழையே! உன் 
மடையை உடனே 
அடை மழையே! 

கொடுப்பதும் மழை; 
கெடுப்பதும் மழை; 
இது 
இரண்டாயிரம் ஆண்டுகள் முன் 
தாடி வைத்த தமிழ் 
பாடி வைத்த தமிழ்! 

அளவோடு பெய்தால் 
உன்பேர் மழை; 
அளவின்றிப் பெய்தால் 
உன்பேர் பிழை! 

தாகம் _ 
தணிய.... 
உன்னைக் குடித்தோம் என்றா 
எங்கள் 
உயிரை நீ குடிக்கிறாய்? 
மழைக்கே தாகமா? _ எமனுக்கு 
மற்றொரு பெயர் மேகமா? 

சவத்தைக் குளிப்பாட்டினால் அது 
சடங்கு; நீ 
குளிப்பாட்டியதால் நிரம்புகிறதே சவக் 
கிடங்கு! 
நீரின்றி 
நிற்காது உலகு; எங்கும் 
நீராகவே இருந்தாலும் 
நிற்காது உலகு! 

பூகம்பம்; 
புகைவண்டி; 
புயல் வெள்ளம்; 

என 
ஏனிப்படி... 

குஜராத்தைக் 
குறி வைத்து 
இடையறாது தாக்குகிறது 
இயற்கை? உன்னொத்த 
இயற்கையைத் தண்டிக்காது 
இருப்பதேன் இறைக்கை? 

விண்ணிலிருந்து
வருவது தண்ணீர்; 
கண்ணிலிருந்து 
வருவது கண்ணீர்; 
எனினும் 
எஞ்ஞான்றும்
தண்ணீரைப் பொறுத்தே 
கண்ணீர்! 

தெய்வம் 
தொழாது 
கொழுநன் 
தொழுவாளைப் போலே... 
மழையே! 
மாந்தர் 
பெய் எனும்போது 
பெய்; உனது 
பெயரை என்றும் 
பெயராமல் வை! 

ஊக்குவிக்க ஆளிருந்தால்

ஊக்குவிக்க ஆளிருந்தால்


ஊக்குவிக்க ஆளிருந்தால்
ஊக்கு விற்கும் ஆள் கூடத்
தேக்கு விற்பான்!

கவிஞர் : கவிஞர் வாலி

  • கவிஞர் : கவிஞர் வாலி


என் அம்மாவிற்கு எழுதிய பிறந்த நாள் வாழ்த்து

எத்தனை சொந்தம் என் வாழ்வில் 
வந்தாலும் அம்மா 
உன் ஒற்றை பார்வையின் பந்தம் 
எதுவும் தந்ததில்லை 

உன் கண்ணீரை எல்லாம் சிரிப்பில் 
மறைத்தாய் அம்மா 
இத்தனைநாளும் அது எனக்கு 
விளங்கியதில்லை 


நான் வளரும் ஒவ்வொரு நொடியும் 
உனக்கு பாரம் தான் 
தெரிந்தும் சுமக்கிறாய் 
பத்து மாதம் வரை அல்ல 
உன் ஆயுள் காலம் வரை 


உன் காலம் நரைக்கும் நேரத்தில்
என் நேரம் உனக்காய் 
இருக்க போவதில்லை 
தெரிந்தும் 
காக்கிறாய் உன் 
இமைக்குள் வைத்து என்னை 
கடமைக்காக அல்ல 
கடனுக்காக அல்ல 
கடவுளாக 

உன் வாழ்வின் ஒரு பாதி 
உன் பெற்றோருக்காய் 
மறு பாதி உன் பிள்ளைகளுக்காய் 
மனதார பகிர்ந்தளித்து விட்டாய் 
என்றாவது உனக்காய் வாழும் 
உத்தேசம் உண்டா 

உன் அன்னைக்கு என்ன கைமாறு 
செய்தாலும் உன்னை எனக்கு 
தந்ததிற்கு ஈடாய் 
ஒன்றும் செய்ய இல்லாமல் 
முடமாய் நிற்கிறேன் 


ஏழு ஜென்மங்களில் நம்பிக்கை இல்லை 

இனி ஒரு ஜென்மம் 
இருந்து உயிரினமாய் பிறந்தால் 
உன்னை எந்தன் மகளாக்கும் பாக்கியம் 
மட்டும் போதும் 

ஒரே ஒரு வேண்டுகோள் உன்னிடம் 
இன்று மட்டுமாவது 
உனக்காய் வாழ முயற்சி செய் 


என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Monday, November 24, 2014

நவீன தாலாட்டு

Image result for vairamuthu images



சோலைக்கு பிறந்தவளே!
சுத்தமுள்ள தாமரையே!
வேலைக்கு போகின்றேன் - வெண்ணிலவே கண்ணுறங்கு!

அலுவலகம் விட்டு -
அம்மா வரும் வரைக்கும் -
கேசட்டில் தாலாட்டு - கேட்டபடி கண்ணுறங்கு!

ஒரு மணிக்கு ஒரு பாடல்
ஒளிபரப்பும் வானொலியில்
விளம்பரங்கள் மத்தியில் - விழி சாத்தி நீயுறங்கு!

9 மணி ஆனால் உன் அப்பா சொந்தமில்லை -
9:30 மணி ஆனால் உன் அம்மா சொந்தமில்லை -
ஆயவும் தொலைக்காட்சியும் அசதியில் தூங்கிவிட்டால் -
தூக்கத்தை தவிர துணைக்கு வர யாருமில்லை!

20-ம் நூற்றாண்டில் என் கருவில் வந்தவளே!
இது தான் கதியென்று - இன்னமுதே கண்ணுறங்கு!

தூரத்தில் இருந்தாலும் தூயவளே -
உன் தொட்டில் ஓரத்தில் -
என் நினைவு - ஓடிவரும் கண்ணுறங்கு!

பேருந்தில் நசுங்கி, பிதுங்கி போகிற வேளையிலும்
எடை கொஞ்சம் இழந்து இறங்குகின்ற வேளையிலும்
பூப்பூவாய் உனது புகம் புறப்பட்டு வரும் கண்ணே!

தந்தை வந்து கொஞ்சுவதாய் -
தங்க மடியில் தூங்குவதாய் -
கண்ணனே கண்மணியே - கனவு கண்டு - நீயுறங்கு!

புட்டிபால் குறையவில்லை -
பொம்மைக்கும் பஞ்சமில்லை -
தாய்ப்பாலும் தாயும் இன்றி -
தங்க மகனுக்கு என்ன குறை?

மாலையிலே ஓடி வந்து
மல்லிகையே உன்னை அணைத்தால்
சுரக்காத மார்பும் சுரக்குமடி- கண்ணுறங்கு!

உறவுக்கு தடையாக
'ஒ' என்று அலறாமல் -
இரவ்க்கும் மிச்சம் வைத்து
இப்போது - நீ உறங்கு!

தாயென்று காட்டுவதற்கும்
தாவி எடுப்பதற்கும்
ஞாயிற்றுகிழமை வரும் - நல்லவளே கண்ணுறங்கு!

  • கவிஞர் : வைரமுத்து

Thursday, November 6, 2014

கூப்பிடு தூரத்தில் வாழ்க்கை

தற்கொலை புரியப்போய்
மரணம் மறுதலிக்க
வாழ்க்கைக்குள் மீண்டும்
துப்பப்பட்டவனே

சொல்

பேய்களின் விருந்துமண்டபமாய்
மனசு உனக்கு மாறியதெப்படி?

மூளையில் எப்போது
முள்முளைத்து உனக்கு?

மரணத்தின் கர்ப்பப்பையில்
கலைந்து போனவனே

நீ
செத்திருந்தால்
ஊர் அழுதிருக்கும்

சாகவில்லை
நீயே அழுகிறாய்

கைக்குட்டை இந்தா
கண்களைத் துடை

உயிரின் உன்னதம்
தெரியுமா உனக்கு?

மனிதராசியின்
மகத்துவம் தெரியுமா?

உயிர் என்பது
ஒருதுளி விந்தின்
பிரயாணம் இல்லையப்பா

அது
பிரபஞ்சத்தின் சுருக்கம்

உன்னை அழித்தால்
பிரபஞ்சத்தின்
பிரதியை அழிக்கிறாய்

பிரபஞ்சத்தை அழிக்க
உனக்கேதப்பா உரிமை?

வாழ்க்கை உன்னை
பூமிக்கு அனுப்பியபோது

கைந்நிறையப் பூக்கள்

இப்போதென்ன...
பைந்நிறைய
சவப்பெட்டி ஆணிகள்...?


வாழ்க்கையோடு
உடன்பாடு

மனிதரோடுதான்
முரண்பாடா?

மனிதரைக் கழித்தாலும்
பூமி மிச்சப்படுமடா பாவி


  • கவிஞர் : வைரமுத்து

Friday, October 31, 2014

காலமே என்னைக் காப்பாற்று

காலமே என்னைக் காப்பாற்று

அதிகாலைக்கனவு கலைக்கும்
அலாரத்திடமிருந்தும் -

நித்தம் நித்தம்
ரத்தத்தில் அச்சேறிவரும்
பத்திரிகைச் செய்திகளின் பயங்கரத்திலிருந்தும் -

தென்னைமரத்தில்
அணில்வேடிக்கைபார்க்கும்
குழந்தை நிமிஷத்தில்
அலறும் தொலைபேசியின் அபாயத்திலிருந்தும் -

ஒளிமயமான கற்பனை உதிக்கும் வேளை
தலைமறைவாகித் தொலைக்கும் பேனாவிலிருந்தும் -

விஞ்ஞானிபோல் புத்திசெதுக்கி
முனிவன்போல் புலனடக்கித்
தும்பிபிடிக்குமொரு பொற்பொழுதில்
தொழிலைக் கெடுக்கும் தும்மலிலிருந்தும் -

காலமே
என்னைக்
காப்பாற்று

* * * * *
ஒரே ஒரு புத்தகம்படித்த
'அறிவாளி'யிடமிருந்தும் -

சிநேகிக்கும் பெரியவர்களின்
சிகரெட் புகையிலிருந்தும் -

எல்லாரும் கதறியழ
எனக்குமட்டும் கண்ணீர்வராத
இழவு வீட்டிலிருந்தும் -

காலமே
என்னைக்
காப்பாற்று

* * * * *

பயணியர்விடுதிக்
கொசுவிடமிருந்தும் -

முத்திரைவிழாத அஞ்சல்தலைகளை
உற்றுக்கிழித்துப் பயன்படுத்தும்
உலோபியிடமிருந்தும் -

கை கழுவ அமர்ந்த
சாப்பாட்டு மேஜையில்
கைகுலுங்க வரும்
கைகளிலிருந்தும்...


நோயுற்ற காலை
தனிமையிலிருந்தும்-

நோய்கள் வந்தபின்
மருந்திடமிருந்தும் -

மருந்து தீர்ந்தபின்
நோயிடமிருந்தும் -

காலமே
என்னைக்
காப்பாற்று

* * * * *

எனதுபக்கம் நியாயமிருந்தும்
சாட்சிகள் இல்லாச் சந்தர்ப்பத்திலிருந்தும் -

வருமானம் எல்லாம் தீரும் வயதில்
வரிபாக்கி கேட்கும் ஆணையிலிருந்தும் -

என்னைப் பகையாய் எண்ணும் வாசலில்
பரிந்துரைகோரும் பாவத்திலிருந்தும் -

இல்லையென்றொருவன்
தவிக்கும்பொழுதில்
இல்லையென்று நான்
தவிர்ப்பதிலிருந்தும்

காலமே
என்னைக்
காப்பாற்று

* * * * *
சக ரயில் பயணியின்
அரட்டையிலிருந்தும்
அரட்டை முடிந்ததும்
குறட்டையிலிருந்தும்

காலமே
என்னைக்
காப்பாற்று

* * * * *
தீதும் நன்றும் பிறர்தர வாரா
என்பது எனக்கு ஏற்புடைத்தென்பதால்

என்னிடமிருந்தே
என்னிடமிருந்தே

காலமே
என்னைக்
காப்பாற்று

  • கவிஞர் : வைரமுத்து

Wednesday, October 29, 2014

கவிஞர் : வைரமுத்து அந்தந்த வயதுகளில்....

Image result for vairamuthu images

அந்தந்த வயதுகளில்.

இருபதுகளில்...

எழு உன் கால்களுக்கு சுயமாய் நிற்கச் சொல்லிக்கொடு...
ஜன்னல்களை திறந்து வை...
படி.. எதையும் படி...
வாத்சாயனம் கூடக் காமம் அல்ல - கல்வி தான் படி...
உன் சட்டைப் பொத்தான் கடிகாரம் 
காதல் சிற்றுண்டி சிற்றின்பம் எல்லாம் 
விஞ்ஞானத்தின் மடியில் விழுந்து விட்டதால் எந்திர அறிவுக் கொள்...
சப்தங்கள் படி
சூழ்ச்சிகள் அறி
பூமியில் நின்று வானத்தைப் பார்... 
வானத்தில் நின்று பூமியைப் பார்...
உன் திசையை தெரிவு செய் நுரைக்க நுரைக்கக் காதலி
காதலை சுகி காதலில் அழு...
இருபதுகளின் இரண்டாம் பாகத்தில் மணம்புரி
வாழ்க்கை என்பது உழைப்பும் துய்ப்பும் என்று உணர்

முப்பதுகளில்....

சுருசுருப்பில் தேனீயாய் இரு நிதானத்தில் ஞானியாய் இரு...
உறங்குதல் சுருக்கு உழை நித்தம் கலவிகொள்
உட்கார முடியாத ஒருவன் 
உன் நாற்காலியை ஒழித்து வைத்திருப்பான்... கைப்பற்று...
ஆயுதம் தயாரி பயன்படுத்தாதே...
எதிரிகளை பேசவிடு.. சிறுநீர் கழிக்கையில் சிரி...
வேர்களை இடிப் பிழக்காத ஆழத்துக்கு அனுப்பு...
கிளைகளை சூரியனுக்கு நிழழ் கொடுக்கும் உயரத்திற்கு பரப்பு...
நிலைகொள்.

நாற்பதுகளில்...

இனிமேல்தான் வாழ்க்கை ஆரம்பம்
செல்வத்தில் பாதியை அறிவில் முழுமையை செலவழி
எதிரிகளை ஒழி..
ஆயுதங்களை மண்டை ஓடுகளில் தீட்டு
பொருள் சேர்
இரு கையால் ஈட்டு ஒரு கையாலேனும் கொடு
பகல் தூக்கம் போடு
கவனம்... இன்னொருக் காதல் வரும்.. 
புன்னகை வரைப் போ... புடவை தொடாதே...
இதுவரை இலட்சியம்தானே உனது இலக்கு...
இனிமேல் இலட்சியத்திற்கு நீதான் இலக்கு...

ஐம்பதுகளில்...

வாழ்க்கை - வழுக்கை இரண்டையும் ரசி
கொழுப்பை குறை... முட்டையின் வெண்கரு 
காய்கறி கீரைகொள்
கணக்குப்பார்
நீ மனிதனா என்று வாழ்கையைக் கேள்..

அறுபதுகளில்....

இதுவரை வாழ்க்கைதானே உனை வாழ்ந்தது... 
இனியேனும் வாழ்க்கையை நீ வாழ்...
விதிக்கப்பட்ட வாழ்க்கையை விழக்கி விடு...
மனிதர்கள் போதும்
முயல்கள் வளர்த்துப் பார் நாயோடு தூங்கு கிளியோடு பேசு
மனைவிக்குப் பேன்பார்
பழைய டைரி எடு... இப்போதாவது உண்மை எழுது...

எழுபதுகளில்...

இந்தியாவில் இது உபரி...
சுடுகாடுவரை நடந்து போகச் சக்தி இருக்கும்போதே செத்துப்போ
ஜன கண மன..!!!

  • கவிஞர் : வைரமுத்து

NEWS TODAY 19.04.2024 & 20.04.2024