Sunday, November 30, 2014

அடை மழையே! அடை மழையே! உன் மடையை உடனே அடை மழையே!

மாண்புமிகு மழையே

மாண்புமிகு மழையே! உனக்கொரு 
மடல்! நீ 
எவ்வளவு பெய்தாலும் 
ஏற்க வல்லது 
கடல்கொண்ட 
குடல்; 
ஏற்க 
ஏலாதது 
குடல் கொண்ட 
உடல்! 

நீ பெய்யலாம் 
நூறு அங்குலம்; அன்னணம் 
பெய்தால் என்னணம் 
பிழைக்கும் எங்குலம்? 

அடை மழையே! 
அடை மழையே! உன் 
மடையை உடனே 
அடை மழையே! 

கொடுப்பதும் மழை; 
கெடுப்பதும் மழை; 
இது 
இரண்டாயிரம் ஆண்டுகள் முன் 
தாடி வைத்த தமிழ் 
பாடி வைத்த தமிழ்! 

அளவோடு பெய்தால் 
உன்பேர் மழை; 
அளவின்றிப் பெய்தால் 
உன்பேர் பிழை! 

தாகம் _ 
தணிய.... 
உன்னைக் குடித்தோம் என்றா 
எங்கள் 
உயிரை நீ குடிக்கிறாய்? 
மழைக்கே தாகமா? _ எமனுக்கு 
மற்றொரு பெயர் மேகமா? 

சவத்தைக் குளிப்பாட்டினால் அது 
சடங்கு; நீ 
குளிப்பாட்டியதால் நிரம்புகிறதே சவக் 
கிடங்கு! 
நீரின்றி 
நிற்காது உலகு; எங்கும் 
நீராகவே இருந்தாலும் 
நிற்காது உலகு! 

பூகம்பம்; 
புகைவண்டி; 
புயல் வெள்ளம்; 

என 
ஏனிப்படி... 

குஜராத்தைக் 
குறி வைத்து 
இடையறாது தாக்குகிறது 
இயற்கை? உன்னொத்த 
இயற்கையைத் தண்டிக்காது 
இருப்பதேன் இறைக்கை? 

விண்ணிலிருந்து
வருவது தண்ணீர்; 
கண்ணிலிருந்து 
வருவது கண்ணீர்; 
எனினும் 
எஞ்ஞான்றும்
தண்ணீரைப் பொறுத்தே 
கண்ணீர்! 

தெய்வம் 
தொழாது 
கொழுநன் 
தொழுவாளைப் போலே... 
மழையே! 
மாந்தர் 
பெய் எனும்போது 
பெய்; உனது 
பெயரை என்றும் 
பெயராமல் வை! 

No comments:

Post a Comment

T.N. govt. to launch health insurance for the elderly

T.N. govt. to launch health insurance for the elderly The Hindu Bureau CHENNAI. 18.08.2026 Tamil Nadu will launch the ‘Chief Minister’s Elde...