Friday, November 28, 2014

தொடரும் மது, புகை, ஈவ்டீஸிங் தொந்தரவுகள்: கேள்விக்குறியாகும் ரயில் பயணிகளின் பாதுகாப்பு - உதவிக்கு வராத ‘ஹெல்ப்’லைன், போலீஸார்



மிகவும் பாதுகாப்பானது என்று மக்கள் நம்பி பயணம் செய்யும் ரயில்களில் போதை ஆசாமிகளின் தொந்தரவு இருப்பதாக பல பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர். அவர்களைப் பற்றி டிடிஆர், ஹெல்ப்லைன், போலீஸ் என யாரை தொடர்பு கொண்டு கூறினாலும் தீர்வு கிடைப்பதில்லை என்று வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

சென்னை, மதுரை, திருச்சி, கோவை போன்ற நகரங்களின் ரயில் நிலையங்களில் ரயில்வே போலீஸாரும் ரயில்வே பாதுகாப்புப் படையினரும் இங்கும் அங்கும் சுற்றுவதைப் பார்க்கலாம். ரயில்களிலும் காக்கிச் சட்டையினர் ரோந்து வருவார்கள். அனைத்து ரயில்களிலும், அனைத்து ரயில் நிலையங்களிலும் இந்த அளவுக்கு கண்காணிப்பு நடவடிக்கைகள் இருக்கிறதா? ரயில் பயணம் அனைத்துப் பயணிகளுக்கும் முழு பாதுகாப்பானதாக இருக்கிறதா? ‘இல்லை’ என்கிறது சமீபத்திய உதாரணங்கள்.

போதை ஆசாமிகள்

கடந்த 19-ம் தேதி. கன்னியா குமரி எக்ஸ்பிரஸின் ஏ1 ஏ.சி. பெட்டியில் சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்குப் புறப்படுகின்றனர் ஒரு பெண் மருத்துவரும், அவரது தாயும். பக்கத்து கேபினில் ஒரு பெண், அவரது மகள். வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டை சகிதமாக அந்த கேபினில் ஏறுகின்றனர் 6 ஆண்கள். ரயில் புறப்பட்ட சிறிது நேரத்தில் அவர்களது மதுக் கச்சேரி தொடங்குகிறது. பயந்துபோன பெண் தன் மகளை அழைத்துக்கொண்டு மருத்துவரின் கேபினில் தஞ்சமடைகிறார். ‘நாங்கள் அரக்கர்களா? கடித்து தின்றுவிடுவோமா’ என்று திட்டு கிறது மதுக் கூட்டம். அடைக்கலம் கொடுத்த மருத்துவருக்கும் திட்டு விழுகிறது.

ஒதுங்கிய டிடிஆர், போலீஸார்

அவர்களது நாற்றத்தையும் நாராச வார்த்தைகளையும் எத்தனை நேரம் பொறுப்பது? டிடிஆரிடம் முறையிட, ‘‘அது என் வேலை இல்லை’’ என்று கூறி ஒதுங்கிக்கொண்டார். பின்னர் ரயில்வே ஹெல்ப் லைனுக்கு (9962500500) தெரிவித்தார். விழுப்புரத்தில் ஏறிய போலீஸார், அந்த நபர்கள் இருந்த கேபினை எட்டிப் பார்த்தனர். ‘‘எழுதிக் கொடுத்தால் நடவடிக்கை எடுப்போம்’’ என்று கூறிவிட்டு இறங்கிப் போய்விட்டனர். புகாரை எழுதி தயாராக வைத்துக் கொண்ட மருத்துவர், விருத்தா சலம் சந்திப்பு வந்ததும் போலீஸாரிடம் கொடுத்தார். அதன் பிறகும், நடவடிக்கை இல்லை. ‘‘எங்கே வேணாலும் கம்ப்ளைன்ட் பண்ணுங்க. ஒண்ணும் செய்ய முடியாது’’ என்று எக்கா ளமாக சிரித்துவிட்டு நெல்லையில் இறங்கியது போதை இறங்கிய ‘ஒய்ட் அன் ஒய்ட்’ கும்பல். ‘‘போட்டோ எடுத்து வைத்திருக் கிறேன். ரயில்வே மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளிடம் புகார் கொடுக்க இருக்கிறேன்’’ என்றார் அந்த பெண் மருத்துவர்.

புகார் கொடுத்ததன் விளைவு

இன்னொரு சமீபத்திய உதாரணம். சென்னை - மன்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் கைக்குழந்தை யுடன் ஒரு இளம் தம்பதி. விழுப் புரம் கடந்து சென்றபோது, போதை யில் இருந்த 3 ஆண்கள், அந்த பெண்ணின் கையைப் பிடித்து இழுத்திருக்கின்றனர். தட்டிக் கேட்ட கணவனுக்கு சரமாரி அடி. ஹெல்ப்லைனில் தொடர்பு கொண்டும் ஒரு போலீஸ்கூட வரவில்லை. மீண்டும் அவர்கள் புகார் கொடுத்தனர். கும்பகோணம் சந்திப்பு வந்ததும், போலீஸார் அங்கு வந்தனர். ‘‘நீங்கள்தானே புகார் கொடுத்தது. காவல் நிலையத் துக்கு வந்து கைப்பட புகார் எழுதிக் கொடுத்துவிட்டுச் செல்லுங்கள்’’ என்று கூறி, வலுக்கட்டாயமாக இறங்கவைத்துள்ளனர். புகார் கடிதம் எழுதி வாங்கிக்கொண்ட பிறகே அனுப்பினர். அதற்குள் ரயில் புறப்பட்டுச் சென்றுவிட்டதால், அந்த தம்பதி பேருந்தில் ஏறிச் சென்றனர்.

ரயிலுக்குள்ளேயே ஒதுக்குப் புறமாக சென்று மது அருந்துவது, எதற்கும் யோசிக் காமல் பயணிகளின் நடுவிலேயே உட்கார்ந்து மது அருந்துவது, புகை பிடிப்பது, பெண்களை கிண்டல் செய்வது என பல சம்பவங் கள் எக்ஸ்பிரஸ் ரயில்களில் நடக்கின் றன. சிக்குபவன் அப்பிராணி என்றால், போலீஸார் மிரட்டுவதும் ரெண்டு தட்டு தட்டுவதும் வழக்கம். கூட்டமாக இருந்தாலோ, கறைவேட்டியினர் என்றாலோ போலீஸார் கண்டுகொள்வதில்லை என்கின்றனர் பயணிகள்.

ரயில்வே போலீஸ் டிஎஸ்பி பொன்ராம் கூறும்போது, ‘‘எல்லா எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் ஒரு போலீஸ்காரர் கட்டாயம் இருப்பார். பிரச்சினைகள் குறித்து அவரிடம் எழுத்துப்பூர்வமாக புகார் கொடுத்தால் போதும். மேற்கொண்டு விவரம் தேவைப் பட்டால் போலீஸார் தொலை பேசியில் தொடர்பு கொண்டு கேட்டுக்கொள்வார்கள்’’ என்றார்.

புகார்கள் வந்தும் வழக்கு இல்லை

சட்ட விதிமுறைகள், பயணி களுக்கு சாதகமாகத்தான் இருக் கின்றன. அவற்றை செயல்படுத்து வதில்தான் குறைபாடு இருப்பதாகக் கருதுகின்றனர் பயணிகள். ஜிஆர்பி - 9962500500, ஆர்பிஎப் - 9003161710, இலவச ஹெல்ப்லைன் - 1322 ஆகிய எண் களில் தொடர்பு கொண்டு புகார் கொடுக்கலாம். எஸ்எம்எஸ் மூலம் 7708061804 என்ற எண்ணிலும் புகார் கொடுக்கலாம் என்று அறிவிக் கப்பட்டுள்ளது. ஆனால் இந்த எண்களுக்கு தொடர்பு கொண்டு புகார் கொடுத்தால், எந்த நடவடிக் கையும் எடுக்கப்படுவதில்லை என்கின்றனர் பாதிக்கப்பட்ட பயணி கள். கடந்த 3 மாதங்களில் மேற்கண்ட எண்களுக்கு 300-க்கு மேற்பட்ட அழைப்புகள் வந்துள்ளன. ஆனால், ஒரு வழக்குகூட பதிவு செய்யப்படவில்லை.

சூட்கேஸில் முடங்கிய பட்ஜெட்?

பயணிகளின் பாதுகாப்புக்கு மட்டும் ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருப்பதாக மத்திய ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக் கப்பட்டது. ரயில்களில் பெண்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை, பெண்களின் பாதுகாப்புக்காக ரயில் களில் ஆர்பிஎப் பெண் படையினர் எண்ணிக்கை அதிகரிப்பு, மகளிர் பெட்டிகள் அதிகரிப்பு, பயணி களின் பாதுகாப்புக்கு அதிக முக்கியத் துவம். இதெல்லாமும் பட்ஜெட் அம்சங்கள்தான். இத்தனை நல்ல அம்சங்களும் ரயில்வே மந்திரியின் பட்ஜெட் சூட்கேஸுக்குள் மட்டும் தான் இருக்குமா? அன்றாட செயல் பாட்டுக்கு வருவது எப்போது? என்ற சாமானியப் பயணியின் கூக்குரலும் நியாயமாகத்தான் தெரிகிறது.

போதையில் 6 பேர் நடந்து கொண்ட விதம் பற்றி ரயில்வே போலீஸ் அதிகாரி கூறுகையில், ‘‘அரசியல்வாதிகள் என்பதற்காக பொது இடத்தில் தவறு செய்வதை பொறுத்துக்கொள்ள வேண்டிய தில்லை. புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத போலீஸார் மீது துறை ரீதியான நடவடிக்கை நிச்சயம் எடுக்கப்படும்’’ என்றார்.

நடமாடும் காவல் நிலையம் வருமா?

நெல்லை, அனந்தபுரி, திருவனந் தபுரம் எக்ஸ்பிரஸ் ரயில்களில் நடமாடும் போலீஸ் நிலையம் உள்ளது. இதில் ஒரு உதவி ஆய்வாளர் தலைமையில் 2 காவலர்கள் இருப்பார்கள். ரயில்களில் நடக்கும் குற்றங்கள் தொடர்பாக இவர்களிடம் புகார் கொடுத்தால் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு, உடனடியாக ரசீதும் கொடுக்கப்படும். பயணிகள்- குறிப்பாக பெண் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில் களிலும் நடமாடும் காவல் நிலையம் அமைத்தால் மது ஆசாமிகள், புகை ஆசாமிகள், ஈவ்டீஸர்களிடம் இருந்து பெண் பயணிகள் தப்பிப்பார்கள். கவனிக்குமா ரயில்வே?

No comments:

Post a Comment

T.N. govt. to launch health insurance for the elderly

T.N. govt. to launch health insurance for the elderly The Hindu Bureau CHENNAI. 18.08.2026 Tamil Nadu will launch the ‘Chief Minister’s Elde...