Thursday, November 13, 2014

தகுதிகாண் பருவகாலம்

அரசு பணிகளிலும் சரி, முக்கியமான தனியார் நிறுவனங்களிலும் சரி, ஒருவர் புதிதாக பணியில் சேர்ந்தால், ஒரு குறிப்பிட்ட காலத்தை தகுதிகாண் பருவகாலம், அதாவது ‘புரபேஷன் பீரியட்’ என்பார்கள். இந்த காலகட்டத்தில் அவர்களுடைய பணித்திறமை எப்படி இருக்கிறது என்பதைப் பார்த்துத்தான் அவர்கள் அந்த பணிக்கு பொருத்தமானவர்களா? அல்லது அதைவிட குறைந்த பொறுப்புகள் கொண்ட பணிக்குத்தான் பொருத்தமானவர்களா?,அல்லது வேலைக்கே லாயக்கு இல்லாதவர்களா? என்பதை கணித்து, அதற்கேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதேபோல, நடைமுறையைத்தான் மந்திரிசபை மாற்றத்திலும், இலாகாக்கள் ஒதுக்கீட்டிலும் பிரதமர் நரேந்திரமோடி பின்பற்றுகிறார் என்பதை கடந்தவாரம் மேற்கொண்ட மந்திரிசபை மாற்றத்தில் நிரூபித்துக்காட்டிவிட்டார். கடந்த 5 மாதகாலத்தை அவ்வாறு தகுதிகாண் காலமாக வைத்து தன் மந்திரிசபையை மாற்றியுள்ளார். புதிதாக 21 மந்திரிகளை சேர்த்து, தன் மந்திரிசபையின் பலத்தை 66 ஆக ஆக்கியிருக்கிறார்.

5 தென்மாநிலங்களில் இருந்து 9 பேர்தான் மந்திரி சபையில் இருக்கிறார்கள், தமிழ்நாட்டில் இருந்து பொன்.ராதாகிருஷ்ணன் ஒருவருக்குத்தான் இடம் கிடைத்திருக்கிறது என்று விமர்சனங்கள் சொல்லப்படுகின்றன. ஆனால், நிர்மலா சீதாராமனும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்தான். தமிழ்நாட்டைச் சேர்ந்த யாரை சந்தித்தாலும், அவர்கள் எவ்வளவு படித்து இருந்தாலும், எந்த பதவியில் இருந்தாலும், ஆங்கிலம் துளி கலப்பில்லாமல் தமிழிலேயே பேசும் அவரை கண்டிப்பாக தமிழ்நாட்டு கணக்கில்தான் சேர்க்கவேண்டும். தமிழ்நாட்டில் இருந்து பொன்.ராதாகிருஷ்ணன் ஒருவர்தான் பா.ஜ.க.வில் இருந்து பாராளுமன்ற தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ராஜ்ய சபையில்கூட வேறு யாரும் பா.ஜ.க. உறுப்பினராக இல்லை. ஆக, வேறு யாருக்கும் கொடுக்கவும் வாய்ப்பு இல்லை. அவருக்கும் இப்போது நடந்த மந்திரிசபை மாற்றத்தில் முக்கிய பொறுப்பான சாலைப்போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் கப்பல் துறைகள் வழங்கப்பட்டுள்ளன. பொதுவாக, மத்திய மந்திரி என்பவர் அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவானவர். ஒரு மாநிலத்துக்கு மட்டுமானவர் அல்ல. அந்த வகையில், இப்போது மத்திய மந்திரிகளாக இருப்பவர்கள் அனைவரும், அனைத்து மாநிலங்களின் நன்மைக்காகவும் பாடுபடுவார்கள் என்ற உறுதியான நம்பிக்கை நாட்டு மக்களுக்கு இருக்கிறது.

அடுத்து ரெயில்வே துறை என்பது அன்றாடம் 2 கோடியே 30 லட்சம் பயணிகளை ஏற்றிச்செல்லும் 12 ஆயிரத்து 617 ரெயில்களையும், 30 லட்சம் டன் சரக்குகளை ஏற்றிச்செல்லும் 7,421 சரக்கு ரெயில்களையும் நிர்வகிக்கும் துறையாகும். இந்த துறையின் செயல்பாட்டில் திருப்தி இல்லாத மோடி, இந்த துறைக்கு வாஜ்பாய் மந்திரிசபையில் மின்சாரத்துறை மந்திரியாக பணியாற்றி புகழ்பெற்ற சுரேஷ் பிரபுவை தேடிப்பிடித்து கொடுத்து இருக்கிறார். அவரும் பதவி ஏற்பதற்கு முன்பு சிவசேனா கட்சியில் இருந்து விலகி, பா.ஜ.க.வில் சேர்ந்து இருக்கிறார். சுரேஷ் பிரபு நிச்சயமாக மோடியின் எதிர்பார்ப்புகளுக்கேற்ப செயல்படுவார். வாஜ்பாய் காலத்தில் அவர், தன் வேகத்துக்கு ஈடுகொடுக்கும் அதிகாரி வேண்டும் என்று தமிழ்நாட்டைச் சேர்ந்த பூர்ணலிங்கம் என்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியை தேடிப்பிடித்து எரிசக்தித்துறை கூடுதல் செயலாளராக்கினார். இந்தியாவில் மின்சார தட்டுப்பாட்டை போக்க 50 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டத்தை தீட்டி, தொடங்கப்போகும் காலத்தில் அரசியல் காரணங்களால் பதவி விலக நேரிட்டதால், அந்த திட்டங்களும் காற்றோடு கலந்த கீதங்களாகிவிட்டன. இப்போதும் அவர் புதிதாக எந்த திட்டங்களையும் அறிவிக்க வேண்டியது இல்லை. பயணிகளுக்கான வசதிகளிலும், ரெயில் போக்குவரத்திலும் தீவிர கவனம் செலுத்திவிட்டு, ஏற்கனவே இருந்த ரெயில்வே மந்திரிகள் குறிப்பாக கடந்த பட்ஜெட்டில் சதானந்த கவுடா அறிவித்த திட்டங்களையும் பட்டியலிட்டு நிறைவேற்றுவதற்கு முன்னுரிமை கொடுத்தாலே போதும். அவர் பதவியேற்றவுடனேயே ரெயில்வே திட்டங்களில் 12 ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான திட்டங்களை வெளிநாட்டு மற்றும் தனியார் முதலீடுகளுக்கு ஒப்படைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ் நாட்டுக்கான திட்டங்கள் இல்லை. இந்த ஒதுக்கீட்டிலும், இனி அறிவிக்கப்போகும் திட்டங்களிலும், தமிழ்நாட்டுக்கு உரிய பங்கு கிடைப்பதற்கான முயற்சிகளில் தமிழக அரசும், பாராளுமன்ற உறுப்பினர்களும் தீவிரமாக ஈடுபட வேண்டும்.

Source: Daily thanthi

No comments:

Post a Comment

T.N. govt. to launch health insurance for the elderly

T.N. govt. to launch health insurance for the elderly The Hindu Bureau CHENNAI. 18.08.2026 Tamil Nadu will launch the ‘Chief Minister’s Elde...