Showing posts with label நகைச்சுவை. Show all posts
Showing posts with label நகைச்சுவை. Show all posts

Sunday, April 22, 2018

குருட்டு' பக்தி!

- தென்கச்சி சுவாமிநாதன்

 
. கர்ணனின் கதையை மாணவர்களிடையே விளக்கிக் கொண்டிருந்தார் அந்த ஆசிரியர்.

''தன் குருநாதரின் மேல் அதீத பக்தி கொண்டிருந்தவன் கர்ணன். ஒருமுறை, அவனின் ஆசிரியரான பரசுராமன், சற்று நேரம் களைப்பாற எண்ணினார். இதை உணர்ந்த கர்ணன், அருகிலிருந்த மரத்தடியில் அமர்ந்தான். உடனே, அவனது ஒரு தொடையில் தலை வைத்துப் படுத்த பரசுராமன் சற்று நேரத்தில் தூங்கிப் போனார்.

இந்த நிலையில், கர்ணனின் மற்றொரு தொடையின் மீது வந்து அமர்ந்த காட்டு வண்டு ஒன்று, அவன் தொடையைத் துளைக்க ஆரம்பித்தது. ரத்தம் பொங்கியது. பல்லைக் கடித்தபடி வலியைப் பொறுத்துக் கொண்டான் கர்ணன். சிறிது அசைந்தாலும் குருநாதரின் தூக்கம் கெட்டு விடுமே என்ற எண்ணம் அவனுக்கு.

ஆம்! ஆசிரியர் அமைதியாகத் தூங்க வேண்டும் என்பதற்காக, தனக்கு ஏற்பட்ட அந்த சித்ரவதையை தாங்கிக் கொண்டான் அந்த மாணவன்!''

- கதையைக் கூறி முடித்த ஆசிரியர், ''என் அருமை மாணவர்களே... நீங்களும் கர்ணனைப் போன்று உங்கள் ஆசிரியரின் மீது பக்தி செலுத்த வேண்டும். செய்வீர்களா?'' என்று கேட்டார்.

''நிச்சயம் செய்வோம்!'' - ஒட்டு மொத்த மாணவர்களும் உரக்கக் குரல் கொடுத்தனர்.

மகிழ்ச்சியடைந்த ஆசிரியர் தொடர்ந்தார்...

''சரி... நானும் பரசுராமனைப்போல் உங்களின் தொடையில் தலை வைத்துப் படுத்திருக்கிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போது, கர்ணனுக்கு நிகழ்ந்தது போலவே உங்கள் தொடையையும் வண்டு துளைத்தால் என்ன செய்வீர்கள்?''

மாணவர்கள் பதில் சொன்னார்கள் ''நாங்களும் அவனைப் போலவே பல்லைக் கடிச்சிக்கிட்டு வலியைப் பொறுத்துக்குவோம்!''

உற்சாகம் அடைந்த ஆசிரியர் ஆர்வத்துடன் கேட்டார் ''ஏன் அப்படிச் செய்யணும்?''

மாணவர்கள் சொன்னார்கள்... ''நீங்க முழிச்சிக்கிட்டா பாடம் நடத்த ஆரம்பிச்சுடுவீங்களே... அதான்!''

- இந்த குருபக்தியை போன்றுதான் இன்றைக்கு சிலரது தெய்வ பக்தியும் இருக்கிறது.

ஆண்டவன் பேரைச் சொல்லி தங்களை வருத்திக் கொள்கிறார்கள். அதன் நோக்கம், 'இதை விட பெரிய வருத்தம் ஏதும் வந்துவிடக் கூடாதே' என்பதுதான்.

அழகான இயற்கைக் காட்சியைப் பார்க்கிறோம்.அதன்மேல் ஒரு காதல் பிறக்கிறது. உடனே, அந்த இயற்கைக் காட்சியிடம் இருந்து எதையாவது நாம் எதிர்பார்க்கிறோமா? அல்லது அதுதான் நம்மிடமிருந்து எதையாவது எதிர்பார்க்கிறதா?

அதுமாதிரிதான் கடவுளையும் நாம் நேசிக்க வேண்டும். நம்மால் அவரை நேசிக்காமல் இருக்க முடியாது என்ற நிலை வரவேண்டும். அதற்குப் பெயர்தான் பக்தி என்கிறார் சுவாமி விவேகானந்தர். ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். கடவுளே உங்கள் தொடையில் தலை வைத்துப் படுத்தாலும், அவருக்காக நீங்கள் எந்தத் துன்பத்தையும் ஏற்க வேண்டிய அவசியம் இல்லை!

Wednesday, November 1, 2017

நாட்டுக்கு நல்லது!

பதிவு செய்த நாள்

30அக்
2015 
00:00
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள், ரஷ்யா மற்றும் இதர நாடுகளில், தனது குழுவின ருடன் கலைப்பயணம் செய்துவிட்டு தமிழகம் திரும்பினார்.
விமான நிலையத் தில் நிருபர்கள் அவரை பேட்டி கண்டனர். அதில் ஒருவர், ''கலைப் பயணம் செய்ததில் உங்களுக்கு வருமானம். இதனால் தமிழகத்திற்கு பயன் ஏதும் உண்டா?'' எனக் கேட்டார்.
கேள்வி கேட்ட நிருபரும், இதர நபர்களும் கலைவாணர் என்ன சொல்லப் போகிறார் என ஆவலோடு எதிர்பார்த்தனர். ஏனெனில், இதற்கான கட்டணமும் ஏதுமில்லை; வரியும் இல்லை.
''ஆம் தமிழ்நாட்டிற்கு லாபம் தான். எங்கள் குழுவில் மொத்தம் முப்பதுபேர். நாங்கள் ஒரு மாதமாக ஊரில் இல்லை. எனவே, எங்களின் குடும்ப அட்டைக்கான அரிசி, எண்ணெய் உட்பட பல பொருட்கள் வழங்கப் படவில்லை. அந்தப் பொருட்களினால், அரசுக்கு மிச்சம்தானே. அதுவும் நாட்டிற்கு ஒரு பயன்தானே!'' என்றார் கலைவாணர்.

Wednesday, May 10, 2017

கணவன் முதல் நாள் இரவில் தான் கண்ட கனவைப் பற்றி மறுநாள் காலையில் தன் மனைவியிடம் விளக்கிக் கொண்டிருந்தார்.

“அடியேய்... நானும், நீயும் அமொரிக்காவுக்குப் போய், நிறைய இடங்களைப் பார்த்து பரவசம் அடைந்த மாதிரி ஒரு கனவு வந்தது” என்றார் கணவர் ..
அதைக் கேட்ட அவரது மனைவி, “அப்படியா... எங்கெங்கே போனோம்? என்னென்ன பார்த்தோம்னு சொல்லுங்களேன்...” என்றாள்.

அதற்கு கணவர், “என்னடி தொரியாத மாதிரி கேட்குறே..? நீயும்தானே என்கூட வந்தே?” என்றார் கோபமாக!

Thursday, January 12, 2017

 வறட்சியால் பறிக்கப்பட்ட வாழ்வாதாரம்: சாகுபடியை இழந்து தவிக்கும் திருவாரூர் விவசாயிகள்

வி.தேவதாசன்

  
2003-ம் ஆண்டு ஜனவரி 7-ம் தேதி டெல்டா விவசாயிகளின் வாழ்க்கை அவல நிலை குறித்து தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்திய நாள். டெல்டா மாவட்டமெங்கும் விவசாயிகள் பெரும் போராட்டத்தில் குதித்த நாள். அந்த ஆண்டும் டெல்டா மாவட்டங்களில் வறட்சி வாட்டி யெடுத்தது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகேயுள்ள பாளையக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சண்முகம், தற்கொலை செய்து கொண்டார். 

ஆனால் அவர் உயிரை துறக்கும் முன், அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு தனது தற்கொலைக்கான காரணம் குறித்து நீண்ட கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு, உயிரை விட்டார். வறட்சியும், வறுமையும், அதனால் சேர்ந்த கடனும் ஏற்படுத்திய நெருக் கடி பற்றி கடிதத்தில் விவரித்திருந்த சண்முகம், அப்போதைய மன்னார்குடி சட்டப்பேரவை உறுப்பினர் வை.சிவபுண்ணியம் மூலம் தமிழக முதல்வரிடம் இந்த கடிதம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்ற குறிப்பையும் அதில் எழுதியிருந் தார். அன்றைக்கு மக்கள் மன்றத்திலும், தமிழக சட்டப் பேரவையிலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய கடிதம் அது. 

இன்று மீண்டும் வறட்சி. ஆனால் 2003-ம் ஆண்டு கண்ட வறட்சி அல்ல; அதை விடவும் மோசமான வறட்சி. 100 ஆண்டுகளில் இல்லாத வறட்சி என்கிறார்கள். சண்முகம் உயிர் துறந்த அதே பாளையக்கோட்டை கிராமத்தில் இந்த ஆண்டு மீண்டும் ஒரு உயிரை காவு வாங்கியிருக்கிறது இந்த ஆண்டின் வறட்சி. 

பாளையக்கோட்டை புதுக்குடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி அசோகன். இந்த ஆண்டு 6 ஏக்கர் நிலத்தில் நேரடி விதைப்பு மூலம் நெல் சாகுபடி செய்தார். எதிர்பார்த்தபடி ஆற்றில் தண்ணீர் வரவில்லை. பருவமழையும் பொய்த்தது. பயிரை இனி காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கையை அசோகன் இழந்து விட்டார். இந்நிலையில், திடீரென பெய்த ஒரு சிறுமழையால் பயிருக்கு கொஞ்சம் தண்ணீர் கிடைத்தது. இந்த தண்ணீர் போதாது. ஆனாலும், வயலுக்கு உரம் கொடுத்து பயிரை எப்படியாவது காப்பாற்றி விட வேண்டும் என்று அசோகனின் மனம் பதைபதைத்தது. 

கையில் பணம் இல்லை. மத்திய அரசின் பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் கடன் கொடுக்கக் கூடிய நிலையில் ஊரில் யாரும் இல்லை. வீட்டில் இருந்த சொற்ப அளவு தங்க நகையை எடுத்துக் கொண்டு உள்ளூரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு ஓடினார் அசோகன்.
உயிரிழந்த விவசாயி அசோகனின் படத்துக்கு அருகே சோகத்துடன் அமர்ந்திருக்கும் அவரது குடும்பத்தினர். 

அதன் பிறகு என்ன நடந்தது என்பதை அவரது மூத்த மகன் கலைவாணன் விவரிக்கிறார். “அது டிசம்பர் மாதம் 1-ம் தேதி. அப்பா நகையை எடுத்துச் சென்று இங்குள்ள ஐ.ஓ.பி. வங்கியில் ரூ.14 ஆயிரத்துக்கு அடகு வைத்தார். அந்த பணத்தை கொண்டு வயலுக்கு உரம் வாங்கி வந்து விடலாம் என்ற எண்ணத்தில் நீண்ட நேரம் வங்கியில் வரிசையில் நின்றிருக்கிறார். மாலை வரை பணம் கிடைக்கவில்லை. நகையை அடகு வைத்ததற்கான ரசீது மட்டும் கொடுத்த வங்கி அதிகாரிகள், வங்கியில் பணம் இல்லை என்றும், மறுநாள் வந்து பணத்தை வாங்கிக் கொள்ளுமாறும் கூறி விட்டனர்.
ஏமாற்றத்துடன் வீடு திரும்பிய அப்பா, இரவு முழுவதும் தூங்காமல் மறுநாளாவது பணம் கிடைத்து விடுமா என்பது பற்றியும், வயலில் ஈரம் காய்வதற்குள் உரம் போட்டுவிட முடியுமா என்பது பற்றியும் கவலையுடன் பேசிக் கொண்டிருந்தார். மறுநாள் காலை சாப்பிட கூட இல்லாமல் 8 மணிக்கெல்லாம் வங்கியின் முன்னே வரிசையில் போய் நின்றார். நீண்ட நேரம் வரிசையிலேயே காத்திருந்தார். சுமார் 10.30 மணி அளவில், நெஞ்சு வலி ஏற்பட்டு மயக்கமடைந்த அவர் அதே இடத்தில் சரிந்து கீழே விழுந்திருக்கிறார். அந்த இடத்தில் இருந்தவர்கள் உடனடியாக அவரை காரில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். ஆனால் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறி விட்டனர். அப்பா சாகுபடி செய்த பயிர்கள் முழுவதும் கருகி, சாகுபடியே அழிந்து விட்டது. பயிர்கள் மட்டும் சாகவில்லை. பயிர்கள் சாகும் முன்னே எங்கள் அப்பாவும் செத்து விட்டார்” என்று கண்ணீருடன் கூறினார் கலைவாணன்.
வறட்சியின் கோரம் 56 வயதில் அசோகனின் உயிரை பறித்து சென்று விட்டது. மூத்த மகன் விவசாயத்தை கவனிக்கிறார். இளைய மகனும், மகளும் கல்லூரியில் படித்து வருகின்றனர். யாருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை. அடுத்து என்ன செய்வது என எதுவும் புரியாமல் தவித்து வருகிறார் அசோகனின் மனைவி வேதவல்லி. 

வங்கிக்கு கோரிக்கை
இந்த சம்பவம் பற்றி மேலும் பல தகவல்களை தெரிவித்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கோட்டூர் ஒன்றிய செயலாளர் பி.பரந்தாமன், “அசோகன் எந்த நோக்கத்துக்காக நகையை அடகு வைத்தாரோ அதற்கு பணம் கிடைக்க வில்லை. இன்று வரை அந்த குடும்பத்துக்கு பணம் கிடைக்காததோடு, நகையும் இப்போது வங்கியில் உள்ளது. இனி இறப்புச் சான்று, வாரிசுச் சான்று என பல சம்பிரதாயங்கள் முடிந்து தான் வங்கியில் இருந்து நகையை பெற முடியும். 

இதற்கிடையே பி.இ. இரண்டாம் ஆண்டு பயிலும் அசோகனின் இளைய மகன் பிரவீனுக்கு கல்விக் கட்டணத்தை செலுத்த முடியவில்லை. கல்விக் கடன் பெறுவதற்கு உரிய தகுதி இருந்தும், உள்ளூரில் இருக்கும் அதே வங்கியிடம் கல்விக்கடன் கேட்டு எவ்வளவோ மன்றாடியும் கூட கடன் வழங்க மறுத்து விட்டார்கள். தங்கள் வங்கியின் வாசலில் கீழே விழுந்து உயிரை துறந்த ஏழை விவசாயியின் மகன் என்ற மனிதாபி மான அடிப்படையில், இப்போதாவது அசோக னின் மகனுக்கு கல்விக் கடன் வழங்க அந்த வங்கி நிர்வாகம் முன்வர வேண்டும்” என்றார். 

அசோகனின் மரணம் ஒரு உதாரணம் மட்டுமே. திருவாரூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் இதுபோல தினமும் பல மரண செய்திகள் வந்து கொண்டே இருக் கின்றன. இந்த மாவட்டத்தில் உள்ள கோட்டூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, திருவாரூர் பகுதிகள் வறட்சியால் கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ளன. நன்னிலம், குடவாசல், கொரடாச்சேரி, நீடாமங்கலம், வலங்கைமான், மன்னார்குடி உள்ளிட்ட மாவட்டத்தின் இதரப் பகுதிகளிலும் வறட்சி பெருமளவில் பாதித்துள்ளது. 

முத்துப்பேட்டை ஒன்றியம் குன்னலூர் ஊராட்சி தர்க்காஸ் கிராமத்துக்கு சென்றபோது, கண்ணுக்கெட்டிய தூரம் பரந்து விரிந்திருந்த வயல்வெளியில் எங்கும் பச்சை நிறம் தெரிந்தது. தூரத்தில் இருந்து பார்க்கும்போது நெற்பயிர்கள் செழித்து வளர்ந்திருப்பது போல இருந்தது. ஆனால் அந்த வயல்களில் கூட்டம் கூட்டமாக கால்நடைகள் மேய்ந்து கொண்டிருந்தன.
முத்துப்பேட்டை ஒன்றியம் குன்னலூர் ஊராட்சி தர்க்காஸ் கிராமத்தில் வயல்களில் மண்டிக் கிடக்கும் புல், களைகளைக் காட்டும் விவசாயிகள்.
இதுகுறித்து அக்கிராமத்தைச் சேர்ந்த எஸ். இளங்கோவனிடம் கேட்டபோது, “பருவ மழை காப்பாற்றும் என்ற நம்பிக்கையில் நேரடி விதைப்பில் நெல் விதைகளை தெளித்தோம். விதைத்த நெல் முளைத்து, பயிரும் நன்றாகத்தான் இருந்தது. ஆனால் எதிர்பார்த்தபடி மழை பெய்யவில்லை. 

பிள்ளைகளைப் போல வளர்த்தோம்.. 
 
எங்கள் பகுதியில் நிலத்தடி நீரில் உப்புத் தன்மை அதிகரித்து விட்டது. அந்த நீரை வயலுக்கு இறைத்தால், பயிர்கள் கருகி விடும். ஆகவே, ஆற்று நீர் அல்லது மழை நீர்தான் எங்களுக்கான பாசன ஆதாரம். இந்த சூழலில் ஆற்று நீரும் வராமல், பருவமழையும் பொய்த்ததால், நிலம் வறண்டுபோய் எங்கள் கண்ணெதிரே ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தில் பயிர்கள் கருகி அழிந்து விட்டன. 

அப்போதெல்லாம் பெய்யாத மழை கடந்த வாரம் திடீரென இரண்டு நாட்கள் கொட்டித் தீர்த்தது. ஏற்கெனவே பயிர்கள் அழிந்து விட்டதால் இந்த மழையால் எந்தப் பலனும் கிடைக்கவில்லை. இந்த மழையால் வயல்களில் புல்லும், களையும் நன்கு செழித்து வளர்ந்து இப்போது பச்சைப் பசேலென உள்ளது. இந்த புல்தான் தூரத்தில் இருந்து பார்க்கும்போது நெற்பயிர்களைப் போல தெரிகிறது” என்றார். 

அந்த கிராமத்தைச் சேர்ந்த சில பெண்கள், “பிள்ளைகளைப் போல வளர்த்த நெற்பயிர் கண்ணுக்கெதிரே அழியும்போது அதை தாங்கிக் கொள்ள மனதில் பெரும் தெம்பு வேண்டும். அழிந்து போன வயல்களைப் பார்த்து குடும்பம் குடும்பமாக கூடி அழுகிறோம். அழுது புலம்பி எங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்கிறோம். இந்த அளவுக்கு கூட மனத்திடம் இல்லாத பலர் அதிர்ச்சி யாலும், தற்கொலை செய்து கொண்டும் உயிரை விடுகின்றனர். இந்த நிலைமை இன்னும் எங்கு கொண்டு போய் விடும் என தெரியவில்லை” என்று தங்கள் கவலையை வெளிப்படுத்தினர். 

சாகுபடியே இல்லாத ஆண்டு 
 
“எனக்கு 80 வயதாகிறது. என் வாழ்நாளில் இதுபோன்ற ஒரு வறட்சியை பார்த்ததும் இல்லை. கேள்விப்பட்டதும் இல்லை” என்கிறார் காவிரி டெல்டா பாசனப் பகுதி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் மன்னார்குடி எஸ்.ரங்கநாதன். 

“ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டால் டெல்டாவில் குறுவையும், தாளடியும் சாகுபடி நடக்கும். ஒருவேளை அணையில் போதிய நீர் இருப்பு இல்லாமல் தாமதமாகத் திறக்கப்பட்டால் சம்பா நெல் சாகுபடி நடைபெறும். ஆனால் ஒரு பருவம் கூட நெல் சாகுபடி இல்லாத ஒரு ஆண்டை என் வாழ்நாளில் இப்போதுதான் முதல் முறையாக சந்திக்கிறேன். நிலத்தடி நீரை நம்பி சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் சாகுபடி செலவை ஈடுகட்டும் அளவுக்கு கூட மகசூல் இல்லை.
இதனால் மனமுடையும் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதும், ‘அய்யோ எல்லாம் போச்சே’ என்ற அதிர்ச்சியில் உயிரைத் துறப்பதும், எங்களை மேலும் மேலும் துக்கத்தில் ஆழ்த்துகிறது. 

உச்ச நீதிமன்றத்துக்கு தெரியப்படுத்துங்கள்.. 
 
நம்பிக்கை இழந்து நிற்கும் விவசாயிகளுக்கு நம்பிக்கை அளிக்கும் விதத்தில் அரசு போர்க்கால நடவடிக்கைகளை தொடங்க வேண்டும். விவசாயிகளின் மரணங்களை அலட்சி யப்படுத்தாமல், முறைப்படி பதிவு செய்து, உச்ச நீதிமன்றத்துக்கு தெரியப்படுத்த வேண்டும். உச்ச நீதிமன்றத்துக்கு உண்மை நிலைமையை தெரியப்படுத்தினால்தான் எதிர்காலத்திலாவது காவிரியில் உரிய நீர் பெற்று நமது சாகுபடியை உறுதி செய்ய முடியும்” என்றார் ரங்கநாதன். 

மன்னார்குடி சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் வை.சிவபுண்ணியம் கூறும்போது, “நாட்டுக்கே உணவு படைத்த பெருமை மிக்க மண் இது. ஆனால் இன்று அதே மண்ணில் கவுரத்துடன் வாழ வழியில்லை என்ற மோசமான நிலைமையை தற்போதைய வறட்சி ஏற்படுத்தி விட்டது. இதனால் நம்பிக்கை இழந்த விவசாயிகள் தினமும் தற்கொலை செய்து கொள்கின்றனர். ஒரு காலத்தில் ஆற்று நீர் வராவிட்டால் கூட, மழை நீரையும், நிலத்தடி நீரையும் நம்பி சாகுபடி செய்து விட முடியும் என்ற நம்பிக்கை திருவாரூர் மாவட்ட விவசாயிகளிடம் இருந்தது. ஆனால் இன்று மாவட்டத்தின் பெரும்பகுதியில் நிலத்தடி நீரில் உப்புத்தன்மை அதிகரித்து விட்டதால், அந்த நீரை பயன்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டு விட்டது. 

இந்த மாவட்டத்தில் குடிப்பதற்கே தண்ணீர் இல்லை என்ற நிலைமை விரைவிலேயே வரப் போகிறது. ஆகவே, மத்திய, மாநில அரசுகள் உட னடியாக தனி கவனம் செலுத்தி டெல்டா மக்க ளைக் காப்பாற்ற முன்வர வேண்டும்” என்றார். 

தொலைநோக்கு திட்டம் அவசியம் 
 
“டெல்டா மாவட்டங்களை பெரும் அழிவி லிருந்து காப்பாற்ற வேண்டுமானால், தொலை நோக்கு பார்வையிலான திட்டமிடல் அவசியம்” என்கிறார் அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் பி.ஆர்.பாண்டியன். 

“பாசனம் இழந்து தவிக்கும் விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைப்பதற்கான உடனடி நடவடிக்கைகள் வேண்டும். அது மட்டுமின்றி, மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரி, குளம், ஆறு, கால்வாய்களையும் தூர்வாரி நிலத்தடி நீரை மேம்படுத்துவதற்கான தனிப்பெரும் திட்டம், மிகப்பெரிய நிதி ஒதுக்கீட்டுடன் உருவாக்கப்பட வேண்டும். மேலும், பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உதவ செல்வந்தர்களும், பெரும் தொழில் நிறுவனங்களும், சேவை அமைப்புகளும் முன்வர வேண்டும். 

எந்தவொரு விவசாயியும் தனது மனைவி யையும், குழந்தைகளையும் தவிக்க விட்டுவிட்டு தற்கொலை செய்து கொள்ள துணிய மாட்டான். ஆனாலும் டெல்டாவில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் மரணமடைந்துள்ளனர் என்றால் இங்குள்ள நிலைமையின் தீவிரத்தை மத்திய, மாநில அரசுகள் உணர வேண்டும். குறிப்பிட்ட காலவரையறைக்குள் போதிய நிவாரண உதவிகள் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கிடைப்பதை உறுதி செய்திட வேண்டும்” என்று வலியுறுத்துகிறார் பாண்டியன். 

இதற்கிடையே உயிரிழந்த விவசாயிகளின் மரணத்தை கொச்சைப்படுத்தும் விதத்தில் சில அமைச்சர்கள் பேசியுள்ளது விவசாயிகளிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

இதுபற்றி கருத்து தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்டச் செயலாளர் ஐ.வி.நாகராஜன், “வறட்சியால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த விவசாயிகளின் மரணத்தை கொச்சைப்படுத்திய அமைச்சர்களை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கண்டிக்க வேண்டும். உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் உடனடி நிவாரணம் வழங்கப்பட வேண்டும்” என்றார். 

ஓரிரு நாளில் வரவுள்ள உழவர் திருநாளாம் பொங்கல் திருநாளை வரவேற்க எவ்வித தயாரிப்பும் இன்றி, வாழ்வாதாரத்தையே இழந்த துக்கமான மன நிலையில் டெல்டா விவசாயிகள் உள்ளனர். ஊருக்கெல்லாம் உணவு தந்த அந்த உழவர்களுக்கு ஆறுதல் தரும் விதத்தில் அரசு தற்போது எடுக்கும் நடவடிக்கைகள், இனி வரும் காலத்தில் உழவுத் தொழிலில் நம்மால் நீடித்திருக்க முடியும் என்ற நம்பிக்கையை அவர்களிடம் ஏற்படுத்துவதாக அமைய வேண்டும்.

Tuesday, November 29, 2016

Monday, November 28, 2016

பொண்ணுங்க எப்போல்லாம் அழகா இருப்பாங்க தெரியுமா?


vikatan.com

பசங்கள ரெண்டு வகையா பிரிக்கலாம். ஒண்ணு பொண்ணுங்கள கொஞ்சம்கூட வெட்கப்படாம பார்க்குறவங்க. இன்னொண்ணு பொண்ணுங்களுக்கே தெரியாம திருட்டுத்தனமா வேடிக்கை பார்க்குறவங்க. ஏன்னா பொண்ணுங்கள ரசிக்காத பசங்களே கிடையாது. அப்படி ரசிக்கும்போது பெண்கள் பேரழகா தெரியும் தருணங்கள் எவையெல்லாம் தெரியுமா?

* தமிழ்நாட்டுல மழைக்காலத்துலயும் வெயில் அடிக்கும்கிறது உலகம் அறிஞ்ச விஷயம். கொளுத்துற வெயில்ல கூட்டம் அதிகமான பஸ்ல ஏறிட்டு கர்சீஃப் எடுத்து வியர்வையைத் துடைச்சிட்டு, அதே கர்சீஃப்பை விசிறியாக்கி விசிறும்போதுகூட பொண்ணுங்க அவ்வளவு அழகு பாஸ்! அடிக்கிற சம்மர்ல இதெல்லாமா ரசிப்பீங்கங்கிற உங்க மைண்ட் வாய்ஸ் கேட்குது.

* தெருவுல நடந்து போற வழியில் இருக்கிற எல்லாக் கோயில் வாசலைக் கடக்கிறப்பவும், கண்ணை மூடி ரெண்டு விரலை மட்டும் எடுத்து நெத்தியில் வெச்சுட்டு அப்புறமா அதே விரல்களை கிஸ் பண்றதைப் பார்த்ததுக்கு அப்புறமா 'கடவுள் இருக்கான் கொமாரு'-ன்னு மாறுன பசங்களோட எண்ணிக்கை அதிகம்.

* கீழே குனிஞ்சு தெருவையே வெறிக்க வெறிக்கப் பார்த்துட்டு வர்ற பொண்ணுங்க, நாம கிராஸ் ஆகிறப்போ மட்டும் சொல்லி வெச்ச மாதிரி சைடு லுக் விட்டுக்கிட்டே தலைகோதி, பசங்களுக்கு ஆயிரம் டன் மின்சாரத்தை பாய்ச்சுவாங்க பாருங்க! அந்த டைம்ல பசங்க மனசுல சேதாரமே இல்லாம ஒரு விபத்தே நடக்கும்.

* ஏதாவது சண்டை வந்தா கோபமும், கண்ணு கலங்கி ரெண்டு மில்லி லிட்டர் அழுகையும் சேர்த்துப் பேசுவாங்க. வேற வழியில்லாம நம்மப் பசங்க ஸாரி கேட்டு சரண்டர் ஆவாங்க. அந்நேரம் வலியே வராத அளவுக்கு சின்னதா ஒரு அடி அடிக்கிறப்போ பொண்ணுங்க பேரழகு பாஸ்.

* தப்பித்தவறி கோயில் பக்கம் போனா... நெய் விளக்குப் போடுற இடத்துல வலம் வர்ற பொண்ணுங்க, பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவுல தெரியுற ஹீரோயின் மாதிரி எக்ஸ்ட்ரா அழகோட தெரியுறதைக் கவனிச்சதுண்டா? அதே மாதிரி மோதிர விரல்ல பட்டும் படாம குங்குமத்தை எடுத்து வெச்சுக்கிற அழகை நாள் முழுக்கப் பார்த்துக்கிட்டு இருக்கலாம்னு பசங்களுக்குத் தோணும்.

* எங்கேயோ பார்க்கிற மாதிரி பசங்க பக்கம் திரும்பும்போது கண்ணும் களவுமா மாட்டிக்கிட்டா டக்குனு வேற பக்கம் திரும்பறதுக்கும், மிரட்சி கலந்து சின்னதாப் பொண்ணுங்க சிரிக்கிறதுக்கும் ஆயிரம் லைக்ஸ் தாராளமாப் போடலாம். ஆண்கள என்ன கொடுமைப்படுத்தினாலும் இந்தக் காரணங்களால மன்னிச்சு விட்றலாம்.

* ஏதாவது கேள்வி கேட்டாலோ இல்லை கலாய்ச்சாலோ... ஒரேயொரு புருவத்தைச் சுருக்கி முறைக்கிற பார்வையாலே 'போடா டேய்' அப்படிங்கிறதைக் கண்ணாலேயே பேச பொண்ணுங்களால மட்டும் எப்படித்தான் முடியுதோ? இதையே பசங்க பண்ணா... மைண்ட் வாய்ஸ்ல யோசிக்கிற வடிவேலுவா தெரிவாங்கங்கிறது வேற விஷயம்.

* வேலைக்கு நடுவுல மானிட்டரை வெறிச்சுப் பார்த்துக்கிட்டே இல்லாத நகத்தைக் கடிக்கிறதுலேருந்து... சூடே இல்லாத காபியை ஊதி ஊதிக் குடிக்கிறதுவரை பொண்ணுங்க பண்ற எல்லாமே மொத்தத்துல அழகுதான் ஜி!



- கருப்பு

Saturday, November 26, 2016

மனைவி : உயிரே...உயிரே...



மனைவி : உயிரே...உயிரே...

கணவன் : ஹலோ சொல்லுடா தங்கம்...

மனைவி : ஏங்க இன்னைக்கு தேதி என்னங்க?


கணவன் : இன்னைக்கு தேதி 6. ஏன்மா..?

மனைவி : ஒன்னும் இல்ல. வைங்க..

கணவன் : பதற்றம் அடைந்தவனாக அய்யய்யோ தேதி கேட்டு வைச்சிட்டாளே.. என்ன ஆச்சோ தெரியலயே..😳

Eb பில் கட்டியாச்சு,
பால் பணமும் கொடுத்தாச்சு,
மளிகை கடைக்கும் பணம் கொடுத்தாச்சு,
கேபிள் பணமும் கொடுத்தாச்சு....!!!

தன் அம்மாவுக்கு போன் பண்றான்..
அம்மா எங்க கல்யாண நாள் எப்போ??

அடுத்த மாசம் டா. ஏன் ??

ஒன்னும் இல்ல. வை..

மாமியாருக்கு போன் பண்றான்..

அத்தை.. மாலாவுக்கு பிறந்தநாள் எப்போ??

12வது மாசம்தான் மாப்ள. ஏன்.????

சும்மாதான் கேட்டேன். நான் அப்புறம் பேசுரேன்..

தன் மகனுக்கு போன் பண்றான்..

அம்மா ஏதும் பாத்திரத்த ஒடைச்சாளா..??

இல்லப்பா..

கோபமா இருக்காளா??

இல்லப்பா..

என்ன பண்றாள்..

டீவீ பாக்குறாங்கப்பா.

சரி வை...

மனைவிக்கு போன் பண்றான்..

தங்க புள்ள... ஏன்டா தேதி கேட்ட??

ஒன்னும் இல்லங்க காலண்டர்ல ரெண்டு நாளா தேதி கிளிக்கல அதான் கேட்டேன்..

சரிடா வைச்சிட்றேன்...

பயபுள்ள கொஞ்ச நேரத்ல பதறவெச்சிட்டு...😜😜😜😜😜😜😜

Friday, October 14, 2016

சமூக வலைதளங்களில் 'நீங்கள்' யார்?- ஒரு ஜாலி பட்டியல்


சமூக வலைதளங்களில் 'நீங்கள்' யார்?- ஒரு ஜாலி பட்டியல்

சமூக வலைதளங்கள் பலதரப்பட்ட மக்களைக் கொண்டிருக்கின்றன. பெரும்பாலானோர் நினைவுகளையும் நனவுகளையும் பகிர்கின்றனர். ஆனால், அங்கே இயங்குபவர்கள் அனைவரும் ஒரேமாதிரியான மனநிலையில் இருப்பதில்லை. வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக், ட்விட்டர் முதலானவற்றைப் பயன்படுத்துபவர்களில் சுவாரசியமான பயனர்கள் பலர் உண்டு. அவர்களைப் பற்றிய சிறு - குறு தகவல் குறிப்புகள் இவை:


புகைப்பட பிரபலங்கள்:

நின்றால் புகைப்படம், நடந்தால் புகைப்படம், அமர்ந்தால், ஊர் சுற்றினால் படம் என்று புகைப்படங்களாகப் போட்டு பிரபலம் ஆனவர்கள் இவர்கள். அவர்களின் புகைப்படத்துக்கு குவிந்திருக்கும் லைக், கமெண்டுகளைப் பார்க்கும்போதுதான் நமக்கு காதில் புகை வரும். சரி பிரபலமானவர்கள் இப்போது என்ன செய்கிறார்கள் தெரியுமா?

தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக செல்ஃபியைப் பதிவேற்றிக் கொண்டிருக்கிறார்கள். அரைத் தூக்கத்தில் ஒரு செல்ஃபி, தூங்கி எழுந்தவுடன் செல்ஃபி, பல் விளக்கும்போது செல்ஃபி என்று இவர்களின் செல்ஃபி பட்டியல் சென்று கொண்டே இருக்கிறது. ஆணாதிக்கம் நசுக்கப்படுவதும் இங்கேதான். ஆம், இந்த வகைப் பிரபலங்களில் பெண்களுக்கே அதிக மவுசு.

'வணக்க' வல்லுநர்கள்:

இவர்களின் தினசரி வேலைகளில் முக்கியமானது வணக்கம் என்று சொ(கொ)ல்லும் நிலைத்தகவலை மறக்காமல் பதிவேற்றுவது!

காலை எழுந்தவுடன் படிப்பு என்று பாரதியார் சொன்னதைத் தவறாகப் புரிந்துகொண்டு ஃபேஸ்புக்கைப் படிப்பார்கள். அதோடு மறக்காமல் 'காலை வணக்கம்' என்று ஸ்டேட்டஸ் போட்டுவிடுவார்கள். மதிய வேளையில் 'மதிய வணக்கம்' என்ற ஸ்டேட்டஸும், இரவில் 'இரவு வணக்கம் நண்பர்களே, உறவுகளே, சொந்தங்களே!' ஸ்டேட்டஸும் போடப்படும். வணக்கம் சொல்லியே வதக்கி எடுப்பவர்கள் இவர்கள்.

புரியாத புதிர்கள்:

இந்த வகை ஆட்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்பது அவர்களுக்கே புரியாது. தமிழில் புதிதாக சில வார்த்தைகளைத் தெரிந்து கொண்டு வந்து, பத்துப் பக்கங்களுக்குக் குறையாமல் எழுதி, (படிப்பது ஃபேஸ்புக் நண்பர்களின் கடமை என அவதானிப்பவர்கள்!) சாமான்ய ரசிகர்களைத் திணறடித்தே பிரபலமானவர்கள் இவர்கள்.

ரசிக பிரபலங்கள்:

எப்படியாவது பிரபலம் ஆக வேண்டும் என்று நினைத்து, பிரபலங்களுடன் அடிக்கடி கமெண்டில் கதைப்பது, அவர்களோடு சேர்ந்து புகைப்படம் எடுத்துத் தன் பக்கத்தில் பதிவது, அவர்களின் எல்லாப் பதிவுகளுக்கும் சூப்பர், செம்ம சொல்லிக் கொண்டே இருப்பது போன்ற காரியங்களில் கர்மசிரத்தையாய் இருப்பவர்கள்.

ஃபீலிங்ஸ் பறவைகள்:

காதல் மற்றும் காதல் சார்ந்த இடங்களில் / தளங்களில் மட்டும் ஈடுபாட்டுடன் இயங்குபவர்கள்; காதல், பிரிவு ஆகியவற்றைத் தவிர வேறெதுவும் அவர்களுக்குத் தெரியாது.

'புஜ்ஜிமா'க்கள்:

இவர்கள் எப்போதும் குழந்தைப் படங்கள், பூக்கள், இயற்கை ஆகியவற்றை மட்டுமே ஷேருபவர்கள்; லைக்குபவர்கள். அடுத்தவர்கள், அழகான குழந்தைப் படங்களைப் பதிவேற்றினால் மட்டும்தான் ச்ச்சோ ஸ்வீட், லவ்லி, கியூட் சொல்வார்கள்.

தொழில் முறை பதிவர்கள்:

மாதக்கணக்காக அமைதியாக இருப்பார்கள். ஆனால் அவர்களின் பொருட்களை விளம்பரப்படுத்தும் வேலை வந்துவிட்டால் மட்டும், தீயாய் வேலை செய்வார்கள்.

கடவுள் பற்றாளர்கள்:

பண்டிகைக் காலங்கள், விழாக் காலங்களில் மட்டும் சுறுசுறுப்பாக கடவுள்களின் வரலாறு, தோற்றம், விழாக்கள் குறித்த தகவல்களைப் பகிர்ந்துகொள்வார்கள்.

காப்பி பேஸ்டாளர்கள்:

நன்றாக இருக்கும் பதிவுகளை, காப்பியடித்து தன் பக்கத்தில் போட்டு, 'அட, இந்தப் பையனுக்குள்ள இம்புட்டு அறிவா?!' என்று புருவம் உயர்த்த வைக்கும் காப்பி பேஸ்டாளர்கள். இந்தப் பதிவுகளில் பெரும்பாலானவை பத்திரிகைகளில் தொகுக்கப்படுவதும் கவனிக்கத்தக்க கொடுமை.

ஃபேக் ஐடி பிரபலங்கள்:

தன் சுய அடையாளம் மறைத்து, பெயர் விடுத்து, நச் கருத்துகளைப் போட்டே பிரபலம் ஆனவர்கள்.

ஜென் நிலையாளர்கள்:

24 மணி நேரமும் ஆன்லைனில் இருந்துகொண்டே / பார்த்துக்கொண்டே / படித்துக்கொண்டே, யாருடைய பதிவுக்கும், லைக்கோ, கமெண்டோ போடாமல் ஜென் நிலையிலேயே வாழ்பவர்கள்.

தகவல் சொல்லிகள்:

2 நிமிடத்தில் சமைப்பது எப்படி, அழகாவது எப்படி, இயற்கை விவசாயம் செய்வது எப்படி, தகவல் பெறும் உரிமைச்சட்டத்தைக் கையாள்வது எப்படி என்று தடுக்கி விழுந்தால் கூட தகவல் சொல்லிக் கொண்டே இருப்பது இவர்களின் ஸ்பெஷாலிட்டி. எப்படிங்க இப்படி?

'கோட்'டீஸ்வரர்கள்:

கருத்து சொல்லி, கைகாலை புண்ணாக்கிக் கொள்ளாமல், கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைத்து பேர் வாங்குபவர்கள். தெளிவாக தத்துவங்களை (மற்றவர்களின்) மட்டுமே பகிர்வார்கள். பிரபல கோட்ஸ் சைட்டுகளின் கோட் இமேஜ்களைப் பகிர்ந்து உலகத்துக்கு ஏதாவது சொல்லிக்கொண்டு தங்கள் இருப்பை நிலை நிறுத்துபவர்கள்.

சமூக சேவையாளர்கள்:

சமூக ஊடகங்களை, சமூக சேவைகளுக்காக மட்டுமே பயன்படுத்திக் கொள்ளும் குறைந்த லைக்குகளுக்கு சொந்தக்காரர்கள்.

சினிமா ஆர்வக்கோளாறாய்ச்சியாளர்கள்:

வெள்ளிக்கிழமை படம் ரிலீஸுக்கு முன்பே டீசர் ரிவியூ பகிர்ந்து பகீரிடச் செய்வார்கள். படம் தொடங்கி அரை மணி நேரத்துக்கு ஒரு முறை அனுபவத்தைப் பகிர்வார்கள். இடைவேளையில் முக்கால் விமர்சனமும், முடிந்தவுடன் முழு விமர்சனமும், படத்துக்கு கிடைக்கும் ரெஸ்பான்ஸை பொருத்து முழுமையான அலசல்களையும் வெளியிட்டு தங்கள் சினிமா அறிவை பறைசாற்றுவார்கள். உலக சினிமாவை உள்ளூருக்குக் கொண்டு வந்ததில் இவர்களுக்கு பெரும் பங்கு உண்டு.

மீம் மக்கள்:

சினிமா, அரசியல், விளையாட்டு என்று எந்த துறையாக இருந்தாலும் கவலையே படாமல், இல்லாத மூளையைப் போட்டுக் கசக்கி ஸ்டேட்டஸ் யோசிக்காமல், அழகாய் ஒரு படத்தையும், அதற்கேற்ற பன்ச்சையும் சேர்த்துப் போட்டு, பெயர் வாங்குபவர்கள். ஒரே படத்தை வெவ்வேறு மீம்களுக்குப் பயன்படுத்திக் கொள்பவர்கள். ஆகவே என்னதான் சுட்டாலும் மீம் மக்கள், மீம் மக்களே!

ஃபேஸ்புக் போராளிகள்:

முழுமையான செய்திக்கு முந்தைய நியூஸ் ஃபளாஷ் வந்த அடுத்த நொடியில் தங்கள் உக்கிரக் கருத்துகளைப் பகிர்ந்து லைக்குகளையும் கமெண்டுகளையும் அள்ளுவார்கள். ஆர்வமிகுதியில் தப்பான செய்திக்கு ரைட்டான கருத்துச் சொல்லிவிட்டு, பின்னர் அந்தச் செய்தியே தப்பு என்று உணரும்போது பகிரங்க மன்னிப்புக் கேட்கத் தயங்காத மானஸ்தர்கள்.

இவர்களுக்கு நாட்டில் என்ன நடந்தாலும் கருத்து சொல்லியே ஆகவேண்டும். தக்காளி விலை ஏறினாலும் கருத்து சொல்வார்கள். தங்கம் விலை ஏறினாலும் கருத்து சொல்வார்கள். சிந்தாதிரிப்பேட்டை முதல் சிரியா வரை இவர்களின் கருத்துக்கு சிக்காத இடங்களே உலக வரைபடத்தில் இல்லை. கருத்து சொல்வது குறித்தும் கருத்து சொல்வதுதான் ஹைலைட். மார்க் ஸக்கர்பெர்க்குக்கு பேஜ்வியூஸ் வாங்கித் தருவதில் முன்னிலை வகிப்பதே இந்தப் போராளிகள்தான் என்றால் அது நகையில்லை.

கடைசியாக... தல - தளபதி ரசிகர்கள் படை:

இவர்களுக்கு அறிமுகக் குறிப்பு தேவையில்லை.

சரி... நீங்கள் எந்த வகை?




Sunday, March 20, 2016

டாக்டர் மாத்ருபூதம்.

[19:58, 20/3/2016] Appa: ஆன்மிகத்தையும் அறிவுபூர்வமான விஷயங்களையும் நகைச்சுவையோடு சொன்னவர் தென்கச்சி என்றால், பாலுணர்வு விஷயங்களை நகைச்சுவையோடு சொன்னவர் டாக்டர் மாத்ருபூதம். ‘என்னிடம் வருகிற நோயாளிகளை மனநல வைத்தியம் பார்த்து நல்லபடியாக மாற்றிவிடுவதால் என்னைச் சிலர் “மாத்தற பூதம்” என்பார்கள்; நிறைய மாத்திரைகள் கொடுப்பதால் இன்னும் சிலர் என்னை ” மாத்திரை பூதம்” என்பார்கள். அப்படிச் சொன்னால் உடனே நான் ” உங்களிடம் பணத்தை வாங்கிக்கொண்டு, நோய் குணமாகிவிடும் என்று சொல்லி ஏமாத்தற பூதம் நான் இல்லை என்பேன்” என்று ஜோக்கடிப்பார்.

மருத்துவக் கல்லூரியில் படிக்கிற காலத்திலேயே அவருக்கு நகைச்சுவை உணர்வு ரொம்ப அதிகம். ஒருமுறை அவரைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தபோது கல்லூரி நாள்களில் நடந்த நகைச்சுவையான சம்பவம் ஒன்றைக் கூறினார்.

வகுப்பில் ஒரு பேராசிரியர். எக்ஸ்-ரே ஃபிலிம் ஒன்றைக் காட்டி ஏதோ விளக்கிக் கொண்டிருந்தாராம். திடீரென்று கரண்ட் கட்.

பேராசிரியர் பாடத்தை நிறுத்தவில்லை. ஜன்னலுக்கு அருகில் எக்ஸ்-ரே ஃபிலிமைப் பிடித்துக்கொண்டு பாடத்தைத் தொடர்ந்து நடத்தினார். இடையில் திடீரென்று அவர் “ஓ! ரங்கநாதன் கார் வாங்கிட்டார்போல இருக்கே!” என்றதும் மாணவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. மாணவர் மாத்ருபூதம் சட்டென்று ” சார்! அதெல்லாம்கூடவா எக்ஸ்-ரேல தெரியும்? ” என்று கேட்க, வகுப்பில் சிரிப்பலை அடங்க வெகுநேரமானது.

விஷயம் என்னவென்றால், இந்தப் பேராசிரியர் ஜன்னல் அருகில் வைத்து எக்ஸ்-ரேவைப் பார்த்துக்கொண்டிருந்த சமயம், அங்கே சக பேராசிரியரான ரங்கநாதன் காரை ஓட்டிக்கொண்டு போயிருக்கிறார். அதை அவர் எதார்த்தமாகச் சொல்ல, மாணவர் மாத்ருபூதம் அதைக் காமெடியாக்கிவிட்டார்.

ஒவ்வொருமுறை சந்திக்கும்போதும் இப்படி நிறைய டாக்டர் ஜோக்ஸ் சொல்லுவார் மாத்ருபூதம். சில சாம்பிள்கள்:

ஒரு டாக்டரிடம் நோயாளி : “டாக்டர்! நீங்க எமதர்மனைவிடப் பெரிய ஆள்! அவர் உயிரைமட்டும்தான் எடுப்பார்! நீங்க உயிரோட என் சொத்தையும் சேர்த்து எடுத்துக்கறீங்க!”

ஒரு டாக்டர் வித்தியாசமாக இருக்கட்டுமே என்று தன் கிளினிக்கில் ஓர் எலும்புக்கூட்டை மாட்டி வைத்திருந்தார். ஆனால் சீக்கிரமே அதை அப்புறப்படுத்திவிட்டார். காரணம், டாக்டரின் கிளினிக்கில் இருப்பது அவருடைய முதல் பேஷண்ட்டின் எலும்புக்கூடு என்று யாரோ வதந்தி பரப்பியதுதான்.

மனிதர்களே! மாட்டைப்போல உழையுங்கள்; நாயைப்போலச் சாப்பிடுங்கள்; பூனைபோலத் தூங்குங்கள்; முயலைப்போல ஓடுங்கள்; வருடத்துக்கு ஒருமுறை கால்நடை மருத்துவரிடம் செல்லுங்கள்!

ஒருவரது நாய்க்கு உடம்பு சரியில்லை. கால்நடை மருத்துவரிடம் கொண்டுவந்தார். நாயைப் பரிசோதித்த டாக்டர் “நாய் செத்துப் போய்விட்டது” என்றார். நாயின் எஜமானர் நம்பவில்லை. உடனே டாக்டர் அடுத்த அறைக்குப்போய் ஒரு பூனையைக் கொண்டுவந்தார். நாயின் முகத்துக்கு அருகே விட்டார். “பூனை வாசனை தெரிந்தால் நாய் உடனே குரைக்க ஆரம்பித்துவிடும்! உங்க நாய் சும்மா இருக்கிறது; இப்போதாவது நாய் செத்துவிட்டது என்பதை நம்புகிறீர்களா?” என்றார்.

சோகமான நாயின் சொந்தக்காரர் புறப்பட்டார். அவரிடம் 200 ரூபாய் ஃபீஸ் கேட்டார் டாக்டர்.

“நாய் செத்துப்போனதாகச் சொன்னதற்கு 200 ரூபாயா?” என்று அவர் கேட்க, டாக்டரது பதில்: ”என் கன்சல்டேஷன் 100 ரூபாய். பூனையை வெச்சுப் பண்ணின cat scan சார்ஜ் 100 ரூபாய்.”

டாக்டர் மாத்ருபூதத்தின் “புதிரா? புனிதமா?” என்ற நிகழ்ச்சி தமிழ் சேனல்களில் ஒரு புது முயற்சியாக இருந்தது. பாலுணர்வு குறித்த சந்தேகங்களுக்கு அவர் விளக்கம் அளிக்கும் நிகழ்ச்சி அது. விஜய் டி.வி.யில் ஒளிபரப்பானது. ஆரம்பித்த சில மாதங்களுக்குள்ளாகவே அந்த நிகழ்ச்சி ரொம்பப் பிரபலமாகிவிட்டது.

இசையில் மிகுந்த ஆர்வம் கொண்ட மாத்ருபூதம் நன்றாகப் பாடுவார். ”புதிரா? புனிதமா” நிகழ்ச்சியில்கூட இடையிடையே பழைய தமிழ் சினிமாப் பாடல்களையும் கர்நாடக இசைக் கீர்த்தனைகளையும்கூட அவர் பாடியதுண்டு.

நடிகர் – எம்.எல்.ஏ. எஸ்.வி.சேகர் டாக்டர் மாத்ருபூதத்துக்கு ஒரு பட்டம் கொடுத்தார். என்ன பட்டம் தெரியுமா?

தமிழ்நாட்டின் வயாக்ரா!
[20:13, 20/3/2016] Appa: புதிய கணவன் மனைவி கோயிலுக்குச் செல்லும் போது மனைவியின் காலில் முள் குத்திவிட்டது. “இந்த சனியன் முள்ளுக்கு என் மனைவி வருவது தெரியவில்லை” என்று முள்ளைக் கோபித்துக் கொண்டான் கணவன்.

ஐந்து வருடம் கழித்து அதே கோயிலுக்கு வந்தார்கள். திரும்பவும் ஒரு முள் மனைவிக்கு குத்தி விட்டது. “சனியனே, முள் இருப்பதைப் பார்த்து வரக்கூடாதா?” என்று மனைவியைக் கோபித்துக் கொண்டான் கணவன்.

“என்னங்க, அப்போ அப்படிச் சொன்னீங்க, இப்போ வேறே மாதிரி சொல்றீங்களே” என்று மனைவி கேட்க, “அதற்குப் பெயர்தான் சனிப்பெயர்ச்சி” என்றான் கணவன்.

(டாக்டர் மாத்ருபூதம் அவர்களின் புன்னகைப் பூக்கள் என்ற  புத்தகத்திலிருந்து)

Sunday, February 7, 2016

கொடிதினும் கொடிது - முதுமையில் தனிமை

Dinamani


By இரா. கதிரவன்

First Published : 06 February 2016 05:19 AM IST


யாண்டு பல ஆக நரை இல ஆகுதல் - எனத் துவங்கும் பாடல் ஒன்று புறநானூற்றில் உண்டு.

பண்பாலும் அறிவாலும் நிறைந்த மனைவி மக்கள், கற்றறிந்த சான்றோர் வாழும் ஊர், அறம் வழுவா நல்லாட்சி தரும் அரசு - தீங்கு செய்யா அரசன் ஆகியோர் அமைந்தமையால், தமக்கு முதுமை எய்தியும், நரை விழவில்லை என, ஒரு புலவர் எழுதிய பாடல். இது அந்தக் கால நிலை...
இன்றைய காலகட்டத்தில், முதியோர் நிலை எப்படி இருக்கிறது என்பதைப் பார்க்க எத்தனிப்போம். கடந்த காலங்களோடு ஒப்பிடுகையில்,மருத்துவ வசதிகள் மற்றும் கல்வி வசதிகள் அநேகமாக எல்லாப் பகுதிகளிலும் சென்றடைந்திருக்கின்றன. இது தவிரவும், மத்திய - மாநில அரசுகளின் திட்டங்கள் எல்லோருக்கும் உணவு என்ற உணவுப் பாதுகாப்பினை பெருமளவுக்கு உறுதி செய்கின்றது
.
இந்தச் சூழலில் மக்களின் ஆயுள்காலம் அதிகரித்திருக்கிறது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில், மக்களின் சராசரி ஆயுள்காலம் 43 ஆண்டுகளாக இருந்தது. இப்போது, மேற்சொன்ன காரணங்களால்,சராசரி ஆயுள்காலம் 62-ஐ எட்டியிருக்கிறது.

இன்றைய தினம், பெண்கள் கல்வியில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஆண் - பெண் இரு பாலரும் வேலைக்குச் செல்லுதல் - குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை அளவு சுருங்கியிருப்பது - கூட்டுக் குடும்ப முறை அநேகமாக இல்லாதிருப்பது, நகரமயமாதல் காரணமாக கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு குடும்பங்கள் இடம் பெயருதல் மற்றும் முக்கியமாக உலகமயமாதல் காரணமாக வேலை செய்யும் ஆண் - பெண் இரு பாலரும் புலம் பெயருதல் போன்றவை, சமூகத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கின்றன.

இந்த மாற்றங்கள், வயோதிகத்தை அடைந்தவர்கள் பால் ஏற்படுத்தும் தாக்கத்தைக் காண முற்படுவோம்.

முதியோர்களை மூன்று முக்கிய பிரிவினர்களாக பிரிக்கலாம்.
அவர்களது பிள்ளைகளுடன் அல்லது உறவினர்களோடு வசிப்பவர்கள்.
கணவன் - மனைவி என்று இருவர் மட்டும் தனியாக வசிப்பவர்கள்.
ஆணோ அல்லது பெண்ணோ தனியாக வசிப்பவர்கள்.
மத்திய அரசின் புள்ளியியல் துறை கணக்கெடுப்புப்படி, இந்திய மக்கள்தொகையில், 1960-ஆம் ஆண்டு மக்கள்தொகையில் ஐந்து சதவீத மக்கள் 60 வயதை கடந்தவர்களாக இருந்தார்கள். 2010-ஆம் ஆண்டு மக்கள் தொகையில், சுமார் 10 சதவீதம் பேர் 60 வயதைக் கடந்தவர்கள்.
இந்த வயோதிகர்களில், சுமார் 20 சதவீதம் பேர் கணவன் - மனைவி என்ற இருவர் மட்டும், வேறு துணை ஏதுமின்றி வாழ்கின்றனர். மேலும், ஐந்து சதவீதம் பேர் எந்தத் துணையும் இன்றி தனித்து வாழ்கின்றனர்.
ஆக, தற்போதைக்கு சுமார் 10 கோடிக்கும் மேல் 60 வயதைக் கடந்தவர்கள். இவர்களில் கணவன் - மனைவி மட்டுமோ அல்லது துணையின்றியோ வாழ்வோரின் எண்ணிக்கை சுமார் மூன்று கோடியைத் தாண்டும். வயோதிக தம்பதியினர், தனித்து வாழும் முதியோர்கள், பிள்ளைகளால் கைவிடப்பட்டவர்கள், பிள்ளைகள் அல்லது உறவினர் என எவரும் இல்லாதவர்கள், ஏழ்மையில் உழல்பவர்கள் என்ற பிரிவினராக இருக்கின்றனர்.

சில பொதுவான விஷயங்கள்: ஒரு குறிப்பிட்ட வயதினைத் தாண்டி வசிக்கின்ற எல்லோரையும் முதுமை பீடிக்கின்றது. முதுமையில் கணிசமானவர்கள் எதிர்கொள்ளும் சில பொதுவான பிரச்னைகள்: மற்றவர்களால் உதாசீனப்படுதல், பொருளாதார ரீதியில் பிறரைச் சார்ந்திருக்கும் நிலை, தளர்ச்சியுறும் உடல்நலம், குடும்பத்தினரிடமிருந்து தனிமைப் படுதல், பிறரோடு ஒன்ற முடியாத நிலை, பிறர் பேச்சுக்கும் ஏச்சுக்கும் ஆளாகுதல், வாழ்க்கையில் பிடிப்பின்மை அல்லது அலுப்பான சூழல்.

முதுமை என்பது ஏதோ ஒரே இரவில் வந்துவிடுவதில்லை. எனவே, முதுமை எய்தும் முன்னரே, தன்னை அதற்குத் தயார்படுத்திக் கொள்ளுதல் முக்கியம். தவிரவும், முதுமை யாரைப் பீடிக்கிறதோ அவர்களை மட்டுமல்ல, அவர்களை சுற்றி இருப்பவர் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, முதுமையை எய்துபவர்கள் மட்டுமல்ல, அவர்களைச் சேர்ந்தவர்களும்கூட தம்மை, இந்தப் புதிய சூழலுக்குத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

முதியோர் எதிர்கொள்ளும் பிரச்னைகளை இரு முக்கியப் பிரிவாகப் பிரிக்கலாம். முதல் பிரிவு அவர்களது மூப்பு காரணமாக உடல் நலம் பாதிக்கப்படுதல், அது தொடர்பான பிரச்னைகள்.

இதன் காரணமாக, இவர்கள் வெளியில் எங்கும் செல்ல இயலாமல் வீட்டில் சிறைவாசம்போல் முடங்கிக் கிடத்தல், வீட்டில் சிறு சிறு வேலை செய்ய இயலாமை, மளிகை, கறிகாய், அத்தியாவசியப் பொருள்கள் வாங்க பிறரைச் சார்ந்திருத்தல், சமூகத் தொடர்பு அற்றுப் போகுதல், எழுதப் படிக்க இயலாமை உள்ளிட்ட பிரச்னைகள். இந்தப் பிரச்னைகள் அனைத்தும் உடல் சார்ந்தவை. இவர்களைச் சுற்றி இருப்பவர்கள், அக்கறையோடு சிறு சிறு உதவிகள் செய்தால்கூட, ஓரளவு இப்பிரச்னைகளை முதியோரால் சமாளிக்க இயலும்.

அடுத்தது, மனம் சார்ந்த பிரச்னைகள்: பிறரைச் சார்ந்திருப்பது, அவர்களால் உதாசீனப்படுவது, நிந்திக்கபடுவது, பய உணர்வு, தனிமை உணர்வு போன்றவற்றால் அவதிப்படுவது, நேரத்தை உபயோகப்படுத்த இயலாமை, பொழுதுபோக்கின்மை மற்றும் வாழ்வில் சுவாரசியமின்மை போன்றவை ஏற்படுத்தும் மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வு ஆகும்.
இவர்களது மிக முக்கிய தேவை என்பது, அன்பு, ஆதரவு, கரிசனம், இன்சொல், கவனிப்பு போன்றவைதான். ஆனால், முதியோர் அனுபவிக்கும் பிரச்னைகளில் மிகக் கொடுமையானது,அவர்கள் அனுபவிக்கும் தனிமைதான்.

உதாரணத்துக்கு, ஒரு பெரிய நிறுவனத்தில் அல்லது கல்லூரியில் பலரோடு சேர்ந்து பணி செய்த ஒருவர், தனிமையில் பேச்சு துணைக்கூட இன்றி இருப்பது, தன் மனதில் தோன்றும் கருத்துகளை பகிர்ந்து கொள்ளக்கூட எவரும் இல்லாது இருத்தல், தனது சுக, துக்கங்களை மனம் விட்டு பேச முடியாது இருத்தல் போன்ற விஷயங்கள் அவர்களை கொடுமைப்படுத்துகின்றன.

வேலைக்கார ஆள் அல்லது வீட்டுக்கு வரும் விற்பனை பிரதிநிதி ஆகியோரோடு மட்டுமே பேசக்கூடிய அவல நிலையில் இருக்கும் முதியவர்கள், இன்று சென்னை போன்ற பெரு நகரங்களில் ஏராளம். வாரம் ஒரு நாளோ அல்லது மாதம் ஒரு நாளோ, அயல் நாட்டிலிருந்து வரும் தொலைபேசி அழைப்பு ஒன்றுதான், அவர்களுக்கு எங்கோ ஒரு மகன் அல்லது உறவினர் இருக்கிறார் என்பதற்கான ஒரே அடையாளம்.
தவிரவும், இவர்களின் இந்தப் பிரச்னைகளை பிறரோடு பகிர்ந்து கொள்ள முடியாதபோது, அவற்றுக்கு தீர்வு என எதுவும் கண்ணில் தெரிவதுமில்லை. நகரங்களோடு ஒப்பிடுகையில் கிராமங்களில் நெஞ்சில் கொஞ்சம் ஈரம் ஒட்டிக் கொட்டிருப்பது என்னவோ உண்மை.

வயோதிகர்களை அவர்கள் தனிமையில் இருந்தால்,அவர்களை வீட்டில் எட்டிப் பார்ப்பது, பேச்சுக் கொடுப்பது, சிறு சிறு உதவிகள் செய்வது என்ற பழக்கம் நம் கலாசாரா ரீதியாக இன்னும் கிராமங்களில் மறையாமல் இருப்பது சற்று ஆறுதலான விஷயம். ஆனால், பெருநகரங்களில் பக்கத்து வீட்டுக்காரரைத் தெரியாது என்று கூறுவது போலி கெளரவம்.
முதியோரின் இத்தகைய பிரச்னைகளை அரசு அடையாளம் கண்டு கொண்டிருக்கிறது. அதனால் சில சட்ட ரீதியான நடவடிக்கைகளை அரசு செய்துள்ளது. முதியோருக்கு உதவ முற்படும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு ஊக்கம் மற்றும் சலுகைகள் தருவது, முதியோர் பிரச்னைகள் - தீர்வுகள் குறித்த தகவல் திரட்டுதல் மற்று ஆய்வு ஆகியனவற்றுக்கு உதவி, ரயில் பிரயாணம் மற்றும் சேமிப்பு ஆகியவற்றில் சலுகைகள் என்ற விஷயங்களில் நடவடிக்கை எடுத்திருக்கின்றன.
முதியோர் படும் இன்னல் குறித்து சராசரி மனிதர்கள் என்ன செய்ய முடியும்? நாளை நமக்கு முதுமை வரும்போது எந்த வகையில் நாம் நடத்தப்பட வேண்டும் என எதிர்பார்க்கிறோமோ, அதேபோல இன்று நம் முன் நடமாடும் முதியோரை நாம் நடத்த வேண்டும் என்ற கருத்தினை அனைவரும் மனதில் பதித்துக் கொள்ளும்போது, நம்மைச் சுற்றியுள்ள முதியோர், நமக்கு அன்னியர்களாகத் தெரிய மாட்டார்கள்.

நாம் எங்கோ சந்திக்கும் ஒரு முதியவர் அல்லது மூதாட்டியின் உடல் நலம் விசாரிப்பதோ அல்லது பேச்சுக் கொடுப்பதோகூட அவர்களுக்குப் பெரும் ஆறுதல் தரும். அதுகூட முடியவில்லை என்றால், ஒரு சிறு புன்னைகைகூட அவர்களுக்கு நிம்மதி தரும்.

பெரும்பாலான முதியோர்கள் ஏங்குவது நிச்சயமாக பணத்துக்காக அல்ல. அவர்களின் தேவை கொஞ்சம் அன்பு, கரிசனம், நல்லதாக நான்கு வார்த்தைகள், முடிந்தால் கொஞ்சம் உதவி அவ்வளவுதான். இதனை செய்யும் திறன் நம் எல்லோரிடமும் இருக்கிறது.

முதுமை ஒரே இரவில் வந்துவிடுவதில்லை. முதுமை யாரைப் பீடிக்கிறதோ அவர்களை மட்டுமல்ல, அவர்களை சுற்றி இருப்பவர் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, முதுமையை எய்துபவர்கள் மட்டுமல்ல, அவர்களைச் சேர்ந்தவர்களும்கூட தம்மை, இந்தப் புதிய சூழலுக்குத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

Saturday, February 7, 2015

அலைபேசி நாகரிகத்தை அறிந்துகொள்ளுங்கள்!



டேய் எங்க இருக்குற?”- இன்றைய தினங்களில் மிக அதிகமான அலைபேசி அழைப்புகளில் கேட்கப்படுகின்ற கேள்வி இதுதான்!

ஹலோ! நான் இன்னார், இங்கிருந்து பேசுகிறேன், இன்னாருடன் பேச வேண்டும், நலமா? என்பது போன்ற வார்த்தைகள் (சம்பிரதாயத்துக்குக்கூட) அரிதாகிவிட்டது. முந்தைய தலைமுறையின் தொலைபேசி நாகரிகம், இந்த தலைமுறையின் அலைபேசியில் இருகிறதா என்றால் சந்தேகமே...

அலைபேசி எண், உங்கள் நண்பருடயதுதான். ஆனால், அழைப்பைப் பெறுபவர் உங்கள் நண்பராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. பொதுவாக நான் எப்போது யாரிடம் அலைபேசினாலும், என் பெயரைச் சொல்வதுண்டு (பெற்றவர்களிடம் கொஞ்சம் குறும்புடன்...) “அதான் போன்லயே காட்டுதே, சொல்லுங்க” என்பார்கள். அழைப்பைப் பெறுபவரை உறுதி செய்ய வேண்டாமா?. அப்போதும் சில கேரக்டர்கள் தங்கள் பெயரைச் சொல்வதில்லை, குரலை வைத்து அடையாளம் கண்டால்தான் உண்டு. இன்னும் சிலர், நான் என் பெயரைச் சொன்னாலும் அதை சட்டை செய்வதில்லை.

எனக்கும் என் அப்பாவுக்கும் ஒரே குரலமைப்பு. பல சமயங்களில் நான் அலைபேசியை எடுத்து பதில் சொல்ல நேரிடும். அப்போதுகூட நான் அவரது மகன் பேசுகிறேன் என்பேன். ஆனால், கடைசியில்தான் என்னை சொல்லவிடுவார்கள். (அது வரையில் நாம் காத்திருக்க வேண்டும்).

பல சமயங்களில், “எங்க இருக்குற?” என்ற கேள்வி என்னை எரிச்சலூட்டும். பொதுவாகவே, நான் எல்லா அழைப்பையும் பேச நினைப்பவன். தவறுவது நம்முடைய வாய்ப்பாகக்கூட இருக்கலாம். தவறினாலும் மீண்டும் அழைத்து கேட்டுவிடுவேன். அழைப்பை எப்போதும் தவறவிடாது எடுப்பவனை, வேலை இல்லாதவன், இளிச்சவாயன் மற்றும் சில பல நல்ல பட்டங்களை தருவதேன்? என்னுடைய தேவைக்காக மட்டுமல்லாமல், உங்களுடைய வேலைகளுக்கும் நான் தேவையாக இருந்திருக்கலாம். அதை எல்லாம் வேலை பளுவாக கருதாமல், உதவி செய்ய வாய்ப்பு என்று நினைத்ததால் கிடைத்த பட்டமா?

இரண்டு அல்லது மூன்று முறை அழைப்பை எடுக்காமல் விட்டு (சும்மாவே வேலை இல்லாமல் இருக்கும் கேரக்டர்கள் மட்டுமே...) பின்னர் பேசுவதால் நீங்கள் என்றும் உயர்ந்தவராகி விட முடியாது. மற்றவர்களுக்காக வாழும் வாழ்வே உங்களை உயர்த்துமே தவிர, அலைபேசியில் காட்டும் பகட்டால் அல்ல.

பலமுறை என்னை “எங்க இருக்குற?” என்று கேட்டுவிட்டு, ''அங்கேயே இரு... ரெண்டே நிமிஷத்துல அங்கே இருப்பேன்” என்று சொல்லி, இரண்டு மணி நேரம் கழித்து, ஏதோ ஒரு நொண்டி சாக்கு சொல்பவர்களை என்ன சொல்வது? நானாகவே நடந்தே சென்று வேலையை முடித்திருப்பேன். இன்னொரு நண்பர் 50 கி.மீ முன்பிருந்தே “இதோ அஞ்சே நிமிசம்” என்பர், அது எந்த அஞ்சு நிமிசம் என்பது கடவுளுக்கு மட்டுமே தெரியும்.

என்னை போலவே பல நல்ல கேரக்டர்களால் எரிச்சலுற்ற, என் நண்பரிடம் அலைபேசிய இன்னொருவர் “எங்கிருக்குற?” என கேட்க, இரண்டு காதிலும் ரத்தம் வருமளவுக்கு கெட்ட கெட்ட வார்த்தைகளால் அர்ச்சனை செய்துவிட்டார். 'மந்திரப் புன்னகை' படத்தில், டைரக்டர் கரு.பழனியப்பன் சொல்வாரே... மியூட் செய்யப்பட்ட வார்த்தைகள் அதேதான்...

எனக்கு நீண்ட நாட்களாகவே சந்தேகம். என் நண்பர் அந்தப் படம் வெளிவருவதற்கு சுமார் ஒரு வருடத்துக்கு முன்பிருந்தே அந்த கெட்ட வார்த்தையைச் சொல்லி வந்தார். பின்னர், படத்திலும் அதே வார்த்தை, மாற்றமே இல்லை. ஆச்சர்யம். ஒருவேளை கரு.பழனியப்பனுக்கும் இதேபோல நண்பர்களால் பி.பி. எகிறி இருக்கலாம்!

பல நேரங்களில் என்னுடைய அழைப்பை எடுக்காதவர்களின் (தோழிகளுடன் கடலை) அழைப்பைக்கூட, சில டிராஃபிக் போலீஸைத் தாண்டி, வண்டியை ஓரங்கட்டி, 'ஏதோ அவசரம் போல' என்று நினைத்து எடுத்தால், ''மச்சி... அரை பாக்கெட் சிகரெட்” என்பார்கள். அப்போது வரும் கோவத்துக்கு...

எதிர்முனையில் இருப்பவர், எங்கே, எப்படி, எந்த சூழ்நிலையில் இருக்கிறார்கள் என்பதை பற்றி எல்லாம் சிறிதும் யோசிக்காமல் அலைபேசும் நண்பர்களே, எதிராளியின் சூழ்நிலையைப் புரிந்துகொண்டு பேசுங்கள். இல்லையேல், கரு.பழனியப்பனின் மியூட் செய்யப்பட்ட வார்த்தைகள் லவுடு ஸ்பீக்கரில் ஒலிக்கும்!

- கார்த்திக் குமார் (மலேசியா)

NEWS TODAY 22.04.2024