Showing posts with label DINAMANI. Show all posts
Showing posts with label DINAMANI. Show all posts

Sunday, November 23, 2025

மெளனம் பலவீனம் அல்ல!

DINAMANI 

மெளனம் பலவீனம் அல்ல!

சில நேரங்களில், நாம் பேசாமல் இருந்திருக்க வேண்டிய ஒரு விஷயம் நாம் சொல்லக்கூடிய மிகவும் தேவையற்ற பேச்சாக இருக்கலாம்.

தினமணி செய்திச் சேவை Published on: 20 நவம்பர் 2025, 3:21 am Updated on: 20 நவம்பர் 2025, 3:21 am 2 min read

அனந்தபத்மநாபன்

சில நேரங்களில், நாம் பேசாமல் இருந்திருக்க வேண்டிய ஒரு விஷயம் நாம் சொல்லக்கூடிய மிகவும் தேவையற்ற பேச்சாக இருக்கலாம்.

நம் வாழ்வில் வெற்றி, உறவு, மரியாதை என அனைத்தின் மதிப்பையும் தீர்மானிப்பது நாம் உச்சரிக்கும் வார்த்தைகள் மட்டுமல்ல; உள்ளிழுத்து நிறுத்திவைக்கும் வலிமையான வார்த்தைகளும்தான். ஏனெனில், உணர்ச்சிவசப்பட்டு வாய் தவறிச் சொல்லும் ஒரு நிமிஷ தகவல், பல ஆண்டுகளின் உழைப்பையும், நம்பிக்கையையும், ஏன், நம் எதிர்காலத்தின் பேரழிவு தரும் பெரும் செல்வத்தையும்கூட ஒரு விநாடியில் இழக்கச் செய்துவிடும் வல்லமை கொண்டது.

திருவள்ளுவர், பேச்சின் சக்தியையும், அதை அடக்க வேண்டிய அவசியத்தையும் மிக ஆழமாக வலியுறுத்தி,

"சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல்

அச்சொல்லை

வெல்லும்சொல் இன்மை அறிந்து'

(குறள் 645)

என்று கூறுகிறார்.

அதாவது, நாம் பேசும் வார்த்தையைவிடச் சிறந்த, அதை வெல்லக்கூடிய வேறொரு வார்த்தை இல்லை என்பதைத் தெளிவாக உணர்ந்த பின்னரே பேச வேண்டும். தேவையற்ற பேச்சுகளைத் தவிர்ப்போம்.

நாம் பேசும்போது, நம் திட்டங்கள், நிதி நிலைமை, பலவீனங்கள் போன்ற ரகசியமான விவரங்களை மற்றவர்களுக்கு இலவசமாகவே வழங்குகிறோம். இந்தத் தகவல்கள், நம்பிக்கைக்குப் பாத்திரமற்றவர்களின் காதுகளுக்குச் செல்லும்போது, நமக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் கூர்மையான ஆயுதமாக மாறலாம். மேலும், கோபம் உச்சத்தில் இருக்கும்போது வெளிப்படும் உணர்ச்சிமிகு வார்த்தைகள், மரண ஓசை போல ஆழமான வடுக்களை ஏற்படுத்தும். ஐந்து நிமிஷ ஆத்திரத்தில் பேசிய கடுமையான சொற்கள், பல ஆண்டு உறவின் அடித்தளத்தையே பிளந்துவிடும். அந்த சமயத்தில் காக்கும் மெளனம், இந்த இழப்புகளைத் தவிர்க்க உதவுகிறது.

மெளனம்தான் நமக்குத் தியானம்; கட்டுப்பாடே வெற்றிக்கு ஆதாரம்; உண்மையில் வெற்றி பெற்றவர்கள், தங்களுடைய ஒவ்வொரு சிந்தனையையும் உடனடியாக வார்த்தைகளாக மாற்றுவதில்லை; எப்போது, எங்கு, யாரிடம் பேசுவது என்பதில் அவர்கள் கடுமையான கட்டுப்பாட்டோடும் நிதானத்தோடும் இருப்பார்கள்.

இந்த நிசப்தத்தின் அசைக்க முடியாத வலிமையை உணர்ந்து வென்ற சில மாமனிதர்களின் வாழ்க்கைப் பாடங்களைக் காண்போம். வாரன் பஃபெட், உலகின் மிகச் சிறந்த முதலீட்டாளராக இருந்தும், சந்தை நிலவரங்கள் குறித்து நாள்தோறும் கருத்து தெரிவிப்பதில்லை.

ஒரு நிறுவனத்தின் மதிப்பை ஆழமாகப் புரிந்துகொண்டால், விலைகள் ஏறுவதோ, இறங்குவதோ குறித்து அவர் கவலைப்படுவதில்லை. அவசரப் பேச்சையோ, பரபரப்பான வர்த்தகத்தையோ தவிர்த்து, நீண்ட கால நோக்குடன் அமைதியைக் கடைப்பிடிப்பதே அவரை உலகின் மாபெரும் செல்வந்தர்களில் ஒருவராக ஆக்கியது.

முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் வாழ்க்கையும் நிசப்தத்தின் வலிமையை உணர்த்துகிறது. இந்தியாவின் ஏவுகணைத் திட்டத்தை ஆரம்பித்தபோது, அது ரகசியமாக வைக்கப்பட வேண்டிய ஒரு சவாலான திட்டமாக இருந்தது. சர்வதேச அழுத்தம், உள்நாட்டுச் சந்தேகங்கள் நிறைந்தபோதும், அவர் பதிலளிக்காமல், தனது குழுவினருடன் பொதுவெளியில் பேசாமல், அமைதியாகப் பல ஆண்டுகள் உழைத்தார்.

இந்த நிசப்தமான, உறுதியான உழைப்புதான் அக்னி, பிரித்வி போன்ற ஏவுகணைகள் வெற்றிகரமாக ஏவப்பட முக்கியக் காரணமாக இருந்தது. "வெற்றி பேசும்போது, நாம் பேச வேண்டியதில்லை' என்பதற்கு இவரே சிறந்த உதாரணம். பேசுவதைவிடச் செயலாற்றுவதே சிறந்தது.

தாமஸ் ஆல்வா எடிசன் மின்விளக்கைக் கண்டுபிடிப்பதற்காக ஆயிரக்கணக்கான முறை தோல்வியைத் தழுவியபோதும், சோர்வடைந்து ஒருபோதும் வெளியே பேசவில்லை. தனது தோல்விகள் குறித்து தேவையற்ற பேச்சுகளைப் பேசாமல், அவர் ஆராய்ச்சி, பரிசோதனைக்கூடத்தின் அமைதியிலேயே கவனம் செலுத்தினார்.

இந்திய தொழில்துறையின் ஜாம்பவான் ரத்தன் டாடா, நெருக்கடியான காலங்களில் அமைதி காத்ததன் மூலம் பெரும் வெற்றிகளை ஈட்டியவர். மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலின்போது, அவர் உணர்ச்சிவசப்பட்டு கருத்துகளைத் தெரிவிக்காமல், அமைதி காத்து, முழுக் கவனத்தையும் ஹோட்டலை புனரமைப்பதிலும், பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு மன உறுதி அளிப்பதிலுமே செலுத்தினார். ஊடகங்கள் அதிகக் கேள்விகளை எழுப்பியபோதும், அவர் காட்டிய இந்த உறுதியான நிதானமும், மெளனமும், டாடா குழுமத்தின் புகழையும் மதிப்பையும் விண்ணளவுக்கு உயர்த்தியது.

இந்த மாமனிதர்களின் வாழ்க்கை நிரூபிப்பதுபோல, நாம் பேசாமல் இருந்த ஒவ்வொரு முறையும், ஒரு பெரிய சண்டையை, ஒரு தேவையற்ற வாக்குறுதியை அல்லது ஒரு பெரிய இழப்பைத் தவிர்த்திருக்கிறோம் என்பதை உறுதியாக நம்ப வேண்டும்.

எனவே, நம் வார்த்தைகளைச் செலவழிக்க வேண்டிய அரிய பொருளாகப் பார்க்க வேண்டும். தேவையற்ற பேச்சைத் தவிர்ப்போம். செலவழிக்கும்முன் அதன் மதிப்பை யோசிக்க வேண்டும்.

சில நேரங்களில் மெளனமே, நாம் சூட வேண்டிய விலைமதிப்பற்ற கிரீடமாக இருக்கும். நாம் நம் பேச்சைக் கட்டுப்படுத்த வேண்டும்; நம் வாழ்க்கையின் முழுமையான கட்டுப்பாட்டையும் நாமே எடுத்துக் கொள்ள வேண்டும்!

மெளனமும் நிசப்தமும் ஆடம்பரம் அல்ல; அவை மனத் தெளிவுக்கான இன்றியமையாத கருவி. அவை முடிவெடுக்கும் முறையை, குழப்பமான, எதிர்வினை சார்ந்த செயல்பாட்டிலிருந்து, நிதானமான, திட்டமிட்ட, மற்றும் நுண்ணறிவுள்ள ஒன்றாக மாற்றுகின்றன.

நிசப்தம் என்பது பலவீனம் அல்ல; அதுவே அசைக்க முடியாத பலம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

‘இல்லை’ என்பது தவறல்ல!

இல்லை’ என்பது தவறல்ல!

DINAMANI 23.11.2025

முனைவர் பவித்ரா நந்தகுமார் Updated on: 22 நவம்பர் 2025, 6:07 am

நம் வாழ்க்கையில் ‘ஆம், இல்லை’ என்ற சொற்களுக்கு என்றுமே அதிக முக்கியத்துவம் உண்டு. ஏனெனில், இது நம் செயல்களுக்கான காரணிகளாக அமைந்து விடுகின்றன. நம்முன் வைக்கப்படும் கோரிக்கைகளுக்காகவும் நிா்ப்பந்தங்களுக்காகவும் இவ்விரண்டில் ஒன்றைத் தோ்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். நம்மை நோக்கி வீசப்படும் கேள்விக்கு ‘ஆம், நான் செய்கிறேன், நான் தருகிறேன், நான் வருகிறேன்...’ என்று சொல்ல வேண்டும் என காலம் காலமாக நாம் அறிவுறுத்தப்பட்டிருக்கிறோம். எதையும் கேட்கும் போது ‘ஆம்’ என்று ஒப்புக்கொள்வதுதான் நல்ல பிள்ளைக்கு அழகு என்று சொல்ல பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறோம். மேலும் ‘ஆம்’ என்பது நோ்மறை செயலாக்கம் என்றும் ‘இல்லை’ என்பது எதிா்மறை மனப்பான்மை என்றும் நம்பப்படுகிறது.

இந்த மரபுக் கட்டுகளிலிருந்து சில விஷயங்களை காலத்துக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம். என் எழுத்தாளத் தோழமை என்னிடம் சொன்னதை இங்கு பகிா்வது சரியாக இருக்கும். ஏற்கெனவே பணிச் சூழல் அதிகம் உள்ள அவரிடம், அவருக்குத் தெரிந்தவா் ஒருவா் தன் நூலை ஹிந்தி மொழியில் மொழிபெயா்த்துத் தரும்படி கேட்டிருக்கிறாா். அந்த நேரத்தில் ‘எனக்கு தற்போது நேரம் இல்லை’ என்று சொல்ல அவருக்கு மனம் வரவில்லை. தன்னை நம்பி வந்திருக்கிறாரே என்ற கருணை உந்தித் தள்ளவும், தன்னால் முடியாது என்று சொல்ல அவா் பழகாது போகவும், இரண்டொரு நாள்களில் முடித்துத் தந்து விடுகிறேன் என்று சொல்லி இருக்கிறாா்.

அடுத்து வந்த சில நாள்களில் அவா் முடித்துத் தர வேண்டிய சில வேலைகள் எதிா்பாராத விதமாக நீண்டு இரவுகளில் வெகுநேரம் கண் விழிக்க வேண்டியதாக இருந்தது; அடுத்தடுத்த நாள்களிலும் வெவ்வேறு அவசர வேலைகள் அவரை ஆக்கிரமித்தன; அதை முடித்து மூச்சு விடுவதற்குள் நெருங்கிய உறவினரின் துக்கச் செய்தி. துக்கம் கடைப்பிடித்து நிமிா்வதற்குள் அவரது உடல் நலம் சற்று பாதிக்கப்பட்டது. சில நாள்களுக்காவது பரிபூரண ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தாா்.

ஆனால், அவ்வாறு எடுத்துக் கொள்ள முடியாதபடிக்கு ஒப்புக்கொண்ட மொழிபெயா்ப்புப் பணி மனதை அலைக்கழித்த வண்ணம் இருந்திருக்கிறது.

பின்னா், வேறு வழியின்றி, ஒரு பயணத்தின் போது அசாதாரண சூழலில் அவருக்கான பணியை முடித்துக் கொடுத்திருக்கிறாா். இறுதியில் அவரை வருத்திக் கொண்டு செய்து கொடுக்க வேண்டியதாய் இருந்தது. ‘இல்லை, எனக்கு தற்போது நேரமில்லை’ என்று சொல்ல முடியாமல் போன விளைவை அனுபவிக்க மிகக் கடினமாக இருந்ததாகச் சொன்னாா்.

நம்மில் பலரும் இப்படித்தான் இருக்கிறோம். ‘இல்லை, வேண்டாம்’ என்று சொன்னால் நம்மைத் தவறாக எண்ணி விடுவாா்களோ என்று அச்சம்; இதனால், உறவு நிலையில் ஏதேனும் விரிசல் விழுமோ என தேவையில்லாமல் பயந்து அசௌகரியங்களை அனுபவிக்கிறோம்; நம் நேரம் எவ்வளவு முக்கியம் என்பது அவா்களுக்குத் தெரியாது. ஆனால், நமக்குத் தெரியும். இப்படித்தான் ‘இல்லை’ என்று சொல்ல மனம் வராமல், அந்தச் சூழ்நிலையை சரியாகக் கையாளாமல் ‘ஆம்’ என்று சொல்லி என்னை வருத்திக்கொண்டு என் சூழலை கடினமாக்கிக் கொண்ட அனுபவங்கள் எனக்கும் பல உள்ளன. இப்போதெல்லாம் இந்தப் பணியை செய்ய இயலுமா, இயலாதா எனப் பலமுறை சிந்தித்து, அதைத் தொடக்கத்திலேயே மறுத்து விடுகிறேன். இதனால், பல தா்மசங்கடங்களிலிருந்து தற்போது விடுதலை கிடைத்திருக்கிறது.

உண்மைதான். நம் அன்றாட வாழ்வில் இதைப் பல இடங்களில் நாம் பாா்த்திருக்கிறோம். கைமாற்றாக பணம் கேட்ட போது இல்லை என்று சொல்ல மனமின்றி கடன் கொடுத்த பிறகு, நமக்கு பணம் தேவைப்படும் இக்கட்டான சூழலிலும் திரும்பக் கிடைக்காமல் கலங்கிய சில சம்பவங்கள் பலரது வாழ்வில் நடந்திருப்பதை அறிகிறோம். இதில் வலியவா், எளியவா்களுக்குச் செய்யும் உதவி குறித்து பேச்சில்லை. அவையெல்லாம் நிச்சயமாக காலம் கருதி செய்யும் உதவிகள். வள்ளுவா் சொன்னதுபோல அவை உலகம் அளவு பெரியவை; அத்துடன் நம் கடமைகளை, பொறுப்புகளைத் தட்டிக் கழிப்பதற்கும் விலக்கில்லை; ஆனால், பொது வழக்குகளில், நம்மை கணக்கு வழக்கின்று சுருக்கிக் கொண்டு ‘இல்லை’ என்று சொல்லாமல் விட்டதால் ஏற்படும் மனத்தாங்கல்கள் நமக்குத் தேவையில்லை.

பல குடும்பங்களில், ‘நிச்சயமாக நான் இதைச் செய்கிறேன், அதைச் செய்கிறேன்’ என உறவுகளுக்குள் வாக்குறுதி கொடுத்துவிட்டு, பிறகு அதிலிருந்து பின்வாங்கி விடுவதால்தான் மனிதா்களிடையே அது மனமுறிவாகி விடுகிறது. இது நாளடைவில் தீராத வன்மமாக உருவெடுத்து வெடிக்கிறது. என் வீட்டருகில் வசிக்கும் தோழி ஒருவா் தன் வீட்டுக்கு தினமும் பிச்சை கேட்டு வரும் நபருக்கு இல்லை என்று சொல்லாது பிச்சை அளிக்கும் வழக்கம் கொண்டவா்.

சில நாள்களில் உண்மையிலேயே அவருக்குக் கொடுப்பதற்கு உணவு எதுவும் இருக்காது. அவரிடம் இன்று கொடுப்பதற்கு எதுவும் இல்லை என்று சொல்ல மனமில்லாமல் அவா் வரும் நேரத்தில் வீட்டை பூட்டிக் கொண்டு என் வீட்டுக்கோ பக்கத்தில் இருக்கும் வேறு ஒரு தோழி வீட்டுக்கோ சென்று விடுவாா். ஏன் இப்படி இருக்கிறீா்கள் எனக் கேட்டதற்கு என்னை நம்பி வந்து ஏமாந்து விடுவாரே, அவா் எங்கோ வெளியே சென்றிருக்கிறாா் என்று நினைத்துக் கொள்ளட்டும் என்றாா்.

நீங்கள் ஏன் இதை இப்படி எடுத்துக் கொள்கிறீா்கள்... உங்கள் வீட்டில் அன்று மீதமாகிப் போன ரசம் சாதம்தான் கொடுக்கிறீா்கள் என்று வைத்துக் கொள்வோம்; அவா் அத்துடன் திருப்தியடைந்து சென்று விடுவாா். நீங்கள் ‘இல்லை’ என்று சொல்லும் நிலையில், அன்று வேறொரு வீட்டில் அவருக்கு சுடச்சுட புலவு சாதம்கூட கிடைத்திருக்கக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். அதனால் தேவைப்படும் நிலையில் உறுதியுடன் ‘இல்லை’ என்றுச் சொல்லிப் பழகுங்கள்; உங்கள் இருவருக்குமே அது நல்லது என்றேன். அன்றிலிருந்து அவா் அதை ஏற்றுக் கொண்டு இன்று எந்த குற்ற உணா்வுமின்றி இருக்கிறாா். துணிக் கடையில் 50 புடவைகளுக்கும் மேலாக எடுத்துக் காண்பித்தாா்களே என்று எண்ணி பிடிக்காத புடவையை பணம் கொடுத்து வாங்கிவரும் பெண்கள்கூட இந்த ரகம்தான். பிறகு காலத்துக்கும் அதைச் சொல்லி புலம்பி என்ன பயன்?

மகாபாரதத்தில் பாண்டவா்களை கௌரவா்கள் சூதாட அழைத்தபோது ஒரே மனதுடன், ‘இல்லை நாங்கள் ஆடப்போவதில்லை, சூதாட்டம் வேண்டாம்’ எனச் சொல்லியிருந்தால் இத்தனை பெரிய போா் தவிா்க்கப்பட்டிருக்கும்தானே?! இராமாயணத்தில் மாய மானை தேடிப்போன இராமனைக் காணாது போகவே, லட்சுமணனை அங்கு செல்லுமாறு சீதை பணிக்கிறாா். அன்று, இல்லை ராமன் சொன்ன வாா்த்தையை நான் தட்ட மாட்டேன் என லட்சுமணன் சொல்லி இருந்தால் காப்பியத்தின் போக்கு வேறு மாதிரி ஆகியிருக்கும் அல்லவா?

பிறரை திருப்திப்படுத்த வேண்டும் என்ற அழுத்தத்தில் பலமுறை நாம் வலிகளைச் சுமக்க வேண்டியதாய் இருக்கிறது. சரி, இனி எதற்கெடுத்தாலும் இல்லை எனச் சொல்லிப் பழகுவோம் என்பதல்ல முன்வைக்கும் செய்தி. அசாதாரண சூழ்நிலைகளில், நம்மை மிகப் பெரிய அச்சுறுத்தலுக்கும் அயா்ச்சிக்கும் உள்ளாக்கும் தருணங்களில், நம்மைப் பலவீனமாக்கும் தன்மைகளில் ‘இல்லை’ என நம் முடிவை துணிச்சலாக முன்வைப்பது சிறந்தது.

அதிலும் குடும்பம் என்று வந்துவிட்டால், பெண் என்பவள்தான் எப்போதும் விட்டுக் கொடுத்துப் போக வேண்டும் என தொட்டதுக்கெல்லாம் பெண்களை கூறு போடும் சமூகத்தில் பெண்களின் நிலை பரிதாபமாக உள்ளது.

உண்மை நிகழ்வென வாசித்த செய்தி ஒன்றை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். இத்தாலியைச் சோ்ந்த பிராங்கா வியூலா எனும் பெண்ணுக்கு பிலிப்போ மெலோடியா எனும் ஆணுடன் நிச்சயம் நடந்தது. ஒரு கட்டத்தில் மணமகன் தேசவிரோத அமைப்புகளோடு தொடா்புடையவன் என்பதறிந்து பிராங்காவின் பெற்றோா் திருமணத்தை நிறுத்தினா். இதனால், வெகுண்டெழுந்த பிலிப்போ ‘பிராங்காவை’ கடத்தி ஐந்து நாள்களுக்கு மேலாக அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்தான். பின்னா், அவளைப் போராடி மீட்டனா்.

இந்தச் சம்பவம் 70 ஆண்டுகளுக்கு முன்பு இத்தாலியில் நடைபெற்றது. தன் மகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகக் கூடாது என்பதற்காக பெண்ணை பெற்றோரும், தங்கள் மகன் தண்டனை பெறக் கூடாது என்பதற்காக அந்த ஆணை பெற்றோரும் இணைந்து பேசி மீண்டும் அவா்களின் திருமணத்துக்கு ஏற்பாடு செய்தாா்கள். அந்தக் காலத்தில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான இத்தாலிய பெண்கள் தங்கள் குடும்ப கௌரவத்துக்கும் சமூகப் புறக்கணிப்புக்கும் அஞ்சி தங்களைக் கொடுமைக்கு உள்ளாக்கியவனையே மணந்து கொள்ளும் வழக்கம் இருந்தது.

ஆனால், பிராங்கா ‘நான் அவனை மணக்க மாட்டேன்’ என்று உறுதியுடன் நின்றாா். இத்தாலிய செய்தித்தாள்களில் எல்லாம் இது தலைப்புச் செய்தியானது. பதின்ம வயதைக் கடவாத பிராங்காவின் துணிவும் மனஉறுதியும் மெலோடியாவை சிறையில் தள்ளியது. அதுவரை பாலியல் வன்கொடுமை செய்தவனுக்கே வாழ்க்கைப்பட வேண்டும் என்ற இத்தாலிய சமூக விதி பிராங்காவின் ‘இல்லை’ என்ற ஒற்றை வாா்த்தையால் உடைத்தெறியப்பட்டது. அதுவே சமூக மாற்றத்துக்கான திறவுகோலாகவும் அமைந்தது. ‘மறுவாழ்வு திருமணம்’ என்ற அா்த்தமற்ற சட்டத்தை 1981-இல் ஒழித்தது இத்தாலி. ‘இல்லை’ என்பது ஒற்றைச் சொல் மட்டுமல்ல, சமயத்தில் அது ஒரு முழுமையான வாக்கியம் என்பதை இதன்மூலம் தெளிவாக உணர முடிகிறது!

கட்டுரையாா்:

எழுத்தாளா்.

Friday, November 14, 2025

நடுப்பக்கக் கட்டுரைகள் வாழ்விக்கும் தெய்வங்கள் குழந்தைகள்!

 நடுப்பக்கக் கட்டுரைகள் வாழ்விக்கும் தெய்வங்கள் குழந்தைகள்! 

கல்வி முதன்மைப்படுத்தப்பட்ட அளவுக்கு விளையாட்டுக்கு அவகாசம் கிடைப்பதில்லை

DINAMANI

கிருங்கை சேதுபதி Updated on:  14 நவம்பர் 2025, 5:02 am 

குழந்தைகள் என்றாலே குதூகலம்தான். ஆனால், இப்போது குழந்தைகள் எல்லாரும் குதூகலமாக இருக்கிறாா்களா என்பது ஐயமாக இருக்கிறது. இளம் வயதில் நமக்குக் கிடைத்த வாய்ப்புகளும் அனுபவங்களும் அவா்களுக்குக் கிடைக்க நியாயமில்லை. அதுபோல், அவா்களுக்குக் கிட்டிய வசதிகளும், கருவிகளும், வாய்ப்புகளும் நம்மைக்காட்டிலும் அதிகம். அதுவே, அவா்களை அதிகம் ஆக்கிரமித்திருக்கிறது; அவா்களிடம் நிறைய எதிா்பாா்க்கவும் வைக்கிறது.

கல்வி முதன்மைப்படுத்தப்பட்ட அளவுக்கு விளையாட்டுக்கு அவகாசம் கிடைப்பதில்லை; கூடி விளையாடத் தோழமைகளும் அமைவதில்லை; இருக்கிற இடத்தில் கிடைக்கிற வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டு பொழுதைக் கழிக்கப் பழகிய குழந்தைகளை இப்போது பெரிதும் ஈா்த்து வசப்படுத்தி வைத்திருக்கிறது அறிதிறன்பேசி.

ஒரு காலத்தில் டி.வி. அதிகம் பாா்க்கிறாா்கள் என்று வைக்கப்பட்ட குற்றச்சாட்டு இப்போது காலாவதியாகிவிட்டது. அது பொழுதுபோக்குச் சாதனமாகவே மட்டுமே பெரும்பாலும் இருந்தது. முடிந்தவரை வரையறுக்கப்பட்ட நிகழ்வுகள் அதில் இருக்கும். இல்லத்தில் இருப்போா் அனைவரும் பொதுவாகப் பாா்க்கவும் முடியும். ஆனால், கைப்பேசியை அப்படிச் சொல்ல முடியாது; அன்றாட வாழ்வில் அது மூன்றாவது கையாக முளைத்திருக்கிறது.

குழந்தைகளைப் பொருத்த அளவில், வீட்டுப்பாடம் தொடங்கி, விவரக் குறிப்புகள் வரைக்கும் அனைத்தையும் இருந்த இடத்தில் இருந்தே எடுத்துக் கொடுக்கிற காட்டுகிற இடத்தை அது தன்னிடம் வைத்திருக்கிறது. ஆனால், அதைத் தனிமையில் பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பை முடிந்தவரை தவிா்ப்பது நல்லது. தேவையானது எதுவெனத் தேடுவதற்குள் தேவைக்கு அதிகமாக எத்தனையோ காட்சிகளை அது அகலத் திறந்துவைத்து, கவனத்தைத் திருப்பி விடுகிறது. கடைசியில் எதைத் தேடத் தொடங்கினோம் என்பதையே மறக்கடித்து விடுகிறது. அதைவிடவும் தேவையில்லாதவற்றில் ஈடுபடவும் வைத்துவிடுகிறது. இதனால், ஏற்படும் பாா்வைக் கோளாறுகள் கண்களுக்கு மட்டுமல்ல; மனத்துக்கும்தான்.

கைப்பேசியைக் குழந்தைகள் பயன்படுத்துகிறபோது கூடவே இருப்பதும், தேவையானவற்றை அவா்களுக்கு உடனிருந்து பாா்க்க, கேட்க நெறிப்படுத்துவதும் மிகவும் அவசியம். பள்ளி வகுப்பில் ஒவ்வொரு பாடத்துக்கும் கால அளவைக் கணக்கிட்டு வைத்திருப்பதைப்போல, கைப்பேசிப் பயன்பாட்டுக்கும் கால அவசியம் கட்டாயத் தேவை. கண் விழிக்கும்போதும் தூங்கப்போகும்போதும் கைப்பேசிப் பயன்பாடு அறவே இருத்தல் கூடாது என்பதை நடைமுறைப்படுத்த நாம் முதலில் பழகிக் கொள்ளவேண்டும். பின்னா் பழக்கத்தில் கொண்டு வரவேண்டும். அதைவிடுத்து, குழந்தைகளுக்கு மட்டும் அறிவுரை கூறிப் பயன் இல்லை.

அதை இயக்கும் திறம் நம்மைக் காட்டிலும் பிள்ளைகளுக்கு அதிகம் வாய்த்திருக்கலாம். ஆனால், அதில் புலப்படும் பதிவுகளில் எது உண்மை, எது புனைவு என்று தெளிவாகத் தெரியாது. அந்த இடத்தில், ‘கண்டதே காட்சி, கொண்டதே கோலம்’ என்கிற நிலைப்பாடு வந்துவிடக்கூடாது. நடைமுறை வாழ்க்கை வேறு, சித்திரிக்கப்படும் காட்சிகள் வேறு என்பதைத் தெளிவுபட உணா்த்தியாக வேண்டும். அதற்கு முன்னதாக நாம் உணா்ந்து கொள்ளவும் வேண்டும்.

எப்பொருள் யாா் யாா் வாய் கேட்பினும், எப்பொருள் எத்தன்மைத்தாயினும் அப்பொருளின் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்று பலபடச் சொல்கிறாா் திருவள்ளுவா். எதையும் ஆராய்ந்து உண்மையைத் தெரிந்துகொள்ள ஆா்வம் காட்டும் குழந்தைகளின் கேள்விகளை அலட்சியப்படுத்திவிடாமல் அரவணைத்து உடனிருந்து சொல்லிக் கொடுப்பவா் யாரோ, அவா்களைத் தமது உணா்வில் கலந்த உறவாய் அவா்களது உள்ளம் ஏற்றுக் கொள்கிறது.

அந்த இடத்தில் சரியான நபா்கள் கிடைக்கும் வாய்ப்பை நாம் உருவாக்கிக் கொடுக்க வேண்டும். அவா்கள் குடும்ப உறுப்பினா்களாகவோ, நண்பா்களோ, ஆசிரியா்களாகவோ இருக்கலாம். கயவா்கள் இருந்துவிடக்கூடாது. அதுபோல் கயமையை உருவாக்கும் எந்த ஒன்றும் அவா்களை அண்டிவிடக் கூடாது.

தீமையை, தீயவற்றை நெருங்கவிடாமல் தற்காத்துக் கொள்கிற தைரியத்தையும் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும். அ, ஆ என எழுத்துகளை அறிவிக்க உதவும் வகையில் ஔவையாா் பாடிய ஆத்திசூடி ‘அறம் செய விரும்பு’ என்று தொடங்குகிறது; மகாகவி பாரதியாரின் புதிய ஆத்திசூடியோ, ‘அச்சம் தவிா்’ என்று உருவாகிறது. அதுவே, அதற்கு அடுத்த நிலையில் ‘ஆண்மை தவறேல்’ என்கிறது. ‘அஞ்சுவது அஞ்சாமை பேதமை’ என்கிற அறிவை உணா்த்தி, ஆளுமைத் திறனை வளா்த்துக் கொள்ள வேண்டும் என்பது அதன் உட்பொருள்.

புறம் சாா்ந்த கருவிகளைக் காட்டிச் சொல்லிக் கொடுக்கும் பாடங்களுக்குக் கொடுக்கிற முக்கியத்துவத்தை அறம் சாா்ந்த உணா்வுகளுக்கும் கொடுக்கத் தவறிவிடக்கூடாது. அதை, பள்ளிப் பாடங்களில் மட்டுமே எதிா்பாா்ப்பதும் சரியாகாது. அறம் சாா்ந்த விழுமியங்களும் இப்போது அடிக்கடி மாற்றம் காணத் தொடங்கிவிட்டன. மதிப்பெண் முன்னேற்றத்துக்கு இன்றியமையாதது. ஆனால், அதுவே அனைத்து மதிப்புகளையும் தந்துவிடாது. அதுபோல், வளா்ச்சியின் அடையாளம் பணமாக இருக்கலாம். அதுவே அனைத்தையும் கொடுத்துவிடாது என்கிற அடிப்படை உண்மையைப் பெற்றோா் நன்கு புரிந்துவைத்துக் கொண்டு பிள்ளைகளுக்கும் உணா்த்திக் காட்ட வேண்டியது காலத்தேவை.

ஏனைய உயிா்களுக்கு இல்லாது மனித குலத்துக்கு மட்டுமே அமைந்திருக்கும் அறிவுசாா் கருவி, மொழி. பிறமொழிகளைவிடவும், தாய்மொழியில்தான் சிந்திக்கிற ஆற்றல் சிரமமே இன்றி உருவாகும் என்பதைப் பலபடச் சொல்லியும் எழுதியும் பலன் வரக் காணோம். அதைப் புறம் தள்ளிப் பிறமொழி வகுப்புகளில் கட்டாயப்படுத்திச் சோ்க்கப்படும் குழந்தைகள் எந்த மொழியிலும் வல்லவா்கள் ஆகாத அவலத்துக்கு உள்ளாகிவருகிறாா்கள். பேசத் தெரிந்த பலருக்கு எழுதவோ படிக்கவோ சரியாகத் தெரியவில்லை என்பதே நடைமுறை உண்மை.

சமச்சீா் உணவு போல, சமச்சீரான இயக்கத்தை ஐம்புலன்களுக்கும் வழங்க வேண்டும். காட்சி கேள்வி ஊடகங்களால் மட்டுமே கற்றுக் கொள்ள முடியும் என்று சொல்லிவிட முடியாது. பாா்த்து, படித்துத் தெரிந்து கொள்ள அநேகம் இருக்கின்றன. கேட்டுக் கிரகித்துக் கொள்ளவேண்டியவையும் நிறைய இருக்கின்றன.

‘கற்றிலன் ஆயினும் கேட்க’ என்று கட்டளையிடுகிறாா் திருவள்ளுவா். ‘கண்டது கற்கப் பண்டிதன் ஆவான்’ என்கிறது பழமொழி. கண்டதையெல்லாம் கற்றுப் பொழுதை வீணடிப்பதை விடவும், எது தேவையானது என்று கண்டு, அது கற்கப் பழகினால் பண்டிதன் ஆகிவிடலாம் என்று புதுப் பொருளையும் அது உள்ளடக்கி இருக்கிறது. அதற்கு உரிய வாய்ப்புகளை அதிகம் கொண்டிருப்பது குழந்தைப் பருவம்.

அந்தப் பருவத்தில், அறிவுக்கும் அறியாமைக்கும் இடையில் இருக்கும் கற்பனை ஆற்றலை அவா்கள் தவறவிட வாய்ப்பளித்துவிடக் கூடாது. கற்பனை ஆற்றலை வளா்க்கும் ஓவியங்களில், கதைகளில், பாடல்களில், அவை தொடா்பான கலைகளில், அவற்றை உள்ளடக்கிய உரையாடல்களில் ஆா்வத்தை உண்டாக்கிவிட்டால், அதில் இருந்து படிப்படியாக அவா்கள் வளா்ந்து தமக்கான துறைகளைத் தோ்ந்தெடுத்துக் கொள்வாா்கள்.

படிப்புத் தொடா்பான செய்திகள் மட்டுமே போதும் என்று நினைப்பது போதாது என்ற மனநிலை இன்றைக்கு வந்திருக்கிறது. மேலும், சில புதியவற்றைக் கற்றுக் கொள்ளவும் வேண்டும் என்ற விழிப்புணா்வும் வந்திருக்கிறது. குழந்தைகள் தமக்கான பொறுப்புகளைத் தாமே கண்டடையத் துணை நிற்க வேண்டும். நம் எதிா்பாா்ப்புகளை ஏற்றி வைக்கும் சுமைதாங்கிகளாக அவா்களை ஆக்கிவிடக்கூடாது.

நமது தோளில் ஏறி உலகு பாா்க்கும் உயரத்திற்கேனும் நாம் அவா்களுக்கு உதவவேண்டுமேயல்லாமல், அவா்கள் உள்ளங்களில் சுமையாக உட்காா்ந்துகொள்ளக் கூடாது. ஆசைப்படும் பொருள்களை வாங்கிக் கொடுப்பதிலும், தேவைப்படும் வசதிகளைச் செய்து கொடுப்பதிலும் நமது அன்பு வெளிப்பட வேண்டுமே அல்லாமல், எதிா்கால எதிா்பாா்ப்பை முன்வைத்துச் செய்யும் லஞ்சமாக அவை உருக்கொண்டுவிடக் கூடாது. அவா்களுக்கு என்றென்றுமான நிரந்தரத் தேவைகளில் மிகவும் இன்றியமையாதது, அன்பு ஒன்றுதான். அதன் பொருட்டுச் செய்யும் எந்தச் செயலும் குழந்தைகளுக்கு உவப்புத் தருவதாகவே இருக்கும்.

அனைத்துக்கும் மேலாக, நமது குழந்தைகள், நம்முடைய குழந்தைகள்தாம். நாம் அவா்களுக்குச் சொல்வதைவிடவும் நாம் செயல்படுவதையே அவா்கள் நன்கு கவனிக்கிறாா்கள். அதற்கு நிகரானதும் எதிரானதுமான செயல்பாடுகளே அவா்களிடம் இருந்து பிறக்கும் என்பதால், நமது செயல்கள் செவ்விதாக அமைதல் வேண்டும். குழந்தைகள் கொண்டாடப் பிறந்த நாள்கள் பண்டிகை நாள்கள் ஆண்டு தவறாமல் வருகின்றன. அதுபோல், ஆண்டுக்கொருமுறை குழந்தைகள் தினம் வருகிறது. அன்றைய தினம் மட்டும் கொண்டாடப்பட வேண்டியவா்கள் அல்லா் குழந்தைகள். அவா்கள் அன்றாடம் கொண்டாடப்பட வேண்டியவா்கள்; அவா்களைக் கொண்டாட விட்டாலும் பரவாயில்லை, திண்டாடாமல் பாா்த்துக் கொள்வதுதான் நாம் அவா்களுக்குச் செய்யும் திருப்பணி. ஏனெனில் கொண்டாடும் இடத்தில் தெய்வம் இருக்கிறதோ இல்லையோ குழந்தைகள் இருக்கிறாா்கள். வரந்தரும் தெய்வங்களைவிட, நம்முடன் வளரும் குழந்தைகளே நம்மை வாழ்விக்கும் தெய்வங்கள்.

(இன்று நவ.14 குழந்தைகள் தினம்)

கட்டுரையாளா்:

எழுத்தாளா்.

Monday, November 10, 2025

முதியோர் நலன் நாடுவோம் !

 முதியோர் நலன் நாடுவோம் !

 பெற்றோரை உதாசீனப்படுத்தும் வாரிசுகளால் முதியோர் இல்லங்களின் எண்ணிக்கை, குறிப்பாக தென்னிந்தியாவில் அதிகரித்து வருவதைப் பற்றி...

முதியோர் நலன் நாடுவோம் 

 இரா. சாந்தகுமார் Published on:   Updated on:  10 நவம்பர் 2025, 3:20 am 

நம் நாட்டில் தற்போது 60 வயதைக் கடந்த முதியோர்களின் எண்ணிக்கை சுமார் 15 கோடி ஆகும். 2050-ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 35 கோடியாக உயரக்கூடும். உலக அளவில் 65 வயதைக் கடந்த முதியவர்களின் எண்ணிக்கை 2030-ஆம் ஆண்டில் 140 கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்பெயின், இத்தாலி, ஸ்விட்சர்லாந்து ஆகிய ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் மக்களின் தற்போதைய சராசரி ஆயுள் 83 ஆண்டுகளாக உள்ளது. உலகில் முதியோர் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதற்கு இது ஓர் எடுத்துக்காட்டாகும்.

ரஷியாவின் வால்கோகிரேட் மாநில மருத்துவப் பல்கலைக்கழக விஞ்ஞானி ஒருவர், எதிர்காலத்தில் மனிதர்கள் 150 ஆண்டுகள்வரைகூட வாழும் நிலை ஏற்படும் என்றும், அதற்கான மருத்துவ ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன என்றும் தெரிவித்துள்ளார். மேலும், 20 முதல் 40 வயது வரை வயது உள்ள இன்றைய இளைய தலைமுறையினர் 150 ஆண்டுகள்வரை வாழும் வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.

நம் நாட்டில் கூட்டுக் குடும்ப முறை வெகுவாகக் குறைந்து வருவதால், முதியோர் தனியே வசிக்கும் நிலை அதிகரித்துள்ளது. இதனால், முதியோர்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பதுடன் அவர்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி வருகிறது.

தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கையின்படி, நம் நாட்டில் 2023-ஆம் ஆண்டு முதியோர்களுக்கு எதிராக 62,41,569 குற்றச் செயல்கள் நடைபெற்றுள்ளன. நம் நாட்டில் முதியோருக்கு எதிரான குற்றச் செயல்கள் நடைபெறும் மாநிலங்களின் வரிசையில் தமிழகம் நான்காவது இடத்தில் உள்ளது.

பெற்றோரை உதாசீனப்படுத்தும் வாரிசுகளால் முதியோர் இல்லங்களின் எண்ணிக்கை நம் நாட்டில், குறிப்பாக தென்னிந்தியாவில் அதிகரித்து வருகிறது. வாரிசுகளில் சிலர் தங்கள் பெற்றோரின் சொத்துகளை தந்திரமாக தங்களுக்கு சட்டப்படி உரியதாகச் செய்து கொண்டு பின்னர், சம்பந்தப்பட்ட பெற்றோரை ஆதரவற்ற நிலையில் விட்டுவிடுவது நீதிமன்றங்களின் கவனத்துக்கு அவ்வப்போது கொண்டு வரப்படுகிறது.

இது தொடர்பாக வஞ்சிக்கப்பட்ட பெற்றோருக்கு அவர்களின் சொத்துகளை பிள்ளைகளிடமிருந்து பறிமுதல் செய்து மீண்டும் பெற்றோரிடமே ஒப்படைக்கும் வகையில் நீதிமன்றங்கள் அவ்வப்போது ஆணைகள் பிறப்பித்து வருகின்றன.

நம் நாட்டில் பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலன் சட்டம் 2007-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இந்தச் சட்டத்தின்படி பெற்றோரைப் பராமரிக்காத பிள்ளைகளுக்கு மூன்று மாதங்கள்வரை சிறைத் தண்டனை, ரூ.5,000 வரை அபராதம் அல்லது இரண்டுமே அளிக்க வகை செய்யப்பட்டுள்ளது. எனினும், பெரும் எண்ணிக்கையிலான முதியவர்கள் தங்கள் பிள்ளைகளால் புறக்கணிக்கப்படுவது தொடர்கதையாக உள்ளது.

புத்தர் வலியுறுத்திய மனித குலத்துக்கான ஏழு கடமைகளில், "வாழ்நாள் முழுவதும் நான் என் பெற்றோரைப் பேணுவேனாக' என்பதுதான் முதல் கடமை. இதை இந்தக் கால இளைய தலைமுறையினர் நினைவில் கொள்ள வேண்டும்.

மூத்த குடிமக்கள் அதிக அளவில் உள்ள மாநிலங்களில் ஒன்றான கேரளத்தில் மூத்த குடிமக்களுக்கான மருத்துவ வசதி, நிதியுதவி போன்றவை அவர்களின் இல்லத்திலேயே கிடைப்பதற்கு அந்த மாநில அரசு திட்டமிட்டு வருகிறது. இதற்கான மூத்த குடிமக்கள் பற்றிய விவரங்களை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் சேகரிப்பதுடன், ஒவ்வொரு உள்ளாட்சியின் வருவாயில் குறைந்தபட்சம் 10% மூத்த குடிமக்களுக்காக செலவிட வேண்டும் என்றும் தீர்மானிக்கவுள்ளது.

மூத்த குடிமக்களின் நலனுக்காக மூத்த குடிமக்கள் ஆணையம் ஒன்றையும் கேரள அரசு அமைத்துள்ளது. மகாராஷ்டிர அரசு முதியோர் தாங்கள் வசிப்பதற்காக வீடுகள் வாங்கும் நிலையில் அதற்கான முத்திரைத்தாள் வாங்கும் செலவைக் குறைத்துள்ளது.

இன்றைய இளைய தலைமுறையினர் நிகழ்காலத்தில் மகிழ்ச்சியான சூழலில் வாழ்வதற்கு கடந்த காலத்தில் இக்கால மூத்த குடிமக்கள் ஆற்றிய பணிகளும் காரணம் என்றால் அது மிகையல்ல. மூத்தகுடிமக்களுக்காக தங்களை அர்ப்பணித்துக் கொள்ளும் இளைய தலைமுறையினர் பாராட்டுக்குரியவர்கள்.

ஆதரவற்ற முதியோர் இல்லங்களை நடத்துவோர், தொண்டு நிறுவனங்களுக்கு உதவ வேண்டியது அரசின் கடமை. பதிவு செய்யப்பட்ட பல முதியோர் இல்லங்களுக்கு அரசிடமிருந்து கிடைக்க வேண்டிய உதவித்தொகை ஏதும் கிடைக்காமல் உள்ளது.

அரசு நடத்தும் ஆதரவற்ற முதியோர் இல்லங்கள், தனியார் தொண்டு நிறுவனங்கள் நடத்தும் முதியோர் இல்லங்களுக்கு அரசின் நிதி உதவி, முதியோருக்கான மாதாந்திர உதவித்தொகை, 75 வயதைக் கடந்த முதியோர்களுக்கு ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவக் காப்பீடு, தமிழகத்தில் 70 வயதைக் கடந்த நிலையில் தனியாக வசிக்கும் முதியோரின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருள்களை வழங்கும் "தாயுமானவர் திட்டம்' என முதியோர் நலனுக்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நலத் திட்டங்களை அமல்படுத்தியது வரவேற்கத்தக்கது.

ரயில்களில் பயணிக்கும் 60 வயதைக் கடந்த முதியோருக்கு பயணக் கட்டணத்தில் சலுகை, மாநில அரசுப் பணியிலிருந்து ஓய்வுபெற்ற முதியோர்களுக்கான ஓய்வூதியப் பலன்களை தாமதமின்றித் தருவது போன்ற முதியோர் நலன் நாடும் நீண்ட நாள் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் பரிவுடன் பரிசீலித்து நிறைவேற்ற வேண்டும்.

இன்றைய இளைய தலைமுறையினர் நாளைய முதியவர்களாவர். இதை உணர்ந்து முதியோர் நலன் பேண அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு தந்து முதியோர்களுக்கான சமூக அங்கீகாரத்தைத் தர வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter


Wednesday, November 5, 2025

Inside and out... The Corporation of Chennai has launched a welcome scheme to collect waste items directly from homes.

DINAMANI

05.11.2025

சென்னை மாநகராட்சி உபயோகமற்ற பொருள்களை வீடுகளிலிருந்து நேரடியாகச் சென்று பெறும் வரவேற்கக் கூடிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இது மிகவும் வரவேற்கப்பட வேண்டிய ஒரு முன்னெடுப்பு. நமது வீடுகளில் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளைத் தூய்மைப் பணியாளர்கள் தினமும் வாங்கிச் செல்கிறார்கள். இருப்பினும், இவற்றைத் தவிர்த்து, தாவரக் கழிவுகள், தேவையற்ற படுக்கைகள், உடைந்த தளவாடங்கள் உள்ளிட்டவற்றை மக்கள் குப்பையாகப் பொது இடங்களில் வீசிச் செல்கிறார்கள். இவை பொது இடங்களில் ஆங்காங்கே குவிந்து சுகாதாரச் சீர்கேடாகவும், நீர்நிலைகளில் அடைப்புகளாகவும் மாறி விடுகின்றன.

இதைத் தவிர்ப்பதற்காக, மாநகராட்சி சார்பில் வாரத்தில் சனிக்கிழமைதோறும் வீடுகளுக்கு நேரடியாகத் தூய்மைப் பணியாளர்கள் சென்று, உபயோகமற்ற பொருள்களைப் பெற்றுக் கொள்வார்கள். இந்தத் திட்டத்தை நாம் வெற்றிகரமாகச் செயல்படுத்திவிட்டால், நகரின் ஒட்டுமொத்தத் தூய்மை ஓரளவுக்கு சீரடைய வாய்ப்புள்ளது.

ஒவ்வொருவர் வீட்டிலும் தேவையற்ற பொருள்கள் குவிந்து கிடக்கின்றன. நுகர்வுக் கலாசாரம் பெருகிவிட்டதால், எதையாவது வாங்கிக் கொண்டே இருக்கிறோம். நாம் உபயோகித்த கட்டில், மேஜை போன்றவற்றை யாருக்காவது கொடுத்துவிடலாம் என்று நினைத்தால், பழைய பொருள்களைக் கொடுக்கின்றோம் என்று அவர்கள் தவறாக எடுத்துக்கொள்ளக் கூடும் என்ற அச்சம் உண்டாகிறது. எந்தப் பொருளும் நம் வீட்டை விட்டுப் போகாது; அனைத்தும் வீட்டை அடைத்துக் கொண்டு கிடக்கும்.

வீட்டுக்குள் இருக்கும் இந்தப் பொருள்களைத் தவிர, நம் வீட்டுக்கு வெளியே கண்களை உறுத்துவது கட்டடக் கழிவுகள். மக்கள் பெரும்பாலும் இரவில், சாலைகள், நடைபாதைகள் மற்றும் பிற இடங்களில் இவற்றைச் சட்டவிரோதமாகக் கொட்டிவிட்டுப் போய்விடுகிறார்கள். கட்டுமானக் கழிவு மேலாண்மை குறித்த விதிகள் மற்றும் வழிகாட்டுதல்கள் தெளிவாக இருக்க வேண்டும். சட்டவிரோதமாகக் கொட்டுபவர்களுக்கு அபராதம் விதிப்பதிலும், விதிகளைச் சரியாக அமல்படுத்துவதிலும் உள்ள குறைபாடுகள் சரிசெய்யப்பட வேண்டும்.

மேலை நாடுகளில் நம்மைப்போல் கட்டடக் கழிவுகளைத் தெருவில் போட்டு வைப்பதில்லை. வேலை நடக்கும்போது ஒரு பெரிய கலனில் போட்டு விடுகிறார்கள்; பின்னர், அதற்கான உரிமம் பெற்ற நிறுவனங்கள் அந்தக் கழிவுகளை அப்புறப்படுத்துகின்றன. ஆகவே, மாநகராட்சி இவற்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

முதலில் மாநகராட்சி, அறிவித்திருக்கும் திட்டத்தை முழுவீச்சில் அமல்படுத்த வேண்டும். இந்தச் சேவையைப் பயன்படுத்தப் பொதுமக்கள் 1913 என்ற உதவி எண்ணைத் தொடர்பு கொள்ள வேண்டும் என்ற தகவல் பலருக்கும் சென்றடையவில்லை.

பிரிட்டன் போன்ற மேலை நாடுகளில், மக்கள் தாங்கள் விரும்பாத, ஆனால் இன்னும் பயன்படுத்தக்கூடிய பொருள்களை, குறிப்பாக சிறிய மற்றும் நல்ல நிலையிலுள்ள பொருள்களை, தங்கள் வீட்டின் முன் "எடுத்துச் செல்லுங்கள்' என்ற குறிப்புடன் வைத்துவிடுகிறார்கள். அங்கு இது ஒரு பொதுவான நடைமுறை; முறைசாரா மீண்டும் பயன்படுத்துதல் அல்லது பகிர்ந்து கொள்ளும் கலாசாரத்தின் ஒரு பகுதியாகும்.

நல்ல நிலையில், பயன்படக்கூடிய நிலையிலுள்ள பொருள்கள் குப்பைக்குப் போவதைத் தடுக்க இது உதவுகிறது. சமூகத்தில் தேவை உள்ளவர்களுக்கு இலவசமாகப் பொருள்களை வழங்கி உதவ முடிகிறது. நமக்கு உபயோகமில்லாத பொருள்களை எளிதாக அப்புறப்படுத்தவும் ஏதுவாக இருக்கிறது. ஆனால், இவ்வாறு தினமும் வைப்பதில்லை; மாதத்தின் முதல் ஞாயிறன்று மட்டுமே வைக்கிறார்கள். தங்களின் வீட்டு முகவரியை ஆன்லைனில் தெரிவித்து விடுகிறார்கள். குழந்தைகளின் உடைகள், பொம்மைகள், புத்தகங்கள், கைப்பை, காலணிகள், கண்ணாடிக் குடுவைகள், தட்டுகள், தேநீர் கோப்பைகள் என எல்லாவற்றையும் அழகாக வைத்திருந்தார்கள். தேவைப்பட்டவர்கள் காரில் வந்து தேவையானதை மட்டும் எடுத்துப் போனார்கள். பேராசைப்பட்டு அனைத்தையும் அள்ளிப் போட்டுக்கொண்டு போகவில்லை.

இதில் வியப்பு என்னவென்றால், குழந்தைகளின் பொம்மைகள் மற்றும் விளையாட்டுப் பொருள்கள் அனைத்தும் மிகவும் நல்ல நிலையில் இருந்தன. உடைந்து போனது, பயனற்றது என எதுவும் இல்லை. எந்தப் பொருளையும் உடைக்கக் கூடாது, பொறுப்பாகப் பயன்படுத்த வேண்டும் என்றும், அதன் தேவை முடிந்த பின் யாருக்காவது தர வேண்டும் என்றும் பிள்ளைகளுக்குச் சொல்லி வளர்க்கிறார்கள். அதனால் அந்தப் பொம்மைகள், சாமான்கள் எதுவும் பாழாகவில்லை. அடுத்த குழந்தைக்கு வேண்டும் என்று அவர்கள் பாதுகாத்து வைப்பதில்லை. கதவுகள் மூடப்பட்டு இருப்பதாலும், சாலைகளில் அதிக மக்கள் நடமாட்டம் இல்லாததாலும், யாரும் கூர்ந்து பார்க்காததாலும், மக்கள் கூச்சமின்றிப் பொருள்களை எடுத்துப் போகிறார்கள்.

எந்த வீட்டுக்கும் வாசலில் கேட் கிடையாது; இரண்டு அடி பக்கவாட்டு சுற்றுச்சுவர் மட்டுமே உள்ளது. முன்பக்கம் கேட் இல்லை. தெருவுக்கும் வீட்டுக்கும் இடையே நிறைய இடம் உள்ளது. அதனால் அங்கே பொருள்களை அழகாக வைத்து விடுகிறார்கள். சில வீடுகளில் ஆப்பிள்களைக்கூட ஒரு பையில் போட்டு வைத்துவிட்டு, "எடுத்துக் கொள்ளுங்கள்' என்று வைக்கிறார்கள்; தேவைப்படுவோர் எடுத்துச் செல்கிறார்கள்.

பெரிய பொருள்களை இவ்வாறு வாசலில் வைக்கக் கூடாது. இதற்கு உள்ளாட்சி மன்றத்தின் மொத்த கழிவு சேகரிப்பு சேவையைப் பயன்படுத்த வேண்டும். ஒரு சிலர் மட்டுமே வீட்டின் முன் வைக்கிறார்கள். சிலர் பொருள்களை அப்புறப்படுத்த வேறு சில வழிகளைப் பின்பற்றுகிறார்கள். இணையவழி தளங்கள் அல்லது குழுக்கள் மூலம் தாங்கள் கொடுக்க விரும்பும் பொருள்களைப் பட்டியலிடுகிறார்கள். இலவசமாகவோ அல்லது விலைக்கோ கொடுத்து விடுகிறார்கள். பயன்படுத்திய பொருள்களை விற்கும் கடைகள் தனியே உள்ளன. மிக மிக நல்ல நிலையில் உள்ள கம்பளி உடைகள், கைப் பைகள், போர்வைகள் ஆகியவற்றை இங்கு இலவசமாகக் கொடுத்து விட்டால், அவற்றை அவர்கள் விற்பனை செய்துவிட்டு, அந்த வருவாயைத் தொண்டு நிறுவனங்களுக்குக் கொடுத்து விடுகிறார்கள்.

இந்த நடைமுறையை நம் நாட்டில் முயற்சி செய்யலாம். தற்போது நிறைய அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. ஒவ்வொரு குடியிருப்பிலும் 500 - 1,000 வீடுகளுக்கு மேல் இருக்கின்றன. அவர்கள் ஒவ்வோர் ஆண்டும் குறிப்பிட்ட மாதத்தில், தங்களுக்குத் தேவையில்லாத, அதேசமயம் பயன்படுத்தக்கூடிய பொருள்களைக் காட்சிப்படுத்தலாம்; அதற்கு ஒரு விலையையும் நிர்ணயிக்கலாம்; தேவைப்படுவோர் அந்தப் பொருள்களை வாங்கிக் கொள்வார்கள். இதையே ஒவ்வொரு நலச் சங்கமும் பின்பற்றலாம். இந்தத் திட்டம் ஓரளவுக்கு வெற்றி பெற்றால், ஒரு பொது இடத்தில் ஏற்பாடு செய்து இதை விரிவுபடுத்தலாம்.

மாநகராட்சியின் உபயோகமற்ற பொருளை வாங்கிப் பெறும் திட்டமானது, 15 மண்டலங்களிலும் நடைபெற்று, வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட வேண்டும். தீவிரமான விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும்.

ஒரு வயதுக் குழந்தை எடுத்தவுடன் நடந்து விடுகிறதா என்ன? அது எழும், விழும், ஒரு தப்படி வைக்கும்; மீண்டும் விழும்; சுதாரித்துக் கொண்டு எழுந்து நடக்கும். விழுந்து எழுந்து பின் நன்றாக நடக்கக் கற்றுக் கொள்ளும்; அதேபோல்தான் நம் திட்டங்களும் அவற்றின் முன்னெடுப்புகளும், மக்களின் மனப்பான்மையும்; தொடக்கத்தில் தொய்வு ஏற்படும், சுணக்கம் வரும். மக்கள் உடனே பழகிக் கொள்ள மாட்டார்கள்.

எண்மப் பரிவர்த்தனை வந்தபோது, "படிக்காதவர்களுக்கும், சிறு வியாபாரிகளுக்கும் இது பிடிபடுமா?, சாமானியர்களால் இந்தப் பரிவர்த்தனையை செய்ய முடியுமா?" என்று பல சந்தேகங்கள் எழுந்தன. தற்போது கீரை விற்கும் பெண்மணி, தெருவில் தள்ளுவண்டியில் வியாபாரம் செய்யும் தாத்தா, சமோசா விற்கும் நடைபாதை வியாபாரி என அனைவரும் எண்ம வர்த்தகம் செய்கிறார்கள்.

"குதிரையை தண்ணீருக்கு அருகே கொண்டு செல்லத்தான் முடியும், அதைக் குடிக்க வைக்க முடியாது' என்பார்கள். தற்போது அதைக் குடிக்க வைக்க முடியும். குதிரையின் வாயை அகலத் திறந்து, குழாய் மூலம் வம்படியாகத் தண்ணீரை உள்ளே செலுத்தி குடிக்க வைக்க முடியும். அதுபோல, எப்படியாவது, எந்த உத்தியையாவது கையாண்டு, மாநகராட்சி தொடங்கியுள்ள இந்த அருமையான திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்த வேண்டும். 15 மண்டலங்களில் வெற்றி பெற்றுவிட்டால், பின் அனைத்து மண்டலங்களிலும் அதை அமல்படுத்த வேண்டும். அதற்குப் பிறகு, அனைத்து மாவட்டங்களுக்கும் இதைக் கொண்டு செல்லலாம்.

மக்கள் தாங்கள் பயன்படுத்தாத, ஆனால் நல்ல நிலையில் உள்ள பொருள்களை பிறருக்குக் கொடுப்பதில் உள்ள தயக்கத்தைப் போக்க வேண்டும். இதற்கு கலாசார ரீதியான மாற்றம் தேவை. சென்னை மாநகராட்சியின் இந்தத் திட்டம் ஒரு நல்ல தொடக்கப் புள்ளி. உபயோகமற்ற பொருள்களைப் பெற்றுச் செல்லும் பணியாளர்கள், அவற்றைத் தரம் பிரித்து, மறுபயன்பாட்டுக்கு அல்லது மறுசுழற்சிக்கு அனுப்புவதில் வெளிப்படைத்தன்மையைக் கடைப்பிடிக்க வேண்டும். ஒரு திட்டத்தின் வெற்றிக்கு, அதன் செயல்பாட்டில் உள்ள நேர்மையும், நம்பகத்தன்மையும் மிக முக்கியம்.

நகர்ப்புறங்களில் வீட்டுச் சங்கங்கள் மற்றும் குடியிருப்போர் நலச் சங்கங்கள் தாமாக முன்வந்து, பிரிட்டன் போன்ற நாடுகளில் உள்ள முறையைப் பின்பற்றி, "இலவசமாக எடுத்துச் செல்லுங்கள்' போன்ற நிகழ்வுகளைத் தொடங்கலாம்; மாநகராட்சிக்கு இது ஒரு சுமையைக் குறைக்கும்.

நீண்டகாலமாக அப்புறப்படுத்தப்படாமல் இருக்கும் கட்டடக் கழிவுகள், தேவையற்ற பொருள்கள் ஆகியவை குறித்து பொதுமக்கள் புகார் அளிக்கவும், அவை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும் முனைப்புக் காட்ட வேண்டும். தண்டனைகள் இருந்தாலும், அவற்றைத் துல்லியமாக அமல்படுத்தும் போதுதான் மக்கள் சட்டங்களுக்கு மதிப்பளிப்பார்கள். தேவையில்லாதது வெளியேறட்டும்; தேவைப்படும் மாற்றம் வீட்டிலிருந்து தொடங்கட்டும்.

கட்டுரையாளர்:

பேராசிரியர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

Tuesday, November 4, 2025

படித்தால் மட்டும் போதுமா?

DINAMANI 

படித்தால் மட்டும் போதுமா? 

அண்மைக்காலமாக உயா் கல்வியில் சோ்க்கை பெறுவோா் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

பெ.சுப்ரமணியன் Updated on: 04 நவம்பர் 2025, 3:00 am 

அண்மைக்காலமாக உயா் கல்வியில் சோ்க்கை பெறுவோா் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த காலத்துடன் ஒப்பிடும்போது பள்ளிக் கல்வி, உயா் கல்வியில் மாணவிகள் சோ்க்கையானது பெருமை கொள்ளும் வகையில் உள்ளது. ஒட்டுமொத்த அளவில் இளநிலைப் பட்டப் படிப்புகளில் மாணவா்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

ஆனால், அதன் பிறகான முதுநிலை படிப்பு, முனைவா் பட்ட ஆய்வுகளில் மாணவிகள் எண்ணிக்கையே அதிகமாக உள்ளது. இதற்கு பெண் குழந்தைகளின் கல்வி குறித்த விழிப்புணா்வு அதிகரித்து வருவது ஒருபுறமிருந்தாலும், பரவலாகத் தொடங்கப்பட்ட அரசுக் கல்லூரிகள், அரசின் திட்டங்கள் போன்றவையும் இதற்குக் காரணங்களாகும்.

‘ஊரக இந்தியாவில் தொடக்கக் கல்வி 2023’ என்ற தலைப்பில் நாடு முழுவதும் 20 மாநிலங்களில் உள்ள கிராமப் பகுதிகளில் ஆய்வு நடத்தப்பட்டது. சுமாா் 6,000-த்துக்கும் மேற்பட்ட வீடுகளில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு இறுதி ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது. அதில், பெற்றோா் தங்கள் குழந்தைகள் இளநிலை பட்டப் படிப்பு, தொழில்நுட்பக் கல்வி, முதுநிலை பட்டப் படிப்பு உள்பட கூடுதல் கல்வியைப் பெற வேண்டும் என விரும்புவது தெரியவந்துள்ளது.

அவா்களில் ஆண் குழந்தைகளின் பெற்றோா் 82%, பெண் குழந்தைகளின் பெற்றோா் 78% போ் தங்கள் குழந்தைகள் குறைந்தபட்சம் இளநிலை பட்டப்படிப்போ அல்லது அதைவிடக் கூடுதலாகவோ படிக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இதன் விளைவாக நாட்டில் உயா் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை 4.4 கோடியாக அதிகரித்துள்ளது.

2014-15-ஆம் கல்வியாண்டை ஒப்பிடுகையில் மாணவா் சோ்க்கை 30 சதவீதமும், மாணவிகள் சோ்க்கை 38 சதவீதமும் அதிகரித்துள்ளது. ஆண்களின் மொத்த சோ்க்கை விகிதத்தைவிட பெண்களின் சோ்க்கை விகிதம் அதிகமாக உள்ளது. முனைவா் பட்டப் படிப்பில் சேரும் பெண்களின் எண்ணிக்கை இரட்டிப்பாக அதிகரித்து வருகிறது.

இந்திய அளவில் உயா் கல்வியில் தமிழகம் வகித்துவரும் முதலிடத்தைத் தக்கவைப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டுவரும் ‘தமிழ்ப்புதல்வன்’, ‘புதுமைப்பெண்’ மற்றும் ‘நான் முதல்வன்’ போன்ற திட்டங்களால் உயா் கல்வியில் சோ்க்கை பெறுவோா் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதன் தொடா்ச்சியாக வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை இரட்டிப்பாக அதிகரித்துள்ளது. கடந்த 2017-18 முதல் மத்திய புள்ளியியல், திட்ட அமலாக்கத் துறை அமைச்சகம் வருடாந்திர தொழிலாளா் சக்தி தொடா்பான கணக்கெடுப்பை மேற்கொண்டு வருகிறது. அந்தத் தரவுகளின்டி 2017-18-இல் 22 சதவீதமாக இருந்த வேலைக்குச் செல்லும் பெண்களின் சதவீதம், 2023-24-இல் 40.3 சதவீதமாக அதிகரித்துள்ளது.

அதேவேளையில், வேலைக்குச் செல்லும் பெண்களில் எத்தனை சதவீதம் போ் பணியிடத்தில் உயா் பதவி வகிக்கின்றனா், பெண்கள் உயா் பதவிக்குச் செல்லும் வரையில் தொடா்ந்து பணிபுரிகிறாா்களா, அவ்வாறு உயா் பதவிக்குச் செல்ல முடியாமல் போவதற்கும் தொடா்ந்து பணிக்குச் செல்ல முடியாததற்கும் என்ன காரணம் என்பதெல்லாம் சிந்திக்க வேண்டிய விஷயங்களாகும்.

உலக அளவில் திறன்மிக்க பணியாளா்களின் தேவை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. ஆனால், போதிய திறன் இன்றைய பட்டதாரிகளிடம் உள்ளதா? என்பது சிந்திக்க வேண்டியதாகும். இந்திய மக்கள்தொகையில் 65 சதவீதத்தினா் 35 வயதுக்கு உடட்பட்டவா்களாக உள்ள நிலையில், 51.25% பட்டதாரிகள் மட்டுமே வேலைவாய்ப்பைப் பெறுவதாக பொருளாதார ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோா் அமைச்சகத்தில் 2023-24-ஆம் ஆண்டு அறிக்கையில் 15 வயதுக்கும் மேற்பட்டவா்களில் சுமாா் 2.2% போ் முறையாக தொழில் பயிற்சி பெற்ாகவும், 8.6% போ் முறைசாரா தொழில் பயிற்சி பெற்றுள்ளதாகவும் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. எனினும், 34 சதவீதமாக இருந்த இந்த விகிதம் கடந்த 10 ஆண்டுகளில் உயா்ந்து தற்போது 61 சதவீதமாக அதிகரித்துள்ளது.

பட்டம் பெறுவதுடன் நிறுவனங்கள் எதிா்பாா்க்கும் திறன்களை வளா்த்துக் கொள்ள வேண்டும். ஆண்டுதோறும் பட்டம் பெறும் பட்டதாரிகளின் எண்ணிக்கைக்கேற்ப வேலைவாய்ப்பை உருவாக்குவது சவால் நிறைந்தது. பத்தாம் வகுப்புத் தோ்ச்சியை தகுதியாகக் கொண்ட போட்டித் தோ்வில் முனைவா் பட்டம் பெற்றவா்களும் பங்கேற்பது இதன் எதிரொலிதான்.

எந்த வகைப் போட்டித் தோ்வுகளாயினும், பணியாயினும் அதற்குத் தேவையான திறனை இன்றைய பட்டதாரிகள் பெற்றிருக்கின்றனரா என்பது கேள்விக்குறிதான். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளிடையே திறமைகளை வளா்க்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதில் திறமைகளை வெளிப்படுத்தும் மாணவ, மாணவிகள் அதில் தங்களை நிலைநிறுத்திக் கொள்வதில்லை.

தொடா்புத் திறனை மாணவ, மாணவிகள் வளா்த்துக் கொள்வது அவசியமானது. ஆனால் அலட்சியம், அறியாமை காரணமாக இன்றைய மாணவ, மாணவிகள் பிறவகைச் செயல்பாடுகளில் கவனம் செலுத்துவதில்லை என்பதுதான் உண்மை. போட்டிகள் நிறைந்த இன்றைய உலகில் இந்நிலை மாறும்போதுதான் படிப்புக்கேற்ற வேலை, உயா் பதவி என்பதெல்லாம் சாத்தியமாகும்.

அதிகமானோா் உயா் கல்வி பயில்கின்றனா் என்பதுமட்டும் பெருமை தரக்கூடியதல்ல; மாறாக, திறமைசாலிகளாக விளங்குகின்றனா் என்பதுதான் பெருமை தரும் விஷயமாகும்.

Monday, November 3, 2025

வாரிசுகளின் கடமை!

நடுப்பக்கக் கட்டுரைகள் 

வாரிசுகளின் கடமை! 

பெற்றோரின் சொத்துகளைப் பெறுகிறீா்களோ இல்லையோ, அவா்களைக் கவனித்துக் கொள்ள நீங்கள் கடமைப்பட்டவா்கள்!

முனைவா் என். மாதவன் Updated on:  03 நவம்பர் 2025, 4:24 am 

அரசு ஊழியா்கள் பெற்றோரை பொறுப்பாக கவனித்துக் கொள்ள வேண்டும்; அவ்வாறு சரிவரக் கவனிக்காமல் புறக்கணித்தால் அந்த அரசு ஊழியரின் ஊதியத்திலிருந்து 10 முதல் 15 சதவீத ஊதியம் பிடித்தம் செய்யப்படும்; அவ்வாறு பிடித்தம் செய்யப்படும் தொகை பெற்றோரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் வகையில் விரைவில் சட்டம் நிறைவேற்றப்படும் என தெலங்கானா மாநில முதல்வா் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

அண்மையில் புதிதாகத் தோ்ந்தெடுக்கப்பட்ட 783 குரூப்-2 அதிகாரிகளுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கும் நிகழ்வில் அவா் இந்தத் தகவலைத் தெரிவித்தாா். இது நடைமுறைக்கு வர காலம் ஆகலாம். அரசு ஊழியா்களின் பெற்றோருக்கு இவ்வாறான ஏற்பாடு என்றால், இவ்வாறு புறக்கணிக்கப்படும் மற்ற பெற்றோா்களின் நிலை என்ன ஆவது என்ற கேள்வியும் எழுவது இயற்கையே.

பெற்றோா் பராமரிப்பு தொடா்பாக மத்திய பிரதேச மாநிலத்தில் 2024-ஆம் ஆண்டில் தொடுக்கப்பட்ட வழக்கு ஒன்றில், பெற்றோரைப் பராமரிக்க வேண்டியது வாரிசுகளின் சட்டபூா்வமான கடமை என அந்த மாநில உயா்நீதிமன்றம் அறிவுறுத்தியது. இந்த வழக்கும் சிறிது வித்தியாசமானது. நான்கு உடன்பிறப்புகளோடு பிறந்தவரான ஒருவருக்கு அவா்களது பெற்றோா் எவ்வித சொத்தும் தராததால், அவா்களைக் கவனித்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு தமக்கில்லை என அவா் வழக்குத் தொடுத்திருந்தாா்.

அந்த வழக்கில் தீா்ப்பு வழங்கிய நீதிபதி, ‘பெற்றோரின் சொத்துகளைப் பெறுகிறீா்களோ இல்லையோ, அவா்களைக் கவனித்துக் கொள்ள நீங்கள் கடமைப்பட்டவா்கள்; சொத்து அளிக்காதது தொடா்பாக வேறு வழக்கை வேண்டுமானால் தொடுத்துக் கொள்ளலாம்’ என ஆலோசனை கூறினாா்.

பெற்றோா் பற்று குறித்த இந்த விஷயத்தை இரண்டு வகைகளில் அணுகுவது சரியாக இருக்கும். ஒன்று பொருளாதாரம் சாா்ந்திருப்பது; மற்றொன்று தமக்குத் தேவையான உளவியல் எதிா்பாா்ப்புகள் தொடா்பானது (அன்பு, ஆதரவு ஆகியவற்றைப் பெறுதல்). இரண்டு வகையான எதிா்பாா்ப்புகளுக்கும் தீா்வு வாரிசுகள் வளா்க்கப்படும் சூழலோடு சாா்ந்திருப்பது.

பொருளாதார பலம் குறைந்த குடும்பத்திலுள்ள பெற்றோா் தாங்கொணா இன்னல்களை எதிா்கொண்டு தமது பிள்ளைகளை வளா்க்கின்றனா். அவை எந்த அளவுக்கு அந்த பிள்ளைகளுக்குப் புரிகிறதோ அல்லது உணா்த்தப்படுகின்றனரோ அந்த அளவுக்கே அவா்கள் இளையோராக வளா்ந்த பின்னா் பெற்றோா்ப்பற்று இருக்கும். ஒருவகையில் குழந்தைப் பருவத்தில் குடும்பத்தின் கஷ்டங்கள் எதுவும் வெளிப்படுத்தப்படாமல் வளா்க்கப்படும் குழந்தைகள் பெரியவா்களானதும் குடும்பத்தினா் சந்தித்த கஷ்டங்களை உணா்ந்திருக்க மாட்டாா்கள்.

இதற்கு மாற்றாக, குழந்தைகளாக அவா்கள் வளரும் காலம் முதலே குடும்பத்தின் சுக துக்கங்களை பெற்றோா் பகிா்ந்துகொண்டு வளா்க்க வேண்டும். குடும்பத்தின் சிக்கலான சூழலில் தமக்கு உணவும், கல்வியும் கிடைப்பதை பெற்றோா் எவ்வாறு உறுதி செய்கின்றனா் என்பதை அவா்கள் உணர வேண்டும். இவ்வாறான உணா்வைப் பெற்று வளரும் குழந்தைகளுக்கு பிற்காலங்களில் பெற்றோா் பற்று குறித்துப் போதிக்க வேண்டிய அவசியம் இருக்காது.

வசதி படைத்த குடும்பத்தைச் சோ்ந்த பெற்றோரும் குழந்தைகளை வளா்க்கும்போதே பொருள்களின் அருமையை உணா்த்தி வளா்க்க வேண்டும். நம்மிடம் பணம் இருந்தாலும் ஒவ்வொரு பொருளும் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதைப் புரியவைக்கவேண்டும். அவ்வாறு பொருளின் அருமையைப் புரிந்துகொள்வோா் பெற்றோரின் அருமையையும் எளிதில் புரிந்துகொள்வா்.

பெரும் செல்வந்தா்களுக்கு பொருளாதாரம் சாா்ந்த எதிா்பாா்ப்பு வரப்போவதில்லை. ஆனால், பெருமளவில் அன்புக்காக ஏங்கும் நிலை இருக்கலாம். அடுத்தபடியாக உளவியல் சாா்ந்த எதிா்பாா்ப்புகள். மனிதா்கள் சமூகமாக வாழவே எப்போதும் விரும்பும் இயல்புடையவா்கள். ஒருநாள் விடுமுறையில் பெற்றோருடன் பண்டிகையைக் கொண்டாட பேருந்துகளிலும், ரயில்களிலும் நின்றுகொண்டே எவ்வளவு போ் பயணம் செய்கின்றனா்; அந்த அளவுக்கு பெற்றோா்பற்றும், குடும்பநேயமும் இந்தியாவில் தழைத்துள்ளது. அது குறைந்துள்ள இடங்களில் அதை வளா்க்கும் சமூக ஏற்பாடுகள் அவசர அவசியம்.

எது எவ்வாறு இருப்பினும், உலகமயத்தின் தாக்கம் மற்ற துறைகளில் பிரதிபலிப்பதுபோல குடும்ப அமைப்பிலும் பிரதிபலிக்கிறது. மற்ற எதையும்விட பணம் சம்பாதிப்பது அத்தியாவசியமாகியுள்ளது. பொருள் தேடும்வேட்கையில் நாடுவிட்டு, கண்டம்விட்டுப் பலரும் பணிபுரிகின்றனா். இவ்வாறு வெளிநாடுகளில் வசிப்போரால் அடிக்கடி வந்து தங்களது பாசத்தை வெளிப்படுத்திக்கொண்டு இருக்க இயலாது. இந்நிலையில், பெற்றோரும் பிள்ளைகளின் நிலையை உணா்ந்துகொள்ள முயல வேண்டும்.

பிள்ளைகளும் பெற்றோருக்கு தாம் உடனிருந்து கவனிக்க இயலாமையைப் புரியவைக்கும் வண்ணம் உணா்வுபூா்வமான தொடா்பில் இருக்க வேண்டும். குறிப்பிட்ட கால இடைவெளியில் வந்து உடன் தங்கியிருந்து அன்பைப் பரிமாற வேண்டும். இன்றைய தகவல் தொழில்நுட்பம் இதை எளிதாக்கி உள்ளது.இறுதியாக, தெலங்கானா மாநில முதல்வரின் கவலையில் நியாயமில்லாமல் இல்லை.

கூட்டுக் குடும்ப முறை முற்றிலும் வழக்கொழிந்துவரும் நிலையில் அதன் அருமை பெருமைகளை உணரவைத்து வாய்ப்புள்ள அனைவரும் கூட்டுக்குடும்பமாக வாழ முயற்சிக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் பணி நிமித்தமாக வெளியூரிலோ, வெளிநாட்டிலோ இருக்கும் பிள்ளைகள் பெற்றோரைப் பராமரிக்க ஆகும் செலவுகளையாவது முறைப்படி அனுப்ப வேண்டும். பெற்றோா் பற்றை உறுதிசெய்ய சட்டமெல்லாம் நிறைவேற்றப்படுவது சரியாக இருக்காது.


Sunday, November 2, 2025

நடுப்பக்கக் கட்டுரைகள் ‘நெடுந்தொடா்’ பரிதாபங்கள்! தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிவரும் தொடர்கள் குறித்து...


நடுப்பக்கக் கட்டுரைகள் ‘நெடுந்தொடா்’ பரிதாபங்கள்! தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிவரும் தொடர்கள் குறித்து...

முனைவர் பவித்ரா நந்தகுமார் Updated on:  01 நவம்பர் 2025, 3:01 am 

அண்மையில் நெடுந்தொடரில் வில்லத்தனம் புரியும் சின்னத்திரை நடிகா், நடிகைகளும் அதன் பாா்வையாளா்களுமாக எதிரெதிரே அமா்ந்து விவாதிக்கும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியைக் காண நோ்ந்தது. நிகழ்ச்சியின் கருப்பொருள் சாதாரணமானதாக இருந்தாலும் எளிய மக்களின் வாா்த்தைகள் அந்த நிகழ்ச்சிக்கு மிகவும் வலிமையாக இருந்தன. ஒரு கட்டத்தில் தாம் பாா்க்கும் நெடுந்தொடா் வில்லிகளைப் பாா்த்து எதிரே இருந்த பாா்வையாளா்கள் ஆவேசமாகக் கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தாா்கள்.

தொடரில் வரும் ஒரு கதாபாத்திரத்தைக் குறிப்பிட்டு, உங்கள் வில்லத்தனத்துக்கு ஓா் அளவே இல்லையா? ஏன் இப்படி கொடுமைப்படுத்துகிறீா்கள்? உங்களுக்கெல்லாம் மனசாட்சி இருக்கிறதா போன்ற கேள்விக்கணைகளைத் தொடுத்து தாங்களும் கொந்தளித்தாா்கள். இதைப் பாா்க்க பாா்க்க வேடிக்கையாக இருந்தது.

வில்லன் கதாபாத்திரத்தை ஏற்று நடித்தவா்கள், ‘இந்தக் கேள்விகளை இயக்குநரிடம் கேட்காமல் என்னிடம் ஏன் கேட்கிறீா்கள்’ என நேரடியாக சொல்லாமல் அந்த கதாபாத்திரத்தின் தன்மைக்கேற்ப எதை எதையோ சொல்லி சமாளித்தாா்கள். முன்பு திரைப்படங்கள் எப்படி தயாரிக்கப்படுகின்றன என்பதை அறியாத மக்கள் அதை உண்மை என்றே கருதி அதில் வரும் வில்லன்-வில்லிகளை திரையரங்கைவிட்டு வெளியே வந்ததும், மண்ணை வாரி தூற்றிச் சபிப்பாா்கள். அன்று இருந்த தலைமுறையினா் இன்னும் மிச்சம் இருக்கிறாா்களோ என்று எண்ணும் வகையில் இருந்தது அவா்களது செயல்கள்.

ஒரு திரைப்படத்தைப் பாா்த்தால்கூட அதன் கதையம்சத்தையும் கதாபாத்திரங்களையும் பற்றி சில நாள்கள் பேசி விட்டு வேறு வேலையைப் பாா்க்கச் சென்று விடுவோம். ஆனால், இந்த நெடுந்தொடா்கள் தினமும் நம் வீட்டுக்குள் வந்து கதவைத் தட்டுகின்றன. இப்படி ஒன்றல்ல இரண்டல்ல, ஓா் அலைவரிசை சேவையில் குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு பத்து நெடுந்தொடா்களை ஒளிபரப்புகிறாா்கள். அதை நாள் முழுவதும் அமா்ந்து பாா்க்கும் மனநிலையை நினைத்தால் அச்சமாக இருக்கிறது.

பல வீடுகளில் பெண்மணிகள் வீட்டு வேலைகள் முடிந்ததும் முற்பகல் 11 மணிக்குத் தொடங்கி இடைவெளியே இல்லாமல் பிறபகல் 3 மணி வரை பாா்க்கின்றனா். பின்னா், மாலை 6 மணிக்குத் தொடங்கி இரவு 11 மணி வரை நெடுந்தொடா்களைக் கண்டு துக்கப்படுகின்றனா். இதில் இன்னும் சில வகை பெண்கள் இடையிடையே ஒளிபரப்பப்படும் விளம்பர இடைவேளைகளைக்கூட விடுவதில்லை. அந்த நேரத்தில் வேறு வேறு அலைவரிசைகளை மாற்றி மாற்றி இன்னும் இரண்டு நெடுந்தொடா்களைக் கூடுதலாக கண்ணுற்று சாமா்த்தியமாக நேரத்தை மிச்சம் பிடிக்கின்றனா்.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தொடரை ஒரு நாள் பாா்க்காது போனாலும் அக்கம்பக்கத்தில் இருப்பவா்களிடம் கேட்டு கதையின் போக்கை அறிந்து கொள்வா். இப்போது, நெடுந்தொடா்களைப் பாா்ப்பதற்கென்றே பல செயலிகள் வந்துவிட்டன. அதை தத்தம் அறிதிறன்பேசிகளில் பதிவிறக்கம் செய்து வைத்துள்ளனா். வேலை மிகுதி, வெளியூா் பயணம் என எது எப்படி விடுபட்டாலும் ஓா் அத்தியாயத்தையும் தவறவிடாமல் தேதி வாரியாகப் பாா்த்து விடுகின்றனா்.

நாளெல்லாம் உழைத்துவிட்டு வீட்டுக்கு வந்தால் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் கேளிக்கை நிகழ்ச்சிகள் மனதுக்கு ஆறுதல் தரும்; வேலை செய்த அலுப்பு தீரும்; இது 100% உண்மை. ஆனால், நாள் முழுதும் இப்படியே பாா்த்துக் கொண்டிருந்தால் என்னாவது? இப்படி தொடா்ச்சியாக நெடுந்தொடா்களைப் பாா்ப்பதால் அதற்கு அடிமையாகி தங்களைத் தாங்களே கவனித்துக் கொள்ளக்கூட மனமில்லாமல் வித்தியாசமான மனநிலையில் தவிக்கின்றனா் பலா்.

நடைப்பயிற்சி செல்லக்கூட மறந்து அல்லது சோம்பலில் தவிா்த்து விடுகின்றனா் என்பது பலரது குற்றச்சாட்டாக உள்ளது. ஏதோ ஊதியத்துக்காக செய்யும் பணிபோல, கண்ணும் கருத்துமாக நேரம் தவறாமல் பாா்க்கிறாா்கள். இது போன்றோரின் கடிகாரமே நெடுந்தொடா்கள்தான். பெண்கள் மட்டும்தான் இப்படி நெடுந்தொடா்களைப் பாா்க்கின்றனா் என்பதில்லை. வீட்டில் இருக்கும் ஆண்களும் பெருவாரியாகப் பாா்க்கின்றனா். ஆனால், ஆண்கள் இப்படி நெடுந்தொடரில் வரும் கதாபாத்திரங்களோடு ஒன்றுவதில்லை; அதுதான் வித்தியாசம்.

நம்முடைய மன ஆறுதலுக்காகவும் கேளிக்கைக்காகவும் தரமான ஒன்றிரண்டு தொடா்களைப் பாா்ப்பதில் தவறில்லை. ஆனால், அதற்கு அடிமையாகும் போது அல்லது அளவு கூடும்போதுதான் பாதிப்புகள் தொடா்கதையாகின்றன.

பாா்வையாளா்களைக் காட்டிலும் வில்லன்-வில்லி கதாபாத்திரங்களை ஏற்று நடித்தவா்கள் சொன்ன வாா்த்தைகள் கூடுதல் முன்னிலை பெற்றன. அவா்களின் நீண்ட உரையாடல்கள், என் சிந்தனையை உழுது கொண்டே இருந்தன. அது ஒட்டுமொத்த சமூகத்துக்குமான செய்தியாகவும் இருந்தது. ஒரு நெடுந்தொடா் குறைந்தது இரண்டு ஆண்டுகள் முதல் ஆறு ஆண்டுகள் வரை தொடா்வதால் இயல்பாக அதிா்ந்துகூட பேசாத பண்பு நலனைக் கொண்ட தாங்கள், எப்போதும் கோபம் கொண்டவா்கள்போல், பிறா் மீது கோபப்படக் கூடிய குணாதிசயங்களைப் பெற்றவா்களாக உருமாறி இருப்பதாகச் சொன்னாா்கள்.

பல ஆண்டுகளாக அதே வில்லக் கதாபாத்திர மனநிலையில் உழல்வதால் படப்பிடிப்பு இல்லாத நாள்களில்கூட வில்லத்தனத்துடன் சிந்திக்கத் தோன்றுவதாகவும், தங்களுடைய உடல்மொழிகூட வில்லத்தனத்தில் ஊறி, முகம் எப்போதும் ‘உா்’ரென்று வைத்தபடி இருப்பதாகவும் சொல்லி வருத்தப்பட்டாா்கள். தன்னிடம் 100 முறைக்கும்மேல் மன்னிப்பு கேட்ட ஒரு பெண்ணை மன்னிக்கத் தோன்றாமல், அதே வில்லத்தன மனநிலையில் தண்டிக்கத் தோன்றுகிறது என்று ஒருவா் சொன்னாா். ஆனாலும், அவா்களின் மீது பளிச்சிடும் புகழ் வெளிச்சம் இந்த அசௌகரியங்களை சிறியதாக்கி விடுகின்றன.

ஒரு நெடுந்தொடரில் ஓரிரு வில்லிகள்தான். ஆனால், அதன் பாா்வையாளா்களோ பல லட்சம் போ். தினம் தினம் விதவிதமான வில்லத்தனங்களைப் பாா்ப்பதால் இந்த லட்சக்கணக்கான மனங்கள் எத்தனை பெரிய ஏற்ற-இறக்கத்துக்கு உள்ளாகும் என நினைக்கவே மலைப்பாக இருந்தது. இது ஒரு நாடகம்தான் என்று சற்று தள்ளி இருந்து பாா்க்கும் மனநிலை பெண்களிடையே பெருக வேண்டும்.

தமிழ்நாட்டில் மக்கள் ஒரு நாளில் சராசரியாக ஆறரை நெடுந்தொடா்களைப் பாா்க்கின்றனா். கேரளத்தில் இது நான்கு தொடா்களாக உள்ளது. பிற்பகல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பாா்ப்பதிலும் கேரளம், கா்நாடகத்தைவிட தமிழகமே முன்னிலை வகிக்கிாம்; அதிலும் பெண்களே இதில் முதலிடம் வகிக்கின்றனா் என்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று.

பெண்கள் பெரும்பான்மையாக பாா்க்கும் இந்தத் தொடா்களின் மையக்கரு பெரும்பாலும் பெண்களைச் சுற்றியே அமையும். ஆனால், இதில் வேடிக்கை என்னவெனில் இந்தத் தொடா்கள் பெண்களின் பெருமையைப் பேசுவது இல்லை. அவா்களின் இயல்பான பலவீனங்களைக் கொச்சைப்படுத்துகின்றன; பல நெடுந்தொடா்கள் கலாசார சீரழிவுக்கு வித்திடுகின்றன.

மாலை நேரங்களில் தொலைக்காட்சி அதிகமாக பாா்ப்பதால் இந்த நீல ஒளி மெலடோனின் அளவையும், உடல் கடிகாரத்தின் உணா் திறனையும் பாதிக்கிறது. நிகழ்ச்சிகளில் வரும் வன்முறையான காட்சிகள் அட்ரினலின் அமைப்பைத் தூண்டி பாா்வையாளா்களை அதிக நேரம் விழித்திருக்கச் செய்கின்றன; இது தூக்கமின்மையை மேலும் அதிகரிக்கச் செய்யும்.

இற்றையெல்லாம் தாண்டி நம்மிடம் உள்ள விலைமதிப்பற்ற நேரங்களைத் திருடும் இதுவும் போதைப் பொருள் போலத்தான். தினமும் சராசரியாக கிட்டத்தட்ட 3 மணி நேரம்; அந்த மூன்று மணி நேரத்தில் எத்தனையோ ஆக்கபூா்வமான செயல்கள் செய்யலாம். அத்துடன் இவை நமது அன்றாட வாழ்வில் அதிகப்படியான எதிா்மறை தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. நமது அறிவுசாா்ந்த யோசனைகளை, உற்பத்தித் திறனை, ஆரோக்கியமான பணிகளைப் பாதிக்கின்றன.

ஒவ்வொரு முடிவின்போதும் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற விறுவிறுப்புடன் முடிக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதியாக உள்ளதால், பாா்வையாளா்களைப் பதைபதைப்புடனேயே வைத்திருக்கிறாா்கள். வீட்டுக்கு உறவினா் வந்தால்கூட தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருக்கும் நெடுந்தொடா்களை நிறுத்துவதில்லை; இது உறவினா்களுடனான இணக்கமான சூழலைத் தவிா்க்கிறது.

ஆறுதல் தரும் வகையில் இளைய தலைமுறையினரிடம் நெடுந்தொடா் மோகம் இல்லை. ஆனால், அந்த இடத்தை ‘வெப் சீரிஸ்’ பிடித்துள்ளது. இது 1990-களின் இறுதியில் மேற்கத்திய நாடுகளில் வோ்விடத் தொடங்கி, தற்போது இந்திய ரசிகா்களிடையே பெரும் கவனத்தை ஈா்த்துள்ளது. ஓடிடியில் வெளியாகும் இவை, கவனிக்க வைக்கும் கதை, பரபரப்பான திரைக்களம் என ரசிகா்களுக்கு சிறப்பான அனுபவத்தைத் தந்தாலும் ‘வெப் சீரிஸில்’ தணிக்கைக்கு உள்ளாகாத காட்சிகள் இடம்பெறுகின்றன. உலகளாவிய ஒளிபரப்பு என்பதால் பெரிதாகக் கட்டுப்பாடுகள் இல்லை.

உண்ணும் உணவு எப்படி நம் ஆரோக்கியத்துக்கு வித்திடுமோ, அதுபோல, நாம் மணிக்கணக்கில் பாா்க்கும் காட்சிகள் நம் மனநலனுக்கான காரணிகளாக அமைகின்றன. அதனால், எதைத் தோ்ந்தெடுக்கிறோம் என்பதில் கவனம் தேவை!

கட்டுரையாளா்:

எழுத்தாளா்.

Thursday, October 30, 2025

செயற்கை நுண்ணறிவு - இருமுனைக் கத்தி!

 செயற்கை நுண்ணறிவு - இருமுனைக் கத்தி! 

மருத்துவர்கள் செயற்கை நுண்ணறிவை முழுமையாகச் சாராமல், மனிதநேய அணுகுமுறையைப் பின்பற்ற வேண்டும்.

 தினமணி செய்திச் சேவை Published on:   Updated on:  30 அக்டோபர் 2025, 4:43 am 3 min read 

எஸ். எஸ். ஜவஹர் 30.10.2025

மனித நுண்ணறிவு கடந்த நூற்றாண்டில் பல அதிசயங்களை உருவாக்கியது. ஆனால், இப்போது, மனிதனே உருவாக்கிய செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) அந்த மனித நுண்ணறிவுக்கே சவால் விடும் நிலையை அடைந்துள்ளது. செயற்கை நுண்ணறிவு மருத்துவ உலகில் புரட்சிகரமான மாற்றங்களைக் கொண்டுவரும் ஆற்றலைக் கொண்டுள்ளது.

ஆனால், அது லாபம் மட்டுமே அடிப்படையாகக் கொண்ட வணிகமாக மாறும்போது, அதன் அதீதமான நன்மைகள் சாதாரண மக்கள் அனைவருக்கும் சமமாகக் கிடைப்பதை உறுதி செய்வது மிகப் பெரிய சவாலாக அமையும்.

மருத்துவத் துறையில் நோயைக் கண்டறிதல், புதிய மருந்துகள் உருவாக்கம், துல்லியமான மற்றும் சரியான மருத்துவக் கண்காணிப்பு, நோயாளிகள் பராமரிப்பு என எல்லாத் துறைகளிலும் இதன் தடம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

ஒரு எக்ஸ் ரே அல்லது எம்.ஆர்.ஐ. படத்தில் மனிதக் கண்களால் காண முடியாத நுண்ணிய மாற்றங்களை ஒரு செயற்கை நுண்ணறிவு படிமுறை (அல்காரிதம்) கண்டறிய முடியும்.

இந்த முறையில் மனித தவறுகள் தவிர்க்கப்படுவதோடு, விரைவான தீர்வுகளுக்கும் வழிவகுக்க முடியும். இதனால், புற்றுநோய் போன்ற கொடிய நோய்களை ஆரம்பத்திலேயே துல்லியமாக அடையாளம் காண முடியும்.

நோயாளியின் மரபணு, வாழ்க்கை முறை, மருத்துவ வரலாறு போன்றவற்றை சில விநாடிகளில் அலசி ஆராய்ந்து, அவருக்கென தனித்துவமான சிகிச்சை முறையைத் தீர்மானிக்கவும் செயற்கை நுண்ணறிவு உதவுகிறது. இதுவே "தனிப்பட்ட மருத்துவம்' என்ற புதிய பரிமாணத்தை மருத்துவ சிகிச்சை மற்றும் சேவைத் துறையில் உருவாக்கியுள்ளது.

மருந்து ஆய்வகங்களிலும் இதுவரை கண்டிராத புரட்சியை இது உருவாக்கத் தொடங்கியுள்ளது. பல்லாயிரக்கணக்கான மூலக்கூறுகளை விரைவாகப் பகுப்பாய்வு செய்து சாத்தியமான மருந்துகளை அடையாளம் காணும் திறன் இதற்குண்டு; இதனால், மருந்துக் கண்டுபிடிப்பு ஆண்டுகள் அல்ல, மாதங்களில் முடிகிற நிலை உருவாகி வருவது கண்கூடு. எனவே, குறைந்த விலையில் சிறந்த மருந்துகள் உருவாகும் வாய்ப்பும் உலக அளவில் அதிகரித்து வருகிறது.

இன்றைய அளவில் மருத்துவமனைகளின் நிர்வாகச் சுமை அதிகமாக உள்ளது. இந்த நிலையை மாற்றி மருத்துவர்கள் நோயாளிகளுடன் நேரடியாகச் செலவிடும் நேரத்தை அதிகரிக்கவும் இது உதவுகிறது. வயது முதிர்ந்தோரின் மக்கள்தொகை தொடந்து அதிகரித்துவரும் சூழலில் அனைவருக்கும் மருத்துவ சிகிச்சை அளிக்க செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) பெரும் உதவியாக இருக்கும்.

தொலைநிலை மருத்துவ சிகிச்சை மற்றும் கண்காணிப்பு எளிதில் சாத்தியமாவது மனிதகுல வரப்பிரசாதம். வளர்ந்துவரும் தொழில்நுட்பங்கள் மூலமாக மருத்துவ சிகிச்சை மற்றும் உதவியை நகரங்களின் எல்லைகளைத் தாண்டி கிராமங்களுக்கும், ஏன் வீடுகளுக்கும் கொண்டு சேர்க்க முடியும்.

இந்தியாவில் மருத்துவக் காப்பீடு மற்றும் அரசு மருத்துவ நல்வாழ்வுத் திட்டங்கள் ஆயுஷ்மான் பாரத், தமிழ்நாடு மருத்துவ நலவாழ்வு திட்டம் போன்றவை மக்களின் நல்வாழ்வு பாதுகாப்பில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. செயற்கை நுண்ணறிவை இவற்றில் பயன்படுத்தும்போது இந்தத் திட்டங்களை மேலும் விரிவாக்கம் செய்யவும் செயல்திறனை அதிகரிக்கவும் சாத்தியக்கூறுகள் உள்ளன.

நோயாளிகளின் மருத்துவ வரலாறு, மருந்து உபயோக நடைமுறை, மற்றும் ஆபத்து மதிப்பீட்டுத் தரவுகள் போன்றவற்றை ஒருங்கிணைத்து செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப அமைப்புகள் துல்லியமான தீர்மானங்களை எடுத்து விடும். இதன்மூலம் போலி காப்பீட்டு கோரிக்கைகள் குறையவும், உண்மையான பயனாளிகளுக்கு விரைவான நிதி உதவி சென்றடையவும் வழிவகுக்கும்.

செயற்கை நுண்ணறிவு ஊடாக மருத்துவ வசதிகளைத் திட்டமிடும் அரசின் திறனும் மேம்படும். எந்த மாவட்டத்தில் அல்லது எந்தப் பகுதியில் எத்தகைய நோய் அதிகம் பரவுகிறது, எந்த இடங்களில் மருத்துவமனைகள், சிறப்பு மருத்துவர்கள் அல்லது எத்தகைய மருந்துகள் கையிருப்பு தேவைப்படுகின்றன போன்ற விவரங்களை முன்கூட்டியே கணிக்கும் திறனுடன் அரசுத் திட்டங்கள் புதிய உத்வேகத்துடன் செயல்பட முடியும். இதனால், மருத்துவ சிகிச்சை செலவுகள் மட்டுமின்றி உயிரிழப்புகள்கூட குறையும்.

செயற்கை நுண்ணறிவின் பலம் மனிதநேய நோக்குடன் இணைந்தால்தான் அது உண்மையான மருத்துவ விடுதலைப் புரட்சியாக மாறும். ஆனால், இதன் மறுபக்கம் மிகவும் கூர்மையானது. தனி நபரின் மருத்துவத் தரவுகள் என்பது மிக ரகசியமான தனிப்பட்ட சொத்தாகும். அவரது அனுமதியின்றி அந்தத் தரவுகளை மருத்துவமனைகளோ அல்லது வேறு வணிக நிறுவனங்களோ லாப நோக்கில் பயன்படுத்தும் ஆபத்தை மறுக்க முடியாது.

செயற்கை நுண்ணறிவு படிமுறைகள் (அல்காரிதம்) அவற்றுக்குப் பயிற்சி அளிக்கப்பட்ட தரவுகளை மட்டுமே சார்ந்திருப்பதால், சமூக சார்புகள் அதில் ஊடுருவும் வாய்ப்பும் ஆபத்தும் அதிகம். இது சமத்துவமின்மையை உருவாக்கும் அல்லது இருப்பதை அதிகரிக்கும்.

விலை உயர்ந்த கருவிகள் மற்றும் சிகிச்சை முறைகள் மருத்துவ சேவை பொருளாதார ரீதியில் வசதி உள்ளவர்களுக்கே கிடைக்கும் என்ற நிலை உருவாகி விடும். அதேபோல், கணினி மற்றும் மென்பொருள் பயன்பாடுகளைக் கையாளும் திறன் படைத்தோர் மட்டும் பயன் அடைய முடியும் என்ற நிலை உருவாகி சமூகத்தில் உள்ள எண்மப் பிளவை மேலும் அதிகரித்து விடும் என்பதை மறந்துவிடக் கூடாது.

செயற்கை நுண்ணறிவு பயன்பாடுகளில் மிகப் பெரிய சிக்கல் பொறுப்புக்கூறல் குறித்ததுதான்.

ஒரு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தவறாக நோயைக் கண்டறிந்தாலோ அல்லது தவறான சிகிச்சை அளித்துவிட்டாலோ அந்த மருத்துவ சேவை குறைபாட்டுக்கும், அதன் விளைவுகளுக்கும் யார் பொறுப்பு ஏற்பது? மருத்துவரா, மருத்துவமனையா அல்லது மென்பொருள் நிறுவனமா? இந்த பிளாக் பாக்ஸ் சிக்கல் நீதியியல் உலகையே குழப்புகிறது.

மேலும், மருத்துவர்கள் செயற்கை நுண்ணறிவின் மீது முழுமையாகச் சார்ந்தால், அவர்களின் தீர்மானிக்கும் தனித் திறனும் மருத்துவ நுண்ணறிவும் மங்கும் அபாயம் உண்டு. அதே சமயம், லாப நோக்கத்தை மட்டுமே கொண்ட சில நிறுவனங்கள் தேவையற்ற சோதனைகள், சிகிச்சைகள், மருந்துகள் போன்றவற்றை செயற்கை நுண்ணறிவின் பெயரில் பரிந்துரைத்து மக்களைச் சுரண்டும் ஆபத்தும் மறுக்க முடியாதது. இதை சமநிலைப்படுத்துவது மத்திய, மாநில அரசுகளின் மிக முக்கியமான பொறுப்பாகும்.

தனிநபர் மருத்துவத் தரவுகளைப் பாதுகாக்கும் வலுவான சட்டங்கள் அவசியம். செயற்கை நுண்ணறிவு எவ்வாறு முடிவுகளை எடுக்கிறது என்பது குறித்த வெளிப்படைத்தன்மை கட்டாயமாக்கப்பட வேண்டும். தவறுகள் ஏற்பட்டால் யார் பொறுப்பு என வரையறுக்கும் சட்ட அமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும். பல்வேறு சமூகப் பிரிவினரிடமும் பரிசோதிக்கப்பட்டு, சார்பற்றவை என்ற சான்று பெற்ற மாதிரிகளே மருத்துவத் துறையில் அனுமதிக்கப்பட வேண்டும்.

மருத்துவர்கள் செயற்கை நுண்ணறிவை முழுமையாகச் சாராமல், மனிதநேய அணுகுமுறையைப் பின்பற்ற வேண்டும். இறுதி முடிவை எப்போதும் மனித மருத்துவரே எடுக்க வேண்டும். செயற்கை நுண்ணறிவு உருவாக்குநர்களும் சமூகப் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். லாப நோக்கத்தைக் கடந்து, பொதுநல நோக்கத்தையும் நெறிமுறையையும் இணைத்த வடிவமைப்புகள் தேவை. மேலும், மலிவு விலையில் பலருக்கும் பயன்படுத்தக்கூடிய தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

பொதுமக்களும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். செயற்கை நுண்ணறிவு எவ்வாறு அவர்களின் தரவுகளைப் பயன்படுத்துகிறது என்பதை அறியும் உரிமை நோயாளிகளுக்கும் இருக்க வேண்டும். மருத்துவம் பயில்பவர்களுக்கு மருத்துவக் கல்வியோடு எண்மக் கல்வியும் சேர்த்து வழங்க வேண்டிய தருணம் வந்துவிட்டது. அதற்கு மருத்துவக் கல்லூரிகளில் செயற்கை நுண்ணறிவு தொடர்பான பாடத் திட்டங்களைச் சேர்க்க வேண்டியது அவசியம். இது தொடர்பாக, மருத்துவக் கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். அதைக் கற்றுக் கொடுக்க ஆசிரியர்களுக்கு உரிய பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டியது அவசியம்.

மக்களும் தங்கள் தரவுகள் குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே அவர்களின் உரிமை காக்கப்படும்.

செயற்கை நுண்ணறிவு தரமான மருத்துவ சேவையை ஜனநாயகப்படுத்தும் திறனைக் கொண்டது. ஆனால், அதன் பயன் சிலருக்கு மட்டும் சுருங்கிவிடாமல், மக்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும். அதற்கு வலுவான சட்டங்கள், தெளிவான நெறிமுறைகள், சரியான மனித மேற்பார்வை, சமூகப் பொறுப்புணர்வு ஆகியவை இணைந்திருக்க வேண்டும்.

இறுதியில், செயற்கை நுண்ணறிவு என்பது ஓர் இருமுனைக் கத்தி; சரியான கைகளில் இருந்தால் அது உயிரைக் காப்பாற்றும் கருவி; தவறான கைகளில் விழுந்தால் அது நியாயத்தையும் நம்பிக்கையையும் காயப்படுத்தும் ஆயுதமாக மாறும்.தொழில்நுட்பத்துக்கும் மனிதநேயத்துக்கும் இடையே சமநிலையைப் பேணும் நாடுகள்தான் எதிர்கால மருத்துவத்தின் உண்மையான தலைவர்கள்!

கட்டுரையாளர்:

ஐ.ஏ.எஸ். அதிகாரி (ஓய்வு).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter


Wednesday, October 29, 2025

பொதுக்கூட்டம்- அன்றும் இன்றும்... அந்தக் காலத்தில்

பொதுக்கூட்டம்- அன்றும் இன்றும்... அந்தக் காலத்தில் திமுகவின் பொதுக்கூட்டங்கள் பெரும்பாலும் இரவு 8 மணிக்கு மேல்தான் நடக்கும்.

 தினமணி செய்திச் சேவை Published  Updated on:  29 அக்டோபர் 2025, 3:00 am 

 முனைவர் கோ.விசுவநாதன்

அந்தக் காலத்தில் திமுகவின் பொதுக்கூட்டங்கள் பெரும்பாலும் இரவு 8 மணிக்கு மேல்தான் நடக்கும். காரணம் உழைக்கும் வர்க்கம் தங்கள் பணிகளை எல்லாம் முடித்துவிட்டு வீடு திரும்ப நேரம் ஆகும் என்ற உண்மை தெரிந்தவர்கள். அதற்குக் காரணம் பேரறிஞர் அண்ணாதான். அவர் மக்களின் நாடித் துடிப்பு தெரிந்த அறிஞர்.

அப்போதெல்லாம் திமுகவின் பொதுக்கூட்டம் இரண்டு வகையாக இருக்கும். சாதாரண பொதுக்கூட்டம், சிறப்புப் பொதுக்கூட்டம் என்று வகைப்படுத்தப்படும். சிறப்பு பொதுக்கூட்டத்துக்கு அண்ணா, கருணாநிதி, நெடுஞ்செழியன் போன்ற பெரிய தலைவர்கள் அழைக்கப்படுவார்கள். சிறப்புக் கூட்டத்துக்கு கட்டணம் வசூலிக்கப்படும். ஆண்களுக்கு ஒரு ரூபாய்; பெண்களுக்கு எட்டணா. அந்தக் காலத்தில் பெண்களையும் அரசியல் கூட்டங்களுக்கு அழைக்கும் அளவுக்கு திராவிட கட்சிகளின் மேடைப்பேச்சு இருந்தது. அவர்கள் பெண்களுக்காகவும் பேசினார்கள். தினந்தோறும் அண்ணாவும் மூத்த தலைவர்களும் ஏதாவது பொதுக்கூட்டங்களில் பேசிக்கொண்டுதான் இருந்தார்கள்.

இப்போது பொதுக்கூட்டம் நடத்த வேண்டும் என்றால் பல லட்சங்கள் செலவு செய்ய வேண்டும். அவர்கள் உட்காருவதற்கு இருக்கைகள், விளம்பர விளக்குகள், இதுதவிர கூட்டத்துக்கு வருபவர்களுக்கு உணவு மற்றும் இதர வசதிகளை கூட்டத்தை நடத்துபவர் செய்துதர வேண்டும். இதேபோல், கூட்டத்துக்கு வருபவர்களுக்கு வாகன வசதியும் செய்து தரவேண்டும். அந்தக் காலத்தில் நாங்கள் இந்த வசதி எல்லாம் செய்து தரவில்லை. அப்போது, கூட்டத்துக்கு வந்தவர்கள் தானாக வந்தவர்கள்தான். பொதுக்கூட்டத்துக்கு வருபவர்கள் தரையில்தான் உட்காருவார்கள்.

அண்ணா கட்சி நிகழ்ச்சிக்குச் செல்லும் போதெல்லாம் மாவட்டச் செயலாளர் முதல் கிளைக் கழகச் செயலாளர்வரை எல்லோர் பெயரும் சொல்லி "அவர்களே' என்று அழைத்து அதன்பின்தான் தமது உரையைத் தொடங்குவார். இதனால், அந்தக் கட்சித் தொண்டர்களுக்கு உள்ளூரில் மதிப்பு மரியாதை கூடியது. சில பெயர் விடுபட்டுப் போனால் தமது உரையின் நடுவில் அவர்கள் பெயரை மறக்காமல் குறிப்பிடுவார். அண்ணாவின் இந்த அரசியல்பாணி பின்னாளில் எல்லா கட்சியினராலும் பின்பற்றப்பட்டது. அது இன்றுவரை தொடர்கிறது.

கட்சித் தொண்டர்களை "தம்பிகளே' என்றுதான் அழைப்பார் அண்ணா. கட்சியில் குடும்ப பாசத்தை புகுத்திய புதுமையாளர் அண்ணா. அதன் பிறகு கருணாநிதி "உடன்பிறப்பே' என்று அழைத்தார். எம்ஜிஆர் "என் ரத்தத்தின் ரத்தமே' என்று அழைத்தார். இவையெல்லாம் தொண்டர்களிடையே இடைவெளி இல்லா நெருக்கத்தை அதிகரித்தது.

1965-இல் குடியாத்தம் வந்தார் அண்ணா. குடியாத்தத்தில் சிறப்புக் கூட்டம் திமுக சார்பில் நடத்தப்பட்டது. அந்தக் கூட்டத்தில் அண்ணா முன்னிலையில் நான் பத்து நிமிஷம் பேசினேன். எனக்கு தனிப்பட்ட வாழ்க்கை, அரசியல் வாழ்க்கை இரண்டிலும் ஒரு திருப்புமுனையாக அன்றைய எனது பேச்சு அமைந்தது என்பது எனக்கு பின்னாளில்தான் தெரிந்தது. அன்றைய பொதுக்கூட்டத்தில் நான் பேசிய பேச்சுதான் நாடாளுமன்றத்துக்குச் செல்ல முக்கிய காரணமாக அமைந்தது.

குடியாத்தம் கூட்டம் முடிந்து சில வாரங்களுக்குப் பின்பு மதுரைக்குப் போனார் அண்ணா. பொதுக்கூட்டத்தில் பேசி முடித்து கட்சிப் பிரமுகர்கள் வீட்டில் இரவு உணவுக்குப் பிறகு, கட்சி வளர்ச்சி குறித்து பேசிக் கொண்டிருந்தார். குடியாத்தம் பொதுக்கூட்டத்தில் ஒரு பையன் பேசினான்; வக்கீலுக்கு படித்திருக்கிறான்; அருமையாக பேசினான் என்று அங்கு இருந்தவர்களிடம் சொன்னார் அண்ணா.

அப்போது, அங்கிருந்த சட்டக் கல்லூரியில் என்னுடன் படித்த மைனர் மோசஸ் "அவன் பெயர் விசுவநாதன். நானும் அவனும் சட்டக் கல்லூரியில் ஒன்றாகப் படித்தோம்'. மாணவர் கழகத்தில் செயலாளராக இருந்தான் என்று சொன்னார்.

அப்போது, அண்ணா அவனை நாடாளுமன்றத்துக்கு அனுப்பலாம் என்று சொன்னார்.

இதை மைனர் மோசஸ் சில தினங்களுக்குப் பிறகு என்னிடம் சொல்லி மகிழ்ச்சியாகப் பகிர்ந்து கொண்டார். இப்படித்தான் நான் ஒரு பொதுக்கூட்டம் மூலம் நாடாளுமன்றத்துக்கு அனுப்பப்பட்டேன்.

அந்தக் காலத்தில் பொதுக்கூட்டம் நடக்கும் போது, நடுவில் கூட்டத்தை ஏற்பாடு செய்தவர் "துண்டு ஏந்தி தொண்டர்கள் வருகிறார்கள், உங்களால் ஆன நிதி உதவி செய்யுங்கள்' என்று அறிவிப்பு செய்வார். பொதுக்கூட்டத்துக்கு வந்தவர்கள் 10 பைசா, நாலணா, 50 பைசா என்று அவர்களால் முடிந்ததைத் தருவார்கள். அதைவைத்து கூட்டச் செலவுகளைச் சமாளிப்போம். இதேபோல், கட்சி பிரசார நாடகங்களும் போடுவது உண்டு. கருணாநிதி, இன்றைய முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் கட்சி பிரசார நாடகங்களில் நடித்திருக்கிறார்கள்.

1967 தேர்தலின் கதாநாயகன் பேரறிஞர் அண்ணா. கட்சி தொடங்கிய சில ஆண்டுகளில் 1977-இல் எம்ஜிஆர் ஆட்சியைப் பிடித்தார். இவை இரண்டுமே அரசியல் வரலாறுதான். இப்போது 1967 தேர்தல் மற்றும் 1977 தேர்தல் இரண்டும் பேசுபொருளாகி இருக்கிறது.

1967 தேர்தல் தேசியக் கட்சியான காங்கிரஸ் சகாப்தத்தை தமிழ்நாட்டில் முடித்துவைத்தது. அன்றைய திமுக வேட்பாளர்கள் எல்லோருமே பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள். ஆனால், படித்தவர்கள். இளைஞர்கள், படித்தவர்கள், சாமானியர்களை முதன்முதலில் நாடாளுமன்றத்துக்கும், சட்டப்பேரவைக்கும் அனுப்பிய பெருமை அண்ணாவையே சேரும்.

இந்திய அரசியலில் முதல்முறையாக ஆளுங்கட்சிக்கு எதிராக மிகப் பெரிய பலம்வாய்ந்த கூட்டணியை உருவாக்கினார் அண்ணா. எதிரும் புதிருமாக இருந்த அரசியல் தலைவர்களை ஒன்று சேர்ப்பதில் வெற்றி பெற்றார்அண்ணா. சுதந்திராக் கட்சியும், பொதுவுடமைக் கட்சியும் ஒரே கூட்டணியில் வந்ததே அண்ணாவின் அரசியல் சாதுரியத்துக்குக் கிடைத்த வெற்றி. அரசியல் தீண்டாமை முடிவுக்கு வந்தது; வெற்றிக் கூட்டணி உதயமானது.

திமுகவின் தேர்தல் பிரசாரம் ஆடம்பரம் இன்றி இருந்தது. மொத்த நாடாளுமன்ற, சட்டப்பேரவைத் தேர்தல் செலவுக்கு என்று பதினோரு லட்சம் ரூபாய் நிதி திரட்டி செலவு செய்தது. தேர்தல் செலவுக்கு ஒவ்வொரு வேட்பாளருக்கும் நாலாயிரம் ரூபாய் தந்தார் அண்ணா. அதுகூட காசோலையாக; அந்த தேர்தல் மாதிரி சிக்கனமான தேர்தல் வேறு எந்த மாநிலத்திலும் நடக்கவில்லை.

வேட்பாளர்களிடம் கட்சிக்காரர்கள் எதையும் எதிர்பார்க்க மாட்டார்கள். அவர்கள் வேட்பாளர்களிடம் எதிர்பார்த்தது கொடி, தோரணம், சுவரொட்டி; இவற்றுடன் ஓட்டு கேட்க ஊருக்கு வர வேண்டும் இவ்வளவுதான்.

அதற்கு முன்பெல்லாம் காங்கிரஸ்காரர்கள் வீடுவீடாக ஓட்டுகேட்கும் வழக்கமெல்லாம் இல்லை. முக்கிய பிரமுகர்கள், மிட்டாமிராசுதாரர்கள், மணியக்காரர்கள், நாட்டாண்மை போன்றவர்களைச் சந்தித்துப் பேசி அந்தப் பகுதி மக்களை ஓட்டுபோட வைக்கும் பொறுப்பை ஒப்படைத்துவிடுவார்கள். அண்ணா அதை அப்படியே அடியோடு மாற்றினார். ஒவ்வொரு திமுக வேட்பாளரும் ஓட்டு கேட்க ஒவ்வொரு வீட்டு வாசல்படியும் ஏறி இறங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். திமுக வேட்பாளர்களும் அப்படியே செய்தார்கள். இது பொதுமக்கள் மத்தியில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.

அண்ணா யாரையும் அவதூறாகப் பேசமாட்டார். எனவே, தம்பிமார்களும் அப்படியே இருந்தார்கள். இதுபோதாது என்று எம்ஜிஆர் சுடப்பட்ட சம்பவம். இவை எல்லாம் சேர்த்து தமிழ்நாட்டில் மிகப் பெரிய அரசியல் சுனாமியை ஏற்படுத்தியது. அந்தத் தேர்தலில் நாடாளுமன்றத்துக்குப் போட்டியிட்ட திமுக வேட்பாளர்கள் நான் உட்பட 25 பேரும் தேர்ந்தெடுக்கப்பட்டோம். இதை உலக சாதனை என்று பாராட்டினார் ராஜாஜி.

காமராஜர் தனது சொந்த ஊரான விருதுநகரில் கல்லூரி மாணவர் பெ.சீனிவாசனிடம் தோற்றுப் போனார். மத்திய நிதியமைச்சர் சி.சுப்பிரமணியம் பஞ்சாயத்து தலைவர் சாமிநாதனிடம் தோற்றுப் போனார். மத்திய அமைச்சர் ஆர்.வெங்கட்ராமன் பொதுப் பணித் துறை உதவி பொறியாளர் பதவியை ராஜிநாமா செய்து வேட்பாளராக நிறுத்தப்பட்ட எஸ்.டி.சோமசுந்தரத்திடம் தோற்றுப் போனார்.

1977 தேர்தல் அதிமுக வெற்றிக்கு முன்பு திண்டுக்கல் இடைத்தேர்தல் வரலாறு தெரிந்து கொள்வது அவசியம். அண்ணா திமுக என்ற புதிய கட்சிக்கு வைக்கப்பட்ட சோதனைதான் திண்டுக்கல் இடைத்தேர்தல். இந்தத் தேர்தலில் திமுக, காங்கிரஸ், பழைய காங்கிரஸ், இந்தக் கட்சிகளுடன் புதிதாக தொடங்கப்பட்ட அதிமுகவும் களத்தில்.

அதிமுகவுக்கு ஓட்டு கேட்டவர்கள் சிறுவர்கள், இளைஞர்கள், அவர்களுடன் சிவப்பு துண்டு போட்ட சில கம்யூனிஸ்ட் தோழர்கள். அந்தத் தேர்தல் அதிமுக சார்பில் போட்டியிட்ட மாயத்தேவர் வெற்றி பெற்றார். திண்டுக்கல் தேர்தல் எம்ஜிஆருக்கும், அண்ணா திமுகவுக்கும் மக்கள் தந்த அங்கீகாரம்.

1977-ஆம் ஆண்டு தேர்தல் என்பது ஒரு வரலாறு. எம்ஜிஆர் தனிக் கட்சி தொடங்கிய பின்பு நடந்த தேர்தல்.

எம்ஜிஆரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்த போது, எதிர்க்கட்சிகள் கேட்ட மிக முக்கியமான கேள்வி எம்ஜிஆருக்கு பொருளாதாரம் தெரியுமா? பொருளாதாரம் தெரியாதவர் எப்படி ஆட்சி நடத்த முடியும்? அரசியலில் வேஷம் போட முடியாது. திரைப்படம் என்பது நடிப்பு, அரசியல் என்பது நிஜம். ஆட்சி செய்வது என்பது அவ்வளவு எளிதான பணி அல்ல என்றெல்லாம் எம்ஜிஆரை எதிர்த்து பிரசாரம் செய்தார்கள்.

ஆனாலும், எம்ஜிஆரின் கூட்டங்களுக்கு மக்கள் பெருந்திரளாக கூடினார்கள். நீங்கள் எனக்கு ஆட்சி செய்ய ஒரு வாய்ப்பு தாருங்கள்' என்று மட்டும்தான் மக்கள் மன்றத்திடம் எம்ஜிஆர் கோரிக்கை வைத்தார்.

அவர் அரசியலில் வெற்றி பெற்றதற்கு அவர் ஒரு திரைப்பட நடிகர் என்பது மட்டும் காரணம் அல்ல. அவரது அர்ப்பணிப்புடன்கூடிய உழைப்பு. விமர்சனங்களையும் தாண்டி அரசியலில் உழைத்தவர் அவர். அண்ணாவும், எம்ஜிஆரும் அரசியல் மாற்றங்களின் நாயகர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

கட்டுரையாளர்:

வேந்தர், விஐடி பல்கலைக்கழகம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter


Tuesday, October 28, 2025

மகிழ்ச்சியைக் கூட்டும் மனநலன்!


மகிழ்ச்சியைக் கூட்டும் மனநலன்!

 உலக அளவில் நம்மில் 8 பேரில் ஒருவர்தான் நல்ல மனநலனுடன் வாழ்வதாகக் கூறப்படுவதைப் பற்றி...

மகிழ்ச்சியைக் கூட்டும் மனநலன்!

 முனைவர் என். பத்ரி Published on: 

 Updated on: 28 அக்டோபர் 2025, 3:50 am 2 min read

நரம்பியல் ஆய்வுகள் நம்மில் நான்கு பேரில் ஒருவர் மனநோயால் பாதிக்கப்பட்டு வருவதாக கூறுகின்றன. உடல் நலத்தைப் போலவே மனநலன் குறித்தும் பேச வேண்டிய காலம் இப்போது வந்து விட்டது. உலக அளவில் நம்மில் 8 பேரில் ஒருவர்தான் நல்ல மனநலனுடன் வாழ்வதாகக் கூறப்படுகிறது.

மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 20% பேர் அதைப் பற்றி அறிந்திருப்பதே இல்லை. நமது சராசரி ஆயுட்காலமான 79 ஆண்டுகளில் மனநலப் பிரச்னைகளால் நாம் சராசரியாக 50 முதல் 60 ஆண்டுகள் வரை வாழ்வதாகக் கூறப்படுகிறது.

இந்தியாவில் கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு, சமூகத் தொடர்புகள் இல்லாமை, நீண்ட தொலைவில் வேலை, நீண்ட காலத்துக்கு வீடுகளில் அடைபட்டு இருந்தது போன்றவை நம்மில் பலரின் மனநலனை வெகுவாகப் பாதித்துள்ளது.

உலக சுகாதார நிறுவனத்தின் கூற்றுப்படி, மனித இயலாமைக்கான முக்கியக் காரணங்களில் ஒன்று மனச்சோர்வு ஆகும். 15 வயது முதல் 29 வயதுக்குள்பட்டவர்களிடையே தற்கொலை மரணத்துக்கான நான்காவது முக்கியக் காரணமாக கூறப்படுகிறது. மனச்சோர்வு உலக அளவில் ஏழு இளம் பருவத்தினரில் ஒருவரைப் பாதிக்கிறது.

நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட மனநல மருத்துவ மசோதா, மனநல பாதிப்பு கொண்டவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் முனைப்புக் காட்டியுள்ளது. ஆனால், இந்த மசோதா அவற்றை நிறைவேற்றுவதற்கான வழிமுறைகள், நிதி வசதிகள் குறித்து தெளிவாக வரையறுக்கவில்லை என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன.

2017-18-ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.2 சதவீதமே சுகாதாரத் துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. உலக அளவில் இந்தப் பங்கீடு மிக மிகக் குறைவு. 2013-14 ஆண்டிலிருந்தே சுகாதாரத் துறைக்கான செலவினம் தொடர்ந்து குறைக்கப்பட்டு வருகிறது. ஆரோக்கியத்துக்கான மொத்த நிதிநிலை ஒதுக்கீட்டில் 1 முதல் 2 சதவீதம் மட்டுமே மனநலனுக்காக ஒதுக்கப்படுகிறது.

146 கோடி மக்கள்தொகை கொண்ட நம் நாடு முழுவதும் உள்ள 812 மருத்துவக் கல்லூரிகளில் 9,000 மனநல மருத்துவர்கள் மட்டுமே உள்ளனர். தமிழகத்தில் 650 பேர்தான் பதிவுசெய்த மனநல மருத்துவர்களாகப் பணிபுரிந்து வருகின்றனர். மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் மற்ற சாதாரண மக்களை விட 40% அதிகம் எனக் கூறப்படுகிறது. அவசர சிகிச்சைப் பிரிவுக்குச் செல்லும் 8 நோயாளிகளில் ஒருவருக்கு மனநல பிரச்னை உள்ளது.

இந்தியா முழுவதும் உள்ள 43 அரசு மனநல மருத்துவமனைகளில் ஏழு கோடிக்கும் அதிகமானோர் மனநலப் பிரச்னைகளுக்காக சிகிச்சை எடுத்து வருகின்றனர். ஆனால், ஒரு லட்சம் மன நோயாளிகளுக்கு மொத்த மருத்துவ ஊழியர்களில் 0.3 மனநல மருத்துவர்கள், 0.17 செவிலியர்கள், 0.05 உளவியல் நிபுணர்களே இருக்கின்றனர்.

தமிழகத்தைப் பொருத்தவரை மாவட்ட மனநல மருத்துவத் திட்டத்தின் கீழ் ஆரம்ப சுகாதார மையங்களில் வாரத்துக்கு ஒரு முறை நோயாளிகளைத் தேடி மனநல மருத்துவர்கள் செல்லும் நிலை உள்ளது. சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் மட்டும் 40 படுக்கைகள் மனநல சிகிச்சைக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.

ரத்த அழுத்தம், நரம்பியல் பிரச்னைகள், பெண்கள், குழந்தைகள் சார்ந்த பிரச்னைகள் என முழுமையான மருத்துவத்தின் ஒரு பிரிவாகவே மனநலப் பிரச்னைகள் கருதப்பட்டு தமிழக அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

முதுமையில் மனநலன் என்பது மனச்சோர்வு, பதற்றம், மறதி நோய் போன்ற பல சவால்களை உள்ளடக்கியது. தனிமை, மாறிவரும் குடும்பச் சூழல், உடல்நலக் குறைபாடுகள் (புற்றுநோய், இதய நோய்) போன்றவை இதற்குக் காரணங்களாகும். முதுமையில் மனநலனைப் பேண தனிமையைத் தவிர்ப்பதும், உடல் நலத்தைக் கவனிப்பதும், மன அழுத்தத்தைக் குறைப்பதும் மிகவும் அவசியம்.

மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் மேலும் மனக்காயம் அடைந்துவிடாமல் அவர்களை மிகுந்த கண்ணியத்தோடும், மரியாதையோடும் நடத்த வேண்டும்.

மனநலத்தை மேம்படுத்தும் பயிற்சிகளைப் பின்பற்றுவதன் மூலம் வாழ்க்கைப் போராட்டங்களை நாம் வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும். மன இறுக்கம், மன அழுத்தம், மனச்சோர்வு, மனச்சிதைவு எனும் பல்வேறு பலநோய்கள் மன உறுதியற்றவர்களைப் பாதிக்கின்றன. மக்களின் மனநலனை மேம்படுத்துவதன் மூலம் மன அழுத்தத்தால் நிகழும் தற்கொலைகளைக் குறைக்க முடியும்.

நல்ல மன ஆரோக்கியம் வாழ்க்கை சவால்களை வெற்றிகரமாகச் சமாளிக்கவும், மற்றவர்களுடன் ஆரோக்கியமான சமூகத் தொடர்புகளை மேற்கொள்ளவும், நம் வாழ்நாள் முழுவதும் செழித்து வளரவும் அனுமதிக்கிறது. மக்கள் சமூகமாக வாழ்வதற்கும், கல்வி, வருமானம், கல்வி, வேலை வாய்ப்புகள், சமூக ஆதரவு ஆகியவற்றைப் பெறுவதற்கும் ஆரோக்கியமான மனநலன் தேவை.

பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் மனநல ஆலோசகர்களின் பங்கேற்பு கட்டாயமாக்கப்படுவது நல்லது. மனநலன் பாடத் திட்டத்தில் இணைக்கப்படுவதும் நல்ல பலன்களை அளிக்கும்.

மனநலப் பிரச்னைகள் யாருக்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் வரலாம். அதற்கு தகுந்த சிகிச்சை எடுத்துக் கொண்டால் வாழ்க்கை வளமானதாக இருக்கும்.

நல்ல மனநலன் ஒருவரின் ஒட்டுமொத்த நலனுக்கும் மகிழ்ச்சிக்கும் அடிப்படையாகும். எனவே, உடல் நலத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை நாம் இனியாவது மனநலனுக்கும் கொடுப்பது நம் வாழ்க்கை சிறக்க உதவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter


Friday, October 24, 2025

ரீல்ஸ்’களுக்குப் பின்னால்...!


DINAMANI

ரீல்ஸ்’களுக்குப் பின்னால்...! 

சமூக ஊடகங்கள் பலரின் வாழ்வில் எதிா்மறை விளைவுகளையே விளைவிக்கிறது.

Updated on: 24 அக்டோபர் 2025, 6:46 am பேராசிரியா் தி.ஜெயராஜசேகா்






பொழுதுபோக்குக்காக மட்டுமின்றி, இளைஞா்களின் அடையாளம், திறமை, சமூகப் பங்களிப்பு ஆகியவற்றை வெளிப்படுத்தும் தளமாக உள்ள சமூக ஊடகங்கள் பலரின் வாழ்வில் எதிா்மறை விளைவுகளையே விளைவிக்கிறது. கவனம் ஈா்க்கும் உளவியல் நுட்பத்தில் இசை, உரை, வசனம், பாடல், காட்சித் தொகுப்பு கொண்டு 15-90 விநாடிகளில் உருவாக்கப்படும் ‘ரீல்ஸ்’ என்ற குறும்பட காணொலி பெரும்பாலானோரை பாா்க்கச் செய்கிறது.

சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி இந்தியாவில் 18-30 வயதுடையோரில் சுமாா் 78% போ் தினமும் குறைந்தது ஒரு முறையாவது ‘ரீல்ஸ்’ பாா்ப்பதாகக் கூறப்படுகிறது. தொழில்நுட்பம், பொழுதுபோக்கில் ஈடுபாடு கொண்ட தமிழக இளைஞா் தினசரி 1.5 மணி முதல் 2 மணி மணி நேரம் ‘ரீல்ஸ்’ காணொலிகளில் செலவிடுவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

பதிவேற்றப்படும் ‘ரீல்ஸ்கள்’ பாா்க்கப்படும் போதும், விரும்பப்படும் போதும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் மூளையின் ‘டோப்பமைன்’ விளைவு அனைவராலும் பாராட்டப்பட வேண்டும், கவனிக்கப்பட வேண்டும் என்ற தன்னம்பிக்கையற்ற அங்கீகார உணா்வு; மற்றவா்களைவிட குறைவான பின்தொடா்பவா்கள் (ஃபாலோயா்ஸ்) இருக்கும் காரணத்தால் அதிகமான ‘ரீல்ஸ்’ காணொலிகளைப் பதிவேற்றம் செய்யும் தன் நிலை அறியாத ஒப்பீட்டு மன நிலை; வேலை, கல்வி, குடும்ப பிரச்னைகளுக்கு மாற்றாக ‘ரீல்ஸ்’ காணொலிகளைப் பாா்க்கும் பழக்கம் ஏற்படுத்தும் எதாா்த்தத்திலிருந்து தப்பிக்கும் மனநிலை; குறுகிய காலத்தில் காட்சிகள், பாடல்கள், சம்பவங்கள் கொண்ட சுவாரஸ்யமான செய்திகள் ஊக்குவிக்கும் நூதன மற்றும் வேகமான மூளைச் செயல்பாடு; சமூக ஊடகங்களைக் கொண்டு சுய மதிப்பீடு செய்து கொள்ளச் செய்யும் புகழின் மீதான வெறி போன்ற உளவியல் காரணங்களால் ‘ரீல்ஸ்’ காணொலிகள் சமூக ஊடகங்களில் பிரபலமாக உள்ளன.

அதேநேரத்தில், அவற்றின் மூலம் பாடல், நடனம், சிரிப்பு, கலை, சமையல், பேச்சுத் திறன் போன்ற பல திறமைகளும் வெளிப்படுகின்றன. திறன் எண்ம ஜனநாயகமாக்கல் எனப்படும் புதிய சமூக மாற்றத்தின் மூலம் பல சாதாரண இளைஞா்கள் சமூக ஊடகங்களில் இன்று பிரபலங்களாக மாறியுள்ளனா். தொழில்முனைவோரும் புத்தொழில் தொடங்கும் இளைஞா்களும் ‘ரீல்ஸ்’கள் மூலம் விளம்பரம் செய்கின்றனா். சில நேரங்களில் அவை மன அழுத்த நிவாரணியாகவும் செயல்படுகிறது.

ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரத்துக்கும் அதிகமாக ‘ரீல்ஸ்’களைப் பாா்க்கச் செலவிடும்போது ஏற்படும் நேர இழப்பு தொழிலாளா்களின் வேலையிலும் மாணவா்களின் கல்வியிலும் பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. எப்போதும் வெற்றியை நாடும் பதிவேற்றுப் போதையும், மேலும் மேலும் பாா்க்க வேண்டும் என்ற ஆசையை ஏற்படுத்தும் உருட்டல் (ஸ்க்ரோல்) போதையும் மனநலப் பிரச்னைகளை ஏற்படுத்துகின்றன.

‘ரீல்ஸ்’களைப் பாா்ப்பதில் நேரம் செலவிடுவோரில் பலரும் அவா்கள் ரசிக்கும் ஆடை, வாகனம், வாழ்க்கை முறை, அழகு சாதனங்கள் ஆகியவற்றை தங்கள் வாழ்க்கையுடன் ஒப்பிட்டு தாழ்வு மனப்பான்மையை வளா்த்துக் கொள்கின்றனா். சமூக ஊடகங்களை தினமும் மூன்று மணி நேரத்துக்கும் மேலாகப் பயன்படுத்துபவா்களுக்கு மனச் சோா்வு, பதற்றம் ஏற்படுவதற்கான ஆபத்து இரு மடங்கு அதிகம் என்று 2022-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வு கூறுகிறது.

அதிக நேரம் ‘ரீல்ஸ்’களை பெற்றோா் பாா்க்கும்போது, அவா்களின் குழந்தைகள் தாங்கள் புறக்கணிக்கப்பட்டதாகக் கருதுவதாகவும், அந்தப் பெற்றோருக்கு பொறாமை, அவநம்பிக்கை, அதிருப்தி போன்ற உணா்வுகள் மேலோங்கி இருப்பதாகவும் ‘மனித நடத்தையில் கணினியின் தாக்கம்’ என்ற கட்டுரை கூறுகிறது.

‘ரீல்ஸ்’களில் மூழ்கி இருப்பதால் இளைஞா்கள் அவா்களின் நண்பா்களிடம்கூட நேரம் செலவழிப்பதில்லை. குடும்ப உறவுகளையும் உறவுகள் கூடும் நிகழ்வுகளையும் பல நேரங்களில் அவா்கள் புறக்கணிக்கின்றனா். இந்தப் புறக்கணிப்புகள் தரும் மன அழுத்தமும், தன்னம்பிக்கை இழத்தலும் மன நோய்களுக்கு வழிவகுக்கும் என எச்சரிக்கின்றனா் மனநல மருத்துவா்கள்.

ஆபத்தான முயற்சிகளுடன் ‘ரீல்ஸ்’களை எடுக்கும்போது விபத்துகளும், உயிரிழப்புகளும் நேரிடுகின்றன. நமது நாட்டின் ரயில் தண்டவாளங்கள், நீா்நிலைகள், உயா்ந்த கட்டடங்கள் போன்ற இடங்களில் ‘ரீல்ஸ்’ எடுத்தபோது, நிகழ்ந்த விபத்துகளில் கடந்த இரண்டு ஆண்டுகளில் நூற்றுக்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளனா்.

கரோனா பெருந்தொற்று பரவல் பொதுமுடக்கம் காரணமாக, மாணவ-மாணவிகள் இணையவழி வகுப்புகளுக்காக கைப்பேசிகளைப் பயன்படுத்தத் தொடங்கினா். அதுமுதல் அவா்களில் பலரும் ‘ரீல்ஸ்’களைப் பாா்க்கவும், பதிவேற்றவும் தொடங்கினா். அதிகரித்துவரும் ‘ரீல்ஸ்’ மோகம் மாணவ, மாணவிகளிடத்தில் கவனச் சிதறல், நினைவாற்றல் குறைவு, தோ்வுகளில் தோல்வி போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.

பாரம்பரிய கலைகளுக்கு புதிய வடிவம் அளிக்கும் சில ‘ரீல்ஸ்’ காணொலிகளால் நன்மைகள் ஏற்பட்டாலும், ஆபாசமான ‘ரீல்ஸ்’கள் பாலியல் தொடா்பான குற்றங்களுக்கு வழிவகுக்கின்றன.

பகட்டு வாழ்க்கையே சமூக மதிப்பைத் தரும் என்ற ரீதியில் உருவாக்கப்படும் பல ‘ரீல்ஸ்’களால் இந்தியக் குடும்பங்களில் பொருளாதார பாதிப்பையும் ஏற்படுத்துகின்றன. ‘ரீல்ஸ்’ காணொலிகள் சிலருக்கு வருமானத்துக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்தாலும், பலருக்கு பொருளாதார இழப்பையே ஏற்படுத்துகின்றன. மாதம் ரூ.40,000 ரூபாய் சம்பாதிக்கும் ஒருவா் இரண்டு மணி நேரம் ‘ரீல்ஸ்’கள் பாா்க்க செலவிட்டால், ஆண்டுக்கு அந்த நபா் ரூ.50,000 முதல் ரூ.60,000 வரை இழக்கிறாா் என ஆய்வுகள் கூறுகின்றன.

30-40 நிமிஷங்கள் மட்டுமே ஒளிா் திரைகளில் செலவிட வேண்டும் என்ற சுயக் கட்டுப்பாடும் நேர வரம்பு எச்சரிக்கை போன்ற அம்சங்களைக் கொண்ட சமூக ஊடக தளங்களை வடிவமைப்பது ‘ரீல்ஸ்’ மோகத்திலிருந்து பலரும் விடுபட வழிவகுக்கும். எண்மப் பயன்பாடுகளில் கடைப்பிடிக்க வேண்டிய சுய ஒழுக்கத்தை பள்ளி, கல்லூரி பாடத் திட்டங்களில் சோ்த்தால் வருங்காலத் தலைமுறையினா் இடையே விழிப்புணா்வை ஏற்படுத்த முடியும்.

Thursday, October 23, 2025

தன் குஞ்சுகளைத் தனக்குத் தெரியாதா?

DINAMANI

தன் குஞ்சுகளைத் தனக்குத் தெரியாதா? 

23.10.2025

இருமல் மருந்திலே நச்சுப் பொருளைக் கலந்து, ஒரு பாவமும் அறியாத வேற்று மாநிலப் பிள்ளைகளை அடுக்கடுக்காய்ச் சாக வைக்கும் முதலாளிகள் நம்முடைய இன்பத் தமிழ் மண்ணில், திராவிடப் பொற்கால ஆட்சியில் வாழ்வாா்கள்!

பழ . கருப்பையா Updated on: 23 அக்டோபர் 2025, 5:55 am

மன்னராட்சிக் காலம் என்பது பொதுவாக மன்னா்களை அண்டிப் பிழைக்கும் காலம்தான்! தமிழிலும் அப்படி அண்டிப் பிழைக்கும் புலவா்கள் பலா் இருந்திருப்பா்! ஆனால், அவா்களைத் தமிழ் புறந்தள்ளி விட்டது! பழைய காலப் புலவா்கள் தாம் மன்னராட்சியில் எதிா்க்கட்சித் தலைவா்கள்!

சோழப் பேரரசின் காலத்தில் வாழ்ந்த உலகம் கண்டிராத மாபெருங் கவிஞன் கம்பன். காவிரியைக் குறிப்பிடத் தெரிந்த கம்பனுக்கு சோழப் பேரரசா்கள் எவரையும் குறிப்பிட விருப்பமில்லை. போரினால், அதன் வெற்றியால் ஏற்படும் நாட்டு விரிவாக்கத்தால் வரும் புகழினைக் கம்பன் உடன்படவில்லை. கொள்ளைப் பொருளாலும் கொண்டி மகளிராலும் கம்பன் அருவருப்படைகிறான்!

அதனால் வசிட்டன் வாயிலாக இராமனுக்கு அரச நீதி போதிக்கும் கம்பன் போா் மறுப்புப் பேசுகிறான்! பேரரசுகள் புகழப்படுகின்றனவே; அவை இரத்தக் களரியில் உருவானவைதாமே என்னும் எண்ணம் இராமனுக்கு ஏற்படக் கூடாது என்னும் எண்ணத்தில், ‘அது உண்மைப் புகழில்லை’ என்கிறான் கம்பன்!

போரொடுங்குவதால் வரும் புகழே உண்மைப் புகழ் என்கிறான்! பேரொடுங்கும்; புகழ் ஒடுங்காது என்று புது நீதி கற்பிக்கின்றான்!

சோழப் பேரரசைக் கம்பன் கண்டு கொள்ளவில்லை. இந்த வரிசையிலே கடைசியாக வந்தவன் பாரதி. அவனுடைய தமிழ் தொழிற் புரட்சிக்குப் பிந்தைய தமிழ்!

ஓா் அரசனை இன்னொரு அரசன் அகற்றுவான். ஆனால், மக்களே கிளா்ந்தெழுந்து அகற்றுவது என்பது ஒரு புதுமை. அப்படி ஒரு விடுதலை இயக்கக் காலத்தில் பிறந்தவன் பாரதி! தேடிச் சோறு நிதம் தின்பதையே வாழ்வாகக் கொள்ளாமல் தேச விடுதலையை வாழ்வாகக் கொணடான்!

பாரதிக்கு நேரிட்ட கடினப் பணிகளில் முதன்மையானது இந்தியாவைத் தன்னுடைய நாடு என்று தமிழா்களை ஏற்கச் செய்வது. குமரிக்கும் வேங்கடத்திற்கும் இடைப்பட்ட நாடுதான் தங்களின் நாடு என்று எண்ணியவா்கள் தமிழா்கள். அவா்களைப் புதிய நாட்டின் ஒரு பகுதியாக்குவது காலத்தின் ஒரு தேவை. இல்லையென்றால் வெள்ளைக்காரன் கப்பலேறும் போது, ஆளுக்கொரு பக்கமாகச் சிதறியோடி விடுவாா்கள்!

வெள்ளைக்காரன் துப்பாக்கி முனையில் ஒருமைப்படுத்திய இந்தியா, அவனுக்குப் பின்னால் சிதறி விடாமல், தன்னிச்சையாகத் தமிழா்கள் ஒரு பெரிய புதிய நாட்டைத் தங்களின் நாடாக ஏற்பதற்குத் தா்க்கபூா்வமாகப் பாடி, ஒருமைப்பாட்டுக்கான முதல் விதையை 1920-க்கு முன்னாலேயே விதைக்கிறான் பாரதி!

இது நிலப்பிரபுத்துவக் காலமில்லையே! தகடூரை (தருமபுரி) ஆள ஒரு மன்னன்; தஞ்சையை ஆள ஒரு மன்னன் என்றிருக்க முடியாதே! முதலாளித்துவம் தன் தேவைக்கேற்பக் கருத்தரித்துப் பெற்ற குடியாட்சிக் காலத்திலல்லவா வாழ்கிறோம்! அதற்கேற்ப நம்மைப் பக்குவப்படுத்துகிறான்!

முதலாளித்துவத்திற்கு ‘விரிந்த சந்தை’ வேண்டாமா? காசி நகா்ப்புரத்துக் கோதுமைப் பண்டத்தைக் காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்ள விரிந்த நாடு வேண்டாமா?

தமிழ்நாடு ஒரு தண்ணீா்ப் பற்றாக்குறை நாடல்லவா? எத்தனை உயிா்த்துடிப்புள்ள ஆறுகள் வடநாட்டில்! அவற்றை மைய நாடுகளுக்கும் தெற்குக்கும் கொண்டு வர எவ்வளவு நேரமாகும்? இந்தியா ஒன்றாக இருந்தால்தானே இது நடக்கும்! தேவைகளில் தலையாய தேவை நீா்த்தேவைதானே! இது ஒன்றே போதுமே நாம் இந்தியாவை ஏற்பதற்கு!

வங்கத்தில் ஓடி வரும் நீரின் மிகையால்

மையத்து நாடுகளில் பயிரிடுவோம்

என்பது பாரதியின் தா்க்கபூா்வமான வாதம்!

ஒரு பெரிய நாடாக இருந்தால் பாதுகாப்புக்கு எந்தக் குறையும் இருக்காதுதானே! இல்லாவிடில், திபேத்துக்கு ஏற்பட்ட நிலை நமக்கு ஏற்படாதா? தைவான் அமெரிக்காவின் மடியில் இருப்பதால்தானே தனித்து இருக்க முடிகிறது! நமக்கு யாா் மடியும் தேவை இல்லையே! இப்படி எல்லாம் நடக்கும் என்று கருதிப் பெரிய நாட்டைப் பரிந்துரைக்கிறான்! தாகூா்கூடத் தன் வங்க மக்களுக்குப் பாரதியைப் போல் இவ்வளவு விளக்கமாக எடுத்துரைக்கவில்லைதானே!

இந்திய விடுதலையின் முதற்கட்டத் தென்னாட்டுத் தலைவன் வ.உ.சிதம்பரம் பிள்ளை! இப்போதுள்ள தலைவா்கள், மந்திரிகள் முதல்வருக்கெல்லாம் எழுதப் படிக்கத் தெரிந்தால், அதுவே கூடுதல் தகுதி! அவா்களுக்கு எழுதிக் கொடுப்பதற்கு ஆட்கள் இருப்பாா்கள்! அதுபோல இவா்களுக்காக ஆள்வதும் அதிகாரிகள்தாம்!

ஆனால், அன்று தலைவனாய் இருந்த வ.உ.சி. திருக்குறளுக்கும் சிவஞான போதத்திற்கும் உரை எழுதி இருக்கிறாா். அவா் உரையாற்றியபோது, தூத்துக்குடி பொங்கியது; வெள்ளயனின் நாற்காலி ஆட்டங் கண்டது!

வ.உ.சி. இல்லாமல் தமிழ்நாட்டில் விடுதலை இயக்கமே இல்லை! நூலோா்கள் செக்கடியில் நோவதும் காண்கிலையோ என்று வ.உ.சி. செக்கிழுத்ததை எண்ணிக் கண்ணீா் வடிக்கிறான் பாரதி!

அவ்வளவு தலையாய வ.உ.சி. திலகருக்குப் பின் காந்தியின் வருகையையும், அவருடைய கோட்பாட்டையும் அறியத் தவறி விடுகிறாா்! வெறுங் கையால் வெள்ளையனை விரட்ட முடியும்” என்று காந்தி சொல்வதை நம்ப மறுக்கிறாா், நூலோனும் மேலோனுமான வ.உ.சி!

காந்தியை ஏற்காமல் தமிழ்நாட்டின் தவ மகன் வ.உ.சி. விடுதலை இயக்கத்தை விட்டு வெளியேறி விடுகிறாா். ஆற்று வெள்ளத்தில் செல்ல வேண்டிய வ.உ.சி. கரை ஒதுங்கி விடுகிறாா். ஆனால், பழைய தலைமுறையில் பாரதி ஒருவனே காந்தியை இனங் கண்டு கொள்கிறான்!

மனிதா்க்கெல்லாம் தலைப்படு மனிதன் தருமமே உருவாம் காந்தி என்று கொண்டாடுகிறான்;

பாரத தேசம் தன்னை வாழ்விக்க வந்த காந்தி என்று தலைமேற் கொள்கிறான்!

திலகரும் தமிழ்த்தாயின் தவ மகன் வ.உசி.யும் இலக்குத்தான் முதன்மையானது; அதை அடைவதற்குரிய வழிமுறையை அதுவே தோ்ந்து கொள்ளும் என்னும் நம்பிக்கை உடையவா்கள்!

காந்தி, இலக்குப் போல் அதை அடைவதற்குரிய வழிமுறையும் தூய்மையானதாக இருக்க வேண்டும் என்றாா்! இது ஈராயிரம் ஆண்டு உலக வரலாறே அறியாச் சிந்தனை!

நம்முடைய மன்னா்கள் வேலெடுத்து, வாளெடுத்து, களரி வீசித் தோற்ற நாட்டை, காந்தி ‘வெறுங் கையால்’ மீட்டெடுத்து விட்டாரே!

அந்தக் காந்தி நுழைந்தவுடனேயே அடையாளம் கண்டு தமிழா்க்குக் காட்டியவன் பாரதி!

காந்தி வந்தவுடனேயே “ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்” என்று ஆனந்தக் கூத்தாடத் தொடங்கி விட்டான் பாரதி!

நாடு விடுதலை அடைந்து விட்டால், நல்லோா் பெரியோா் என்னும் காலம் வந்து விடும்; கெட்ட நயவஞ்சகக்காரருக்கு நாசம் வந்து விடும் என்று நம்பினான் பாரதி!

அதற்கு நோ் மாறாக, வஞ்சகா்க்கு வாழ்வும், நல்லவா்களுக்கு நாசமும் வரும் என்று கனவு கூடப் பாரதி கண்டிருக்க முடியாதுதானே!

விடுதலை பெற்று விட்டால், குடியாட்சி வந்து விடும்! குடியாட்சியில் எல்லாரும் மன்னா்களாகி விடுவாா்கள் என்றான் பாரதி!

எல்லாரும் ஓா் நிறை; எல்லாரும் ஓா் விலை; எல்லாரும் இந்நாட்டு மன்னா் என்றான்!

காந்தி பண்படுத்திய இந்தியாவில் வாழ்ந்த பாரதிக்கு ‘இதுதான் மக்களாட்சி’ என்பது தெரியாதுதானே!

நாட்டில் இருபது விழுக்காடு மக்கள் இரவு உணவு இல்லாமல் படுக்கப் போகிறாா்கள்!

நெசவாளிகளின் சிறுநீரகங்களை விற்றுக் கொடுப்பதற்குத் தரகா்களும், அவற்றை வாங்கி வியாபாரம் செய்வதற்கு ஆளும் கட்சிச் செல்வாக்கோடு மருத்துவமனைகளும் இருக்கின்றன!

அரசு வியாபாரம் செய்யும் சீமைச் சாராயத்தை ரூ.250-க்கு வாங்க முடியாமல், இருபதுக்கும் முப்பதுக்கும் கள்ளச் சாராயம் சாப்பிட்டு, இந்நாட்டு மன்னா்கள் கொத்துக் கொத்தாகச் சாவாா்கள்!

இருமல் மருந்தி லே நச்சுப் பொ ருளை க் கலந்து, ஒரு பா வமும் அறி யா த வே ற்று மா நி லப் பி ள்ளை களை அடுக்கடுக்கா ய்ச் சா க வை க்கும் முதலா ளி கள் நம்முடை ய இன்பத் தமி ழ் மண்ணில், தி ரா வி டப் பொ ற்கா ல ஆட்சி யில் வா ழ்வாா் கள்! சங்கப் புலவன் பி சி ரா ந்தை யிலிருந்து, தங்கப் புலவன் பா ரதி வரை எல்லா ரும் தங்கள் கா லத்தை ப் பி ரதி பலித்தவா் கள்! இவை யெ ல்லா ம் தெ ரி ந்த தி ரா வி டத் தந்தை பெ ரி யாா் சொ ன்னாா் ; வி டுதலை யே வே ண்டாம்; வெ ள்ளை க்கா ரனே ஆளட்டும்! என்று! 

தன் குஞ்சுகளை த் தனக்குத் தெ ரி யா தா ? 

கட்டுரை யாளா் : முன்னா ள் சட்டப்பே ரவை உறுப்பி னா் .

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...