Showing posts with label DINAMANI. Show all posts
Showing posts with label DINAMANI. Show all posts

Friday, February 20, 2026

இசையால் வசப்படுத்தலாம்!

DINAMANI

இசையால் வசப்படுத்தலாம்!

பல நாடுகளில் ஆறாம் வகுப்பிலிருந்தும், சில நாடுகளில் ஆறு வயதிலிருந்தும் இசைப் பயிற்சி அளிக்கப்படுகிறது.



Updated on:
20 பிப்ரவரி 2026, 3:59 am

அமெரிக்கா, ஜப்பான், பிரிட்டன், சீனா, பின்லாந்து, டென்மார்க், ஹாலந்து உள்ளிட்ட பல நாடுகளிலும் பள்ளி களில் இசைப் பயிற்சி கட்டாயம். பல நாடுகளில் ஆறாம் வகுப்பிலிருந்தும், சில நாடுகளில் ஆறு வயதிலிருந்தும் இசைப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இசைக் கருவிகள் வாசிக்கவும் பயிற்றுவிக்கப்படுகிறது.

பள்ளி அளவிலேயே இசைப் பயிற்சி அளிக்க வேண்டியதன் அவசியம் என்ன, இசை பயில்வதால் மாணவர்களுக்கு கிடைக்கும் பலன்கள் யாவை என்ற கேள்விகள் எழும். மாணவர்களின் திறமையை வெளிக்கொணரவும், சரியான வழியில் திருப்பிவிடவும் இசைப் பயிற்சி உதவும். அவர்களின் கவனக் குவிப்பை அதிகரிக்கும்; புலன்கள் அனைத்தும் ஒன்றிணைந்து செயல்படச் செய்யும்.

இன்றைய மாணவர்களுக்கு கல்வி பெரும் சவாலாக உள்ளது. வீட்டுப் பாடங்கள், தேர்வுகள், நுழைவுத் தேர்வுகள், போட்டித் தேர்வுகளுக்காக ஆயத்தப்படுத்துதல் என தொடர்ச்சியாக பல சவால்கள் முன்நிற்கின்றன. இருப்பினும், பள்ளியில் ஒவ்வோர் நாளும் 45 நிமிஷங்கள் இசைப் பயிற்சிக்காக ஒதுக்குவது, அவர்களுக்கு மன அழுத்தம் போன்றவற்றில் இருந்து விடுபெற உதவும். இசைப் பயிற்சி பெறுபவர்களின் மனதை இலகுவாக ஆக்கும் வல்லமை இசைக்கு உண்டு. எனவே, அதைக் கற்பவர்கள் தெளிவான மன நிலையில் செயல்படுவார்கள். மாணவர்களின் நேரம், தரமான வழியில் செலவிடப்படும்; கைப்பேசி போன்றவை ஏற்படுத்தும் தீய தாக்கங்கள் கணிசமாகக் குறையும். சிறார் குற்றங்களும் குறையும்.

ஏராளமான பாடங்களைப் பயிலும் மாணவர்களுக்கு இது கூடுதல் சுமையா என்ற கேள்வி எழுவது இயல்பு. ஆனால், இசைப் பயிற்சி "திறமை மடைமாற்றும்' ஆற்றலை வெளிப்படுத்தும். அதன்

மூலம், மாணவர்களின் படைப்பாற்றல் மட்டுமின்றி, மொழி மற்றும் கணிதம் ஆகியவற்றைக் கற்பதற்கான அவசியமான பகுப்பாய்வு திறனும் மேம்படும். அவர்களை பல்துறைகளில் பரிணமிக்கச் செய்யும். இந்தத் தகவலை பள்ளிக்கூட ஆசிரியர்கள் உறுதி செய்கின்றனர். இசை, நாட்டியம் கற்கும் மாணவர்கள், அவற்றில் மட்டுமின்றி, தங்கள் பாடங்களையும் நன்கு கற்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.

குழுவாக வாசிக்க அல்லது பாடுவதற்கு கற்பிக்கப்படும் மாணவர்கள் ஒத்திசைவு பயிற்சி பெறுகிறனர். அதன்மூலம் ஒழுக்கம்}கட்டுப்பாடு, விதிகளுக்கு இயைந்து நடப்பது, குழுவாகச் செயல்படுவது மற்றும் குழுவினர் குறித்த புரிதல் ஆகியன மட்டுமின்றி, ஒருவரிடமிருந்து இன்னொருவர் கற்கும் திறன் வளர்ச்சியும் ஏற்படு

கிறது. விடாமுயற்சிக்கும் வித்திடுகிறது. இவற்றையெல்லாம் பார்க்கும்போது, இசைப் பயிற்சி என்பது மாணவர்களுக்கு நாம் செய்யும் பேருதவியாகும்.

ஏதோ ஆறேழு ஆண்டுகள் மட்டுமே மாணவர்களுடன் பயணிக்கும் விஷயமல்ல இசை. மாறாக, வாழ்நாள் முழுமைக்கும் துணையாக வருவது. கல்விச் சாலையைக் கடந்து, அவரது பணியிடத்தில் செயல்திறனை அதிகரிக்கும். காரணம், இசைப் பயிற்சி தனி மனிதனுக்கு அர்ப்பணிப்பு, விடாமுயற்சி ஆகிய இரு பெரும் குணங்களை ஏற்படுத்தும்.

தியானம் செய்வதற்கு ஈடான பலனை இசைப் பயிற்சி ஏற்படுத்தும்; இதனால், சீரான ரத்த அழுத்தம் மற்றும் நாடித் துடிப்பு ஆகியன உடல் ஆரோக்கியத்தை உறுதி செய்யும். இல்லத்தில் அமைதி மட்டுமின்றி, அண்டை அயலாருடன் இணக்கம், நல்லுறவு ஆகியவற்றை ஏற்படுத்தும். தனி மனிதனுக்கு மட்டுமின்றி சமூக வளர்ச்சிக்கும் வழிகோலும்.ஏனெனில், இசை என்பது ஜாதி, மத, இன,நிற வர்க்க பேதங்கள் கடந்த உலக மொழியாகும்.

தமிழ் மக்களுக்கு அந்நியமானது அல்ல இசை. நம் தமிழோடு கலந்த ஒன்று; 2000 ஆண்டுகளுக்கு முன்பே பல இசை நூல்கள் நம்மிடம் இருந்தன. முத்தமிழின் ஒரு பகுதியாக இசை இருந்தது. அந்த வகையில், வேறெந்த மொழிக்கும் இல்லாத சிறப்பு தமிழுக்கு உண்டு. பிறப்பு முதல் இறப்பு வரையில் தமிழர்களுடன் இயைந்தது இசை.

கிராமப் புறங்களில் தற்போது வழக்கத்தில் இல்லையென்றாலும், சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை வயலில் ஏற்றம் இறைக்கும்போதும், நாற்று நடும் போதும், களை எடுக்கும் போதும் அதில் ஈடுபடுவோர் நாட்டுப்புறப் பாடல்

களைப் பாடுவது உண்டு. இறைவனைப் பாடி தொழுது பரவசம் அடைந்தனர் நம் முன்னோர். ஆயினும், எப்படி இசை நமக்கு தற்போது அந்நியமானது? என்பது தெரியவில்லை.

இசை பரவலாக்கப்பட வேண்டும்; பள்ளிப் பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும். பொருளாதாரம்} குடும்பச் சூழல் போன்றவை இசைப் பயிற்சிக்குத் தடையாக இருக்கக் கூடாது.

இசையைப் பாடத் திட்டத்தில் சேர்ப்பதற்கு முன்பாக, அதை மாணவர்களுக்கு கற்பிக்க தரமான ஆசிரியர்களை போதிய எண்ணிக்கையில் நியமிக்க வேண்டும். தற்போது, இத்தகைய ஆசிரியர்கள் பற்றாக்குறையாக உள்ளனர். எனவே, இசைக் கல்லூரிகள் இசை ஆசிரியர்களை அதிக எண்ணிக்கையில் உருவாக்க வேண்டும். அரசு ஊக்கம் தந்தால், இசைக் கல்லூரிகளில் ஏராளமானோர் சேர்ந்து பயின்று, மாணவர்களுக்கு கற்பிக்க முன்வருவர்.

இசையை பள்ளிகளில் பாடத்திட்டத்தில் இணைப்பது என்பது, நிச்சயம் நம்மை அடுத்தகட்டத்துக்கு கொண்டு

செல்லும். இது குறித்து கொள்கை முடிவு எடுக்கப்பட்டால், போதிய கால இடைவெளியில் சரியான திட்டமிடலுடன் சில ஆண்டுகளில் பள்ளிகளில் இசைப் பயிற்சியை நடைமுறைப்படுத்த முடியும்.

Tuesday, February 17, 2026

பணிச்சுமையில் பயிற்சி மருத்துவர்கள்

பணிச்சுமையில் பயிற்சி மருத்துவர்கள்

DINAMANI 17.02.2026

ஐந்து ஆண்டுகளில் மட்டும் இந்தியாவில் 120-க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் பணிச்சுமை, மன அழுத்தம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்று தேசிய மருத்துவ ஆணையத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.




Updated on:
14 பிப்ரவரி 2026, 4:14 am

பணம் செலுத்தினால்தான் சிகிச்சையை ஆரம்பிப்பீர்களா? என பிரபல தனியார் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில், நோயாளியின் உறவினர் எழுப்பிய கேள்வி, அங்கே நின்றிருந்த பயிற்சி மருத்துவரைத் துளைத்துக் கொண்டிருந்தது.

நிர்வாகத்தின் மீது காட்ட வேண்டிய கோபத்தை, பயிற்சி மருத்துவர் மீது திருப்புவது வேதனையானது. ஆனாலும், அந்தப் பயிற்சி மருத்துவர் பொறுமையாக பதில் அளித்துவிட்டு, மற்றொரு நோயாளியைப் பார்க்கச் சென்று விட்டார். நான்கரை ஆண்டுகால படிப்பு, ஓராண்டு கட்டாயப் பயிற்சி என ஐந்தரை ஆண்டுகளை முடித்துவிட்டு சேவையாற்ற வரும் இவர்களுக்கு 8 மணி நேர பணிக்கு தனியார் மருத்துவமனைகள் தருவதோ சொற்ப ஊதியம்தான். இந்தச் சூழல்நிலையில், மருத்துவப் படிப்பு மீதான மோகம் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

பிளஸ் 1 வகுப்பில் சேர்ந்ததுமே, நீட் பயிற்சி மையங்களில் மாணவர்கள் பலரும் சேர்க்கப்படுகிறார்கள். அவர்களின் விருப்பம், திறமை என்ன என்பது குறித்து சிந்திக்காமல், சமூகத்தில் தங்கள் அந்தஸ்தை உயர்த்திக் காட்டுவதற்காகவே, மருத்துவராக்க வேண்டும் என்ற அழுத்தத்தை பிள்ளைகள் மீது பெற்றோர் திணிக்கிறார்கள்.

ஒரே வகுப்பறையில் படித்த இரண்டு நண்பர்களில், ஒருவர் பொறியியல் படிப்பைத் தேர்வு செய்து, 22 வயதில் படிப்பை முடித்து முன்னணி மென்பொருள் நிறுவனத்தில் வேலையில் சேர்கிறார். அவருக்கு தொடக்கத்திலேயே நல்ல ஊதியம் கிடைக்கிறது.

ஆனால், அவருடன் படித்து, மருத்துவக் கனவுடன் நுழைவுத் தேர்வுகளை எதிர்கொண்ட மற்றொரு மாணவரின் நிலையோ தலைகீழ். எம்பிபிஎஸ் முடித்து, கட்டாயப் பயிற்சி முடித்து, மீண்டும் முதுநிலை நுழைவுத் தேர்வுக்குப் படித்து, ஒரு சிறப்பு மருத்துவராக வெளியே வரும்போது அவருக்கு வயது 30-ஐ தொடுகிறது.

தனது பள்ளி நண்பர் வீடு, கார் என வாழ்க்கையின் அடுத்தகட்டத்துக்குச் சென்றிருக்கும் அதே வேளையில், 30 வயதைக் கடந்த இந்த மருத்துவர், தனது வாழ்க்கையை அப்போதுதான் தொடங்குகிறார்.

அரசு ஒதுக்கீட்டில் இடம் கிடைக்காமல் தனியார் கல்லூரியில் இளநிலை மருத்துவப் படிப்பில் சேரும் மாணவர், படித்து முடிக்க ரூ. 50 லட்சம் முதல் ஒரு கோடி ரூபாய் வரை செலவாகிறது. 2024-25-ஆம் கல்வியாண்டின் தரவுகளின்படி, இந்தியா முழுவதும் சுமார் 24 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வை எழுதினர். இதில் தமிழகத்தில் இருந்து மட்டும் சுமார் 1.5 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர்.

இவ்வளவு பெரிய போட்டிக்களத்தில் வெற்றி பெற்று, கோடிகளில் செலவு செய்து படித்த மருத்துவருக்கு, கார்ப்பரேட் மருத்துவமனைகள் நிர்ணயிக்கும் தொடக்கநிலை ஊதியம் மாதம் ரூ. 35,000 முதல் ரூ.45,000 வரை மட்டுமே. வங்கிக் கணக்கின்படி பார்த்தால், கல்விக் கடனுக்கு மாதம் 45,000 ரூபாய் தவணை செலுத்த வேண்டிய நிலையில், 30,000 ரூபாய் ஊதியத்தை வைத்துக் கொண்டு இவர்கள் அனுபவிக்கும் மன உளைச்சலும், சமூகப் பொருளாதார அழுத்தமும் விவரிக்க இயலாதது. ஏராளமாக செலவு செய்து எம்பிபிஎஸ் முடித்தாலும், முதுநிலை மருத்துவப் படிப்பு இல்லாவிடில் அவர்கள் ஒரு முழுமையான மருத்துவராக அங்கீகரிக்கப்படுவதில்லை என்பதுதான் கசப்பான உண்மை. சாதாரண காய்ச்சலுக்குக்கூட சிறப்பு மருத்துவர்களை நாடும் போக்கு உள்ளது.

இதனால், எம்பிபிஎஸ் முடித்தவுடன் முதுநிலை மேற்படிப்பு என்னும் அடுத்தகட்ட போட்டிக்குள் மருத்துவ மாணவர்கள் தள்ளப்படுகிறார்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் இந்தியாவில் 120-க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் பணிச்சுமை, மன அழுத்தம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்று தேசிய மருத்துவ ஆணையத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.

அரசு மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்குக் கல்விக் கட்டணம் குறைவு என்பதும், தமிழக அரசு பயிற்சி மருத்துவர்களுக்கு வழங்கும் ஊக்கத்தொகை ஆறுதல் அளிக்கிறது என்பதும் மறுப்பதற்கில்லை. ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மருத்துவர்கள் படித்து முடித்து வருகின்றனர். அரசு மருத்துவர் பணியிடங்கள் போதிய அளவில் நிரப்பப்படாததால், 90 சதவீத மருத்துவர்கள் கார்ப்பரேட் மருத்துவ நிறுவனங்களில் பணிக்குச் சேர வேண்டியுள்ளது. சொந்தமாக கிளினிக் வைக்கலாம் என்றால், அதற்கு முதலீடு தேவைப் படுகிறது.

ஒரு பொறியாளருக்கோ, ஒரு திறன்சார் தொழிலாளிக்கோ வழங்கப்படும் குறைந்தபட்ச ஊதியத்தைப் போல, தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் எம்பிபிஎஸ் மருத்துவர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியத்தை அரசே நிர்ணயம் செய்ய வேண்டும். கிராமப்புறங்களில் அல்லது சிறு நகரங்களில் கிளினிக் அமைக்க விரும்பும் இளம் மருத்துவர்களுக்கு, பிணையில்லா கடன் மற்றும் வரிச் சலுகைகளை வழங்க வேண்டும்.

மருத்துவம் ஒரு சேவைதான்; அதைச் செய்பவரும் வாழ்வாதாரம் தேவைப்படும் ஒரு மனிதரே என்பதை உணர்வதுதான் ஒட்டுமொத்த சமூகத்தின் ஆரோக்கியத்துக்கான அடித்தளம். மருத்துவத் துறையில் வெற்றி பெற்ற மருத்துவர்கள் பலரும் உள்ளனர் என்பதையும் மறுக்க முடியாது. அதேநேரத்தில், மருத்துவக் கல்வி மீதான சமூகத்தின் கண்மூடித்தனமான மோகமும், பெற்றோரின் அழுத்தமும், வணிகமயமான கல்விச்சூழலும் மாற வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter


காட்சிப் பொருளாகும் கொண்டாட்டங்கள்!

DINAMANI KATTURAIGAL

காட்சிப் பொருளாகும் கொண்டாட்டங்கள்!

17.02.2026

முன்பெல்லாம் திருமண வீடுகள் என்றால், அங்கு மனிதர்களின் அன்யோன்யம் வாசலில் இருந்தே தொடங்கிவிடும். ஆனால் இன்று, ஒரு திருமண மண்டபத்துக்குள் நுழைந்தால் நாம் காண்பது உறவுகளின் நெருக்கத்தை அல்ல; மாறாக, நிழற்படக் கருவிகளின் ஒளிக்கற்றைகளைத் தேடி அலையும் மனிதர்களைத்தான்.


IANS



Updated on:
17 பிப்ரவரி 2026, 5:20 am

தமிழர் பண்பாட்டு வரலாற்றில் திருவிழாக்களும் இல்லச் சடங்குகளும் வெறும் களியாட்டங்கள் அல்ல; அவை சமூகப் படிநிலைகளில் சிதறிக் கிடக்கும் உறவுகளை ஒரு புள்ளியில் பிணைக்கும் கண்ணுக்குத் தெரியாத இழை. ஊர் கூடித் தேர் இழுப்பதும், பந்தி விசாரிப்புகளும் ஒரு சமூகத்தின் கூட்டு மனசாட்சியை உரசிப் பார்க்கும் தருணங்கள். ஆனால், இன்றைய சமூக ஊடக யுகத்தில் கொண்டாட்டங்களின் ஆன்மா நசுக்கப்பட்டு, அவை வெறும் காட்சிப் பொருள்களாகவும், போலியான பாவனைகளாகவும் மாறி வருவது நம் காலத்தின் பண்பாட்டுத் துயரம்.

முன்பெல்லாம் திருமண வீடுகள் என்றால், அங்கு மனிதர்களின் அன்யோன்யம் வாசலில் இருந்தே தொடங்கிவிடும். ஆனால் இன்று, ஒரு திருமண மண்டபத்துக்குள் நுழைந்தால் நாம் காண்பது உறவுகளின் நெருக்கத்தை அல்ல; மாறாக, நிழற்படக் கருவிகளின் ஒளிக்கற்றைகளைத் தேடி அலையும் மனிதர்களைத்தான்.

நிச்சயதார்த்தம் முதல் வளைகாப்பு வரை அனைத்தும் இன்று ஒரு நாடக மேடைபோல மாற்றப்பட்டு விட்டன. மணமக்களின் அக உணர்வுகளைவிட, நிழற்படக் கலைஞரின் கோணங்களே முதன்மை பெறுகின்றன. தாலி கட்டும் புனிதமான அந்த விநாடியில்கூட, உற்றார் உறவினர்களின் வாஞ்சையான பார்வையைவிட, அறிதிறன்பேசிகளின் செயற்கை வெளிச்சமே அந்த இடத்தை ஆக்கிரமிக்கிறது. இது உறவுகளின் சங்கமம் என்பதைவிட, பிம்பங்களின் சந்தை என்றே சொல்லத் தோன்றுகிறது.

இன்றைய கொண்டாட்டங்கள் வாழ்வதற்காக அல்ல; பதிவிடுவதற்காக மட்டுமே என்று மாறிவிட்டது. ஒரு மங்கல நிகழ்வுக்குச் செல்பவர்கள், அங்குள்ளவர்களிடம் நலம் விசாரிப்பதைக் காட்டிலும், அங்குள்ள அலங்காரங்களையும் உணவுகளையும் சமூக ஊடகங்களிலும், தங்கள் வாட்ஸ் } ஆப்பிலும் நிலைத்தகவலாக பதிவிடுவதிலேயே குறியாக இருக்கிறார்கள்.

உதாரணமாக, ஒரு பிறந்த நாள் கொண்டாட்டத்தில் மெழுகுவர்த்தி அணைக்கப்படும்போது, அங்கிருப்பவர்கள் பாடும் வாழ்த்துப் பாடல் உண்மையான மகிழ்ச்சியில் ஊற்றெடுப்பதில்லை. அது காணொலியில் சரியாகப் பதியப்பட வேண்டும் என்பதற்காகச் செய்யப்படும் ஒரு போலி ஒத்திகையாகவே இருக்கிறது. ஒளிப்படக் கருவி அணைக்கப்பட்ட அடுத்த விநாடியே, அந்த அறையில் மெüனம் குடியேறுகிறது. ஒவ்வொருவரும் தங்கள் பதிவுக்கு எத்தனை பாராட்டுகளும், விருப்பக் குறியீடுகளும் கிடைத்தன என்று எண்ணத் தொடங்கிவிடுகின்றனர். இது கொண்டாட்டத்தின் நேரடி அனுபவத்தை முற்றிலுமாகச் சிதைத்து விடுகிறது.

பந்தி விசாரிப்பு என்பது தமிழ்ப் பண்பாட்டின் ஆகச்சிறந்த அடையாளம். பரிமாறுபவரின் அன்பும், உண்பவரின் திருப்தியும் அங்கு உரையாடல்களாக மாறும். ஆனால் இன்று, இலை போடப்பட்டவுடன் கைகள் முதலில் அறிதிறன் பேசியைத்தான் தேடுகின்றன. அந்த உணவின் சுவையை நாவால் அறியும் முன்பே, அகிலம் அறியச் செய்கிறார்கள்.

முன்பெல்லாம் உணவின் தரமும் ருசியும் பேசப்படும்; இன்று அந்த உணவைப் படம் பிடித்த கோணம் பேசப்படுகிறது. பந்தியில் அருகருகே அமர்ந்திருப்பவர்களிடம் ஒரு புன்னகையைப் பரிமாறிக் கொள்ளக்கூட நேரமில்லாமல், கண்ணுக்குத் தெரியாத இணைய நண்பர்களுக்குப் பதில் சொல்வதிலேயே காலத்தைக் கழிக்கின்றனர். இது பந்தி கலாசாரத்தின் மற்றொரு கோணமாக மாறிவிட்டது.

கிராமத்து திருவிழாக்களில் ஜாதி, மத பேதமின்றி மக்கள் ஒன்றுகூடிய மந்தை கலாசாரம், இன்று வாட்ஸ்}ஆப் குழு கலாசாரமாகச் சுருங்கிவிட்டது. ஊர்த் திருவிழாக்களில்கூட, முன்னின்று வேலை செய்பவர்களைவிட, தற்படம் எடுப்பவர்களின் எண்ணிக்கையே அதிகம். பாரம்பரியக் கலைகள் அவற்றின் கலைத் தன்மைக்காக ரசிக்கப்படாமல், இணையப் பக்கங்களை அலங்கரிக்கும் "பின்னணி இசை'யாக மாற்றப்படுவது பண்பாட்டுச் சிதைவின் உச்சம்.

கொண்டாட்டங்கள் என்பவை ஒருவருக்கொருவர் அன்புடன் நலன் விசாரித்து, மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளும் களம். ஆனால், இன்று ஒரு துக்க வீட்டில்கூட கைப்பேசியில் படம் பிடிப்பவர்களைக் காண முடிகிறது. உணர்வுகளின் வெளிப்பாடாக இருந்த கண்ணீரும், புன்னகையும் இன்று வெறும் குறியீடுகளின் கூடாரங்களாகிவிட்டன.

உறவினர்களுடன் மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருந்த காலங்கள்போய், இப்போது படங்களை மட்டும் அனுப்புங்கள், அப்புறம் பேசலாம் என்று சொல்லும் இயந்திரத்தனமான மனிதர்களாக நாம் மாறிவிட்டோம்.

இந்தத் தொடர் ஓட்டத்தில், அடுத்த தலைமுறைக்கு உறவுகளின் பெயரோ அல்லது அவற்றின் ஆழமோ தெரியாமல் போகும் அபாயம் உள்ளது.

இந்த மாற்றத்துக்குப் பின்னால் ஓர் ஆபத்தான உளவியல் ஒளிந்திருக்கிறது. "தான் மகிழ்ச்சியாக இருக்கிறோம்' என்பதைவிட "தான் மகிழ்ச்சியாக இருப்பதாக மற்றவர்களுக்குக் காட்டிக்கொள்வதில்' மனிதர்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். மற்றவர்களின் அங்கீகாரத்துக்காக வாழத் தொடங்குவது ஒரு சமூகத்தின் ஆன்ம பலத்தைக் குறைத்துவிடும்.

நிஜமான அன்யோன்யம் குறைந்து, மேலோட்டமான தொடர்புகள் அதிகரிப்பது மனிதர்களைத் தனிமைக்குள் தள்ளுகிறது.

தொழில்நுட்பம் என்பது நம் வாழ்வை எளிதாக்க வேண்டுமே தவிர, நம் உணர்வுகளை ஆக்கிரமிக்கக் கூடாது. நிழற்படங்கள் எடுப்பதைக் குறைத்துவிட்டு, மனிதர்களை நேரில் பார்ப்போம். திரைகளுக்குப் பின்னால் ஒளிந்திருப்பதை விடுத்து, நிஜ உலக உரையாடல்களில் ஈடுபடுவோம். குழந்தைகளுக்கு உறவுகளின் உன்னதத்தை வாழ்த்தும் விதமாக நம் நேரத்தைச் செலவிடுவோம்.

வெறும் பதிவுகளுக்காகக் கொண்டாடப்படும் எந்த ஒரு நிகழ்வும் வரலாற்றில் நிற்காது; நினைவுகளில் மட்டுமே வாழும் தருணங்கள் என்றும் அழியாது. ஆரவாரமான விளக்குகளும், நிழற்படக் கருவிகளும் அணைந்த பிறகு மிஞ்சப் போவது என்னவோ நாம் பகிர்ந்துகொண்ட அந்த அன்பின் உரையாடல்கள் மட்டும்தான். எனவே, பிம்பங்களைத் தேடுவதை நிறுத்திவிட்டு, மீண்டும் மனிதர்களைத் தேடத் தொடங்குவோம்.

அப்போதுதான் நம் பண்பாடு சிதையாமல் அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

Thursday, February 12, 2026

நிறுத்தம் தேடும் நகரம் !


நிறுத்தம் தேடும் நகரம் !

30 அடி சாலைகளிலும், முட்டுச் சந்துகளிலும் கார்களை நிறுத்திவிடுவதால், அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள்கூட உள்ளே நுழைய முடியாத அவலநிலை ஏற்படுகிறது.


 
 


Updated on:
12 பிப்ரவரி 2026, 5:30 am


தற்போது ஒரு கார் வாங்குவது என்பது பலருக்கும் எளிய காரியமாகிவிட்டது. ஆனால், வாங்கிய காரை பாதுகாப்பாக நிறுத்துவதற்கு இடம் தேடுவதுதான் இமாலயப் பிரயத்தனமாக உள்ளது. நகரமயமாக்கலின் வேகத்தில் சாலைகள் சுருங்கி வரும் வேளையில், வாகனங்களின் எண்ணிக்கை மட்டும் பெருகிக்கொண்டே போவது ஒரு முரண்பாடான சூழலை உருவாக்கியுள்ளது.

இன்று பெரும்பாலான தெருக்களின் இரு பக்கங்களிலும் கார்கள் அணிவகுத்து நிற்பதை நாம் காண்கிறோம். இது மற்ற வாகன ஓட்டிகளுக்கும், பாதசாரிகளுக்கும் பெரும் இடைஞ்சலாக இருக்கிறது. குறிப்பாக 30 அடி சாலைகளிலும், முட்டுச் சந்துகளிலும் கார்களை நிறுத்திவிடுவதால், அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள்கூட உள்ளே நுழைய முடியாத அவலநிலை ஏற்படுகிறது. தீயணைப்பு வாகனங்கள் போன்ற பெரிய ஊர்திகள் ஒரு நெருக்கடி காலத்தில் உள்ளே நுழைய முற்படும்போது, இந்தச் சாலை ஆக்கிரமிப்புகள் உயிரிழப்புகளுக்கு காரணமாகிவிடுகின்றன. நகரத்தின் ஒவ்வோர் அங்குலமும் விலையுயர்ந்ததாக மாறிவிட்ட சூழலில், சாலையைத் தனது சொந்தச் சொத்தாகக் கருதும் மனப்பான்மை மக்களிடையே வேரூன்றி வருவது கவலைக்குரியது.

அந்தந்தத் தெருவில் குடியிருப்பவர்கள் தங்கள் வீட்டின் முன் நிறுத்துவதில் ஒரு நியாயம் இருக்கலாம். ஆனால், வேறு எங்கோ குடியிருப்பவர்களும், வாடகை வாகனங்கள் ஓட்டுபவர்களும் தங்களுக்கு வசதியான ஒரு தெருவை வம்படியாகப் பிடித்துக் கொள்கிறார்கள். சிலர் மாதக்கணக்கில் தங்கள் வாகனங்களை அங்கேயே தூசி படிய விட்டுச் செல்கிறார்கள்.

20 அல்லது 30 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் வாகன நிறுத்தத்துக்கான போதிய வசதிகள் இல்லாமல் கட்டப்பட்டன. அப்போது, கார் என்பது ஆடம்பரப் பொருளாக இருந்ததே அதற்குக் காரணம். ஆனால், இன்று கார் என்பது அத்தியாவசியத் தேவையாகிவிட்டது. அந்தப் பழைய குடியிருப்புகளில் வசிப்பவர்கள் வேறு வழியின்றி சாலைகளையும் பொதுத் தெருக்களையும் நாடுகிறார்கள்.

"இங்கே வாகனம் நிறுத்த அனுமதி இல்லை' என்று வீட்டு உரிமையாளர்கள் பலகை வைப்பது சட்டப்படி செல்லாது என்ற விதியைப் பயன்படுத்தி, மற்றவர்களின் வாசலிலேயே வாகனத்தை நிறுத்திவிட்டுச் செல்பவர்கள் ஏராளம். இதனால், வீட்டின் உரிமையாளர் தன் சொந்த வாகனத்தையே வெளியே எடுக்க முடியாமல் தவிக்கிறார்.

வாகன நிறுத்தத்தை பிரச்னையை மையமாக வைத்து வெளிவந்த திரைப்படம்கூட இங்குள்ள தீவிரத்தை உணர்த்துகிறது. மேலோட்டமாகப் பார்த்தால் இது ஒரு சாதாரண விஷயமாக தோன்றலாம். ஆனால், தினமும் இதே பிரச்னையைச் சந்திக்கும் ஒருவருக்கு இது பெரும் கோபத்தையும் மன அழுத்தத்தையும் ஏற்படுத்துகிறது.

உணவகங்கள், மருந்தகங்கள் மற்றும் சிறு கடைகள் அமைந்துள்ள சாலைகளில் போதிய நிறுத்த வசதி இல்லாததால், வாடிக்கையாளர்கள் சாலையிலேயே வாகனங்களை நிறுத்துகின்றனர். குறிப்பாக, உணவகங்களில் சாப்பிடுவதற்கு அதிக நேரம் எடுக்கும் என்பதால், அங்கு வரும் வாகனங்கள் நீண்ட நேரம் சாலையை அடைத்துக் கொள்கின்றன. 30 அடி

அகலச் சாலைகளில் உணவகங்களைத் திறக்க அனுமதிக்கும் போது, வாகன நிறுத்த வசதி இருப்பதை அரசு கட்டாயம் உறுதி செய்ய வேண்டும்.

மேலைநாடுகளில் வாகன நிறுத்தம் குறித்த விதிகள் எவ்வளவு கடுமையானவை என்பதை லண்டன் சென்றிருந்தபோது நேரில் உணர முடிந்தது. ஒருமுறை அங்குள்ள ஓர் உணவகத்தில் நாங்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். கார் நிறுத்துமிடத்தில் இரண்டு மணி நேரத்துக்கு மட்டும் கட்டணம் செலுத்திவிட்டு வந்திருந்தோம். பேச்சு சுவாரஸ்யத்திலும், உணவின் ருசியிலும் நேரம் போனதே தெரியவில்லை. திடீரென கடிகாரத்தைப் பார்த்த என் மகன் பதறிப்போனான். இன்னும் சில நிமிஷங்களில் நாங்கள் ஒதுக்கிய நேரம் முடிவடைய இருந்தது. அடுத்த நிமிஷம், பாதி சாப்பாட்டிலேயே அவன் எழுந்துவிட்டான்.

கார் நிறுத்தியிருந்த இடம் அரை கி.மீ. தொலைவில் இருந்தது. நடுங்கும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஓடிச் சென்று, பார்க்கிங் இயந்திரத்தில் மேலும் ஒரு மணி நேரத்துக்கு கட்டணம் செலுத்திவிட்டு மூச்சிரைக்கத் திரும்பி வந்தான். ஒரு நிமிஷம் தாமதமானாலும் அபராதம் மிகப் பெரிய தொகையாக இருக்கும், சட்டத்தை மீறுவது அங்கு சாத்தியமே இல்லை. நம் ஊரில் இது போன்ற சூழலில் "யார் பார்க்கப் போகிறார்கள்?' என்று அலட்சியமாக இருக்கும் மனநிலைதான் விபத்துகளுக்கும் நெரிசலுக்கும் வித்திடுகிறது.

லண்டனில் ஒரு வாகன ஓட்டி ஆண்டுக்கு சராசரியாக 67 மணி நேரத்தை வாகன நிறுத்துமிடத்தை தேடுவதற்கே செலவிடுகிறார். ஒரு வணிக வளாகத்துக்கோ அல்லது கேளிக்கை விடுதிக்கோ செல்லும் முன்பே, அங்கு வாகன நிறுத்தும் வசதி உள்ளதா என்பதை உறுதி செய்த பின்னரே மக்கள் கிளம்புகிறார்கள். அங்கு 'யெல்லோ லைன்' விதிகள் உண்டு. ஒற்றை மஞ்சள் கோடு இடப்பட்ட சாலைகளில், குறிப்பிட்ட சில நேரங்களில் மட்டுமே வாகனங்களை நிறுத்த அனுமதி உண்டு; அந்த நேரங்கள் குறித்த விவரங்கள் அருகில் உள்ள அறிவிப்புப் பலகையில் குறிக்கப்பட்டிருக்கும்.

ஆனால், இரட்டை மஞ்சள் கோடுகள் உள்ள பகுதிகளில் எந்த நேரத்திலும் வாகனங்களை நிறுத்தவோ அல்லது நிறுத்திவைக்கவோ அனுமதி இல்லை. மேலும், நடைபாதையிலிருந்து சாலைக்கு இறங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள சரிவான பகுதிகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சக்கர நாற்காலியைப் பயன்படுத்துபவர்களின் வசதிக்காக உருவாக்கப்பட்டவை. இத்தகைய சரிவான பகுதிகளில் வாகனங்களை நிறுத்துவது கடுமையான விதிமீறலாகக் கருதப்பட்டு, அதற்குக் கடும் தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும்.

நமது ஊரில் அபராதம் விதிக்கப்பட்டால் அதைச் செலுத்தாமல் தவிர்க்கவே பலரும் முயல்கிறார்கள். ஆனால், வெளிநாடுகளில் 14 நாள்களுக்குள் அபராதத்தைச் செலுத்தினால் 50% தள்ளுபடி போன்ற நடைமுறைகள் மூலம் மக்களைச் சட்டத்துக்கு உட்படுத்த தூண்டுகிறார்கள். இதன் மூலம் சட்டத்தின் மீதான பயமும் மரியாதையும் ஒருசேர வளர்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் சுமார் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான புதிய வாகனங்கள் பதிவு செய்யப்படுகின்றன. சொந்தமாக வாகன நிறுத்துமிடம் இருந்தால் மட்டுமே புதிய கார் வாங்குவதற்கான உரிமம் வழங்கப்படும் என்ற சட்டத்தைக் கொண்டுவருவது குறித்து அரசு தீவிரமாகப் பரிசீலிக்க வேண்டும். இது தொடக்கத்தில் சற்றே கடினமான நடைமுறையாகத் தோன்றினாலும், வருங்காலத் தலைமுறை நெரிசலற்ற சாலைகளில் பயணிப்பதை உறுதி செய்ய இத்தகைய கடுமையான சட்டங்கள் மட்டுமே சரியான தீர்வாக அமையும்.

மேலும், இன்றைய நெருக்கடியைத் தவிர்க்க, நவீனத் தொழில்நுட்பத்தின் உதவியால், கைப்பேசி செயலிகள் வழியாக நகரில் எந்தெந்த இடங்களில் வாகன நிறுத்தங்கள் காலியாக உள்ளன என்பதை மக்கள் முன்கூட்டியே அறிந்துகொள்ளும் வசதியை அரசு ஏற்படுத்தித் தர வேண்டும்.

சுற்றுலாத் தலங்களிலும், கோயில்களிலும் வாகனங்களை நிறுத்துவது பெரும் சவாலாக உள்ளது. வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கோயிலுக்கு மிக அருகே இறங்க விரும்புகிறார்கள். ஆனால், அங்கிருக்கும் கடைகள் மற்றும் ஆக்கிரமிப்புகளால் அது முடிவதில்லை. எனவே, பெரிய கோயில்களின் நான்கு வாயில்களிலும் பல்லடுக்கு வாகன நிறுத்தங்களை உருவாக்கி, அங்கிருந்து பேட்டரி கார்கள் மூலம் மக்களை அழைத்துச் செல்லும் முறையை அமல்படுத்தலாம்.

முன்பெல்லாம் உணவு, உடை, இருப்பிடம் ஆகிய மூன்றே அத்தியாவசியத் தேவைகளாகக் கருதப்பட்டன. இன்று நம் வாகனத்துக்கான இடமும் அந்தப் பட்டியலில் இணைந்துள்ளது. சிலர் தங்கள் வீட்டின் காலி மனைகளை வாகன நிறுத்தத்துக்காக வாடகைக்கு விடுகின்றனர். இது ஒரு பக்கம் தீர்வாக இருந்தாலும், அனைத்துத் தரப்பு மக்களுக்கும் இது சாத்தியமில்லை. குறிப்பாக, நடுத்தர வர்க்கத்தினர் ஏற்கெனவே காருக்கான தவணைத் தொகையை செலுத்திக் கொண்டிருக்கும் நிலையில், வாகன நிறுத்துமிடத்துக்கும் தனியாக பணம் செலவழிப்பது பெரிய சுமையாகத் தெரிகிறது.

அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் வாக்குறுதிகளில் இலவசங்களைக் கொடுப்பதைவிட, ஐந்து தெருவுக்கு பொது பல்லடுக்கு வாகன நிறுத்தங்களை அமைத்துத் தருவோம் என்று உறுதியளிக்க வேண்டும். தெருக்கள் என்பது மக்கள் நடப்பதற்கும், போக்குவரத்துக்கும் மட்டுமே அன்றி கார்களை நிறுத்தி வைப்பதற்கான நிரந்தர இடங்கள் அல்ல. அரசு முறையான உள்கட்டமைப்பைச் செய்து கொடுத்து, மக்களும் மற்றவர்களுக்கு இடைஞ்சல் தராத வகையில் செயல்பட்டால் மட்டுமே நம் நகரங்கள் நெரிசலில் இருந்து தப்பிக்கும்.

கார் வாங்கும் போது காட்டும் ஆர்வத்தை, அதைச் சரியாகப் பராமரிப்பதிலும் நிறுத்துவதிலும் நாம் காட்ட வேண்டும். நம்முடைய வசதி மற்றவர்களின் உரிமைகளைப் பறிப்பதாக இருக்கக் கூடாது. ஏனெனில், நாம் வாங்கும் கார் நம் செல்வாக்கின் அடையாளம் என்றால், அதை அடுத்தவருக்கு இடையூறின்றி நிறுத்துவதே நம் நாகரிகத்தின் அடையாளம்!

கட்டுரையாளர்:

Tuesday, February 10, 2026

பசித்துப் புசித்தால் உணவே மருந்து!


பசித்துப் புசித்தால் உணவே மருந்து!

சுவைக்கு அடிமையாவதைத் தவிர்த்து, ருசிக்காக தேடிச் செல்லாமல், பசிக்கு மட்டும் உண்டு வந்தால் என்றும் நலமுடன் இருக்கலாம்.


உணவே மருந்து..



Updated on:
09 பிப்ரவரி 2026, 4:11 am

உணவே மருந்து, இல்லாவிட்டால் மருந்தே உணவாகி விடும் என்பர் முன்னோர். நாடு பசிப் பிணி இல்லாமல் இருக்க வேண்டும் என கூறிய அவர்கள், அந்தப் பசியைப் போக்கும் உணவால் வேறு பிணிகள் வந்துவிடக்கூடாது என்பதிலும் எச்சரிக்கையாக இருந்தனர்.

ஆனால், அண்மைக்காலமாக நாம் உண்ணும் உணவே நமக்கு விஷமாகி வருகிறது. வீட்டில் சமைக்கும் உணவைச் சாப்பிட்டு வந்தால் தப்பித்தோம். வணிக ரீதியாக உணவகங்களில் தயாராகும் உணவுகள் உடலோடு மட்டுமல்ல, உயிரோடும் விளையாடி விடுகின்றன.

நம் நாட்டின் தட்ப வெப்பநிலைக்கு மட்டுமல்ல, நாம் வாழும் பகுதிக்கு ஏற்ற உணவுகளை மட்டுமே நாம் உண்ண வேண்டும். அவ்வாறு இல்லாமல், நாவில் உமிழ்நீரைச் சுரக்க வைப்பதாகவும், பார்வைக்கு கவர்ச்சியாகவும் தெரியும் வெளிநாடுகளில் உண்பதாகக் கூறி, அதேபோல, இங்கு தயார்செய்யப்படும் உணவுகளை உண்பதில் சிறுவர் முதல் பெரியோர் வரை தற்போது ஆர்வம் காட்டுகின்றனர்.

பலரும் சைவ உணவுகளை மறந்து, அசைவ உணவுக்கு அடிமையாகி விட்டனர் என்றே கூறலாம். அசைவ உணவுகள் உடலுக்கு ஆரோக்கியம் அளிப்பதாகக் கூறப்பட்டாலும், அதை உரிய பக்குவத்தோடு தயார் செய்து உண்டால் எந்தவித பாதிப்புமில்லை.

ஆனால், இன்றைய சூழலில் பல உணவகங்களில் விற்பனையை அதிகரிப்பதற்காக, உணவுகளில் சேர்க்கப்படும் அளவுக்கு மீறிய ரசாயனம், சுவையைக் கூட்ட தேவையற்ற பொருள்கள் கலப்பு, வாய் மற்றும் வயிற்றைப் புண்ணாக்கும் வகையிலான காரம், அதிக உப்பு, புளிப்பு சேர்ப்பு போன்றவை அவற்றை உண்ணும்போது நாக்குக்கு ருசியாகத் தெரிந்தாலும், அன்றோ அல்லது மறுநாளோ ஆரோக்கியக் குறைபாட்டை ஏற்படுத்தி, மருத்துவமனையில் நம்மை அனுமதிக்கச் செய்துவிடுகிறது.

வீதிக்கு வீதி தேநீர் கடைகள் இருப்பதுபோல, இப்போது தெருவுக்குத் தெரு பிரியாணி கடைகள் முளைத்த வண்ணம் உள்ளன. தமிழகம் முழுவதும் 50 ஆயிரத்துக்கும் அதிகமான பிரியாணி கடைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. முட்டை பிரியாணி, சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, ’மா' பிரியாணி, மீன் பிரியாணியை தவிர்த்து, பிற உயிரினங்கள் சார்ந்த பிரியாணி வகைகளும் 100 ரூபாயில் தொடங்கி, 500 ரூபாய் வரை விற்பனையாகின்றன.

சுமார் 30 முதல் 40 ஆண்டுகளுக்கு முன்பு வரை ரம்ஜான், பக்ரீத் போன்ற இஸ்லாமியர்களின் பண்டிகை நாள்களிலும், அவர்களுடைய இல்ல திருமணம், புதுமனை புகுவிழா போன்றவற்றிலும் அனைத்துத் தருப்பினரும் பங்கேற்று பிரியாணியை விரும்பிச் சாப்பிடுவர். அதே போல, பிரியாணிக்கு பெயர் பெற்ற நகரங்களான ஆம்பூர், வாணியம்பாடி, திண்டுக்கல், சங்கரன்கோவில் போன்ற ஊர்களுக்குச் சென்றால் ஆசைக்காக உண்டு மகிழ்வோரும் உண்டு.

ஆனால், காலமாற்றத்தில் இப்போது, புத்தாண்டு, பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை காலமானாலும், பிறந்த நாள், திருமண நாள், காதணி விழா, நெடுநாள்களுக்குப் பிறகு சந்திப்பு என எந்தவித கொண்டாட்டமாக இருந்தாலும், அங்கு தவறாமல் இடம்பெறுவது பிரியாணியாகவே இருக்கிறது. தரமான உணவகங்களில் அவற்றைச் சாப்பிடுவோர் தப்பித்துக்கொள்கின்றனர்.

நாள்பட்ட இறைச்சிகளை உணவுக்குப் பயன்படுத்துவது, குளிர்பதனப் பெட்டியில் வைக்காமல் பாதுகாப்பின்றி வைத்திருப்பது, உயிரோடு வாங்கிவந்து இறைச்சியாகப் பயன்படுத்தாமல், இறந்தவற்றை குறைவான விலைக்கு வாங்கிப் பயன்படுத்தும் போக்கு சில பிரியாணி கடைகளில் அரங்கேறுகின்றன. இது ஒருபுறம் என்றால், நகரப் பகுதிகளிலும், தேசிய நெடுஞ்சாலை ஓரங்களிலும் குறைவான விலையில் ’கறி விருந்து' என்ற பெயரில் உணவகங்கள் பல உள்ளன.

இறைச்சியை வாங்கிச் சென்று, அதைச் சுத்தப்படுத்தி சமைத்துச் சாப்பிடுவதற்கு சோம்பல்பட்டு, இவ்வாறான உணவகங்களை நாடிச் செல்வோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் இவ்வாறான உணவகங்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க மாவட்ட அளவிலும், வட்ட அளவிலும் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உள்ளனர். அவர்கள் ஆய்வுக்குச் செல்லும்போது இத்தகைய குறைபாடுகளைக் கண்டறிந்து அபராதம் விதிக்கின்றனரே தவிர, தொடர்ந்து அந்த உணவகங்களைக் கண்காணிப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

ஓரிரு நாள்கள் அதிகாரிகள் உத்தரவைச் செயல்படுத்தும் உணவகத்தினரும், அதன் பிறகு தங்களுடைய வருவாயைப் பெருக்கவே ஆர்வம் காட்டுகின்றனர். உணவகங்கள் மட்டுமல்ல, அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளில் உள்ள விடுதிகளிலும் இவ்வாறான பிரச்னைகள் உள்ளன. பொதுமக்கள், மாணவர்களின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவதைக் காட்டிலும், அலட்சியம் காட்டுவதிலேயே பலரும் உள்ளனர். கலப்படமற்ற உணவுகளை உண்டோர் 85, 90 வயதுவரை வாழ்ந்தனர். அதற்கும் மேலாக 100 வயதைக் கடந்து வாழ்வோரும் உண்டு.

ஆனால், தற்போதைய அவசர காலத்தில் ஆரோக்கியமற்ற துரித உணவுகளால் 45 வயதுக்குள்ளாகவே உடல்நலன் பாதிப்புக்குள்ளாவோர் எண்ணிக்கை அதிகம். உண்பது செரிப்பதற்கு ஏற்ப உழைப்பது சுருங்கிப் போனது, உடல் ஆரோக்கியம் கெடுவதற்கும் உயிரிழப்புக்கும் காரணம்.

அசைவ உணவு உண்டதால் மாணவர்களுக்கு பாதிப்பு, பொதுமக்களுக்கு பாதிப்பு என்று நாள்தோறும் வெளியாகும் செய்திகள், உணவின் மீதும், உணவகங்கள் மீதான நம்பிக்கையை இழக்கச் செய்துள்ளது என்பதே உண்மை. வாழும் காலத்தில் மருத்துவமனையை நாடிச் செல்லாமல், உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்குரிய வழியைத் தேடினால், எந்த வகையிலும் தொல்லை இல்லை. அதற்கு சுவைக்கு அடிமையாவதைத் தவிர்த்து, ருசிக்காக தேடிச் செல்லாமல், பசிக்கு மட்டும் உண்டு வந்தால் என்றும் நலமுடன் இருக்கலாம்.

தமிழகத்தில் 6 புதிய அரசு செவிலியா் கல்லூரிகள் அமைக்கப்படும்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்


தமிழகத்தில் 6 புதிய அரசு செவிலியா் கல்லூரிகள் அமைக்கப்படும்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் புதிதாக 6 அரசு செவிலியா் கல்லூரிகள் அமைக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் ...


சென்னையில் தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற செவிலியா் பட்டமளிப்பு விழாவில் பட்டங்களை வழங்கிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன்.


Updated on:
10 பிப்ரவரி 2026, 6:05 am


சென்னை: தமிழகத்தில் புதிதாக 6 அரசு செவிலியா் கல்லூரிகள் அமைக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவ பல்கலைக்கழகத்தில் செவிலியா் பட்டமளிப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட அமைச்சா் மா.சுப்பிரமணியன் டிப்ளமோ நா்சிங் முடித்த 949 போ், பி.எஸ்சி. நா்சிங் முடித்த 75 போ் மற்றும் எம்எஸ்சி நா்சிங் முடித்த 64 போ் என மொத்தம் 1,100 பேருக்கு பட்டங்களை வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் 6 அரசு செவிலியா் கல்லூரிகள், 25 செவிலியா் பயிற்சிப் பள்ளிகள் உள்ளன. திமுக அரசு பொறுப்பேற்பதற்கு முன்பு, தமிழகத்தில் 1 லட்சம் பிறப்புகளுக்கு இறப்பு விகிதம் 90-ஆக இருந்தது. தற்போது 39.5-ஆகக் குறைந்துள்ளது. மகப்பேறு இறப்பு விகிதம் குறைந்து இருப்பது பெரிய சாதனையாக உள்ளது. இதில் செவிலியா்களின் பங்களிப்பு என்பது மிக முக்கியமானது.

பணி நியமனம்: கடந்த 5 ஆண்டுகளில் 8,834 ஒப்பந்த செவிலியா்கள் பணிநிரந்தரம் செய்யப்பட்டுள்ளனா். மேலும், 3,009 ஒப்பந்த செவிலியா்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. கரோனா காலத்தில் தற்காலிகமாக பணிநியமனம் செய்யப்பட்ட 3,260 பேரில் 2,146 செவிலியா்களுக்கு ஏற்கெனவே பணிநிரந்தர ஆணைகள் வழங்கப்பட்டன. அவற்றில் 390 போ் பணிக்கு வரவில்லை. மீதமிருந்த 719 பேருக்கும் பணிநிரந்தரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாள்களாக இருந்தது.

இந்த நிலையில், இந்தக் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், வருகிற பிப்.13-ஆம் தேதி அவா்களுக்கும் பணிநிரந்தர ஆணைகள் வழங்கப்படவுள்ளன.

தமிழகத்தில் செவிலியா்களின் தேவை அதிகரித்து வருகிறது. செவிலியா் பட்டப்படிப்பு முடித்தவா்களுக்கு உலகெங்கும் வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளது. அதனால், தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவ பல்கலைக்கழகத்தின் நிதி ஆதாரத்தோடு திருநெல்வேலி, திருச்சி, தருமபுரி, வேலூா், ஈரோடு, திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில், செவிலியா் கல்லூரிகள் தொடங்கப்படவுள்ளன. இந்த 6 செவிலியா் கல்லூரிகளும் உலகத் தரத்துக்கு இணையாக கட்டமைக்கப்படும். அதற்கான பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.

இந்த நிகழ்வில், சுகாதாரத் துறை செயலா் ப.செந்தில்குமாா், தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தா் நாராயணசாமி, மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநா் சுகந்தி ராஜகுமாரி, இணை இயக்குநா் சங்கா் சண்முகம் மற்றும் செவிலிய மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter



Wednesday, February 4, 2026

தங்கம் விலை ஏன் உயர்கிறது?





தங்கம் விலை ஏன் உயர்கிறது?



தங்கம் விலை

முனைவா் வைகைச்செல்வன்


Updated on:
04 பிப்ரவரி 2026, 2:26 am

சர்வதேச போர்ப் பதற்றம், மத்திய வங்கிகள் தங்கம் வாங்குவது, டாலர் மதிப்பு சரிவு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற தன்மை காரணமாக பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் தங்கத்தின் தேவை அதிகரிப்பால் விலை உயர்கிறது. அமெரிக்க வங்கிகளில் வட்டி விகிதக் குறைப்பு, பணவீக்கம் மற்றும் நகைக் கடைகளில் பண்டிகைக் கால தேவை அதிகரிப்பு ஆகியவை தங்கம் விலை உயர்வுக்கு முக்கியக் காரணங்களாக அமைந்திருக்கின்றன.

போர் மற்றும் வர்த்தகப் போட்டிகள் காரணமாக, பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை முதலீட்டாளர்கள் நாடுகிறார்கள். சீனா, ரஷியா போன்ற நாடுகள் டாலருக்கு மாற்றாக தங்கத்தை அதிக அளவில் வாங்கி சேமித்து வருகின்றன. மேலும், அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதங்களைக் குறைக்கும் என்கிற எதிர்பார்ப்பு தங்கம் விலை உயர்வதற்கு முக்கியக் காரணியாகும்.

கடந்த இரு ஆண்டுகளில் தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. முதலீட்டாளர்களுக்குப் பாதுகாப்பான புகலிடமாக தங்கம் திகழ்ந்தாலும், ஏழை, எளியோரின் வாழ்க்கையில் எட்டாக்கனியாகி விட்டது. காலையில் ஒரு விலையும், மாலையில் மற்றொரு விலையும் என்று தங்கத்தின் விலை மேலும் மேலும் உயர்கிறது. வெள்ளியின் விலையும் அதே போன்ற நிலையில் உயரத் தொடங்கியிருக்கிறது.

சர்வதேச பொருளாதாரச் சந்தைகளில் தங்கத்தின் விலை மாறிக் கொண்டே வருகிறது. ரஷியா மீது அமெரிக்கா விதித்த தடைகள், சீனா, இந்தியா மீதான வரி விகித உயர்வுகள், மத்திய கிழக்கு நாடுகளில் போர்ப் பதற்றங்கள் போன்றவற்றால் அனைத்து நாடுகளும் தங்கத்தை வாங்கிக் குவிக்கிறார்கள். ஏற்றுமதி, இறக்குமதியை டாலருக்குப் பதிலாக தங்கத்தின் அடிப்படையில் நடத்தலாம் என்ற முடிவுக்கு மற்ற நாடுகள் வந்து விட்டன. இதனால், தங்கம் விலையில் ஏற்றம் இருக்கிறது.

தங்கம் மட்டுமன்றி வெள்ளி விலையும் கடும் ஏற்றத்தைக் கண்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியப் பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட சரிவும், தங்கம், வெள்ளி உச்சத்தைத் தொட ஒரு காரணமாகும். விநியோக-தேவை இடைவெளிகள், அதிகரித்த முதலீட்டுத் தேவை, சரிந்துவரும் பங்குச் சந்தைகள் மற்றும் பலவீனமான நாணயங்கள் என அனைத்தும் இணைந்து, புல்லியன் விலைகளை தொடர்ந்து புதிய உச்சத்தை நோக்கித் தள்ளுகின்றன.

நிபுணர்களின் தகவலின்படி, புல்லியன் விலைகளின் இந்த ஏற்றம், தொடர்ச்சியான புவியியல் அரசியல் மோதல்களாலும், பொருளாதார சவால்களாலும் தூண்டப்பட்டுள்ளது. இது பாதுகாப்பு முதலீட்டுச் சொத்துகளுக்கான தேவையை மேலும் அதிகரிக்கிறது. இந்த நடவடிக்கையை எதிர்க்கும் எட்டு நாடுகளுக்கு எதிரான வரி மிரட்டலுக்கு ஐரோப்பாவின் பதில், மற்றும் டாவோஸில் உலகத் தலைவர்களுடன் டிரம்ப் இந்த விவகாரம் குறித்து விவாதித்த நிகழ்வுகள் ஆகியவற்றை முதலீட்டாளர்கள் உன்னிப்பாகக் கவனிக்கிறார்கள்.

போர்ப் பதற்றம், புவிசார் மோதல்கள், வர்த்தக மோதல்கள் என சர்வதேச அரசியல், சர்வதேச பொருளாதார நிலையில் தாக்கத்தை ஏற்படுத்தி தங்கம், வெள்ளி விலையைத் தீர்மானிக்கின்றன. ஜனவரி மாதத் தொடக்கத்தில் வெனிசுலா மீது அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதல் காரணமாக பதற்றம் ஏற்பட்டு, தங்கம்-வெள்ளி விலை உயர்ந்தது. அதன் பின்னர் ஈரான் விவகாரம் பூதாகரமாக வெடித்தது. மூன்றாவது வாரத்தில் கிரீன்லாந்து விவகாரத்தில் அமெரிக்காவுக்கும், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இப்படி ஒவ்வொரு வாரமும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உயர்வுக்கு வித்திடும் வகையிலான ஏதேனும் ஒரு விஷயம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. பிறகு, கிரீன்லாந்து விவகாரம் சற்று தணிந்தது. அமெரிக்க அதிபர் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மீதான வரி விதிப்பு நடவடிக்கையை வாபஸ் பெறுவதாக அறிவித்தார். இதனால், பங்குச் சந்தைகள் மீண்டு வந்தன.

ஸ்பாட் தங்கம் விலை புதிய வரலாற்றைத் தொட்டிருக்கிறது. ஒரு அவுன்ஸ் ஸ்பாட் தங்கம் தடாலடியாக உயர்ந்து 5,026 டாலர்கள் என உச்சத்தைத் தொட்டது. ஒரு கிராம் தங்கத்தின் விலை 175 டாலர்கள்; இந்திய மதிப்பில் ரூ.16 ஆயிரம். இது வரலாற்றிலேயே இல்லாத உச்சம். தங்கம் விலை 5 ஆயிரம் டாலர்களை எட்டி விடும் என்றுதான் பல்வேறு நிறுவனங்கள் கணித்திருந்தன. ஆனால், அவற்றையெல்லாம் புறந்தள்ளி தங்கம் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. ஸ்பாட் தங்கம் ஒரு வார காலத்தில் 7.5 சதவீதம் உயர்ந்திருக்கிறது. அதேபோல, வெள்ளி விலையும் ஒரு அவுன்ஸ் 102 டாலர்களை நெருங்கி விட்டது. ஸ்பாட் வெள்ளி விலை 98.70 டாலர்கள் என வரலாற்று உச்சத்தைத் தொட்டிருக்கிறது. ஒரே நாளில் ஸ்பாட் வெள்ளியின் விலை 2.17 சதவீதம் உயர்ந்திருக்கிறது. இந்த ஒரு வார காலத்தில் 11 சதவீதமாகக் கணக்கிடப்படுகிறது. அமெரிக்க டாலர் வலுவிலந்திருப்பதே தங்கம், வெள்ளியின் விலை உயர்வுக்குக் காரணமாகக் கருதப்படுகிறது.

இவை தவிர, அமெரிக்க மத்திய வங்கி இந்த ஆண்டு வரி குறைப்பு நடவடிக்கையில் ஈடுபடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க மத்திய வங்கி தலைவர் பதவியில் இருக்கும் ஜெரோம் பவலின் பதவிக்காலம் வரும் மே மாதம் நிறைவடைகிறது. மத்திய வங்கியின் அடுத்த தலைவராக தனக்குச் சாதகமான கெவின் வார்ஷை டிரம்ப் பரிந்துரை செய்துள்ளார். எனவே, இந்த ஆண்டு அமெரிக்க மத்திய வங்கி அதிகப்படியான வட்டிக் குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. இதன் காரணமாக தங்கம், வெள்ளி விலை உயர்ந்து கொண்டிருக்கிறது. அமெரிக்காவின் பொருளாதார மந்த நிலை, அமெரிக்க வேலைவாய்ப்பின்மை விகிதம் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருப்பது, டாலர் குறியீடு இரண்டு வாரங்களில் இல்லாத சரிவைச் சந்தித்திருப்பது ஆகியவை தங்கம்-வெள்ளி விலை உயர்வுக்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது.

டாலர் மற்றும் பத்திரங்கள் மீதான நம்பிக்கை சற்று குறைந்திருப்பதால், தங்கம் பாதுகாப்பான முதலீடாகத் தெரிகிறது. கடந்த வாரம் உலகெங்கிலும் உள்ள பல முக்கிய மத்திய வங்கிகளின் தலைவர்கள் பெடரல் ரிசர்வ் மற்றும் ஜெரோம்பவலுக்கு ஆதரவு தெரிவித்தனர். மத்திய வங்கியின் சுதந்திரம் குறித்த கவலைகள் படிப்படியாக தங்கத்தின் விலைக்கு ஒரு வலுவான அடிப்படையை வழங்குகின்றன. உலகத் தங்க கவுன்சிலின் சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த ஆண்டு மூன்றாம் காலாண்டில் தங்கத்தின் தேவை மதிப்பு அடிப்படையில், ஆண்டுக்கு 44 சதவீதம் அதிகரித்து 146 பில்லியன் டாலர் என்ற சாதனை அளவை எட்டியது. தங்கம் இடிஎஃப் மூலம் பங்குச்சந்தையிலும் முதலீட்டாளர்கள் அதிக முதலீடு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த இரண்டு தினங்களாக தங்கம்-வெள்ளி விலை சற்று குறைந்துள்ள போதிலும், விலை உயர்வு அல்லது விலையில் சற்று ஏற்ற-இறக்கம் இத்துடன் முடிந்து விட்டதா என்றால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இது இன்னும் ஏற்றம் காணுமோ என்ற அச்சத்தை முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து கடன் நெருக்கடி என்பது மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் என்று கூறுகின்றனர். கட்டுப்பாடற்ற கடன்களைச் சமாளிக்க அரசாங்கங்கள் பணவீக்கத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தக் கூடும். ஆகவேதான், அமெரிக்க டாலரின் மதிப்பு வீழ்ச்சியடைவதால் தங்கத்தின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

சென்னையில் 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.14,270-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் ஜனவரி மாதம் மட்டும் 22 காரட் தங்கம் விலை 17.14 சதவீதம் வரையிலும் வளர்ச்சி அடைந்துள்ளது. மேலும், தற்போது மக்கள் மத்தியில் புதிய டிமான்டை உருவாக்கியுள்ள 18 காரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.12,500 என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது. இந்த 18 காரட் தங்கம் நகைகள் மற்றும் டிசைனர் நகைகளுக்கு ஏற்றதாக இருக்கும் என்கிற காரணத்தினாலும், 18 சதவீத காரட் என்பதாலும், குறைந்த விலையில் வாங்க முடியும் என்ற காரணத்தினாலும் மக்கள் அதிகப்படியான விருப்பத்தைக் காட்டுகின்றனர்.

கடந்த 10 நாள்களில் சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களுடன் உயர்வைப் பதிவு செய்து வருகிறது. ஜனவரி 17ஆம் தேதி 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.13,280 ஆக இருந்த நிலையில், ஜனவரி 26ஆம் தேதி அது ரூ.15,025 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், 24 கேரட் தங்கம் ரூ.14,487 இருந்து ரூ.16,391 ஆக உயர்ந்து, குறுகிய காலத்தில் கணிசமான உயர்வைப் பதிவு செய்துள்ளது. சில நாட்கள் லேசான சரிவுகள் இருந்தாலும், மொத்தமாக பார்க்கும் போது தங்கம் விலை வேகமான உயர்வு பாதையிலேயே பயணித்து வருவது குறிப்பிடத்தக்கது.

அதே போன்று வெள்ளி விலையும் தங்கத்தின் போக்கை பின்பற்றி உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு கிராமுக்கு ரூ.375 என்ற அளவில் ரூ.10 உயர்வுடன் வர்த்தகமாகியது. இதன் மூலம் ஒரு கிலோ வெள்ளி ரூ.3.75 லட்சம் என்ற அளவுக்கு உள்ளது. உள்நாட்டில் தங்க விலை உயர்வுக்கு திருமண சீசன் நெருங்குவது முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது. தென் இந்தியாவின் பல மாநிலங்களில் திருமணங்கள் சீசன் தொடங்கி உள்ளதால், சென்னை மற்றும் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நகைக்கடைகளில் கூடுதலான வர்த்தகத்தை பெற்று வருகிறது. தங்கம் விலை உயர்ந்தாலும் தேவை தொடர்வதால் விலை உயர்வும் நிற்காமல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

மேலும், இந்திய ரூபாய் அமெரிக்க டாலருக்கு எதிராக பலவீனமடைந்துள்ளது. தங்கத்தை இந்தியா பெரும்பாலும் இறக்குமதி செய்வதால், ரூபாய் வீழ்ச்சி இறக்குமதி செலவை அதிகரிக்கிறது. மேலும், சர்வதேச காரணிகளான ரஷியா-உக்ரைன் மோதல் தொடர்வது, கிரீன்லாந்து தொடர்பான புவிசார் அபாயங்கள், வர்த்தகப் பதற்றங்கள் ஆகியவை பாதுகாப்பு சொத்துகளான தங்கம் மற்றும் வெள்ளிக்கான தேவையை அதிகரித்துள்ளன.

கட்டுரையாளர்:

முன்னாள் அமைச்சர்.


தினமணி செய்திமடலைப் பெற... Newsletter


Monday, February 2, 2026

விட்டுக் கொடுத்தால் உறவு வலுப்படும்!

DINAMANI

விட்டுக் கொடுத்தால் உறவு வலுப்படும்!

பிடிவாதம் என்பது ஒருவரை வெல்லப் பயன்படலாம்; ஆனால், ஓர் உறவை வெல்ல விட்டுக்கொடுத்தல் மட்டுமே உறவு வலுப்படும் என்பதைப் பற்றி...



Updated on:

02 பிப்ரவரி 2026, 3:30 am

- அனந்தபத்மநாபன்

புணே நகரில் அண்மையில் நிகழ்ந்த ஒரு விவாகரத்து வழக்கு, இன்றைய சமூக மாற்றத்தைத் தெளிவாகக் காட்டுகிறது. சுமார் 2 ஆண்டுகள் காதலித்த இருவர் திருமணம் செய்து கொண்டனர். மணமகள் மருத்துவர், மணமகன் பொறியாளர். ஆனால், திருமணம் முடிந்த 24 மணி நேரத்திலேயே அவர்கள் பிரிய முடிவெடுத்து நீதிமன்றம் சென்றனர்.

கணவர் கப்பலில் வேலை பார்ப்பதால் ஏற்படும் நிச்சயமற்ற சூழல் குறித்து காதலிக்கும் காலத்தில் அவர்கள் கவனிக்கத் தவறினர். இந்த எதார்த்தமான சிக்கல், திருமணமான ஒரே நாளில் அவர்களுக்குள் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

யாரைத் திருமணம் செய்ய வேண்டும் என்பது தனிப்பட்ட விருப்பமாக இருந்தாலும், திருமணம் செய்துகொண்ட பிறகு, அந்த உறவு சமுதாய ஒழுங்கமைப்பின் அடிப்படை அங்கமாக மாறிவிடுவதாக நீதித் துறை கருதுகிறது. விவாகரத்து என்பது வெறும் சாதாரண ஒப்பந்தம் அல்ல; சட்டம் இதை வெறும் இருவர் சம்மதம் என்று பார்க்காமல், நீதிமன்றத்தின் சம்மதம் அவசியமான ஒரு பொது விவகாரமாக அணுகுகிறது.

திருமணத்தைப் பாதுகாப்பதே நீதிமன்றங்களின் முதல் கடமை என்பதால், அவை உறவை சேமிக்க விரும்புமே தவிர, வேகமாக உடைக்க விரும்பாது. தற்காலிகக் கோபத்தால் புனிதமான பந்தத்தைச் சிதைத்துவிடக் கூடாது என்பதில் சட்டம் உறுதியாக உள்ளது. அதே சமயம், மீட்க முடியாத நிலையை எட்டிய உறவை வலுக்கட்டாயமாக நீட்டிப்பது தம்பதியினருக்கு இழைக்கப்படும் கொடுமை என உச்சநீதிமன்றம் கருதுகிறது.

உறவுகள் முறியும் போது தனிநபர்களின் மன ஆரோக்கியம், வாழ்வாதார உரிமைகளைப் பாதுகாப்பதில் நீதித் துறை தற்காலத்தில் கூடுதல் கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்க மாற்றமாகும். இந்தியாவில் ஒரு நாளைக்குச் சராசரியாக 100 புதிய விவாகரத்து வழக்குகள் பதிவாகின்றன. தற்போது நமது நீதிமன்றங்களில் சுமார் 11,95,738 குடும்ப வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இருப்பினும், விவாகரத்து என்பது வாழ்வின் முடிவல்ல; அது ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கம். அமெரிக்க எழுத்தாளரான எலிசபெத் கில்பர்ட், தனது 31-ஆவது வயதில் ஒரு கடுமையான விவாகரத்தைச் சந்தித்து நிலைகுலைந்த பிறகு, பயணம் மற்றும் கலாசார அறிமுகங்கள் மூலம் தனது மனக்காயங்களுக்குத் தீர்வு கண்டார்.

சர்வதேச அளவில் விவாகரத்துப் போக்குகளை ஆராயும்போது, வளர்ந்த நாடுகளில் ஒரு விசித்திரமான மாற்றம் தென்படுகிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் ஒட்டுமொத்த பிரிவுகள் குறைந்திருந்தாலும், ஐம்பது வயதைக் கடந்தவர்களிடையே ஏற்படும் "நரைத்த கால விவாகரத்து' எனும் போக்கு கடந்த இருபது ஆண்டுகளில் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.

ஜான் ஹென்டர்சன், சார்லோட் ஹென்டர்சன் போன்ற நீண்ட காலத் தம்பதிகள் 80 ஆண்டுகளுக்கும் மேலாக இணைந்து வாழ்ந்த கின்னஸ் சாதனைகள் நமக்கு நம்பிக்கையூட்டினாலும், இன்றைய சூழலில் தனிமனிதத் தேவைகள் எத்தகைய மாற்றங்களைச் சந்தித்துள்ளன என்பதற்கு இப்போக்குகளே சாட்சி.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கர்ம் சந்த், கர்தாரி சந்த் தம்பதியினர் சுமார் 90 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த மணவாழ்க்கையின் ரகசிய மந்திரமாக அவர்கள் கருதியது அளவான உணவு, நேர்மறையான சிந்தனை மட்டுமே.

இந்தியா, சீனாவில் பொருளாதார மேம்பாடு, பெண்களின் கல்வி அறிவு வளர்ச்சியால், பாரம்பரியக் குடும்பக் கட்டமைப்புகள் மறுபரிசீலனை செய்யப்படுகின்றன. குறிப்பாக, பொருளாதாரச் சுதந்திரம் பெற்ற பெண்கள், சமத்துவமற்ற உறவுகளில் இருந்து விவாகரத்து பெற்று வெளியேறுவதை தங்களின் உரிமையாகக் கருதுகின்றனர். இது வெறும் பிரிவாக மட்டுமன்றி, காலங்காலமாகப் பெண்களின் மீது சுமத்தப்பட்டிருந்த "சகிப்புத்தன்மை' எனும் பிம்பம் உடைவதையும் காட்டுகிறது.

வளைகுடா நாடுகளிலும்கூட நவீனமயமாக்கலின் விளைவாகத் திருமணமான குறுகிய காலத்திலேயே விவாகரத்து செய்யும் தம்பதிகளின் விகிதம் அதிகரித்து வருவது, தனிமனித உரிமைகள், சுதந்திரம் குறித்த விழிப்புணர்வு எல்லைகளைத் தாண்டிப் பரவி வருவதை உறுதிப்படுத்துகிறது.

குடும்ப அமைப்பில் ஏற்படும் இத்தகைய விரிசல்கள் வெறும் தனிநபர் சார்ந்தவை மட்டுமல்ல, அவை ஒரு சமூகத்தின் கூட்டுப் பொறுப்பையும் தட்டியெழுப்புகின்றன. திருமணத்துக்கு முந்தைய ஆலோசனைகள் இன்று ஆடம்பரமாகப் பார்க்கப்படாமல், அவசியமான தேவையாக மாற வேண்டும். உறவுகளுக்குள் நுழையும் முன்பே ஒருவருக்கொருவர் கொண்டுள்ள எதிர்பார்ப்புகள், பொருளாதாரத் திட்டமிடல், பணிச் சூழல் சார்ந்த சவால்களை வெளிப்படையாக விவாதிப்பது அவசியம்.

உறவுகளில் விரிசல் ஏற்பட முக்கியக் காரணம் தம்பதிகளிடையே குறைந்துவரும் நேரடி உரையாடல்களே. மின்னணு சாதனங்களின் பயன்பாட்டால் தம்பதிகள் நேரில் பேசும் நேரம் 45 % குறைந்துவிட்டது. தினமும் ஒரு 30 நிமிஷமாவது கைப்பேசியை ஒதுக்கி வைத்துவிட்டு மனம் விட்டுப் பேசும் பழக்கம் ஆரோக்கியமான உறவுக்கு வழிவகுக்கும்.

இன்றைய மின்னுலகக் காலத்தில் தம்பதியர் அருகருகே அமர்ந்திருந்தாலும், ஆளுக்கொரு கைப்பேசியில் மூழ்கிக் கிடப்பதால் துணையின் உணர்வுகளைவிட, முன்பின் தெரியாதவர்களின் விருப்பக் குறிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. திரையிலிருந்து இதயத்துக்கு மாற வேண்டும்.

திருமண வாழ்வின் வெற்றி என்பது சண்டைகளே இல்லாத சூழலில் இல்லை; மாறாக, சண்டைகளுக்குப் பிறகு எப்படி ஒருவரை ஒருவர் மீண்டும் ஏற்றுக் கொள்கிறோம் என்பதில்தான் இருக்கிறது. பிடிவாதம் என்பது ஒருவரை வெல்லப் பயன்படலாம்; ஆனால், ஓர் உறவை வெல்ல விட்டுக்கொடுத்தல் மட்டுமே உதவும்.

Sunday, January 25, 2026

கவலையளிக்கும் குழந்தைத் திருமணங்கள்!




DINAMANI 

கவலையளிக்கும் குழந்தைத் திருமணங்கள்!

2023-ஆம் ஆண்டில், 64 கோடி பெண்கள் குழந்தைப் பருவத்தில் திருமணம் செய்து கொண்டதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (யுனிசெஃப்) மதிப்பிட்டுள்ளது.


மாதிரிப் படம்



Updated on:

24 ஜனவரி 2026, 5:05 am

ஐக்கிய நாடுகள் சபையில் 2015-ஆம் ஆண்டு ஒரு முக்கியமான திட்டம் உருவாக்கப்பட்டது. 2030-ஆம் ஆண்டுக்குள் இந்த உலகில் நிலையான வளர்ச்சி ஏற்பட வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, உலகத்துக்கான பதினேழு நிலையான வளர்ச்சி இலக்குகள் (சஸ்டெயினபிள் டெவலப்மென்ட் கோல்ஸ் - எஸ்.டி.ஜி.) உருவாக்கப்பட்டன. இந்த பூமியும், பூமியிலிருக்கும் எல்லா உயிரினங்களும் செழித்திருக்கவும், அமைதியாக வாழவும் இந்த இலக்குகள் உருவாக்கப்பட்டன.

இதில் முக்கியமானதாகக் கருதப்படும் ஐந்தாவது இலக்கான பாலின சமத்துவம் (ஆண் - பெண் சமத்துவம்) மூலம் 2030-ஆம் ஆண்டுக்குள் குழந்தை திருமணத்தை முடிவுக்குக் கொண்டு வர இந்தியா உறுதியளித்திருந்தது. பன்முகத்தன்மை கொண்ட, 146 கோடி மக்கள் வாழும் இந்தியாவில், அந்தந்த மாநிலங்களில் காணப்படும் சமூக, அரசியல், பொருளாதார கலாசார விழுமியங்களுக்கேற்ப மக்களின் வாழ்க்கை நிலையில் முன்னேற்றம், பொருளாதார மேம்பாடு மாறுபட்டதாகவும், சீரற்றதாகவும் உள்ளது. எனினும், இந்த முயற்சியில், கடந்த பத்தாண்டுகளில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது.

"பெண்கள் மணப்பெண்கள் அல்ல' என்ற உலக நாடுகளின் ஒருமித்த குரல், குழந்தைத் திருமணங்களைத் தடுக்காவிட்டால், அது ஐக்கிய நாடுகள் சபையின் மற்ற நிலையான வளர்ச்சி இலக்குகளையும் பாதிக்கும் என எச்சரித்துள்ளது. "குழந்தைத் திருமணத்தை முடிவுக்குக் கொண்டு வருவதில் உலகம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடையாவிட்டால், வறுமை, உணவுப் பாதுகாப்பு, சுகாதாரம், கல்வி, பாலின சமத்துவம், பொருளாதார வளர்ச்சி, காலநிலை நடவடிக்கை, அமைதி மற்றும் நீதி போன்ற ஒன்பது இலக்குகளில் தொய்வு ஏற்படும்' என ஐ.நா. தெரிவித்துள்ளது.

உலக அளவில், 2023-ஆம் ஆண்டில், 64 கோடி பெண்கள் குழந்தைப் பருவத்தில் திருமணம் செய்து கொண்டதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (யுனிசெஃப்) மதிப்பிட்டுள்ளது. இதில், மூன்றில் ஒரு பகுதி இந்தியாவில் மட்டுமே என்ற அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. ஐ.நா-வின் இலக்கை அடைய இந்தியா இன்னும் வெகுதொலைவு, இருபது மடங்கு வேகமாகப் பயணிக்க வேண்டியுள்ளது.

இந்தியாவில் நிலவும் பல்வேறு சமுதாயப் பிரச்னைகளில் ஒன்று குழந்தைத் திருமணம். குழந்தைத் திருமணங்களுக்கு முதன்மைக் காரணமாக சொல்லப்படுவது குடும்பத்தில் நிலவும் வறுமை, கல்வியின்மை, பெற்றோரின் பொறுப்பற்ற செயல்பாடுகள்- இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து போதிய விழிப்புணர்வு, புரிதல் இன்மை ஆகியன காரணிகளாக சொல்லப்படுகின்றன. பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு குழந்தைத் திருமணமும் ஒரு காரணம்.

இந்தியாவில், மேற்கு வங்கம், உத்தரபிரதேசம், பிகார், திரிபுரா போன்ற மாநிலங்கள் குழந்தைத் திருமணங்கள் அதிகமாக நடைபெறும் மாநிலங்களில் சிலவாக இருந்தாலும், நாடு முழுவதும் அவ்வப்போது குழந்தைத் திருமண நிகழ்வுகள் நடந்து வருகின்றன. தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பின் (நேஷனல் ஃபேமிலி ஹெல்த் சர்வே) தரவின்படி, குழந்தைத் திருமணங்கள் 2005-2006-ஆம் ஆண்டில் 47.4 சதவீதமாக இருந்தது, 2019-2021-ஆம் ஆண்டில் 23.3 சதவீதமாக தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்தியாவில் குழந்தைத் திருமணங்கள் கடந்த காலங்களைவிட தற்போது குறைந்து வந்தாலும், அதன் தாக்கம் அதிகரித்து வருகிறது.

"குழந்தைத் திருமணம்' என்பது, பெண் 18 வயதுக்குட்பட்டவராகவும், ஆண் 21 வயதுக்குட்பட்டவராகவும் இருந்து திருமணம் நடந்தால், அது "குழந்தைத் திருமணம்' எனச் சட்டம் வரையறை செய்கிறது. பாரதிய நியாய சன்ஹிதா, 2023-இன்படி, பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம், 2012-இன் கீழ் (போக்ஸோ 2012) இது தண்டனைக்குரிய குற்றமாகும் என்று நம் நாட்டின் உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

குழந்தைத் திருமண தடைச் சட்டம், 2006-இன்படி, குழந்தைத் திருமணத்தை முன்னின்று நடத்தியவர்கள், நிச்சயித்த நபர்கள், பங்கேற்ற உறவினர்கள், நண்பர்கள் குற்றம் புரிந்தவர்களாகக் கருதப்படுவர். தவறு புரிந்தவர்களுக்கு, இரண்டு ஆண்டு ஜாமீனில் வெளியில் வர முடியாத கடுங்காவல் தண்டனை அல்லது ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். குற்றத்தின் தன்மைக்கேற்ப ஒன்றோ அல்லது இரண்டுமே சேர்த்து விதிக்கப்படும். மேலும், குழந்தைத் திருமணம் ரத்து செய்யப்பட்டு, சட்டப்படி அந்தத் திருமணம் செல்லாது என அறிவிக்கப்படும்.

கடந்த 2022-ஆம் ஆண்டில் குழந்தைத் திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்ட மொத்தம் 3,563 வழக்குகளில், வெறும் 181 வழக்குகள் மட்டுமே விசாரணை முடிவில், குற்றவாளிகளுக்குத் தண்டனை கிடைத்துள்ளது. தற்போதைய தீர்வு விகிதத்தில் நிலுவை வழக்குகளில் தீர்ப்பு வெளியாக 19 ஆண்டுகள் ஆகலாம் என்று குழந்தைகளின் உரிமைகள் மற்றும் பாதுகாப்புக்கான தேசிய ஆணையம் (என்சிபிசிஆர்) வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

13 முதல் 19 வயது வரையிலான பெண்கள் மகப்பேறு அடைவது பதின்ம மகப்பேறு என அழைக்கப்படுகிறது. இந்த வயதில் மகப்பேறு அடைவது மிகவும்

கவலை தரும் விஷயம் என்கின்றனர் மருத்துவர்கள். இதனால், தாய்-சேய் உடல் நலன் பாதிக்கப்படும். சிறுமிகளின் கல்வி முளையிலேயே கிள்ளி எறியப்படுகிறது. புத்தகப் பையை சுமக்க வேண்டிய சிறுமிகள், கருவைச் சுமக்கும் பரிதாப நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இதனால், சிறுமிகள் இளம் வயதில் அனுபவிக்க வேண்டிய மகிழ்ச்சியை இழந்து, சிறு வயதிலேயே குடும்ப பாரத்தைச் சுமக்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகிறார்கள்.

பிறந்த வீட்டிலும், புகுந்த வீட்டிலும் பல இன்னல்களைச் சந்திக்க வேண்டிய நிலைக்கு சிறுமிகள் தள்ளப்படுகிறார்கள். உடல் ஆரோக்கியத்தையும், மன ஆரோக்கியத்தையும் இழந்து இருள் சூழ்ந்த வாழ்க்கை வாழ்கிறார்கள். குழந்தைத் திருமணத்தைத் தடுக்க இந்தியாவில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு விழிப்புணர்வுகளை மேற்கொண்டு வருகின்றன. மத்திய அரசு, "பால் விவா முக்த் பாரத் அபியான்' மூலம் நிகழாண்டுக்குள் குழந்தைத் திருமணத்தின் பரவலை 10 சதவீதம் குறைத்து 2030-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை குழந்தைத் திருமணம் இல்லாத நாடாக மாற்ற முயன்று வருகிறது. அண்மையில் அந்த இயக்கம், தனது முதலாமாண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக, குழந்தைத் திருமணம் இல்லாத நாட்டுக்கான 100 நாள் விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொண்டது. "பெண் குழந்தையைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம்' பிரசாரமும் முன்னெடுக்கப்படுகிறது.

2025-ஆம் ஆண்டில் இந்தியாவில் முதல் "குழந்தை திருமணம்' இல்லாத மாவட்டமாக, சத்தீஸ்கரிலுள்ள பலோட் மாவட்டம் மாறி மைல்கல்லை எட்டியது. தமிழ்நாட்டில் குழந்தைத் திருமணங்களைத் தடுக்க, குழந்தைத் திருமண தடைச் சட்டம் குறித்து சமூக நலத் துறை, பள்ளிக் கல்வித் துறை உள்ளிட்ட அரசுத் துறைகள் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. பெண் குழந்தைகளைக் காக்க பல்வேறு நலத் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. "முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம்',

"புதுமைப் பெண் திட்டம்' போன்றவை மூலம் பெண் குழந்தைகளின் நலன்கள் காக்கப்படுகின்றன. எனினும், தமிழ்நாட்டில் தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் குழந்தைத் திருமணங்கள் மற்றும் 18 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு அதிக அளவில் பிரசவம் நடப்பதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. 2023-ஆம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு ஜூலை வரை, தமிழ்நாட்டில் குழந்தைத் திருமணங்களின் எண்ணிக்கை முந்தைய ஆண்டுகளைவிட 56 சதவீதம் அதிகரித்துள்ளது. சிறுமிகள் கர்ப்பமாகி மருத்துவமனைக்கு வரும்போதுதான் சட்ட விரோதமாக குழந்தைத் திருமணம் நடந்திருப்பது தெரிய வருகிறது. கடந்த 2025-ஆண்டு ஏப்ரலில் "தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் மற்றும் ஆராய்ச்சி' இதழில், 10 முதல் 19 வயதிலான பெண்கள் கர்ப்ப காலத்திலும், பிரசவத்துக்குப் பிறகும் அதிக அபாயங்களைச் சந்திப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான 10 மாதங்களில் வேலூரில் மட்டும் 59 குழந்தைத் திருமணங்கள் நடந்துள்ளன. அத்துடன் 18 வயதுக்குட்பட்ட 415 சிறுமிகளுக்கு பிரசவம் நடந்துள்ளது என அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. ஒரு நாட்டின் முன்னேற்றம் என்பது குழந்தைகளையும் உள்ளடக்கியது. இந்தக் கால குழந்தைகள் அளவற்ற அறிவும், ஆற்றலும், சக்தியும் உடையவர்களாக விளக்குப் போல ஒளியுடன் இருக்கிறார்கள். எனினும், குழந்தைத் திருமணம் என்பது சமுதாயத்தில் புரையோடிப் போன ஒரு நோய் போன்றது. சமூக மக்களிடையே ஏற்படும் விழிப்புணர்வு, ஒருங்கிணைந்த முயற்சிகள் மூலமே இந்த நோயைக் காணாமல் போகச் செய்ய முடியும். மலர் போன்ற மென்மைத் தன்மை கொண்ட பெண்கள், தனக்கு எதிராக நடத்தப்படும் கொடுமை

களையும், வேதனைகளையும் மிக அழகாக மாற்றிக் கொள்ளும் தன்மை உடையவர்கள். அன்றலர்ந்த மலர்களைப் போலத் தான் பெண்களும், வாழ்வில் வரும் பிரச்னைகளை எதிர்கொண்டு உலகில் மலர்ந்து கொண்டுதான் இருப்பார்கள்.

கட்டுரையாளர்:

எழுத்தாளர்.


தினமணி செய்திமடலைப் பெற... Newsletter





Friday, January 23, 2026

மாற்றத்தைப் பாா்வையில் தொடங்குவோம்!

மாற்றத்தைப் பாா்வையில் தொடங்குவோம்!

அரசுப் பள்ளிகள் வெறும் கட்டடங்கள் அல்ல; அவை லட்சக்கணக்கான ஏழைப் பிள்ளைகளின் கனவுக்கூடங்கள்.




தினமணி செய்திச் சேவை


Updated on:
13 ஜனவரி 2026, 4:04 am

பழ. அசோக்குமாா்

சமூகத்தின் அசைக்க முடியாத அடித்தளம் கல்வி. எளிய மக்களுக்கு கல்வி எட்டாக்கனியாக இருந்த காலத்தில் அதை சாமானியா்களின் பிள்ளைகளும் எளிதில் இலவசமாய்ப் பெற வசதியாக அறிவுக் கதவுகளை திறந்து வைத்தவை அரசுப் பள்ளிகள். இன்றைய மாபெரும் ஆளுமைகள், அறிவியலாளா்கள், மருத்துவா்கள் எனப் பலரும் இந்த அரசுப் பள்ளி எனும் கருவறையில் உதித்தவா்களே. ஆனால், அண்மைக்காலமாக சமூக ஊடகங்களில் அரங்கேறி வரும் சில நிகழ்வுகள் நம் மனசாட்சியை உலுக்கத் தொடங்கியுள்ளன.

இன்றைய எண்ம (டிஜிட்டல்) உலகில், ஒரு சிறு தவறு நொடிப்பொழுதில் உலகெங்கும் பரவிவிடுகிறது. சில அரசுப் பள்ளி மாணவா்கள் வகுப்பறையில் செய்யும் முதிா்ச்சியற்ற செயல்களையும், விளையாட்டாகச் செய்யும் தவறுகளையும் காணொலியாக எடுத்து, அதைப் பொதுவெளியில் பகிா்ந்து கேலி செய்வது ஒரு நாகரிகமற்ற போக்காக வளா்ந்து வருகிறது.

ஒரு சில மாணவா்களின் செயல்பாடுகளை வைத்து, ஒட்டுமொத்த அரசுப் பள்ளி அமைப்பையே கொச்சைப்படுத்துவது எவ்வளவு பெரிய அநீதி? அந்தக் காணொலிகளை ரசித்துச் சிரிக்கும் நாம், அந்தச் சிறுவனின் அல்லது சிறுமியின் எதிா்காலத்தை அந்தச் சிரிப்பால் சிதைக்கிறோம் என்பதை உணா்வதில்லை.

அரசுப் பள்ளிக்கு வரும் பெரும்பாலான மாணவா்கள் வறுமையின் பிடியிலிருந்தும், போதிய வசதிகள் இல்லாத சூழலிலிருந்தும் வருபவா்கள். பல மாணவா்களின் வீடுகளில் அவா்களுக்குப் பாடங்களைச் சொல்லிக் கொடுக்கவோ, உலக நடப்புகளைப் புரியவைக்கவோ வழிகாட்டிகள் இல்லை. அவா்களுக்குப் பள்ளிதான் உலகம்; ஆசிரியா்கள்தான் வெளிச்சம்.

அவா்கள் செய்யும் தவறுகள் கண்டிக்கப்பட வேண்டியவை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அந்தக் கண்டிப்பு வகுப்பறைக்குள் இருக்க வேண்டுமே தவிர, சமூக ஊடகங்களின் ‘விருப்பக் குறிகளுக்காக’ அவா்களைப் பலிகடா ஆக்கக்கூடாது. அவா்களுக்குத் தேவை கண்டனம் கலந்த கேலி அல்ல; அன்பான அரவணைப்பும், சரியான பாதையைக் காட்டும் கரங்களுமே.


ஒரு நாணயத்துக்கு இரு பக்கங்கள் உண்டு. ஆனால், நாம் ஏன் எப்போதும் இருண்ட பக்கத்தையே பாா்க்கிறோம்? மதுரையைச் சோ்ந்த அரசுப் பள்ளி மாணவி சிவதா்ஷினி ‘உன்னை நீயே நம்பு’ என்று கம்பீரமாகப் பேசியபோது தமிழகமே வியந்து பாா்த்தது. இதுபோன்ற ஆயிரக்கணக்கான சிவதா்ஷினிகள் நமது அரசுப் பள்ளிகளில் இருக்கிறாா்கள்.

விளையாட்டுத் துறையில் சாதனை படைக்கும் வீரா்கள், வான்வெளியில் சாதிக்கத் துடிக்கும் இளம் விஞ்ஞானிகள், கலைத் துறையில் மிளிரும் திறமையாளா்கள் எனப் பல முத்துகள் அரசுப் பள்ளி எனும் சிப்பியில் ஒளிந்து கிடக்கின்றன. ஆனால், இவா்களின் சாதனைகளைப் பகிரும் வேகத்தைவிட, யாரோ ஒரு மாணவா் செய்த தவறுகளைப் பகிா்வதில் நாம் காட்டும் வேகம் அதிகம். இது நம் சமூகத்தின் பாா்வையில் உள்ள குறைபாட்டையே காட்டுகிறது.

அரசுப்பள்ளி மாணவா்களைக் கேலி செய்பவா்கள் ஒன்றை மறந்துவிடுகிறாா்கள். இன்று இந்தியா தலைநிமிா்ந்து நிற்பதற்குத் தோள் கொடுக்கும் பல மாபெரும் ஆளுமைகள் இதே அரசுப் பள்ளிகளில் படித்தவா்களே.

ஏவுகணை நாயகன் டாக்டா் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம், இஸ்ரோவின் மேதைகள் டாக்டா் மயில்சாமி அண்ணாதுரை, டாக்டா் கே. சிவன் மற்றும் சந்திரயான்-3 திட்ட இயக்குநா் பி. வீரமுத்துவேல் ஆகியோா் அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் பயின்றவா்களே. ஏராளமான முன்மாதிரி மனிதா்கள் நம் அரசுப் பள்ளிப் பின்னணியில் இருந்து வந்தவா்களே.

இன்று அரசு மாதிரிப் பள்ளிகளில் படித்து தைவான், ஜப்பான் போன்ற நாடுகளுக்கு முழு உதவித்தொகையுடன் உயா் கல்விக்குச் செல்லும் மாணவா்களும், ஐஐடி மற்றும் என்ஐடி போன்ற நிறுவனங்களில் தடம் பதிக்கும் மாணவா்களின் எண்ணிக்கையும் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.

அறிதிறன்பேசி இன்று வரமாகவும் சாபமாகவும் இருக்கிறது. ஒரு மாணவரின் தவறைப் பகிா்வதற்கு முன்பாக, ‘இதை என் வீட்டுப் பிள்ளை செய்திருந்தால் நான் இப்படிச் செய்வேனா?’ என்று ஒரு நிமிஷம் யோசித்தால் அந்தத் தவறு அங்கே தடுக்கப்படும்.

அரசுப் பள்ளி மாணவா்களை ஏளனமாகப் பாா்ப்பதை நிறுத்துவோம். ஒரு சிற்பம் சரியாக அமையவில்லை என்றால் கல்லைக் குற்றம் சொல்ல மாட்டோம்; செதுக்குபவனின் திறமையில்தான் குறை காண்போம். அதேபோலத்தான், ஒரு மாணவா் தவறு செய்கிறான் என்றால், அவனுக்குச் சரியான சூழலையும் வழிகாட்டலையும் தராதது சமூகமாகிய நமது தோல்வியே தவிர, அந்த மாணவரின் தோல்வி அல்ல.

மாற்றம் என்பது மாணவா்களிடம் மட்டுமல்ல; அது அவா்களைப் பாா்க்கும் நம் பாா்வையில்தான் தொடங்க வேண்டும். அரசுப் பள்ளிகள் வெறும் கட்டடங்கள் அல்ல; அவை லட்சக்கணக்கான ஏழைப் பிள்ளைகளின் கனவுக்கூடங்கள். சமூக ஊடகங்களில் எதிா்மறைப் பதிவுகளைத் தவிா்த்து, அரசுப் பள்ளி மாணவா்களின் நோ்மறையான சாதனைகளை உரக்கச் சொல்வோம். அவா்கள் நாளைய இந்தியாவின் தூண்கள்; அவா்களைக் கேலி செய்து அந்தத் தூண்களைப் பலவீனப்படுத்த வேண்டாம்.

அரசுப் பள்ளிகள் என்பவை வெறும் வறுமையின் அடையாளங்கள் அல்ல; அவை இந்தத் தேசத்தின் அறிவுப் பசி தீா்க்கும் அட்சய பாத்திரங்கள். அங்கே பயிலும் மாணவா்கள் கிண்டலுக்குரிய கேலிச் சித்திரங்கள் அல்ல; மாறாக, எத்தகைய சவால்களையும் எதிா்கொண்டு எழும் தன்னம்பிக்கையின் முகவரிகள். அவா்களின் ஒரு சிறு சறுக்கலை காட்டுத் தீயாய் சமூக ஊடகங்களில் பரப்புதலை விடுத்து, அவா்களின் ஒவ்வொரு சிறு முன்னேற்றத்தையும் கொண்டாடுவோம். ஏனெனில், ஒரு மாணவரை நாம் அவமதிப்பது, ஒரு சமூகத்தின் எதிா்கால நம்பிக்கையையே அவமதிப்பதற்குச் சமம். எளியவா்களின் கல்விக் கனவு சிதையாமல் காப்பது ஒரு நாகரிகச் சமூகத்தின் அறப் பணி..!

Thursday, January 22, 2026

உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்-முரண்பாடுகள்


உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்-முரண்பாடுகள்

பழைய ஓய்வூதியத் திட்டத்தில் ஒட்டுமொத்த ஓய்வூதியம் முழுமையும் அரசின் பங்களிப்பாக மட்டுமே இருந்தது. இப்போது அறிவித்திருக்கும் திட்டத்தில் 10 % ஊழியா்களிடம் இருந்து எடுக்கப்படுகிறது. அப்படி இருக்கையில், உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம், பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கு நிகரானது அல்ல.


முனைவா் வைகைச்செல்வன்

Updated on:

22 ஜனவரி 2026, 6:00 am

புதிய பொருளாதாரக் கொள்கை வந்த பிறகு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை முடக்கி விட்டு, புதிய ஓய்வூதிய திட்டம் கொண்டுவரப்பட்டது. மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்று எதிா்ப்பும், ஆதரவும் மாறி மாறி ஏற்பட்டது. இவற்றில் தமிழ்நாடு அரசு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நிறுத்தி புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டு வந்தது.

23 ஆண்டுகளாக தொடா் வலியுறுத்துதல் போராட்டத்தின் விளைவாக பழைய ஓய்வூதியத் திட்டத்துக்குப் பதிலாக உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தைத் தமிழக அரசு தற்போது அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்தத் திட்டம் பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கு இணையானதுதானா, அரசு ஊழியா்களுக்கு உண்மையிலேயே பலன் தருமா என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது.

பழைய ஓய்வூதியத் திட்டத்தில் ஒட்டுமொத்த ஓய்வூதியம் முழுமையும் அரசின் பங்களிப்பாக மட்டுமே இருந்தது. அதாவது, அரசு ஊழியா்களின் ஊதியத்தில் எந்தத் தொகையும் பிடித்தம் செய்யப்பட மாட்டாது. ஆனால், இப்போது அறிவித்திருக்கும் திட்டத்தில் 10 % ஊழியா்களிடம் இருந்து எடுக்கப்படுகிறது.

அப்படி இருக்கையில், உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம், பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கு நிகரானது அல்ல. அதாவது, ஏப்ரல் 2003-க்குப் பிறகு கொண்டுவரப்பட்ட பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் என்பது 14 %ஊழியா்களின் அடிப்படை ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்டு, அதற்கு ஈடான தொகையை அரசு செலுத்தும். ஓய்வு பெறும்போது அப்படிச் சேரும் தொகையைக் கொண்டு ஒரே கட்டமாக வழங்கப்பட்டு வந்தது. ஆனால், இந்தத் திட்டத்தின்படி, ஓய்வூதியம் பெறுவதில் பல ஆண்டுகளாக பல்வேறு குழப்பங்கள் நிலவின. ஏனெனில், அரசின் பங்களிப்புத் தொகை செலுத்தப்பட்ட விவரத்தை ஊழியா்களால் தெரிந்து கொள்ள இயலாத நிலையே நீடித்தது.

நிலைமை இவ்வாறு இருக்கையில், பல்வேறு துறை அரசு ஊழியா்களின் போராட்டத்தை நிறுத்தவும், தோ்தலை முன்வைத்தும் திமுக அரசு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டுவந்திருக்கிறது என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது. பல சலுகைகள் இதில் இல்லை; திரும்பப் பெற முடியாத பரிமாற்றம் போன்ற சலுகைகள் இவற்றில் இல்லை. ஆகவே, ஏமாற்றம் அளிக்கிறது.

குறைவாக ஊதியம் பெறும் தொகுப்பூதிய ஊழியா்கள் 20, 30 ஆண்டுகள் வேலை செய்துவிட்டு ரூ. 2,000 ஓய்வூதியம் பெறுகிறாா்கள். மத்திய அரசு குறைந்தபட்ச ஓய்வூதியமே ரூ. 7 ஆயிரம் என்று தீா்மானித்திருக்கிறது. எனவே, தமிழ்நாடு அரசு அவா்களையும் இந்தத் திட்டத்தில் கொண்டு வந்து நியாயமான ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. தற்போது அரசு கடும் கடன் நெருக்கடியில் இருந்துவரும் சூழ்நிலையில், இந்த உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின் மூலம் தமிழ்நாடு அரசுக்கு ரூ. 13 ஆயிரம் கோடி செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு அரசு உள்நாட்டு உற்பத்தியில் 8.6% வளா்ச்சி அடைந்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. பொருளாதாரத்தில் அகில இந்திய அளவில் 2-ஆவது மாநிலமாக தமிழகம் வளா்ந்திருக்கிறது. ஆகவே, அரசு ஊழியா்களுக்கு ஓய்வூதியம் தருவது கூடுதல் சுமையல்ல. ஏனெனில், சுமாா் 35 ஆண்டுகள் அரசில் பணியாற்றி விட்டு, வயது முதிா்ந்த காலத்தில் தங்கள் எஞ்சிய வாழ்க்கையை நகா்த்துவதற்கு இந்த ஓய்வூதியம் பெரும் பயனாகவும், ஊழியா்களின் நிம்மதியான வாழ்க்கைக்கும் காரணமாக அமைந்துள்ளது.

ஆகவே, இதைச் செலவினமாகக் கருதக் கூடாது என்கிற கருத்தும் நிலவுகிறது. ஆகவேதான், ஊழியா்களின் பங்களிப்புத் தொகையைத் தவிா்க்கவும், திரும்பப் பெற முடியாத பரிமாற்றம் இவற்றில் இருந்து விலக்களிக்கவும், குறைந்த ஊதியம் பெறும் ஊழியா்களுக்கு தோராயமான ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்கிற கோரிக்கையை அரசு ஊழியா்கள் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றனா்.

புதிய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைக்கு வந்த கடந்த 23 ஆண்டுகளில் ஓய்வு பெற்றவா்கள், பணியின்போது உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை சுமாா் 54 ஆயிரம். இதில் 48 ஆயிரம் பேருக்கு மேல் ‘ஒன் டைம் செட்டில்மென்ட்’ பெற்று விட்டாா்கள். மிஞ்சி இருக்கிற கொஞ்சம் போ் மட்டும் பிற்காலத்தில் நியாயமான ஓய்வூதியம் கிடைக்கும் என்ற எதிா்பாா்ப்பில் செட்டில்மென்ட் வாங்காமல் காத்திருக்கிறாா்கள்.

தற்போது அரசு அறிவித்துள்ள உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில், ஓய்வூதியம் பெறுவதற்கான குறைந்தபட்ச பணிக்காலமாக 10 ஆண்டுகளும், முழுப் பணிக்காலமாக 30 ஆண்டுகளும் வரையறுக்கப்பட்டுள்ளன. ஓய்வூதியம் பெறுவதற்கான தகுதித் காலத்தை நிறைவு செய்யாமல் பணி ஓய்வு பெறும் அரசு ஊழியா்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய ஓய்வூதியத் திட்ட காலத்தில் பணியில் சோ்ந்து ஓய்வூதியம் இன்றி பணி ஓய்வு பெற்ற 48 ஆயிரம் பேருக்கும் சிறப்புக் கருணை ஓய்வூதியம் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது,. இவற்றில் ‘ஒன் டைம் செட்டில்மென்ட்’ மூலமாக பணம் கைக்கு வந்தாலும் அவை 5, 6 மாதங்களிலேயே செலவாவதற்கு வாய்ப்பு உள்ளது. ஏனெனில், அதற்கென்று ஒரு தேவை உருவாகி விடும். மாதாந்திர ஓய்வூதியம் கிடைக்கும் போது ஊழியா்களுடைய பங்களிப்பு 10 % என்பதும் தொடா்வதும், பணிக்காலத்தை நிறைவு செய்யாத ஊழியா்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் என்பது முரண்பாடுகளாகும். அவற்றுக்கு முறையான தெளிவான அறிவிப்புகள் இடம்பெறவில்லை.

தமிழ்நாட்டில் சுமாா் 9 லட்சம் அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் பணியாற்றி வரும் நிலையில், இதில் பலருக்கும் பழைய ஓய்வூதியம் கிடையாது. குறிப்பாகச் சொன்னால் 1.4.2003 தேதிக்கு முன்பு வரை அரசுப் பணியில் சோ்ந்த ஆசிரியா்கள், அரசு ஊழியா்களுக்கு பழைய ஒய்வூதியத் திட்டம் இருக்கிறது. அதன் பிறகு, பணியில் சேரும் ஊழியா்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் என்ற புதிய திட்டத்தை அரசு செயல்படுத்துகிறது. இதற்கிடையே, ஒருங்கிணைந்த ஓய்வூதியம் என்கிற புதிய திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.

பழைய ஓய்வூதியத் திட்டம், புதிய ஓய்வூதியத் திட்டம், மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகியவற்றுக்கு இடையேயான முக்கிய வேறுபாடுகளை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டம் மத்திய அரசில் 2003-க்கு முன்பாக பணியில் சோ்ந்த அரசு ஊழியா்களுக்கு ஓய்வூதியத் தொகை கடைசி மாத ஊதியத்தில் 50 % உறுதியாகக் கிடைக்கும். ஊழியா்கள் தங்கள் ஊதியத்தில் இருந்து எந்தத் தொகையும் பங்களிப்பாக செலுத்தத் தேவையில்லை. முழுச் செலவையும் அரசே ஏற்கும். இதர பலன்கள், அகவிலைப்படி (டி.ஏ) உயா்வு உண்டு. குடும்ப ஓய்வூதியம் முழுமையாகக் கிடைக்கும். இது அரசுக்கு மிகப் பெரிய நிதிச் சுமையை ஏற்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டு நிலவியது.

2003-க்குப் பிறகு பணியில் சோ்ந்த அரசு ஊழியா்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டத்தின்படி, ஓய்வூதியத் தொகை முதலீடு சாா்ந்தது. நாம் முதலீடு செய்த தொகை மற்றும் சந்தை லாபத்தைப் பொருத்தே அமையும். ஓய்வூதியம் உறுதி கிடையாது. ஊழியா்கள் ஊதியத்தில் 10 % பிடித்தம் செய்யப்படுகிறது. அரசு 14% பங்களிப்பை வழங்குகிறது. ஓய்வு பெறும் போது 60 %தொகையை மொத்தமாகப் பெற்றுக் கொள்ளலாம். மீதமுள்ள 40% தொகுப்பு நிதியாக வைக்கப்பட்டு அதிலிருந்து மாத ஊதியம் (ஆன்யுட்டி) வழங்கப்படும். அகவிலைப்படி உயா்வு கிடையாது. பங்குச்சந்தை அபாயமும் உள்ளது. ஆகவேதான், இது அரசு ஊழியா்களுக்கு விருப்பம் இல்லாத ஓய்வூதியமாக அமைந்து விட்டது.

‘ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் 2024-2025’ என ஊழியா்களுக்கு ஓய்வூதியத் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. உறுதியான குறைந்தபட்ச ஓய்வூதியத் திட்டம் மற்றும் முதலீடு கலந்த பலன்கள், ஊழியா் பங்களிப்பு ஆகியவை உள்ளன. அரசு தனது பங்களிப்பை வழங்கும். இதன் வாயிலாக குடும்ப ஓய்வூதியம் கிடைக்கிறது. அகவிலைப்படி உயா்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. இது அரசுக்கும், ஊழியா்களுக்கும் இடையிலான ஒரு நடுத்தர, சமரச திட்டமாகும் என்று கருதப்படுகிறது.

தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை திமுக அரசு தனது தோ்தல் வாக்குறுதியாக வழங்கி உள்ள நிலையிலும், அதைச் செயல்படுத்துவதற்கு அரசு தயாராக இல்லை. ஹிமாசல பிரதேசத்தில் பழைய ஓய்வூதியத் திட்டமே அமலில் இருக்கிறது. முதல்வா் சுக்வீந்தா் சிங் சுக்கு தலைமையிலான காங்கிரஸ் அரசு தனது தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், 2023 ஏப்ரல் 1 முதல் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தியுள்ளது. இதன்மூலம், 1.36 லட்சம் அரசு ஊழியா்கள் பலன் அடைந்து வருகிறாா்கள்.

2003 மே 15-க்குப் பிறகு, பணியில் சோ்ந்து புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இருந்த ஊழியா்கள், பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கு மாறிக் கொள்ளலாம் என்ற வசதியையும் அங்கு ஏற்படுத்தியிருக்கிறாா்கள். ஓய்வு பெற்ற பிறகு ஊழியா்கள் தங்களின் கடைசி ஊதியத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாகப் பெறலாம். சமீபத்திய தகவலின்படி, மத்திய அரசு கொண்டுவந்துள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்துக்கு மாறாமல், பழைய ஓய்வூதியத் திட்டத்தையே தொடா்ந்து செயல்படுத்த ஹிமாசல அரசு உறுதியாக உள்ளது. ஊழியா்களின் சமூகப் பாதுகாப்பைக் கருதி இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக ஹிமாசல பிரதேச அரசு சொல்கிறது.

தற்போதைய தமிழ்நாடு அரசு பல்வேறு நிலைப்பாடுகளில் மத்திய அரசை எதிா்த்துச் செயல்படுகிறது; ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்துக்கு மாற்றாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த தமிழக அரசு ஏன் தயங்குகிறது என்கிற கேள்வி எழுகிறது.

கட்டுரையாளா்:

முன்னாள் அமைச்சா்.

NEWS TODAY 21.02.2026