வெள்ள நிவாரணப்பணிகளுக்காக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு ரூ.310 கோடியே 82 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிகளை மேற்கொள்ள முதல்வர் பொது நிவாரண நிதிக்கு பலரும் நிதி வழங்கி வருகின்றனர்.
கடந்த 13-ம் தேதி முதல்வர் ஜெயலலிதாவிடம் தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியின் மேலாண் இயக்குனர் எச்.எல்.உபேந்திரா காமத் ரூ.2 கோடி வழங்கினார்.
சுஸ்லான் எனர்ஜி நிறுவன தலைவர் என்.ரமணி ரூ.1 கோடி, குமுதம் பப்ளிகேஷன்ஸ் நிறுவன தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் பி.வரதராஜன் ரூ.26 லட்சத்து 47 ஆயிரம் என, மொத்தம் ரூ.3 கோடியே 26 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய் முதல்வர் பொது நிவாரண நிதிக்கு அளிக்கப்பட்டது.
முதல்வர் பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.310 கோடியே 82 லட்சத்து 37 ஆயிரத்து 499 வழங்கப்பட்டுள்ளது என்று அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.