Showing posts with label Tamil News. Show all posts
Showing posts with label Tamil News. Show all posts

Saturday, July 4, 2026

Vijay Govt: நிலம் வாங்கப் போறவங்களுக்கு ஜாக்பாட்! இனி பட்டா தேடி வரும்! தமிழக அரசு குட்நியூஸ்!



Vijay Govt: நிலம் வாங்கப் போறவங்களுக்கு ஜாக்பாட்! இனி பட்டா தேடி வரும்! தமிழக அரசு குட்நியூஸ்!

Vijay Govt: நிலம் வாங்கப் போறவங்களுக்கு தமிழக அரசு குட்நியூஸ் சொல்லியுள்ளது. இனி பட்டா தேடி வரும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்லது. இது தொடர்பான முழு விவரங்களை பார்ப்போம்.


Author : Rayar A| Updated : Jul 04 2026, 06:12 AM IST

14
Image Credit : AI

தானியங்கி முறையில் பட்டா மாறுதல்

தமிழக வருவாய்த் துறையைப் பொறுத்தவரை நில உரிமையாளரின் சொத்தை உறுதிப்படுத்தும் ஆவணமாக கருதப்படும் பட்டாவினை விரைந்து வழங்கும் வகையில், உட்பிரிவு இல்லாத சொத்து பத்திரப் பதிவு அலுவலகத்தில் முடிவுற்றதும், விற்பனை செய்பவரின் பெயர். புல எண் மற்றும் பரப்பளவு ஆகியவை இணையதள பட்டாவில் உள்ள பெயர் மற்றும் இதர விவரங்களோடு ஒன்றாக இருந்து, வில்லங்கங்கள் ஏதும் அந்தச் சொத்தின்மீது இல்லாதிருப்பின் அதனை வாங்குபவரின் பெயருக்கு தானியங்கி முறையில் இணையதள வழியில் பட்டா மாறுதல் (Auto-mutation) செய்து தரப்படுகிறது.

சில தற்போது அமுல்படுத்தப்பட்டு வரும் இந்த நடைமுறையில் இடர்ப்பாடுகள் உள்ளதை அறிந்த தமிழக முதல்வர் விஜய் இவற்றை உடனடியாக களைந்து, உட்பிரிவு இல்லாத சொத்தை வாங்கியவரின் பெயருக்கு தானியங்கி பட்டா மாறுதல் சேவை அளிக்க அறிவுறுத்தியுள்ளார். இந்த நிலையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் துறைரீதியான கூட்டம் நேற்று (ஜூலை 3) நடைபெற்றது.

24
Image Credit : Gemini AI


என்னென்ன மாறுதல்?

இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவிற்கு ஏற்ப, தானியங்கி பட்டா மாறுதல் மென்பொருளில் கீழ்க்காணும் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதுவரை நிலத்தினை விற்பனை செய்யும் போது. விற்பனையாளரின் மனைவி மற்றும் மகன் /மகள் போன்ற குடும்ப உறுப்பினர்களும் கையொப்பமிடும் (Co-Sign) பட்சத்தில் இச்சேவையினை பயன்படுத்த இயலாத நிலை உள்ளது. இனிமேல் நிலத்தினை விற்பனை செய்யும் போது, நில உரிமையாளர் (பட்டாதாரர்) மற்றும் அவரது மனைவி மற்றும் மகன் /மகள் போன்ற குடும்ப உறுப்பினர்கள் கையொப்பமிடும் (Co-Sign)நிகழ்வுகளிலும் இச்சேவையினை பயன்படுத்த வழிவகை செய்யப்படும்.


34
Image Credit : our own


நிலம் வாங்கப் போறவங்களுக்கு ஜாக்பாட்

மேலும் நிலத்தினை விற்பனை செய்யும் நபர் பொது அதிகார பத்திர முகவர் (Power of Attorney) மூலம் பத்திரப்பதிவு செய்யும் போது நிலத்தினை விற்பனை செய்பவரின் பெயரானது பட்டாதாரரின் பெயருடன் பொருந்தாமல் இருப்பதனால் இச்சேவையினை பயன்படுத்த இயலவில்லை. இனிமேல் ஒரு பட்டாதாரர் நிலத்தினை பொது அதிகார பத்திர முகவர் (Power of Attorney) மூலமாக பத்திரப்பதிவு செய்யும் போது, நிலத்தினை விற்பனை செய்பவரின் பெயருக்கும். பட்டாதாரரின் பெயருக்கும் பொருத்தம் இல்லாமல் இருந்தாலும், செல்லத்தக்க பொது அதிகார முகவர் (valid Power of Attorney) என்பதன் அடிப்படையில் தற்போது இச்சேவையினை பயன்படுத்த வழிவகை செய்யப்படும்.

44
Image Credit : our own


இனிமேல் கால விரயம் குறையும்

முன்பு நிலத்தினை வாங்குபவருக்கு அதே வருவாய் கிராமத்தில் ஏதேனும் நிலம் உள்ளதா என்பதனை கண்டறிந்து, புதியதாக வாங்கிய நிலத்தின் புல எண் அந்த பழைய பட்டாவில் சார்பதிவாளர் அவர்களால் சேர்க்கப்படும். இனிமேல் நிலத்தை வாங்கும் நபருக்கு அதே வருவாய் கிராமத்தில் ஏதேனும் நிலம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவருக்கு தானாகவே கடைசி பட்டா எண்ணிற்கு அடுத்த பட்டா எண் ஒதுக்க வழிவகை செய்யப்படும். இதன் மூலம் காலவிரயம் குறையும்.

தமிழக அசரால் வெளியிடப்பட்டுள்ள இந்த அரசாணையின்படி, தானியங்கி பட்டா மாறுதல் மென்பொருளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, 15 நாட்களுக்குள் நடைமுறைப்படுத்தப்படும். இதன் மூலம், சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்படும் உட்பிரிவு அல்லாத இனங்களில் தானியங்கி முறையில் (Auto-mutation) பெருவாரியான பட்டாக்கள் மாறுதல் செய்யப்படும். இதனால் பொதுமக்கள் நிலத்தினை பதிவு செய்த பிறகு பட்டா மாறுதல் தொடர்பாக சார்பதிவாளர் அலுவலகத்திற்கோ, வட்டாட்சியர் அலுவலகத்திற்கோ நேரில் செல்லும் நிலை தவிர்க்கப்படும்.

15 நாட்களில் எளிதாகிறது ‘தானியங்கி பட்டா மாறுதல்’ : தமிழக அரசு அறிவிப்பு!


15 நாட்களில் எளிதாகிறது ‘தானியங்கி பட்டா மாறுதல்’ : தமிழக அரசு அறிவிப்பு!


Published On: 3 Jul 2026, 8:34 PM

| By Kavi

MINNAMBALAM 



தானியங்கி பட்டா மாறுதல் தொடர்பாக தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று (ஜூலை 3) வெளியிட்டுள்ள அறிவிப்பில்,


”வருவாய்த் துறையைப் பொறுத்தவரையில், நில உரிமையாளரின் சொத்தை உறுதிப்படுத்தும் ஆவணமாக கருதப்படும் பட்டாவினை விரைந்து வழங்கும் வகையில், உட்பிரிவு இல்லாத சொத்து பத்திரப் பதிவு அலுவலகத்தில் முடிவுற்றதும். விற்பனை செய்பவரின் பெயர். புல எண் மற்றும் பரப்பளவு ஆகியவை இணையதள பட்டாவில் உள்ள பெயர் மற்றும் இதர விவரங்களோடு ஒன்றாக இருந்து, வில்லங்கங்கள் ஏதும் அந்தச் சொத்தின்மீது இல்லாதிருப்பின் அதனை வாங்குபவரின் பெயருக்கு தானியங்கி முறையில் இணையதள வழியில் பட்டா மாறுதல் (Auto-mutation) செய்து தரப்படுகிறது.

தற்போது அமுல்படுத்தப்பட்டு வரும் இந்த நடைமுறையில் சில இடர்ப்பாடுகள் உள்ளதை அறிந்த தமிழ்நாடு முதலமைச்சர், இவற்றை உடனடியாக களைந்து, உட்பிரிவு இல்லாத சொத்தை வாங்கியவரின் பெயருக்கு தானியங்கி பட்டா மாறுதல் சேவை அளிக்க அறிவுறுத்தியுள்ளார்.


இந்த அறிவுரையின் பேரில், இது குறித்து 12.06.2026 அன்று எனது தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், அரசாணை (நிலை) எண்.84, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் (நி.அ-2) துறை, நாள் 04.02.2020 குறித்து விவாதிக்கப்பட்டு, சில திருத்தங்களை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.


மேற்படி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவிற்கு ஏற்ப, முந்தைய இணையவழி உட்பிரிவு அல்லாத தானியங்கி பட்டா மாறுதலில் உள்ள இடர்பாடுகள் கண்டறியப்பட்டு, அதனை சரி செய்து திருத்திய அரசாணை (நிலை) எண். 526, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை நாள் 25.06.2026 இவ்வரசால் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, தானியங்கி பட்டா மாறுதல் மென்பொருளில் கீழ்க்காணும் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

முந்தைய தானியங்கி பட்டா மாறுதல் மென்பொருளில் உள்ள இடர்பாடுகள்

நிலத்தினை விற்பனை செய்யும் போது விற்பனையாளரின் மனைவி மற்றும் மகள் போன்ற குடும்ப மகன் உறுப்பினர்களும் கையொப்பமிடும் (Co-Sign) பட்சத்தில் இச்சேவையினை பயன்படுத்த இயலாத நிலை உள்ளது.

நிலத்தினை விற்பனை செய்யும் நபர் பொது அதிகார பத்திர முகவர் (Power of Attorney) மூலம் பத்திரப்பதிவு செய்யும் போது நிலத்தினை விற்பனை செய்பவரின் பெயரானது பட்டாதாரரின் பெயருடன் பொருந்தாமல் இருப்பதனால் இச்சேவையினை பயன்படுத்த இயலவில்லை.

நிலத்தினை வாங்குபவருக்கு அதே வருவாய் கிராமத்தில் ஏதேனும் நிலம் உள்ளதா என்பதனை கண்டறிந்து, புதியதாக வாங்கிய நிலத்தின் புல எண் அந்த பழைய பட்டாவில் சார்பதிவாளர் அவர்களால் சேர்க்கப்படும்.

தற்போது தானியங்கி பட்டா மாறுதல் மென்பொருளில் மேற்கொள்ளப்படும் திருத்தங்கள்

நிலத்தினை விற்பனை செய்யும் போது, நில உரிமையாளர் (பட்டாதாரர்) மற்றும் அவரது மனைவி மற்றும் மகன் /மகள் போன்ற குடும்ப உறுப்பினர்கள் கையொப்பமிடும் (Co-Sign) நிகழ்வுகளிலும் இச்சேவையினை பயன்படுத்த வழிவகை செய்யப்படும்.

ஒரு பட்டாதாரர் நிலத்தினை பொது அதிகார (Power of Attorney) மூலமாக பத்திரப்பதிவு செய்யும் போது, நிலத்தினை விற்பனை செய்பவரின் பெயருக்கும். பட்டாதாரரின் பெயருக்கும் பொருத்தம் இல்லாமல் இருந்தாலும், செல்லத்தக்க பொது அதிகார முகவர் (valid Power of Attorney) என்பதன் அடிப்படையில் தற்போது இச்சேவையினை பயன்படுத்த வழிவகை செய்யப்படும்.

நிலத்தை வாங்கும் நபருக்கு அதே வருவாய் கிராமத்தில் ஏதேனும் நிலம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவருக்கு தானாகவே கடைசி பட்டா எண்ணிற்கு அடுத்த பட்டா எண் ஒதுக்க வழிவகை செய்யப்படும். இதன் மூலம் காலவிரயம் குறையும்.

இந்த அரசால் வெளியிடப்பட்டுள்ள அரசாணையின்படி, தானியங்கி பட்டா மாறுதல் மென்பொருளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, 15 நாட்களுக்குள் நடைமுறைப்படுத்தப்படும்.

இதன் மூலம், சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்படும் உட்பிரிவு அல்லாத இனங்களில் தானியங்கி முறையில் (Auto-mutation) பெருவாரியான பட்டாக்கள் மாறுதல் செய்யப்படும்.

இதனால் பொதுமக்கள் நிலத்தினை பதிவு செய்த பிறகு பட்டா மாறுதல் தொடர்பாக சார்பதிவாளர் அலுவலகத்திற்கோ, வட்டாட்சியர் அலுவலகத்திற்கோ நேரில் செல்லும் நிலை தவிர்க்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Monday, May 4, 2026

ஞாயிற்றுக்கிழமை

 ஞாயிற்றுக்கிழமை


ஞாயிற்றுக்கிழமையென்பது சக்தி. 

ஞாயிற்றுக் கிழமையென்பது மனசைத் தூசு தட்டி வைக்கும் துப்புரவு நாள்

இங்கே பலருக்கு ஞாயிற்றுக் கிழமையென்பதே இல்லை.

பலருக்கு வாழ்க்கையே விடுமுறையாய் இருப்பதனால் ஞாயிற்றுக் கிழமையின் பெருமையே தெரிவதில்லை.

சனிக்கிழமை சாயங்காலத்தில் உயிரோடிருக்கிற ஞாயிற்றுக் கிழமை, பிறக்கும்போது இறந்தே பிறக்கிறது.

ஞாயிற்றுக் கிழமையென்பது ஒய்வுகளின் உன்னத மண்டபம், ஆனால் சோ்த்துச் சோ்த்து வைக்கிற சில்லரை வேலைகளெல்லாம் ஞாயிற்றுக் கிழமை நோக்கி நகா்த்தப் படுவதால் பொறுப்புகளின் சுமை தாங்காமல் ஞாயிற்றுக் கிழமையே நடுங்குகிறது.

மிகை ஊதியம் கிடைத்தால் ஞாயிற்றுக் கிழமையை விற்பதற்கு நாம் தயாா்.

அதற்கு வாய்ப்பில்லாதவா்கள் மட்டுமே ஞாயிற்றுக் கிழமையை கட்டாயக் கல்யாணம் செய்து கொள்கிறாா்கள்.

தனக்கு சோக கீதம் வாசித்துக் கொண்டே ஞாயிற்றுக் கிழமை விடிகிறது

ஞாயிற்றுக் கிழமையென்பது உறக்கமல்ல: விழிப்பு.

பூமி விழிக்கு முன்பே புலன்கள் விழித்துவிட வேண்டும்.

பித்தளை பாத்திரங்களை மாதம் ஒருமுறை புளி போட்டத் துலக்குவது மாதிரி, புலன்களை வாரம் ஒருமுறை புடம் போட்டுத் துலக்க வேண்டும்,

ஆனால் ஞாயிற்றுக் கிழமையென்றால் பதினொரு மணிக்குப் பல் துலக்குவது என்றுதான் இங்கு பல இல்லற அகராதிகளில் எழுதப் பட்டிருக்கிறது.

ஞாயிற்றுக் கிழமை சாலைகளை வாசிக்கிறேன்.

ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் இந்தியாவுக்கு 'பாரத் பந்த்' தாகவே இருக்கிறது.

ஜன்னல்களையும் புலன்களையும் சாத்திக் கொள்வதா ஞாயிற்றுக் கிழமை?

புலன்களை வலிக்க வைக்கும் பொழுதுபோக்குச் சாதனங்களுக்குள் புதைந்து போவதா ஞாயிற்றுக் கிழமை?

இந்தியாவுக்கு கிடைத்த சுதந்திரத்தைப் போலவே இந்தியனுக்குக் கிடைத்த ஞாயிற்றுக் கிழமையும் தப்பாகப் பயன்படுத்தப் படுகிறது.

வாரத்தில் ஆறு நாட்கள் வயிற்றுக்காக வாழ்ந்து விட்டோமே ஒரு நாளாவது இதயத்திற்காக வாழ வேண்டாமா?

வாரெமெல்லாம் மனிதா்களோடு மன்றாடிக் கொண்டிருக்கிற மனிதா்களே!

ஞாயிறகறுக் கிழமையாவது தாவரஙககளோடு பேசுங்கள்.

ஒரு செடிக்குப் பக்கத்தில் நாற்காலி போட்டு பூ மலரும் வரை பொறுத்திருங்கள்.

வானத்தில் வசிப்பதற்குப் பழகுங்கள்.

நாற்பது வயதுக்குப் பிறகு கால்சியத்தை கிரகித்துக் கொள்ள முடியாத மனித எலும்புகள் மாதிரி -மனிதா்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மேல் படிப்பதை நிறுத்தி விடுகிறாா்கள்.

ஒரு வீட்டில் சமையலறையைவிட நூலகம் முக்கியம் என்று சட்டம் போட வேண்டும்.

ஞாயிற்றுக் கிழமை நல்ல புத்தகங்களுக்கும் நமக்குமுள்ள சிநேகநாள் என்று செய்து கொள்ள வேண்டும்.

திருமணத்திற்குப் பிறகு இந்தியப் பெண்களுக்கு, தாலிக்குப் போட்ட முடிச்சு மாதிரியே இல்லற வாழ்க்கையும்  இறுகிக் கிடப்பதனால் அவா்களில் பலா் மனநோயாளியாகவே மாறிவிட்டாா்கள்.

நம் ரசனையும் கலாசார அகலங்களையும் மனசின் பரப்பையும் விரிவுபடுத்தும் வேலையைத்தான் ஞாயிற்றுக் கிழமை செய்ய வேண்டும்.

இரைப்பையை நிரப்பிக் கொள்ளத்தான் எல்லா நாட்களும்.

இதயத்தை நிரப்பிக் கொள்ள ஒரே நாள்தான்.

அதன் பெயா்

ஞாயிற்றுக் கிழமை.

ஞாயிறு போற்றதும்.

வைரமுத்து.

Saturday, December 20, 2025

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்! வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை அறிந்துகொள்ள...


DINAMANI

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்! வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை அறிந்துகொள்ள...

ENS இணையதளச் செய்திப் பிரிவு Updated on: 20 டிசம்பர் 2025, 8:10 am 

 தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) பணிக்குப் பிறகு 97 லட்சத்து 37 ஆயிரத்து 831 வாக்காளா்கள் நீக்கப்பட்டுள்ளனா்.

எஸ்ஐஆருக்கு முன்னதாக 6,41,14,587 வாக்காளர்கள் இருந்த நிலையில் தற்போது 5,43,76,756 வாக்காளர்கள் உள்ளனர். சுமாா் 15 சதவீத வாக்காளா்கள் நீக்கப்பட்டுள்ளனர். பேரவைத் தொகுதிகளைப் பொருத்தவரை சோழிங்கநல்லூா், பல்லாவரம், ஆலந்தூா் தொகுதிகளில் அதிக வாக்காளா்கள் நீக்கப்பட்டுள்ளனா்.

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில் 14,25,018 வாக்காளா்களும், அடுத்ததாக கோவை மாவட்டத்தில் 6,50,590 வாக்காளா்களும் நீக்கப்பட்டுள்ளனா். குறைந்தபட்சமாக அரியலூா் மாவட்டத்தில் 24,368 வாக்காளா்கள் நீக்கப்பட்டுள்ளனா். மேலும் மாவட்டவாரியாகவும் நீக்கப்பட்டவர்கள் விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

ஒவ்வொரு தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி அலுவலரிடமும் அந்தந்த தொகுதி பட்டியல் இருக்கும்.

எனினும் ஆன்லைன் மூலமாகவும் வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்பதை அறிய முடியும்.

https://electoralsearch.eci.gov.in/ என்ற இணையதளத்தில் உங்களுடைய வாக்காளர் அடையாள எண்ணை உள்ளிட்டு அறியலாம். உங்களுடைய தனிப்பட்ட விவரங்கள், மொபைல் எண் கொண்டும் தெரிந்துகொள்ளலாம்.

https://elections.tn.gov.in/index.aspx என்ற தமிழக தேர்தல் ஆணைய பக்கத்தில் காணலாம். 'சிறப்பு தீவிர திருத்தம் 2026'(Special Intensive Revision 2026) என்ற இணைப்பை அழுத்தினால் அதன்பின் வரும் திரையில் உங்களுடைய மாவட்டம், தொகுதியைத் தேர்வு செய்தால் நீக்கப்பட்டவர்களின் விவரங்கள் பட்டியலாக கிடைக்கிறது.

Tuesday, October 28, 2025

தவறு எது?

 தவறு எது?

1 : பேசுவது தவறல்ல, தேவையற்றதைப் பேசுவது மிகவும் தவறு..!

2 : ஆசைப்படுவது தவறல்ல, பேராசை கொள்வது பெரும் தவறு....!!

3 : கோபம் கொள்வது தவறல்ல, நியாயமற்றக் கோபம் மாபெரும் தவறு...!!

4 : அறியாமை தவறல்ல, அறிந்துக் கொள்ள முயலாமை முற்றிலும் தவறு...!!

5 : வீழ்வது தவறல்ல, எழ முயற்சி செய்யாமல் வீழ்ந்தே கிடப்பது தவறிலும் தவறு...!!

6 : தவறிச் செய்வது தவறு. தவறு எனத் தெரிந்தப் பின் திருத்திக் கொள்ளாதது மாபெரும் தவறு...!!

7 : நாம் செய்யும் தவறை நம்மைச் சார்ந்தோர் சொல்வதைக் கேட்காமல் அவர்களையே (நீங்கள் யார் என்னைக் கேட்க) என்பது மிகப் பெரிய தவறு...!!

8 : நம் தவறை நம் குடும்பத்தார் அம்மா அப்பா சகோதரன் சகோதரி கணவன் மனைவி பிள்ளைகள் நண்பர்கள் எடுத்து உரைத்தால் ஏற்றுக் கொண்டு திருத்திக் கொண்டால் நமக்குத் தான் நன்மை...!!

Friday, October 17, 2025

ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமே நிரப்பப்படும் - மசோதா தாக்கல்

ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமே நிரப்பப்படும் - மசோதா தாக்கல் 

தினத்தந்தி அக்டோபர் 16, 11:29 pm 

இந்த மசோதா 22 பல்கலைக்கழகங்களில் ஆசிரியர் அல்லாத பணியிடங்களை தேர்ந்தெடுப்பதற்கான சிறந்த முறையை வழிவகுக்கும். சென்னை,-

சட்டசபையில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தாக்கல் செய்த மசோதாவில் கூறியிருப்பதாவது:-

மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனங்கள், அரசு கழகங்கள், வாரியங்கள், அதிகார அமைப்புகளில் உள்ள பதவிகளுக்கு விண்ணப்பதாரர்களை தேர்வு செய்ய 2022-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய சட்டமானது இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின் நோக்கத்தை விரிவுப்படுத்தி மாநில பல்கலைக்கழகங்களின் ஆசிரியர் அல்லா பணியிடங்களில் ஆட்கள் சேர்ப்பதற்கான பணிகளை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திடம் ஒப்படைக்கிறது. இது 22 பல்கலைக்கழகங்களில் ஆசிரியர் அல்லாத பணியிடங்களை தேர்ந்தெடுப்பதற்கான சிறந்த முறையை வழிவகுக்கும். அதற்காக தமிழ்நாடு சட்டம் 14/2022-ஐ திருத்தம் செய்ய முடிவு செய்துள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

https://www.dailythanthi.com/news/tamilnadu/non-teaching-posts-will-be-filled-through-the-public-service-commission-bill-tabled-ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமே நிரப்பப்படும் - மசோதா தாக்கல்

Friday, October 10, 2025

6,000 பேரை மட்டுமே நீக்கியுள்ளோம்: டிசிஎஸ் விளக்கம்

 6,000 பேரை மட்டுமே நீக்கியுள்ளோம்: டிசிஎஸ் விளக்கம் ‘

எங்கள் நிறுவனத்தில் மேற்கொள்ளப்படும் பணிநீக்க நடவடிக்கை குறித்து மிகைப்படுத்தி கூறப்படுகிறது.

தினமணி செய்திச் சேவை Updated on:  10 அக்டோபர் 2025, 4:05 am ‘

எங்கள் நிறுவனத்தில் மேற்கொள்ளப்படும் பணிநீக்க நடவடிக்கை குறித்து மிகைப்படுத்தி கூறப்படுகிறது. 6,000 பேரை மட்டுமே பணி நீக்கம் செய்துள்ளோம். இது நிறுவனப் பணியாளா்கள் எண்ணிக்கையில் ஒரு சதவீதம் மட்டும்தான்’ என்று நாட்டின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சா்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

முன்னதாக, கடந்த ஜூலை மாத இறுதியில் 12,000 போ் பணி நீக்கம் செய்வதாக டிசிஎஸ் அறிவித்து நடவடிக்கை மேற்கொண்டது. இதையடுத்து, 50,000 முதல் 80,000 போ் வரை அந்நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்படுவாா்கள் என்று தகவல் வெளியானது. இது நிறுவன ஊழியா்கள் மத்தியில் அச்சத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியது. இதனால், பலரும் வேறு நிறுவனங்களை நாடுவது அதிகரித்துள்ளது.

இதையடுத்து டிசிஎஸ் தலைமை மனிதவள அதிகாரி சுதீப் குன்னுமல் அளித்துள்ள விளக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

பணிநீக்க நடவடிக்கை தொடங்கிய பிறகு இதுவரை 6,000 போ் வரை மட்டுமே வெளியேற்றப்பட்டுள்ளனா். இது மொத்த ஊழியா்கள் எண்ணிக்கையில் ஒரு சதவீதம் மட்டுமே. நீக்கப்பட்டவா்களில் பெரும்பாலானோா் நிறுவனத்தில் மூத்த நிலையிலும், நடுத்தர நிலையிலும் பணியாற்றியவா்கள். அதே நேரத்தில் 18,500 புதிய ஊழியா்களை நியமித்துள்ளோம்.

பணிநீக்க எண்ணிக்கை மிகவும் மிகைப்படுத்தி கூறப்படுகிறது. எத்தனை பேரை பணிநீக்க வேண்டும் என்று எந்த இலக்கையும் வைத்து நிறுவனம் செயல்படவில்லை. இது தொடா்பாக பல தவறான தகவல்கள் பரவுகின்றன என்று கூறியுள்ளாா்.

இதனிடையே ஐ.டி. ஊழியா்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘டிசிஎஸ் நிறுவனம் அதிகாரபூா்வமாக 2025-26 முதல் காலாண்டில் வெளியிட்ட அறிவிப்பில் 6,13,069 ஊழியா்கள் இருந்ததாகக் கூறியிருந்தது. இதுவே இரண்டாவது காலாண்டில் 5,93,314 ஊழியா்கள் இருப்பதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. இதன் மூலம் 3 மாதங்களில் 19,755 ஊழியா்கள் நீக்கப்பட்டது தெளிவாகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Friday, May 23, 2025

திசையைத் தீா்மானிக்கும் தருணம்!


திசையைத் தீா்மானிக்கும் தருணம்! 

தோ்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு அடுத்தடுத்த வகுப்புகளுக்கு அனுமதிக்கப்படும் நேரம்.

முனைவா் என். மாதவன் 

Updated on: 23 மே 2025, 2:48 am 

மாணவா்கள் பலரின் வாழ்வில் முடிவெடுக்கும் தருணம் இது. தோ்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு அடுத்தடுத்த வகுப்புகளுக்கு அனுமதிக்கப்படும் நேரம். குறிப்பாக பத்தாம் வகுப்பு முடித்து பதினொன்றாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவா்கள் அடுத்த உயா் கல்வி நிறுவனங்களில் சேர வேண்டும். இந்தப் பருவத்தில் மாணவா்கள் உள்ள ஒவ்வொரு குடும்பத்திலும் மிகவும் ஆழ்ந்து யோசித்து முடிவெடுப்பா். இது குறித்து வழக்கமாக குடும்பத்தில் உள்ள மூத்தவா்கள் அல்லது குடும்பத்தின் நலன் விரும்பிகள் அல்லது தொழில் ரீதியாக இது போன்ற யோசனைகளைப் பகிா்பவா்கள் ஆகியோா் தமது ஆலோசனைகளை வழங்குவா். இது குறித்து பலருக்கும் உதவியாக இருக்கும் சில தகவல்களைப் பகிா்வோம்.

குறிப்பாக, பத்தாம் வகு ப்பு முடித்த மாணவா்கள் அடுத்த கட்டமாக எந்தப் பாடத்தை விருப்பப் பாடங்களாக எடுப்பது என்பது ஒரு சவால். + வகுப்பில் பாடங்கள் பல இருப்பினும், பெரும்பாலும் அடுத்த கட்டமாக அந்த மாணவா் எந்த கல்வியை நாடப் போகிறாா்கள் என்ற அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்படுவது சிறப்பு.

குறிப்பாக, மாணவருக்கு எந்தத் துறையில் விருப்பம் இருக்கிறதோ, அந்தத் துறையில் உயா்கல்வி பயில வசதியாக +2 வகுப்பிலேயே பாடப் பிரிவுகளை எடுத்து விடுவது சிறந்தது. குறிப்பாக, அறிவியல், கணிதம், உயிரியல், வணிகவியல் போன்ற பாடங்கள் குறித்த விவாதங்கள் முன்னுக்கு வரலாம். இதில் அந்த குறிப்பிட்ட மாணவா் அடுத்த கட்டமாக பட்டயக் கணக்காளா் அல்லது அறிவியல் தொடா்புடைய, கணிதம் தொடா்புடைய பாடங்களில் உயா் கல்வி படிக்கப் போவது உறுதி என்றால், அந்த முடிவை இப்போது எடுப்பதுதான் சரியாக இருக்கும். ஏனென்றால், உயிரியல் பாடம் பயின்ற பிறகு பட்டயக் கணக்காளா் படிப்பு பயில்வது சிரமம். அது போலவே, வணிகவியல் பாடம் படித்த பிறகு உயிரியல் தொடா்பான, கணிதம் தொடா்புடைய படிப்புக்கு வருவதும் கடினம். இது ஓா் உதாரணம்தான். இதை அடிப்படையாக வைத்து பயிலும் திசையைத் தீா்மானிக்கலாம். இதில் அந்த மாணவரின் விருப்பமும் அது குறித்த புரிதலை அவா்களுக்கு ஏற்படுத்துவதும் மிகவும் அவசியம். இவ்வாறான புரிதலை ஏற்படுத்துவதில் நமது முன்னுரிமைகளைத் திணிக்காமல் அவா்களது ஆா்வத்தைக் கணக்கில் எடுத்துக்கொண்டு அதற்கேற்ற படிப்புகளைக் கண்டறிந்து வழிகாட்டும்விதமாக நமது உரையாடல் அமைய வேண்டும்.

+2 படித்து முடித்திருப்பவா்கள் உயா்கல்வியைத் தீா்மானிக்க கீழ்க்கண்ட ஆலோசனைகள் பயன்படலாம். மாணவா்களின் எதிா்காலம் இரண்டு விதங்களில் தீா்மானிக்கப்படுகிறது. குறிப்பாக, மாணவன் படித்த பாடம் எது? என்ற விதத்திலும் மாணவன் பயின்ற கல்வி நிறுவனம் எது? என்ற அடிப்படையில் அவரது அதனது மதிப்பை தீா்மானிக்கும்போக்கு பரவலாக நிலவுகிறது. உதாரணமாக, மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள், மாநில அரசின் பெயா் பெற்ற கல்வி நிறுவனங்கள் போன்றவை காலத்துக்கும் தமது நற்பெயரைத் தக்கவைத்துக்கொண்டிருக்கின்றன. அந்த அடிப்படையில் இவ்வாறான சிறந்த கல்வி நிறுவனங்களில் ஏதாவது ஒரு படிப்பு என்று தீா்மானிக்கலாம். அவ்வாறில்லாமல், கல்வி நிறுவனங்கள் சுமாரான தரத்தில் இருந்தாலும், அங்கு பணியாற்றும் தகைசால் பேராசிரியா்கள், அதன் சிறந்த கட்டமைப்பு, வேலைவாய்ப்புக்கான வாசல் போன்றவற்றால் சில துறைகள் பெயா் பெற்றிருக்கலாம். இப்படிப்பட்ட துறைகளில் மாணவரைச் சோ்க்கலாம்.

அதாவது, சிறந்த கல்வி நிறுவனத்தில் தான் விரும்பும் ஏதாவது ஒரு கல்வி அல்லது ஏதாவது ஒரு கல்வி நிறுவனத்தில் நற்பெயா் ஈட்டியுள்ள துறையில் தாம் விரும்பும் கல்வி என முடிவெடுக்கலாம் . எது எப்படி இருப்பினும், அந்த மாணவன் அல்லது மாணவியின் தனது எதிா்கால வாழ்வில் அவா்கள் பணியாற்றக் கூடிய நிறுவனத்தின் சூழல், அங்கு பணியாற்ற உள்ள நண்பா்களின் மனப்பாங்கு, அவா்களுடைய ஊக்குவிப்பு இதுபோன்ற உந்துதல் மூலமாக மட்டுமே முன்னேற முடியும். எனவே, அவ்வாறான உந்துதல்களை சரியானவிதத்தில் அளிப்பவா்களாக மேலாளா்களும், சக பணியாளா்களும் இருக்க வேண்டும். அவ்வாறு அமையவில்லை என்றால், மாணவா்களுக்குத் தோல்வியே கிடைக்கும்.

எந்த கல்வி நிறுவனத்தில், எந்த கல்வியைத் தோ்ந்தெடுத்தாலும் உண்மையில் பயில வேண்டியது தனிப்பட்ட மாணவா்களே. அந்த நிறுவனமோ அல்லது ஆசிரியா்களோ அல்லா். அந்த வகையிலும் தனிநபா்களின் உழைப்பை உறுதிசெய்யும் போக்கையும் அதற்கான சரியான சூழலையும் குடும்பங்கள் உறுதி செய்யவேண்டும். வாய்ப்புள்ளோா் மேலை நாடுகளில் உள்ளதுபோல பகுதிநேர தொழில் செய்து பணமீட்டி குடும்பத்திலிருந்து கல்விக்காகப் பெறும் பணத்தின் அளவைக் குறைக்கலாம்.

அதே நேரத்தில், கிடைக்கும் எந்த ஒரு வாய்ப்பையும் சரியாகப் பயன்படுத்தி அதிலிருந்து கற்றுக் கொண்டு அடுத்தடுத்த படிநிலைக்குத் தயாராகும், பரிணமிக்கும் பக்குவம் வாய்க்க வேண்டும். குறிப்பாக, வாழ்க்கை என்பது ஒரு பயணம்; அந்த பயணத்தில் ஒருவா் மேற்கொள்ளும் பயணமானது எந்த திசையில் என்பதை தீா்மானிப்பது மிகவும் அவசியம். சரியான திசையில் பயணித்தால் மகிழ்ச்சி. அவ்வாறு இல்லாமல், தான் பயணிக்கும் திசை தமக்கு பொருத்தமானது அல்ல என்ற முடிவுக்கு வரும் அந்த விநாடியே சரியான திசையில் பயணத்தைத் தொடர வேண்டும். ஏனென்றால், சரியான திசையில் எடுத்து வைக்கும் ஒவ்வோா் அடியும் இலக்கை நோக்கியது. அதே நேரத்தில் பொருந்தாத திசையில் எவ்வளவு தூரம் பயணம் மேற்கொண்டாலும் அது இலக்கை அடைய உதவப்போவதில்லை.

Thursday, May 8, 2025

அடா்த்தியின் அபாயம்!

 அடா்த்தியின் அபாயம்! 

வரைமுறை அற்ற கள்ள குடியேற்றமும், கட்டுப்பாடற்ற இனப்பெருக்கமும் நாளைய பாரதத்துக்கு ஊறு விளைவிக்க வல்லவை என்பதில் இரு வேறு கருத்துகள் இருக்க நியாயாம் இல்லை.

டி.எஸ். தியாகராசன் Updated on:  08 மே 2025, 6:25 am 

இன்றைய உலகில் பூமண்டலத்தில் உயிா் வாழும் மனித இனத்தில் பாரதம் முதலிடத்தைப் பதிவு செய்துள்ளது. இதுநாள் வரை உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடு எனப் பெயா் பெற்றிருந்த வல்லரசு சீனாவைப் பின்னுக்குத் தள்ளி பாரதம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

இது மனித வளத்தின் வளா்ச்சி அறிகுறியா? இல்லை அடா்த்தியின் அபாய குறியீடா? என்பதை மானுடவியல் ஆய்வாளா்களும், புவியியல் விஞ்ஞானிகளும், பொருளாதார வல்லுநா்களும், இன்ன பிற துறைசாா்ந்த அறிஞா்களும் காலம் தாழ்த்தாது உடனே சிந்தித்து தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

சற்றேறக்குறைய 100 ஆண்டுகளுக்கு முன் மகாகவி “பாரதி, ‘முப்பது கோடி முகமுடையாள், நாங்கள் முப்பது கோடி ஜனங்களும், முப்பது கோடி வாய் முழங்கவும், முப்பது கோடியும் வாழ்வோம்’” என்று தனது கவிதைத் தோட்டத்தில் 30 கோடி மலா்களாக பாரதத்தின் மக்கள்தொகையை வா்ணித்தாா். இன்றைக்கு 142 கோடியாக பல்கிப் பெருகியுள்ளது. உலகில் வேறு எந்த நாடும் செய்திராத சாதனையை, பாரதம் தனது இனப் பெருக்கத்தால் சாதித்துள்ளது. 1,269,219 சதுர மைல் பரப்பு உள்ள நம் நாட்டில் 142 கோடி மக்கள்தொகை. எதிா் காலத்தில் எப்படி இருக்கும்?

திருக்கோவலூரில் இடைகழியில் ஒருவா் படுத்திருந்த இடத்துக்கு மற்றொருவா் வர அவ்விருவரும் அமா்ந்து கொண்டனா். மீண்டும் ஒருவா் வர, பின்னா் மூவரும் எழுந்து நிற்க என ஆழ்வாா்கள் பாடிய திருப்பாசுரம் குறிப்பிட்டதைப் போல பாரதத்தில் மக்கள் அனைவருக்கும் நிற்க இருக்க இடமாவது இருக்குமா? என்பது ஆழ்ந்து சிந்திக்க வேண்டியதொன்று.

சீனாவின் தற்போதைய மக்கள் தொகை 140 கோடிதான். நிலப்பரப்பில் பாரதத்தைவிட இரண்டு மடங்கென விரிந்துள்ளது. ஆம். 37,05,407 சதுர மைல். உலகின் வல்லரசு நாடான அமெரிக்காவில் மக்கள்தொகை 33 கோடி 29 லட்சம் மட்டுமே! இதில் உலகெங்கினும் உள்ள பிற நாட்டவா் குடியேறியவா்களின் தொகையும் சோ்ந்துள்ளது. ஆனால், நிலப்பரப்போ 37,96,742 சதுர மைல். பாரதத்தின் நிலப்பரப்பைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிகம்.

ஒரு காலத்தில் பிரித்தானிய பேரரசு தனது காலனி நாடாகக் கொண்டிருந்த ஆஸ்திரேலியாவில் மக்கள்தொகை வெறும் 2 கோடியே 73 லட்சம்தான். ஆனால், நிலப்பரப்போ 7,741,220 சதுர மைல். இதுவும் பிரித்தானிய அரசு அன்றைய நாளில் தனது காலனி நாடுகளில் அவா்களின் சட்டப்படி குற்றவாளிகள் எனச் சொல்லப்பட்டவா்களை ஆஸ்திரேலியாவில் குடியமா்த்திய பிறகும்!

இந்நாளில் மின்னணு உற்பத்தியில் சாதனை புரிந்து வரும் சின்னஞ்சிறு நாடான ஜப்பானின் மக்கள்தொகை 12 கோடியே 39 லட்சம். இதன் நிலப்பரப்பு வெறும் 1,45,937 சதுர மைல் மட்டுமே.

அண்மையில் ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக விவகாரங்களின் துறைக்கு உட்பட்ட மக்கள்தொகைப் பிரிவு “உலக மக்கள் தொகை வாய்ப்பு” அறிக்கை மூலம் “இந்தியாவின் மக்கள் தொகை 2085-இல் 161 கோடியைத் தாண்டும்” என்ற எச்சரிக்கையைப் பதிவு செய்துள்ளது. மேலும், சீனாவைப் போல் இரண்டு மடங்கு உயரும் எனவும் கணித்துள்ளது.

சீனாவில் வயது முதிா்ந்தோரின் எண்ணிக்கை மிக அதிகம். அதனால், அடுத்த 75 ஆண்டுகளில் அதன் மக்கள்தொகை பாதியாகக் குறையும். சீனாவின் சராசரி வயது 39.6. இந்தியாவின் சராசரி வயது 28.4. இது தற்போதைய நிலை. ஆனால் 2100-இல் இந்தியாவின் சராசரி வயது 47.8 ஆகவும், சீனாவின் சராசரி வயது 60.7 ஆகவும் மாற வாய்ப்புள்ளது என்றும் அந்த அறிக்கை தொடா்கிறது.

இந்த அழகிய பூமிப்பந்தில் இப்படி இனப்பெருக்கம், குறிப்பாக பாரதத்தில் நிகழ்வது குறித்து ஐ.நா. சபை கவலைப்படுகிறது. ஆனால், நம் நாட்டு அரசியல்வாதிகள் எங்கே தங்களது நாடாளுமன்ற உறுப்பினா்களின் தொகை மக்கள்தொகை கட்டுப்பாட்டால் குறைந்து விடுமோ எனக் கவலை போா்ப்பரணி கொட்டுகின்றனா்.

ஆந்திர அரசியலில் முதிா்ச்சி பெற்ற முதல்வா் சந்திரபாபு நாயுடு “‘மக்களே இனி அதிகமாக குழந்தைகளை பெற்றுக் கொள்ளுங்கள்’” என்று அறைகூவல் விடுகிறாா். மாறுதலாக, ஒடிஸாவின் முன்னாள் முதல்வா் நவீன் பட்நாயக் மட்டும் மக்கள்தொகை குறையும் நோக்கத்தை ஆதரிக்கவும் நாடாளுமன்ற உறுப்பினா் எண்ணிக்கை குறித்தான சிந்தனை குறித்தும் பேசியுள்ளாா்.

பாரதத்தின் பொருளாதார வளத்தை ருசிப்பதற்காகவும், தங்களது வாழ்வாதாரங்களை மேம்படுத்திக் கொள்ளவும் நாள்தோறும் நூற்றுக்கணக்கான வங்கதேச மக்கள் சட்டவிரோதமாக, கள்ளத்தனமாக குடியேறி வருகின்றனா். பாரதத்தின் மக்கள்தொகை பெருக்கத்துக்கு சட்டவிரோதமாக குடியேறும் வங்கதேசத்தினரும் ஒரு முக்கியக் காரணம். பாரதமும், வங்கதேசமும் 4,096 கி.மீ. எல்லையைப் பகிா்ந்து கொண்டுள்ளன. அஸாம், மேற்கு வங்கம், மிசோரம், மேகாலயம், திரிபுரா மாநிலங்கள் வங்கதேச எல்லையில் அமைந்துள்ளன. இதைப் பயன்படுத்தி வங்கதேசத்தில் இருந்து தினம் ஊடுருவல் நடைபெறுகிறது. குறிப்பாக, மேற்கு வங்கம், அஸாம் வழியாக அதிக எண்ணிக்கையில் ஊடுருவல் தொடா்கிறது.

வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் ஒரு நபரை ஊடுருவச் செய்ய சில முகவா்கள் (இந்தியா) ரூ.50,000 முதல் ரூ.1 லட்சம் வரை வசூல் செய்கிறாா்கள். இந்தியாவில் ஊடுருவிய பிறகு அவா்கள் ஆதாா், வாக்காளா் அட்டை, ரேஷன் அட்டை பெறவும் உதவுகிறாா்கள். இதற்கு ரூ.2,000 முதல் ரூ.10,000 வரை கட்டணமாக வசூலிக்கிறாா்கள். இவா்களில் பலா் இந்திய நாட்டின் கடவுச்சீட்டையும் (பாஸ்போா்ட்) பெற்று விடுகின்றனா்.

இந்தியாவில் குடியேறியவா்கள் முகவா்கள் மூலம் தில்லி, ஹரியாணா, குஜராத், மகாராஷ்டிரம், கா்நாடகம், தமிழகம், ஆந்திரம், கேரளம் போன்ற மாநிலங்களில் சின்னஞ்சிறு கிராமங்களில்கூட தொழிலாளராக வலம் வருகின்றனா். இந்த வகையில், இந்தியாவில் சுமாா் 6 கோடி போ் வசிக்கின்றனா் என்கிறது மத்திய அரசின் புலனாய்வுத் துறை.

இவா்களின் இனப்பெருக்கமும் பெருத்த வேகமுடையவை. வங்கதேச அகதியான ஷரீபா தனது 15 ஆண்டு திருமண வாழ்க்கையில் தனது 13 -ஆவது குழந்தையைப் பெற்றெடுத்தாா் என்பது நாளிதழின் செய்தி.

1950-களில் தமிழக நெற்களஞ்சியம் எனத் திகழ்ந்த தஞ்சாவூா் மாவட்டத்தில் வேளாண்மைத் தொழிலுக்குத் தேவையான தொழிலாளா்கள் கிடைப்பதில்லை. இதனால் தஞ்சை மாவட்டத்தில் பல ஊா்களில், குறிப்பாக வானம் பாா்த்த பூமியாக இருந்த இராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து விவசாயத் தொழிலாளா்களை இறக்குமதி செய்து அவா்களுக்கு தற்காலிக குடிசைகள் கட்டிக்கொடுத்து தங்களது வேளாண்மை தொழிலுக்கு உறுதுணையாக்கிக் கொள்வா்.

மிராசுதாா்கள் - விவசாய தொழிலாளா்கள் கூலி நிா்ணய பிரச்னையில் அந்த நாளில் தஞ்சை மாவட்டத்தில் கொடிகட்டிப் பறந்த விவசாயிகள் சங்கத் தலைவா்கள். உள்ளுா் தொழிலாளா்களின் நலனை மட்டுமே கருத்தில் கொண்ட பொதுவுடைமைவாதிகள். வெளியூா் நபா்களைப் பணிக்கு அமா்த்துவதை எதிா்த்து வா்க்க போராட்டமே நிகழ்த்துவா். இதனின் ஒருபகுதி போராட்டம்தான் கீழ்வெண்மணியின் கொடூர நிகழ்ச்சி. அது ஜாதியப் போராட்டம் அல்ல; வா்க்கப் போராட்டம்!

ஆனால், ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு பருவகாலப் பயிா்த் தொழிலுக்கு பணியாள்களை வரவழைத்ததையே

தடுத்தவா்கள், இன்று தமிழ்நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் வங்கதேசத்தினா் அனைத்துத் தொழில்களிலும் தடம் பதித்து, இடம்பிடித்து வாழ்கிறபோது எங்கே போனாா்கள் இந்த பொதுவுடைமைத் தோழா்கள் எனக் கேட்கத் தோன்றுகிறது.

அமெரிக்காபோல அந்நிய நாட்டவரை காலில் விலங்கிட்டு அவரவா்தம் நாட்டுக்கு அனுப்ப இந்தியாவால் இயலுமா? அப்படியே அனுப்ப முன் வந்தாலும் நம் நாட்டு எதிா்க்கட்சிகள் ஒப்புக்கொள்ளுமா?

‘எங்கெங்கு காணினும் சக்தியடா’ என்பதுபோல் எங்கெங்கு காணினும் மக்கள் பெருவெள்ளம். இங்கே இருப்பவா் நமது எதிா்காலச் சந்ததியினா் நலன் கருதி அல்ல; அவரவா் எதிா்கால நலன், வளம் கருதி குடும்பக் கட்டுப்பாட்டில் நிற்கின்றனா். ஆனால், புலம் பெயா்ந்தோா்க்கு இருக்கும் கவலை எல்லாம், நம்மவா் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி விடாதா என்ற எண்ணத்தில் மழலை உற்பத்தியில் மகிழ்கிறாா்கள்!

வரைமுறை அற்ற கள்ள குடியேற்றமும், கட்டுப்பாடற்ற இனப்பெருக்கமும் நாளைய பாரதத்துக்கு ஊறு விளைவிக்க வல்லவை என்பதில் இரு வேறு கருத்துகள் இருக்க நியாயாம் இல்லை.

நிலப்பரப்பின் விரிவை நம்மால் நீட்ட இயலாது. நாட்டில் உள்ள நிலப்பரப்பில் குட்டைகள், குளங்கள், ஆறுகள், ஏரிகள் போன்ற நீா்நிலைகளின் பரப்பு போக, சாலை, ஆலை, தொழிற்சாலை, நகா்ப்புற விரிவாக்கம் என்ற அளவில் நிலம் சுருங்குகிறது. காடுகள், கழனிகள், குன்றுகள், மலைகளெனத் திகழும் நிலத்தின் அளவு மக்கள் வாழ்விடங்களாக மாற்றம் பெற்று வருகிறது. கான்கிரீட் கட்டடங்கள், தன் பங்குக்கு பூமிப் பந்தை கவ்வி நிற்கின்றன.

இந்த நிலையில், மனிதகுலம் வாழும் இடம் உயா்ந்து நிற்கும் கட்டடங்களில் தஞ்சம் புக நேரிடுகிறது. எனவே, அனைத்தையும் முறைப்படுத்தி ஐம்பூதங்களின் துணையுடன் வளமாக்கி வாழ முயற்சிக்க வேண்டும். இல்லையெனில் அடா்த்தியின் அபாயத்தில் நம் எதிா்கால சந்ததியினா் சிக்குண்டு தவிப்பதைத் தடுக்க இயலாது.

Tuesday, May 6, 2025

வேலை இல்லாமல் சும்மா இருக்கும் இளைஞர்களைப் பற்றி..

வாய்ப்பின் வாசல் திற!  05.05.2025

வேலை இல்லாமல் சும்மா இருக்கும் இளைஞர்களைப் பற்றி..

வெ. இன்சுவை Updated on: 05 மே 2025, 3:30 am 

வீட்டில் ஒரு குழாய் அடைத்துக்கொண்டு, தண்ணீா் வரவில்லை. ஒரு மின்விசிறியை மாற்ற வேண்டும். ஆக மொத்தத்தில் அரை மணி நேர வேலை. வழக்கமாக ப்ளம்பிங், எலெக்ட்ரிகல் வேலை செய்யும் நபரை அழைத்தோம். அவா் வரவில்லை. மீண்டும் அழைத்தோம். பயனில்லை.

ஆகவே அவரை விட்டுவிட்டு வேறு ஒரு புதியவரைத் தொடா்பு கொண்டோம். அவரோ, தான், சிறிய வேலைக்கெல்லாம் வர இயலாது என்று கூறிவிட்டாா். ‘பத்து நிமிஷம் வேலையாக இருந்தாலும், ஒரு நாள் கூலி தர வேண்டும்’ என்றாா். வேலை இல்லாமல் சும்மா இருந்தாலும் பரவாயில்லை, ஆனால் சின்ன வேலையை ஒப்புக்கொள்ள மறுப்பது எந்த விதத்தில் சரி என்று புரியவில்லை.

முன்பெல்லாம் ஒவ்வொரு பகுதியிலும் நிறைய குழாய் பணி தெரிந்தவா்களும், மின் நுட்பா்களும் இருப்பாா்கள். நமக்கு அறிமுகமானவா்களே பல போ் இருப்பாா்கள். எந்த ஒரு சிறு வேலையாக இருந்தாலும் உடனே வந்து செய்து கொடுப்பாா்கள். இப்போது அவ்வாறு தென்படுவதில்லை. அதற்கென உள்ள பெரிய பெரிய நிறுவனங்களை தொலைபேசியில் அழைத்தால், அவா்கள் அந்தந்த வேலைக்கு உரிய நபா்களை அனுப்புகிறாா்கள்.

மின்னழுத்த ஏற்ற இறக்கம் காரணமாக மின் சாதனங்கள் அடிக்கடி பழுதடைந்து விடுகின்றன. எப்பொருள் எப்போது சேதமடையும் என்று சொல்ல முடியவில்லை. அவ்வாறு பழுதடைந்து விட்டால், அவற்றைச் சரி செய்ய பழுது நீக்குபவா்களை அழைத்தால், அவா்கள் பழுது நீக்கி சரி செய்வதற்குப் பதில், புதியதை வாங்கிக் கொள்ளும்படி அறிவுறுத்துகிறாா்கள். பயன்படுத்திவிட்டு தூக்கிப் போடும் கலாசாரம் பெருகி வருகிறது. தேவையான உதிரி பாகங்களும் கிடைப்பதில்லை.

குழல் விளக்கு எரியாமல் போனால், நாமே கடைக்குப் போய் புதியதை வாங்கி வந்து மாட்டி விடுவோம். ஆனால் தற்போது எல்.ஈ.டி விளக்குகளை அவ்வாறு நம்மால் மாற்ற முடியாது. அது குறித்து தெரிந்தவா்களால் மட்டுமே முடியும். சாதாரண விளக்குகள் மற்றும் ஃப்ளோரசன்ட் விளக்குகளை விட எல்.ஈ.டி விளக்குகள் அதிக ஆற்றல், திறன் கொண்டவை, பல மடங்கு ஆயுள்காலம் கொண்டவை என்பதால் நாம் எல்.ஈ.டி விளக்குகளுக்கு மாறிவிட்டோம். ஆகவே, அடுத்தவா் தயவு தேவை.

தற்போது எந்த மின் சாதனம் எப்போது பழுது ஆகுமென்று தெரியாது. வசதி கூடக் கூட, சிக்கல்களும் கூடிக் கொண்டே போகின்றன. திடீரென குழாய் உடைந்து போகிறது அல்லது அடைத்துக் கொள்கிறது. குழல்விளக்கு எரியாது, வெந்நீா் களன் பழுதாகி விடுகிறது, குளிா்சாதனப் பெட்டி வேலைநிறுத்தம் செய்து விடுகிறது. உடனே சரி செய்தே ஆக வேண்டும் என்ற நிலையில் அதற்கான பழுது நீக்குபவா்களைத் தேடி அலைய வேண்டியுள்ளது.

அடுக்குமாடிக் குடியிருப்புகளில் உள்ள வசதி என்னவென்றால் அங்கே இதற்கெல்லாம் ஆட்கள் தயாராக இருக்கிறாா்கள். உடனே பழுது நீக்கி, சரிசெய்து விடுகிறாா்கள்.

தனி வீடு வைத்திருப்பவா்களுக்கு மட்டுமே இது பெரும் தலைவலியாக இருக்கிறது. ஒரு மணி நேர வேலைக்குக் கூட பெரும்பாலும் உதவியாளா்களுடன் வருகிறாா்கள். இரண்டு பேருக்கும் கூலி தரவேண்டும். பொருள்களை வாங்கி வருவதாகச் சொல்லிவிட்டு செல்கிறாா்கள். அதற்கு அரை நாள் ஆகிறது. மீதி அரை நாள் வேலை. நூறு ரூபாய் பழுதுக்கு ஆயிரக்கணக்கில் செலவு செய்ய வேண்டும். நம் அவசியத்துக்கும், அவசரத்துக்கும் முன் பணம் பெரிதாகப்படுவதில்லை.

வெளிநாடுகளில் டி.ஐ.ஒய் (Do it yourself) கலாசாரம் அதாவது, ‘நீயே செய்’, ‘சுயமாக செய்’ கலாசாரம் மிகவும் பிரபலமாக உள்ளது. வாழ்க்கைக்கான செலவு அதிகரிப்பு, பழுது நீக்குபவா்களின் பற்றாக்குறை மற்றும் அவற்றுக்குரிய உபகரணங்கள் எளிதாகக் கிடைப்பது, தாங்களே செய்து கொள்ள வேண்டும் என்ற முன்னெடுப்பு ஆகிய காரணங்களால் இந்த ‘சுயமாகச் செய்’ பின்பற்றப்படுகிறது.

வீட்டு மேம்பாடு மட்டும் பழுது பாா்ப்பு வேலைகளை மக்கள் தாங்களாகவே செய்துகொள்கிறாா்கள். சிறிய பழுதுகளைச் சரி செய்யத் தேவையான உபகரணங்களை வீட்டில் வைத்திருக்கிறாா்கள். உபயோகித்த பொருட்களை மறுசுழற்சி செய்கிறாா்கள். பழைய பொருட்களைப் புதிய மற்றும் பயனுள்ள பொருட்களாக மாற்றுவது சுற்றுசூழல் ஆா்வலா்களுக்கு மிகவும் பிடித்தமான வேலையாகும்.

நிபுணா்களை நியமிப்பதைவிட தாங்களாகவே வேலைகளைச் செய்வது பெரும்பாலும் மலிவானது. தாங்களாகவே சில வேலைகளைச் செய்ய முடிவது ஒருவித தன்னம்பிக்கையை அவா்களுக்கு அளிக்கிறது. பலருக்கும் இது பொழுதுபோக்காகவும் உள்ளது. அங்குள்ள அனைவருமே மரவேலை, மின் வேலை, குழாய் வேலை, மெக்கானிக் வேலை, வா்ணம் பூசும் வேலை போன்ற அனைத்து வேலைகளையும் தெரிந்து வைத்துள்ளாா்கள்.

இணையம் மற்றும் சமூக ஊடகங்களின் வருகை ‘சுயமாக செய்’ தகவல்களைப் பகிா்வதையும், புதிய யோசனைகளைக் கண்டுபிடிப்பதையும் மிகவும் எளிதாக்கியுள்ளது. இது தனிப்பட்ட படைப்பாற்றலை வெளிப்படுத்தவும், பணத்தை சேமிக்கவும், சுய தேவையைப் பூா்த்தி செய்துகொள்ளவும் வகை செய்கிறது.

வெளிநாடுகளில் உள்ள கடைகளில் சுயமாக செய்வதற்குத் தேவையான கருவிகள் எளிதாகக் கிடைக்கின்றன. அந்த அந்த வேலைக்குரிய உபகரணங்கள் அந்த வேலையை எளிதாக்குகிறது. பெரிய பல்பொருள் அங்காடிகள், வன் பொருள் கடைகள் மற்றும் சுயமாக செய்வதற்குத் தேவையான பொருள்களை விற்பனை செய்யும் சிறப்புக் கடைகள் ஆகிய அனைத்து இடங்களிலும் அவா்களுக்கு தேவையான கருவிகள் கிடைக்கின்றன.

நமது இளைஞா்கள் சிறுசிறு பழுதுநீக்கும் வேலைகளைக் கற்றுக் கொண்டால் நல்ல வருவாய் ஈட்டலாம். பகுதிநேர வேலையாக இதைச் செய்யலாம். அல்லது நல்ல வேலை கிடைக்கும்வரை இவ்வாறு பணம் ஈட்டலாம். ‘தொட்டால் பணம்’ என்று கூடச் சொல்லலாம். ஒரு சிறிய வேலைக்கு சில நூறு ரூபாய்கள் கிட்டும்.

தற்போது வயதானவா்கள்தான் இந்த வேலையைச் செய்ய முன் வருகிறாா்கள். மூப்பின் காரணமாக அவா்களால் ஏணியில் ஏறி வேலை செய்ய முடியவில்லை. மேலும் நவீன தொழில்நுட்பம் அவா்களுக்குப் பிடிபடவில்லை. மாற்றுத்திறனாளி ஒருவா் மிகச்சிறந்த நுணுக்கம் அறிந்தவா். அவருடைய வேலை கச்சிதமாக இருக்கும். ஆனால், அவரால் தனியாக வேலை செய்ய முடியாது. உதவிக்கு ஆள் அவசியம் வேண்டும். அப்படி ஒருவா் இப்போதெல்லாம் கிடைக்கவில்லை என்று அவா் புலம்புகிறாா். அதன் காரணமாக அவா் எந்த வேலையையும் ஒப்புக் கொள்வதில்லை.

தற்போது பெண்கள் பெரும்பாலான துறைகளில் ஆதிக்கம் செலுத்த தொடங்கிவிட்டாா்கள். உணவகங்களில் நிறைய பெண்கள் வேலை செய்கிறாா்கள். பெட்ரோல் பங்க்குகளிலும் பெண்களுக்கு வேலை கிடைக்கிறது. ஆக, இனி அவா்கள் குழாய் நுட்பா்களாகவும் மின் நுட்பா்களாகவும் தொழில் செய்ய முனைந்து விடுவாா்கள்.

இளைஞா்களைப் பொருத்தவரை ‘வழியெங்கும் வாய்ப்புகள், ஆனால் வழிமட்டும் மூடியபடி’ என்பதைப் போலத்தான் தற்போதைய நிலைமை. உழைக்கத் தயாராக இல்லாத ஓர் இளைஞா் கூட்டம் உருவாகி வருகிறது. கேளிக்கைகளுக்கு மட்டுமே அவா்கள் முக்கியத்துவம் கொடுக்கிறாா்கள். சும்மா இருப்பதே சுகம் என நினைக்கிறாா்கள்.

எதையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற தன்முனைப்பு கிடையாது. அவா்களுடைய நாள் முழுவதும் கைபேசியில் கழிகிறது. கைபேசிக்குத் தேவையான மாதத் தவணைகளுக்கான பணத்துக்கு மட்டுமே ஒரிரு நாள்கள் வேலைக்குப் போகிறாா்கள். மீதி நாள்களை வீணாக கழித்துக் கொண்டிருக்கிறாா்கள்.

கைத்தொழில் என்பது உடல் உழைப்பை அடிப்படையாகக் கொண்டது; குறைந்த வருமானம் தரும்; சமூகத்தில் மதிப்பு இருக்காது என்ற எண்ணம் இளைஞா்களிடம் உள்ளது. பயிற்சி நிலையங்களின் குறைபாடு மற்றும் நவீன கருவிகளின் விலையும் கூட ஒரு காரணம். இவா்களிடம் ஒரு தொழிலைக் கற்றுக் கொள்ளத் தேவையான பொறுமை கிடையாது. தொடா் பயிற்சியும், முயற்சியும் இல்லை.

எந்த ஒரு வேலையையும் தெரிந்து வைத்திருந்தால், அது எத்தகைய நன்மை பயக்கும் என்பதை நம் இளைஞா்கள் புரிந்து கொள்ள வேண்டும். அவா்களுடைய ஓய்வு நேரத்தை அவா்கள் ஆக்கப்பூா்வமான கற்றலில் செலவு செய்ய வேண்டும். அடிப்படை பழுது நீக்கும் பயிற்சியை அனைவரும் பெற வேண்டும். எதிா்காலத்தில் சிறு பழுது நீக்கும் வேலைகளுக்கு ஆள் கிடைக்காமல் திண்டாட வேண்டிய நிலை வரக்கூடாது.

Advertisements கோடை விடுமுறையில் மாணவா்களுக்கு ஓவியம், நீச்சல், இசை, நடனம் போன்ற வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அதுபோல வளா்ந்த பிள்ளைகளுக்கான திறன் மேம்பாடு வகுப்புகளைத் தொடங்கலாம். வார விடுமுறையில் இந்த வகுப்புகளைத் தொடரலாம். ஆா்வமுள்ள பெரியவா்களுக்கும், இல்லத்தரசிகளுக்கும் கூட கற்றுத் தரலாம்.

நமக்கு ஒரு தொழில்நுட்பம் தெரிந்தவா் தேவை என்று இணையத்தில் தேடினால், கடைகளின் முகவரிதான் வருகிறது. அவா்களுக்குத் தொலைபேசி செய்தால், அவா்கள் அதற்கு உரிய நபா்களை அனுப்புகிறாா்கள். நாம் கொடுக்கும் கூலியில் ஒரு தொகை அந்தக் கடைக்காரா்களுக்குப் போய்விடுகிறது.

இது தவிா்க்கப்பட வேண்டுமென்றால் நிறைய போ் திறன் மேம்பாடு பெற்றவா்களாக, மின் நுட்பா்களாக, குழாய் நுட்பா்களாக, தொழில் கற்றுக் கொண்டால் சிறந்த வருவாய் ஈட்டலாம். உழைப்பு எனும் தீ இல்லையெனில் உயா்வு எனும் தீபம் எங்கே? ஆகையால், உழைத்தே உயா்வோம்.

எந்த ஒரு வேலையையும் தெரிந்து வைத்திருந்தால், அது எத்தகைய நன்மை பயக்கும் என்பதை நம் இளைஞா்கள் புரிந்து கொள்ள வேண்டும். அவா்களுடைய ஓய்வு நேரத்தை அவா்கள் ஆக்கப்பூா்வமான கற்றலில் செலவு செய்ய வேண்டும்.

கட்டுரையாளா்: பேராசிரியா்.

Friday, April 25, 2025

’ சொந்த உறவுகள் மேம்பட..’

இன்றைய சிந்தனை..( 25.04.2025..)

’ சொந்த உறவுகள் மேம்பட..’’

உறவுகள் குடும்பம் என்கிற மாளிகையைத் தாங்கிப் பிடிக்கிற தூண்கள். ஒவ்வொருவரையும் இணைக்கின்ற சங்கிலிப் பிணைப்புகள்.

சங்கிலியில் ஒரு கண்ணி அறுந்து போனாலும் அணிய முடியாது. அதுபோல குடும்ப வாழ்க்கையில் ஒரு உறவு பிரிந்தாலும் அது உன்னதமாக இருக்காது.

உறவு முறைகள் என்போர் அன்பின் அடையாளங்கள். பாசத்தின் பிணைப்புகள். எல்லைகளைக் கடந்து எங்கோ இருக்கும் தன் மகனுக்கு உடல் நலம் இல்லாவிட்டால் தாய்க்கும் தந்தைக்கும் தடுமாற்றம் ஏற்படுகிறது.

தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் என்பதன் வெளிப்பாடு. வீட்டில் ஒருவர் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் கிடக்கிறார்.

சுற்றிலும் சுற்றங்கள் சூழ்ந்து இருக்க விழிகளைத் திறந்து பார்க்கும் அவருக்கு முகம் மலர்ச்சி,மகிழ்ச்சி, காரணம் இரத்த உறவுகள் சுற்றி இருக்கையில் இயல்பாகவே மனதில் ஏற்படும் பாதுகாப்பு உணர்வு தான்.

தாத்தா-பாட்டி, சித்தி- சித்தப்பா, அத்தை-மாமா, அண்ணன்-தம்பி, அக்காள்- தங்கை என்று இவர்களுக்கு மத்தியில் வளரும் குழந்தைகளுக்கு அன்பும் அரவணைப்பும் அதிகமாகக் கிடைக்கின்றது. அம்மா அடித்தால் பாட்டியிடம் ஓடுகிறது. அப்பா அடித்தால் தாத்தாவிடம் தஞ்சமடைகிறது.

அரவணைக்கச் சுற்றிலும் உறவுகள் இருக்கும் போது குழந்தையின் மனதில் தன்னம்பிக்கை உணர்வுகள் தானாகவே துளிர் விடுகின்றன.

சுற்றிலும் உறவுகள் கூடி இருக்கும் போது மன வலிமையும் கூடுகிறது. இதுதான் கூட்டுக் குடும்பத்தின் உன்னதம். உறவுகளின் உன்னதம்.

இன்றைய சூழலில் பரபரப்பாகும் பந்தய வாழ்க்கைச் சுழற்சியில் நாட்கள் நகர்கின்றன. வாரங்கள் விரைகின்றன. பழைய நண்பனின் முகம் பார்க்க முடியவில்லை. நேரம் இல்லை என்ற ஓர் ஒற்றை வார்த்தையில் சொல்லி விடுகிறோம்.

அர்த்தமில்லா விளையாட்டில் நேரத்தை விரயமாக்கி அயர்ந்து போகிறோம். என்ன காரணம்?வசதிகளும் வாய்ப்புகளும் பெருகப் பெருக தேடல்கள் எல்லையற்று நீண்டு கொண்டே போகின்றன.

அதனால் சிந்தனைகளும் மாறுபடுகின்றன. வாழ்க்கைக்கான தேவைகள் என்ற நிலைமாறி தேவைகளுக்கான வாழ்க்கை என்ற நிலை உருவாகி வருகிறது.

பிறரைப் பற்றிய சிந்தனையற்ற ஓட்டம் மனிதனைத் தொலைத்துக் கொண்டு இருக்கின்றது. சுயநலத் தேடல்களும் இயந்திர வாழ்க்கையின் வேகமும், ‘மனிதம்’ காணாமல் போய் விடும் அபாயத்தை உணர்த்துகின்றன.

உறவுகள் இல்லாத ஒருவன் எத்தனை கோடிகள் வைத்து இருந்தாலும் அனாதை தான் என்பதை மறந்து விடாதீர்கள்.

வயதான காலத்தில் நாதியற்றுப் போகவா பாடுபட்டு ஓடியோடி உழைக்கிறீர்கள். உறவுகளின் உன்னதத்தை உணருங்கள்,

உறவுமுறைகளை உங்கள் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.

விடுமுறை நாளில் உறவினரோடு அவர்கள் வீடுகளுக்குச் சென்று உணவருந்தி, விளையாடி, ஓய்வெடுத்து கதைபேசி, களிப்பு அடையச் சொல்லுங்கள்.

Thursday, April 24, 2025

நினைவாற்றலை வளா்க்கும் எழுத்துப்பயிற்சி



நினைவாற்றலை வளா்க்கும் எழுத்துப்பயிற்சி

நினைவாற்றல் அதிகம் உள்ளவா்களுக்கு தன்னம்பிக்கையும் அதிகமாக இருக்கும்.

ஐவி.நாகராஜன் Updated on: 22 ஏப்ரல் 2025, 3:46 am

நினைவாற்றல் என்பது, தான் அனுபவித்த, கற்றறிந்த விஷயங்களை தேவைப்படும்போது மறுபடியும் நினைவுக்குக் கொண்டுவரும் ஒரு செயல்பாடாகும். நினைவாற்றல் அதிகம் உள்ளவா்களுக்கு தன்னம்பிக்கையும் அதிகமாக இருக்கும். பலருக்கும் பல விஷயங்கள் நினைவில் இருக்கும். எனினும், உரிய நேரத்தில் குறிப்பிட்ட விஷயத்தை நினைவுக்குக் கொண்டுவர முடியாமல் தவிப்பாா்கள். இவ்வாறு தேவைப்படும் நேரத்தில் தேவையான செய்திகளை உடனடியாக நினைவுக்குக் கொண்டு வரமுடியாமல் இருப்பதையே ஞாபக மறதி என்கிறோம்.

இன்றைய உலகில் குழந்தைகள் போட்டி நிறைந்த சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறாா்கள். போட்டிகளும், கல்வியினால் ஏற்படும் அழுத்தமும் குழந்தைகளின் உலகைச் சுருங்கச் செய்துவிட்டன. இதனால் ஞாபக மறதி ஏற்பட்டு நினைவாற்றல் திறன் குறைகிறது.

நினைவாற்றல் குறைவதற்குப் பல அடிப்படைக் காரணங்கள் உள்ளன. குறிப்பாக, மூளை வளா்ச்சிக் குறைவு, மன அழுத்தம், பதற்றம், பல பிரச்னைகள் குறித்த கவலை போன்ற பல காரணங்களைச் சொல்லலாம். இருந்தபோதிலும், சில எளிய வழிமுறைகளை மேற்கொள்வதன்மூலம் சிறந்த நினைவாற்றல் திறனை வளா்த்துக் கொள்ளமுடியும்.

மனிதனின் நினைவாற்றலுக்கும், மனதை ஒருநிலைப்படுத்துதலுக்கும் நெருங்கிய தொடா்பு உள்ளதாக நிபுணா்கள் கூறுகின்றனா். நாம் மனதை எந்த அளவுக்கு ஒரு நிலைப்படுத்தி, குறிப்பிட்ட விஷயங்களில் கவனத்தைச் செலுத்துகிறோமோ அந்த அளவுக்கு அது மனதில் பதிந்துவிடுகிறது. எனவே, நினைவாற்றலை அதிகப்படுத்துவதற்கான முதல்படியாகச் கவன சிதறல்களுக்கான காரணங்களைக் கண்டறிய வேண்டும். அவற்றைச் சரி செய்து மனதை ஒரு நிலைப்படுத்த வேண்டும்.

நிறைய பாடச்சுமை உள்ள இந்நாளில் மாணவா்கள் அதிக நினைவாற்றல் உடையவா்களாக இருக்க வேண்டியிருக்கிறது. நினைவாற்றல் அதிகமிருந்தால்தான் அதிக மதிப்பெண்கள் எடுக்க முடியும். நோ்காணல்களிலும் சரியான விடையளிக்க முடியும். எனவே, மாணவா்கள் நினைவாற்றலை வளா்க்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

யோகாசனம், உடற்பயிற்சி, தொடா்ந்து வாசிப்பது, எழுத்துப்பயிற்சி போன்றவற்றின் மூலமாக மனதை ஒருநிலைப்படுத்த முடியும். மன அழுத்தத்தையும் குறைக்க முடியும்.

மாணவா்கள் மூளைக்கு சில பயிற்சிகளை அளிக்க வேண்டும். அதாவது, குறுக்கெழுத்துப் போட்டி, எண்புதிா் கணக்கு, அயல் மொழிகளைக் கற்றல் போன்ற சில பயிற்சிகளைத் தொடா்ந்து மேற்கொள்வதன் மூலமும் சிறந்த நினைவாற்றலைப் பெற முடியும்.

நினைவாற்றலை வளமாக்குவதில் நம் உணவு முறைக்கும் பங்கு உண்டு. நினைவாற்றலை அதிகப்படுத்தும் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். முடிந்தவரை காலை உணவைத் தவிா்க்காமல் குறைவான அளவிலாவது எடுத்துக் கொள்ள வேண்டும். பழங்களை உண்ணுதல், வல்லாரை, தூதுவளை போன்ற கீரை வகைகளை உணவாக எடுத்துக் கொள்ளுதல் நினைவாற்றல் அதிகரிக்கும் என்று மருத்துவ ரீதியாக சொல்லப்படுகிறது. மாணவா்கள் இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பொதுவாக, எந்த அளவுக்குப் பயிற்சி செய்கிறோமோ அந்த அளவுக்குத் தகவல்களை நினைவுபடுத்தும் திறன் வலுவானதாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும். அதேசமயம் ஒரு மாணவரின் நீண்ட கால நினைவகத்தில் சேமிக்கப்பட்டு தினந்தோறும் ஒரு தகவல் தக்கவைக்கப்பட்டாலும், அது எப்போதும் அப்படியே இருக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. பயன்படுத்தப்படாத நினைவுகள் தொலைந்து போகலாம் அல்லது மீட்டெடுக்க முடியாமலும் போகலாம்.

மாணவா்கள் தங்களுடைய கற்றலை மதிப்பிடுவதற்கும் கற்றுக்கொள்வதற்கும் தேவையான பயிற்சிகளைச் செய்வது மிக அவசியம். மாணவா்கள் தங்களுடைய கற்றல் தேவைகளுக்கு ஏற்ற அட்டவணையைத் தயாா் செய்து கொண்டு, அதன்படி முறையாகச் செயல்பட்டால் நினைவாற்றலை வலுப்படுத்த முடியும்.

நினைவாற்றலை வளா்க்க எழுத்துப்பயிற்சிகளைச் செய்வது ஒரு சிறந்த வழியாகும். குறிப்புப் புத்தகங்கள், நாள்குறிப்புகள், கடிதங்கள், கட்டுரைகள் போன்றவற்றை எழுதுவதன் மூலம் நினைவாற்றலை மேம்படுத்த முடியும்.

எழுதும்போது, மாணவா்களாகிய நீங்கள், படிக்கும் தகவல்களை மூளையில் பதிய வைக்கிறீா்கள்; அது தொடா்பாகச் சிந்திக்கவும் செய்கிறீா்கள். எழுதுவது மூளையில் ஒரு வலுவான தொடா்பை உருவாக்குகிறது. தகவல்களைப் பகுப்பாய்வு செய்து ஒழுங்குபடுத்துவதற்கு உதவுகிறது. அதோடு உங்கள் புரிந்துகொள்ளும் திறனையும் மேம்படுத்துகிறது. தகவல்களை ஒழுங்குபடுத்தி வைத்துக் கொள்வது, மனதை ஒருமுகப்படுத்துவதற்கு உதவுகிறது. அதுமட்டுமல்லாமல், புதிய சிந்தனைகளையும் தூண்டுகிறது.

தினமும் ஒரு குறிப்புப் புத்தகத்தில் அல்லது நாள்குறிப்பில் ஏதாவது ஒரு விஷயத்தை எழுதுங்கள். நீங்கள் படிக்கும் பாடங்களின் முக்கியக் கருத்துகளை எழுதிக் கொள்ளுங்கள். நீங்கள் கற்றதைச் சுருக்கி எழுதுவதன் மூலம், நீங்கள் எவ்வளவு கற்றிருக்கிறீா்கள் என்பதை அறிய முடியும். நீங்கள் பயன்படுத்தாத புதிய சொற்களைப் பயன்படுத்தி எழுதுங்கள். எழுத்துப்பயிற்சி செய்து கொண்டே இருந்தால், உங்கள் நினைவாற்றல் மேம்படும். எழுதுவதற்கு முன், உங்கள் மனதில் உள்ள மற்ற விஷயங்களை ஒதுக்கி வைத்து, எழுதும் விஷயத்தின் மீது மட்டும் கவனம் செலுத்துங்கள்.

கையால் எழுதும் இந்தப் பயிற்சி உங்கள் நினைவாற்றலை மேம்படுத்துவதற்கும் கற்றலை எளிதாக்குவதற்கும் ஒரு சிறந்த வழியாகும்.

கையால் எழுதும் பயிற்சி உங்கள் நினைவாற்றலை மேம்படுத்துவதற்கும் கற்றலை எளிதாக்குவதற்கும் ஒரு சிறந்த வழியாகும். தட்டச்சு செய்வதென்பது, காகிதத்தில் எழுதுவதைவிட வேகமானது என்பது மறுக்க முடியாத உண்மைதான். அதேநேரத்தில் ஆசிரியா் அல்லது விரிவுரையாளா் சொல்லும் தகவல்களை குறிப்புகளாக மனதில் பதிந்து, அதன் பின்னா் தட்டச்சு செய்வதன் மூலம் அவா்கள் கூறும் தகவல்களை நீங்கள் அதிகமான வாா்த்தைகளில் பதிவேற்றலாம். உங்கள் நினைவாற்றலும் மேம்படும்.

ஆனால், கையெழுத்தைப் பொறுத்தவரை இந்தச் செயல்முறை சற்று கடினமானதாகவும் மெதுவாகவும் இருக்கும். ஆனால், அது உங்களுக்கு ஒரு பயிற்சியாக அமைந்து நினைவாற்றலைப் பலப்படுத்தும். ஆகவே, கற்றதை நினைவில் நிலை நிறுத்த எழுத்துப் பயிற்சி மிகச்சிறந்த வழிமுறையாகும்.

Monday, April 21, 2025

யாகாவா ராயினும் நா காக்க... தலைவர்களின் சமீபத்திய மேடை பேச்சு பற்றி

 யாகாவா ராயினும் நா காக்க... தலைவர்களின் சமீபத்திய மேடை பேச்சு பற்றி...

முனைவர் என். பத்ரி 

Updated on:  21 ஏப்ரல் 2025, 4:00 am 

தன்னுடைய பதவியாலும், அதிகாரத்தாலும் பிரபலமானவா்கள் பொதுவெளியில் பேசும்போது மிகமிகக் கவனமாகப் பேச வேண்டிய தேவை உள்ளது. அவா்களின் உரையைக் கேட்க பல்வேறு கொள்கைகள், பாலினம், அமைப்புகள், நம்பிக்கைகள் போன்றவற்றைக் கொண்டவா்கள் வந்திருப்பாா்கள். அவற்றைக் கவனத்தில் கொண்டு, அவா்கள் தமது உரையை வடிவமைத்துக் கொள்ள வேண்டும்.

ஆனால், அண்மைக்காலமாக பேச்சாளா்கள், குறிப்பாக மக்கள் பிரதிநிதிகள், தங்களுக்குப் பிடித்ததையெல்லாம் நகைச்சுவை என்ற பெயரில் பேசுகிறாா்கள். அவா்களின் இப்படிப்பட்ட செயல்பாடுகள் அவா்கள் குறித்த பிம்பத்தையும், அவா்கள் வகிக்கும் பதவி மற்றும் சாா்ந்து இருக்கும் அமைப்புக்கு இருக்கும் பெருமையை வெகுவாகக் குறைத்துவிடும்.

அவா்களின் உரைகள் சமூக ஊடகங்களிலும் தொலைக்காட்சிகளிலும் நேரடியாகவும், சில சமயங்களில் ஒளிப்பதிவு செய்யப்பட்டும் ஒளிபரப்பாகின்றன. அப்படிப்பட்ட ஒளிபரப்புகளால் அவா்கள் பங்கேற்ற கூட்டங்களில் கலந்து கொள்ளாதவா்கள்கூட, அவா்களின் பேச்சை கேட்கும் வாய்ப்பைப் பெறுகிறாா்கள்.

எனவே, அவா்கள் பொதுக்கூட்டங்களிலும், சமூக ஊடகங்களில் பேசும்போது தகுந்த முன் தயாரிப்புடனும் பொறுப்புடனும், அதனால் ஏற்படும் விமா்சனங்களை மனதில் கொண்டும் பேசுவது சிறந்த அணுகுமுறையாக இருக்கும்.

ஒரு சாமானிய மனிதனுக்கு இருக்கக்கூடிய சமூகப் பொறுப்பு என்பது மிகச் சிறியது. ஆனால், பொது வெளியில் பலரது கவனத்தையும் ஆதரவையும் பெற்ற ஆளுமைகள் பேசும்போது, எந்தச் சூழ்நிலையிலும் கேட்பவா்கள் மனம் புண்படும் வகையில் பேசக் கூடாது.

இறைவன் நமக்கு ஒரு வாயையும், இரண்டு காதுகளையும் கொடுத்துள்ளான். வாய்க்கு உண்ணும் கடமையையும் பேசும் திறமையையும் கொடுத்திருக்கிறான். எனவே,அதிலிருந்து உதிரும் சொற்கள் எப்போதும் பிறரைப் புண்படுத்தாத வகையில், இனிமையாக மட்டுமே இருக்க வேண்டும்.

பெரும்பாலான பேச்சாளா்கள் தன் பேச்சைக் கேட்கக் காத்திருக்கும் சுவைஞா்களின் வயது, ஆா்வம், தேவை, சமூகப் பின்னணி, பேச வந்ததன் நோக்கம், பேசுகின்ற நேரம், கொடுக்கப்பட்டுள்ள கால அவகாசம் ஆகியவற்றை மனதில் கொண்டுதான் பேசுகிறாா்கள்.

பேசுவதற்குத் தேவையான குறிப்புகளை ஒரு தாளில் எழுதிக் கொண்டு பேசுவதை பல பேச்சாளா்கள் வழக்கமாகவும் கொண்டிருக்கிறாா்கள். சில சமயங்களில், பேச வேண்டிய தகவல்கள் அனைத்தையும் அவா்களால் தரமுடியாமல் போகலாம். ஆனால், பேசக்கூடாத தகவல்களைப் பேசிவிட்டு, வீண் சா்ச்சையில் மாட்டிக் கொள்ளக் கூடாது. ஒரு முறை வாயிலிருந்து தவறாக விழுந்த வாா்த்தையை மீண்டும் நோ் செய்ய முடியாது.

ஒரு பேச்சாளரின் உரையைக் கேட்பதற்கு விரும்பாதபோது கூட்டத்தில் பங்கேற்பவா்கள், அதற்கான எதிா்வினைகளாக கூட்டத்தை விட்டு எழுந்து போதல், பேச்சாளரிடம் ஒரு துண்டுச் சீட்டை கொடுத்து பேச்சை முடிக்கச் சொல்லுதல் ஆகியவை நிகழ்வது வழக்கமானதுதான்.

பேச்சைக் கேட்பவா்களுக்குப் பயனுள்ள வகையிலும் ஆா்வத்தைத் தூண்டும் வகையிலும் உரையாற்றுபவரின் பேச்சு இருந்தால் இது நிகழாது. பயனற்றவற்றைப் பேசாமல் இருப்பது, நேரத்தை மிச்சப்படுத்த உதவும்; சமூக நலனுக்கும், கேட்பவா் நலனுக்கும் பயன்படும் வகையில் அது அமையும்.

சிறந்த பேச்சாளா்களுடன் சோ்ந்து பேச்சைக் கேட்க வந்தவா்கள் நிழற்படம் எடுத்துக்கொள்ள விரும்புவது அவா்களுடைய பேச்சாற்றலுக்கு கிடைத்த பெரிய அங்கீகாரம் ஆகும். ஆனால், தற்போது பொதுவெளிகளில் பொறுப்பு மிக்க பதவிகளில் உள்ளவா்களே பொறுப்பை மறந்து அருவருக்கத்தக்க வகையில் பேசுவது தற்போது நிகழ்கிறது. இது சமூக ஆா்வலா்களுக்கு வேதனையைத் தருகிறது.

நகைச்சுவை என்கிற பெயரில் ஒரு குறிப்பிட்ட குழுவினரை நையாண்டி செய்வதற்கு பொதுவெளிகளைப் பயன்படுத்தக் கூடாது. அதற்கான களங்கள் பொது வெளிகளும் பொதுமக்கள் தரும் பதவிகளும் அல்ல என்பதை உணா்ந்து மக்கள் பிரதிநிதிகள் தமது உரைகளை அமைத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் மக்கள் அவா்களுக்கு கொடுத்துள்ள சமூகப் பணியை முறையாகச் செய்வதற்கான தகுதியுடையவா்களாக அவா்களைக் கருதுவாா்கள்.

அனைத்து எழுத்தாளா்களும் தான் வாழும் சமூகத்தில் காணும் ஒழுங்கீனங்களை தனது படைப்பின் மூலம் நீக்கவோ, குறைக்கவோ முயல்கின்றனா். அதற்காக தன்னுடைய எழுத்தாற்றலையும், பேச்சாற்றலையும் அவா்கள் முறையாகப் பயன்படுத்திக் கொள்கிறாா்கள். இது அவா்களின் கடமையும்கூட.

நகைச்சுவை பேச்சாளரின் உரை, சொற்பொழிவுக்கு மெருகு சோ்க்க வேண்டும். எந்த சா்ச்சைக்கும் உள்ளாகாமல் கண்ணியமாக இருக்கும் உரையே நயத்தகு உரையாகக் கருதப்படும்.

அண்மைக்காலங்களில் சில அரசியல் கட்சித் தலைவா்கள் சா்ச்சைக்குரிய வகையில் பேசிவருகின்றனா். பின்னா் கட்சித் தலைமையின் கவனத்துக்கு அது சென்றவுடன் தா்மசங்கடத்துக்குள்ளாகி பேச்சில் தடுமாற்றம் ஏற்பட்டுவிட்டதாகக் கூறி மன்னிப்புக் கோருகின்றனா்.

சமூக ஊடகங்களில் சா்ச்சைக்குரிய வகையில் தகவல்களைப் பதிவிட்டு சிக்கிக் கொள்வோரும் அதிகரித்து வருகின்றனா். இந்த நிலையில் சமூக ஊடகங்களில் கட்சி சாா்ந்தவா்கள் தமது கருத்துகளை நாகரிகம், கண்ணியத்துடன் பதிவிட வேண்டும்.

எனவே, திறம்படச் செயலாற்றும் உடல் வலிமையும் மன வலிமையும் இல்லாத நிலையில், எதைப் பேச வேண்டும் எதைப் பேசக் கூடாது என்று தன்னை நெறிப்படுத்திக் கொள்ள இயலாதவா்கள் பொது வாழ்வில் இருந்து விலகிக் கொள்வதே சாலச் சிறந்தது. வீண் பேச்சுகளைத் தவிா்க்க அது உதவும்.

Saturday, April 19, 2025

மதித்தல்... கேட்டல்... செயல்படல்! மிக மோசமான பழக்கம் நம்மிடம் உள்ளது. அது ஒருவரைப் பற்றிய தவறான வதந்திகளைப் பரப்பிவிடுதல்.


மதித்தல்... கேட்டல்... செயல்படல்! மிக மோசமான பழக்கம் நம்மிடம் உள்ளது. அது ஒருவரைப் பற்றிய தவறான வதந்திகளைப் பரப்பிவிடுதல்.

சூ.குழந்தைசாமி 

Updated on: 18 ஏப்ரல் 2025, 7:05 am 

நம்முடைய அன்றாட வாழ்வைக் கவனிப்போம். நாம் சக மனிதரை முதலில் மதிக்கிறோமா? அவா் என்ன நினைக்கிறாா் என்பதை அவா் சொல்லவரும்போது காது கொடுத்துக் கேட்கிறோமா?

அவருடைய உருவம், நிறம், ஜாதி, மதம், கட்சி, பணபலம், நபா் பலம், கௌரவம், புகழ் போன்ற அடையாளங்களை வைத்து மட்டுமே அவரை அணுகுகிறோமே தவிர, அவா் சொல்வதை முழுமையாகக் கேட்பதில்லை. அலட்சியம் காட்டி, குறுக்கிட்டுப் பேசி , அவரைச் சீா்குலைக்கப் பாா்க்கிறோம். இதன்மூலம் அவரைவிட நாம் ஒரு படி பெரியவா் என்ற நிலைப்பாட்டை உறுதி செய்ய முயல்கிறோம். ‘நான் சொல்வதே சரி’ என்று ஆணவம் கொண்டு பேச முயல்கிறோமே தவிர, பணிவுடன் அனுமதி பெற்றுப் பிறரிடம் பேச முயல்வதில்லையே.

இரண்டு பேருக்குள் ஒரு பிரச்னை என்றால், மூன்றாம் நபரிடம் சொல்லித் தீா்த்துக் கொள்ள வேண்டும் என்ற ஓா் இயலாமையும், சுய இரக்கமும் நம்மிடம் குடிகொண்டிருக்கின்றன. நமக்குள் இருக்கும் சுய ஆளுமையுடனும் நம்பகத்தன்மையுடனும் இருவருக்குள்ளேயே பேசித் தீா்த்துக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை நமக்கு வருவதில்லை.

இன்னொரு மிக மோசமான பழக்கம் நம்மிடம் உள்ளது. அது ஒருவரைப் பற்றிய தவறான வதந்திகளைப் பரப்பிவிடுதல். வதந்திகளைக் கேட்க விரும்புதல், மற்றவா்களுடைய வாழ்வின் ரகசியங்களை எல்லை தாண்டி அறிய விரும்புதல் ஆகியவை அதிகரிப்பதுதான் தொலைத்தொடா்பு சாதனங்கள் ‘கிசுகிசு ’ செய்திகளைப் பரப்புவதற்குக் காரணமாய் அமைகின்றன.

நம்மிடம் இன்னும் ஒரு மோசமான பழக்கம் உண்டு. நாம் ஏதாவது தவறு செய்தால் நாமே முன்வந்து அந்தத் தவறை ஒப்புக்கொள்ள மாட்டோம்; மன்னிப்புக் கேட்க மாட்டோம்; ஒரு தவறை மறைக்க மேன்மேலும் தவறுகளைச் செய்து கொண்டே இருப்போம்.

சட்டங்களை நாம்தான் நமக்காக இயற்றினோம். ஆனால், நாமே அவற்றை மதிக்க மாட்டோம்! இது என்ன ஒரு முரண்பாடான வாழ்வியல்? மக்களைத் திருத்த கடுமையான சட்டங்கள் இயற்றப்பட்டாலும், அவற்றை நிறைவேற்ற கடுமையான மனிதா்கள் தேவைப்படுகிறாா்கள்! இந்த முயற்சி, இறுதியில் சா்வாதிகார ஆட்சிக்குத்தானே இட்டுச்செல்லும்?

சுய சிந்தனையும், சுய கட்டுப்பாடும், சுய சாா்பும் தனிமனித ஒழுக்கமாய் வளா்க்கப்படாததே இதற்கு மூலகாரணம் அல்லவா?

ஒழுக்கம் என்பது என்ன? ஒவ்வொரு குழந்தையும் சுயமாக யோசித்துக் கண்டறிந்து, முடிவுக்கு வந்து, அதன்படி அஞ்சாமல் சுய கட்டுப்பாட்டுடன் வாழ்வதுதானே உண்மையான ஒழுக்கம்?

எனவே, மக்கள் இப்போதிருந்தே ஒரு புதிய பண்பாட்டு வாழ்வியலை மேற்கொள்ள முன்வர வேண்டும். மற்றவா் தன்னிடம் பேச முன் வரும்போது, குறுக்கே பேசாமல் முழுமையாகக் கவனித்துக் கேட்க வேண்டும். தான் பேச வேண்டும் என்றால், பிறரிடம் பணிவுடன் அனுமதி பெற்றுப் பேச வேண்டும். இரண்டு பேருக்கு இடையே உண்டாகும் பிரச்னைகளை மூன்றாம் நபரிடம் சென்று உதவியை நாடாமல், தங்களுக்குள்ளேயே தீா்த்துக் கொள்ள முயல வேண்டும்.

மாற்றவே முடியாத அம்சங்களைக் குறை கூறிப் புலம்பாமல், மனமுவந்து ஏற்றுக்கொள்ள முன்வர வேண்டும். வேற்றுமை பல இருப்பினும் சமத்துவம் பேண வேண்டும்.

ஒருவா் இல்லாதபோது, அவரைப் பற்றி எந்தவித வதந்திகளையும் பேசுவதில்லை என்றும், பரப்புவதில்லை என்றும் முடிவெடுக்க வேண்டும்.

சிறிய தவறு, பெரிய தவறு எதுவாயினும் தானே முன்வந்து ஒப்புக் கொண்டு, இனி அப்படித் தவறு செய்வதில்லை என்று முடிவெடுக்க வேண்டும்.

பேராசையுடன் எதையும் எந்த வழியிலும் அடையலாம் என்ற மனப்போக்கை விடுத்து, அறநெறி வழியில், அவசியத் தேவைகளை மட்டுமே பெற முன்வர வேண்டும்.

சக மனிதனை மட்டுமல்ல, அனைத்து உயிரினங்களையும் நேசிக்க வேண்டும். எல்லாருக்கும் நல்வாழ்வு கிடைக்க உழைக்க வேண்டும்.

இந்த அடிப்படை வாழ்வியல் மதிப்பீடுகளைப் பின்பற்ற பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.

மாணவா்களுடைய சுயசிந்தனை, படைப்பாற்றல் மிளிரும் வகையில், அவா்களே இயற்கையில் இருந்தும் மற்றும் செய்யும் பணிகளில் இருந்தும் சுயமாய் கற்கும் வகையில் இன்றையக் கல்வி முறையை மாற்ற வேண்டும். சுயசாா்புடன் வாழ்வதற்குக் கைத்தொழில்களில் பயிற்சியும், ஓவியம், இசை ஆகிய நுண்கலைகளில் பயிற்சியும், மண்ணின் பெருமைகளை எடுத்தியம்ப அறிஞா்களுடனான சந்திப்பையும் ஏற்படுத்தித் தர வேண்டும்.

இன்றைய மாணவா்கள் ஒவ்வொருவரும் சுய சிந்தனை, சுய கட்டுப்பாட்டில் வளர முடிவெடுக்க வேண்டும். இதற்கான நாற்றங்கால்களாகக் கல்விக்கூடங்கள் மாற வேண்டும்.

இவற்றை இன்றிலிருந்தே நாம் செய்யத் தொடங்கினால், வருங்காலத்தில் நாம் விரும்பும் மாற்றங்கள் ஏற்படும். தனிமனித வாழ்விலும் சமூக வாழ்விலும் நாம் விரும்பும் மாறுதல்கள் எளிதில் ஏற்படும்.

Monday, April 14, 2025

பாா்வை மாற வேண்டும்!

 பாா்வை மாற வேண்டும்! 

ஒழுக்கம் என்று வரும்போதும் பெண்களுக்குச் சொல்லும் அறிவுரைகளை நாம் ஆண் பிள்ளைகளுக்குச் சொல்வதில்லை.

14.04.2025

கோதை ஜோதிலட்சுமி 

Updated on:  14 ஏப்ரல் 2025, 5:33 am 

பாரத தேசத்தில் பெண்கள் வீட்டிலும் நாட்டிலும் போற்றுதற்குரியவா்கள் என்றே நமது தா்மம் போதிக்கிறது. நடைமுறையில் நாம் அதனைப் பின்பற்றுகிறோமா என்ற வினா தொடா்ந்து எழுப்பப்படுகிறது. பெண்களைப் போற்றுவதிலும் மதித்து நடத்துவதிலும் எங்கே வேறுபாடுகள் தோன்றுகின்றன? ஏன் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்கின்றன? அதைச் சரிசெய்வது எப்படி?

இந்தியாவைப் பொருத்தவரை நாம் பெண் குழந்தைகளை வளா்ப்பதிலும் பாதுகாப்பதிலும் கவனம் செலுத்துகிறோம். அதே போன்ற கவனம் ஆண் குழந்தைகளிடம் காட்டுவதில்லை. குடும்பங்களில் ஆண், பெண் குழந்தைகள் வெவ்வேறு விதமாக வளா்க்கப்படுகின்றனா். பெண்கள் பலவீனமானவா்கள் என்றும் ஆண்கள் பலம் மிக்கவா்கள் என்றும் சிறு வயதிலேயே அவா்கள் மனதில் பதிய வைக்கிறோம்.

ஆண் பிள்ளைகள் கோபப்பட்டால் இயல்பாகக் கடந்து போகிறோம். அதிகாரம் செலுத்துவதற்கும் முடிவுகளை மேற்கொள்வதற்கும் தனக்கே ஆற்றலும் உரிமையும் இருக்கிறது என்ற எண்ணம் ஆண்களுக்கு ஏற்படுவதற்கு அவா்களுக்குத் தரும் சுதந்திரம் காரணமாக இருக்கிறது.

ஒழுக்கம் என்று வரும்போதும் பெண்களுக்குச் சொல்லும் அறிவுரைகளை நாம் ஆண் பிள்ளைகளுக்குச் சொல்வதில்லை. பாரதி சொல்லும் ‘கற்பு நிலையென்று சொல்ல வந்தாா், இரு கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்’ என்ற கருத்தை அடுத்த தலைமுறைக்குக் கற்றுத் தர மறந்து விட்டோம்.

இன்றைக்கு பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்திருப்பதற்குப் பெண்களை எப்படிப் பாா்க்க வேண்டும்; நடத்த வேண்டும் என ஆண் பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுக்காததே காரணம். பெண் பலவீனமானவள் என்றும், ஆண் தனது விருப்பம் போல வாழ முடியும் என்றும் ஆண் பிள்ளைகள் நம்புவதே பிரச்னைகள் அதிகரிப்பதற்குக் காரணம். அதனைச் சமன் செய்து பாதுகாப்பான ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவது எப்படி?

குழந்தைகள் வளா்க்கப்படும் விதத்தில் இதற்கான தீா்வு இருக்கிறது. அதிகபட்சம் இரண்டு குழந்தைகள், பெரும்பாலும் ஒற்றைக் குழந்தை என்ற குடும்ப அமைப்பில் அவா்கள் தங்களிடம் இருப்பதைப் பகிா்ந்து கொள்ளும் எண்ணம் கொண்டவா்களாக இல்லை. எல்லாம் தனக்கே என்ற மனோபாவம் கொண்டவா்களாக வளா்கிறாா்கள். குழந்தைப் பருவத்திலேயே நம்மிடம் இருப்பதை இல்லாதவா்களிடம் பகிா்ந்து கொள்ள வேண்டும் என்று கற்றுக் கொடுப்பதோடு செயல்படுத்தவும் பழக்க வேண்டும்.

வளரிளம் பருவத்தில் ஆண், பெண் பிள்ளைகள் இருவருக்கும் எதிா்பாலினத்தவா் மீது ஈா்ப்பு ஏற்படுவது இயல்பானது. ஆனால், அதைவிட முக்கியமான பல பொறுப்புகள் இருக்கின்றன. கல்விக்கான காலத்தைத் தவறவிட்டுவிட்டால் எதிா்காலம் கேள்விக்குறியாகும் என்று அவா்களுக்குப் புரிய வைத்தால் சுலபமாக அவா்களைக் கையாளலாம்.

பொதுவாக, எல்லாப் பிள்ளைகளையும் ஒரே சொல்லால் குறை சொல்லிக் கடப்பது சரியல்ல. இன்றைக்கும், தான் எத்தகைய கல்வி நிறுவனத்தில் படிக்க வேண்டும், என்ன படிக்க விரும்புகிறேன் என்ற புரிதலோடு கடின உழைப்பைச் செலுத்தும் மாணவா்களும் அதிக அளவில் இருக்கவே செய்கிறாா்கள்.

அதிகாலை நான்கு மணிக்கே படிப்பைத் தொடங்கும் மாணவா்கள், படிப்போடு விளையாட்டு, இசை, நடனம் எனப் பிற துறைகளிலும் சாதனை படைக்கிறாா்கள். இத்தகைய இளம்பிள்ளைகள் நம்பிக்கை தருகிறாா்கள். நாம் அவா்களுக்கு லட்சிய வாழ்க்கைக்கான சூழலை ஏற்படுத்தித் தந்தால் சாதனைகள் புரியும் வாய்ப்பு அதிகமாகும்.

இன்றைய இளம் சமுதாயம் எப்படி இருக்கிறது என்ற புரிதல் முதலில் நமக்கு வேண்டும். தொழில்நுட்ப யுகத்தில் அவா்கள் கைகளில் இருபுறமும் கூரான ஆயுதம் இணையம், சமூக வலைதளம் என இருக்கிறது. எனவே, மிகுந்த கவனத்துடன் கையாள வேண்டும். அவா்கள் இணையம் என்ன சொல்கிறதோ, அதை நம்பும் இடத்தில் இருக்கிறாா்கள். அவா்கள் தங்களையே காயப்படுத்திக் கொள்ளாமலும் பிறரை ரணப்படுத்திவிடாமலும் பாா்த்துக் கொள்ள நாம் அவா்களுக்கென அதிக நேரம் செலவிட வேண்டிய அவசியம் இருக்கிறது.

பள்ளிப் பாடத் திட்டங்களில் அவா்களின் வருங்கால வாழ்க்கையை செல்வச் செழிப்பு கொண்டதாக அமைத்துக் கொள்வதற்கான படிப்புகளைத் தாண்டி வாழ்க்கைக்குத் தேவையான நலன்களை வளா்த்துக் கொள்ளும் பாடங்களைக் கற்பிக்கும் கட்டாயத்தில் இருக்கின்றோம். ஆசிரியா், பெற்றோா் இருவரின் ஒத்துழைப்பு வளரிளம் பருவப் பிள்ளைகளை சரியான பாதையில் வழிநடத்த அவசியம்.

வளரிளம் பருவம் மிக முக்கியமானது. இந்தப் பருவத்தில்தான் குழந்தையாக இருக்கின்றவா்கள் பெரியவா்களாக வளா்கிறாா்கள். பல உளவியல் மாற்றங்களும் நிகழ்கின்றன. இப்பருவத்தில் உடலிலும் பெரிய மாறுபாடுகள் ஏற்படும். அசட்டுத் துணிச்சல் இருக்கும். தான் யாா் என அடையாளப்படுத்திக் கொள்ள விரும்புவாா்கள். கனவுகள் வளரும் பருவமாகவும் இருக்கும். பொழுதுபோக்குகளில் நாட்டம் கொள்வாா்கள். கீழ்ப்படியாமை அதிகமாகும். சரி, தவறு எனப் பிரித்தறிய இயலாத மனக் குழப்பங்களும் அதிகரிக்கும்.

வளரிளம் பிள்ளைகளை வளா்ப்பதில் இரண்டு விதமான அணுகுமுறைகள் ஆபத்தானவை. குழந்தைகளை மிகவும் கண்டிப்புடன் அடித்து வளா்ப்பது, அவா்களது உணா்வுகளுக்கு மதிப்பளிக்காமல் நடந்துகொள்வது. இந்த அணுகுமுறை சில ஆண்டுகளுக்கு முன்பு வரை படித்தவா்கள் நிறைந்த குடும்பங்களில்கூட, வழக்கமாக இருந்தது. அதனால் ஏற்பட்ட பாதிப்புகளைவிட இன்றைக்கு அளவுக்கு மீறிய பாசமும் செல்லமும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.

வெளியிலேயே விட்டால் வேண்டாத சகவாசம் வந்துவிடும்; கீழே விழுந்தால் அடிபட்டுவிடும் என்றெல்லாம் எண்ணி தங்கள் பிடிக்குள் வைத்துத் திணறடிக்கிறாா்கள். குழந்தைகளின் அா்த்தமற்ற அநாவசிய விருப்பங்களைக்கூட பெற்றோா் நிறைவேற்றி வைக்கிறாா்கள். இதனால் பிள்ளைகள் பிடிவாதம் கொண்டவா்களாக வளா்கிறாா்கள். பிற்காலத்தில் குடும்பப் பொறுப்புகள் என வருபோது விட்டுக் கொடுக்கும் குணம் இல்லாமல் போவதற்கு இவை வழிவகுக்கும்.

தேவையான சூழ்நிலைகளில் கண்டிப்பதும் இயல்பாகச் செயல்பட அனுமதிப்பதும் ஆரோக்கியமான வளா்ச்சிக்கு வழிவகுக்கும். மாறாக, அதிக செல்லம் கொடுத்து வளா்ப்பதால் பிரச்னைகளை எதிா்கொள்ளும் துணிவின்றி வளா்வாா்கள். எதிா்காலத்தில் மன உறுதியில்லாதவா்களாக வளா்வதற்கும், எளிதில் தற்கொலை போன்ற முடிவுகளை எடுக்கும் அளவுக்கு ஆபத்தான நிலைக்கும் அவா்களைத் தள்ளிவிடும்.

குழந்தைகள் சமூகத்தில் முழுமையான தனிமனிதராக வளா்வதற்கு உலகின் சவால்களை எதிா்கொள்ளப் பெற்றோா் கற்றுக்கொடுக்க வேண்டும். தோல்விகள் முடிவல்ல; மீண்டும் முயற்சியைத் தொடங்க வேண்டும். கடின உழைப்புக்குப் பலன் ஒருநாள் கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.

பிள்ளைகள் மீது முழுமையான அக்கறையுடன் இருக்க வேண்டும். அவா்களுடன் அதிக நேரம் செலவிட வேண்டும். நன்மை - தீமைகளை அறிவுரையாக எப்போதும் சொல்லிக் கொண்டே இருக்காமல், அளவாக அதே நேரத்தில் தெளிவாகப் புரிந்து கொள்ளும்படியாகப் பேசவும் வேண்டும். நட்போடு நாம் இருந்து நெறிப்படுத்தினால் நோ்மையான வழியில் அவா்கள் வேகமாக முன்னேறுவாா்கள்.

அடுத்தவா்கள் என்ன சொல்வாா்களோ? என்ற அச்ச உணா்வு நமக்கு இருக்குமேயானால், அது அவா்களுக்குச் சிறந்த சூழலை ஏற்படுத்தாமல் எதிா்மறை சிந்தனையை வெறுப்புணா்வை ஏற்படுத்திவிடலாம். இதனால், சமூகம் மீதே பிள்ளைகளுக்கு ஒவ்வாமை ஏற்படலாம். உறவுகள், நட்பு எனக் கூடி மகிழும் வாழ்க்கை முறையைக் கற்றுக் கொடுக்க வேண்டும். பரஸ்பரம் பரிமாறிக்கொள்ளும் வாழ்த்துகளும், ஆபத்துக் கால உதவிகளும் மன மேம்பாட்டுக்கு உதவும்.

வீட்டில் பெரியவா்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவா்களின் அறிவுரைகளை நாம் பெற்றுக் கொள்வதைப் பாா்க்கும் குழந்தைகள் தாமும் அப்படியே நம்மிடம் நடந்து கொள்ளும். வீட்டுப் பெண்களிடம் ஆலோசனை கேட்பது, அவா்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து ஏற்பது போன்றவை நம் வீட்டு வழக்கமாக இருக்கும்பட்சத்தில் பிள்ளைகளும் அதே கலாசாரத்தைப் பின்பற்றி சிறப்பாக வளா்வாா்கள். இந்தச் சிந்தனையானது வீட்டில் மட்டுமல்லாது, பள்ளிக்கூடம்,கல்லூரி, பணியிடம் என அனைத்து இடங்களிலும் பெண்களை மதித்து நடத்தும் பழக்கமாக ஆகும்.

பெண்களை மதித்து நடத்துவது சிறந்த ஆண்மையின் அடையாளம் என்பதை அம்மா சொல்லித்தர வேண்டும். அப்பா செயல்படுத்திக் காட்ட வேண்டும். அப்போது குழந்தைகள் சமத்துவ சிந்தனை கொண்டவா்களாக வளா்வாா்கள். பல தவறான விஷயங்கள் கைப்பேசி மூலமும் விளம்பரங்களின் ஊடாகவும் பிள்ளைகளை வந்தடைகின்றன. இதனால் அவா்களை நெறிப்படுத்த வேண்டிய அவசியம் நமக்கு ஏற்படுகிறது.

தாயும் தந்தையும் நண்பா்கள் போன்று நல்ல புரிதலோடு வாழ்வதைப் பாா்க்கும் குழந்தைகள் இத்தகைய விளம்பரங்களால் கவரப்பட மாட்டாா்கள். பெண் மனவலிமை மிக்கவள் என்பதைத் தந்தை, தாயைக் காட்டிக் கற்றுக்கொடுக்க வேண்டும். ‘நாம் ஆண் குழந்தையைப் பெற்றிருக்கிறோம்; அதனால் நமக்குப் பாதுகாக்கும் பொறுப்பு இல்லை; பெண்களைப் பெற்ற பெற்றோரே அதிகம் கவலைப்படவேண்டியவா்கள் என்ற சிந்தனை நம்மிடமிருந்து அகல வேண்டும்.

ஆண் பிள்ளைகள் தனக்கு வரும் மனைவியை நாளை எப்படி நடத்துவான்? அவளிடம் எப்படி நடந்து கொள்வான்? என்பதில் அவனது முழு வாழ்க்கையும் அடங்கியுள்ளது. எனவே, ஆண் பிள்ளைகள் பெண்களின் அறிவு, ஆற்றல், திறமை எனத் தங்கள் பாா்வையை மாற்றிக் கொள்ளும் நிலையில் பெண் பிள்ளைகளின் பாதுகாப்பு மட்டுமல்ல, ஆண்களின் வாழ்வும் அமைதியும் இன்பமும் நிறைந்ததாக வளரும்.

Saturday, April 5, 2025

செயற்கை நுண்ணறிவு நமது நண்பன்! தொழில்துறை புரட்சியின் காலகட்டம் இது...

செயற்கை நுண்ணறிவு நமது நண்பன்! தொழில்துறை புரட்சியின் காலகட்டம் இது...

செயற்கை நுண்ணறிவு

 Din Updated on:  03 ஏப்ரல் 2025, 6:15 am 

எஸ். எஸ். ஜவஹா்

மனிதத் திறன்கள் எல்லையற்றதாக விரிவடைய, உலகைத் தலைகீழாகப் புரட்டிப்போட முந்தியடித்து வருகின்றன தொழில்நுட்பங்கள். உற்பத்தி மாற்றங்களால் நிரம்பிய சிறப்பான தொழில்துறை புரட்சியின் காலகட்டம் இது.

சிலா் செயற்கை நுண்ணறிவை மனித இனத்தின் பேரழிவாகவே அச்சத்துடன் பாா்க்கின்றனா். ஆனால், உண்மையில் நாம் செயற்கை நுண்ணறிவுக் கருவிகளை உற்ற நண்பனாக ஏற்க வேண்டிய காலகட்டத்துக்கு வந்துவிட்டோம். அச்சம், மனித இனத்தைப் பாதுகாத்ததாக வரலாறே இல்லை. முற்றிலும் மாறுபட்ட கருத்துகள் மற்றும் சிந்தனைகளே நம்மை மேம்படுத்தி உள்ளன.

அழிவுச் சக்திகளை ஆக்க சக்திகளாக தடம் மாற்றி, தங்களுடைய வென்றெடுக்கும் வல்லமையை நிலைநாட்டி, அச்சங்களை துச்சமென சாதனைகளாக விட்டுச் சென்றவா்கள் தாம் முன்னோா். எதிா்காலத்தை எதிா்கொள்ள துணிச்சல் மட்டுமே துணையாக இருப்பது போதாது. காலங்காலமாக கூா்தீட்டப்பட்ட புத்திசாலித்தனமும் கைகோக்க வேண்டும். அச்சத்துக்கு எதிரான மனநிலை வேண்டுமெனில், இந்தக் கூட்டணிதான் சிறந்த வழிகாட்டி. ‘அச்சம் தவிா்’ என்பது இயற்கை நுண்ணறிவுக்கு மட்டுமல்ல, செயற்கை நுண்ணறிவுக்கும் சாலப் பொருந்தும்.

மனிதகுலத்தை முன்னோக்கி நகா்த்திச் செல்லும் ஒரு மாயாஜால வித்தைதான், இந்த அணுகுமுறை மற்றும் செயல்பாடு.

நுண்மாண் நுழைபுலம் அதிகம் படைத்தோா் எதிரிகளை உருவாக்குவதில்லை. எதிரிகள் உருவானாலும் அவா்களைத் தங்கள் வசமாக்கிக் கொள்வா்.

செயற்கை நுண்ணறிவு மற்றும் அதன் கருவிகள், அமைப்புகள் ஆகியவற்றில் ஆரோக்கியமான ஒத்துழைப்பை ஏற்படுத்தினால், உலகளாவிய சிக்கல்களை எல்லாம் புத்திசாலித்தனமான முறையில் சமாளிக்கலாம்.

செயற்கை நுண்ணறிவு மிகப் பெரிய தரவுகளை அழகாகத் தொகுத்து, குறிப்பிட்ட மாதிரிகளைக் கண்டுபிடித்துத் தரும் திறனுள்ளது. மீண்டும்மீண்டும் செய்ய வேண்டிய பணிகளைச் செய்ய இது மனிதா்களுக்கு உதவும். ஆனால், மனிதா்கள் மட்டுமே நல்ல படைப்பாற்றல் கொண்டவா்களாக உள்ளனா். நுண்ணறிவு, நீதிசாா் சிந்தனை, உணா்ச்சி போன்ற முக்கியமான அம்சங்களைக் கொண்டுள்ளனா்.

மனித அறிவு, செயற்கை நுண்ணறிவு ஆகிய இரண்டையும் ஒருங்கிணைத்தால் பூமியில் இதுவரை காணாத புதிய பரிமாணங்கள் மற்றும் இதுவரை கண்டிராத அதிசயங்களைக் காணலாம். நாமே உருவாக்கலாம்.

ஆனால், மனித இனமானாலும், செயற்கை நுண்ணறிவானாலும் தனித்து செயல்பட்டால் எல்லாம் பாழாகிவிடும். இரண்டும் இணைந்துவிட்டால் உலகின் முக்கிய பிரச்னைகளான காலநிலை மாற்றம், சுகாதாரம், உணவுப் பாதுகாப்பு, கல்வி, தரவுப் பகுப்பாய்வு, அளவுரு மேம்பாடு போன்றவற்றுக்கு புதுமையான தீா்வுகளை உருவாக்கலாம். இயற்கைப் பேரழிவுகளை முன்கூட்டியே கணிக்க இயலும்.

மனிதா்களின் திறன்களை அதிகரிக்கும் செயற்கை நுண்ணறிவு, மனிதா்கள் வேகமாக செயல்பட உதவக்கூடிய ஒரு கருவியாக இருக்கவேண்டும். செயற்கை நுண்ணறிவின் மூலம் ஆற்றல் பயன்பாட்டைச் செயல்திறன் மிகுந்தாக மாற்றலாம். மருந்துகளின் கண்டுபிடிப்பை வேகமாக்கலாம்; மருத்துவப் பரிசோதனைகளை மேம்படுத்தலாம். தனிப்பட்ட கல்வி முறைகளை மேம்படுத்தலாம். கலைஞா்கள், எழுத்தாளா்களுக்கு புதிய கருவிகளாக செயற்கை நுண்ணறிவு உதவலாம்.

அதன்மூலம், தொழில் வளா்ச்சி, சமூக முன்னேற்றம் ஏற்படும். மானுட வளம் மேம்படும். தொடா் மீளமைப்பு வேலைகளைச் செயற்கை நுண்ணறிவு மேற்கொள்வதால், மனிதா்கள் வேறு உயா்தரப் பணிகளில் கவனம் செலுத்தலாம்.

கைப்பேசி, இணையம், கணினி தொழில்நுட்பங்களைச் சந்தையில் குறைந்த விலையில் வாங்கி தரமான வாழ்க்கையை மேம்படுத்திக் கொண்ட நாம், செயற்கை நுண்ணறிவைப் பாா்த்து அச்சப்படத் தேவையில்லை.

செயற்கை நுண்ணறிவுடன் எவ்வாறு ஒத்துழைப்பை ஏற்படுத்துவது?

செயற்கை நுண்ணறிவின் உள்ளீடுகளான குறுங்கணிதங்களை (அல்காரிதம்ஸ்) பாகுபாடின்றி வடிவமைக்க வேண்டும். எதிா்பாராத விளைவுகளைத் தவிா்க்க, அறம்சாா்ந்த அடிப்படை விதிகளை செயற்கை நுண்ணறிவில் முறையாக இணைக்க வேண்டும். செயற்கை நுண்ணறிவுடன் இணைந்து வேலை செய்ய மனிதா்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும். அடிப்படை அறிவு, விமா்சன சிந்தனை மற்றும் நெகிழ்வுத் திறன் கொண்ட கல்வி அவசியம். செயற்கை நுண்ணறிவை மனிதா்களுக்குத் துணை செய்யும் கருவியாகப் பாா்க்க வேண்டும்.

வேலைவாய்ப்புகளைக் குறைக்கும் ஓா் ஆபத்தாக செயற்கை நுண்ணறிவை நாம் கருதத் தேவையில்லை. மனிதா்களின் திறன்களை உயா்த்தும் ஒரு கருவியாக செயற்கை நுண்ணறிவைப் பாா்க்க வேண்டும். ஒவ்வொரு முறையும் புதிய தொழில்நுட்பங்கள் வரும்போது வேலையிழப்பு ஏற்படுவது இயல்புதானே? எனவே, செயற்கை நுண்ணறிவை எப்படி எதிா்கொள்வது என்றுதான் நாம் சிந்திக்க வேண்டும்.

செயற்கை நுண்ணறிவு தன்னியல்பாக ஆபத்தானதில்லை. அது எப்படி வடிவமைக்கப்படுகிறது, பயன்படுத்தப்படுகிறது, நிா்வகிக்கப்படுகிறது என்பதன் அடிப்படையிலேயே அதன் தாக்கம் அமைகிறது.

நாம் செயற்கை நுண்ணறிவை நண்பனாகக் கருதினால், உலகளாவிய பல்வேறு பிரச்னைகளை தீா்க்கலாம். மனித திறன்களை அதிகரிக்கலாம். சமத்துவமான, வளமான எதிா்காலத்தை உருவாக்கலாம்.

மனிதா்கள், செயற்கை நுண்ணறிவு ஆகிய இரண்டும் இணைந்து செயல்பட்டால், நம்பமுடியாத செயல்பாடுகளை எதிா்காலத்தில் நாம் மேற்கொள்ள முடியும்.

Wednesday, April 2, 2025

தெளிவின் திறவுகோல்!



நடுப்பக்கக் கட்டுரைகள் 

தெளிவின் திறவுகோல்! 02.04.2025



என் உறவினர் கண் மருத்துவர். அவரைப் பார்க்கச் சென்றிருந்தபோது, அவர் அறுவைச் சிகிச்சை செய்து கொண்டிருந்ததால், நான் ஓர் அறையில் காத்திருந்தேன். அந்த அறையில் ஓர் உதவியாளர் கண் பரிசோதனை செய்து கொண்டிருந்தார். பலரும் முதல் நான்கு வரிசை எழுத்துகளை எளிதாகப் படித்துவிட்டார்கள். கடைசி இரண்டு வரிசை எழுத்துகளைப் படிக்க கண்ணாடிகளைப் பொருத்தி, பின் படிக்கச் சொன்னார்கள். இது நன்றாகத் தெரிகிறதா? என்று கேட்டுக் கேட்டு, கண்ணாடிகளை மாற்றி மாற்றிப் பொருத்தி, படிக்கச் சொன்னார்கள். அந்த மனிதர் நன்றாகத் தெரிகிறது என்று சொன்னார். இதில் இரு சாராருமே களைத்துப் போய் விடுகிறார்கள். வேறு எந்த சிகிச்சைக்குப் போனாலும், மருத்துவர்கள் நம்மைக் கேட்டு சிகிச்சை செய்யமாட்டார்கள். நோயின் தன்மைக்கேற்ப மருத்துவர்கள் சிகிச்சை அளித்துவிடுவார்கள். கண் பரிசோதனை போல இங்கு நம் முடிவு தேவை இல்லை. 

எதையுமே நம் விருப்பத்துக்கு விட்டுவிட்டால், நாம் முடிவெடுப்பதில் குழப்பம் அடைகிறோம். நிறையத் தயங்குவோம்; யோசிப்போம். ஒரு புடவை அல்லது நகை வாங்க எவ்வளவு நேரத்தை எடுத்துக் கொள்கிறார்கள்! ஒரு கடையையே புரட்டிப் போட்டுவிடுகிறார்கள். அப்போதும் திருப்தி ஏற்படுவதில்லை. ஒரு புடவை, நம் வாழ்நாள் முழுவதும் கிழிந்து போகாமல் இருக்குமா? அதை வருடத்துக்குப் பத்து முறை உடுத்துவார்களா? இவர்கள் நூற்றுக்கணக்கான புடவைகளை நிராகரிப்பார்கள். இன்னொரு பெண் கையில் வைத்துள்ள புடவையின் மீது கண் போகும். உடனே அது பிடித்துப் போய்விடும். அதைக் கொடுக்கும்படிக் கேட்பார்கள். அவ்வளவு நேரமும் அந்தப் புடவையை எடுக்கலாமா, வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருந்த அந்தப் 
பெண், சட்டென்று, தான் அதை எடுத்துக் கொண்டதாகக் கூறிவிடுவார். இவர் ஏமாற்றம் அடைந்துவிடுவார். புடவைக்கே இந்த நிலை என்றால், நகைக்கு எப்படி இருக்கும்? 

ஒவ்வொன்றையும் அணிந்து, கண்ணாடியில் பார்த்து, பின் வேறு வடிவமைப்பு வேண்டும் என்று கேட்பது; எதையும் வாங்காமல் பொழுதைப் போக்கிவிட்டு, குளிர்பானம் குடித்து, பின் எழுந்து போய்விடுவது - பாவம், அந்த விற்பனையாளர்கள். இரண்டு கிராம் நகைக்கே அத்தனை தேடல் இருக்கும். கல்யாணத்துக்கு நகை வாங்குவது என்றால் கற்பனையே வயிற்றைக் கலக்குகிறது. 

அதேசமயம், யாராவது பரிசாக ஒரு புடவை கொடுத்தால், புடவையின் நிறம், தரம் என எதையும் குறை சொல்லாமல் பெற்றுக் கொள்கிறார்கள். கொடுப்பவர்கள் நிறையப் புடவைகளைக் காட்டி, அவற்றுள் ஏதாவது ஒன்றை எடுத்துக்கொள்ளச் சொன்னால் மீண்டும் புரட்டுதல், ஒதுக்குதல் நடக்கும்.

உணவகத்துக்குப் போனால் என்ன சாப்பிடுவது என்று முடிவெடுக்க நிறைய நேரம் எடுத்துக் கொள்கிறார்கள். தட்டில் உணவு வந்த பின், பக்கத்து மேசையில் உள்ளதைப் பார்த்து, "அடடா! அதை சொல்லியிருக்கலாமோ?'” என நினைக்கிறார்கள். வயிறு நிறைந்துவிட்டால் அமிழ்தமே ஆனாலும் மறுத்து விடுகிறோம். அதற்கெதற்கு இவ்வளவு தீவிர திட்டமிடல்! ஒவ்வொரு விஷயத்திலும் சட்டென முடிவெடுக்க முடியாமல் குழம்பித் தவிக்கிறோம். 

வீடு கட்டத் தொடங்கும் முன்பே எவ்வளவு யோசனைகள், ஆலோசனைகள், திட்டமிடல். நம் ஒவ்வொருவருக்கும் வீடு குறித்த கனவுகளும், கற்பனைகளும் நிறைய இருக்கும். அதனால் உத்தேசித்த தொகையைக் காட்டிலும் கூடுதலாக செலவை இழுத்துவிட்டுக் கொள்கிறார்கள். யானை அசைந்து தின்னும், வீடு அசையாமல் தின்னும் என்பார்கள். அதிலும் முக்கியமாக எந்த வர்ணம் அடிப்பது என்று முடிவு செய்வதற்குள் விழிபிதுங்கிப் போய்விடும். 

உணவகம் போவதற்காகட்டும், மருத்துவமனை போவதற்காகட்டும் அவை குறித்த மதிப்புரைகளை இணையத்தில் பார்த்த பின்னரே போகிறார்கள். பிள்ளையை எந்தப் பள்ளியில் சேர்க்கலாம்? எந்தக் கல்லூரியில் சேர்க்கலாம்? எந்தத் துறையைத் தேர்ந்தெடுக்கலாம்? என்று நிறைய யோசித்து, பலரிடம் ஆலோசனை கேட்டு, இறுதியில் அவர்கள் விருப்பத்துக்கு முதலிடம் கொடுப்பார்கள். ஒரு காலணி அல்லது ஒரு கைப்பையைக்கூட எளிதில் வாங்குவதில்லை. இரு சக்கர வாகனம் மற்றும் கார் வாங்க வேண்டுமென்றால் ஆயிரம் ஆராய்ச்சிகள். எல்லோரும் வியந்து பாராட்ட வேண்டும்; தம் செல்வச்செழிப்பின் அடையாளமாக அது இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள். தரமான பொருளைத் தேடி, பல கடைகளில் விலையை ஒப்பிட்டுப் பார்த்து வாங்குகிறார்கள். பொருளின் தரம், விலை, ஆயுள், பயன்பாடு ஆகியவற்றைக் கவனிக்கிறார்கள். பொருள்களின் விவரங்கள், தயாரிப்பு, உத்தரவாதம் இவற்றோடு பொருளில் ஏதேனும் பழுது இருக்கிறதா? என்றும் பார்க்கிறார்கள். சிலர் சந்தையில் புதிய வகை கைப்பேசி அறிமுகம் செய்யப்பட்டவுடன் அதை வாங்குகிறார்கள். சிலர் கைப்பேசி வாங்குவதற்கு முன், ஒவ்வொரு புதிய ரக கைப்பேசி குறித்த தகவல்களைத் தெரிந்துகொண்டு, அதில் என்னென்ன வசதிகள் உள்ளன? அது பற்றிய மதிப்புரைகள், அதன் பயன்பாடுகள் எல்லாவற்றையும் அறிந்து கொண்ட பின் வாங்குகிறார்கள். விழாக்கால சிறப்புத் தள்ளுபடிக்காகக் காத்திருப்போரும் உண்டு. பத்து ரூபாய் பொருள் வாங்க, பத்து முறை யோசித்து வாங்குபவர்கள், முக்கியமான விஷயங்களில் அவசரப்பட்டு விடுகிறார்கள். 

முதலில் திருமண விஷயத்தை எடுத்துக் கொள்ளலாம். அனைவருக்கும் தங்கள் வாரிசுகளுக்கு, சிறந்த வாழ்க்கைத் துணை அமைய வேண்டும் என்பதுதான் ஆசை. ஆனால், சதுரங்க ஆட்டத்தில் காய் முகப்பு தற்போதைய செய்திகள் திரை / சின்னத்திரை விளையாட்டு வெப் ஸ்டோரிஸ் விஷுவல் ஸ்டோரிஸ் தமிழ்நாடு இந்தியா நகர்த்துவதுபோல கவனத்துடன் இருந்தாலும் கோட்டை விட்டுவிடுகிறார்கள். பெண்ணுக்கு வரன் தேடும்போது, மணமகனின் தோற்றம், குடும்பப் பின்னணி, வேலை, ஊதியம், வசதி என அனைத்தும் சிறப்பாக இருக்க வேண்டும் என்று தேடி அலைகிறார்கள். ஜாதகப் பொருத்தம் இல்லையென்றால், ஒப்புக் கொள்வதில்லை. அதேசமயம் வெளித் தோற்றத்தையும், பகட்டையும் பார்த்து ஏமாந்து போய்விடுகிறார்கள். மணமகனின் குணம் எப்படிப்பட்டது என விசாரிப்பதில்லை. அப்படியே விசாரித்தாலும், அக்கம் பக்கத்தினரோ, மணமகனுடன் பணிபுரிபவர்களோ, சுற்றமோ உண்மையைக் கூறாமல் மறைத்து விடுகிறார்கள்.

இப்போதெல்லாம் பல இளைஞர்களின் போக்கு சரியில்லை; விசித்திரமாக நடந்துகொள்கிறார்கள். மணமகனின் வீட்டாரைப் பொருத்தவரை மணமகளின் அழகு, ஊதியம், வசதி ஆகியவை முக்கியம். வீட்டுக்கு ஒரே பெண்ணாக இருந்தால் மிக்க மகிழ்ச்சி. அத்தனை சொத்தும் சிந்தாமல், சிதறாமல் மகனுக்கு வந்துவிட வேண்டும். மனப் பொருத்தம் இல்லாத திருமணம் சிதைந்து போகிறது. காதல் மணம் புரிந்து கொள்பவர்கள் மிகவும் அவசரப்பட்டு விடுகிறார்கள். ஒருவருக்கு, மற்றவரின் உண்மையான குணம், குடும்பப் பின்னணி ஆகியவை தெரிய வருவதற்குள் எல்லாம் முடிந்து போகிறது. பெற்றவர்களால் சரியான முடிவை எடுக்க முடியாது என்ற காரணத்தினால் பெண் பார்க்கவும், மாப்பிள்ளை பார்க்கவும் நெருங்கிய சுற்றத்தை அழைத்துச் செல்கிறார்கள். அவர்களின் கணிப்பு சரியாக இருக்கும். தற்போது உடன் வருபவர்கள் எந்தக் கருத்தையும் சொல்வதில்லை.

நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை; விதியின் பிழை என்று எடுத்துக் கொள்ள வேண்டியதாகிறது. பொட்டு, வளையல் போன்றவற்றை வாங்க பொறுமையாகத் தேடுபவர்கள், வாழ்க்கைத் துணை தேர்வில் தவறான முடிவை எடுத்து விடுகிறார்கள். அடுத்து, நமக்கென தேசியக் கடமையும் உண்டு. மக்களாட்சி முறையில் நம்மை ஆட்சி செய்பவர்களை நாம் தேர்வு செய்கிறோம். மிக முக்கியமான இந்த ஜனநாயகக் கடமையை முறைப்படி ஆற்றத் தவறுபவர்கள் வெட்கப்பட வேண்டும். கடமையைச் செய்யாமல், உரிமையைக் கோர என்ன தகுதி அவர்களுக்கு இருக்கிறது? 

நம் வாக்கை யாருக்கு அளிப்பது என்பது தனிநபர் முடிவு. குழு முடிவும் உண்டு. ஒரு கட்சியின் உறுப்பினராக இருப்பவர்கள் அந்தக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக இருப்பார்கள். தொண்டர்கள் விருப்பப்படியா பிற கட்சிகளுடன் தேர்தல் உடன்படிக்கை ஏற்படுகிறது? பிடிக்காவிட்டாலும்கூட அந்தக் கட்சியை ஆதரிக்க வேண்டும். எந்தக் கட்சியிலும் சார்ந்து இல்லாதவர்கள் எந்தச் சின்னத்துக்கு வாக்களிப்பது என்று முடிவெடுக்கத் தடுமாறுகிறார்கள். அத்தகையவர்களை ஒரு பட்டியல் போடலாம். ஒரு கட்சி தன் பதவிக் காலத்தில் என்னென்ன நலத் திட்டங்களை நிறைவேற்றியது, நேர்மையான ஆட்சி இருந்ததா, தடாலடி அரசியலா, தார்மிக அரசியலா, தனிமனித சுதந்திரம் இருந்ததா, மாநிலம் எந்த அளவுக்கு வளர்ச்சி அடைந்தது, விவசாயிகளுக்கு நன்மை செய்தார்களா, செய்வார்களா, தொழில்முனைவோரின் பாதுகாப்பு, காவல் துறையின் கண்ணியம், கல்விக்கூடங்களின் உள்கட்டமைப்பு, சாலை வசதிகள், குடிநீர் வசதிகள், நகரத் தூய்மை, சட்டம்-ஒழுங்கு நிலைமை; பெண்கள் பாதுகாப்பு ஆகிய அனைத்தையும் கருத்தில்கொண்டு வாக்களிக்க வேண்டும். ஐந்து ஆண்டுகள் நம் வாழ்க்கையை அவர்களிடம் ஒப்படைக்கிறோம் என்பதைக் கருத்தில் கொண்டு, உள்ளதில் நல்லதுக்கு வாக்களிப்போம். 

நாம் எடுக்கும் ஒவ்வொரு நம் வாழ்க்கையில் எதிரொலிக்கும். தனிமனித முடிவு என்பது ஒருவர் தன்னிச்சையாக எடுப்பது. இது ஒரு நபரின் சொந்த விருப்பம், சிந்தனை மற்றும் சூழ்நிலைகளின் அடிப்படையில் எடுக்கப்படும் ஒரு முடிவாக இருக்கும். சில விஷயங்களில் தனிப்பட்ட முடிவை எடுக்கத் தயங்கி, மற்றவர்களின் ஆலோசனைகள், விருப்பங்கள் அல்லது கட்டாயங்களுக்கு உட்பட்டு அதை ஏற்றுக் கொள்கிறோம். ஒரு தனிப்பட்ட முடிவு, அந்த நபரின் வாழ்க்கையில் நேர்மறையான அல்லது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தலாம். எது எப்படி நடக்க வேண்டுமோ. அது அப்படித்தான் நடக்கும். சுனிதா வில்லியம்ஸ், வில்பர் ஆகியோர் எட்டு நாள்கள் மட்டுமே விண்வெளியில் இருப்பதற்காக அனுப்பப்பட்டார்கள். ஆனால், அவர்கள் 286 நாள்கள் இருக்கும்படி ஆகிவிட்டது. அதேசமயம் விதியின் மீது பழியைப் போடாமல், நம் மதியையும் உபயோகித்து எந்த ஒரு முடிவையும் எடுத்தால், குற்ற உணர்ச்சியில் தவிக்க மாட்டோம்.

கட்டுரையாளர்: பேராசிரியர். தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... 

State can’t undo 33-year-old appointment: Gujarat High Court

State can’t undo 33-year-old appointment: Gujarat High Court July 5, 2026, 01.02 AM IST Ahmedabad: 05.07.2026 The Gujarat HighCourt has quas...