Thursday, September 29, 2016

காலம் மாறிவிட்டது

By வாதூலன் | Last Updated on : 29th September 2016 01:00 AM | அ+அ அ- |

ஆறு மாதம் முன்பு, என் உறவினரின் பேரன் திருமணம் நடந்தது. இந்தச் சுப நிகழ்வையொட்டி, எல்லாரையும் சந்தித்துப் பேசலாமென்று நினைத்திருந்தேன். ஆனால், குறிப்பிட்ட நாளன்று உடல்நலக் குறைவால், அந்தத் திருமணத்துக்குப் போக முடியவில்லை.
அன்பளிப்பாக ரூ.500 அனுப்பி வைத்தேன். இரண்டு நாள் கழித்து போனில் பேசினேன். "உங்கள் செக் கிடைத்தது. நீங்கள் எல்லாரும் வருவீர்கள் என்று ரொம்ப எதிர்பார்த்தேன்' என்று உளமாரச் சொன்னது, எனக்குத் திருப்தியாக இருந்தது.
ஆனால் அந்தக் காசோலை கணக்கில் பற்று ஆகவேயில்லை. மூன்று மாதக் காலக் கெடு நெருங்கிக் கொண்டிருந்தது.
உறவுக்காரப் பெண்மணியிடம் விசாரித்தபோது, "பையனிடம் கொடுத்தேன். இப்போது அவன் வீட்டிலில்லை, போன வாரம்தான் அவர்கள் இலங்கையிலிருந்து வந்தார்கள்!' என்றார். குரலில் அலுப்பு தொனித்த மாதிரி இருந்தது.
ஒரு வழியாகக் காலாவதி தேதிக்கு மூன்று நாள் முன் காசோலை பற்று ஆகியது. கிரிக்கெட் பந்தயத்து ஆட்டக்காரர் கோட்டைக் கடைசி நிமிடத்தில் தொடுவது போல.
இதேபோல வேறொரு நிகழ்ச்சி. என் நெருங்கிய பள்ளி நண்பனின் தம்பி இல்லத்தில் ஒரு விழா. அதற்கான அழைப்பிதழ் வந்த அன்றே, போக இயலாதென்று புரிந்துவிட்டது. ஏனெனில் வேறு ஒரு நிகழ்ச்சிக்குப் போக வேண்டிய நிர்ப்பந்தம். வழக்கம்போல, கடிதத்துடன் காசோலையும் அனுப்பினேன்.
விழா முடிந்த மறுநாள் அவனே தொலைபேசியில் பேசினான். "என்ன? வராமலே இருந்து விட்டீர்கள்? பழைய எம்.ஸிடி. ஸ்கூல் சினேகிதர்களை பார்த்திருக்கலாமே? எழும்பூர் "ப்ரெண்ட்ஸ்' நிறைய பேர் வந்திருந்தார்கள்' என்று சொல்லிக் கொண்டே போனவன், பேச்சோடு பேச்சாகக் காசோலை கிடைத்த விஷயத்தையும் தெரிவித்தான்.
ஆனால், இங்கு என்ன ஆயிற்றென்றால், காசோலை பற்று ஆகவே இல்லை. அதாவது வங்கியில் சேர்க்கப்படவேயில்லை! என் மனக்குறையை நண்பனிடம் புலம்பித் தீர்த்தேன்.
"உன் தம்பி அடிக்கடி அமெரிக்கா போய் விட்டு வருகிறவன். என், 500 ரூபாய் அற்பமாகத் தோன்றியிருக்கும்! அதனால்தான்' என்று கூறினேன். நண்பன் என்னைச் சமாதானம் செய்தான். "சே! அப்படி நினைக்காதே. சோம்பேறித்தனமாயிருக்கும். நீ தவறாக எடுத்துக் கொள்ளக் கூடாது' என்று தம்பிக்குப் பரிந்து பேசினான்.
அலுவலக நண்பனிடம் ஏதோ சந்தர்ப்பம் வரும்போது இதைப் பகிர்ந்து கொண்டேன். அவனுடைய பார்வை கொஞ்சம் வேறு விதமாக இருந்தது.
"அன்பளிப்பாகச் செக்கோ, பொருளோ தந்துவிட்டால், அதோடு நம் பங்கு முடிந்துவிட்டது. அதை எப்படிப் பயன்படுத்துகிறார்களென்று கவனிப்பது நம் வேலை இல்லை!' என்றான்.
முற்றிலும் உண்மைதான். ஆனால் என் சினேகிதனின் தம்பி காசோலையை ஒரு பொருட்டாகவே கருதவில்லையே? அலட்சியமாக இருந்ததால்தானே சாவகாசமாய் வங்கியை அணுகியிருக்கிறான். "இதே செக் 50 டாலராயிருந்தால் இது போலிருந்திருப்பானா?' என்ற கேள்வியும் என்னுள் எழாமலில்லை.
என் மனைவி ஆறுதலாகச் சொன்னாள், "இப்போதெல்லாம் கல்யாணமானவுடன் மணமக்கள் வெளிநாட்டுக்கு தேனிலவுக்காக போகிறார்கள். கிரகப்பிரவேசம் செய்தால், புது வீட்டுக்கு பர்னிச்சர் வாங்க அலைகிறார்கள்! அந்த நாள் மாதிரியா?' என்று ஏக்கப் பெருமூச்சுவிட்டாள்.
அதன் அர்த்தம் எனக்குப் புரிந்தது. 40 வருடம் முன்பு புதுமனை புகுவிழா கொண்டாடியபோது, என் சித்தி அளித்த "மில்க் குக்க'ரை ரொம்ப வருடம் பயன்படுத்தி வந்தோம்.
இன்று காலம் மிகவும் மாறிவிட்டது. எந்த நிகழ்ச்சிக்குச் சென்றாலும், பளபளக்கும் விளக்குகள், வண்ணமயமான அலங்காரங்கள், விடியோ வெளிச்சம் போன்றவை நீக்கமற நிறைந்திருக்கின்றன.
நிதானமான கனிவான விசாரிப்புக்குப் பதில், அவசர கை குலுக்கல்கள்; தம்பதிகளை மனமாரப் பாராட்டுவதற்குப் பதில் அவர்கள் அருகில் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்வது. இடையிடையே வரும் செல்லிடப்பேசி அழைப்புகள்.
பரிசுப் பொருள்கள் மேடையில் ஒரு மூலையில் குவிகின்றன. காசோலையோ வேறு உறையோ பெறுகிறவர்கள் விரைவாகக் குறித்துக் கொள்கிறார்கள்.
ஆக சகல மதிப்பீடுகளும் மாறிவிட்டன. இது குடும்பத்தில் மாத்திரமல்ல. அரசியல், திரைப்படம், விளையாட்டு போன்ற பிற துறைகளிலும்தான்.
ஒரு சின்ன உதாரணம். சில நாள் முன்பு பிரபல ஆங்கில நாளேட்டில், கிரிக்கெட் ஆட்டக்காரர் ஸி.டி. கோபிநாத் (86 வயது), 1952-இல் தாங்கள் முதன் முதலாக இங்கிலாந்தை வெற்றி கொண்டதை நினைவுகூர்ந்த கட்டுரை ஒன்று வெளியாகியிருந்தது.
"வெற்றி பெற்றவுடன் மாற்றுக் கட்சியிடம் கைகுலுக்கி விட்டு ஓட்டலுக்குத் திரும்பி விட்டோம். மேலே குதிப்பது, கீழே புரள்வது போன்ற செய்கைகள் இல்லை.
"விருந்து உண்டா?' என்று யாரோ கேட்டார்கள். அன்று, எங்களிடமும் சரி, வாரியத்திடமும் சரி அதற்குச் செலவு செய்ய தொகை இல்லை!' என்று கூறியிருக்கிறார். அந்த வெற்றியில் கோபிநாத்துக்கு முக்கிய பங்களிப்பு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏன், 33 ஆண்டுகளுக்கு பின், கபில்தேவ் தலைமையில் உலகக் கோப்பை வென்றபோது, பெரும் ஆர்ப்பாட்டம் இருக்கவில்லை.
இன்று, கணினியும், நவீன ஊடக வசதிகளும் அனைவரது வாழ்க்கையையும் ஒரு புரட்டு புரட்டியிருக்கிறது. "உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலா தார்' என்ற குறள் ஓரளவுக்குப் பொருந்தும்தான்.
வயதானவர்கள் சில தன்மைகளை அனுசரித்துச் சகித்துக் கொள்ளும் பக்குவம் பெற வேண்டியதுதான். அதேபோல், இளைஞர்களும் பழைய உயர் பண்புகளையும் நல் மதிப்பீடுகளையும் பேணிப் போற்றக் கற்றுக்கொள்வது உசிதம்.

மரத்துப் போயிற்றா மனிதம்?

By தி. இராசகோபாலன்  |   Last Updated on : 29th September 2016 01:01 AM  |

அடிமைப்பட்டிருந்த இந்தியாவில் வாழ்வதற்குத் தான் வழி தெரியவில்லை. ஆனால், விடுதலை பெற்ற நாட்டில் சாவதற்கும் வழி தெரியவில்லையே? சாரிசாரியாகச் செல்லுகின்ற எறும்புகளில் ஒரு எறும்பு செத்துப் போய்விட்டால், மற்ற எறும்புகள் செத்த எறும்பை எடுத்துக்கொண்டு செல்கின்றன. காக்கைக் கூட்டத்தில் ஒரு காக்கை மின்சாரக் கம்பியில் அடிபட்டு விழுந்தால், உடனே மற்ற காக்கைகள் எல்லாம் கரைந்து கூடி, அடிபட்ட காக்கையை உயிர்ப்பிக்க முயலுகின்றன.
ஆனால், ஒடிஸா மாநிலத்தில் ஆதிவாசி ஒருவருடைய மனைவி மருத்துவமனையில் மாண்டால், அவரே தன் தோளில் தூக்கிப் போக வேண்டியிருக்கிறது.
அண்மையில் கான்பூரிலும் நபரங்காபூரிலும் மருத்துவமனைகளில் செத்த பிணங்களுக்கு வாகன வசதி செய்து தரப்படாமல், உரியவர்களே தோளிலும், சைக்கிளிலும் தூக்கிக்கொண்டு போன நிகழ்ச்சிகள், மனித வர்க்கத்தின் மேல் படிந்த கரும்புள்ளிகள் எனலாம்.
"கத்தும் பறவை கனிமரத்தில் வந்து, ஒற்றுமை காட்டிடுதே - தலைப்பித்தம் பிடித்தொரு கூட்டம் தனித்தனி பேதம் வளர்த்திடுதே' எனும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார் பாடிய பாடல், சாகாவரம் பெற்றதாகும்.
கான்பூரில் தரித்திரத்தோடு வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கும் ஏழைத் தொழிலாளி, சுனில்குமார். அவருடைய 12 வயது மகன் அம்ஷ பிறவி நோயாளி. 26.08.2016 அன்று அம்ஷ உயிருக்குப் போராடும் நிலைமை ஏற்படவே, சுனில்குமார் அவனைக் கான்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துப் போனார்.
அங்கிருந்த அரசு ஊழியர்கள் நிலைமையின் விபரீதத்தை உணராமல், அடுத்திருந்த குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அழைத்துப் போகும்படி பணித்தனர். குழந்தைள் நல மருத்துவமனையில் உடனடி சிகிச்சை தராமையால், அச்சிறுவன் அங்கேயே இறக்க நேர்ந்தது. அக்குழந்தையை எடுத்துச் செல்ல ஆம்புலன்சும் தர மறுத்தனர். அதனால், அம்மகனை அத்தந்தை தம் தோளில் சுமந்துகொண்டே வீடு சென்றிருக்கின்றார்.
ஊடகங்களில் செய்தி பரவிவிடவே, மாநிலமே அதிர்வலைகளைச் சந்தித்தது. நிலைமையின் விபரீதத்தை உணர்ந்த உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ், அம்மருத்துவமனையின் தலைமை அதிகாரியை இடைநீக்கம் செய்தார். என்றாலும், மனிதம் மரத்துவிட்டதே!
மரித்த உடலை எப்படி மதிப்பது என்பதை உலகிற்குச் சொல்லிக் கொடுத்த நாடு, நம் நாடு. இராவணன் மாண்டவுடன், இராமபிரான் வீடணனை அழைத்து, "வீடணா! "நீ என் தம்பிதான் என்றாலும் வன்மத்தை விட்டுவிட்டு, விதி நூல்களில் என்னென்ன சொல்லப்பட்டிருக்கிறதோ, அவற்றின்படி போர்க்களத்தில் மாண்டு கிடக்கின்ற உன் அண்ணனாகிய இராவணனுக்கு ஈமக்கடன்களைச் செய்வாயாக' எனக் கட்டளையிடுகிறான். வான்மீகியும், "பகைமைகள் மரணத்தை முடிவாக உடையன' என வீடணனை நோக்கி மொழிகிறார்.
உயிரற்றவர்களின் உடலை மதிக்க வேண்டும், மரியாதை செய்ய வேண்டும் என அழுத்தமாக வற்புறுத்த நினைத்த ஈட்டுரையாசிரியர் நம்பிள்ளை ஓர் அற்புதம் செய்தார்.
இராவணன் அண்ணன் இல்லை இராமன்தான் அண்ணன் என்பதை வீடணன் "களவியல் அரக்கன் பின்னோ தோன்றிய கடன்மை தீர்ந்தது' (பாடல்: கம்பன், 6506) எனும் வாக்குமூலத்தின் மூலம் புலப்படுத்துகின்றான். இராவணன் அண்ணன் இல்லை என்றாகிவிட்டபிறகு எப்படி ஈமக்கடன் செய்வது எனத் தயங்குகின்றான் வீடணன்.
"வீடணா, இராவணனுக்குக் கைங்கர்யத்தை நீ செய்கிறாயா அல்லது நான் செய்யட்டுமா நீ என் தம்பி இவன் உன் அண்ணன் ஆகவே இவன் எனக்கும் உறவினன் ஆவான்' எனச் சொல்லி இராமபிரான் எழுந்தபோது, பதறிப்போன வீடணன் நீர்க்கடனை நிறைவேற்ற எழுந்தானாம். இது நம்பிள்ளையின் ஈட்டுரை.
இவர்கள் எல்லாம் மனிதம் உரத்துப் போன மாமனிதர்கள்; மரத்துப்போன மனிதர்கள் அல்லர்.
இராமாயணத்தைப் போலவே மகாபாரதமும் நீத்தார்க் கடனாற்றுவதை நேர்த்தியாக எடுத்துரைக்கின்றது. பத்தாம் நாள் போரின்போது, பீஷ்மருக்கு இவ்வுலக வாழ்வை நீக்க வேண்டும் என்ற எண்ணம் வந்து, வில்லைக் கீழே போடுகிறார்.
அர்ச்சுனனுடைய அம்புகள் ஒன்றன்மேல் ஒன்றாக அவர்மேல் தைக்கவே, "அர்ச்சுனா என்னுடல் மண்மகள் மீது படக்கூடாது. அதனால் சரப்படுக்கை அமைத்து, அதன்மேல் கிடத்துவாய் மேலும் இது தட்சணாயணம் உத்தராயணத்தில்தான் நான் மோட்சத்திற்குச் செல்ல வேண்டும்' எனப் பணிக்கின்றார்.
பீஷ்மர் பகைவர்களின் கூடாரத்தைப் சேர்ந்தவர் என்றாலும், அர்ச்சுனன் ஆச்சாரியன் வார்த்தைக்குக் கட்டுப்பட்டுச் சரப்படுக்கை (அம்புப் படுக்கை) அமைக்கிறான். சரப்படுக்கையில் நினைவற்று இருக்கும் உடலைப் பஞ்சபாண்டவர்கள் மாற்றி மாற்றிக் காவல் காக்கின்றனர்.
அந்நேரத்தில் பீஷ்மர் "விஷ்ணு சகஸ்ரநாம'த்தை வாய்விட்டு ஓதத் தொடங்குகிறார். அதனை கண்ணன் சரப்படுக்கைக்குக் கீழே கைகட்டி அமர்ந்து கேட்கத் தொடங்குகிறான். கண்ணன் அமர்ந்தவுடன் தருமன் உட்பட அனைவரும் கீழே அமர்ந்து செவிமடுக்கின்றனர்.
இதனால், உயிர்நீத்துக் கொண்டிருக்கும் உடலை, நம் மூதாதையர் மதிக்கக் கற்றதோடு, துதிக்கவும் கற்றவர் என்பது வெளிப்படுகின்றது.
இந்திய மரபினரைப் போலவே அயல்மரபினரும்கூட புகழுடம்புகளை மதித்தவர்கள்தாம்.
ஒருமுறை நபிகள் நாயகம் தம் சீடர்களோடு திண்ணையில் உட்கார்ந்து உரையாடிக் கொண்டிருக்கிறார். அப்போது அவ்வழியே ஒரு யூதருடைய இறுதி யாத்திரை போய்க் கொண்டிருக்கிறது. அதனைக் கண்ட நபிகள் நாயகம் எழுந்து நின்று, தலை குனிந்து மெளனம் கடைப்பிடிக்கின்றார்.
அந்த ஊர்வலம் கடந்தவுடன் சீடர்கள், "பெருமானே அது நம்முடைய ஜென்மப் பகைவன் யூதனுடைய பிணமாயிற்றே அதற்கு எதற்கு மரியாதை' என்றனர். அதற்குப் பெருமானார், "பிணத்தையே மதிக்கத் தெரியாத நீங்கள் எப்படி மனிதனை மதிக்கப் போகிறீர்கள்' எனக் கடிந்து கொள்கிறார்.
இரண்டாம் உலகப் போரின்போது, இங்கிலாந்தில் இனம் தெரியாதவன் இறந்து கிடந்தால்கூட ஆங்கிலேயர்கள் அவ்வுடலைச் சகல மரியாதைகளோடு, "பெயர் தெரியாத வீரனுக்கு' என்று மலர்வளையம் வைத்து அடக்கம் செய்தனர்.
ஆனால், நம்முடைய புண்ணிய பாரதத்தில், ஒடிஸாவில் இரண்டு ஏழை இளைஞர்கள் இறந்துபோன தங்கள் குடும்பத்துப் பெண்ணை மருத்துவமனையிலிருந்து பருயமுண்டா கிராமத்திற்கு ஏற்றிக் கொண்டு போக ஆம்புலன்ஸ் வசதி கேட்டிருக்கின்றனர்.
அதற்கென விதிக்கப்பட்ட தொகையினைக் கேட்டு, ஏதுமில்லாத அந்த ஏழை இளைஞர்கள், சைக்கிளில் அவ்வுடலைக் கிடத்தி, 30 கி.மீட்டர் தொலைவுக்கு எடுத்துக்கொண்டு போயிருக்கின்றனர்.
இத்தனைக்கும் அம்மாநில முதல்வர் 'மஹாபிரயாணா' எனும் பெயரில் 40 ஆம்புலன்ஸ் வேன்களை வாங்கி, பெரிய மருத்துவமனைகளில் நிறுத்தியிருக்கிறார்.
இதயத்தை முள்ளின் முனையில் நிறுத்தக்கூடிய ஒரு கொடூரம், அதே ஒடிஸா மாநிலத்தின், நெடுவழிச்சாலையில் நிகழ்ந்தேறியிருக்கிறது.
ஒடிஸா மாநிலத்தில் கலாஹண்டி மாவட்டம், மெல்காரா கிராமத்தில் தனா மஜி எனும் ஆதிவாசி வாழ்ந்து வருகிறார். அவருடைய மனைவி அமாங்தீ ஒரு காசநோயாளி.
காசநோயால் கடும் பாதிப்புக்குள்ளான தம் மனைவியை 60 கி.மீ. தொலைவிலுள்ள பவானி பட்னா மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார், தனா மஜி. அன்று இரவு அமாங்தீ, சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் இறந்துவிட்டார்.
கலாஹண்டி மாவட்டம் வறண்ட பூமியில்லை என்றாலும், வாங்கும் சக்தியில்லாத காரணத்தால், அங்குள்ள பழங்குடியினர் கடந்த இருபதாண்டுகளாகப் பசி, பட்டினியில் மடிந்து வருகின்றனர்.
அத்தகைய பழங்குடியினத்தைச் சேர்ந்த தனா மஜி கையில் காசு கிடையாது. தம்மனைவியை 60 கி.மீ. தொலைவுக்கு எடுத்துச் செல்வதற்கு ஆம்புலன்ஸ் வேண்டியிருக்கிறார். ஆனால், செக்யூரிட்டிகளும், ஆண் செவிலியரும் அவ்வசதியை மறுத்ததோடு, இரவோடு இரவாகப் பிணத்தை அப்புறப்படுத்தும்படியும் கட்டாயப்படுத்தியிருக்கின்றனர்.
வேறு வழி தெரியாத அந்த ஏழை அபலை, மனைவியின் உடலை ஒரு லுங்கியில் சுற்றி எடுத்துக்கொண்டு, தம்முடைய 12 வயது மகள் சானடெய் மன்கி பின்தொடர தம் கிராமத்தை நோக்கி இரவோடு இரவாக நடக்கத் தொடங்கிவிட்டார்.
அப்படி அவர் நடந்து 16 கி.மீட்டரைத் தாண்டிய பின், அந்த வட்டாரத்தைச் சேர்ந்த பத்திரிகை நிருபர்கள் அவரைப் பார்க்க நேர்ந்தது. அவர்கள் அதனை சட்டப்பேரவை உறுப்பினர் கவனத்திற்குக் கொண்டு வந்திருக்கின்றனர். அவர் உடனடியாக ஓர் ஆம்புலன்சுக்கு ஏற்பாடு செய்து, மெல்காரா கிராமத்திற்குப் பயணப்பட ஏற்பாடு செய்திருக்கிறார்.
மறுநாள் அச்சோகக் காட்சியைப் பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் வெளியுலகத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கின்றன. என்றாலும், செக்யூரிட்டிகளுக்கும் மருத்துவமனைச் சிப்பந்திகளுக்கும் மனிதநேயம் எங்கே போயிற்று? மரத்துப் போயிற்றா மனிதம்?

Wednesday, September 28, 2016


NEET: Supreme Court orders combined counselling in Maharashtra

The court also said the admissions already made would not get affected


NEET: Supreme Court orders combined counselling in Maharashtra

The court also said the admissions already made would not get affected

In a major relief to the students, the Supreme Court today ordered for combined counselling for all unfilled medical seats in Maharashtra.

The court also said the admissions already made would not get affected. Thousands of medical students, who cleared National Eligibility-cum-Entrance Test (NEET) this year, have already got seats in various colleges.

The apex court also said the admission process have to be completed by October 7.

With this decision, confusion over admission to private and deemed universities in the state is cleared. The deemed universities argued the state government is violating their fundamental right to administer their own institutions and hold individual counselling for students.

As per reports, 85 per cent of seats was already filled.

In another case, the apex court refused to interfere in any admissions already made by the medical colleges in Kerala
மணமான பெண் வீட்டுக்கு பெற்றோர் போகலாமா?

புதுடில்லி: திருமணமான பெண் குடியிருக்கும் கணவரின் வீட்டுக்கு, அந்தப் பெண்ணின் பெற்றோர் செல்ல முடியுமா என்பது குறித்து, டில்லி கோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது.

டில்லியைச் சேர்ந்த பெண் ஒருவர் தொடர்ந்த வழக்கில், டில்லி செஷன்ஸ் கோர்ட் நீதிபதி, விகாஸ் தல் அளித்த தீர்ப்பு: கணவன் மற்றும் அவருடைய குடும்பத்தாருடன் இந்தப் பெண்ணுக்கு பிரச்னை உள்ளது; அதே நேரத்தில், அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். 'பெண்ணின் பெற்றோர், எங்கள் வீட்டுக்கு வரக் கூடாது' என, கணவர் குடும்பத்தினர் கூறியுள்ளனர்.

இது தொடர்பாக விசாரித்த கீழ் கோர்ட், 'திருமணமான பெண்ணின் பெற்றோர், கணவர் வீட்டிற்கு வர உரிமை இல்லை' என, கூறியுள்ளது. இந்த தீர்ப்பை ஏற்க முடியாது. மனிதன் ஒரு சமூக விலங்கு; உறவுகளோடு சேர்ந்து, இணக்கமாக வாழ வேண்டும். திருமணமான பெண் தங்கியிருக்கும் வீட்டுக்கு, அவளது பெற்றோர் செல்வதற்கு தடை விதிக்க முடியாது. இவ்வாறு நீதிபதி தீர்ப்பு அளித்தார்.

State govt. stand on centralised counselling leaves students in limbo

Battle between deemed universities, Maharashtra government over right to counselsuccessful NEET candidates awaits Supreme Court decision

The fate of thousands of medical students who cleared NEET is in the hands of the Supreme Court, with the Maharashtra government and deemed universities in the State engaging in a tug-of-war over who has the right to hold counselling sessions.

With just a few days left before admissions to medical and dental colleges close for the new academic year, a bench of Justices A.K. Sikri and L. Nageswara Rao has to decide whether Maharashtra has the right to conduct centralised counselling. Deemed universities argue that the State government is stepping on their fundamental right to administer their own institutions and hold individual counselling for students.

To make matters worse, several thousand students in the State have already secured admissions to these deemed universities on the basis of individual counselling done by the varsities, and have already started classes. The State government prefers them to be sent back for a combined re-counselling. Both the Maharashtra government and the Centre termed the admissions of these students as provisional.

“These universities say that 85 per cent of their seats have already been filled up. What will happen to all these students who have already started classes?” a concerned Justice Sikri asked the government.

Senior advocate P. Chidambaram, appearing for one of the deemed universities, said the Narendra Fadnavis government was attempting the “undoable task of unscrambling eggs” by trying to cancel their admissions and send them back for combined re-counselling.

“Centralised counselling is absolutely essential after NEET... otherwise the gains of NEET will disappear. Normally, a centralised exam like NEET should follow with centralised counselling. I am not treading on anybody’s authority,” senior advocate Shyam Divan, appearing for the Maharashtra government, argued.

The State government had come in appeal against a Bombay High Court order quashing its notification to hold combined counselling for all undergraduate medical and dental students who cleared NEET this year. The Supreme Court in April had revived the 2010 NEET regulations to bring transparency in medical and dental admissions across the country.

Mr. Divan argued that private institutions have a duty to admit meritorious students. He claimed that these universities have admitted students from the bottom of the NEET rank list. “There has been a complete rejection of merit,” he said.

With centralised counselling conducted by the State government authorities, Mr. Divan pointed out, students do not have to attend multiple counselling sessions. It would also save them from paying multiple application fees to several colleges, and would also end the practice of blocking seats.


The Centre, represented by Solicitor-General Ranjit Kumar, submitted that a majority of States, like Maharshtra and Kerala, are in favour of combined counselling. “We want counselling to be centralised all over the country. Centralisation guarantees equality of opportunity,” Mr. Kumar submitted.

He argued that the term ‘admission’ in the NEET regulations include the combined entrance exam and the counselling too. Supporting the Maharashtra notification for centralised counselling, the Solicitor-General argued that even the UGC Regulations reserves the right of admissions in deemed universities with the “bodies authorised by the Centre, States or other other State agencies”.

The hearing will continue on Tuesday.

Earlier this month, the Bombay High Court lifted a stay on admissions to various courses through NEET. It asked the State government to prepare a list of candidates from outside the state, but restrained it from making it public till it has reviewed it.

The court was hearing petitions filed by the Mahatma Gandhi Vidyamandir's Karmaveer Bhausaheb Hiray Dental College and Hospital, a private unaided college, and students from other states challenging the rules denying admissions to applicants from outside Maharastra to these courses.



Many students have secured admissions to these deemed universities

சட்டமே துணை: மனதைக் கொல்வதும் குற்றமே

பி.எஸ். அஜிதா

எல்லோருக்கும் பொறுமை அவசியம் தான். ஆனால், பல விதமான குடும்ப வன்முறைகளை ஏற்றுக் கொண்டும் பொறுத்துக்கொண்டும் போவது யாருக்குமே நல்லதல்ல என்பதைப் பெண்கள் உணர வேண்டும்.

நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்த சித்ரா, சத்தம் கேட்டுக் கண் விழித்தார். பக்கத்தில் அருள் இல்லை. வெளியே வந்து பார்த்தால் அங்கேயும் இல்லை. இரவு வெகு நேரம் லேப்டாப்பில் வேலை செய்துவிட்டுப் படுத்தவர்தான். இப்போது லேப்டாப் மேஜையில் இல்லை. யோசித்தபடியே நடந்தவரின் காலில் ஏதோ தட்டுப்பட, இதயம் ஒரு கணம் நின்றேவிட்டது.

ஆணி போன்ற கூரான எதையோ வைத்து லேப்டாப் சிதைக்கப்பட்டிருந்தது. கீழ்ப்பகுதியும் மேல் மூடியும் தனித் தனியாக வந்துவிட்டன. அழுகை பீறிட்டு வந்தது.

மகன் விழித்துவிடப் போகிறான் என்று வாயைப் பொத்திக்கொண்டு அழுதார். அடுத்து என்ன செய்வதென்று தெரியவில்லை. அலுவலகத்தில் கேட்டால் என்ன பதில் சொல்வது? அதிலிருக்கும் தகவல்களை எடுக்க முடியாதபடி லேப்டாப் முற்றிலும் சிதைந்துவிட்டிருந்தது. ஓட்டை விழுந்து கிடக்கும் லேப்டாப்பை, கைதவறி உடைந்துவிட்டது என்று எப்படிச் சொல்ல முடியும்?

சித்ராவுக்கு 12 வருட வாழ்க்கை மனக் கண் முன் ஓடியது. வலிகளை மறந்து மரியாதையாக, நிம்மதியாக, மதிப்புடன் உலாவுகிற ஒரே இடம் அலுவலகம்தான். இதைப் பற்றிச் சொன்னால் என் குடும்ப வாழ்க்கையின் அவல நிலை அலுவலகத்தில் தெரிந்துவிடுமே என்று அஞ்சினார். மூன்று மாதக் கால புராஜெக்டின் மொத்த வேலையும் அந்த லேப்டாப்பில் சிதைந்து கிடந்தது.

காதல் ஒருவனைக் கைப்பிடித்தே

அருளுக்கும் சித்ராவுக்கும் நடந்தது காதல் திருமணம். படிக்கும் காலத்தில் அறிமுகமான நட்பு, வேலைக்குச் சேர்ந்தபோதும் தொடர்ந்தது. மூன்று வருடங்களில் காதலாக மாறியது. அருள் காதலை வெளிப்படுத்தியபோது, வேலையிலும் பொருளாதாரத்திலும் சித்ராவைவிட ஒரு படி கீழே இருந்ததை இருவருமே பொருட்படுத்தவில்லை. எளிமையான மனிதனாக, அனைத்தையும் மென்மையாகச் செய்யும் அவன் சுபாவம் பிடித்திருந்தது.

படிப்பு ஒன்றாக இருந்தாலும், தரமான பொறியியல் கல்லூரிக்கும் கடைநிலை பொறியியல் கல்லூரிக்கும் இருந்த வேறுபாடு, இருவருக்கும் புரிதலையும், அறிவையும், பணியையும் வெவ்வேறு தரத்தில் கொடுத்திருந்தது. பணம் ஒரு பொருட்டே இல்லை சித்ராவுக்கு. அவர் விரும்பியது அமைதியான, எளிமையான வாழ்க்கையைத்தான். பெரியவர்கள் சம்மதத்துடன் திருமணமும் நடந்தது. அண்ணன் மட்டும், “அவனுக்கு உன்னுடைய தகுதியோ, அறிவோ கிடையாது. பின்னால் பிரச்சினை வரும்” என்றான்.

சித்ரா அதைப் பொருட்படுத்தவில்லை. அஸ்வின் பிறந்த பின், கடந்த ஐந்து ஆண்டுகளாக அவர் படும் வேதனைகள் அதிகம். வார்த்தைக்கு வார்த்தை ஒழுக்கம் கெட்டவள் என்ற வசவு. வாரம் ஒருநாள் குடிக்கத் தொடங்கி, வாரம் முழுவதும் என்றானது. அதனால் வேலையும் பறிபோனது.

“ஏன், சம்பாதிக்கத் துப்பில்லாதவன் தின்கிறானே என்று நினைக்கிறீயா? இவனுக்குப் பெண்டாட்டியா இருக்கிறதைவிட நல்லா சம்பாதிக்கிற வேறொருத்தன் பரவாயில்லைன்னு தோணுதா? ஆபீஸில் நடக்கிறது யாருக்கும் தெரியாதா என்ன?” என்றெல்லாம் அருளிடமிருந்து அமில வார்த்தைகள் வந்துவிழும்.

கொட்டும் விஷ வார்த்தைகள்

காதலித்தபோது இருந்த மெல்லிய உணர்வுகள், பாசத்தோடு கழிந்த நாட்கள், குழந்தையைக் கொஞ்சி, அன்பைப் பகிர்ந்துகொண்ட நாட்கள் என்று பலவற்றை நினைத்து ஏங்கினார் சித்ரா. ஒருநாள், “கவுன்சலிங் போலாமா?” என்று அருளிடம் கேட்டபோது, “என்னைப் பைத்தியம் என்று முடிவே பண்ணிட்டியா சபாஷ்! என்னை டாக்டரிடம் கூட்டிப்போய், சர்டிபிகேட் வாங்கி டைவர்ஸ் பண்ணலாம்னு திட்டம் போட்டிருக்கிறாயா?” என்று சண்டை போட்டார்.

வேறு வழியில்லாமல், அண்ணனிடம் சொன்னார் சித்ரா. வருத்தப்பட்டாலும், “அவனுக்கு நல்ல வேலை கிடைத்தால் பொறுப்பு வந்துவிடும்” என்று சொல்லி நிறுத்திக்கொண்டார் அண்ணன்.

அப்பாவை அழைத்துவந்தால் அருளுக்கு நிதானம் வரும் என்று நினைத்தார் சித்ரா. அப்பா வீட்டில் இருந்த ஆறு மாதங்களும் சண்டை தொடர்ந்தது. அப்பா ஒருநாள் அருளிடம், “ஏம்பா, இப்படிப் பேசுற?” என்று கேட்டதற்காக, அவரையும் அநாகரிகமாகத் திட்டிவிட்டார்.

சித்ராவுக்கு நடப்பது ஓர் உளவியல் வன்முறை. நடக்காத ஒன்றை, நியாயமற்ற ஒன்றைப் பேசிப் பேசி மன வலியை, அச்சத்தை, தாங்க முடியாத வேதனையை ஏற்படுத்துவது. ஆனால் வன்முறையைச் செலுத்துகிறவர் பாவம் என்று கருதியும், வன்முறை செய்வதற்கான காரணத்தைக் கற்பித்துக்கொண்டும், சித்ரா பொறுத்துப்போனதால், வன்முறை அதிகரித்துக்கொண்டுபோனதே தவிரக்

குறையவில்லை. சித்ரா விடாமுயற்சியுடன் அருளின் மனப் பிரச்சினையைச் சரி செய்திருக்க வேண்டும். இல்லையென்றால் அருளுக்கு உணர்த்துவதற்காக வீட்டை விட்டு வெளியேறியிருக்கலாம். அல்லது அவரை வெளியேற்றியிருக்கலாம். எதுவும் செய்யாமல் வன்முறையைப் பொறுத்துக்கொண்டது இருவருக்கும் எவ்விதப் பயனையும் தரவில்லை.

குழந்தைகளையும் பாதிக்கும் வன்முறை

அஸ்வின் வந்து நின்றதைக் கூட சித்ரா கவனிக்கவில்லை. “ஐயோ, உன் லேப்டாப்பையும் உடைச்சிட்டாரா? அன்னிக்கு உன் செல்போனைக்கூட அவர்தான் தூக்கிப் போட்டு உடைச் சார்மா”என்றான் அஸ்வின். அவனை அணைத்துக்கொண்டு அழுதார்.

சித்ராவின் ‘பொறுமை’ குழந்தையையும் பாதிக்கிறது. இந்த லேப்டாப் உடைப்பு அவனுக்குப் புதிதாக இல்லை. சித்ராவால் அவள் அறியாமலே குழந்தைக்கு வன்முறை பழக்கப்படுத்தப் படுகிறது.

இப்படிபட்ட உளவியல் ரீதியான வன்முறைகளைப் பற்றி, குடும்ப வன்முறைகளிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம் பேசுகிறது. பாதிக்கப்பட்ட பெண்களைப் பாதுகாக்கிறது. நிவாரணங்களைப் பெறவும் வழிசெய்கிறது. ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் இதற்காக ஒரு பாதுகாப்பு அலுவலர் உள்ளார். அவரையோ அல்லது தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள நீதிமன்ற நடுவர்களையோ அணுகலாம். ஒவ்வொரு நீதிமன்ற வளாகத்திலும் உள்ள வட்டார, மாவட்ட, சட்டப் பணிகள் ஆணைக் குழுக்களை அணுகி, பெண்கள் இலவசமாகச் சட்ட உதவி பெறுவதுடன் வழக்கறிஞரையும்கூட நியமித்துக்கொள்ளலாம். சித்ராக்கள் தயாரா?

கட்டுரையாளர், வழக்கறிஞர்.
தொடர்புக்கு: ajeethaadvocate@yahoo.com

Tuesday, September 27, 2016

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு.. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எப்போது தெரியுமா?


டெல்லி: தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு எப்போது வெளியாகும் என்ற தகவல் கசிந்துள்ளது.

ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை பெங்களூர் தனி நீதிமன்றத்தில் சுமார் 18 வருடங்கள் நடைபெற்று வந்த நிலையில், 2014-ம் ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி தனி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா அளித்த தீர்ப்பில், ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரும் குற்றவாளி என அறிவிக்கப்பட்டிருந்தது. உடனடியாக அவர்கள் பெங்களூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதையடுத்து கர்நாடக ஹைகோர்ட்டில் மேல்முறையீடு செய்த ஜெயலலிதாவுக்கு, வழக்கில் இருந்து விடுதலை கிடைத்தது. விடுதலையை எதிர்த்து கர்நாடக அரசு மற்றும் திமுக தாக்கல் செய்த மேல்முறையீடு மனு உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தீர்ப்பு எப்போது வெளியாகும் என்ற தமிழக அரசியலில் பரபரப்பு நிலவிவரும் நிலையில், அதுகுறித்த ஒரு தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் ஆஜரான அரசு வக்கீல் பி.வி.ஆச்சார்யா தனது சுயசரிதையை ஆல் ஃபிரம் மெமரி என்ற தலைப்பில் எழுதியிருந்தார். அந்தப் புத்தகத்தில் ‘சொத்துக் குவிப்பு வழக்கில் எனக்குப் பல்வேறு தரப்பில் இருந்து நெருக்கடிகள் கொடுக்கப்பட்டன' என சொல்லியிருந்தார்.

இதை சுட்டிக்காட்டி தமிழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் பி.ரத்தினம் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதில் ‘சொத்துக் குவிப்பு வழக்கில் நெருக்கடி இருந்ததாகக் ஆச்சார்யா சொல்லியிருப்பதால் அவரிடம் விசாரணைக்கு நடத்த வேண்டும்' என கூறியுள்ளார்.

இந்த வழக்கு கடந்த 8ம் தேதி விசாரணை வந்தபோது நீதிபதிகள் பினாகி சந்திர கோஸ், அமிதவா ராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. ‘வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது' என நீதிபதிகள் குறிப்பிட்டனர். இந்த நீதிபதிகள்தான் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கை விசாரித்தவர்கள்.

‘இத்தனை நாட்களுக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைக்கக் காரணம் என்ன என ரத்தினத்தின் வழக்கறிஞர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த நீதிபதிகள் ‘ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் அடுத்த 4 வாரத்தில் தீர்ப்பு வெளியிடப்பட உள்ளது. அதனை தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை எடுத்துக் கொள்ளப் படும்' என தெரிவித்தனர். செப்டம்பர் 8ம் தேதி இவ்வாறு நீதிபதிகள் குறிப்பிட்டனர். எனவே அக்டோபர் 7ம் தேதியோ அல்லது அதற்கு முன்போ சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியாகலாம் என்று தெரிகிறது.

அப்போது தசரா திருவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கும். எனவே, விஜயதசமி, ஜெயலலிதாவுக்கு வெற்றியை தருமா அல்லது கர்நாடக அரசு தரப்புக்கு வெற்றியை தருமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இந்த வழக்கின் தீர்ப்பு 17 மற்றும் 19ம் தேதிகளில் இரு கட்டமாக நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தல் முடிவுகளில் எதிரொலிக்கும் என்பதால் அரசியல் கட்சிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனைகள் கடைசியாகப் பார்த்தது அண்ணா, கக்கனைத்தான்!



சென்னை: அது அந்தக் காலம்.. தலைவர்கள் எல்லாம் மக்களுக்கு முன்னுதாரணமாக இருந்தார்கள். மக்களும் தலைவர்களின் பாதையை பின்பற்றி நடந்தார்கள். மக்கள் நம்மைப் பார்த்து நடக்கிறார்களே என்ற விழிப்புணர்வுடன் தலைவர்களும் இருந்தார்கள்.. ஆனால் இன்று அப்படியா இருக்கிறது நிலைமை?

ஜெயலலிதா முதல் வார்டு கவுன்சிலர் வரை அரசு மருத்துவமனைகள் பக்கம் திரும்பிக் கூடப் பார்ப்பதில்லை. உடம்புக்கு முடியாவிட்டால் அப்பல்லோ முதல் ராமச்சந்திரா வரை போகிறார்களே தவிர மறந்தும் கூட அரசு மருத்துவமனைகளுக்குப் போவதில்லை.

இங்குள்ள தனியார் மருத்துவமனைகள் போதாது என்று வெளிநாடுகளுக்குப் பறந்து அங்குள்ள ஸ்டார் மருத்துவமனைகளில் உடம்பைப் பார்த்துக் கொள்கிறார்களே தவிர மருந்துக்குக் கூட அரசு மருத்துவமனைக்குப் போவதில்லை.


சூப்பர் ஸ்பெஷாலிட்டி தனியார் மருத்துவமனைகள்தான் இன்று அரசியல் தலைவர்களின் இன்னொரு புகலிடமாக உள்ளது. ஜெயலலிதாவாகட்டும், கருணாநிதியாகட்டும், ஸ்டாலினாகட்டும்.. யாராக இருந்தாலும் இதுபோன்ற ஆடம்பர தனியார் மருத்துவமனைகளுக்குத்தான் சிகிச்சைக்காக போகின்றனர்.

அதேசமயம், கையில் காசு இல்லாத சாதாரண ஜனங்களுக்கு இருக்கவே இருக்கிறது கூவத்தை ஒட்டியுள்ள அரசு பொது மருத்துவமனையும் ஆங்காங்கு உள்ள அரசு மருத்துவனைகளும். அங்கு கொசுக்கடியிலும், இருக்கிற வசதிகளையும் மட்டுமே ஏழை பாழைகள், பொது ஜனங்கள் பயன்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்றாக வேண்டும்.

ஜெயலலிதாவும் சரி, கருணாநிதியும் இதுவரை எந்த ஒரு அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றதாக வரலாறு இல்லை. சென்னை அரசு பொது மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றதாக நினைவில்லை. ஜெயலலிதா இப்போதுதான் அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கருணாநிதி முன்பு அப்பல்லோவிலும், பின்னர் போரூர் ராமச்சந்திராவிலும்தான் சிகிச்சை பெற்றுள்ளாரே தவிர அரசு மருத்துவமனைக்கு அவர் போனதாக வரலாறே இல்லை.

அண்ணா சாலையில் திமுக ஆட்சிக்காலத்தில் பிரமாண்டமாக கட்டப்பட்ட சட்டசபைக் கட்டடத்தை அப்படியே சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக மாற்றினார் ஜெயலலிதா. இங்கு இல்லாத வசதிகளே கிடையாது என்றார். ஆனால் அவரே இன்று இந்த மருத்துவமனையைப் புறக்கணித்து விட்டார். அப்பல்லோ என்ற தனியார் மருத்துவமனையில்தான் தங்கியுள்ளார்.

இப்படி அரசு மருத்துவமனகளை உருவாக்கும் தலைவர்களே அரசு மருத்துவமனைகளைப் புறக்கணித்தால் மக்கள் எப்படி அதை நம்பிப் போக முடியும் என்ற கேள்விதான் எழுகிறது. மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய இவர்களே இப்படித் தனியார் மருத்துவமனைகளை ஆதரித்தால் அரசு மருத்துவமனைகள் எப்படி தேறும்.. எப்படி மக்களிடம் மதிப்பு பெறும்.

அண்ணா, கக்கன், காமராஜர் போன்ற தலைவர்கள் எல்லாம் அரசு மருத்துவமனைகளைத்தான் அதிகம் பயன்படுத்தினர். அதிலும் கக்கன் கடைசி வரை தனியார் மருத்துவமனை பக்கமே திரும்பிப் பார்க்காத உன்னத தலைவர். அவரது இறுதிக் காலம் கூட சந்தடியே இல்லாமல் அரசு மருத்துவமனையில்தான் முடிந்தது. அந்தத் தலைவர்களுக்குப் பிறகு எந்தத் தலைவரும் அரசு மருத்துவமனைக்கு வந்ததாக வரலாறே இல்லை என்கிறார்கள்.

கக்கன் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆதரவற்ற நிலையில் உள்ளார் என்று அறிந்ததும் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். ஓடிச் சென்று நல்ல சிகிச்சை பெறலாம் வாருங்கள் என்று காலில் விழாத குறையாக கூப்பிட்டாராம். ஆனால் கக்கன் சிரித்தபடி மறுத்து விட்டாராம். எல்லோரும் இங்கு நம்ம மக்கள்தான். அவர்களுக்குக் கிடைக்கும் சிகிச்சையே எனக்கும் கிடைக்கட்டும் என்று கூறி விட்டாராம். அவர் எப்படிப்பட்ட தலைவர்?

நல்ல வசதிகளுடன் கூடிய மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது என்பது முக்கியம்தான். அவசியமும் கூட. உயிர் விஷயத்தில் யாரும் ரிஸ்க் எடுக்க முடியாதுதான். ஆனால் அரசாங்கமே அதி நவீன மருத்துவமனை, எல்லா வசதியும் உண்டு என்று கூறிய ஒரு மருத்துவமனையை அந்த அரசே புறக்கணிப்பது மக்கள் மனதில் நம்பிக்கையை உருவாக்கத் தவறி விடும் என்பதை உணர வேண்டாமா.

அரசியல் தலைவர்கள் வெறும் வாய்ப்பேச்சாக இல்லாமல் அவர்கள் மக்களுக்கு நம்பிக்கை ஊட்டும் நல்ல தலைவர்களாகவும் திகழ வேண்டியது நிச்சயம் முக்கியானது, சமூகத்திற்கு ஆரோக்கியமானது.



வெள்ளிக்கு 50 கோடி டீல்... தங்கத்துக்கு தகரடப்பா!


ரியோ ஒலிம்பிக்கில் தமிழகத்தின் சார்பில் பங்கேற்றது 6 வீரர்கள். அவர்களால் எந்த பதக்கமும் வெல்ல முடியவில்லை. ஆனால், பாராலிம்பிக்கில் இந்தியாவுக்காக முதல் தங்கம் வென்று சாதனை படைத்தார் மாரியப்பன். ஆங்கில ஊடகங்கள் முதற் கொண்டு அந்த நேரத்தில் மாரியப்பன் மாரியப்பன் என ஓயாமல் நீட்டி முழங்கிக் கொண்டிருந்தன. ரியோ ஒலிம்பிக்கில் குட்டி குட்டி நாடுகள் கூட பீல்டு அண்டு டிராக் ஈவன்ட்டுகளில் அதாவது உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், தடை தாண்டுதல், 100 மீட்டர் ஓட்டம் போன்றவற்றில் தங்கப் பதக்கம் வெல்வதை காண முடிந்தது. குட்டி நாடு பிஜீ, காலம் காலமாக அடிமைப்பட்டுக் கிடந்த பிரிட்டனைச் சாத்து சாத்தென்று சாத்தி ரக்பி செவன்சில் தங்கத்தைக் கைப்பற்றி ஆர்ப்பரித்தது.

இந்த ஒலிம்பிக் சீசனை பொறுத்தவரை மாரியப்பன் அடைந்த வெற்றி ரியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்றதற்கு சமமான ஒன்றுதான். பாராலிம்பிக்கர் என்ற வகையில் மாரியப்பனுக்கு கிடைத்தது வெறும் இரண்டே முக்கால் கோடிதான். சிந்துவைப் பொறுத்த வரை, இரு மாநிலங்களும் போட்டி போட்டுக் கொண்டு கோடிக் கணக்கில் பரிசுகளை அள்ளி வழங்கின. தனியார் நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு பரிசுகளை கொடுத்தன. சச்சின் தலைமையில் சிந்து, சாக் ஷி, தீபா, சிந்துவின் பயிற்சியாளர் கோபிச்சந்த் ஆகியோருக்கு பிஎம்டபிள்யூ கார் பரிசாக வழங்கபப்பட்டது. இதில் எதுவும் தவறில்லை.

இதுவெல்லாம் ஒரு பக்கம் என்றால், இப்போது சிந்துவுக்கு ரூ. 50 கோடிக்கு மேல் விளம்பர ஒப்பந்தங்கள் குவிந்துள்ளன. இதனால், சிந்துவின் விளம்பர விவகாரங்களை பேஸ்லைன் வென்ச்சர்ஸ் ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட் நிறுவனம் கவனிக்க உள்ளது. சிந்துவின் புகைப்படங்கள் உரிமம் முதற்கொண்டு , இந்த நிறுவனத்திடம்தான் 3 ஆண்டுகளுக்கு இருக்கும். முதற்கட்டமாக 9 நிறுவனங்கள் சிந்துவை ஒப்பந்தம் செய்துள்ளன. மேலும், 7 நிறுவனங்கள் சிந்துவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. முதன்முறையாக இந்தியாவில் கிரிக்கெட் சாராத ஒரு விளையாட்டு வீராங்கனை இவ்வளவு தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பது இப்போதுதான். சிந்துவின் திறமைக்கு கொடுக்கப்பட வேண்டியதுதான் மறுக்கவில்லை. அதே வேளையில், கிட்டத்தட்ட அதற்கு ஈடான முயற்சிகள் செய்துதானே மாரியப்பன் போன்றவர்கள் தங்கம் வென்றிருக்கின்றனர்.



மாரியப்பன் பின்னணி தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல இந்த உலகத்துக்கே தெரியும். மாரியப்பனை விடுங்கள். அழகிகளை ஒப்பந்தம் செய்ய வாரி வழங்கும் இந்திய நிறுவனங்களுக்கு பெரும்பாலான தடகள வீராங்கனைகளின் வாழ்க்கைப் பற்றித் தெரியுமா?. தீவிர பயிற்சி காரணமாக தடகள வீராங்கனைகள் பெண்மைக்குரிய அடையாளங்களையே இழக்கிறார்கள். அவர்களது முகத்தைப் பார்த்தால் தெரியும். உடலைப் பார்த்தால் தெரியும். நரம்பு முறுக்கேறிய கைகளைப் பார்த்தாலும் புரியும். சில சமயங்களில் குழந்தை பெற்றுக் கொள்வது கூட சிரமம்தான்.ஜெயிக்கிறார்களோ தோற்கிறார்களோ அதற்காக அவர்கள் கொடுக்கும் விலை ஈடு செய்ய முடியாத விஷயம்.

இந்த ஒலிம்பிக்கில் 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ் பிரிவில் லலிதா பாபர் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். அவருக்கு 10 லட்சம் கூட கொடுக்க எந்த நிறுவனமும் முன்வரவில்லை. தண்ணீர் கூட தரவில்லை என்று ஜெய்சா கதறினார். இப்போது எப்படி இருக்கிறார் என்ற நினைப்பே இல்லை. தமிழகத்தைச் சேர்ந்த வீரர் கணபதி. ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மொத்தச் சம்பளமே 20 ஆயிரம் ரூபாய்தான். அதில்தான் தனது குடும்பத்தையும் பார்த்துக் கொண்டு தனது பயிற்சிக்கான செலவுகளையும் பார்த்துக் கொண்டார். பயிற்சிக்காக இவர் வாங்கிய வங்கிக்கடன் 3 லட்சம். இன்னும் கட்டி முடிக்கப்படவில்லை. இவரும் ஒரு ஒலிம்பியன்தான். ஒலிம்பியன் என்ற பெயரோடு ஒளிந்து கிடக்கிறார். அடுத்த ஒலிம்பிக்கிற்கு இன்னும் கடன் வாங்குவார். கடைசியில் வட்டி கட்ட முடியாமல் போகும்.

இந்தியாவின் சமச்சீரற்ற பொருளாதாரம் போலத்தான் சமச்சீரற்ற விளையாட்டுத்துறையும். ஒரே பக்கம் பணம் சேர்வது போல... ஜெயித்தால் ஒரே அடியாக அவர்கள் கால்களில் பணத்தைக் கொண்டு கொட்டுவார்கள். விளம்பரம் விளம்பரம் என்று பின்னாலேயே அலைவது. ஜெயிப்பவர்கள் மட்டும் கண்ணுக்கு தெரிவதால், தோற்பவர்கள் காணாமலேயே போய் விடுகிறார்கள். அந்த வீராங்கனையை வைத்து அடுத்த தலைமுறையும் அந்த விளையாட்டுகளில் மட்டுமே கவனம் செலுத்தும். அதில் மட்டும் கொஞ்சம் வீரர்- வீராங்கனைகள் உருவாகி வருவார்கள். மற்ற விளையாட்டுகள் கொஞ்சம் கொஞ்சமாக செத்துப் போய்க் கொண்டிருக்கும். கிரிக்கெட்டுக்கு அள்ளிக் கொடுத்தார்கள் இந்தியாவில் கால்பந்து, ஹாக்கி, கைப்பந்து போன்ற விளையாட்டுகள் காணாமலேயே போய் விட்டன.

இதனால்தான் குத்துச்சண்டை வீரர் விஜேந்திர சிங், ''நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒலிம்பிக் சமயத்துலத்தான் எங்களையெல்லாம் உங்களுக்கு நினைவுக்கு வருமோ? மத்த சமயத்துல நாங்க இருக்கோமா செத்தோமானுகூட பார்க்க மாட்டீங்கனு.'' காட்டமாகக் கேட்டார். ஆப்ரிக்காவில் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றதால், தனது கிராமத்துக்கே மின்சாரம் பெற்றுத் தந்தார் ஒரு தடகள வீராங்கனை. அந்த நாட்டை விட பல மடங்கு பொருளாதார பலமும் வசதியும் திறமையும் உள்ள நாடு இது. ஆனால், இங்கே என்ன நடக்கிறது. ஒவ்வொரு விஷயத்திலும் அரசியல். விளையாட்டுக்கு கொஞ்சமும் தொடர்பில்லாத விளையாட்டு அமைப்புத் தலைவர்கள். இதையெல்லாம் விட ஜெயித்தால் ஸ்பான்சர்ஷிப் என்ற பெயரில் பணத்தைக் கொட்டிக் கொடுப்பது. இதனால், சில பேட்மின்டன் வீரர்கள் உருவாகி வரலாம். சிந்துவும் பணத்தில் கொழித்து விடலாம். ஆனால், லலிதா பாபர் போன்ற தடகள வீராங்கனைகள்?

எல்லாரையும் சமமாக நடத்துங்கள். வெற்றியோ தோல்வியோ... பங்குபெற்றவர்களைக் கொண்டாடுங்கள். அதற்காக அவர்கள் கொடுத்த விலை.. மதிப்பிடமுடியாதது என உணருங்கள். இருக்கும் கொஞ்ச நஞ்ச தடகள வீரர் -வீராங்கனைகளை அடையாளம் தெரியாமலேயே செய்து விடாதீர்கள்!

-எம். குமரேசன்

விமானத்தில் வைஃபை?


THE HINDU

முன்பெல்லாம் விமான போக்குவரத்துதுறை பற்றி யாரும் பெரியதாக கண்டு கொண்டதில்லை. அந்த துறையைப்பற்றி பேசுவதற்கு காரணம் இல்லை, கைக்கு எட்டாத தூரத்தில் இருந்தது தவிர இந்த துறையில் பெரிய போட்டியும் இல்லை. ஆனால் இப்போதைய நிலைமை வேறு. இந்த துறையில் போட்டி அதிகரித்துள்ளது. அதன் காரணமாக சலுகை விலையில் டிக்கெட் கிடைக்கிறது என்பதால் நடுத்தர மக்களும் பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். சர்வதேச அளவில் விமான போக்குவரத்து வேகமாக வளரும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகத் திகழ்கிறது.

விமானத்தில் செல்வது ஆடம்பரமாகத் தெரிந்தாலும், அடிக்கடி செல்பவர்களிடம் கேட்டால்தான் தெரியும் அவர்களின் அவஸ்தையை. மூன்று மணிநேரம் போன் பயன்படுத்த முடியாது. பக்கத்தில் இருப்பவர்களிடம் பேச முடியாது. படிக்கிற பழக்கம் இருப்பவர்கள் படிக்கலாம். அந்த பழக்கமும் இல்லை என்றால் அந்த பயணம் போர்தான்.

வாடிக்கையாளர்களைத் தக்கவைத் துக் கொள்வதற்கும், அவர்களுக்கு கூடுதல் வசதி வழங்குவதற்கும் விமான நிறுவனங்களிடையே போட்டி நடக்கிறது. இப்போது வைஃபை வசதியை அறிமுகப்படுத்துவது குறித்த பேச்சு எழுந்திருக்கிறது. சர்வதேச அளவில் 2009-ம் ஆண்டே இந்த வசதி இருந்தாலும் இந்திய நிறுவனங்கள் இப்போதுதான் இது குறித்து பேச ஆரம்பித்திருக்கின்றன.

விமானங்களில் வைஃபை வசதி அளிப்பதற்கு விமான போக்குவரத்து அமைச்சகம் இன்னும் அனுமதிக்கவில்லை. விமான போக்குவரத்து துறை செயலாளர் ஆர்.என்.சௌபே இம்மாத தொடக்கத்தில் கூறும்போது இன்னும் சில நாட்களில் இது குறித்து நல்ல செய்தி வரும் என்று கூறியிருந்தார். ஆனால் இதுவரை இது குறித்த விதிமுறைகள் வெளியிடப்படவில்லை.

விமானங்களில் வைஃபை வசதி குறித்து விமான நிறுவனங்களிடையே மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் வைஃபை வசதிக்கு அரசு அனுமதிக்கும் பட்சத்தில் அது குறித்து பரிசீலனை செய்வோம் என்று குறிப்பிட்டிருக்கிறது. ஆனால் அதற்கு முன்பாக 220 மணி நேரத்துக்கு பொழுதுபோக்காக இலவச செயலியை வெளியிட்டிருக்கிறது. வரும் மார்ச் 2017 முதல் இந்த செயலியை பயன்படுத்த முடியும். இது வைஃபை வசதி இல்லை என்றாலும் விளையாட்டு, திரைப்படங்களை வாடிக்கையார்கள் பார்த்து ரசிக்க முடியும்.

இண்டிகோ நிறுவனம் கூறும்போது இந்தியாவில் அதிகபட்ச பயண நேரம் சுமார் மூன்று மணிநேரம். இதற்கு ஏன் அதிக செலவு பிடிக்கும் வைஃபை வசதியைச் செய்ய வேண்டும் என்று சில மாதங்களுக்கு முன்பு கூறியிருந்தது. பட்ஜெட் விமான நிறுவனங்கள் இந்த வசதியை செய்யும் போது டிக்கெட் கட்டணங்களை மாற்றி அமைக்க வேண்டி இருக்கும் என்று ஸ்பைஸ்ஜெட் கூறியிருக்கிறது.

ஆனால் விஸ்தாரா நிறுவனம், இது ஒரு சாதகமான மாற்றம். அரசு கொள்கை முடிவுகளை அறிவிக்கும் பட்சத்தில் இந்த திட்டத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்ல முடியும் என்று கூறியிருக்கிறது. இது செலவு பிடிக்கும் விஷயம், அதனால் உள்நாட்டு விமானங்களில் இது தேவையா என்னும் முடிவை எடுக்கவில்லை. ஆனால் வெளிநாடுகளுக்கு செல்லும் விமானங்களில் இது தேவை என்று கூறியிருக்கிறது.

புதிதாக வரும் மாற்றத்தை எதிர்கொள்ள தயாராக ஏர் ஏசியா இந்தியா இருக்கிறது. இதன் தாய் நிறுவனமான ஏர் ஏசியா மலேசியா சில குறிப்பிட்ட வழித்தடங்களில் வைஃபை வசதியை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

செயற்கைக்கோளுடன் சர்வர்களை இணைக்கும்பட்சத்தில்தான் விமானங் களில் வைஃபை வசதி கொடுக்க முடியும். விமானங்களில் வைஃபை வசதி செய்து தரக்கூடிய முக்கியமான நிறுவனம் கோகோ. மத்திய அரசு அனுமதி அளித்தாலும் அதிக செலவாகும் விஷயம் என்பதால் இந்திய நிறுவனங்கள் இந்த சேவையை இலவசமாக வழங்குமா அல்லது கட்டணம் வசூலிக்குமா? எவ்வளவு என்பது இன்னும் சில மாதங்களில் தெரிந்துவிடும்.

சர்வதேச அளவில் சில விமான நிறுவனங்கள் இலவச வைஃபை சேவை வழங்குகின்றன. சில விமான நிறுவனங்கள் ஒரு மணி நேரத்துக்கு என கட்டணம் வசூலிக்கின்றன. உதாரண மாக இங்கிலாந்தில் சராசரியாக 6 மணி நேரத்துக்கு 30 பவுண்ட் வசூலிக்கிறார்கள். அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தில் தினசரி மாதாந்திர பாஸ்களும் வழங்கப்படுகின்றன. சில விமான நிறுவனங்கள் குறிப்பிட்ட ஜிபி வரை இலவசமாக வழங்குகின்றன.

இன்னும் சில மாதங்களில் வாடிக்கை யாளர்களை கவரும் உத்திகளில் ஒன்றாக வைஃபை இருக்கப்போகிறது.

மது போதையால் தொடரும் கார் விபத்துகள்: குற்றவாளிகளை உடனே தண்டிக்க சட்டத்திருத்தம் வருமா?


சாலை விபத்துகளுக்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் போதையில் கார் ஓட்டுவது முக்கிய காரணமாக உள்ளது. தமிழகத்தில் 2014-ல் 67,250 சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இதில், 15,190 பேர் பலியாகி உள்ளனர். கடந்த ஆண்டு 69,059 விபத்துகளில் 15,642 பேர் உயிர் இழந்துள்ளனர். ஆயிரக் கணக்கானோர் காய மடைந்து முடங்கியுள்ளனர். எதிர்பாராமல் நடக்கும் விபத்துகள் ஒருபுறம் இருக்க, தற்போது சென்னையில் குடிபோதையில் கார் ஓட்டி நடக்கும் விபத்துகள் அதிகரித்துள்ளன.

மெரினாவில் நின்றிருந்த போலீஸ்காரர் சேகர், மீன் வியாபாரி திலகவதி மற்றும் அர்ஜுனன் ஆகியோர் மீது 3 ஆண்டுகளுக்கு முன்னர் கார் மோதியது. இதில், அனைவரும் பலியாகினர். போதையில் கார் ஓட்டிய அன்பு சூரியன் கைதானார். சில ஆண்டுகளுக்கு முன்னர் பிரபல தொழில் அதிபரின் மகன் ஷாஜி என்பவரது சொகுசு கார் மோதியதில் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை அருகே நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்த முனிராஜ் (12) என்ற சிறுவன் உயிரிழந்தான்.

கடந்த பிப்ரவரியில் ஈரோட்டை சேர்ந்த தொழில் அதிபர் முகமது சபீக் அண்ணாசாலையில் போதை யில் ஓட்டிய கார் மோதி ராயபுரம் கெவின்ராஜ் (25) பலியானார். திருவான்மியூர், பழைய மகாபலிபுரம் சாலையில் கடந்த ஜூலை 2-ம் தேதி வேகமாக வந்த சொகுசு கார் மோதியதில் முனுசாமி என்பவர் பலியானார். போதையில் கார் ஓட்டிய தொழில் அதிபர் மகள் ஐஸ்வர்யா கைதானார்.

ஆழ்வார்பேட்டையில் சில தினங்களுக்கு முன்னர் கார் பந்தய வீரர் விகாஷ் போதையில் ஓட்டிய சொகுசு கார் மோதி திருத்தணியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஆறுமுகம் மரணமடைந்தார். சில தினங்களுக்கு முன்னர் திரைப்பட நடிகர் அருண் விஜய் போதையில் கார் ஓட்டி போலீஸ் வாகனம் மீது மோதி விபத்தை ஏற்படுத்தினார். இப்படி சென்னையில் போதையில் கார் ஓட்டி விபத்துகள் நடப்பது அதிகமாகி வருகிறது.

இந்த சாலை விபத்துகளில் பலியானோரின் குடும்பங்கள் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள் ளன. ஆனால், விபத்தை ஏற்படுத்தி யவர்கள் நீதிமன்றம் வாயிலாக ஜாமீன் பெற்று சுதந்திரமாக வெளியே உலவுகின்றனர். எனவே, குற்றவாளிகளை உடனே தண்டிக் கும் வகையில் உடனடி சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் கே.எஸ் ராஜூ கூறியதாவது:

விபத்து ஏற்படுத்தி உயிர் இழப்பை ஏற்படுத்தினால், இந்திய தண்டனைச் சட்டம் 304 ஏ (அஜாக்கிரதையாக செயல்பட்டு மரணம் ஏற்படுத்துதல்) என்ற பிரிவில் வழக்கு பதியப்படுகிறது. இதற்கு அதிகபட்சம் 2 ஆண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படுகிறது. மேலும் சில பிரிவுகளும் கூடுதலாக இணைக்கப்படுகின்றன. ஆனால், குற்றம்சாட்டப்பட்டவர் ஜாமீனில் உடனே வெளியே வந்து விடுகிறார்.

இந்த விபத்துகளில் பாதிக்கப் பட்டவரின் குடும்ப பின்னணி பரிதாபமாக இருக்கும். அவர் களுக்கான இழப்பீடும் உடனடி யாக அல்லது போதுமானதாக இருப்பதில்லை. எனவே, குற்ற வாளிகளை உடனே தண்டிக்கும் வகையிலும், பாதிக்கப்பட்ட வர்களின் குடும்பத்துக்கு அதிக இழப்பீடு கிடைக்கும் வகையிலும் உடனடி சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும்

இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து சென்னை போக்கு வரத்து இணை ஆணையர் பவானீஸ்வரி கூறும்போது, “போதையில் வாகனம் ஓட்ட கூடாது என்பதை வலியுறுத்தி தற்போது விழிப்புணர்வு பிரசாரத்தை தீவிரப் படுத்தியுள்ளோம். துண்டு பிரசுரங் கள் விநியோகிக்கப்பட்டு வருகின் றன. போதையில் வாகனம் ஓட்டு பவர்களை கண்டறிந்து அபராதம் விதிக்க போக்குவரத்து போலீ ஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார்.

Monday, September 26, 2016

மனமே நலமா? - எங்கே போனது அந்தக் குழந்தையின் கரிசனம்?

டாக்டர் எம்.எஸ். தம்பிராஜா
வெப்பத்தோடும் புழுக்கத்தோடும் பேருந்து ஒன்றில் பயணம் செய்துகொண்டிருந்தேன். ஒரு குழந்தை முகத்தைச் சுழித்து, கண்களை இறுக மூடிக்கொண்டு, உச்ச ஸ்தாயியில் 'வீர் வீர்'ரென்று கத்த ஆரம்பித்தது. குழந்தையின் அம்மாவும் எவ்வளவோ சமாதானம் செய்து பார்த்தார். குழந்தையின் அழுகை குறைந்தபாடில்லை. சுற்றி இருந்தவர்கள் செய்வதறியாது வெறுமனே திகைத்து நின்றனர். அந்த அம்மாவின் முகம் அவர்களிடம் மன்னிப்பு கேட்கும் தோரணையில் வாடிக் கிடந்தது.

அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. பக்கத்தில் தன் தாயின் இடுப்பில் உட்கார்ந்திருந்த இன்னொரு குழந்தை, தன் வாயில் இருந்த ரப்பர் உறிஞ்சியை எடுத்து, அழுதுகொண்டிருந்த குழந்தையிடம் நீட்டியது. அழுத குழந்தை ஒரு கணம் அழுகையை நிறுத்தி, தனக்கு உதவி செய்யவந்த குழந்தையை ஆச்சரியத்துடன் பார்த்தது. இந்த மகத்தான தயாள குணத்தைக் கண்ட நான், அந்தக் குழந்தையின் தாயிடம் குழந்தைக்கு எத்தனை வயது என்று கேட்டேன். இரண்டு வயது என்றார் அவர்!

மற்றொருவரின் மனநிலையை உணர்ந்துகொள்ளும் இந்த மானுடப் பண்பு, உளவியலில் ஒத்துணர்வு (empathy) எனப்படுகிறது. இது இரண்டாவது வயதிலேயே தோன்றிவிடுவது எத்தனை ஆச்சரியம்?

வளர்ச்சிக் கோலங்கள்

குழந்தைகளின் வளர்ச்சிப் போக்கில் ஏற்படும் புலன் சார்ந்த உடல், உளவியல் மாற்றங்கள் குறித்துப் பல ஆராய்ச்சிக் கண்டுபிடிப்புகள் தரும் வியப்புகள் குறைவதேயில்லை. கருவில் உள்ள சிசுவுக்கு, ஆச்சரியப்படும் பல திறன்கள் உள்ளதாக ஆராய்ச்சிகள் நிறுவியுள்ளன. பார்வையைத் தவிர மற்ற புலன் உணர்ச்சிகள் யாவும், கருவில் இருக்கும்போதே வளர்ச்சி பெற்றுவிடுகின்றன.

வெளிக்காற்றை சுவாசித்த நாள் முதல், தன் தாயின் குரலைக் குழந்தையால் இனம் கண்டுகொள்ள முடிகிறது. மற்ற பெண்களின் குரலைவிட தன் தாயின் குரலை நீண்ட நேரம் கவனிப்பதிலிருந்து, இது தெரியவருகிறது. கருப்பையில் இருக்கும்போது தன் தாயின் குரலைக் கேட்பதால், அதைப் பின்னாளில் சரியாக அடையாளம் காணவும் முடிகிறது. இப்போதெல்லாம் கர்ப்பத்தின்போது, புத்திசாலித் தாய்-தந்தைகள் கருப்பையில் இருக்கும் குழந்தையுடன் பேசுவதும் தாலாட்டுப் பாடுவதும் வழக்கத்துக்கு வந்துவிட்டன.

இதேபோல, புதிதாகப் பிறந்த குழந்தை தாயின் வாசனையை வைத்து, தன் தாயை அடையாளம் கண்டுகொள்கிறது. கர்ப்பத்தில் இருக்கும் சிசுவுக்குச் சுவையை உணரும் திறனும் உண்டு. இதனால் கர்ப்பக் காலத்தில் தாய் உண்ணும் உணவு வகைகளில், குழந்தைகளுக்குப் பின்னாளில் அதிக நாட்டம் ஏற்படுகிறது என்பதும் தெரியவந்துள்ளது.

பிறந்த முதல் சில ஆண்டுகளில் குழந்தைகளிடம் காணப்படும் உளவியல் வளர்ச்சியும் பிரமிக்கத்தக்கதாகவே உள்ளது. மழலைக் குழந்தைகள் சுமார் 12 மாதங்களில் (‘அம்மா', ‘அப்பா' என்ற சொற்களைத் தவிர்த்து) கூடுதல் சொல்லைப் பேசும் ஆற்றலைப் பெறுகிறார்கள். ஐந்து வயதில் அதே குழந்தையால் கிட்டத்தட்ட வயது வந்தவர்களைப் போலவே தெளிவாகப் பேச முடிகிறது. அதாவது, நான்கே ஆண்டுகளில் எவரும் முறைப்படியாகக் கற்றுக்கொடுக்காமலே, இந்தப் பேச்சுத் திறன் வளர்ச்சி பெற்றுவிடுகிறது. இது குழந்தைப் பருவத்தின் மாபெரும் சாதனையாகக் கருதப்படுகிறது.

கேளா ஒலிகள்

பிறந்த சில மாதங்கள்வரை, உலகின் எல்லா மொழிகளில் உள்ள பேச்சு ஒலிகளையும் கற்றுக்கொள்ளும் ஆற்றல் எல்லாக் குழந்தைகளுக்கும் உண்டு. ஆனால், நாள் போகப்போக இந்த ஆற்றல் குறைந்துவிடுகிறது. பத்து மாதங்களில் தாங்கள் கேட்கும் மொழியை, அதாவது தனது தாய்மொழியில் உள்ள ஒலிகளை மட்டுமே, அவர்களால் உணர்ந்துகொள்ள முடிகிறது. முதல் 10 மாதங்களில் கேட்காத ஒலிகளை, திரும்ப ஒலிக்கும் திறனைக் குழந்தைகள் இழந்துவிடுகின்றன.

இதனால்தான் ஜப்பானியர்களால் ‘ர' என்ற ஒலியை உச்சரிக்க முடிவதில்லை; அவர்கள் ‘ர' என்ற ஒலியை, ‘ல' என்றே உச்சரிக்கிறார்கள். உதாரணமாக, ராதா என்ற பெயரை லாதா என்கிறார்கள். வங்க மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ‘வங்கம்' என்பதை ‘பங்கா' என்று சொல்வதும் இப்படித்தான். அவர்கள் ‘வ' ஒலிக்குப் பழக்கப்படவில்லை. வயது வந்த பின் இரண்டாம் மொழியாக ஆங்கிலம் கற்பவர்களின் ஆங்கில உச்சரிப்பு, பிரிட்டன் ஆங்கிலேயர்களின் உச்சரிப்புபோல ஏன் இருப்பதில்லை என்பதை இதிலிருந்து புரிந்துகொள்ளலாம்!

மனிதருக்குப் பேச்சுத் திறன் உடன்பிறந்த ஒன்று. ஆனால், வாசிப்புத் திறன் (படிப்பு என்பதும் வாசிப்பு என்பதும் வித்தியாசமானவை என்பதில் சந்தேகம் தேவையில்லை) அப்படி அல்ல; அது பெற்றுக்கொள்ளப்படும் பண்பு (வாசிக்கத் தெரியாதவர்கள் எத்தனையோ பேர் உலகத்தில் இருக்கிறார்கள்). எனவே, முறைசார்ந்த கல்வி வழியாகவே, வாசிப்பைக் கற்றுக்கொள்கிறோம்.

இரண்டாம் வயதிலேயே குழந்தைகளிடம் ஒத்துணர்வு உணர்ச்சி தோன்றிவிடுகிறது என்பதைத் தொடக்கத்தில் கூறியிருந்தேன். ஒத்துணர்வு என்பது ‘ஐயோ பாவம்' என்று அனுதாபப்படுவதில் இருந்து வித்தியாசமானது என்பதை மறந்துவிடக் கூடாது. ஒத்துணர்வு என்பது வேறு, பரிவு அல்லது இரக்கம் (sympathy) என்பது வேறு. மற்றவர் இடத்தில் தன்னை நிறுத்திப் பார்த்து, அவர்கள் படும் வேதனையைத் தான் அனுபவிப்பதாக உணர்வதுதான் ஒத்துணர்வு. இதன் அடுத்த கட்டம்தான், அதைத் தீர்க்கத் தானாக உதவ முன்வருவது; இது பொதுநலப் பண்பு (altruism) எனப்படுகிறது.

இந்த இரண்டு மாபெரும் மானுட குணங்களும் நம்மோடு உடன்பிறந்தவை என்பதை, பேருந்தில் நான் கண்ட அந்தக் குட்டியூண்டு இரண்டு வயதுக் குழந்தை எனக்கு உணர்த்தியது. அதேநேரம், எந்தப் புள்ளியில் இந்த உணர்வை நாம் இழந்துவிடுகிறோம் என்பது தீவிரச் சிந்தனைக்குரியது.

- டாக்டர் எம்.எஸ். தம்பிராஜா

கட்டுரையாளர், மனநல மருத்துவர் மற்றும் முன்னாள் பேராசிரியர்
தொடர்புக்கு: ibmaht@hotmail.com

Sunday, September 25, 2016

காதல் வழிச் சாலை 02: பார்த்ததுமே பற்றிக்கொள்ளுமா?


தன்னுடன் படிக்கும் மாணவன் மீது நதியாவுக்கு ஏற்பட்டிருப்பது என்ன? நதியாவுக்கு மட்டுமல்ல, நதியாவின் வயதில் உள்ள இளைய சமூகத்தினருக்கு எதிர்பாலினத்தவர் மீது ஏற்படும் உணர்வுக்கு என்ன பெயர்? ஈர்ப்பு. ஆணிடம் பெண்ணுக்கும், பெண்ணிடம் ஆணுக்கும் பார்த்ததுமே ஏற்படுகிற அழகான உணர்வே இந்த ஈர்ப்பு. ஆங்கிலத்தில் இதை ‘இன்ஃபாச்சுவேஷன்’ என்று சொல்வோம்.

தயக்கமும் வெட்கமும் கலந்த ஒரு குறும்புப் புன்னகை முகத்தில் குடிகொள்ளும். அவர்களை நினைக்கும்போதே உடல் முழுக்கச் சிலிர்ப்பு பரவும். பசி மறந்துபோகும், தூக்கம் தொலைந்துபோகும். அவர்கள் வந்துபோகிற ஒவ்வொரு காலைப் பொழுதும் மிகவும் ரம்மியமாகக் காட்சிதரும். அவர்களைத் தவிர இந்த உலகில் வேறு எதுவும் கண்ணுக்குத் தெரியாது. அதனாலேயே வேறு எதையும் பார்க்கத் தோன்றாது. அவர்களது நடை, உடை, சின்னத் தவறு, செல்லக் கோபம் என்று எல்லாமே பிடித்துப்போகும்.

கண்டதுமே காதலா?

தன்னையே மறக்கிற அளவுக்கு ஒருவரைப் பிடிக்கிறதே, இது காதலா என்றால் நிச்சயம் இல்லை. கண்டதுமே காதல் சத்தியமாக வராது. திரைப்படங்களில் வரலாம், தொலைக்காட்சித் தொடர்களில் வரலாம். ஆனால் வாழ்க்கை என்னும் முழுநீளப் படத்தில் கண்டதுமே காதல் பெரும்பாலும் சாத்தியமில்லை. இங்கே ‘லவ் அட் ஃபர்ஸ்ட் சைட்’ இல்லை. கண்டதுமே ஈர்ப்பு மட்டும்தான் ஏற்படும்.

காதலுக்கும் ஈர்ப்புக்கும் நிறைய வேறுபாடு உண்டு. காதல் ஆழமானது. ஈர்ப்பு மேலோட்டமானது. காதல் புற அழகைத் தாண்டியும் ஆழமான நேசம் கொண்டது. பிடித்தவர்கள் மீது நிபந்தனையற்ற அன்பு வைப்பதும், அவர்களின் சுக துக்கங்களில் சரிபாதி பங்கெடுத்துக் கொள்வதும், அவர்களுக்காக விட்டுக்கொடுக்கத் தயங்காமல் இருப்பதுமே காதலாக அறியப்படுகிறது. ஆனால் ஈர்ப்பு புற அழகை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. அகம் எப்படி இருக்கும் என்ற தேடலோ அக்கறையோ இல்லாதது.

ஈர்ப்பு என்பது கண நேரப் பரவசமும் மகிழ்ச்சியும் தருவது. அதைக் காதலுடன் போட்டுக் குழப்பிக்கொள்கிறவர்கள் இங்கே அதிகம். அப்படியொரு குழப்பம்தான் நதியாவுக்கும். அதனால்தான் சக மாணவர்மீது அவருக்கு ஏற்பட்ட ஈர்ப்பை என்னவென்றே இனம் காணமுடியாமல் குழம்பினார். பருவ வயதின் இனிய இம்சைகளில் இந்த ஈர்ப்பு முதன்மையானது.

தீபாவளியின்போது நாம் கொளுத்தும் புஸ்வாணம் போன்றது ஈர்ப்பு. நெருப்புப் பற்றியதுமே சடசடவென தீப்பூக்கள் உயர்ந்து சிதறும். அடுத்த நொடியே அடங்கிப் போகும். அப்படித்தான் ஈர்ப்பும். அந்த வயதில் பட்டென்று பற்றிக்கொண்டு உடல் முழுக்கப் பரவசத்தைத் தரும். ஆனால் அதற்கு நீடித்த ஆயுள் கிடையாது. இதைப் புரிந்துகொள்ளாமல் பலரும் அது மிகப் பெரிய உன்னத உணர்வு என்று நினைத்துப் புலம்புவார்கள்.

பொய்களும் அழகே

இன்னொரு விஷயம் தெரியுமா? காதல் உண்மையானது. அதற்குப் போலித்தனம் எதுவும் தேவையில்லை. ஆனால் ஈர்ப்புக்குச் சின்னச் சின்னப் பொய்களும் நடிப்பும் தேவைப்படும். எதிர்பாலினத்தவரைக் கவர வேண்டும், அவர்கள் முன்னால் ஹீரோ அல்லது ஹீரோயின் போலத் தெரிய வேண்டும் என்பதற்காக இல்லாத வித்தையை எல்லாம் செய்யச் சொல்லும். நம்முடைய இயல்பைக் கொஞ்சம் மாற்றிக்கொண்டு நடிக்கச் சொல்லும். நம் சுயத்தை இழந்து அல்லது மறைத்து நடிக்கிறோம் என்ற குற்றவுணர்வு அங்கே தோன்றாது. காரணம் ஈர்ப்பு என்பது மேலோட்டமானது. அந்த நேரத்து மகிழ்ச்சியை மட்டுமே வேண்டுவது.

ஈர்ப்பில் எல்லாமே உடனுக்குடன் தேவைப்படும். ஒரு நாள் பார்க்கவில்லை என்றால், பேசிக்கொள்ளவில்லை என்றால் அந்த நாளே நரகமாகத் தெரியும். பெரிதாக ஏதோவொன்றை இழந்தது போல சோகம் சூழும். பிரியும்போது பதற்றம் ஏற்படும். மீண்டும் எப்போது சந்திப்போம் என்ற பரிதவிப்பு தொடரும். இதெல்லாம் ஈர்ப்பின் விளைவுகள். ஆனால் காதல் அப்படியல்ல. விலகிச் சென்றாலும் நெருங்கி வருவதே காதல்.

எதிர்பாலினக் கவர்ச்சிதான் காதலுக்கும் ஆரம்பப் புள்ளி என்றாலும் அது பயணிக்கும் பாதை வேறு.

ஈர்ப்பில் எதற்கெடுத்தாலும் சந்தேகமும் பயமும் இருக்கும். அவன்/அவள் நம்முடையவராக நீடிப்பாரோ என்ற கவலை இருந்துகொண்டே இருக்கும். ஆனால் இதையெல்லாம் கடந்த நிலையே காதல்.

மலர்வதும் உதிர்வதும்

ஈர்ப்பு மேலோட்டமானது என்பதற்கு இன்னொரு உதாரணம் சொல்கிறேன். வாசுவும் கீதாவும் கல்லூரி நண்பர்கள். இருவரும் உயிருக்கு உயிராகக் காதலித்தார்கள் அல்லது அப்படி நம்பினார்கள். கீதா அணிந்துவரும் ஆடைகள் வாசுவுக்கு மிகப் பிடிக்கும். வாசுவின் தெளிவான பேச்சுக்கு கீதா ரசிகை.

கீதா அணிந்துவரும் ஆடைகளில் மயங்கிய வாசுவுக்கு, கீதா ஒரு முன்கோபக்காரி என்பதும் அலட்சிய மனோபாவம் கொண்டவள் என்பதும் தெரியாது. வாசுவின் பேச்சில் மயங்கிய கீதா, அவன் தன் நண்பர்களுடன் இருக்கும்போது உதிர்க்கிற மட்டரகமான வார்த்தைகளை அறிந்துகொள்ளவில்லை. இருவருமே இருவரின் பாசிட்டிவ் பக்கங்களை மட்டுமே அறிந்துவைத்திருந்தார்கள். காரணம் ஈர்ப்புக்கு அது மட்டும் போதும். நெகட்டிவ் சங்கதிகளைத் தெரிந்துகொள்ள விரும்பாதது பெரிய குற்றமல்ல. அதைத் தெரிந்துகொள்ளாமலேயே காலத்தை ஓட்டிவிடலாம். காரணம் ஈர்ப்புக்கு ஆயுள் குறைவு. இருவரின் நெகட்டிவ் குணங்கள் தெரிந்த பிறகும் இருவருக்குள்ளும் புரிதல் தொடர்ந்தால்தான் அந்த ஈர்ப்பு காதலின் சாலையில் பயணிக்கும்.

அதனால் காதலையும் ஈர்ப்பையும் போட்டுக் குழப்பிக்கொள்ள வேண்டாம். ஈர்ப்பு வருவது ஒரு பூ மலர்வதுபோல மிக இயல்பானது. சில நாட்களில் அந்தப் பூ வாடிப்போய், புல்வெளியில் அழகாக உதிர்ந்தும் போகலாம். அதுவும் இயல்புதான். அதைப் புரிந்துகொண்டால் ஈர்ப்பு நல்லது!

(பயணிப்போம்)
கட்டுரையாளர், மனநல மருத்துவர்.
தொடர்புக்கு: drmohanv18@gmail.com

Saturday, September 24, 2016

தொலையாத இளமையின் வசீகரம்

படங்கள் உதவி: ஞானம்
இன்று போய் நாளை வா!- 35 ஆண்டுகள்

உங்களுக்கு ‘பெல்ஸ்' பேன்ட் ஏன் பிடிக்கும்?

இதுபோன்ற பல கேள்விகளை நீங்கள் கடந்து வந்திருக்கலாம். நமக்குப் பிடிக்கும் ஒவ்வொரு விஷயங்களுக்குப் பின்னாலும் யாரேனும் ஒரு இரண்டாம் நபர் அல்லது மூன்றாம் நபர் நேரடியாகவோ, முறைமுகமாகவோ காரணமாக இருக்கலாம்.

இந்தக் கேள்விக்கு உங்களில் பலர் பலவிதமான பதில்களைச் சொல்லக் கூடும். நான் கூறும் ஒரே பதில்... நடிகர் பாக்கியராஜ்!

சமீபத்தில் எல்விஸ் ப்ரெஸ்லியின் ‘கான்ட் ஹெல்ப் ஃபாலிங் இன் லவ்' பாடலைக் கேட்டுக்கொண்டிருந்தேன். அது அவர் அணிந்திருந்த பெல்ஸ் பேன்ட்டின் மீது நினைவை நிறுத்தியது. அந்த பெல்ஸ் பேன்ட் என்னை பாக்கியராஜைப் பற்றிச் சிந்திக்க வைத்தது. பாக்கியராஜ் என்னை ‘இன்று போய் நாளை வா' படத்தை அசைபோட வைத்தார். அந்தப் படத்துக்கு இந்த ஆண்டு 35 வயது!

அது 2000களின் ஆரம்பம். பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு முடித்துவிட்டு ஊரைச் சுற்றிக்கொண்டிருந்த காலம். அன்றைய நாட்களில் எனக்கும் என் நண்பர்களுக்கும் இருந்த ஒரே பொழுதுபோக்கு தொலைக்காட்சிதான்.

எஸ்.ராமகிருஷ்ணன் தன் கட்டுரை ஒன்றில் சொல்வதுபோல 'வேலையற்றவனின் பகல்' சுட்டெரித்துக்கொண்டிருந்த ஒரு நாள். ஏதோ ஒரு சேனலில் பாக்கியராஜின் ‘இன்று போய் நாளை வா' படம் ஒளிபரப்பாகியிருந்தது.

சினிமாக் கனவுகளும், கவிதை கிறுக்கும் ஆசைகளும் அப்போதுதான் முளைவிட்டிருந்தன. எனக்கு நினைவு தெரிந்து நான் ஒவ்வொரு காட்சியையும் கூர்ந்து கவனித்த முதல் படம் அது.

கருப்புச் சட்டை, வெள்ளை பேன்ட் அணிந்து கொண்டு தன் வீட்டின் முன் ராதிகாவுக்காகக் காத்திருக்கும் அந்த பழனிச்சாமி கதாபாத்திரம் மனதில் நின்றது. அதைக் காட்டிலும் அந்தக் கதாபாத்திரம் அணிந்திருந்த பெல்ஸ் பேன்ட் மீது இனம் புரியாத ஆசை உண்டானது.

இடுப்பில் இருந்து தொடை வரை ‘ப்ளீட்' வைக்காமல் இறுக்கமாகவும் பிறகு கணுக்கால்கள் வரை ஒரே சீராக வளர்ந்து, கணுக்கால் முடிகின்ற இடத்துக்குச் சற்றும் மேலிருந்து பாதம் வரை அகலமாக விரிந்து ‘எம்மிங்' செய்யப்பட்டிருக்கும்.

அப்படியான பேன்ட்டையும், கழுதைக் காது வைத்த கலர் சட்டைகளையும் அணிந்து திரிந்த 80களின் ‘யூத் ஃபீவரை' முழுமையாக ‘எக்ஸ்ப்ளாய்ட்' செய்த முக்கியமான படங்களில் ஒன்று... ‘இன்று போய் நாளை வா!'

ஒரு பெண். மூன்று இளைஞர்கள். அந்தப் பெண்ணின் மனதை வெல்வது யார் என்பது போட்டி. அதற்கு அவர்கள் மேற்கொள்ளும் பிரயத்தனங்கள். இடையில் ஒரு வில்லன். கடைசியில் சுபம்.

உணர்வு பூர்வமான காதல் திரைப்படமாகவோ அல்லது ஆக் ஷன் படமாகவோ வந்திருப்பதற்கான அனைத்துச் சாத்தியங்களும் உள்ள கதை. ஆனால் அப்படியான திரைப்படமாக வந்திருந்தால் அது நிச்சயம் தோற்றுத்தான் போயிருக்கும். முழுக்க முழுக்க நகைச்சுவையை மட்டுமே பிரதானமாக வைத்துக்கொண்டு திரைக்கதையைப் பின்னியதால்தான் இந்தப் படம் இன்றளவும் ‘எவர்க்ரீன்' படமாக இருப்பதற்குக் காரணமாகிறது.

படத்தைத் தாங்குவது பாக்கியராஜ் மட்டுமே அல்ல, அவருடன் சேர்ந்து அவரின் நண்பர்களாக வரும் பழனிச்சாமி, ஜி.ராம்லி ஆகியோரும்தான். இந்தி தெரியாத நிலையில் நம்மில் பலரும் காமெடியாகச் சொல்லும் ‘ஏக் காவ் மே ஏக் கிஸான் ரகு தாத்தா' என்ற ஒரு வரியே போதும். இந்தப் படம் இந்தி தெரியாதவர்கள் இருக்கும் வரை வாழும் என்பதில் சந்தேகமில்லை. ‘காமா பயில்வானின் ஒரே சிஷ்யன் சோமா பயில்வான்' கதாபாத்திரத்தில் வாழ்ந்த கல்லாப்பெட்டி சிங்காரத்தை நாம் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லையோ என்று தோன்றுகிறது.

அன்றைய நாட்களில் கோவை மாவட்டத்தில், இப்படத்தில் இடம்பெற்ற ‘மேரி ப்யாரி தில்கே ராணி' பாடல் ஒலிக்காத காலேஜ் கல்ச்சுரல்ஸ் எதுவுமே இல்லை என்ற ஒரு தகவலுண்டு. அந்தப் பாடல் காட்சியேகூட பீளமேட்டில் உள்ள பி.எஸ்.ஜி.கல்லூரியின் ஆண்டு விழாவின்போது பாடப்படுவதாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.






இந்தப் படம் கோவையில் சக்கை போடு போட்டதற்குக் காரணம், இதில், முழுக்க முழுக்க பாப்பநாயக்கன்பாளையம், பீளமேடு, காந்திபுரம், நிர்மலா காலேஜ், விமன்ஸ் பாலிடெக்னிக், எனக் கோவை மாவட்டத்தின் அடையாளங்கள் பலவற்றை வசனங்களில் பயன்படுத்தியிருப்பார்கள். கோவையில் நடப்பது போன்ற கதை அமைந்திருந்தாலும், அந்த மாவட்டத்துக்குரிய விஷயங்கள் எதுவும் அவ்வளவாகக் காட்டப்படாதது ஒரு குறை.

நண்பர்கள் மூன்று பேரும் ஒவ்வொரு விதத்தில் தங்கள் காதலை வெளிப்படுத்துவது, ராதிகாவிடம் லெட்டர் கொடுக்கும்போது வெங்கட் கதாபாத்திரம் பேசும் ஜெயகாந்தனின் நாவல் வரிகளைக் கொண்ட வசனம், சிகரெட் துண்டுகளை 'ஜெயா' என்ற பெயரின்

வடிவில் அடுக்கிவைத்து பாக்கியராஜ் சோகத்தில் திளைப்பது எனக் காட்சிகளில் பல சுவாரஸ்யங்கள் அழகாகக் கோர்க்கப்பட்டிருப்பது, நம்மைத் திரைக்கு வெளியே இருந்துகொண்டு வேடிக்கை பார்க்கும் இன்னொரு கதா பாத்திரமாக மாற்றிவிடுகிறது.

எதிர்வீடுகளின் இளம்பெண்கள் வாலிபர்களுக்குத் தேவதைகளாகத் தெரிவதும், அதே எதிர்வீடுகளின் ஆண்கள் இளம்பெண்களுக்கு ராஜகுமாரர்களாகத் தெரிவதும் இளமையின் வசீகரங்களில் ஒன்று.

அந்த வசீகரத்தை மிகக் கச்சிதமாகப் பயன்படுத்திக்கொண்ட படம் இது. நீங்கள் இளைஞராகவோ அல்லது முதுமையின் வாசலில் இருப்பவராகவோ இருக்கலாம். இந்தப் படத்தைப் பார்க்கும்போது உங்களால் மனம் விட்டுச் சிரிக்க முடிந்தால், கதையின் ஓட்டத்தில் உங்களால் லயிக்க முடிந்தால் உங்களுக்குள் அந்த வசீகரம் இன்னும் உயிர்ப்போடு இருப்பதாக அர்த்தம்!

Friday, September 23, 2016

Samsung Note 2 catches fire on flight to Chennai, DGCA asks flyers to be careful with all Samsung Note devices

TIMES OF INDIA 

NEW DELHI: A Samsung Note 2 phone emitted smoke after reportedly catching fire on a Singapore-Chennai flight of IndiGo on Friday morning when the plane was about to land.

The phone was kept in the overhead bin. "The crew noticed smoke from the bin and found the device was emitting smoke after possibly catching fire. They used fire extinguishers on it," said a spokesperson of Directorate General of Civil Aviation (DGCA).


"We advise flyers to exercise caution while flying with Samsung Note devices . They should either keep these devices switched off or not travel with them," said a DGCA spokesman.

An IndiGo statement said: "IndiGo confirms that a few passengers travelling on 6E-054 flight from Singapore to Chennai noticed the smoke smell in the cabin this morning (September 23, 2016) and immediately alerted the cabin crew on board.

 The crew quickly identified minor smoke coming from the hat-rack of seat 23 C and simultaneously informed the pilot-in-command who further alerted the ATC of the situation on board."

The airline added: "Taking precautionary measure, the cabin crew on priority relocated all passengers on other seats, and further observed smoke being emitted from a Samsung note 2 which was placed in the baggage (of a passenger) in the overhead bin. The crew discharged the fire extinguisher which is as per the standard operating procedures prescribed by the aircraft manufacturer, and quickly transferred the Samsung note 2 into a container filled with water in lavatory."

A Samsung spokesperson said: "We are aware of an incident involving one of our devices. At Samsung, customer safety is our highest priority. We are in touch with relevant authorities to gather more information, and are looking into the matter."

The aircraft made a normal landing at Chennai airport, and all passengers were deplaned as per normal procedure. The Samsung mobile will be further examined by the concerned departments. IndiGo has voluntarily informed the DGCA.

Now, equal pay for private and state-run hospital nurses, recommends committee set up by the Indian Nursing Council


MUMBAI: Nurses, the lifeline in the patient-care system, may no longer be underpaid.

A committee set up by theIndian Nursing Council has mandated that nurses working in private hospitals be paid on a par with those employed in state government hospitals.

The plight of the private sector nurses can be imagined from the fact that they barely take home a fraction of what nurses in the government sector earn. Arun Kadam, executive president of Maharashtra State Nurses Association, said, "Many in the private sector take home Rs 2,500-6,000 a month. Even housemaids get paid more." Senior nurses in state-run institutions earn around Rs 80,000 a month, said Maharashtra Government Nurses Federation representatives.

The new recommendation covers every healthcare facility—from stand-alone hospitals to tiny nursing homes to large chains and brands. The first recommendation is that the base wage will be a minimum of Rs 20,000 a month.

In case of 50- to 100-bed hospitals, the salary "should not be more than 25% less" in comparison to state government nurses, recommended the committee. Mid-sized hospitals with 100 to 200 beds must "not pay more than 10% less" in comparison to state hospital nursing staff. Larger centres with 200 beds or more must pay salaries on a par with state government nurses, depending on their grades and experience.

The committee's recommendations follow a long-drawn court battle for better working conditions for nurses in private hospitals. In January, the Supreme Court directed the Centre to set up a committee to investigate the living conditions and salary structure of nurses employed in private hospitals and nursing homes.

In its report, the committee said, "Their pay and working conditions is really pathetic and some steps are required to be taken to uplift the standard of working conditions in respect of nurses." The panel has accordingly defined working conditions for nurses as well. "Work hours, transportation, medical facilities and accommodation too must be on a par with the facilities enjoyed by nurses in government hospitals," said the committee report.

Maharashtra Nursing Council president Dr Ramling Mali said, "This is a good move by the Supreme Court and the Central government to give justice to the nurses. But the state government, on its part, must amend the Bombay Nursing Home Registration Act and the Maharashtra Nurses Act, 1966, for the remuneration to paid to nurses in the private sector."

A senior nurse from a south Mumbai hospital said that salaries in the private sector had improved in the last five years, but are nowhere near the government scales. "Private hospitals charge a bomb from patients, but never give their nurses a better deal," she said.


NTR Health University in BDS exams row

DECCAN CHRONICLE.
PublishedAug 28, 2016, 7:13 am IST
Vijayawada: The NTR Health University authorities are facing criticism over the reported biased role of a few officers in the examination sections, as they are not following guidelines in finalising the eligible external examiners’ names for the scheduled BDS practical examinations from Monday.

In fact, the Government Dental College (GDC) principal, who is also the chairman, Board of Studies (BoS), has been suggested to take this responsibility, which is against the Dr NTR University of Health Sciences (Dr NTRUHS) constitution, senior professors alleged.

The present system of conducting practical and clinical examination at several universities provide chance for unrealistic proportions of luck. Only a particular clinical procedure or experiment is usually given for the examination. The clinical and practical examination should provide a number of chances for the candidate to express one’s skills.

A number of examination stations with specific instructions has to be provided. This can include clinical procedures, laboratory experiments and spotters, according to a professor of Dr NTRUHS.

The method of objective structured clinical examinations should be followed, he observed, and added that it will avoid examiner bias because both the examiner and the examinee are given specific instructions on what is to be observed at each station.

But, the present scenario in the university is contradicting Dr NTRUHS’s basic constitution, as a majority of the external examiners are being chosen and finalised by the Board of Studies (BoS) chairman.

“This is causing disturbances in the examination system,” a professor from a private dental college, Guntur, said, and questioned as to how BoS chairman could clear or finalise the list of external examiners.

This controversial decision has been taken to support and protect the vested interests of private dental colleges, he alleged. Terming the allegations as unfortunate, Government Dental College (GDC) principal Dr Muralimohan, felt that nobody could question the integrity of the controller of examinations Dr K. Vijay Kumar.

“He is the man, who has guarded the image of Dr NTRUHS during the PG papers leakage last year,” Dr Muralimohan added.

The GDC principal also said that as BoS chairman, he could suggest any changes required in the list of external examiners.

“It is purely an administrative affair and nothing to do with protecting the interests of the private dental colleges,” he said, and added that new BoS was not yet formed. Post-bifurcation issues are to be addressed, he said.



E
Maharashtra nursing council alleges fraud

Ranjana Diggikar| TNN | Aug 31, 2016, 07.03 AM IST

AURANGABAD: The Maharashtra Nursing Council (MNC) has alleged misappropriation of Rs 225 crore by the office-bearers of Indian Nursing Council (INC) since last 15 years through violation of mandatory direction of Union government and various legal provisions.

The MNC has approached the Union health ministry and demanded independent inquiry into the functioning of the INC. They have also sought the removal of the president, vice-president and the office-bearers concerned. They have also sought immediate appointment of an administrator from nursing profession.

Speaking to TOI, INC president T Dileep Kumar refuted the allegations and said that if ever there were financial irregularities, they would have reflected in the financial audit. He also said the INC has not been violating any norms and is strictly following all the council regulations and rules.

MNC president Ramling Mali, a letter forwarded to the health ministry, stated that the implementation of PhD consortium by INC is illegal and beyond the source of power and jurisdiction of INC. More than Rs 50 crore has been taken from the World Health Organisation (WHO) by misrepresentation by INC office-bearers in 2005, he alleged.

INC is statutory body constituted to establish a uniform standard of training for nurses midwives and health visitors. They cannot exceed their scope of work beyond the Act. The INC is conducting PhD consortium without any authority or jurisdiction as per INC Act, 1947 and are receiving and spending funds, he further alleged.

However, Kumar said, "Considering the acute shortage of nursing faculty in under-graduate and post-graduate nursing programme in India, doctoral education is essential to prepare nurse scholars to work in intensive care unit. Hence, national consortium for PhD in nursing was constituted by INC in collaboration with Rajiv Gandhi University of Health Sciences and WHO under the faculty of nursing to promote doctoral education. A memorandum of understanding was signed with WHO for sharing technical skills and no funds have been procured in this regard."

The MNC also alleged misappropriation of over Rs 65 crore for purchasing property for a new building from INC funds in 2016. It is mandatory to float public tender for sale or purchase of any property by the government department and statutory body, the INC flouting the norms and spending more than Rs 65 crore without issuing any public e-tender or following due procedure stipulated by government or INC act 1947.

The letter also signed by Sangita Vikhe, member, INC, New Delhi and I T Thorat , chairman, vigilance committee of MNC also criticised about the implementation of National Unique Identification (NUID) Registration of nurses. INC indulged in misappropriation of Rs 15-20 crore for NUID registration of nurses without any necessity as this function is already performed by each state council.

However, INC floated tenders for the registration of nurses worth Rs 15 to 20 crore. The data should be collected from each state council as per the INC Act, but the INC secretary, president, vice president and some office bearers are functioning in collusion without sharing any details to the INC members, they alleged.


"The NUID registration of nurses is an approved programme of the health ministry in which INC will provide unique identity card to registered nurses and midwives. This is basically to identify active nurses in India," said Kumar.

The MNC chief also made allegations that INC is being run on the whims and fancies of the president, secretary and joint secretary. "Despite repeated request to share the required documents, the officials did not provide any information and documents to the INC members. They are failing to maintain transparency," said Mali.

Despite repeated attempts, health ministry secretary C K Mishra could not be contacted.






C

இது அவசரம்!

By ஆசிரியர்  |   Last Updated on : 22nd September 2016 02:37 AM  |

அடுத்த நான்கு வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. அதனால் அவ்வாறே அமைக்கப்படும் என்பது உறுதி. அப்படி அமைக்கப்படும் காவிரி மேலாண்மை வாரியம் நடுநிலையுடன், விவசாயிகளின் நம்பகத்தன்மையைக் காப்பாற்றுவதாக இருக்கும் என்பதை தமிழகம் உறுதிப்படுத்தியாக வேண்டும்.
மத்திய நீர்வளத்துறையின் கீழ் அமையும் காவிரி மேலாண்மை வாரியத்தில் மொத்தம் ஒன்பது பேர் உறுப்பினர்களாக இருப்பார்கள். தலைவரையும், இரு நிரந்தர உறுப்பினர்களையும் மத்திய அரசு நியமிக்கும். தலைவராக நியமிக்கப்படுபவர் பாசன மேலாண்மையில் 20 ஆண்டுகள் அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும். நிரந்தர உறுப்பினர்களில் ஒருவர் பாசன மேலாண்மையில்
15 ஆண்டுகள் அனுபவம் உள்ளவராகவும், மற்றோர் உறுப்பினர் வேளாண் பொருளாதாரத்தில் வல்லுநராகவும், வேளாண்மையில் 15 ஆண்டுகள் அனுபவம் கொண்டவராகவும் இருத்தல்
வேண்டும்.
தலைமைப் பொறியாளர் பதவியில் இருப்போரில் இரண்டு பேர் மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தின் பிரதிநிதிகளாக நியமிக்கப்
படுவர். இது தவிர, கர்நாடகம், தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம் ஆகிய நான்கு மாநிலங்களின் பிரதிநிதிகளாக அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பொறியாளர் நியமிக்கப்படுவார். ஒன்பது உறுப்
பினர்கள் கொண்ட இந்த வாரியத்தின் முடிவுகளுக்கு ஆறு பேரின் ஆதரவு இன்றியமையாதது.
பற்றாக்குறை காலங்களில், அந்தந்த மாநிலங்களுக்கு காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பில் எவ்வளவு நீர் அளவு பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறதோ அதே விகிதத்தில், இருக்கின்ற நீரை பகிர்ந்து அளிக்கும் பொறுப்பு மேலாண்மை வாரியத்துக்கு உண்டு என்று அதிகாரம் அளிக்கப்பட்டிருக்கிறது. காவிரியுடன் தொடர்புடைய அனைத்து அணைகளிலும் நீர் வெளியேற்றும் அளவை 10 நாள்
களுக்கு ஒரு முறை மாற்றியமைக்கும் அதிகாரமும் மேலாண்மைக் குழுவுக்கு இருக்கிறது.
அதேசமயம், பற்றாக்குறை காலங்களில் அதற்கான விகிதத்தின்படி நீர் வழங்கப்படுகிறதா என்பதைக் கண்காணிக்கவும், அதில் குறைபாடு காணப்பட்டால் மத்திய அரசு உதவியுடன் அல்லது தானே அதை நடைமுறைபடுத்துவதற்கான அதிகாரமும் மேலாண்மை வாரியத்துக்கு தரப்பட்டிருக்கிறது.
தமிழக அரசு இந்த ஒன்பது உறுப்பினர்கள் யார் யாராக இருக்க வேண்டும் என்பதில் இப்போதே கவனம் செலுத்தாவிட்டால், தமிழகத்திற்கு நியாயம் கிடைப்பதை உறுதி செய்ய முடியாமல் போய்விடும். ஆகவே, மேலாண்மை வாரியத்தின் தலைவர் தமிழகம், கேரளம், கர்நாடகம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு அப்பாற்பட்ட நபராக இருக்க வேண்டும் என்பதை இப்போதே தமிழகம் வலியுறுத்தியாக வேண்டும்.
அதேபோல நிரந்தர உறுப்பினர்களும் அமைய வேண்டும். குறைந்தபட்சம் ஓர் உறுப்பினர் தமிழகத்தைச் சேர்ந்தவராகவும், ஓர் உறுப்பினர் கர்நாடகத்தைச் சேர்ந்தவராகவும் இருப்பது இன்றியமையாதது. அதேபோன்று, மத்திய நீர்வளத் துறை அமைச்சகத்தின் பிரதிநிதிகள் இருவரில் ஒருவர் கேரளத்தை சேர்ந்தவராகவும், ஒருவர் புதுச்சேரியைச் சேர்ந்தவராகவும் இருப்பதில் தவறில்லை.
மேலாண்மை வாரியம் இவ்வாறாக அமைவதுதான் நடுநிலையையும், காவிரிக்கு கீழ்ப்பகுதியில் அமைந்து, கர்நாடகத்திடம் நீரை எதிர்நோக்கும் மாநிலங்களுக்கும் நியாயம் கிடைப்பதை உறுதி செய்யும். இல்லாவிட்டால், வாரியத்தின் ஒன்பது உறுப்பினர்களில் ஆறு பேர் ஆதரவே இறுதி முடிவைத் தீர்மானிக்கும் என்கிற நிலையில், இப்போதே நாம் எச்சரிக்கையாக இல்லாவிட்டால் தமிழகம் பாதிக்கப்பட வாய்ப்பு அதிகம்.
மேலே குறிப்பிட்ட வகையில்தான் உறுப்பினர்கள் அமைய வேண்டும் என்று இப்போதே நாம் உச்சநீதிமன்றத்திடம் கோரிக்கை வைக்க வேண்டும். எல்லா தரப்பினருக்கும் பொதுவான உறுப்
பினர்கள் அமைவதை உறுதிப்படுத்த வேண்டும். அப்படி செய்யாமல் போனால் வருங்காலத்தில் காவிரி மேலாண்மை வாரியத்தின் முடிவை எதிர்த்து நீதிமன்றத்தை அணுகினால் அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படலாம். ஆகவே இப்போதே நாம் கவனமாக செயல்பட்டாக வேண்டும்.
காவிரி பிரச்னை என்பது பொதுவாக கர்நாடகம், தமிழ்நாடு இரு மாநிலங்களுக்கு இடையே உள்ள தொடர் பிரச்னையாக இருப்பதால், மேலாண்மை வாரியத்தின் அலுவலகம், இரு மாநில அணைகளையும் கண்காணிக்க ஏதுவாகவும், இரு மாநிலத்திலும் இல்லாமலும் இருக்க வேண்டும். இதன் தலைமை அலுவலகம் எங்கோ இருக்கும் தில்லியில் அமைவதைவிட ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் அமைந்தால், சிறப்பாக இருக்கும். முற்றுகை போராட்டம் நடப்பதையும் தவிர்க்கலாம்.
மேலாண்மை வாரியத்தின் தலைவர் விரும்பினால், மத்திய நீர் ஆணையம், தேசிய நீரியல் துறை, இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம், வேளாண் கல்லூரிகள் ஆகியவற்றின் பிரதிநிதிகளை, வாரியத்தின் கூட்ட நிகழ்வில் பங்கேற்க அழைக்கலாம் என்று அனுமதிக்கப்பட்டுள்ளது. இது விருப்புரிமையாக இல்லாமல் கட்டாயமாக்கப்பட வேண்டும். பல்வேறு வேளாண் துறை வல்லுநர்கள், பொறியாளர்கள் இந்தக் கூட்டத்தின் பார்வையாளர்களாக இருக்கும்போது, இந்தக் குழு எடுக்கும் ஒவ்வொரு முடிவும் தகுதி வாய்ந்தவர்களால் கவனிக்கப்படுகிறது என்ற எண்ணம், இவர்களை நீதி
யிலிருந்து விலகாமல் இருக்கச் செய்யும்.
தமிழ்நாடு இப்போதே இந்த விவகாரங்களில் ஆர்வம் செலுத்த வேண்டும். வாரியம் அமைக்கப்பட்ட பின்னர் ஆட்சேபணை தெரிவித்துப் பயனில்லை!

தேவை ராஜதந்திரம், சூத்திரமல்ல!

By ஆசிரியர்  |   Last Updated on : 23rd September 2016 05:52 AM  |

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் நடத்தப்பட்டிருக்கும் உரி ராணுவத் தலைமை முகாம் மீதான பயங்கரவாதத் தாக்குதலால் ஒட்டுமொத்த இந்தியாவே கொதித்துப் போய் இருக்கிறது. இந்திய எல்லைக்குள் நுழைந்து கடந்த ஞாயிறன்று அதிகாலையில் ராணுவ வீரர்களை பலி வாங்கிய பயங்கரவாதத் தாக்குதலில் 18 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இந்தத் தாக்குதலுக்குக் காரணமான நான்கு பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டு விட்டார்கள் என்பது ஆறுதலல்ல. அவர்களால் தாக்குதல் நடத்த முடிந்திருக்கிறதே என்பது அவமானம்.
கடந்த ஒன்பது மாதங்களில் ஜம்மு - காஷ்மீரத்திலுள்ள இந்திய ராணுவ முகாம்களில் நடத்தப்பட்டிருக்கும் ஆறாவது பெரிய பயங்கரவாதத் தாக்குதல் இந்த உரி ராணுவ முகாம் சம்பவம். அந்த அளவுக்கு நாம் விழிப்புடன் இல்லாமல் இருக்கிறோம். இதற்கு முந்தைய தாக்குதல்களிலிருந்து நாம் எந்தவிதப் பாடமும் படிக்கவில்லை என்பதையும், நமது பாதுகாப்பு ஏற்பாடுகள் அந்த அளவுக்கு பலவீனமாக இருக்கிறது என்பதையும், நமது ராணுவ முகாம்களின் அமைப்பும், செயல்பாடுகளும் எதிரிகளுக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது என்பதையும் உரி தாக்குதல் மீண்டும் வெளிச்சம்போட்டுக் காட்டியிருக்கிறது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் பதான்கோட் விமானதளத்தில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் பின்பற்றப்பட்ட அதே வழிமுறையைத்தான் பயங்கரவாதிகள், இப்போது வடக்கு காஷ்மீரத்தில் உள்ள உரி ராணுவத் தளத் தாக்குதலிலும் பின்பற்றியிருக்கிறார்கள் என்பது முந்தைய தாக்குதலுக்குப் பிறகும்கூட நமது ராணுவ தளங்களின் பாதுகாப்பைத் தாக்குதல் நடத்த முடியாத அளவுக்கு நாம் பலப்படுத்தவில்லை என்பதைத்தான் காட்டுகிறது.
இந்தத் தாக்குதலிலும் இரண்டு இடங்களில், நமது பாதுகாப்பு அமைப்புகளின் கண்காணிப்பையும் மீறி ஊடுருவல் நடந்திருக்கிறது. முதலாவதாக, பயங்கரவாதிகள் நான்கு பேரும் எல்லையைக் கடந்திருக்கிறார்கள். அடுத்தபடியாக, ராணுவத் தளத்திற்குள் நுழைந்திருக்கிறார்கள். தொடர்ந்து பயங்கரவாதிகள் நமது பாதுகாப்புப் படையினரைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்துகிறார்கள் என்று தெரிந்தும்கூட, அவர்கள் ஊடுருவ முடியாத அளவுக்கு நமதுபாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லை என்பதும், அப்படியே இருந்தாலும் அது முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதும் தெளிவாகிறது.
கொஞ்சம்கூட தயக்கம் இல்லாமல், "இந்தத் தாக்குதலைக் காரணம் காட்டிக் காஷ்மீர் விவகாரத்தை இந்தியா திசை திருப்பப் பார்க்கிறது' என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் வெளியுறவு ஆலோசகத் துறை செயலர் அறிக்கை வெளியிடுகிறார். ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் 18 ராணுவ வீரர்களின் உயிரைப் பலிவாங்கிய உரி ராணுவ தலைமை முகாம் மீதான பயங்கரவாதத் தாக்குதல், பாகிஸ்தான் ராணுவ உதவியுடன் நடத்தப்பட்டிருப்பதை பயங்கரவாதிகள் நான்கு பேரும் வைத்திருந்த ஆயுதங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. மேலும், தாக்குதல் நடத்திய தற்கொலைப்படையினர் நான்கு பேரும் ஜெய்ஷ் - ஏ - முகமது அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பதும் உறுதியாகியுள்ளது.
அதிக அளவு புரதச் சத்துள்ள சாக்லேட்களின் 26 உறைகள், ஆறு ரெட்புல் பானத்தின் கேன்கள், பாகிஸ்தான் தயாரிப்பு முத்திரையுடன் கூடிய மருந்துகள் அடங்கிய மூன்று பொட்டலங்கள் ஆகியவை பயங்கரவாதிகளிடமிருந்து கைப்பற்றப்பட்டிருக்கின்றன. அதுமட்டுமல்லாமல், எல்லையிலிருந்து ஆறு கி.மீ. தொலைவிலுள்ள முசாபர்பாத் நகரத்திலிருந்து ராணுவ முகாமுக்கு வழிகாட்டுகின்ற "ஜி.பி.எஸ்.' வழிகாட்டியும் கிடைத்திருக்கிறது. ஜி.பி.எஸ். இயந்திரம் மிகத்தெளிவாக இந்த பயங்கரவாதிகள் பாகிஸ்தானிலிருந்துதான் வந்திருக்கிறார்கள் என்பதைத் தெளிவுபடுத்துகிறது.
காஷ்மீரில் அமைதி திரும்ப வேண்டும் என்பதற்காக ராணுவம் தனது நடைமுறைகளைத் தளர்த்திக் கொண்டதால் ஏற்பட்ட இடைவெளியும்கூட இத்தாக்குதலுக்குக் காரணம். ராணுவம் தனது தாக்குதலை மீண்டும் கடுமையாக்கி அதனால் காஷ்மீர் மக்கள் பாதிக்கப்பட்டதாக மேலும் இந்திய ஊடகங்களையும், எதிர்க்கட்சிகளையும் வைத்தே இந்தியாவைப் பரிகாசத்துக்கு ஆளாக்க வேண்டும் என்பதுகூட இந்தத் தாக்குதலின் நோக்கமாக இருந்தாலும் வியப்படையத் தேவையில்லை.
தனது அரசின் தோல்விகளையும், பலவீனங்களையும் மறைப்பதற்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபுக்கு காஷ்மீர் பிரச்னையும், அதன் தொடர்பாக இந்தியாவுடன் போர் மூளும் சூழலும் தேவைப்படுகிறது. சீனா தனக்குத் துணை நிற்கும் என்கிற பாகிஸ்தானின் தைரியத்தை, இந்தியா அமெரிக்காவுடன் செய்து கொண்ட ராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தம் தகர்த்திருக்கிறது என்றாலும்கூட, எல்லை தாண்டிய பயங்கரவாதத்தின் மூலம், இந்தியாவின் பொறுமையை சோதித்து எரிச்சலடைய வைப்பதில் பாகிஸ்தான் முனைப்புக்காட்டுகிறது. காஷ்மீரில் அமைதி திரும்பாமல் பார்த்துக் கொள்வது என்பதுதான் பாகிஸ்தானின் குறிக்கோளாக இருக்கிறது.
இந்தத் தாக்குதலுக்கு பின்னால் பாகிஸ்தானிலிருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்புகள் இருப்பது உறுதியாகி விட்டிருக்கும் நிலையில், ஐக்கிய நாடுகள் சபையில் பாகிஸ்தானை "பயங்கரவாத நாடு' என்று அறிவிக்க வேண்டும் என்கிற இந்தியாவின் கோரிக்கை வலுப்பெறுகிறது.
இது போருக்கு உகந்த நேரம் அல்ல. அதே நேரத்தில், சர்வதேச அளவில் பாகிஸ்தானைத் தனிமைப்படுத்தத் தகுந்த தருணம். இந்த பிரச்னையை நிதானமாகவும் அரசியல் ராஜதந்திரத்தின் அடிப்படையிலும் அணுகுவது என்று பிரதமர் மோடி முடிவு எடுத்துள்ளதாகத் தெரிகிறது. அந்த அணுகுமுறை பாராட்டுக்குரியது!

NEWS TODAY 22.04.2024