Monday, January 4, 2016

போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த வழக்கு அரசு பள்ளி ஆசிரியர்கள் உள்பட 3 பேர் கைது

கிருஷ்ணகிரி,

போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த வழக்கில் அரசு பள்ளி ஆசிரியர்கள் 2 பேர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் மேலும் சிலர் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

புரோக்கர்-ஆசிரியர் கைது

தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டை சேர்ந்தவர் முனியப்பன் (வயது 37). பிளஸ்-2 படித்துள்ள இவர் வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே எர்ரம்பட்டி கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்தார். இவர் போலி சான்றிதழ் மூலமாக ஆசிரியர் பணிக்கு சேர்ந்ததாக வேலூர் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் தர்மபுரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில், போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் முனியப்பன், கிருஷ்ணகிரியை சேர்ந்த ராஜேந்திரன் (42) என்ற புரோக்கரை சந்தித்ததும், அவர் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த துரைராஜ் என்பவரின் பெயரில் ஆசிரியர் பயிற்சி முடித்ததைபோல ஒரு போலி சான்றிதழ் தயாரித்து முனியப்பனை அரசு பள்ளியில் ஆசிரியர் பணிக்கு சேர்த்து விட்டதும் தெரியவந்தது. முதலில் நாமக்கல் மாவட்டத்தில் வேலை பார்த்த முனியப்பன், பிறகு வேலூர் மாவட்டத்திற்கு இடமாறுதல் ஆனார். இதையடுத்து முனியப்பன், புரோக்கர் ராஜேந்திரன் ஆகியோரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

போலி சான்றிதழ்

இந்நிலையில் புரோக்கர் ராஜேந்திரன் மூலமாக போலி சான்றிதழ் கொடுத்து பணிக்கு சேர்ந்ததாக மேலும் ஒரு அரசு பள்ளி ஆசிரியர் நேற்று கைது செய்யப்பட்டார். அதன் விவரம் வருமாறு:-

வேலூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் செவ்வாத்தூர்புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் பி.செந்தில்குமார். இவர் கிருபா என்ற பெயரில் போலி சான்றிதழ்கள் கொடுத்து பணியாற்றி வருவதாக வேலூர் மாவட்ட தொடக்கக்கல்வி அதிகாரி, கிருஷ்ணகிரி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்தில் நேற்று முன்தினம் புகார் செய்தார்.

அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து பணி பதிவேடு மற்றும் சான்றிதழ்களை ஆய்வு செய்தனர். மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த செந்தில்குமார் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா கூச்சானூர் கிராமத்தை சேர்ந்தவர். கிருபா என்ற பெயரில் ஆதிதிராவிடர் என்று போலி சான்றிதழ் பெற்று சேலம் மாவட்டத்தில் இடைநிலை ஆசிரியராக செந்தில்குமார் பணியில் சேர்ந்து, பிறகு மாறுதல் ஆகி தற்போது வேலூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்தில் பணிபுரிந்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து செந்தில்குமாரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

காவலில் எடுத்து விசாரிக்க முடிவு

விசாரணையில் அனைத்து சான்றிதழ்களும் புரோக்கர் ராஜேந்திரன் வழங்கியதும், அந்த சான்றுகள் வேறொருவருடையது என்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த செந்தில்குமாரை (37) போலீசார் நேற்று கைது செய்தனர். போலி சான்றிதழ் வழக்கில் இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதான செந்தில்குமார், ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற வைப்பதாக கூறி பலரிடம் பண மோசடி செய்ததாகவும் கூறப்படுகிறது. அது தொடர்பாகவும் போச்சம்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கைதாகி உள்ள 3 பேருக்கும் மேலும் சில மோசடியில் தொடர்பு இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். எனவே சிறையில் அடைக்கப்பட்டுள்ள 3 பேரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்த கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்ட போலீசார் முடிவு செய்துள்ளனர்.

No comments:

Post a Comment

ICC nets 20 medical students for exam malpractice

LAST MONTH STORY ICC nets 20 medical students for exam malpractice The Hans India Update: 2026-04-29 07:58 IST Vijayawada: The high-tech sur...